எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

லசந்த படுகொலை தொடர்பாக பி.பி.சி.யின் தமிழோசை, சந்தேசிய செய்திகளுக்கு தணிக்கை?

“சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பி.பி.சி.தமிழோசை மற்றும் “சந்தேசிய’வில் ஒலிபரப்பான செய்திகள் முழுமையாகத் தணிக்கை செய்யப்பட்டது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதன்போது, லசந்த விக்கிரமதுங்கவின் கொலையைக் கண்டித்து ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா விடுத்த அறிக்கையின் பெரும் பகுதியும் தணிக்கை செய்யப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பி.பி.சி.தமிழோசையும் சிங்கள சேவையான சந்தேசியவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வரிசை மூலம் (எவ்.எம்.) ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக பி.பி.சி.யின் இவ்விரு ஒலிபரப்பிலும், இலங்கையின் யுத்தம் மற்றும் அரசியல் தொடர்பான செய்திகளில் பெரும்பாலானவை முழுமையாகத் தணிக்கை செய்யப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை, கல்கிசை பகுதியில் சிரேஷ்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தியும்  தணிக்கை செய்யப்பட்டது.

இவரது கொலையைக் கண்டித்து அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா வெளியிட்ட அறிக்கையின் பெரும் பகுதியும் தணிக்கை செய்யப்பட்டது. அதுபோல் லசந்தவின் பத்திரிகைத்துறை நண்பர்கள், ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் கருத்துகளும் முற்றாகத் தணிக்கை செய்யப்பட்டன. இலங்கையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தணிக்கை எதுவும் அமுல்படுத்தப்படாத நிலையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பி.பி.சி.ஒலிபரப்புக்கு தணிக்கையை மேற்கொள்வது குறித்தும் பல்வேறு தரப்புகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை எம்.ரி.வி.நிறுவனம் மீதான தாக்குதல் தொடர்பாக தமிழோசை மற்றும் சந்தேசியவில் ஒலிபரப்பான செய்திகளும் தணிக்கை செய்யப்பட்டன.

ஊடக சுதந்திரம் -பகுதி 1 – சேனன்

writing.gifமுன்குறிப்பு
‘ஜனநாயகம்’ மற்றும் ‘ஊடக சுதந்திரம்’ என்ற பதங்கள் இன்று உலகெங்கும் அதிகாரம் சார்ந்த பொது அர்த்தத்திலேயே பேசப்பட்டு வருகிறது. ஜனநாயகம் சிறுபான்மை அதிகார கும்பலின் ஜனநாயகமாகவும,; சிறுபான்மை அதிகாரத்தின் பேச்சு சுதந்திரத்தை பிரச்சாரம் செய்வது ஊடக சுதந்திரமாகவும் அர்த்தப்பட்டு வருகிறது. இந்த அர்த்தப்படுத்தலில் பெரும்பான்மை மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். உலகின் பெரும்பான்மை ஊடகங்கள் மிகச்சிறுபான்மை பணக்காரர்களின் கைகளில் முடக்கப்பட்டு வருவதால் அவை பெரும்பான்மையினர் நலன்களில் இருந்து விலத்துவது தவிர்க்க முடியாததாகிறது. ஊதிப்பெருத்த பெரும் ஊடகங்கள் சிறு சிறு ஊடகங்களை விழுங்கி மிகச்சிறுபான்மை நலனை பிரதிபலிக்கும் பிரமாண்டமான ஊடக நிறுவனங்களின் காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்த ‘பொது’ ஊடகங்களில் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பு மிக மிக குறைந்தளவிலேயே இருக்கிறது. விக்டோரியன் காலத்தின்பின் மிககூடிய அளவில் ஊடகங்கள் மக்களிள் இருந்து தனிமைப்பட்டு போயுள்ளன என்பது மிகையான கருத்தல்ல. இன்று ஊடகங்கள் மேல் விழுந்துள்ள பொருளாதார-அரசியல் ஆதிக்கத்துக்கு பலத்த எதிர்ப்பை ஏற்படுத்துவதன் மூலமே மக்கள் பங்களிப்பை – மக்களின் நலன் பிரதிபலிக்கும் பொது ஊடகத்தை உருவாக்க முடியும். இந்த சாத்தியத்தை இணைய ஊடகங்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளன. ஜனநாயகத்தின் எல்லைகளை அகலப்படுத்துவதிலும் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும் அதிக பங்களிப்பை வழங்கி வருபவை இணைய ஊடகங்களே.

உலகளாவிய பாரிய நிறுவனங்கள் பல சரிந்து பெரும் பொருளாதார சிக்கலுக்குள்ளாகியுள்ள இத்தருணத்தில் அரசியலில் தமது பங்களிப்பின் அவசியத்தை பெரும்பான்மை மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர். தேர்தல்களிள் மக்களின் நலனை பிரதிபலிக்கும் சந்தர்ப்பம் பெரும்பான்மை மக்களுக்கு கிடைப்பதில்லை. போட்டியிடும் ‘பெரும்பான்மை’ கட்சிகள் யாவும் சிறுபான்மை அதிகார வர்க்கத்தினர் நலன்சார்ந்தே இயங்குவதால் மக்கள் நலன் ஜனநாயக தேர்வுக்கு வருவதே இல்லை. அதனால் பல்வேறு நவீன முறைகளிள் மக்கள் தங்கள் அரசியற் பங்களிப்புகளை செய்யும் புதிய காலத்தில் நாம் நுளைந்துள்ளோம். அதிகாரவர்கத்தின் தான் தோன்றி தனமான முடிவுகளை எதிர்க்க வேண்டிய தேவையும் அரசியல் முடிவுகளிள் மக்களின் பங்களிப்பு இருக்கவேண்டிய அவசியமும் இன்று உலகெங்கும் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் பங்களிப்பை உள்வாங்குவது மக்கள் சார்ந்து இயங்கும் எந்த ஊடகத்தினதும் பெரும் சவாலாக இருக்கிறது.

வரலாற்று பின்னனி
18ம் நூற்றான்டு காலகட்ட தொழிற்புரட்சி பல்வேறு சமூக பொருளாதார விஞ்ஞான மாற்றங்களை கொண்டு வந்தது. இக்காலகட்டத்தில் அச்சுத் துறையில் ஏற்பட்ட வேகமான மாற்றம் மிக முக்கியமானது. 19ம் நூற்றான்டின் மத்திய காலத்தில் பத்திரிகைகள் மில்லியன் கணக்கான பிரதிகளை அச்சிடும் அளவுக்கு அச்சுதுறை தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சி கண்டது. பெரும்பான்மை மக்களை குறிவைத்து பத்திரிகைகள் அச்சிடப்பட்டாலும் அவை பெரும்பான்மையினரின் நலன்சார்ந்து இயங்கவில்லை. பத்திரிகை துறையை அதன் ஆரம்பகாலம் தொட்டு அதிகார வர்க்கம் தனது கட்டுபாட்டில் வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்து வந்துள்ளது. பொது அறிவில் செல்வாக்கு செலுத்தல் – தகவல்களை கட்டுப்படுத்தல் முதலானவையை அதிகாரம் தனது இருத்தலை உறுதிப்படுத்தும் இயல்பான நடவடிக்கையாக கொண்டிந்தமையால் இதற்கு சிறந்த வசதி ஏற்படுத்தி கொடுத்த அச்சுதுறையை அதிகாரம் உடனடியாக தமது கட்டுபாட்டில் கொண்டுவந்தது ஆச்சரியமானதல்ல. பெரும்பான்மையர் சுயமாக பணம்கொடுத்து வாங்கும் பத்திரிகை மிக சிறுபான்மை நலன்சார்ந்து அச்சிடப்பட்டது விரைவில் முரண்பாடுகளை தோற்றுவித்தது. இந்த முரண்பாடு தோற்றுவித்த அதிருப்தியை மக்கள் சார்ந்து சிந்தித்த ‘மொழி வல்லுமையாளர்’ பலர் தமது வெளிப்பாடுகளில் பிரதிபலித்து வந்துள்ளனர். பெரும்பான்மையரின் எதிர்ப்பு இவர்களுக்கூடாவகவே சிறிய அளவில் பதியப்பட்டது. இவர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பாவித்து ‘பேச்சு சதந்திரம்’ என்ற கருத்தை முன்தள்ளினர்.

பெரும்பான்மை மக்களின் பல்வேறுபட்ட குரலை உள்நுளைப்பதானால் முரணான பல கருத்துக்களை-ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை அனுமதித்தாக வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகியது. பேச்சு சுதந்திரம் என்ற உரிமை ஒவ்வொருவரினதும் தனி உரிமை ஆக்கப்பட்டால் மக்களின் குரல் வெளிப்படுவதற்கான அதிகாரத்தின் தடை தளர்த்தப்படும் என்பது உணரப்பட்டது.

பேச்சுரிமை ஒவ்வொரு மனிதனிதும் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை நிலைநாட்டுவது, மக்களின் பேச்சு பொதுவில் வளரவிட அதிகாரத்தை நிர்பந்திக்கும் உத்தியானது. அதிகாரம் சார்-எதிர் என்ற சார்நிலைகளுக்கும் அப்பால் ‘பேசும் உரிமை’ என்பதை மனித உரிமையாக பார்க்கும் போக்கு அதிகார வர்க்கத்துக்கு பெரும் சிக்கல்களை தோற்றுவித்தது. பேச்சு உரிமை அதிகாரத்துக்கு எதிரான நலன் கொண்டது என்பதை அதன் ஆரம்பகாலங்களிலேயே அதிகாரம் தெட்டத் தெளிவாக புரிந்து கொண்டது. தமக்கு எதிரான கருத்துக்களையும் ‘உரிமை’ அடிப்படையில் அதிகாரம் ஏற்றுகொள்ள வைப்பது என்பது மக்கள் சார்ந்து கருத்து வைத்த அன்றய புத்திஜீவிகளின் பெரிய சவாலானது. பிரெஞ்சு புத்திஜீவி வால்டேரின் புகழ்பெற்ற கூற்றை இந்த அடிப்படையிலேயே பார்க்கவேண்டும். ‘நீ சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அதை சொல்ல இருக்கும் உனது உரிமையை காக்க நான் எனது உயிரையும் கொடுப்பேன்.’ என்று வால்டேர் வலியுறுத்தியதன் அரசியற் பின்னணி இதுதான். ‘நீ சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை’ என்ற பகுதி அதிகாரத்தை நோக்கி பேசியதாகவும் அதிகாரம் உடன்படாத கருத்து வெளிப்பாட்டின் குறியீடாகவும் பார்க்கபட வேண்டும். ஆனால் அதிகாரம் ‘தத்துவ’ கோரிக்கைகளுக்கு மசியவில்லை. அதிகாரத்தை மசியவைக்க மக்கள் உரிமை போராட்டத்தை நடத்தவேண்டியிருந்தது.

1776ல் இருந்து 1800 வரையான காலப்பகுதியை ‘புரட்சிகளின் காலம்’ என்று பல வரலாற்றாசிரியர்கள் வர்னிப்பர். ஒடுக்கப்பட்டுகொண்டிருந்த பெரும்பான்மை மக்களின் உரிமைகளுக்கான கிளர்ச்சி பாரிய அளவில் வெடித்த காலப்பகுதியிது. ஆரம்பகால முதலாளித்துவத்தின் ‘கருத்துநிலையை’ தீர்மானித்த காலப்பகுதியிது. 1776 யூலை 4ல் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் ‘மனித உரிமைகளை’ தோமஸ் ஜெபர்சன் அறிமுகப்படுத்தியது மறுமலர்ச்சி காலகட்டத்தின் உச்சக்கட்ட நடவடிக்கை. இதன்பின் 1789 பிரெஞ்சு புரட்சியின்போது உருவான பல்வேறு கோசங்களில் ‘மனிதரின் உரிமைகள் பிரகடனம்’ முக்கிய செல்வாக்கு செலுத்தியது. தோமஸ் பெயினின் ‘மனிதரின் உரிமை’ புத்தகம் உரிமை கோரிக்கைகளின் சின்னமானது மட்டுமின்றி அக்கால புரட்சியாளர் பலருக்காக வாதாடவும் உதவியது. இக்கருத்துகள்மேல் அன்று அதிகாரத்துக்கு இருந்த அச்சத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. தோமஸ் பெயினுக்கு இங்கிலாந்து ஆழும் வர்க்கம் மரண தண்டனை வளங்கியது ஆச்சரியமானதல்ல. அவர் பிரான்சுக்கு தப்பியோடித்தான் தூக்கில்; இருந்து தப்பினார்.

1791ல் அமெரிக்காவில் அமுலுக்கு வந்த உரிமை சட்டமும் அதில் முதலாவது சேர்ப்பாக (First Amendment to the Bill of rights) பேச்சு சுதந்திரமும் மனித குல வரலாற்றில் மிக முக்கியமான மைல்கற்கள். பேச்சுரிமையையோ அல்லது ஊடகத்தையோ பாதிக்கும் எந்த சட்டத்தையும் காங்கிரஸ் கொண்டுவரகூடாது என்று தடுத்தது இச்சட்டம்.

இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து மக்களின் உரிமைகளை சூறையாடிக் கொண்டுதான் இருந்தனர். வளங்களையும் ஊடகங்களையும் தொடர்ந்தும் அவர்கள் தமது கட்டுபாட்டிலேயே வைத்திருந்தனர். ஆனால் அதிகாரத்துக்கும் ஊடகத்துக்குமான உறவு பற்றி மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். யோன் ஸ்டுவர்ட் மில் தனது ‘ஊடக சுதந்திரமும் அவதூறு சட்டமும் ‘‘Law of Libel and Liberty of press’ (1825) என்ற கட்டுரையில் இதுபற்றிய முக்கியமான அவதானத்தை ஏற்படுத்துகிறார். அதிகாரம் எப்பொழுதும் பெரும்பான்மை ஒடுக்கப்படுபவர்களின் சுதந்திரத்தை நசுக்குவதாகவே இருக்கும் என்பதை மில் சுட்டிகாட்டுகிறார். பொது உரையாடல் மூலமாகவும், பிழை-கூடாது-தவிர்க்கப்படவேண்டியது என்று கருதப்படுகிற கருத்துக்களை அனுமதிப்பதன் மூலமாகவுமே சுதந்திரத்தை சாத்தியப்படுத்த முடியும் என்றார் அவர்.

‘எதிர்’ கருத்து எவ்வகைப்பட்டதாக இருப்பினும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதோடு தொடர்ந்தும் பின்னி பிணைந்திருப்பதை நாம் இங்கு அவதானிக்கவேண்டும்.

இதன்பிறகு முதலாளித்துவம் முதிர்ச்சியடைய தொடங்கிய கால கட்டத்தில் உருவான புது ஒடுக்குமுறைகள் புது ஒடுக்குதல்களை தோற்றுவித்தது. அதற்கெதிரான போராட்டமும் வலுப்பெற்றது. இரஸ்ய புரட்சி பேச்சு சுதந்திரத்தின் எல்லைகளை வரலாறுகாணாத வகையில் அகட்டியது. மார்க்சிய புரட்சியாளர் ஊடகத்துக்கும் அதிகாரத்துக்குமான உறவை முதல் முதலாக உடைத்தனர். தொழிலாளர்களுக்கும் வறிய மக்களுக்குமான ஊடகத்தை உருவாக்கும் முயற்சியில் முதன் முதலாக இறங்கினர் இரஸ்ய புரட்சியாளர்கள். அதிகாரத்தை தகர்த்து ஒடுக்கப்படும் மக்களுக்கான தொழிலாளர் ஜனநாயகத்தை உருவாக்கியதன் மூலம் புதிய அரசியல் -பொருளாதார உறவுமுறைகளுக்கு வழியேற்படுத்தினர். மனித குல வரலாற்றில் முதன் முறையாக ஒடுக்கப்படும் அனைத்து மக்கள் சார்பிலும் இயங்கும் பதிய சமுக ஒழுங்கு உருவாக்கப்பட்டது.

புரட்சி நடந்த ஒரு மாதத்திற்குள் நவம்பர் 1917ல் போல்சிவிக் கட்சி பத்திரிகை பிரவ்டா லெனினின் பின்வரும் கோரிக்கையை பிரசுரித்தது.

‘ தோழர்களே! தொழிலாளர்களே! இனி நீங்கள்தான் அரசின் தலைமைத்துவத்தில் இருக்கிறீர்கள் என்பதை நன்றாக ஞாபகத்தில் வைத்துகொள்ளுங்கள். நீங்களாக ஒன்றினைந்து உங்கள் அரச கருமங்களை உங்கள் கையில் நீங்கள் எடுப்பதற்கு வேறு யாரும் உதவப்போவதில்லை. உங்கள் வேலையில் இறங்குங்கள். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பியுங்கள். யாருக்காகவும் தாமதிக்காதீர்கள்.’

சர்வாதிகாரி என்று பூர்சுவாக்கள் புறங்கூறும் லெனினின் மக்கள் நோக்கிய கோரிக்கை இது. சோவியத் துரித கதியில் மாற்றத்துக்குள்ளானது. உலகெங்கும் உள்ள அதிகார வர்கத்துக்கு அதிர்வலைகளை சோவியத் மக்கள் அனுப்பினர். பல்வேறு நாடுகளில் உரிமைபோரில் மக்கள் இறங்க இது ஊக்கமளித்தது. இருப்பினும் புரட்சியின் வெற்றி தொடர்ந்து நீடிக்கவில்லை. சிறு அதிகார வர்க்கம் அரசை கைப்பற்றி தொழிலாளர் நலனை நசுக்க தொடங்கியது. ஸ்டாலினுடன் பிராவ்டாவின் இணை ஆசிரியர்களில் ஒருவரான காமினேவ் புரட்சிக்கு சில மாதங்களின் முன் லெனின் எழுதிய ஏப்பிரல் தீசிஸ்க்கு எதிராக ஆசிரியர் தலையங்கம் எழுதி விமர்சிக்ககூடிய ஒரு சூழல் இருந்தது. ஆனால் ஸ்டாலினிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றியதுடன் நிலை தலைகீழாக மாறியது. பேச்சு சுதந்திரத்தை நசுக்குவது ஸ்டாலினிஸ்டுகளின் முக்கிய பணியானது. மக்கள் அபிப்பிராயத்தை காவல்காத்து வழிநடத்துவதல்ல ஒரு உண்மையான புரட்சிகர தொழிலாளர் அரசின் பணி. மாறாக முதலாளித்துவ கட்டுபாட்டில் இருந்து மக்கள் கருத்தை விடுவிப்பதே அவர்கள் பணியாக இருக்கவேண்டும் என்பதை ட்ரொட்ஸ்கி சுட்டி காட்டினார். தகவல் உற்பத்தியையும் மக்கள் மயப்படுத்துவதன் மூலம் மட்டுமே இதை சாதிக்கலாம் என்று ட்ரொட்ஸ்கி கூறியது மக்கள் நலனில் இயங்காத ஸ்டாலினிஸ்ட் அதிகாரத்துக்கு துரோகமாக பட்டதில் ஆச்சரியமில்லை.

இதை தொடர்ந்த பனி யுத்தத்தில் ‘தகவல் கட்டுப்பாடு’ மிக முக்கிய பங்குவகித்தது. தேசிய இறையான்மை – பாதுகாப்பு காரனங்கள் என்ற பம்மாத்துகள் காட்டி அதிகாரம் தகவல் சுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் தமது கைக்குள் இறுக்கி வைத்துக்கொண்டிருக்கின்றன. பனியுத்த காலத்திலும் அதற்கு பிறகும் ஊடக சுதந்திரத்துக்கான பல போராட்டங்களை நாம் பார்த்துவிட்டோம். அமெரிக்காவில் 60களில் சிவில் ரைட் இயக்கம் முன்தள்ளிய போராட்டம் இவற்றில் முக்கியமானது. அதன் தொடர்ச்சியாக எழுந்த பேச்சு சுதந்திர இயக்கம் உலகெங்கும் பலமான செல்வாக்கு செலுத்தியது நாமறிவோம்.

ஒரு ஏக்கர் கானிக்குள் அடைத்துவைக்கக்கூடிய தொகை பணக்காரர் பூமிப்பந்தின் மொத்த வளங்களையும் சொந்தம் கொண்டாடி மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியாலும் நோயாலும் தினமும் சாவதை பார்த்துகொண்டிருக்கும் மிகவும் சமமற்ற உலகில் இன்று நாம் வாழ்கிறோம். இந்நிலையில் மக்கள் குரலை வலுப்படுத்துவதும் அதற்கான முன்னெடுப்புகளை செய்வதும் மிக முக்கியமானது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஜோன் ஸ்டுவர்ட் மில் ஏற்படுத்தின தெளிவுகூட இன்று பலருக்கு இல்லை. சுதந்திர உரையாடலுக்கு எதிரான கருத்து எவ்வாறு உருவாகிறது என்பதை அவர் அன்றே சுட்டிகாட்டியிருந்தார். ‘ சரியான கருத்தை உருவாக்கி கொள்ள முடியாத படியால்தான் ஒரு தவறான கருத்து உருவாகிறது. சுதந்திர உரையாடலை தொடர்வதுதான இதை மாற்ற ஒரே வழி;. சுதந்திர உரையாடல் உருவாக்கும் தவறான கருத்துக்களை தவிர்க்க-மாற்ற சுதந்திர உரையாடலை தொடர்வதுதான் ஒரே வழி. சுதந்திர உரையாடலில் ஏற்படும் அறிதலே தவறான கருத்துகள் உருவாகும் அறிவின்மை சூழலை தவிர்க்க உதவும்’ என்று மில் கூறியது இன்றும் பலருக்கு புதினமாக படலாம். பேச்சு சதந்திரத்தை எதற்காகவும் விட்டு குடுக்க முடியாது என்று கடந்த இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக போராடி வந்தாலும் இன்றும் அது அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே இந்தநிலை.

இதை நிரந்தரமாக மாற்ற இன்றுள்ள இணைய சுதந்திரத்தை நாம் எமது போராட்டங்கள் மற்றும் பேச்சு சுதந்திரம் வலுப்பட பாவிக்கவேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை

ramsosss.jpgபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என இந்த மூன்று தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருக்கு கடிதங்களையும் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை விவகாரத்தில் ஒத்த கருத்துக்களைக் கொண்ட கட்சித் தலைவர்களை இணைக்கும் முயற்சியில், திருமாவளவன் இறங்கியுள்ளார். அதன் அடிப்படையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இனி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளை எவ்வாறு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்பது குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது. அத்துடன் ஈழ ஆதரவு கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை, போராட்டம் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது திமுக கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டும், விலகக் கூடாது என வீரமணி கேட்டுக் கொண்டாராம்.

இந்தியா, அமெரிக்கா கண்டனம்

lasantha-02.jpg“சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் மகாராஜா தொலைக்காட்சி நிறுவனம் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியாவும் அமெரிக்காவும் கடுமையாகக் கண்டித்துள்ளன. லீடர் குழும வெளியீடுகளின் ஆசிரியரின் மறைவையிட்டு கடும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஊடக அமைப்புகள், ஊடகத்துறை சார்ந்தோர் மீது தொடர்ச்சியாக அதிகரித்துவரும் தாக்குதல்களின் மத்தியில் துயரகரமான இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அண்மையில் மகாராஜா தொலைக்காட்சி கலையகம் மீதான குண்டுத் தாக்குதல் சம்பவமும் இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஒன்றாகும். எந்தவொரு ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரம் அத்தியாவசியமான விடயமாகும். இந்த மாதிரியான தாக்குதல்கள் இலங்கையில் ஜனநாயக ரீதியான சுதந்திரத்தை பாதிப்புக்குள்ளாக்கும். இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக பூரணமான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று இந்திய தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் படுகொலை, தொலைக்காட்சி நிலையம் மீதான தாக்குதல் என்பன கவலைக்குரிய நடவடிக்கைகள் என்றும் இலங்கையிலுள்ள சுயாதீனமான குரல்களை மௌனமாக்குவதை நோக்கமாகக் கொண்டவையெனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபேர்ட் வூட் தெரிவித்துள்ளார்.

திங்கள் மாலை பொரளையில் லசந்தவின் இறுதிக் கிரியை

lasa-body.jpgபடு கொலை செய்யப்பட்ட “சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியை எதிர்வரும் திங்கட்கிழமை மாலை பொரளை கனத்தையில் இடம்பெறவுள்ள நிலையில், இறுதி நிகழ்வில் இன, மத, கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.  எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு அழைப்புவிடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; “சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியை எதிர்வரும் திங்கட்கிழமை மாலை பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெறவுள்ளது. இவரது படுகொலையானது ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமையையும் மீறுவதால் அன்றைய தினம் அனைவரும் கட்சி, இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டும். அதேபோல் இப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் வெள்ளைக் கொடியையும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடிகளையும் நாட்டிலுள்ள மக்கள் பறக்கவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

தென்னிந்திய தமிழ் திரைப்படங்களை இலங்கையில் திரையிடப்படுவது தடை செய்யப்பட வேண்டும்!

tamil-cini.pngதென்னிந்திய தமிழ் திரைப்படங்களை இலங்கையில் திரையிடப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என்று கோரிய சில சுவரொட்டிகள்  கண்டி நகரப்பகுதியிலும் மேலும் சில நகரப்பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்ததை காணமுடிந்தது. கண்டி மத்திய பேருந்து நிலையம் சந்தை தொகுதி கட்டிடங்கள் மற்றும் புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளில் தென்னிந்திய தமிழ் திரைப்படங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி

stop-terr-media.jpgசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்தும், ஊடக சுதந்திரத்தை அடக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தின் அருகே நேற்று நண்பகல் 12.15 மணியளவில் அனைத்து ஊடகவியலாளர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தின.  பேரணியின் போது பதாதைகளைத் தாங்கியவாறு ‘ஊடகங்களுக்கு எதிரான பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்’ போன்ற கோஷங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து காணப்பட்டனர். ஐந்து ஊடக அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி லேக் ஹவுஸ் அரச பத்திரிகை நிறுவனத்திற்கு முன்பாக நடைபெற்றது.

அன்று நிமலராஜன் நடேசன், சிவராம் இன்று லசந்த நாளை யார் என்று கேள்வி கேட்டும் முழக்கமிட்ட ஆர்ப்பட்டக்காரர்கள் இதுவரை காலமும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதலுக்குள்ளான ஊடக நிறுவனங்களின் விபரங்கள் அடங்கிய வாசக அட்டைகளையும் தாங்கியிருந்தனர். இதனிடையே பாதுகாப்பு நடவடிக்கைகளும் அங்கு பலப்படுத்தப்பட்டிருந்தன. கலகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் உட்பட பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பலர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

பிரஜாவுரிமை; சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்

ratnasri.jpgஇந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்க (திருத்தச்) சட்டமூலமும், நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலமும் வியாழக்கிழமை சபையில் திருத்தங்களின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க இவ்விரு சட்டமூலங்களையும் சபைக்கு சமர்ப்பித்தார். இதில் இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் திருத்தச் சட்டமூலம் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் நடைபெற்ற நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் சிறப்பேற்பாடுகள் திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தின் இறுதியில் பதிலளித்து பேசிய பிரதமர் தெரிவிக்கையில்;

” சிரிமாசாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் எந்த ஒரு நாட்டுக்கும் உரித்தில்லாத ஒரு பகுதியினர் இருந்தனர். இவர்களுக்கு எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாமல் இருந்தது. இம் மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் முகமாகவே சட்டமொன்று அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவே தற்போதைய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எவராயிருந்தாலும் அவரவர்க்கென உரித்தான நாடொன்று இருக்கவேண்டும். அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் இலங்கையில் பிரஜாவுரிமை வழங்க செயற்படுவோம்.

இதன்போது, சிக்கல்கள் ஏற்படலாம். இவ்வாறான சிக்கல்களை பேச்சுகள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். நாம் அனைவரும் இவ் விடயத்தில் ஒருமித்து நேர்மையாக செயற்படுவோமாயின், முகம் கொடுக்கவேண்டியிருக்கும் சிக்கல்களை எதிர்கொள்வதில் கஷ்டம் இருக்காது’ என்றார்

‘புலிகள் இயக்கத்தடையை வெளிநாடுகளோ இராஜதந்திரிகளோ ஆட்சேபிக்கவில்லை’ – அமைச்சர் போகொல்லாகம

rohitha-bougo.jpgபுலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கையிலுள்ள இராஜதந்திரிகளோ வெளிநாடுகளோ எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இலங்கை அரசாங்கம் நேற்று முன்தினம் இரவு முதல் தடை விதித்திருந்தது. அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் போகொல்லாகம தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இராஜதந்திரிகள், இலங்கை அரசாங்கம் புலிகளை தடைசெய்தமை குறித்து ஒரு சிறு எதிர்ப்பை கூட வெளிப்படுத்தவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக எடுத்துள்ள இம்முடிவு அனைத்து நாடுகளும் விரும்பத்தக்க வகையில் அமைத்துள்ளதென்பதையே இது குறிக்கின்றது என தெரிவித்த அமைச்சர் இது அரசாங்கத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியெனவும் குறிப்பிட்டார்.

இராஜதந்திரிகளுடனான சந்திப்பையடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தலதா மாளிகை மீது புலிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி அரசாங்கத்தினால் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கமும் புலிகளும் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து அவ்வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி இருதரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இத்தடை நீக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க கடந்த இரண்டாம் திகதி கிளிநொச்சி முழுமையாக படையினரிடம் வீழ்ந்ததையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை கைவிட்டுவிட்டு பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு முன்னரும் ஜனாதிபதி இதேபோன்றதொரு அழைப்பை விடுத்திருந்தார். ஆனால் புலிகள் தரப்பிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
 
இச்சந்தர்ப்பத்திலேயே கொம்பனித்தெருவிலுள்ள இலங்கை விமானப்படை தலைமையகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பாவி மக்களை இலக்கு வைத்து புலிகள் நடத்தும் இதுபோன்ற தாக்குதல்கள் அவர்கள் இன்னும் பயங்கரவாதத்தை கைவிடவில்லை யென்பதை நன்கு புலப்படுத்துகிறது. எனவேதான் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டதாகவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாக புலிகள் இயக்கத்தை பிரகடனப்படுத்துவதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு அதனை அறிமுகப்படுத்துவதற்கு எமக்கு இலகுவாக இருக்கும். இதன் மூலம் புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் ஆயுத உதவிகளை எம்மால் நாளடைவில் முழுமையாக நிறுத்திவிட முடியும். புலிகள் இயக்கத்தை நாட்டினுள் தடைசெய்துள்ளமை எமக்கு நல்லதொரு ஆரம்பமாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் புலிகள் இயக்கத்தை தடைசெய்ய எவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்து வருகிர்களென செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை குறித்து பகிரங்கமாக எதுவும் தெரிவிக்க முடியாது. குறிப்பாக புலிகளுக்கு ஆயுதம் வழங்கும், அவர்களுக்காக நிதி சேகரிக்கும் நாடுகளிலேயே புலிகளை தடை செய்யவேண்டும்.

27 ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 31 நாடுகளில் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளனர். தமிழர் புனர்வாழ்வு கழகம் உள்ளிட்ட புலிகளை சார்பு படுத்தி வெளிநாடுகளில் இயங்கும் முன்னணி அமைப்புக்களை தடைசெய்யவேண்டும். வன்னி மக்களுக்கென இவர்கள் சேகரித்த நிதியில் அங்கு என்னென்ன அபிவிருத்திகளை முன்னெடுத்திருக்கிறார்களென கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் உலக நாடுகளுக்கும் நன்கு விளங்கியிருக்கும். அவர்கள் அதுவரை அணிந்திருந்த முகமூடிகளை நாம் கழற்றிவிட்டோமெனவும் அமைச்சர் கூறினார்.

புலிகளின் வான் பலத்தை அழிக்க கவனம் செலுத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்தல்

parliment_inside.jpg
விடுதலைப் புலிகள் சிறு பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டிருக்கின்ற போதிலும் புலிகளின் வான் பலம் இன்னும் அழிக்க முடியாமல் போயிருப்பது குறித்து எதிர்வரும் நடவடிக்கைகளின் போது கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே அத்தநாயக்க எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;  பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டுவதே எம் அனைவரினதும் பொறுப்பு. நாட்டில் பயங்கரவாதம் தொடர்வதை எவரும் விரும்பவில்லை. எனவே, பயங்கரவாதத்தை ஒழிக்க எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எமது ஆதரவு உண்டு. படையினர் புலிகளிடமிருந்து பிரதேசங்களைக் கைப்பற்றி தங்களது வெற்றியை நிரூபித்துள்ளனர். இந்நிலையில், படையினரால் மீட்கப்பட்ட பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் படையினரின் வெற்றி அர்த்தமற்றதாகி விடும். ஏனெனில், கடந்தகால சம்பவங்கள் இதற்குச் சான்றுபகிர்கின்றன.

இதேநேரம், வடக்கில் பல பிரதேசங்கள் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டிருந்தாலும் இங்கு தெற்கில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கின்றன. இம்மாதிரியான செயற்பாடுகளில் புலிகள் தொடர்ந்தும் ஈடுபடக் கூடும். எனவே, இம்மாதிரியான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இராணுவத் தளபதி கூறியது போல புலிகள் சிறு பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது உண்மை. நாம் புலிகளின் பலத்தை உயர்த்திக் கூறவரவில்லை. எனினும், புலிகளின் வான் பலத்தை இன்னும் எம்மால் அழிக்க முடியாமல் போயுள்ளது. எனவே, எதிர்வரும் நடவடிக்கைகளின் போது அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.