எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

‘ஐ.தே.க. தப்புவதற்கு எத்தனிக்கிறது’- நிமல் சிறிபால டி சில்வா

nimal-sripala.jpgஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த பின்னரும் ஐ. தே. க அதிலிருந்து தப்பிச் செல்ல எத்தனிக்கிறதென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்த பின்னர் அதனை நாம் சாதாரணமாக கருதவில்லை. அதனை அரசுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான விடயமாக கருதியதுடன், அதற்கு முக்கியத்துவம் அளித்தே ஒழுங்குப் பத்திரத்திலும் சேர்த்துள்ளோம். ஒழுங்கு பத்திரத்துள் சேர்க்கப்பட்டதன் பின்னர் இது ஐ.தே.க வுடையது என்று கூறமுடியாது. முழு சபைக்குமே சொந்தமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விடயத்தை நன்கு ஆராய்ந்த பின்னரே சபாநாயகரும் அதற்கான தீர்ப்பையும் வழங்கினார். இருப்பினும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐ.தே.க தோல்வியை சந்திக்கும் என்பதுமட்டும் உண்மை. தொடர்ந்தும் ஐ.தே.க தோல்விகளையே சந்தித்து வருகிறது என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக எப்போது விவாதம் நடத்தினாலும் தாம் ஆயத்தமாக இருப்பதாக ஜே. வி. பியினர் தெரிவித்தனர். ஐ.தே.கவினருக்கும் அரச தரப்பினருக்கும் இடையே இவ்விடயம் தொடர்பாக நீண்டநேரம் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. 
 
 

ஐ.தே. கட்சி நேற்று வெளிநடப்பு

parliment_inside.jpg
பாராளுமன்ற விவாதங்களில் இனி கலந்து கொள்வதில்லை எனக் கூறி ஐ. தே. க. உறுப்பினர்கள் நேற்று சபையிலிருந்து வெளியேறிச் சென்றனர். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தது ஐ. தே. க. தலைமையிலான எதிர்க்கட்சியினரே. விவாதம் நடத்த வேண்டிய நாட்களை தீர்மானிக்க வேண்டியதும் எதிர்க்கட்சியினரே. எனினும் ஆளும் கட்சியே இதனைத் தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, விவாதங்களில் கலந்து கொள்வதில்லை என ஐ. தே. க. தீர்மானிப்பதுடன் சபையிலிருந்து வெளிநடப்பும் செய்கிறது எனக் கூறிய ஜோசப் மைக்கல் பெரேரா சபையிலிருந்து வெளியேறிச் சென்றார்.

அவரைத் தொடர்ந்து ஐ. தே. க. உறுப்பினர்கள் வெளியேறிச் சென்றனர். நேற்றுக் காலை பாராளுமன்றம் சபைநாயகர் வி. ஜே. மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாளை வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறும் என சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு இருவரையும் ஒரு இணக்கப்பாட்டுக்குள் கொண்டு வந்து வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் விவாதத்தை நடத்துவதற்கு முயற்சிகள் செய்த போதும் முடியாமல் போனது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரண்டு தினங்கள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேட்டுக் கொண்டதுடன் அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத இரு தினங்களில் விசேடமாக பாராளுமன்ற அமர்வுகளை ஏற்படுத்தி விவாதம் நடத்துமாறும் எதிர்க்கட்சி கேட்டுக் கொண்டது. அதற்கும் ஆளும் தரப்பு இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்ததுடன் இன்று வெள்ளிக்கிழமை விவாதம் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதனை ஆட்சேபித்த ஜோசப் மைக்கல் பெரேரா இவ்விவாதத்துக்கு ஐ. தே. க. ஆயத்தமாக இல்லை என்றும் இன்று விவாதம் நடத்தப்படுமானால் நள்ளிரவு வரை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் உடனடியாக எமது எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவசரமாக அழைக்கவும் முடியாது. அவர்கள் வெவ்வேறு கடமைகள் நிமித்தம் சென்றுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துக்களை அடக்கவோ அழிக்கவோ முற்படுவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

daglas.jpg
பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தமொன்று நடைபெறுகையில் ஊடகங்கள் சமூக அக்கறையோடும் தேவையற்ற பதற்றத்துக்கு இடம்தராத வகையிலும் பணியாற்ற வேண்டும். அதேவேளையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கருவிகொண்டு அழிப்பது, அச்சுறுத்துவது, ஊடக நிறுவனங்களைத் தாக்குவது போன்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகளை எவரும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான சம்பவங்கள் மிக வன்மையான கண்டனத்துக்குரியவையாகும் என்று செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  ஒவ்வொருவருக்கும் கருத்துச் சொல்லும் சுதந்திரம் உண்டு. அதை இன்னொரு கருத்தினால் எதிர்கொள்வதே சரியானதாகும். மாறாக ஆயுதங்களைக் கொண்டு கருத்துக்களை அடக்கவோ அழிக்கவோ முற்படுவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

அது ஒருவகையில் இயலாமையின் வெளிப்பாடுமாகும். பத்திரிகை விநியோகங்களுக்குத் தடை விதிப்பது, அச்சுறுத்துவது, ஊடக நிறுவனங்களைத் தாக்குவது ஊடகவியலாளர்களைக் கொலை செய்வது என்பன கருத்துக்களின் குரல் வளையை நெரிக்கின்ற கொடூரமாகும். இதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அண்மையில் எம்.ரி.வி. நிறுவனம் தாக்கப்பட்டது, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் எமக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடராதிருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். மக்களுக்கு செய்திகளையும் நாட்டு நடப்புக்களையும் அறிந்து கொள்ளும் உரிமையை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அதற்காக ஊடகங்கள் ஆற்றும் பணி மகத்தானதாகும். கருத்து ரீதியாக விமர்சனங்கள் இருக்கின்றபோதும் இன்னொருவரின் கருத்துச் சொல்லும் சுதந்திரத்தை ஈ.பி.டி.பி. யினராகிய நாம் என்றும் மதிக்கின்றோம். எனவே, நடைபெற்றுள்ள கசப்பான மற்றும் துயரமான சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தவிரவும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என்பதையும் உரியவர்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்கத்தின் மீதான தடை சமாதான பேச்சுக்கு இடையூறாக அமையாது ‘- அரசாங்கம் அறிவிப்பு

anura-priyatharsana.jpgபுலிகள் இயக்கத்தினர் மீதான தடை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக அமையாது என்று தகவல் ஊடகத் துறை அமைச்சரான அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார். புலிகள் இயக்கத்தினர் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வருவார்களாயின் அவர்களுடன் பேச அரசாங்கம் தயாராக உள்ளது. இதனை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது எனவும் அவர் கூறினார்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக அமையாத வகையில் புலிகள் இயக்கத்தினர் மீதான தடை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், புலிகள் இயக்கத்தினர் அப்பாவி மக்களைத் தடுத்து வைத்துள்ளனர்.  அவர்களது சுதந்திர நடமாட்டத்திற்கு இடமளிக்கின்றார்கள் இல்லை. அப்பாவி மக்களை அவர்கள் மனித கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். அம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுக்கின்றனர். புலிகள் இயக்கத்தினர் தடுத்து வைத்துள்ள அப்பாவி மக்களை விடுவிப்பதை பிரதான நோக்காகக் கொண்டுதான் இத்தடை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழேயே புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இத்தடையை அரசாங்கம் சுய முடிவாகவே மேற்கொண்டிருக்கிறது. புலிகள் இயக்கத்தை இந்தியா உட்பட பல நாடுகள் ஏற்கனவே தடை செய்துள்ளன. இலங்கையில் இப்போது தான் இந்த அமைப்பு தடை செய்யப்படுகின்றது. அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு சமாதான பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு கால அவகாசம் வழங்கும் வகையில் தான் இற்றைவரையும் அவ்வியக்கத்தைத் தடை செய்யப்படவில்லை. ஆனால் அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு சமாதான பேச்சுவார்த்தைக்குத் திரும்பவில்லை.

என்றாலும் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு பேச முன்வந்தால் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருக்கிறது. அதனால் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படாத வகையிலேயே புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உரையாற்றுகையில், புலிகள் இயக்கத்தைத் தடைசெய்யும் 32வது நாடாகவே இலங்கை அமைந்திருக்கிறது. புலிகள் இயக்கத்தினரின் பிடியிலுள்ள அப்பாவி மக்களை விடுவிக்கவே இத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. புலிகள் இயக்கத்தினர் அங்கு தடுத்து வைப்பவர்களில் 14, 15 வயது சிறுவர்களை பலாத்காரமாக யுத்தத்தில் ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன என்றார்.

பளை வீழ்ந்தது

_army.jpgபுலிகளின் மற்றுமொரு முக்கிய பிரதேசமான பளை பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களிலிருந்து முன்னேறி வந்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப்பிரிவினர் பளை பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணவர்தன தலைமையிலான படையினரும், 55 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படையினருமே பளை நகரையும் அதன் சுற்றுப்புறத்தையும் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முகமாலைக்கும் ஆனையிறவுக்கும் மத்தியில் அமைந்துள்ள பளை பிரதேசம் ஒரு பாரிய நகரமாகும். முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலுள்ள புலிகளுக்கான பிரதான விநியோக பாதையாகவும், புலிகளின் ஆட்டிலறி தளமாகவும் பளை விளங்கியதாக தெரிவித்த பிரிகேடியர், தற்பொழுது அந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டுள்ளதன் மூலம் படையினருக்கு இருந்த அச்சுறுத்தல் நீங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

படையினரின் கடுமையான தாக்குதல்களை அடுத்து புலிகள் தொடர்ந்தும் பின்வாங்கி வருவதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பளையிலிருந்து ஆனையிறவை நோக்கிய படை முன்னகர்வுக்கு 14 கிலோ மீற்றர் தூரமே எஞ்சியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலிருந்து 280 வது கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பளை, முகமாலைக்கும், ஆனையிறவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு முக்கிய பிரதேசமாகும். தென்னை செய்கைக்கு பெயர்போன பிரதேசமாகவும் இது விளங்கியுள்ளது. ஏ-9 யாழ். – கண்டி பிரதான வீதிக்கு அண்மித்த பகுதியிலுள்ள பளை பிரதேசத்தில் ஆனையிறவுக்கும் கொடிகாமத்திற்கும் இடையிலான ரயில் நிலையம் ஏற்கனவே இருந்தது. பளை பிரதேசத்தில் தமது நிலைகளை பலப்படுத்தி வரும் பாதுகாப்பு படையினர் சோரண்பற்று பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

இதேவேளை, யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதி எந்தவேளையிலும் படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிலையில் உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதியின் ஒவ்வொரு பகுதிகள் மாத்திரம் இதுவரை காலமும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வரவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 

கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியமை சமாதானத்தை விரும்புபவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி – கிழக்கு முதலமைச்சர் சி. சந்திரகாந்தன்

cm.jpgவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்கிய கிளிநொச்சியை படையினர் கைப்பற்றி இருப்பதானது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானம், ஜனநாயகம் என்பன ஏற்படுத்தப்பட வேண்டும் என விரும்புகின்ற அனைவருக்குமே கிடைத்த ஓர் மாபெரும் வெற்றியாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சரின் மட்டக்களப்பு அலுவலகம் பத்திரிகைகளுக்கு விடுத்த செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு முதலமைச்சர் சி. சந்திரகாந்தனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; இந்த வெற்றியினூடாக வட பகுதிக்குள் குறிப்பாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் சிக்கித் தவிக்கின்ற அப்பாவி பொதுமக்கள் மற்றும் இளைஞர், யுவதிகளையும் மீட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகின்ற போது இவ்வெற்றியானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுக்கொள்ளும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. கிழக்கைப் போன்றே வடக்கிலும் ஒரு ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எஞ்சியிருக்கின்ற பயங்கரவாதம் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதனூடாக கிழக்கு மக்களைப் போன்று வடபகுதி மக்களும் ஓர் ஜனநாயகப் பாதைக்கு வந்து தங்களுக்கான பலமான அரசியல் இருப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

அண்மைக் காலமாக இராணுவ முன்னேற்றங்களை வைத்துப் பார்க்கின்றபோது இப்பாரிய வெற்றியானது சமாதான விரும்பிகள் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். உண்மையிலேயே இலங்கையின் இறைமைக்குட்பட்ட எந்த ஓர் நிலப்பிரதேசத்திலும் இருக்கின்ற பயங்கரவாதம் முற்று முழுதாக ஒழிக்கப்படுகின்ற அதேவேளை, மீண்டும் ஒருமுறை பயங்கரவாதமானது துளிர்விடுவதற்கு யாருமே அனுமதியளிக்கக்கூடாது, பயங்கரவாதத்தின் கொடூரங்களுக்கு பலியாவது அப்பாவி பொதுமக்களும், அரச உடைமைகளுமே. ஜனாதிபதியின் வழிகாட்டலில் படையினர் ஈட்டியிருக்கின்ற இந்தப் பாரிய வெற்றியினூடாக ஏற்படவிருக்கின்ற அனுகூலங்களை முழுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவிக்க வேண்டும். இப்பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்ட மக்களை மீட்டெடுத்து ஜனநாயக முறையில் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றபோது அந்த மக்கள் நிம்மதியுடன் வாழ்கின்ற நிலை தோற்றுவிக்கப்படும் என கிழக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசிலிருந்து விலகியபின் எதிரியைப் போன்று தன்னைப் பார்ப்பதாக கரு ஜயசூரிய கவலை

sl-parlimant.jpgஅரசிலிருந்து விலகிய பின்னர் அரசிலுள்ளவர்கள் தன்னை ஒரு எதிரியைப் போல் கருதுவதாக விசனம் தெரிவித்த ஐ.தே.க. பிரதித் தலைவரும் எம்.பி.யுமான கரு ஜயசூரிய, அரசிலிருக்கும் போது வீரர்களைப் போலும் அரசை விட்டு விலகியவுடன் பகைவர்களைப் போலும் கருதும் கொள்கையொன்று அரசிடம் காணப்படுவதாகவும் தெரிவித்தார். சிரச ஊடகம் மீதான தாக்குதல் திட்டத்தை பொரளையிலுள்ள ஒரு வீட்டுத் தொகுதியில் வைத்து ஐ.தே.க.எம்.பி.க்களான கரு ஜயசூரியவும் ரவிகருணா நாயக்கவும் பாதாளக் குழுவினருடன் இணைந்து உருவாக்கியதாக செவ்வாய்க்கிழமை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக புதன்கிழமை பாராளுமன்றத்தில் விஷேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த கரு ஜயசூரிய மேலும் கூறியதாவது;

சிரச ஊடக நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் என்னையும் ரவி எம்.பி.யையும் தொடர்புபடுத்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமே குற்றஞ்சாட்டினார். நாங்கள் பாதாளக் குழுவினருடன் இணைந்து பொரளையில் வைத்து சதித்திட்டம் தீட்டியதாக கூறினார். சுகவீனமடைந்திருந்த நேசன் பத்திரிகையின் நிறைவேற்று அதிகாரி கிஷாந்த குரேவை பொரளையிலுள்ள வீட்டுத் தொகுதியொன்றிலுள்ள அவரின் வீட்டுக்கு சென்று நான் பார்வையிட்டேன். அப்போது அங்கு ரவி எம்.பி.யும் ஏற்கனவே வந்திருந்தார்.

நாங்கள் இருவரும் அங்கு எதிர்பாராத விதமாகவே சந்தித்தோம். அத்துடன், நான் பாதாளக் குழுவினருடன் தொடர்பு வைத்திருப்பவனும் அல்ல. அதேவேளை, யார் யாருக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பென்பது எனக்குத் தெரியும். ஒரு நோயாளியை பார்க்கச் செல்வதற்குக் கூட இந்த நாட்டில் ஒரு மனிதனுக்கு உரிமையில்லையா? நான் அந்த வீட்டுக்கு சென்று வந்த பின்னர் அந்த வீட்டுக்கு பொலிஸார் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடமாட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. எம்மை பின் தொடர்கின்றனர். இது ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயம். நான் அரசிலிருந்து விலகிய பின்னர் என்னை எதிரியைப் போல் பார்க்கின்றனர். அரசிலிருக்கும் போது வீரர்களாக போற்றப்படுபவர்கள் அரசிலிருந்து விலகியவுடன் பகைவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இதை ஒரு கொள்கையாகவே அரசு வைத்துள்ளது.

இது அரசுக்கு குறுகிய கால நன்மைகளைக் கொடுக்கலாம். ஆனால், நீண்டகால பலன் விரோதமாகவே அமையும். மக்கள் இந்த நாட்டில் நல்லாட்சியையே எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான அச்சுறுத்தல் மிகுந்த ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை. நானும் 7 வருடங்கள் இராணுவ சீருடையை அணிந்தவன். எமக்கும் இந்த நாட்டின் மீது பற்றுள்ளது.பயங்கரவாதத்தை அழிக்கவேண்டுமென்பதில் எமக்கு மாறுபட்ட கருத்தில்லை. இராணுவ வெற்றிகளுக்கு நாம் தலை வணங்குகிறோம். சிரச மீதான தாக்குதலை நான் அருவருப்புடனேயே பார்க்கின்றேன். அதேபோன்று, எதிர்க்கட்சியினரை பின் தொடர்தல், கண்காணித்தல், அச்சுறுத்தல் போன்ற விடயங்களையும் வெறுக்கின்றேன். எனவே, இவை தொடர்பில் அரசு உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.

அநீதி, சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்தெழ எதிரணித் தலைவர்கள் அழைப்பு

unp-reli.jpgஅராஜக ஆட்சி, அரச பயங்கரவாதத்துக்கு எதிராக மக்கள் சக்தி எழுச்சிபெற வேண்டுமெனவும் பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து சக்திகளும் ஒரணியில் அணிதிரவேண்டுமெனவும் எதிரணித்தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்தனர். ஐக்கிய தேசியக்கட்சி தலைமையில் ஒன்றிணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, இடதுசாரி முன்னணி உள்ளிட்ட எதிரணிகளின் கூட்டமைப்பு நேற்று முன்தினம் தலைநகர் கொழும்பில் நடத்திய ”பொறுத்தது போதும்”  எனும் கருப்பொருளிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு பேசுகையில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன ஆகியோர் நாட்டு மக்களுக்கு இந்த அழைப்பை விடுத்தனர்

எதிர்ப்புக்கூட்டம் 4 மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிநேரம் மட்டுமே இடம் பெற்றது. அதன் பின்னரே ஹைட்பாக்கிலிருந்து லிப்டன் சுற்றுவட்டம் வரை ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம் பெற்றது ஊர்வலம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ்,ரி.பி.ஜாயா மாவத்தை, பீன்ஸ் வீதி ஆகிய பாதைகளில் சுமார் ஒரு மணிநேரம் வரை போக்குவரத்துகள் தடைப்பட்டன. ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் லிப்ரன் சுற்றுவட்டத்தில் நிலத்தில் அமர்ந்து எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பிய பின்னர் கூட்டம் கலைந்தது.

எதிர்ப்புக் கூட்டத்தில் பிரதான உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமதுரையில் தெரிவித்ததாவது; நாட்டில் இன்று ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஊடகத்துறை மீது தாக்குதல்களை மேற்கொள்ளுமளவுக்கு அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. நாட்டில் அநீதி அரசோச்சுகின்றது . அரசாங்கமே நீதிமன்றத்தை அவமதிக்கின்றது. மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்துக்குக்கூட போக முடியாத விதத்தில் ஆளும் தரப்பினர் குழப்பம் விளைவிக்கின்றனர். ஊடக சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

எம்.ரி.வி., சிரச தொலைக்காட்சி நிலையம், அரசின் ஒத்துழைப்புடனேயே தீவைக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்மிடம் போதிய அத்தாட்சி கிடைத்துள்ளது. அண்மைக்காலமாக அமைச்சர்களான டலஸ் அழகப்பெருமவும் சம்பிக்கரணவக்கவும் தொடர்ச்சியாக புலிகளின் ரி.வி. என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எம்.ரி.வி.நிலையத்துக்குள்ளிருந்து 81/2 கிலோ எடை கொண்ட கிளைமோர் குண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளன. விரைவில் அவற்றை பகிரங்கப்படுத்துவோம் . ராஜபக்ஷ அரசு யுத்தத்தை காட்டி நாட்டுமக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது.யுத்தத்தை வைத்துக்கொண்டு நாட்டை அராஜகத்தின் பக்கம் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது. நாம் பொறுமைகாத்தது போதும் நாட்டை தொடர்ந்து அழிவு நிலைக்குக் கொண்டு செல்ல இடமளிக்கக் கூடாது. இன, மத, மொழி, கட்சி பேதங்களை மறந்து தேசத்தையும், மக்களையும் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராடமுன்வரவேண்டும். இந்தப் போராட்டம் மக்கள் எழுச்சிப் போராட்டமாக நாடு தழுவிய மட்டத்தில் முன்கொண்டு செல்லப்படும். அரச பயங்கரவாதத்தையும் அராஜகத்தையும் ஒழித்துக்கட்டி ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை விரட்டியடிக்கும் வரை நாம் இனிமேல் ஓயப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்தார

இஸ்ரேலிய பொருட்களை பகிஷ்கரிக்குமாறு ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டுகோள்

gaasa.jpgஇஸ்ரேலர்களின் மனிதாபிமானமற்ற குரூரமான தாக்குதல்களுக்கு முகம் கொடுத்திருக்கும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு நல்கும் வகையில் இஸ்ரேலிய உற்பத்திகளைப் பகிஷ்கரிக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டும் கோள்விடுத்துள்ளது. உலமா சபையின் உதவிப் பொதுச் செயலாளர் மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் கையெழுத்திட்டு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம், பலஸ்தீன மக்களின் இன்றைய அவல நிலைய தொடர்பாக  வெள்ளிக் கிழமை ஜும்ஆ பிரசங்கங்களை நிகழ்த்துமாறும் சகல உலமாக்களையும் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது. உலமா சபை விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

பலஸ்தீனர்கள் மீதான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இதனை உடன் நிறுத்த ஆவண செய்யுமாறு உலக நாடுகளையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் வேண்டிக் கொள்கின்றோம். பலஸ்தீனர்கள் ஒரு ஜீவமரணப் போருக்கு தள்ளப்பட்டுள்ள இந்த நிர்க்கதியான நிலையில் சர்வதேச முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிமல்லாதோரும் குரல் கொடுக்கின்றனர்.

இந்தப் பின்னணியில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் 04.01. 2009ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை, அதன் தலைவர் அஷ்-ஷைக் முப்ஃதி எம். ஐ. எம். றிஸ்வி தலைமையில் நடைபெற்ற, நாட்டின் பல முஸ்லிம் இயக்கங்களினதும், அரச சார்பற்ற நிறுவனங்களினதும் பிரதிநிதிகளுடனான “பலஸ்தீன முஸ்லிம்களின் அவலநிலை” தொடர்பான, அவசர ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பின்வரும் தீர்மானங்களை எடுத்தது.

01. 09.01.2009ம் திகதி வெள்ளிக் கிழமை நாடளாவிய ரீதியில் நாட்டின் அனைத்து ஜும்ஆ மஸ்ஜித்களிலும் கதீப்மார்கள் தமது குத்பாப் பேருரைகளை “பலஸ்தின் மக்களின் இன்றைய அவலநிலை”யை மையப்படுத்தியே நிகழ்த்த ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும், விசேடமாக வெள்ளிக்கிழமையில் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நேரமாக இருப்பதால் அனைவரும் அதிகமதிகமாக துஆக்களில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறது.

02. ஜவேளைத் தொழுகைகளுக்குப் பின்னர் குனூத் நாஸிலாவை அமுல்படுத்துமாறும், அதிகமதிகமாக பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக துஆக்களில் ஈடுபடுமாறு வேண்டுகோள்.

03. இந்த அத்துமீறல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையில், எதிர்வரும் 09.01.2009 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து, இலங்கை முஸ்லிம்களின் ஒருமித்த கண்டனத்தை வெளிப்படுத்துவதற்காக பிரமாண்டமானதொரு கூட்டத்தை கொழும்பு சாஹிராக் கல்லூரி வளாகத்தில் நடாத்துவது எனவும், நாட்டின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம்கள் இதுவிடயத்தில் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிக்குமாறும், அவ்வமயம், ஷரீஆவின் வரையறைகளைப் பேணியும், யாருக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் எதுவித இடையூறும் விளைவிக்காமலும் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் முஸ்லிம் சமூகத்தை வேண்டிக் கொள்கிறது.

04. உலகை அடக்கியாள விரும்பும் யூதக் கும்பல்களின் அட்டகாசத்தை அடக்கும் வண்ணம் அவர்களை பொருளாதார ரீதியிலும், வேறு எந்த வழிகளிலெல்லாம் பலவீனமடையச் செய்ய முடியுமோ அவ்வழிகளைக் கையாள்தல் வேண்டும். அதன் முதற்படியாக இஸ்ரேலுக்கும், உலகில் பலபாகங்களிலும் வாழும் யூத இரத்த வெறிக் காட்டேரிகளுக்கும் செல்வத்தை தேடிக் கொடுக்கும் அனைத்து நாடுகளினதும் உற்பத்திப் பொருட்களையும், உற்பத்தி நிறுவனங்களையும் நாட்டு முஸ்லிம் சமுகம் பகிஷ்கரிக்க வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

துரித விசாரணைக்கு அரசாங்கம் பணிப்பு; நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு சதி

laksman-yaappa.jpg“சண்டே லீடர்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. தகவல், ஊடகத்துறை அமைச்சர்களான அனுரபிரிய தர்ஷணயாப்பா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இக் கண்டனத்தை நேற்று வெளியிட்டனர். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற போது, இச் சம்பவத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக இரு அமைச்சர்களும் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக அமைச்சர்கள் மேலும் குறிப்பிடுகையில், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க ஜனாதிபதியுடனும், அரசாங்கத்துடனும் நல்லுறவைப் பேணி வந்தார். அவர், அவரது திருமண வைபவத்திற்கு அழைத்திருந்த முக்கியஸ்தர்களில் ஜனாதிபதியே பிரதானமானவர். அரசாங்கத்திற்கும், அவருக்குமிடையில் தனிப்பட்ட முறையில் எதுவிதமான பிரச்சினையுமே கிடையாது. இப்படுகொலைச் சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இச் சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை தேடிக் கைது செய்து சட்டத்தின் முன் ஆஜர்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.