எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

முகர்ஜி நேற்று இலங்கை வருகை

prathaf-mahi.jpgஇலங்கை அரசின் அழைப்பை யேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். இவர், நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினாரென வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொது மக்களை புலிகளின் பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வெற்றியளித்துக் கொண்டு இருக்கும் இவ் வேளையில் அமைச்சர் முகர்ஜியின் வருகை இடம் பெறுகின்றது.

இவ்வருகையானது பாரம்பரியமாக இந்தியா மற்றும் இலங்கையின் அதி உயர்மட்ட அரசியல் தலைவர்களிடையே நடைபெறும் பரஸ்பர – நன்மை பயக்கும் முக்கிய விடயங்கள் சம்பந்தமாக வெளிப்படையானதும் ஆக்கபூர்வமானதுமான கலந்துரையாடலாக அமைந்திருந்ததெனவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.

வடக்கு வெற்றியை வைத்துக்கொண்டு தெற்கில் அரசால் வன்முறைகள் கட்டவிழ்ப்பு -சாடுகிறது ஐ.தே.க.

palitha_bandara.jpgவட பகுதியில் பல இடங்களை புலிகளிடமிருந்து மீட்டு அவர்களை தோற்கடித்துள்ளதாக கூறும் அரசாங்கம், அதனை வைத்துக்கொண்டு நாட்டின் தெற்குப் பகுதியின் சகல இடங்களிலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளதாக புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலிதரங்க பண்டார குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;புலிகளைத் தோற்கடித்து வடபகுதியின் பெருமளவான பிரதேசங்களை மீட்டுள்ளதாக அரசு கூறி தம்பட்டம் அடித்துக்கொண்டு அந்த வெற்றிகளை வைத்துக்கொண்டு நாட்டின் தெற்குப் பகுதியிலும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதன் உச்சக்கட்டமாகவே புத்தளம் மாவட்டத்தில் பத்துதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனது வாகனசாரதியும் கூட தாக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் ஆயுதங்களை பறித்த காடையர் குழுவொன்று அதனை பயன்படுத்திய சம்பவங்களும் உள்ளன.

எனினும், சம்பந்தப்பட்டவர்களை பொலிஸார் கைது செய்த போது உயர்மட்ட அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நாட்டின் தென்பகுதியில் நாலாபுறங்களிலும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட அரசிடம் நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். இது இவ்வாறிருக்க, அரசாங்கம் தனது தேர்தல் வெற்றிக்காக அரச சொத்துகள் உட்பட அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றது. தேர்தல் வெற்றி என்றால் ஏன் இவ்வாறு செயற்பட வேண்டும். உண்மையில் மக்கள் எம்முடன் இருப்பதே காரணமாகும்.

இதேவேளை, தேர்தல் வன்முறை தொடர்பில் எனக்கோ அல்லது எனது கட்சிக்கோ எதிராக எதுவித முறைப்பாடும் பொலிஸில் செய்யப்படாத நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அரசுக்கு எதிராக நான் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார். இவரை நான் பொலிஸ் சேவையில் இருக்கும் போதே நன்கறிவேன். இவர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அணிதிரண்டிருப்பதால் மாகாண சபை தேர்தலில் எமக்கு வெற்றி என்றார

இலங்கை- இந்திய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று

doni-maha.jpgஇலங்கை இந்திய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ரன்கிரி தம்புள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிறது. இலங்கைக்கு எதிரான தொடரில் ஹர்பஜன்சிங் இல்லாவிட்டாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்றுமுன் தினம் பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு வந்து சேர்ந்தது. இங்கு இலங்கை கிரிக்கெட்சபை நிர்வாகிகள், இந்திய அணியினரை வரவேற்றனர்.

இந்திய அணி வீரர்கள் கொழும்புக்கு புறப்படும் முன்பு நேற்று முன்தினம் காலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி முடிந்தும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள சுழற்பந்து வீசக்கூடிய புதுமுக சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜாவிடம், இலங்கை பயணத்துக்கான இந்திய அணியில் காயம் காரண மாக ஹர்பஜன்சிங் இடம்பெறாதது பின்னடைவா? என்று கேட்டதற்கு பதில் அளித்து கூறியதாவது:-

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் அணியில் இடம்பெறாததால் அணிக்கு பின்னடைவு என்று சொல்ல முடியாது. நாங்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடுவோம். வீரர்கள் எல்லோரும் தங்களது துறையில் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்திய அணி வருமாறு:-

டோனி (கப்டன்), ஷெவாக் (துணை கப்டன்), டெண்டுல்கர், யுவராஜ்சிங், கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, யூசுப் பதான், சகீர்கான், இஷாந்த் ஷர்மா, பிரக்யான் ஒஜா, முனாப் பட்டேல், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிரவீன்குமார்.

இலங்கை அணி வருமாறு:-

ஜயவர்த்தன (கப்டன்), சங்கக்கார, ஜயசூரிய, தரங்க, கப்புகெதர, முபாரக், தில்ஷான், கன்டம்பி, முரளிதரன், மெண்டிஸ், மஹ்ரூப், பெர்னாண்டோ, குலசேகர, துஷார, மெத்தியு.

இந்திய – இலங்கை இடையேயான போட்டி அட்டவணை விவரம் வருமாறு:-

போட்டி அட்டவணை

ஜன  28:  முதல் ஒரு நாள் போட்டி தம்புள்ள
ஜன  31  2 வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் -இரவு)
பெப்.  3  3வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் – இரவு)
பெப்.  5  4 வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் – இரவு)
பெப்.  8  5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு
பெப்.  10  20 ஓவர் போட்டி, கொழும்பு (பகல் – இரவு)

சீதனத்தை தடைசெய்துள்ள நேபாள அரசு தலித்களைக் காப்பாற்ற புதிய சட்டம்

நேபாளில் சீதனக் கொடுமையை இல்லாதொழிக்கப் போவதாக கூறியுள்ள பிரதமர் பிரசண்டா பாரபட்சமற்ற நேபாளைக் கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் பிரசண்டா அமைதியான முறையில் அரசியல் முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் நேபாளத்தைக் கட்டியெழுப்ப முன்வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் சீதனக் கொடுமைகள் அதிகரித்துள்ளமைக்கு கவலை வெளியிட்ட பிரதமர் சீதனம் நேபாளத்தில் தடை செய்யப்படுவதுடன் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடுவோரும். சீதனம் வாங்குவோரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்தார்.

தேர்தலின் போது தன்னால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் இவ் வேளையில் அரசுக்கெதிரான செயற்பாடுகளையும், பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளையும் தனது அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லையென்றும், பெண்கள் அடக்கியாளப்படுவது நேபாளத்துக்குப் பெரும் அவமானம் எனவும் பிரதமர் தனதுரையில் தெரிவித்தார். நேபாளத்திலுள்ள 27 மில்லியன் சனத்தொகையில் 14 வீதமானோர் தீண்டத்தகாத தலித் இனத்தவராவர்.

இவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். நேபாளின் பிரபல இந்து ஆலயங்களில் தலித்கள் வழிபடவும் பொது வைபவங்களில் பங்கேற்கவும் தடுக்கப்பட்டுள்ளனர். இது மாபெரும் பாராபட்சமும் சமூகக் குற்றமும் எனச் சுட்டிக்காட்டிய சமூகத் தலைவர்கள் இம் முறைகள் மாற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள நிலையில் பிரதமர் பிரசண்டா தொலைக் காட்சியில் உரையாற்றியுள்ளார். சரிந்து செல்லும் தனது அரசின் செல்வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு அடிமட்டத்திலும் கிராமப் புறங்களிலும் ஆதரவைத் தேடும் முயற்சியே இதுவென எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

நேபாள அரசில் பல வகைக் கொள்கையுடைய கட்சிகள் உள்ளதால் அரசைக் கொண்டு செல்வதற்கான அனுபவம் குறைவாக உள்ளதென்பதை ஏற்றுக் கொண்ட பிரதமர் பிரசண்டா கட்சிகளின் கருத்துக்கள், தெரிவுகள் என்பவற்றை வரையறுத்துள்ளதாகக் கூறினார்.

கண்டி மாவட்ட முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்தவை சந்திக்க ஏற்பாடு

mahinda20-01.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஐயாயிரம் முஸ்லிம்கள் எதிர்வரும் 31ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்களே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து சந்திக்கவுள்ளனர்.

கண்டி மாவட்டத்திலிருந்து இம்முறை மத்திய மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்துவரும் பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு முன்வந்திருக்கும் முஸ்லிம்களை ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தும் வகையிலேயே மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போர்க் குற்றங்களிலிருந்து இஸ்ரேலிய படைவீரர்களை அரசாங்கம் பாதுகாக்கும் -இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு

gaa-sa.jpgகாஸா மீதான படை நடவடிக்கை தொடர்பில் எந்தவொரு இஸ்ரேலிய படைவீரர் மீதும் போர்க்குற்றம் சுமத்தப்பட்டால் இது தொடர்பான விசாரணைகளிலிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்குமென அந்நாட்டுப் பிரதமர் எஃகுட் ஒல்மேர்ட் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டைப் பாதுகாத்த அவர்களின் நடவடிக்கைக்காக இஸ்ரேல் அவர்களைப் பாதுகாக்கும் என்பதை இராணுவத்தினர் அறிந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

22 நாட்களாக நடைபெற்ற காஸா மீதான தாக்குதல்களில் 1300 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ள நிலையில் இங்கு போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கு சுயாதீன விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென ஐ.நா. அதிகாரிகள் விரும்புகின்றனர். வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஒல்மேர்ட் நாட்டின் தேவைக்காக சாவின் விளிம்புக்கு தமது வாழ்வை அர்ப்பணித்த இராணுவ வீரர்கள் கடல்கடந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. காஸாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட படைவீரரும் தளபதிகளும் எம்மைப் பாதுகாத்துள்ளனர். இதற்காக எவ்வித விசாரணைகளிலிருந்தும் இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கும் என்பதனையும் இவ்விடயம் தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களுக்கு உதவும் என்பதையும் இராணுவ வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட அதிகளவான உயிரிழப்புக்களினால் இஸ்ரேலிய இராணுவ தந்திரோபாயங்கள் கடும் கண்டனங்களுக்குள்ளாகியுள்ளன. கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பொஸ்பரஸ் குண்டுகளை வீசியமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமைக் குழுக்கள் முறையிட்டுள்ளன.
வெண்ணிற பொஸ்பரஸை பயன்படுத்தியமையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டபோதும் சர்வதேச சட்டங்களை தான் மீறவில்லையெனத் தெரிவிக்கின்றது.

போராட்ட களங்களில் புகையை உருவாக்குவதற்காக வெண்ணிற பொஸ்பரஸ் பயன்படுத்துவது சட்டரீதியாக்கப்பட்டுள்ள அதேவேளை, இஸ்ரேல் இதனை மக்கள் குடியிருப்புக்கள் மீது பயன்படுத்தியதாக மனித உரிமை ஆர்வலர்களும் செய்தியாளர்களும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் எகிப்திய மத்தியஸ்தர்களுக்கு 18 மாதகால போர்நிறுத்தமொன்றை இஸ்ரேல் முன்வைத்துள்ள அதேவேளை, ஹமாஸ் ஒரு வருட போர்நிறுத்தத்தை பிரேரித்துள்ளது.நீண்டகால போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்தும் பேச்சுக்களுக்காக ஹமாஸ் தூதுக்குழு எகிப்தை சென்றடைந்துள்ளது.

கம்பளையில் திடீர் மண்சரிவு- 44 வீடுகள் பாதிப்பு;

28-01.jpgகம்பளை தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கம்பளவெல முஸ்லிம் கிராமத்தில் மகாவலி கங்கை ஓரமாக இடம்பெற்ற மண்சரிவில் 44 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்றுக் காலை இடம் பெற்ற இந்த ஆற்றங்கரையோர மண்சரிவு காரணமாக 44 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அக் குடும்பங்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கம்பொலவெல சிங்கள கனிஷ்ட பாடசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற அமைச்சர் டி. எம். ஜயரத்ன ஸ்தலத்துக்கு விரைந்து தற்காலிகமாக பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு உலர் உணவுகளை வழங்க துரித நடவடிக்கை எடுத்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைவரும் கம்பொலவெல முஸ்லிம் பள்ளி வாசல் சூழலில் வசிப்பவர்களாவர். கம்பொலவெல பாதையும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் போக்குவரத்திற்காக மாற்று வழியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மகாவலி கங்கை ஓரமாக உள்ள நிலப்பரப்பில் இந்த வீடுகள் அமைந்திருப்பதால் சட்டத்தையும் மீறிய நிலையில் பலர் மணல் அகழ்வு வேலையில் ஈடுபட்டதன் எதிரொலியாகவே இந்த மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளை இழந்தவர்களுக்கு அப்பிரதேசத்தின் அருகே காணிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஜயரட்ன தெரிவித்தார். இந்த அனர்த்தத்தைக் கேள்விப்பட்டதும் மின்சக்தி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேயும் அவ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

‘துரோகத்தை மூடி மறைக்கவே பிரணாப் கொழும்பு பயணம்’- வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை

22-vaiko.jpgதமிழ் இனத்தை அழிக்க முற்படும் இலங்கை அரசுக்கு, இந்திய அரசு உதவுகின்ற துரோகத்தை மூடி மறைக்க பிரணாப் முகர்ஜி கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை :

“விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாய்? என்ற கவிஞன் பாரதியின் வேதனைக்குரல், நம் இதயச்சுவர்களில் மோதும் வகையில், அடுக்கடுக்கான துன்பச் செய்திகள் தாக்குகின்றன.

தன்னுடைய குடிமக்கள் மீது ‌விமான‌ங்ககளில் வந்து குண்டு வீசித் தாக்கும் மாபாதகத்தை, அடாஃல்ப் ஹிட்லருக்குப் பின்னர் உலகில் எந்த ஒரு நாடும் செய்யத் துணியாத கொடூரத்தை, இலங்கையில் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது ஏவி கொன்று குவிக்கிறது. இதைச் சொன்னதற்காகத்தான், இலங்கையின் ‘சண்டே லீடர்’ ஆங்கிலச் செய்தித்தாளின் ஆசிரியரும், சிங்களவருமான லசந்த விக்கிரமதுங்க, ராஜபக்ச ஆட்களால் சில நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த ஒரு வார காலமாக முல்லைத்தீவு பகுதியில் சிங்கள வான்படையும், ராணுவமும் நடத்தும் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள்.

இத்தனை லட்சம் மக்கள் அவதிப்படும் முல்லைத்தீவில், இந்திய அரசு கொடுத்துள்ள குறைந்த தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளைத்தான் சிங்கள ராணுவம் பயன்படுத்தி, இடைவிடாது எறிகணைகளை வீசுகிறது.

நேற்று, வல்லிபுனம் கோவிலுக்கும், மூங்கிலாறு பகுதிக்கும் இடையில், உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளிலும், சிங்கள ராணுவம் நடத்திய கோரத் தாக்குதலில், தாய்மார்கள், குழந்தைகள் உ‌ட்பட அப்பாவித் தமிழ் மக்கள் 500 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால், ‘இங்கு தாக்குதல் நடக்காது; பாதுகாப்பான பகுதி’ என்று ராணுவம் அறிவித்து விட்டு, அங்கு மக்கள் வந்தபின்னர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமுற்ற 2,000-க்கும் அதிகமான மக்கள், முதலுதவி கூடப் பெற முடியாமல், மருந்துகள் இன்றி, சிறுகச்சிறுகச் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஐ.நா. மன்றத்தின் இலங்கைக்கான அலுவலரும் இந்தத் தாக்குதலைக் கண்டித்து உள்ளார்.

எனவே, தமிழ் இனத்தை அழிக்க முற்படும் இலங்கை அரசுக்கு, இந்திய அரசு உதவுகின்ற துரோகத்தை மூடி மறைக்க பிரணாப் முகர்ஜி கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

கடந்த மூன்று மாத காலமாக போர் நிறுத்தம் என்று ஒப்புக்குக்கூட மத்திய அரசு சொல்லவில்லை. அதைவிட, ‘அது எங்கள் வேலை அல்ல என்று ஆணவத்தோடு சொன்ன பிரணாப் முகர்ஜி, இன்று திடீரென்று கொழும்பு செல்ல வேண்டிய மர்மம் என்ன?

உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடுங்கும் நெஞ்சோடு, கண்ணீர் விட்டுக் கதறும், துயரம் சூழ்ந்து உள்ள இந்த நேரத்தில், திடீரென்று விடுதலைப் புலிகளுக்கு பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவிப்பதன் மர்மம் என்ன?

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை 900 தடவைகளுக்கு மேல் துப்பாக்கியால் சுட்டு, 500 -க்கும் அதிகமான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ததற்கு இந்திய அரசோ, பிரணாப் முகர்ஜியோ ஒரு வார்த்தையாவது கண்டனம் தெரிவித்தது உண்டா?

தமிழக மக்களையும், உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்காக, அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று, புதிதாக ஏதோ ஞானோதயம் ஏற்பட்டதைப் போல் பிரணாப் முகர்ஜி, கொழும்பு செல்லும் முன் கூறுகிறார்.

ஐந்தரை லட்சம் ஈழத் தமிழர்கள் இருக்கும் முல்லைத்தீவில், இடைவிடாத தாக்குதலும், வான் குண்டுவீச்சையும் சிங்கள அரசு நடத்துகையில், அப்பாவித் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் பேரழிவு ஏற்படும் என்பது, பிரணாப் முகர்ஜிக்குத் தெரியாதா?

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, தமிழ் இனத்தையே கரு அறுக்கத்தானே ராஜபக்சே இந்தத் தாக்குதலை நடத்துகிறான்? அதனால்தான், அகங்காரத்தோடு, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரண் அடைய வேண்டும் என்று கொக்கரிக்கிறான்.

இப்பிரச்சனையின் பின்னணியை, உண்மை நிலையைத் தமிழக மக்கள், உணர வேண்டும் என்பதற்காக,சில சம்பவங்களை இதோ பட்டியல் இடுகிறேன்:

இலங்கையில் தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, ராணுவத் தாக்குதல் நடத்தும் சிங்கள அரசுக்கு, இந்திய அரசு நான்கு ஆண்டுக்காலமாக, ஒரு கொடிய உள்நோக்கத்தோடு, ராணுவ உதவிகளைச் செய்து வந்து உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பொறுப்பு ஏற்ற உடன், முதல் வேலையாக சிறிலங்காவுடன் ராணுவ ஒப்பந்தம் போட முனைந்ததும், அதைத் தடுப்பதற்குப் பல வழிகளிலும் நாம் போராடியதன் விளைவாக, அந்த ஒப்பந்தம் போடாவிட்டாலும், அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளை இந்தியா நிறைவேற்றும் என்று, அந்தச் சமயத்திலேயே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் சொன்னதை, தொடக்கத்தில் மறைமுகமாகவும், பின்னர் வெளிப்படையாகவும் இந்திய அரசு செய‌‌ல்படுத்தி வந்துள்ளது.

சிறிலங்கா ‌விமான‌‌ப்படைக்கு ராடா‌ர்களைக் கொடுத்து, சிங்கள ‌விமா‌னிகளுக்கு இந்தியாவில் பயிற்சி தந்து, இந்திய ‌விமான‌ப்படையின் தொழில்நுட்பப் பிரிவினரை இலங்கைக்கே அனுப்பிவைத்ததோடு, பலாலி ‌விமான தளத்தை இந்திய அரசின் செலவிலேயே பழுது பார்த்தும் கொடுத்தது.

சிறிலங்கா கடற்படையுடன் இந்தியக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்துகொண்டதோடு, சிங்களக் கடற்படையினருடன் இணைந்தே கடற்புலிகளின் படகுகள் மீதான தாக்குதலிலும் உதவி, புலிகளுக்குப் பொருட்கள் கொண்டுவந்த கப்பல்கள் மீது தாக்குதலும் நடத்தி, புலிகளின் மரக்கலங்களைக் கடலில் மூழ்கடித்தது.

குறைந்த தொலைவு தாக்கும் ஏவுகணைகளையும், ராணுவத் தளவாடங்களையும் சிங்களத் தரைப்படைக்கும் வழங்கியது.

வட்டி இல்லாக் கடனாக ஆயிரம் கோடி ரூபாயும் கொடுத்து, சிங்கள அரசு பாகிஸ்தான், சீனா, இஸ்ரேலிடம் கப்பல் கப்பலாக ஆயுதங்களும், போர் ‌விமான‌ங்களும் வாங்குவதற்கும் வழிசெய்து, சிங்கள ராணுவத்தினருக்கும், ‌விமான‌ப்படையினருக்கும் பயிற்சியும் கொடுத்தது.

1987 தொடங்கி 89 வரை, இந்திய ராணுவத்தை அனுப்பி, ஈழத் தமிழர்களின் உரிமைப் படை அணியான விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியதோடு மட்டுமன்றி, அப்பாவித் தமிழர்கள் பலர் சாவுக்கும் காரணமான இராணுவத் தாக்குதல் நடத்திய துரோகத்தைவிடக் கொடூரமான முறையில், வஞ்சகமாக இந்திய அரசு இலங்கைத் தீவில் தமிழர் இன அழிப்பு போரில் பங்காளியாகச் சேர்ந்து, இப்போது, படு நாசத்தையும் ஏற்படுத்தி விட்டது

அதனால்தான், கடந்த மூன்று ஆண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் மத்திய அரசு துரோகம் செய்கிறது என்பதையும், அங்கு விழுகின்ற ஒவ்வொரு தமிழனின் பிணத்துக்கும், அவன் சிந்துகிற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்று உள்ள கட்சிகளில் முக்கியமாக இன்று தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க.வும்தான் பொறுப்பாளி ஆவார்கள் என்று குற்றம் சாட்டி வந்து உள்ளேன்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழகச் சட்டமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்தை, இந்திய அரசு அவமதித்து உதாசீனப்படுத்தியது.

இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்களின் காவல் அரணான விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க, சிங்கள அரசோடு சதித்திட்டம் வகுத்து இந்திய அரசு செயற்பட்டதும், தமிழ் இனத்துக்குச் செய்த துரோகம் மட்டும் அல்ல, இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களைக் காவு கொடுக்கின்ற வடிகட்டிய முட்டாள்தனமும் ஆகும்.

சிங்கள மண்ணில், பாகிஸ்தானும் சீனாவும் கால் பதித்து விட்டன.இந்தியாவின் தென்முனையில், இந்தியாவுக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களை, அடிமை இருளிலே தள்ளுவதால், இயல்பாக ஏற்படும் தற்காப்பு அரணையும் உடைத்துவிட்டு, எதிர்காலத்தில் தென்முனையிலும் பகை நாடுகளின் ஆபத்தை வலியத் தேடி இந்திய அரசு உருவாக்குகிறது.

துரோகத்தின் உச்சகட்டமாக, இந்திய அரசு, சிங்கள ராணுவத் தாக்குதலுக்கு உதவ, இந்திய ராணுவ டாங்கிகளையும், 3,000 ராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது.

இது உண்மையாக இருக்கக்கூடாது என்று உள்ளம் பதறினாலும்கூட, இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏராளமான ராணுவ டாங்கிகள், தமிழகத்தில் ஈரோடு வழியாகக் கேரளாவுக்கு அனுப்பப்பட்டபோது எடுத்த படம், நேற்றைய (26.1.2009) தினத்தந்தி ஏட்டின் ஈரோடு பதிப்பில் வெளியாகி உள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அரசு செய்து வந்து உள்ள துரோகங்களையும் நினைக்கையில், இந்தக் கொடிய துரோகத்தை இந்தியா செய்து இருக்கவும் கூடும் என்ற எண்ணமே வலுக்கிறது.

மொத்தத்தில் ராஜபக்சே அரசு நடத்துகின்ற இன அழிப்பு போரை பின்னால் இருந்து இயக்கி வந்து உள்ள இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஒரு கொடூரமான குறிக்கோளுடன், தீங்கான நோக்கத்துடன், ஆலகால விஷம் நிறைந்த வஞ்சக சதித்திட்டத்தைத் தீட்டி, அதனைச் செயல்படுத்துகிறது என்ற உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும்.

ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களும், எங்கள் வருங்காலத் தலைமுறையினரும் மன்னிக்கவே மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாகாண சபைகள் இவ் வாரம் கலைக்கப்படும்?

lanka-map-02.jpgஇந்த வாரத்தினுள் மேலும் இரு மாகாண சபைகள் கலைக்கப்படலாமென அரசுதரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இவ் வாரத்தின் இறுதிப் பகுதியில் மேல் மாகாண மற்றும் ஊவா மாகாண சபைகளைக் கலைப்பதற்கு அரச உயர் மட்டம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை தென்மாகாண சபையை சிறிது காலம் தாமதித்து கலைப்பதற்கும் அரசு உத்தேசித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்திற்கு புதியதொரு தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்

vote.jpgமத்திய மாகாண முஸ்லிம் சமூகத்திற்கு புதியதொரு அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்காக மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக மத்திய மாகாணசபை கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஏ.எல்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார். கண்டி மஹிய்யாலையில் அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மத்திய மாகாண முஸ்லிம்களின் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் நிலவுகின்றது. இதனை நிரப்ப கடந்த காலங்களில் அரசியல்வாதிகளால் முடியவில்லை. இவ்வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம் சிறந்த சேவையை முன்னெடுப்பது எனது நோக்கமாகும். மத்திய மாகாணசபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.

கிழக்கு மற்றும் வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளில் அரசு பெற்ற வெற்றி இம்மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான அறிகுறியாவவே உள்ளது. நாட்டில் யுத்தம் நிறைவுபெற்று சமாதானம் மலரும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எனவே நாட்டில் சகல இனமக்களும் சமாதானமாக வாழும் காலம் உருவாகும் என்றார்.