எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இறக்குமதியான மருந்து உற்பத்தி பொருட்கள் பழுதடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை

மருந்துகளை உற்பத்தி செய்யவென கொள்வனவு செய்யப்பட்ட 160 மில்லியன் ரூபா பெறுமதியான மூலப் பொருட்கள் அரச மருத்துகள் உற்பத்தி நிறுவனத்தில் உபயோகிக்க முடியாத நிலையில் பழுதடைந்துள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 4,000 கிலோ நிறையுள்ள மருந்து உற்பத்திக்கான இந்த மூலப் பொருட்கள் கடந்த வருடம் மே மாதம் இறக்குமதி செய்யப்பட்டபோதும், இவற்றை உரிய காலத்துக்குள் உற்பத்திக்கு பயன்படுத்தாமையால் இம்மூலப் பொருட்கள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதற்காக விநியோகிக்கப்படும் “எரித்ரோமைசீ’ மருந்தை உற்பத்தி செய்வதற்கே இம்மூலப் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கேள்விப் பத்திரங்களை மதிப்பீடு செய்யும் குழுவில் அரச மருந்துகள் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து அதன் தலைவர் மாத்திரம் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டமை காரணமாக இந்த மூலப் பொருட்கள் இறக்குமதி விடயத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அச்சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுமார் 50 வகையான மருந்துகள் பாவனைக்குட்படுத்த முடியாத நிலையில் உள்ளன எனவும் இவை வைத்தியசாலைகளுக்கும் ஒசுசல மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்துக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன எனவும் அரசியல் அழுத்தங்கள் காரணமாகவும் தற்போதுள்ள சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழும் அரச மருந்துகள் உற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரபாகரன் பதுங்கு குழியை கைப்பற்றியது ராணுவம்

ltte-bangar.jpgமுல்லைத் தீவை கைப்பற்ற கடும் போரில் இறங்கியுள்ள இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகக் கருதப்படும் சொகுசு பதுங்கு குழிகளில் ஒன்றை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. புலிகள் வசமிருக்கும் எஞ்சியிருக்கும் முல்லைத் தீவைக் கைப்பற்ற தற்போது கடும் போரில் அது இறங்கியுள்ளது.

இதற்காக, இதுவரையில்லாத அளவில் பெருமளவு ராணுவத்தைக் குவித்து, இறுதிக் கட்டத் தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டுள்ளது. மேலும், படிப்படியாக முல்லைத் தீவை நோக்கி அது முன்னேறி வருகிறது. இந்நிலையில், முல்லைத் தீவில் உள்ள தர்மாபுரம் வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றியிருப்பதாக,ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு பதுங்கு குழி குளிர்சாதன வசதி செய்யப்பட்டு, நவீன வசதிகள் கொண்டதாக இருந்ததாகவும், குண்டுகளால் பாதிப்பு ஏற்படாதவகையில் அது அமைக்கப்பட்டு இருந்ததாகவும் ராணுவ தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழை மக்கள் குடியிருக்கும் பகுதியில் குடிசைப் பகுதியில் இந்த பதுங்கு குழி உள்ளது.இதன் நுழைவாயில் ஒரு குடிசை வீடு போல உள்ளது.

நுழைவாயில் அருகே ஒரு கன்டெய்னர் உள்ளது. அந்த கன்டெய்னரில் குளிர்சாதன வசதியும் உள்ளது. பதுங்கு குழியிலிருந்து வெளியே வரும்போது இந்த கன்டெய்னரில்தான் பிரபாகரன் தங்கியிருக்கக்கூடும்.உள்ளே செல்வதற்கு படிக்கட்டுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.அறைகளில் மின்வசதி செய்யப்பட்டுள்ளது என்று ராணுவம் கூறுகிறது.பதுங்கு குழியில் இருந்த பாதுகாப்பு அரண்கள் வலுவானதாகவும், தேக்குகளாலான கதவாலும், உட்புறம் வண்ணம் தீட்டப்பட்டும் இருந்ததாக, செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த பதுங்கு குழியில் இதற்கு முன் பிரபாகரன் தங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே முல்லைத் தீவில் நடைபெற்று வரும் கடும் சண்டையில் புலிகள் தரப்பில் ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவும், ஆயுதங்களை ராணுவம் கைப்பற்றி உள்ளதாகவும் வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் போரை நிறுத்த சர்வதேசம் வலியுறுத்த வேண்டும் – கூட்டமைப்பு எம்.பி. வேண்டுகோள்

tna_3mps.jpgஸ்ரீலங்கா படையினரின் ஆக்கிரமிப்புப் போரினால் வன்னியில் சிக்குண்டுள்ள மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழியில் விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்தி உடனடிப் பேச்சு வார்த்தை ஒன்றை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை சர்வதேச  சமூகம் ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடுக்க வேண்டும் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ளபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன் புலம்பெயர் மக்கள் இக் கோரிக்கைகளை முன்வைத்து தத்த மது நாடுகளின் அரசுகளுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் விடுதலைப்புலிகள் பலவீனமடைந்துள்ளதாக யாரும் கருதினால் விடுதலைப்புலிகளின் போரியல் தந்திரோபாயங்களை அறியாதவர்களாகவே அவர்கள் இருப்பர். புலிகள் தற்போது தம்மைப் பாதுகாத்துக் கொண்டு தக்க தருணத்திற்காக காத்திருக்கின்றனர். ஆனால் புலம்பெயர்ந்துள்ள மக்கள் வதந்திகளை நம்பாமல் தமக்கான பணிகளைச் செய்யவேண்டும். அதுவே தற்போழுது வன்னியில் சிக்குண்டுள்ள மக்களுக்கு ஏற்றதாக இருக்கும் – என்றும் ஜெயானந்த மூர்த்தி எம்.பி தெரிவித்தார்.

கிழக்கில் பெரும்பான்மையினக் குடியேற்றம் தொடர இனியொரு போதும் இடமளிக்க முடியாது

batti_.jpgகிழக்கு மாகாணம் அங்கு வாழும் தமிழ் ,சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் எந்த விதமான குடியேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதனை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இவ்வாறு சாய்ந்தமருது பிரதேசத்தில் சமகாலத்தில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கான கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ளஅசாதாரண சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி பெரும்பான்மை மக்களின் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இப்பிரதேசத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்ச நிலைமை தோன்றியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகப்போவதில்லை. தற்போது புதிய குடியேற்றத்திட்டங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு இன்றைய அரசாங்கத்திற்கு உண்டு.

இன்றைய எமது இளைஞர்கள் தான் எதிர்காலத்தில் நாட்டின் தலைமையை ஏற்கவுள்ளனர். எனவே இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவ்வப்போது தீர்த்து வைக்கவேண்டும். இன்று இளைஞர்கள் அதிகம் முகம் கொடுப்பது வேலை இல்லாப் பிரச்சினையாகும். எமது நாட்டில் கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்றுவரும் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள். அவர்கள் தங்கள் கல்வியைத் தொடரமுடியாமலும் தொழில்வாய்ப்பிற்காக இலங்கையில் வேறு பிரதேசங்களுக்கு செல்வதற்கும் பல தடைகள் காணப்பட்டன. அதேவேளை பல இளைஞர்கள் எமது நாட்டில் தொழில் கிடைக்காததினாலும் குடும்ப சுமையை தாங்க வேண்டி இருந்ததாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திலும் இளைஞர்களும் யுவதிகளும் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் இருந்து தொகையாக தமிழர்களைத் திருப்பி அனுப்பத் திட்டம்!!!

Stop_the_War_on_Asylumபிரித்தானியாவில் இருந்து அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களை தொகையாகத் திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு முற்பட்டு உள்ளது. ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி தற்போது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு முடுக்கிவிட்டு உள்ளது. இதன் முதற்கட்டமாக ஜனவரி 15 அன்று 50 பேர் வரை விசேடமாக பதிவு செய்யப்பட்ட விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாகவும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் தொடர்பான விரிவான கட்டுரையும் விரைவில் வெளிவரும். அதற்கு முன்னதாக சட்டவல்லுனர் அருண் கனநாதன் அரசியல் தஞ்சம் தொடர்பான தேசம்நெற் வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்க கேள்விகளுக்கு முன் வந்து உள்ளார். அரசியல் தஞ்சம் தொடர்பான உங்கள் கேள்விகளை கருத்துக் களம் பகுதியில் பதிவு செய்யவும்.

Related News:

அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட மக்கள் – ஒரு பார்வை : த ஜெயபாலன்

பிரித்தானியவின் தஞ்சம் வழங்கும் செயன்முறை (asylum system) மனிதத் தன்மையற்றது

இலங்கை தமிழர் பிரச்சனையை திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக்கிவிட்டார் – கருணாநிதி

karunanithi.jpgஇலங்கை தமிழர் பிரச்சனையை திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக்கிவிட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ‘முரசொலி’ யில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

50 ஆண்டு கால வேதனை வரலாறு கொண்ட இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தக் கருத்து என்றும், அதே நேரத்தில் தனித்தனி கட்சிகளின் அணுகுமுறை என்றும், பல்வேறு கோணங்களில் மக்களுக்கு திசைகள் அறிவிக்கப்பட்டு, அவர்களைத் திண்டாட்டத்திலும், திகைப்பிலும் தள்ளி விடப்படுகிற செயல்கள் பஞ்சமில்லாமலே நடைபெற்று வருகின்றன.

அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து அறவழியில் எத்தனை எழுச்சியைத் தமிழ் மக்கள் வாயிலாக உணர்த்த வேண்டுமோ, அந்த வழிகளில் எல்லாம் உணர்த்தி விட்டு, பிரதமரையே சந்தித்து, வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கை சென்று முயற்சி மேற்கொள்வது என்ற திட்டத்துடன் இந்த அறப்போரில் ஒரு அத்தியாயம் முடிவுற்றது.

ஆனால் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாததற்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக, இது ஏதோ இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கும் பிரச்சினை என்றில்லாமல், காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனை என்ற கோணத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி, வெற்றி தோல்வி, ஆட்சி மாற்றம் என்பன போன்ற அரசியல் கட்சி தத்துவப் பிரச்சனைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் ஒரு சில தலைவர்கள் இணைத்துக் குழப்புவது, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பிரச்சினையை விட்டு, வெகு தொலைவு போய் விட்டதாகவே தெரிகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று வருவதற்கு இயலாத காரணம் எதுவும் இருந்தாலும் அதனையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கலாம். அல்லது எது தக்க காலம், நேரம் என்பதையாவது எடுத்துரைத்திருக்கலாம். அப்படியெதுவும் நடைபெறாதது, மாநில அரசைப் பொறுத்தவரையில் வேதனையான நிலையாக உணரக் கூடியதுதான்.

இப்போது வெளியுறவுத் துறைச் செயலாளர் இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்துப்பேசி விட்டு வந்துள்ளார். அதன் விபரங்களும் சரியாக வெளிவரவில்லை. ஒருவேளை பிறகு வரக்கூடும். கடந்த காலத்து ஜெயவர்த்தனே-ராஜீவ் ஒப்பந்தம் பரிசீலிக்கப்படலாம் என்பது போன்ற செய்திகள் உள்ளனவே தவிர, அது வரையில் போர் நிறுத்தம் என்று கூட அறிவிக்கப்படவில்லை. போர் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ற பெயரால் அப்பாவித் தமிழர்கள் அன்றாடம் அங்கே உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெயவர்த்தனே-ராஜீவ் காந்தி உடன்பாடு பற்றிப் பேசி முடிக்கிற வரையில் போர் நிறுத்தப்படுகிற முயற்சியை மேற்கொள்வதில் பெரிய தவறு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

அந்த ஒப்பந்தம் பற்றிய கருத்துக்களையும், உடன்பாடு பற்றிய எண்ணங்களையும், ஒப்புதலையும் இலங்கைத் தமிழர்கள் மீது இங்கிருந்து நாம் திணித்திட முனைவதில்லை என்ற நிபந்தனையுடன் அணுகுவதே ஆரோக்யமானது மட்டுமல்ல, அமைதி வழியும், அமைதி நிலையும் இலங்கையில் “மறு பிறவி” எடுப்பதற்கு ஏற்றதுமாகும். இது எப்படி உருவாகும், எப்படித் தீர்வாகும் என்ற வினாக்களுக்கு விடை கிடைப்பதற்கு முன்னர் இப்போது நம்மைப் பொறுத்தவரையில், நமது தமிழ் மாநில அரசைப் பொறுத்த வரையில் இதனை மையமாக வைத்து ஏதேனும் விஷப் பரிசோதனைகளில் இறங்கி இதனை வீழ்த்தி விட்டுத் தாங்கள் ஆட்சிக்கு வந்து விடலாமா என்றும் அவர்களோடு சேர்ந்து நாமும் பலன் பெற முடியுமா என்றும் சில மூளைகள் யோசனையில் ஈடுபட்டிருக்கின்றன.

அம்மையார் ஜெயலலிதாவின் அறிக்கைகளில் இந்த ஆண்டு முடிவதற்குள் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் என்றும், சட்டமன்றத்துக்கும் எப்படியாவது தேர்தல் வரவழைக்க வேண்டும் என்பது தான் அவரது விருப்பம் என்றும், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கும் அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருப்பதாக தனது தொண்டர்களுக்கு உறுதி அளிப்பது எதற்காக என்று எல்லோர்க்கும் புரியுமென நம்புகிறேன்.

மாநிலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்திட வேண்டிய கழக ஆட்சியை, இது போன்ற பிரச்சினைகளில் வன்முறை அராஜகம் போன்ற கிளர்ச்சிகளை உசுப்பி விட்டு, கலைத்து விடலாம் என்று அவர் கருதுகிறார். அப்படிக் கலைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக, நாம் மூன்றாவது முறையாக ஆட்சியை இழக்க நேரிடலாம்.

திட்டமிட்டு, இந்த அம்மையார் நடத்திட முனையும் `அரக்கு மாளிகை சதி’யை நாம் புரிந்து கொண்டு தானிருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நாம் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜனவரி 12ம் நாள் என்னிடம் விவரித்து முடிவெடுக்க வேண்டுமென்று என் வீட்டுக்கு வந்த டாக்டர். ராமதாஸ், கி.வீரமணி, தொல். திருமாவளவன் ஆகிய மூவரும், `முதல்வர் எடுக்கிற முடிவை ஏற்று அவ்வாறு திட்டம் வகுப்போம்’ என்று தான் உறுதி அளித்தனர்.

உடனடியாக டெல்லியுடன் பேசுமாறு வேண்டினர். நானும் அன்று திருமங்கலம் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையைக் கூட கவனிக்க நேரமில்லை. அந்த மூவருடனும் அந்தச் சமயத்திலும் ஒரு மணி நேரம் என்கிற அளவுக்கு பேசி, அனுப்பி வைத்தேன்.

ஆனால் என்னைக் கலந்தே எதுவும் நடவடிக்கை என்று சென்றவர்கள், என்னைக் கலந்து பேசாமலே அந்த மூவரில் ஒருவர், நண்பர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்ட நிலையில், உண்ணாவிரதப் பந்தலில், சிங்கள அரசை விட இங்குள்ள காங்கிரஸ் கட்சியுடன் தான் தமக்குப் போராட்டம் என்பது போல விரிவுரைகள் ஆற்றிக் கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையின் உயிரோட்டத்தை எப்படி அங்கே போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தம் பலவீனப்படுத்தியதோ, அதைப் போலவே, இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடிடும் நமக்குள்ளேயும் `சகோதர யுத்தங்கள்’ எல்லாம் மொத்தப் பிரச்சினையை மூளியாக்கி விடுகிற கதை நடப்பதற்குத் தான் காரணமாகி வருகின்றன.

எப்படியோ, மூவர் கூடி முதல்வருடன் பேசினோமே, அடுத்த நாளே, இப்போது உண்ணா நோன்பு அறிவிக்கிறோமே என்று கூட எண்ணாது, அரசு பேருந்துகள் பல எரிக்கப்பட்டனவே இத் துணை அவசரத்துடன், இப்போது நிறுத்திக் கொண்டிருக்கிறோமே என்பதை சற்றுக் கூட சிந்திக்காமல் `இலங்கை தேசியக் கொடி எரிப்பு’ என்று திருமாவளவன் அறிவித்திருப்பது ஏன் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அவருக்குப் புரிகிறதோ இல்லையோ, இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுகிறவர்களுக்கு ஒன்று புரிகிறது.

தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை கருணாநிதி நடத்த வேண்டும் என்பதையும், காங்கிரஸ் ஆட்சிக்கு இனி இங்கே இடமே இல்லை என்று சபதம் செய்வதையும், அப்படியொரு ஒட்டு மொத்தமான அராஜகப் புரட்சி மூலமாகவாவது, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி விட முடியாதா என்ற கவலை மிகுந்த ஆவலால் தானே தவிர வேறல்ல.

உடன் பிறப்பே கேரளத்து மாவலி மன்னனை வீழ்த்தியோர் கதையை மறந்து விட முடியுமா?

கருணாநிதி வீட்டுக்குப் போகவும் தயார், தமிழர்களின் ஒட்டுமொத்த நல் வாழ்வுக்காக காட்டுக்குப் போகவும் தயார். அது இலை தழை நிறைக் காடாகவும் இருக்கலாம், அல்லால் இடு காடாகவும் இருக்கலாம், எதுவாயினும் ஏற்பதில் எனக்கொரு மகிழ்ச்சியே! அதுவும் என் நாட்டுக்காக-நண்பர்களினால் கிடைத்தால், இரட்டிப்பு மகிழ்ச்சியே!

முதலில் மூவரும் கலந்து யோசிப்போம்-அதில் ஒரு முடிவெடுப்போம் என்பது பின்னர் தனித்தனியே முடிவெடுத்து அறிவித்து அதற்கேற்ப செயல்படுவது, என்னையே இறுதியாகப் பழி கூறத்திட்டமிடுவது நல்ல அரசியல் தந்திரங்களாக இருக்கலாம். அதற்கு நான் ஒருவன் மயங்கி பலிக்கடா ஆகத் தயாராக இருக்கலாம். ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள் வளர்த்து எம்மிடம் அளித்து விட்டுப் போன இந்த இயக்கத்தை ஆம், ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தை பலியிட முனைவோருக்குத் துணை போக நான் தயாராக இல்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்னையில் கருணாநிதியுடன் சேர்ந்து திருமாவளவன் நாடகம்: ஜெயலலிதா

jayalalitha-1701.jpgஇலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் திருமாவளவனும் சேர்ந்து நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் தற்போது நிலவும் முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக முதல்வர் கருணாநிதியும் திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் உண்ணாவிரதப் போராட்டம்.இதனால்,இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. தமிழகத்தில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியதும் தமிழகத்தில் உள்ள மக்களை அச்சுறுத்திக் காயப்படுத்தியதும்தான் இந்தப் போராட்டத்தின் பலன்கள்.

நான்கு நாள்களாக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.உண்ணாவிரதப் போராட்டம் முடிந்த பிறகு, “தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்” என்று காவல்துறை அறிவித்தது.இதிலிருந்தே இதற்குப் பின்னணியில் திமுக இருப்பது தெளிவாகியுள்ளது.

ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது,குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புத்தாண்டு கொண்டாடினார் முதல்வர் கருணாநிதி.இதுபோன்ற கண்துடைப்பு நாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் இனியும் ஏமாறக்கூடாது. இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் – டாக்டர் ராமதாஸ்

இலங் கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நேற்று மாலை பழச்சாறு கொடுத்து திருமாவளவனின் உண்ணாவிரதப் போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் முடித்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி, நான் நேற்று இதே மேடையில் கேட்டுக்கொண்டேன். அதற்கு திருமாவளவன், இன்று போய் நாளை வா என்று கூறிவிட்டார். ஆகையால் இன்று வந்து இருக்கிறேன். இன்று வெறுமனே போகமாட்டேன். பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்து விட்டுத்தான் செல்வேன்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும். உலகையே உலுக்க வேண்டும்:

இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதை பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.

இது எனது தனிப்பட்ட முடிவு. திருமாவளவனுக்கு கூட நான் இப்படி ஒரு போராட்டத்தை கூறுவேன் என்பது தெரியாது. இதைவிட வேறு விதமான நல்ல போராட்டத்தை முதலமைச்சர் கூறினால், இதனை விட்டு விட்டு, முதல்வர் கூறும்படி போராட்டம் நடத்தலாம். முதல்வரை முன்நிறுத்தி, அவரது வழிகாட்டுதலின் பேரில் ஒரு நல்ல போராட்ட முடிவை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர், கோட்டை மற்றும் அறிவாலயத்தில் கூட்டம் போடாமல், பொதுவான இடத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் போட்டு, அதில் நாங்கள் முன்மொழிய, மற்ற கட்சிகள் வழி மொழிய செய்தால் சிறப்பாக இருக்கும்.

ஊடக அடக்குமுறைக்கு எதிராக ஜே.வி.பி. கண்டனக் கூட்டம்

jvp.jpgஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல், ஊடகவியலாளர் படுகொலை போன்றவை உட்பட அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாபெரும் கண்டனக் கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை நுகேகொடையில் நடைபெறவிருக்கின்றது.  ஜே.வி.பி.யின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கண்டனக் கூட்டத்தில் பல்வேறு அமைப்புக்களின் தலைவர்களும், பிரமுகர்களும் உரையாற்றவிருப்பதாகவும் கூட்டம் மாலை 4 மணிக்கு நுகேகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள நகரசபை மைதானத்தில் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரச மீதான தாக்குதல் மூவர் பொலிஸில் சரண்

sirasa-02.jpgதெபானம பன்னிப்பிட்டியவிலுள்ள எம்.ரி.வி., எம்.பி.சி. ஊடக நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மூவர் பொலிஸாரிடம் சரணடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித குணசேகர தெரிவித்தார். கடந்த 6 ஆம் திகதி அதிகாலை எம்.ரி.வி. நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையிலேயே கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் உட்பட மூவர் நேற்று இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்திருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்திருக்கிறார்

நாளை இவர் ஜனாதிபதி

obama.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மனைவி, மைகெலி மற்றும் உப ஜனாதிபதி ஜோன்பைடன், மனைவி ஜிலி ஆகியோர் குடும்ப சகிதம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பிரவேசித்துள்ளனர். நாளை இவர்கள் ஜனாதிபதி, உப ஜனாதிபதிகளாக பதவியேற்கவுள்ளனர்.

obama.jpg

புலிகளின் 31 சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைப்பு

truck.jpgவன்னிப் போர் முனைத் தேடுதலில் கண்டெடுக்கப்பட்ட புலிகளின் 31 சடலங்கள் இராணுவத்தினரால் வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலிருந்து இந்த சடலங்கள் படையினரால் கண்டுபிடிக்கப் பட்டிருந்தன.

இந்த சடலங்களை பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொலிஸார் அறிவித்துள்ளனர். இதில் 15 யுவதிகளுடைய சடலங்களும் அடங்கியுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுக் காலை வவுனியா மாவட்ட நீதிவான் எம். ஜி. அலெக்ஸ்ராசா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சடலங்கள் தொடர்பான விசாரணையினை நடத்தினார். சடலங்கள் எதுவுமே அடையாளம் காணப்படவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த சடலங்களை பொறுப்பேற்காத பட்சத்தில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அரச செலவில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மேலும் 28 புலிகளுடைய சடலங்கள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிவானுக்கு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.