எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பொதுமக்கள் வாழ்விடங்களில் தாக்குதலை நிறுத்தவும்

jet-1301.jpgவன்னியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் எறிகணைத் தாக்குதலை நிறுத்துமாறு யாழ. மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்

இதுபற்றி அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளதாவது விமாமனத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களினால் மக்கள் நாளாந்தும் பலியாவதுடன் பலர் காயமடைந்தும் வருகின்றனர். வன்னியில் பரந்தன் முதல் முல்லைத்தீவு வரையிலான ஏ35 வீதியை அண்டிய பகுதிகள் மற்றும் தருமபுரம் புதுக்குடியிருப்புப் பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் படையினரின் ஷெல் தாக்கதல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாதுகாப்புத் தேடி எங்கு செல்வது என்று தெரியாது தவிக்கின்றனர் நாம் மக்களை தேவாலையங்களில் ஒன்று கூடுமாறு அழைக்கலாம் அங்கு எமது குருவானவர்களும் உள்ளனர் தற்போது உள்ள நிலயில் தேவாலயங்களும் கோவில்களும் அகதிகளுக்கான புகலிடமாக அமையலாம். எனவே பொது மக்களின் பகுதிகளில் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களை அரசாங்கம் நிறுத்தவேண்டும்

இவ்வாறு ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரட்ணசிறி விக்கிமநாயக்கää பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ,  மற்றும வவுனயா மாவட்ட இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய, அமெரிக்கத் தூதுவர் பிரித்தானியத் தூதுவர் ஆகியோர்க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்கு இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக டக்ளஸ் நடவடிக்கை

daglas.jpgவலிகாமம் வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வலிகாமம் கிழக்குப் பகுதியில் வாழ்ந்துவரும் பொதுமக்கள் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து தங்களது தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினர். இதன் பிரகாரம் தங்களுக்கு இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டுவருவதாகவும் இது தமக்கு போதாமல் இருப்பதால் இதனை கூட்டித்தரும்படியும் கோரிக்கை விடுத்தனர்.

யாழ்.குடாநாட்டில் வழங்கப்படும் நிவாரணங்கள் மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதால் இவ்விடயம் குறித்து வெகுவிரைவில் மாற்றங்கள் ஏற்படவிருப்பதாகவும் இதற்கான நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டுவருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தங்களது கிராமசேவையாளரை மாற்றித்தரும்படி இம்மக்கள் விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ள அமைச்சர், தெல்லிப்பழை கிராம சேவையாளரை இரு தடவைகள் இம்மக்கள் வாழும் பகுதியில் உள்ள நலன்புரி நிலையத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய ஏற்பாடு செய்துதருவதாகவும் தெரிவித்தார்.

தங்களது பதிவுகளை மாற்றித்தரும்படி இவர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கோப்பாய் பிரதேச செயலாளருக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பணித்ததுடன் அண்மைக்கால வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு உரியமுறையில் நிவாரணங்கள் கிடைக்கப்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் பிரதேச செயலாளரிடமிருந்தும் அப்பகுதி கிராமசேவையாளரிடமிருந்தும் அறிக்கை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், இம்மக்கள் வாழும் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகமொன்றை அமைக்குமாறு இம்மக்கள் விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்விடயம் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  இச்சந்திப்பின்போது கோப்பாய் பிரதேச செயலாளர் உட்பட வலி. வடக்கு மற்றும் கிழக்கு கிராமசேவையாளர்களும் கலந்துகொண்டதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில்தான் மலையகத்தில் நிறைவான அபிவிருத்திப் பணிகள் – அமைச்சர் ஆறுமுகன்

aarumugam.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக் காலத்தில் மலையகத்தில் நிறைவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். மலையகத் தோட்டப் புறங்கள் மாத்திரமன்றி, நகரங்களும் பாரிய அபிவிருத்தியடைந்து வருவதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மலையகத்தில் மேற் கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக, கொழும்பிலிருந்து சென்ற செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ‘மக நெகும’ திட்டத்தின் கீழ் மலையகத் தோட்டப்புறப் பாதைகள் பல செப்பனிடப்பட்டுள்ளன. குறிப்பாக கரடுமுரடாகக் காட்சியளித்த பாதைகள் கொங்கிட் போட்டு புனரமைக்கப்பட்டுள்ளன. இதனால், நீண்ட காலத்திற்கு இந்தப்பாதைகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படும். அதே போன்று மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.

இளைஞர் வலுவூட்டல் அமைச்சின் மூலம் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மலையக இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்குக் கடன் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. இவ்வருடம் இளைஞர், வலுவூட்டல் அமைச்சுக்கென 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனைக் கொண்டு மேலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டங்களை வகுத்துள்ளோம்’ என்றும் அமைச்சர் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா. செயலாளர் பான்கிமூன் மத்திய கிழக்கிற்கு விசேட விஜயம்

gaza_war02.jpgஐ.நா.  செயலாளர் பான்கிமுன் அவசர விஜயமொன்றை மேற்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவுள்ளார். இன்று புதன் கிழமை அவர் எகிப்து , ஜோர்தானுக்குச் சென்று காஸாவில் தோன்றியுள்ள அப்பாவிகளின் நெருக்கடிகளை நிறுத்துவது பற்றி பேசுவார். இஸ்ரேலை காஸா மீதான தரை, வான் தாக்குதல்களை நிறுத்துமாறும் ஹமாஸை ரொக்கட் தாக்குதலை நிறுத்துமாறும் கோரவுள்ளதாக பான்கிமுன் சொன்னார்.

அப்பாவிகளையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் நோக்கில் அமைந்துள்ள தனது விஜயம் வெற்றி பெற அனைத்து வழிகளையும் செல்வாக்குகளையும் பாவிக்கவுள்ள பான்கிமுன் லெபனான், சிரியா, துருக்கி, குவைத் ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார்.

ஐ.நா. வின் ஆலோசனைகளை இரு தரப்பும் நிராகரித்தமையால் சிவிலியன்கள் வாழ்வு கவலைக் கிடமாகியுள்ளதாக பான்கிமுன் கவலை வெளியிட்டுள்ளார். ஹமாஸ¤க்கு நெருக்கமான நாடுகளான லெபனான், சிரியாவிடம் ரொக்கட் தாக்குதலை நிறுத்தும்படி ஹமாஸை வற்புறுத்துமாறு கோரவுள்ளதுடன் இஸ்ரேலிடம் நேரடியாக தாம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

எகிப்தின் எல்லைகளைத் திறந்து பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேலும் எகிப்தும் உடன்பட வேண்டும். இதுபற்றியும் பான்கிமுன் பேசுவார் இதுவரை 900 பேர் பலியாகியுள்ளனர். நாலாயிரம் பேர் காயமடைந்துள்ளனர். காஸாவில் காயமடைந் தோர் படும் அவலம் காண்போரைக் கண் கலங்க வைக்கும்.

தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் இணங்கி சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதை நிராகரித்த ஹமாஸ் தமது போராளிகள் வெற்றிப் பாதையில் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளது. தரைத் தாக்குதல் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து பாடசாலைகள், பொது இடங்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

மத்திய கிழக்கு விஜயத்தை முடித்துக் கொண்டு பான்கிமுன் 20ம் திகதி அமெரிக்கா செல்வார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளும் பான்கிமுன் காஸாவின் நிலவரம்பற்றி ஜனாதிபதியிடம் பேசவுள்ளதாகவும் ஐரோப்பிய யூனியனின் பங்களிப்பு அரபு நாடுகளின் தலையீடுகளின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி பராக் ஒபாமாவை கோருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற இலங்கையர் மூவர் கைது

handcuff.jpgஐக்கிய அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக செல்வதற்கு முயன்ற இலங்கையர் மூவரும் அவர்களுக்கு உதவியவர் ஒருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். மக் அலனிலுள்ள மில்லர் சர்வதேச விமான நிலையத்தில், மூன்று சட்டவிரோத குடிவரவாளர்களுக்கான விமானப் பயணச் சீட்டுகள், போலி கனேடிய அடையாள அட்டைகளுடன், கனடாவைச் சேர்ந்த சுரேஷ் சுந்தரலிங்கம் (வயது 28) என்பவரை கைது செய்தனர்

அத்துடன், அவரின் உதவியுடன் ஐக்கிய அமெரிக்காவினுட் புக முனைந்த இலங்கையர் மூவரும் அமெரிக்க எல்லைப்பகுதி ரோந்து படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தம் குடும்பத்தை ஐக்கிய அமெரிக்கா மெச்சிக்கோ ஊடாக கனடாவுக்கு அழைத்துச் செல்வதற்காக 32 ஆயிரம் டொலர்களை சுந்தரலிங்கத்திற்குச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், வழக்கறிஞரின்றி புலனாய்வாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு சுந்தரலிங்கம் மறுத்து விட்டார். இந்நால்வரதும் ஆரம்ப விசாரணைகள் நாளை இடம் பெறும். உரிய மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் தமிழ் மொழியிலேயே வாக்கு மூலம் அளிப்பர்.

வடமேல், மத்திய மாகாண தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கு 75000 பேர் விண்ணப்பம்

ballot-box.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கென 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் திணைக்கள வட் டாரங்கள் தெரிவித்தன. இரண்டு மாகாணங்களிலுமுள்ள கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களினது தெரிவத்தாட்சி அதிகாரிகளிடமே இவ்விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்க தகுதியுள்ளோர் பெப்ரவரி 02ஆம் 03ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும். இதற்கான வாக்குச்சீட்டுக்கள் இம் மாதம் 21ஆம் திகதி கிடைக்கும் வகையில் ஐந்து மாவட்டங்களது தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் கூறின.

சென்னை விமான நிலையத்தில் பெண்அதிகாரியிடம் சச்சரவில் ஈடுபட்ட இலங்கை நபர் கைது

air.jpgவிமான நிலைய பெண் அதிகாரியிடம் போதையில் ரகளையில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்தவரை பொலிஸார் கைது செய்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நவீந்திரன் (வயது 33). லண்டனில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருபவர். இவர் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானம் மூலம் ஞாயிறு இரவு 7.30 மணிக்கு சென்னை வந்தார். நள்ளிரவு 1.30 மணிக்கு லண்டனுக்கு புறப்படும் ஜெட் எயார்வேஸில் டிக்கெட் எடுத்திருந்தார்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் அவரது சகோதரி வசிக்கும் தாம்பரம் சேலையூருக்குச் சென்றார். பின் மதுக்கடையில் நுழைந்து மதுஅருந்தி விட்டு விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு ஜெட்எயார்வேய்ஸ் விமான அதிகாரி தேவி (வயது 30) நவீந்திரனின் விசா மற்றும் பாஸ்போட்டை சோதனை செய்ய முயன்றார். நவீந்திரன் குடிபோதையில் இருந்ததால் “இன்று விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது. நாளை செல்லும் விமானத்தில் அனுப்புகிறோம் ‘ என தேவி கூறினார்.

இதில் கோபமடைந்த நவீந்திரன் “நான் யார் தெரியுமா? என்னுடைய செல்வாக்கு என்ன” என விமானப்பெண் அதிகாரி தேவியிடம் ரகளையில் ஈடுபட்டார். இதையறிந்த விமான நிலைய பொலிஸார் குடிபோதையில் இருந்த நவீந்திரனை அழைத்துச் சென்று குரோம்பேட்டை அரச மருத்துவமனையில் மருத்துவச் சான்று பெற்றனர். அதன்பின் அவர் மீது பொலிஸார் வழக்கு பதிந்து ஆலந்தூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லண்டன் நியூஹாமில் எளிமையுடன் தைப்பொங்கல் – வீதி விளக்குகளுக்கு துணைமேயர் ஒளியூட்டினார். : த ஜெயபாலன்

Pongal_Newham_2009தமிழர்களின் புது வருடப் பிறப்பாகிய தைப்பொங்கல் லண்டன் ஈஸ்ற்ஹாம் பகுதியில் தெரு விளக்குகள் ஒளியூட்டப்பட்டு அமைதியான முறையில் நடைபெற்றது. ஐரோப்பாவில் தைப்பொங்கல் தினம் உத்தியோகபூர்வமாக கொண்டாடப்படும் ஒரே நகரம் லண்டன் ஈஸ்ற்ஹாம் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஹாம் துணை மேயர் கிறிஸ்ரைன் போல்டன் தெருவிளக்குகளுக்கு ஒளியூட்டி தமிழ் புதுவருடத்தை வரவேற்றார்.

2001 முதல் கடந்த எட்டு ஆண்டுகளாக தைப்பொங்கலையொட்டி வீதி விளக்குகளுக்கு ஒளியூட்டும் நிகழ்வு ஈஸ்ற்ஹாமில் இடம்பெற்று வருகிறது. இந்நிகழ்வில் மத வேறுபாடுகளைக் கடந்து இந்துக்கள் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் என அனைவரும் பங்கேற்பது வழமை. இன்று இலங்கையில் நிகழும் யுத்த சூழல் காரணமாக இந்நிகழ்வு மிக எளிமையான முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டது.

ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரிற் நோத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் துணைமேயருடன் கவுன்சிலர்கள் சிவிக் அம்பாசிடர் கவுன்சில் அலுவர்கள் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டனர். நியூஹாம் கவுன்சிலுக்கு மூன்றாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்ட கவுன்சிலர் போல் சத்தியநேசன் இந்நிகழ்வை கடந்த எட்டு ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வருகிறார்.

இன்று ஏற்றப்பட்ட இவ்வெளிச்சம் இலங்கையிலும் உலகிலும் சமாதானத்திற்கான வெளிச்சம் இந்த வெளிச்சம் நம்பிக்கையைக் கொடுக்கும் என்று குறிப்பிட்டார். பல்கலாச்சார மக்களும் வாழும் நியூஹாமில் தமிழர்களுடைய புது வருடத்தை குறிக்கும் இந்நிகழ்வு இடம்பெறுவது நியூஹாமிற்கு பெருமை சேர்க்கிறது என்று குறிப்பிட்ட போல் சத்தியநேசன் நியூஹாம் மக்களுடன் சேர்ந்தே முன்னேறுகிறது என்று குறிப்பிட்டார்.

துணை மேயர் கிறிஸ்ரின் போல்டன் பேசுகையில் இலங்கையில் நடைபெறும் யுத்தம் பற்றிய தனது வேதனையை வெளிப்படுத்தினார். துன்பங்கள் வந்தாலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது அவசியம் என்பதனை அவர் சுட்டிக்காட்டினார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் மக்களுடைய ஒரு நம்பிக்கையாக இருந்து வந்தது. இதையொட்டி எண்பதுகளின் நடுப்பகுதிகளில் அடுத்த பொங்கலில் தமிழீழம் என்பது போன்ற கருத்துக்கள் தமிழீழ விடுதலை இயக்கங்களால் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டு இருந்தது. ஆனால் இன்று நிலைமை மறுதலையாகி விட்டது. தங்களுக்குள் முட்டி மோதிய தமிழீழ விடுதலை இயக்கங்கள் ஒன்றையொன்று அழித்துக்கொண்டு தங்களையும் அழித்துக் கொண்டன.

இன்று இலங்கைத் தமிழர்கள் தை பிறந்தாலும் சமாதானத்திற்கு ஏதும் வழி இருக்கா என்ற அங்கலாய்ப்புடனேயே உள்ளனர்.

பேரழிவிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் மலேசிய நாடாளுமன்றத்தில் பேராசிரியர் இராமசாமி

world_news.jpgபாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய மலேசிய அரசாங்கம் இதேபோன்று பேரழிவில் இருந்து ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தை கூட்டித் தீர்மானம் நிறைவேற்றும்படி மலேசியாவில் உள்ள பத்துகவான் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் முனைவர் இராமசாமி உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தைப் போல் இலங்கை தமிழ் மக்களைக் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் இலங்கை அரசாங்கம் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது.

பாலஸ்தீன மக்களைப் போல் ஈழத்தமிழ் மக்களும் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கின்றனர். ஈவு இரக்கமின்றி தமிழ் மக்களை சிங்கள அரசு விமானம் மூலம் குண்டுகளை வீசி அழித்து வருகின்றது. பாலஸ்தீன மக்களைப் போல் இலங்கைத் தமிழ் மக்களையும் அழிவிலிருந்து நாம் காப்பற்ற வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக ஒரு சிறப்புக் கூட்டத்தை கூட்டுங்கள் என்று பேராசிரியர் இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார். பாலஸ்தீன மக்களுக்காக மலேசிய அரசாங்கம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இந்த சிறப்புக் கூட்டத்தில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேறுபாடின்றி வன்மையாகக் கண்டித்தனர். இந்தச் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பேராசிரியர் இராமசாமி, பாலஸ்தீன மக்கள் மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை எடுத்து விளக்கினார். சிங்கள அரசு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கும் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அவரோடு இணைந்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் படும் துயரங்களைப் பற்றிப் பேசி அதற்குத் தீர்வு காணப்பாடுபடுவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன், குலசேகரன், லிம் சோங் எங் குறிப்பிட்டுள்ளனர்.

மலேசிய அரசிடம் இந்தியன் காங்கிரஸும் கோரிக்கை. இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென்று கோரி, மலேசிய இந்தியன் காங்கிரஸின் இளைஞர் பிரிவின் ஆலோசகர் சா.வேள்பாரியும் கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதல்களால் காஸாவில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டு வருவதைப் போல் இலங்கையிலும் அப்பாவி தமிழ் மக்கள் மீது இராணுவம் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களால் குழந்தைகள் முதல் அப்பாவி மக்கள் வரை தினம் தினம் மடிந்து வருகின்றனர். மக்களின் மரண ஓலம் வானைப்பிளந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இலங்கை விவகாரத்திலும் உலக அமைப்பான ஐ.நா.உடனடியாக தலையிட வேண்டும் என்று மலேசியா சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வேள்பாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். இராணுவத்தின் தாக்குதலினால் காயமடைந்திருக்கும் அப்பாவித் தமிழ் மக்களும் குழந்தைகளும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும். அங்கு அமைதி நிலை ஏற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக ஐ.நா.உடனடியாக சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேள்பாரி கேட்டுக்கொண்டார். இலங்கையில் நடக்கும் போரில் கொல்லப்பட்டு வருகின்றவர்கள் இனத்தினாலும் மொழியினாலும் சமயத்தாலும் தமிழர்கள். எனவே அங்கு நடக்கின்ற அட்டூழியத்தை மலேசிய இந்தியர்கள் என்ற முறையில் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

மலேசிய ஆளுங்கட்சியில் ஓர் உறுப்புக் கட்சி என்ற முறையில் மலேசிய இந்தியன் காங்கிரஸின் இளைஞர் பிரிவு இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து மலேசிய அரசாங்கம் உடனடித் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கின்றது. வேள்பாரியின் இந்த அறைகூவலை வரவேற்று பல சமூக இயக்கங்களின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஆஸ்பத்திரியில் 37 புலிகளின் உடல்கள்

வவுனியா பொது வைத்தியசாலையில் விடுதலைப் புலிகளின் 37 உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் இந்த 37 உடல்களும் படையினரால் கொண்டுவரப்பட்டு வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வன்னிப் போர் முனையில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உடல்களே இவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனைகள் நடைபெற்ற நிலையில் இந்த உடல்களை பொறுப்பேற்று விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை கேட்கப்பட்டுள்ளது. எனினும் இந்த உடல்கள் எப்போது வன்னிக்குக் கொண்டு செல்லப்படுமெனத் தெரியவில்லையெனவும் கூறப்படுகிறது.