தொலை பேசி ஊடாக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (09) சிறப்புரிமை பிரச்சினையொன்று முன்வைத்து பேசும்போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார். “நேற்று (08) இரவு தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
தொலைபேசியூடாக ஆண் குரலில் பேசிய ஒருவர், நான் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியிலும் சரி அதிகம் கத்துவதாகவும், அரசாங்கத்துக்கு எதிராக பேசுவதை நிறுத்தாவிட்டால் லசந்தவிற்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் ஏற்படுமென்றும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார். அத்துடன், இதுதான் முதலும், இறுதியுமான எச்சரிக்கை என்றும் கூறிவிட்டு பேசியவர் தொலைபேசி அழைப்பையும் துண்டித்துவிட்டார். இன்று அரசாங்கத்துக்கு எதிராக பேசுவது உயிரை பறிக்கும் அளவுக்கு குற்றமாகியுள்ளது. எனவே, இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு எனக்குரிய பாதுகாப்பை அதிகரித்து தருமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், எனது கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் அவர் கூறினார்.
இதேநேரம், இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தெரிவித்தார்.