எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வடக்கில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல

kili-04.jpgஎமது பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளிடமிருந்து கிளிநொச்சியைக் கைப்பற்றியது தமிழ் மக்களுக்கோ சிறுபான்மை இனத்தவர்களுக்கோ எதிரான வெற்றியன்றி அனைத்து மக்களுக்குமான தேசிய வெற்றியாகும். அன்று தெற்கில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தெற்கு மக்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல அதுபோல் இன்று வடக்கின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. இன்று வடபகுதியில் இடம்பெறுவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளின் போராட்டமன்றி நாட்டின் இறைமை, சுதந்திரம், ஐக்கியம், தேசியத்தைக் காப்பாற்றுவதற்கான தேசிய போராட்டமாகும் என மேல்மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

மேல் மாகாண பிரதம செயலாளர் பணிமனையின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை இடம்பெற்ற கிளிநொச்சியை வெற்றிகொண்ட பாதுகாப்புப் படையிரைப் பாராட்டி ஆசீர்வதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

நாட்டின் சுதந்திரம் ஐக்கியத்தைக் காப்பதற்காக கிராமப் புறங்களைச் சேர்ந்த வறிய குடும்பங்களின் புத்திரர்கள் உயிர்த் தியாகம் செய்கின்றனர். பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்கின்றனர். எமது படையினரின் வெற்றி அன்று போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்து 500 வருட கால ஆக்கிமிப்பிலிருந்து நாடு பெற்ற வெற்றிக்குச் சமனாகும். வெற்றி பெற முடியாது எனக் கூறப்பட்ட முப்பதாண்டு கால யுத்தத்தைத் வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும் ஜனாதிபதி தேசத்தின் அரச பரம்பரையில் உருவான ஒரு அரசனாவார். தீவிரவாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றுக்கு அடிபணியாத ஜனாதிபதியை நாம் பாராட்டல் வேண்டும்.

நாடொன்றின் அபிவிருத்திக்கு பொருளாதாரக் கொள்கைகள் மாத்திரம் போதாது. தேசப்பற்றும் அபிமானமும் அவசியமுமாகும். உலக பொருளாதார நெருக்கடியால் தற்போது உச்ச நிலையிலிருந்த நாடுகள் கூட கீழ் நோக்கி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எம்முடைய நாடு என்ற சித்தாந்தத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமானதாகும். பொருளாதார சிந்தனைகளுடன் தேசாபிமான சிந்தனைகளால் தான் தேசமொன்றை அபிவிருத்தி செய்ய முடியும். பல உலக நாடுகளும் இவ்வாறு தான் அபிவிருத்தியடைந்துள்ளன என்றார்.

புலிகளுக்கு தடை – பேச்சுகளுக்கான கதவை ஒருபோதும் மூடவில்லை -அரசாங்கம் அறிவிப்பு.

pre-con.jpgவிடுதலைப் புலிகள் இயக்கம் (எல்.ரி.ரி.ஈ.) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றிரவு (07) முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (07) இது தொடர்பில் சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியதையடுத்து உடனடியாக அவ்வியக்கம் தடை செய்யப்பட்டதாக அரசாங்கம் நேற்றிரவு அறிவித்தது.

இத்தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டுப் புலிகள் இயக்கம் பேச்சுக்கு வரமுடியுமென அறிவித்துள்ள அரசாங்கம் மீதான இத்தடை அரசியல் ரீதியான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எவ்விதத்திலும் தடையாக அமையாதெனவும் தெரிவித்தது. அமைச்சரவையின் மேற்படி தீர்மானத்தை ஊடகவியலாளர்களுக்கு அறிவிககும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றிரவு தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இம்மாநாட்டில் அமைச்சர்கள் மைத்திரி பாலசிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, ரோஹித போகொல்லாகம, ஏ. எல். எம். அதாவுல்லா, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்த சமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்கள், விடுதலைப் புலிகளை இலங்கையில் ஒழித்து விடலாம். எனினும் சர்வதேச ரீதியில் அவ்வமைப்பின் சகல செயற்பாடுகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்த இத்தடை உறுதுணையாக அமையுமென தெரிவித்தனர்.

உலக நாடுகள் பயங்கரவாதத்துக்கெதிராக மும்முரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுடன் 24 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய யூனியனும் புலிகளைத் தடை செய்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்நாடுகளோடு இணைத்து செயற்படவும் இந்தடை பெரும் வாய்ப்பாக அமையும் எனவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் 2009/1 ஆம் இலக்க சரத்துக் கிணங்கவே புலிகள் மீதான இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

maithiri-pala.jpgவிடுதலைப் புலிகளை தடை செய்வதற்கான பிரதான காரணம் குறித்து அமைச்சரவையின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான மைத்திரிபால சிறிசேன  கூறுகையில்;  இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் அப்பாவிப் பொதுமக்களை வரையறுக்கப்பட்டதொரு பிரதேசத்திற்குள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி பலவந்தமாக பிடித்து வைத்துக் கொண்டு அம் மக்களின் உயிர்களையும் சுதந்திரத்தையும் ஆபத்துக்குள்ளாக்க வேண்டாமென்றும் பொதுமக்களுக்கு வழங்கும் அவசர நிவாரணங்களுக்கும் மனிதாபிமான உதவிகளுக்கும் தடங்கல்களை விளைவிக்க வேண்டாமென்றும் இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் விடுதலைப் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தன.

விடுதலைப் புலிகளால் சட்ட விரோதமாக நிர்வகிக்கப்படும் பிரதேசத்தினுள் சிறை பிடித்தோ அல்லது ஏதாவது இடத்திற்குள் மட்டுப்படுத்தியோ வைத்திருக்கும் பொது மக்களை, அப்பிரதேசத்திலிருந்து பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களுக்கு செல்ல இடமளிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தினால் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் அவர்கள் அதனை அலட்சியம் செய்துள்ளனர்.

அத்துடன், விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சாதாரண மக்களை சட்ட விரோதமாக சட்ட விரோதமான முறையில் அந்த அமைப்பின் போராளிகளாக பலவந்தமாக இணைத்துக் கொண்டதன் மூலம் அம் மக்களின் உயிர்களுக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளனர். இவற்றின் அடிப்படையிலேயே இந்த தடை குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்று (நேற்று) முதல் புலிகள் தடை செய்யப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படுகிறது’ என்றும் அமைச்சர் சிறிசேன சுட்டிக்காட்டினார்.

anura-priyatharsana.jpgஇதேநேரம், இங்கு விளக்கமளித்த ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அநுரபிரியதர்சன யாப்பா தெரிவிக்கையில்; “இந்த ஒழுங்கு விதியானது 2009 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசர கால (தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யும்) ஒழுங்கு விதியென அடையாளம் காட்டப்படும். இதன் மூலம் “தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற பெயரும் அதனைப் பெயராகக் கொண்டிருக்கும் அமைப்பும் தடைசெய்யப்படுகிறது. எனவே, இலங்கையிலோ அல்லது அதற்கு வெளியிலோ எவராவது ஒருவர் விடுதலைப் புலிகளுக்காகவோ அல்லது அந்த அமைப்புக்காக செயற்படும் நிறுவனத்திலோ உறுப்பினர் அல்லது சிப்பாயாவது அல்லது தலைமைத்துவம் வழங்குவது, சீருடை, அடையாளம், இலட்சினை, கொடி போன்றவற்றை அணிதல், காட்சிப்படுத்தல், உயர்த்துதல் அல்லது தன்வசம் வைத்திருத்தல்; கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்வது, கூட்டம் கூட்டுவது அல்லது அதில் கலந்துகொள்வது; அங்கத்துவம் பெறுவது அல்லது இணைவது; உறுப்பினருக்கோ, சிப்பாய்க்கோ அல்லது வேறு நெருங்கியவருக்கோ புகலிடம் வழங்குதல், அவரை பாதுகாத்து வைத்திருத்தல், அவருக்கு உதவியளித்தல்; ஊக்குவித்தல், மேம்படுத்தல், உதவியளித்தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் அதற்காக செயற்படுதல் போன்ற ஏதாவதொரு செயற்பாட்டையோ அல்லது நிகழ்வை ஏற்பாடு செய்தல் அல்லது அதில் கலந்து கொள்ளல்; பணம் அல்லது பொருள் அன்பளிப்பு செய்தல் அல்லது அதற்கு பங்களிப்பு செய்தல்; பொருட்களை விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல், போக்குவரத்தில் ஈடுபடுத்தல் அல்லது பகிர்ந்தளித்தல்; ஆதாரத்துக்கோ அல்லது பிரதிநிதித்துவத்துக்கோ உதவியளித்தல் போன்ற ஏதாவதொரு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதல்; அதற்காக தகவல்களை பிரசாரப்படுத்தக்கூடாது.

இந்த விதிகளை மீறி செயற்படுவோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கொழும்பில் செயற்படும் மேல் மாகாண மேல் நீதி மன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் 20 வருடங்களுக்கும் மேற்படாத சிறைத் தண்டனை வழங்கப்படும்’ என்று கூறினார். இதேநேரம், இந்த விதிகளுக்கு அமைய தவறிழைத்தல், தவறிழைக்க முயற்சித்தல், அதற்கான உதவி உபகாரங்களை வழங்குதல் அல்லது அதற்கான சூழ்ச்சியில் ஈடுபடுவோர் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு 10 வருடங்களுக்கும் மேற்படாத சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எவராவது ஒருவர் இந்த விதிகளின் கீழ் ஏதேனும் தவறிழைக்கும் பட்சத்தில் அதன்போது தவறை இழைக்க நேரடியாக பொறுப்பு கூற வேண்டியவருக்கு அப்பால் சம்பந்தப்பட்ட நடவடிக்கையுடன் தொடர்புடைய அனைவரும் குறித்த தவறுக்கான குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது மட்டுமல்லாது தடை செய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கும் ஏதாவது நிதியோ, வைப்போ அல்லது கிடைக்க வேண்டிய கடனோ எவரது பொறுப்பிலும் இருக்கும் பட்சத்தில் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் அமைச்சரின் எழுத்துமூல நியமத்தினூடாக அவரது பொறுப்பிலுள்ள மற்றும் நியமத்தின் பின்னர் பொறுப்பின் கீழ் வரவிருக்கும் நிதியோ, வைப்போ அல்லது கிடைக்க வேண்டிய கடனோ மற்றும் அந்த அமைப்பிற்குரிய வேறு ஏதேனும் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் அரச உடமையாக்கப்பட வேண்டும் என்றும் இந்த விதிகள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இதேநேரம், சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கையில்; புலிகள் சமாதான பேச்சுகளுக்கு வருவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வருமாறு ஜனாதிபதி புலிகளுக்கு பல தடவைகள் அழைப்பு விடுத்தார். எனினும், அவர்கள் அதைப் புறக்கணித்து செயற்பட்டமையாலேயே இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டி நேர்ந்தது. புலிகளுக்கு வாய்ப்புகள் பல வழங்கியும் அவர்கள் அதற்கு செவிமடுக்காததாலேயே வேறு மாற்று வழியின்றி அரசாங்கம் இந்த கடுமையான நடவடிக்கைக்குள் சென்றது.

மனிதாபிமான உதவிகளுக்கு பாதிப்பில்லை

இதேநேரம், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தினால் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. அவசர வைத்திய சிகிச்சை வசதிகள், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் இதனால் ஏற்படாது.

பேச்சுகளுக்கான கதவை அரசாங்கம் ஒருபோதும் மூடவில்லை

எவ்வாறிருப்பினும் பேச்சுகளுக்கான கதவை அரசாங்கம் ஒருபோதும் மூடவில்லை. பேச்சுகளுக்கு புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வர வேண்டும். ஜனாதிபதியும் ஏற்கனவே பேச்சுகள் பற்றிய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். எனவே, இப்போதும் எந்த தாமதமும் இல்லை. புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுகளுக்கு வரலாம்’ என்று கூறினார்.

0301-ltte.jpgவிடுதலைப் புலிகள் 1998 ஆம் ஆண்டு கண்டி தலதா மாளிகை மீது மேற்கொண்ட வாகனக் குண்டுத் தாக்குதலையடுத்து இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதுடன், 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் 2002 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் நேற்று நள்ளிரவு முதல் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியும் மக்கள் விரோதிகளும் : சபா நாவலன்

SL_Army_in_Killinochieபிரித்தானியர்கள் இலங்கைத் தீவைத் தமது சிங்கள-தமிழ் பிரதிநிதிகளிடம் கையளித்த நாளிலிருந்து அவர்களாலேயே உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட பேரின வாதம் மகிந்த ராஜபக்ஷ என்ற பௌத்த சிங்கள அடிப்படை வாதியின் கரங்களில் தலைவிரித்தாடுகின்றது. “இலங்கை ஒரு சிங்கள-பௌத்த நாடு, இங்கே ஏனைய இனங்களும் சமாதானமாக வாழ முடியும்” – இதுதான் மகிந்த சிந்தனையவின் சாராம்சம். “சிங்கள-பௌத்த பெறுமானங்களைப் பயங்கர வாதிகளிடமிருந்து பாதுகாப்பதே எமது கடமை” – இது தான் மகிந்தவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி. 80 களுக்குப் பின்னதாக உருவான எந்த தேசிய விடுதலை இயக்கங்களுமே “வன்முறை மீது காதல் கொண்ட” மனநோயாளிகளால் கட்டமைக்கப்படவில்லை. இலட்சக்கணக்கான மக்களின் அர்ப்பணங்களும், தியாகங்களும், போராட்டங்களும், தமிழ்ப் பேசும் மக்களும் மனிதர்களுக்கான உரிமையுடன் வாழ்வதற்கான போராட்டமேயன்றி அர்த்தமின்றிச் செத்துப் போவதற்கான சடங்குகளல்ல! அரை நூற்றாண்டு காலமாக, சரி பிழை, நியாயம் அநியாயம், நேர்வழி குறுக்குவழி, என்பவற்றிற்கெல்லாம் அப்பால், இலங்கையின் பெரும்பான்மை இனத்திற்கிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார உரிமைகளுடன் தமிழ் பேசும் மக்களும் வாழ்வத்ற்காக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் பாசிச வடிவம் தான் தமிழீழ விடுதலைப் புலிகள்! தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகப் போராடும் எந்த அமைப்பும், தனிமனிதனும், ஜனநாயகவாதியும், தேசிய வாதியும், மார்க்சியவாதியும், இந்தப் புலிகள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து துடைத்தெறியப் படுவதைப் பற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை. ஆனால் புலிகளின் அழிவிலிருந்து உதிக்கும் பெருந்தேசியப் பாசிசத்தையும், தமிழ் பேசும் மக்கட் கூட்டம் ஜனநாயகத்தின் பேரால் சிதைத்துச் சின்னாபினப்படுத்தப் படுவதையும் “மகிந்த புரத்தின்” சிம்மhசனத்திலிருந்து நியாயம் கற்பிப்பதையும் புலியெதிர்ப்பு அரசியல் வியாபாரிகள் எந்தக் கூச்சமுமில்லாம் நிறைவேற்றி முடிக்கிறார்கள். இலங்கை இனப்பிரச்னைக்கான வேர்கள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பது ஆயிரம் தடவைகள் அலசப்பட்டுச் சலித்துப் போன விடயங்கள்.

1. மொழிரீதியான வேறுபாடுகளை இலங்கையில் ஆரிய-திராவிட முரண்பாடாகவும் பின்னர் தமிழ் – சிங்கள முரண்பாடாகவும் மாற்றி, வேறுபட்ட தேசிய இனங்கள் உருவாவதற்கான சூழலைத் தோற்றுவித்து, இத்தேசிய இனங்களை தமது அரசியல், வியாபார நலன்களுக்காக மோதவிட்டு வேடிக்கை பார்த்தது பிரித்தானிய ஏகதிபத்தியம்.

2. தமிழ்ப் பேசும் உயர்தர வர்க்கத்தை வளர்த்தெடுத்துஇ சிங்கள மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சூழலை உருவாக்கியதும் இதே பிரித்தானிய ஆதிக்கம்.

3. சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பான அச்ச உணர்வைத் தோற்றுவித்த இந்த அடிப்படைகள், பிரித்தானிய காலனியாதிக்கத்தின் பின்னரும் தொடர்ந்தது மட்டுமன்றி தமது வாழ்வாதரப் பிரச்சனைகளுக்கு தமிழ் பேசும் மக்களே அடிப்படைக் காரணம் என்ற உணர்வும் உருவாக வழிவகுத்தது.

4. தமிழ் பேசும் மக்களின் தலைமைத்துவத்தை எதிர் கொள்ளும் சிங்களத் தலைவர்களே சிங்கள மக்களை வெற்றி கொள்ளும் கதாநாயகர்களாக உருவாக, சிங்கள மக்கள மத்தியில் அமைப்பு மயப்பட்ட பேரினவாதம் உருவானது.

5. ஆக, இந்த அமைப்பு மயப்ப்பட்ட பேரின வாதம் சிங்களத் தலைவர்களின் வாக்கு வங்கியாகத் திகழ, சிங்கள மக்கள் மத்தியிலான அரசியற் கட்சிகள் பேரின வாதத்தையே தமது கட்சித் திட்டங்களின் அங்கங்களாக்கிக் கொண்டன.

6. இப்பேரின வாத அடக்கு முறையை உணரத் தொடங்கிய தமிழ் பேசும் சிறுபான்மையினர், சிங்களத் தலைமைகளுக்கெதிராக அமைபியல் ரீதியாக ஒன்றுபடவாரம்பித்தனர்.

7. தமிழ் அரசியற் கட்சிகளின் வாக்கு வங்கியாக தமிழ்த் தேசியவாதக் கருத்துக்கள் வளரவாரம்பிக்க, தமிழ் மக்கள மத்தியிலான அரசியற்கட்சிகள், தமிழ்த் தேசிய வெறியையே தமது கட்சித் திட்டங்களின் அங்கங்களாக்கிக் கொண்டன.

8. இதனால் இரு தேசிய இனங்களின் வளர்ச்சியும், அவற்றிடையேயன அமைப்பு மயப்பட்ட பிளவும் பெருந்தேசிய ஒடுக்குமுறையை அதிகப்படுத்த, இவ்வொடுக்குமுறைக்கு முகம் கொடுக்கமுடியாத அரசியற் கட்சிகளை தமிழ்பேசும் மக்கள் நிராகரிக்கவாரம்பித்த சூழலில், “பேச்சுவார்த்தை அரசியல்” என்பது “ஆயுத அரசியல்” என்ற தளத்திற்கு மாறியது. இங்குதான் புலிகள் உள்ளிட்ட தேசிய விடுதலைக்கான ஆயுதக் குழுக்கள் உருவாகின.

பெருந்தேசிய அடக்குமுறையானது அரசியல், பொருளாதர, சமூக அடக்குமுறையாக எல்லாத்துறைகளிலும் வியாபித்தது. தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகள் இராணுவ பலம் கொண்டு நசுக்கப்பட்டது. தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக தெருக்களில் அனாதைகள் போல் கொலை செய்யப்பட்டு வீசியெறியப்பட்டு நூற்றாண்டுகள் கடந்துவிடவில்லை. ஒருபுறத்தில் இரத்தம் தோய்ந்த கொலைக்கரங்களும், மறுபுறத்தில் பௌத்த போதனைகளும் இலங்கையின் தேசிய அரசியலாக மாறிய நிலையில் தான் பெரும்பாலான தமிழ்பேசும் மக்களின் மானசீக ஆதரவுடன், ஆயுதக்குழுக்கள் வேர்விட்டு வளரவாரம்பித்தன.

உரிமைக்காகப் போராடும் ஒரே நோக்கோடு புத்தகங்களுக்குப் பதிலாகத் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு தெருவுக்குவந்த பல இளைஞர்களை உயிரோடு தகனம் செய்த பாதகர்கள்தான் புலிகள் என்பது வேறு விடயம்.

எந்தெந்தக் காரணங்களுக்காக பேச்சுவார்த்தை அரசியல் என்பது ஆயுத அரசியலாக மாறியதோ அதே காரணங்கள் இன்னும் வலுவாக இருக்க, புலிகளின் அழிவில் தமிழ் பேசும் மக்கள் பாதுகாக்கப்படுவதாக ஆனந்தக்கூத்தாடும் அரசியல் வியாபாரிகள் மகிந்த அரசின் இன அழிப்பிற்கு ஆதாரவுப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.

இலங்கையின் தேசிய இனச் சிக்கலில் அப்பாவி மக்களின் அழிவின்மேல் அரசியல் இலாபம் காணும் மக்கள் விரோத சக்திகள் தம்மை வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் பல வகைப்படினும் பிரதானமாக நான்கு வகைக்குள் அடக்கிவிட முடியும்.

1. புலிகளும் அதன் ஆதரவு சக்திகளும்.

2. புலி எதிர்ப்பாளர்களும் அரச ஆதரவு சக்திகளும்.

3. இந்திய அரசு

4. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள்.

5. இலங்கை அரச பயங்கரவாதமும் பாசிசமும்.

மக்கள் மீது நம்பிக்கையற்ற இவர்கள், மக்களின் அழிவிலிருந்து தான் தமது அரசியலையே கட்டமைக்கிறார்கள்.

1. புலிகளும் அவர்களின் ஆதரவு சக்திகளும்.

இவர்கள் எப்போதுமே மக்களைப் பற்றிச் சிந்தித்ததில்லை. தேசிய விடுதலைப் போராளிகள் என்ற முகமூடியை அணிந்திருக்கும் இவர்கள், தேசிய விடுதலைக்கான அனைத்து ஆதரவுத் தளத்தையும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியவர்கள். 1983 ஜூலை இன அழிப்பு நடந்தேறிய காலகட்டத்தில் தமிழகம் ஸ்தம்பித்துப் போனது. மொத்தத் தமிழகமுமே ஒரேகுரலில் பேரின வாதத்திற்காகக் குரலெழுப்பிற்று. இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்காமல் வாக்குத் திரட்ட முடியாத நிலைக்குத் தமிழக அரசியற் கட்சிகள் தள்ளப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியிலிருந்த முற்போக்காளர்கள் உயிரையும் விலையாக வைத்து உரக்கக் குரல் கொடுத்தனர். உலகெங்கும் பரந்திருக்கும் ஜனநாயக சக்திகள் பேரின வாதிகளின் இன அழிப்பிற்கெதிராகக் குரலெழுப்பினர். முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழர்களும் தேசிய இன அடக்குமுறைக்கெதிரான தமது பங்களிப்பை வழங்க முன்வந்தனர்.

யாழ்ப்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை இரவோடிரவக அனாதைகளாக விரட்டியடித்த விடுதலைப் புலிகள்இ கிழக்கில் தமது பாணியிலான குரூரமான படுகொலைகளை முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு தமிழ் பேசும் முஸ்லீம் மக்களைத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகத் திசைதிருப்பினர். நூற்றுக் கணக்கான சிங்கள மக்களைக் கொன்று குவித்தனர். தஞ்சம் கொடுத்த தமிழ் நாட்டு மக்களுக்கெதிராகவே தமது இராணுவ தர்பாரை நடாத்திக்காட்டினர். தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலை என்ற ஒரே கோஷ்த்தின் கீழ் அமைப்பாகிக் கொண்ட எல்லா விடுதலை இயக்கங்களையும் ஆயுத பலம் கொண்டு அழித்தொழித்தனர். நூற்றுக்கணக்கான தமிழ் இழைஞ்ர்களை குழுக்கள் குழுக்களாகக் கொன்றொழித்தனர்.

தேசிய இன அடக்கு முறைக்கெதிரான அனைத்து ஆதரவு சக்திகளையும் அன்னியப்படுத்தி, ஒரு நியாயமான போராட்டத்தைச் சிதைத்துச் சீரழித்தனர். இவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் போராட்டத்திற்கான நியாயம், சிங்கள மக்கள் மத்தியிலும் பிரச்சாராத்திற்குட்படுத்த இயலாதவொன்றாகிப் போனது. இறுதியில், தேசிய இன அடக்கு முறைக்கெதிரான ஒரே குரலாகத் தம்மை முன்நிறுத்திக் கொண்ட புலிகள், பாசிஸ்டுக்களாக வளர்ந்து அழிந்து போயினர். அழிவின் விழிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழீழ விடுத்லைப் புலிகள், இந்த நிலையிலும் கூட தம்மைச் சுயவிமரிசனத்திற்கு உட்படுத்தத் தயாராகவில்லை. குறைந்த பட்சம் தந்திரோபாய அடிப்படையில் கூட இவ்வாறான சுயவிமர்சனத்தை முன்வைக்கத் தயாராகவில்லை. 2008ம் ஆண்டு மாவீரர் உரையில், இந்திய எதிர்ப்பாளராகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்தியாவிடம் அரசியல் பிச்சை கேட்ட நிலையில் தனது சொந்த மக்களிடம் தான் தலைமைதாங்கி நடாத்திமுடித்த கோரக் கொலைகளுக்குக் கூட மன்னிபுக் கேட்கத் தயாராயிருக்கவில்லை. தன்னால் அன்னியப்படுத்தப்பட்ட, சொந்த மண்ணிலிருந்து புலிகளால் அகதிகளாக விரட்டப்பட்ட, தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவு சக்திகளிடம் தன்னை, குறைந்த பட்சம் தந்திரோபாய அடிப்படையிலாவது சுய விமர்சனத்திற்குட்படுத்தி, மறுபடி அவர்களை அணிதிரட்டத் தயாராகவில்லை. ஆயுதங்களையும், அதிகாரத்தையும் எந்த அளவிற்குப் புலிகள் நம்புகிறார்கள் என்பதையும், மக்கள் மீதான நம்பிக்கையற்ற, மக்கள் விரோதிகள் என்பதையும் புலிகள் மறுபடி மறுபடி வலியுறுத்துவதாகவே இது அமைகிறது.

2. புலி எதிர்ப்பாளர்களும் அரச ஆதரவு சக்திகளும்.

புலிகளின் இருப்பின் அடிப்படையே, தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்புணர்வானது ஆயுதப்போராட்டம் என்ற தளத்திற்கு மாற்றப்பட்டதற்கான காரணமே பேரின வாத்த்தின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை மட்டும் தான். புலிகளின் இருப்பிற்கான காரணத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின், மக்கள் மத்தியில் போரற்ற நிலையை உருவாக்க வேண்டுமாயின், பேரினவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும். பேரின வாதத்திற்கெதிரான, அது உருவாக்கி வளர்ந்து கொண்டிருக்கும் அரச பாசிசத்திற்கெதிரான அழுத்தங்கள் பிரயோகிக்கப் படவேண்டும். இதற்கெதிரான போராட்டங்கள், எல்லாச் சமூகச் செயற்ப்பாடுகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆனல் பெரும்பாலான தமிழ் பேசும் புலியெதிர்ப்பாளர்கள் இந்தப் பேரின வாதத்தையும் அரச பாசிசத்தையும் உரமிட்டு வளர்த்தெடுக்கிறர்கள். இதனூடாக, மறைமுகமாக புலிகளின் இருப்பை ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்துகிறார்கள். இவர்கள் வளர்த்தெடுப்பது அரச பாசிசத்தை மட்டுமல்ல, புலிகளின் பாசிசத்தையும் தான். மக்கள் சார்பில் மக்களுக்காக இவர்கள் ஒருபோதும் கருத்தாடியது கிடையாது. மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுமாரி பொழிந்து சிறீலங்கா விமானங்கள், கொலைத் தாண்டவம் நடாத்திய போதும், குழந்தைகள் முதியவர்கள் என்று எந்த வேறுபாடுமின்றி தமிழ் பேசும் ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுத் தெருக்களில் வீசப்பட போதும், ஏன் புலியழிப்பின் பேரால் இலங்கையில் வளரும் பாசிசத்திற்கெதிராகக் குரல் கொடுத்த சிங்கள மக்கள் மத்தியிலிருந்த அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் போன்றோர் கடத்தப்படுக் கொலை செய்யப்பட்ட போதும், மகிந்த அரசிற்கு ஆதரவளிக்கும் அரச கைக்கூலிகளான இந்தப் புலியெதிர்ப்பாளர்கள் மக்கள் பக்கம் சாராத மக்கள் விரோதிகளே.

இவர்கள் செய்து முடித்த கைங்கரியங்கள் வாழும் உரிமைக்காகாகப் போராடிய ஒரு மக்கள் கூட்டத்தின் போராட்டத்தை மிக நீண்டகாலத்திற்குப் பின் தள்ளியுள்ளது.

1. புலியெதிர்ப்பென்பது பேரின வாத அரசின் அடக்குமுறையை ஆதரித்தல் என்ற பொதுவான கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர்கள் இவர்களே.

2. பேரினவாத அரசிற்கு ஆதரவு வழங்கி அதன் பாசிசத்தை வளர்க்கத் துணை போகிறவர்களும் இவர்களே.

3. புலிகள் தவிர அரசிற்கெதிரான எழும் எந்த எதிர்ப்புக் குரலையும் அரச ஆதரவுக் குரல் என்று அடையாளப்படுத்தி, அரசிற்கெதிரான மாற்று அரசியற் சக்தி உருவாவதை சிந்தனைத் தளத்தில் சிதைத்தவர்களும், இதனூடாக அரச பாசிசத்தையும், புலிகளின் பாசிசத்தையும் வளர்க்கத் துணை போனவர்கள் இவர்களே.

4. அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பெருந்தேசிய அடக்குமுறைக் கெதிராக சிங்கள மக்கள் மத்தியிலுள்ள, இடது சாரிகள், முற்போக்காளர்கள் போன்றோரிடையிருந்து வரும் எதிர்ப்பை தமிழ் ம்க்கள் சார்பில் நசுக்கியவர்களும் இவர்களே.

5. அரசின் அடக்கு முறைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் இந்தக் கூட்டம், அரசியற்தீர்வுக்கான அனைத்து வழிகளையும் நிராகரித்து போரையும் மக்களின் அழிவையும் முன்நிறுத்தியவர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் 80 களில் தீவிர தேசிய வாதம்பேசிய இவர்களில் பெரும் பகுதியினர், தாம் சார்ந்த அமைப்புகளில் வலது சாரிப் போக்கை முன்நிறுத்தியவர்கள். இடது சாரிப் போக்குடையவர்களை அன்னியப்படுத்தி தீவிர தேசியவாதப் போக்கு மேலோங்க வழிசெய்தவர்கள். இன்று இலங்கை அரசின் பாசிசக் கொடுமைகளுக்கெதிராகப் பேச முற்பட்டால் தேசியவாதம் பேசுகிறோம் என்று தெருச்சண்டைக்கு அழைக்கிறார்கள். புலிகள் புலி – எதிர்ப்பாளர்களிடையேன இந்த முரண்பாடென்பது, அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் மேல் மத்தியதர வர்க்க அணிகளிடையேயான செயற்தள மட்டத்திலான உள் முரண்பாடேயன்றி சமூக உணர்வி அடிப்படையில் எழுந்த போராட்டமல்ல. இவ்வாறான புலியெதிர்ப்பை முன்வைத்து இலங்கையில் செயற்படும் முன்னாள் தேசிய விடுத்லை இயக்கங்களோ அல்லது அவற்றோடு ஒட்டிக்கொள்ளும் புகலிட ஆதரவாளர்களோ, அரசின் நேரடிக்கைக் கூலிகளோ அபாயகரமானவர்கள். மக்களின் விரோதிகள்.

3. இந்திய அரசு.

இந்தியாவில் தலித் அமைப்புகள் நடாத்திய போராட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. இலங்கையில் இதே போராட்டங்கள் குறித்த வெற்றியைச் சம்பாதித்திருக்கின்றன. சண்முகதாசன் தலைமையிலான மாவோ சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி நடாத்திய போராட்டங்களின் வெற்றியும், சூர்ய மல் இயக்கத்தின் எதிர்ப்புப் போராட்டங்களும், ஏனைய இடது சாரி இயக்கங்களின் வளர்ச்சியும் இலங்கைக்கு தெற்காசியாவிலேயெ ஒரு இடது சாரிப் பாரம்பரியத்தைத் தோற்றுவித்திருந்தது. கம்யூனிசத்தின் பேரால் ஆட்சியைக் கைப்பற்றும் எல்லைவரை ஜே.வீ.பீ தனது போராட்டத்தை நகர்த்த முடிந்தது. இவற்றின் தொடர்ச்சியாகவே தேசிய இன ஒடுக்கு முறைகெதிரான போராட்டங்களில் இடது சாரித் தன்மையுள்ள வேலைத்திட்டங்களுடன் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற அமைப்புக்கள் குறித்த வெற்றியுடன் மக்கள் மத்தியில் காலூன்ற முடிந்தது. என்.எல்.எப்.ரி போன்ற அமைப்புக்கள் இடது சாரிக் கோஷங்களுடன் வெளிவர முடிந்தது. 80களில் ஆரோக்கியமான மார்க்சியக் கருத்தாடல்கள் தமிழ் பகுதிகள் வியாபித்தது. சிங்கள முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களுடன் தம்மை அடையாளப்படுத்த முன்வந்தனர். எல்லோர் மத்தியிலும் நம்பிக்கை துளிர்விட்டது.

இந்த சூழ்நிலையில் தான் இந்திய அரசு தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி, அவ்வமைப்புக்களை அவர்கள் சார்ந்திருந்த மக்களை விட பலமானதாக வளர்த்தெடுத்தது. தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை விட அவர்களின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டோர் பலமானவர்களாயினர். தேசிய விடுதலை இயக்கங்கள் வேறு இராணுவக் குழுக்களாக மாறி இந்த இராணுவ பலப் பரீட்சையின் உச்ச பகுதியாக புலிகள் ஏனைய இயக்கங்களை நிர்மூலமாக்கினர். இவ்வாறு இராணுவ ரீதியாக இயக்கங்களை வளர்த்துவிட்ட இந்திய தான் விரும்பியவற்றை வெற்றிகரமாகச் சாதித்துக்கொண்டது.

1. இலங்கையில் தேசிய விடுதலைப் போராட்டங்களூடாக உருவாகக் கூடியதாகவிருந்த அனைத்து இடதுசாரி இயக்கங்களையும் பண்புரிதியாக மாற்றியதுடன் இந்திய முற்போக்கு சக்திகளுடனனான அவர்களின் இணைவையும் சாத்தியமற்றதாக்கியது.

2. தமிழகத்திலிருக்ககூடிய அனைத்துப் பிரிவினை சக்திகளுடனான இணைவையும் சாத்தியமற்றதாக்கிற்று.

3. இலங்கையில் யுத்த சூழல் ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்துதல்.

80 களின் சர்வதேச அரசியல் நிலையும் உலக அரசியற் தளத்தில் இந்தியாவின் பங்கு தொடர்பான போக்கும் தமிழ் அமைப்புக்களின் தலைவிதியை நிர்ணயிப்பதில் பிரதான பங்கு வகித்ததெனலாம். இன்று நிலமை முற்றாக மாறிவிட்டது. 80 களின் வல்லரசுப் பனிப்போர் இல்லை. இலங்கையின் இராணுவ கேந்திர முக்கியத்துவம் அருகிப்போய்விட்டது. உலகமயமாகிவிட்ட பொருளாதாரம் இந்தியாவில் பெரும் பண முதலைகளையும், வியாபாரத்தில் வெற்றிகண்ட மேல் மத்தியதர வர்க்கத்தையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியாயில் புதிதாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் அதிகார வர்க்கமும் ஆட்சியதிகாரமும் தமது மூலதனத்தினதும், முதலீடுகளினதும் எல்லையை இந்தியாவிற்கப்பாலும் விரிவு படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவினுள்ளேயே அதன் சிறப்புப் பொருளாதார வலையங்களுக்கெதிரான போராட்டங்கள் வலுவடைகிறது. டாடாவின் நானோ கார் உற்பத்திக்காக அழிக்கப்பட்ட அப்பாவிகளைக் கண்ட இந்திய விழிப்படைந்து வருகிறது.

போரின் மரணத்துள் வாழும் இலங்கை மக்களின் பிரதேசங்களை இந்தியா தனது வியாபார நலனுக்காகப் எதிர்ப்பில்லாமலே பாவித்துக்கொள்ளலாம். போர் ஓய்ந்துவிட முன்னமே இந்தியப் பெரு முதலாளிகளின் முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன.

இலங்கையின் அதிகார வர்க்கமும் “வியாபாரத்திற்கான அமைதியை” எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. ஆக, போரைவிட அப்பாவி மக்களின் அழிவிலாயினும் தனது முதலாளிகளின் முதலீடுகளுக்காக முந்திக்கொள்ளும் இந்திய அரசானது, புலியழிப்பின் பெயரால் இலங்கை அரசிற்கு எல்லா இராணுவ உதவிகளையும் வழங்கத் தயாராகவுள்ளது. தவிர, தெற்காசியாவிற்கான சந்தைப் போட்டியில் இந்தியாவைக் குறிவைக்கும் மேற்கு ஏகாதிபத்தியங்கள், இந்தியா மீதான அழுத்தங்களை அதன் அண்டை நாடுகளூடாகப் பிரயோகிக்கும் இன்றைய அரசியற் சூழலில், இலங்கையைப் பகைத்துக் கொள்ள விரும்பாத இந்தியா, ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

4. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள்.

காஸாப் பகுதிகளில் மேற்கு ஊடகங்களின் கணக்குப்படி, குழந்தைகள் முதியோருட்பட 500 இற்கு மேற்பட்ட அப்பாவிகள், இஸ்ரேலிய அரசின் குண்டு மழைக்குப் பலியாகிவிட்டனர். மனித இரத்தம் பாயும் பலஸ்தீன அப்பாவி மக்களைப் பற்றிக் கிஞ்சித்தும் வருத்தமடையாமல் இஸ்ரேலின் கொலைகளை வெளிப்படையாகவே ஆதரிக்கும் அமரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷும், மேற்கும் ஐக்கிய நாடுகள் சபையும் தான் இன்றைய ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமான முகங்கள். திரை மறைவில் நடாத்திமுடித்த அரச பயங்கர வாதத்தை வெளிப்படையாகவே நிறைவேற்ற உலகத்தை மறு ஒழுங்கமைப்புச் செய்து கொள்கிறார்கள்.

மேற்கின் பொருளாதார நேருக்கடிக்குப் பின்னதாக எதிர்பார்க்கப்படும் போராட்டங்களுகெதிரான அரச பயங்கரவாதத்திற்கு உலகத்தைத் தயார்படுத்தும் ஒத்திகைகளே இவைகள். உலகின் ஒவ்வொரு மூலைக்குள்ளும் மூக்கை நுழைத்து தனது சுரண்டலை வலுப்படுத்துக் கொள்ளத் தயாராகும் ஏகாதிபத்தியங்கள் தென்னாசியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவின் உள்ளேயும் அதனைச் சூழவுள்ள நாடுகளிலேயும் தனது ஆதரவுத் தளத்தை விரிவாகும் அமரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய அணி, இலங்கை அரசைக் கையாளவும் அதனை முழுமையாக இந்திய சார்புனிலைக்கு தள்ளிவிடாமல் பாதுகாக்கவும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதிருக்கின்றன. இந்தியாவோடு போட்டி போடுக்கொண்டு இலங்கை அரசிற்கு இராணுவ உதவி வழங்க தனது தெற்காசிய நேச அணிகளைத் தயார்நிலையில் வைத்திருக்கின்றன.

5. இலங்கை அரச பயங்கரவாதமும் பாசிசமும்.

ராஜபக்ஷ குடும்பம்இ அது ஆட்சி நடத்தும் இலங்கையைப் பொறுத்தவரை தான் எதை விரும்புகிறது அது அனைத்தையும் செய்து முடிக்கலாம். பயங்கர வாதிகளுக்கெதிரான போரை வெற்றி கொள்ளும் கதாநாயகர்களாகவே இவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். தொலைதூரக் கிராமங்களில் வேலையிலாத் திண்டாட்டத்தை நிவர்த்திசெய்ய “தேசபக்தியுள்ள” இராணுவத்திற்குப் படைகள் திரட்டப்படுகின்றன. இலங்கையின் பிரதான தொழில்களில் இராணுவமும் ஒன்றாகிவிட்டதைச் சுட்டிக்காட்டும் நீரா விக்ரமசிங்க போன்ற ஆய்வாளர்கள், போரற்ற சூழல் இலங்கையில் ஏற்படுமா என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்துகின்றனர். மேற்குறித்த நான்கு மக்கள் விரோத சக்திகளும், போரை உரமூட்டி வளர்த்தெடுக்க, இலங்கை மக்களின் வாழ் நிலை என்பது போரோடு பிணைக்கப்பட்டுவிட்டது. ஒரு புறத்தில் பௌத்த சிங்களப் பெறுமானங்களைப் பாதுகாக்க போர் நடாத்துவதாக அப்பாவி மக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மகிந்த குடும்ப அரசு, மறுபுறத்தில் கிராமங்களை போரோடு பிணைத்து வருகிறது. ஏற்கனவே சிங்கள மக்கள் மத்தியில் வேர்விட்டிருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதமானது, அவர்களின் நாளாந்த வாழ்க்கையோடு பிணைக்கப்பட்டு பாசிசமாக வளர்ந்துள்ளது. இலங்கையின் தமிழ் பேசும் ஊட்கவியளாளர்களில் பெரும்பாலானோர், நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டோ கொல்லப்பட்டோ விட்டனர். அரசிற்கெதிரான சக்திகள் சிதைக்கப்பட்டோ, அரசால் உள்வாங்கப்பட்டோ சீரழிக்கப்பட்டுவிட்டனர். தமிழ் பேசும் புலியெதிர்ப்பாளர்கள், புலியெதிர்ப்புக் குழுக்கள், புலிகள், சிங்கள பெருந்தேசிய வாதிகள், இந்திய அரசு, ஏகாதிபத்தியங்கள், போன்ற எல்லா மக்கள் விரோத சக்திகளும் இலங்கை அரசின் பாசிசத்தை தமது சொந்த வியாபார நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள, தமிழ் பேசும் மக்கள் மீதான திட்டமிட்ட இன அழிப்பு நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

மக்களின் மறுதலையான ஆதரவையும் கூட இழந்து போன புலிகள், மக்களிலிருந்து அன்னியப்பட்டு நிரந்தர பாசிச இராணுவப் படையாக மாற்றமடைந்து, குறுகிய பிரதேசங்களில் முடக்கப்பட்டு அழிந்து போகிறார்கள். இவர்களின் அழிவின் எச்சங்களிலிருந்து அரச பாசிசம் வளர்ந்து இலங்கை மக்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. தெற்காசியாவிலேயே அரச பயங்கர வாதத்தின் இன்னொரு ஆய்வுகூடம் தான் இலங்கை. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதற்காக சமூக உணர்வுள்ள யாரும் துயர்கொள்ள மாட்டார்கள். ஆனால் அழிவின் நெருப்பிற்குத் தீக்கிரையாகும் அப்பாவி இலங்கை மக்களுக்காகக் குரல் கொடுக்க இனியொரு போராட்டம் தேவையாகிறது.

பொருளாதார சீர்குலைவு: சர்வதேச உதவிகளை தடைசெய்ய சில சக்திகள் சதி முயற்சி – பிரதமர்

ratnasri.jpgநாட்டின் சகல பகுதிகளிலும் தமிழர்கள் உயர் பதவிகளை வகித்து, வடக்கு – தெற்கு மக்கள் ஐக்கியமாக வாழ்ந்த காலமொன்றிருந்தது. இவ்வுறவை சீர் குலைத்த பிரபாகரன் இதற்கான பிரதி பலனை அனுபவிப்பது நியாயமானதென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கில் யுத்தத்தை நிறுத்தவும் அதற்கான சர்வதேச ஒத்துழைப்பைப் பெறவும் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் சர்வதேச உதவிகளைத் தடைசெய்யவும் சில சக்திகள் சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அனைத்துச் சவால்களுக்கும் முகம்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதெனவும் பிரதமர் தமதுரையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:-

கிளிநொச்சியை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்ட வெற்றியை அறிவிக்கும் முக்கிமான காலகட்டமொன்றில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலம் நீடிக்கப்படுவதற்கான பிரேரணை இன்று சபையில் சமர்ப்பிக்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமென்பது இலேசானதல்ல. கைகூடாத ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எமது படையினர் சாதித்துக்காட்டியுள்ளனர். இதற்கான பின்னணியை ஏற்படுத்துவதற்காகவே மேலும் ஒருமாத காலத்திற்கு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் இறுதிமூச்சு உள்ளவாங்கப்படும் இன்றைய நிலையில் வத்தளையில் பல உயிர்களைக் காவு கொண்ட தாக்குதலை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கம் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குச் சமமானதாக சில சக்திகள் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றன. நாட்டைச் சீர்குலைக்க இச்சக்திகள் பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. நாடு, இனம் என்ற உணர்வில்லாத இவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியையே இன்று நாட்டு மக்கள் முன்வைக்கின்றனர். பல அரசியல் வாதிகள் இதிலடங்குகின்றனர். இது போன்ற செயற்பாடுகளில் இறுதியில் நியாயமே வெல்லும்.

தேசிய உணர்வுள்ள மக்கள் வாழும் நாடு அதிஷ்டமிக்கது. எனினும் துரதிஷ்டவசமாக எமது நாட்டின் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியாத நிலையே உள்ளது. புலிகளுக்கும் அல்கைதா இயக்கத்துக்குமிடையில் தொடர்புகள் இருப்பதாக இந்திய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் காபுல் நகரில் இவர்களுக்கிடையிலான ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்ததாகத் தெரிய வருகிறது.

கேரளா, தமிழ்நாடு வழியாக நாட்டிற்குள் போதை மருந்துகளைக் கடத்தவும் இவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைத் தடுப்பதற்கான சட்டதிட்டங்கள் அவசியம். இதற்குச் சகல தரப்பினரதும் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வேளையில் உயிரைப் பணயம் வைத்து பயங்கரவாதிகளின் கோட்டைக்குள் நுழையும் படைவீரர்களுக்கு மனதைரியத்தை வளர்க்கும் பொது நடவடிக்கைகளும் அவசியமென பிரதமர் மேலும் தெரிவித்தார். 

காஸா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் நிபந்தனை

israeli-aircraft.jpg
யுத்தத்தை நிறுத்தும் படியான சர்வதேச உத்தரவுகளை உதாசீனம் செய்துள்ள இஸ்ரேல் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் ரொக்கட் தாக்குதலை நிறுத்துதல், சர்வதேச மேற்பார்வையின் கீழ் உடன்படிக்கை செய்யப்படல், மீண்டும் ஹமாஸ் ஆயுதத் தாக்குதலை நடாத்துவதில்லை என உறுதியளித்தல் என்பவையே அவையாகும்.

இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என சூளுரைத்துள்ள ஹமாஸ் தலைமையகம் இஸ்ரேல் முற்றுகைகள் அகற்றப்பட்டு எல்லைகள் திறக்கப்படுவதுடன் தாக்குதல்களையும் நிறுத்தும் பட்சத்தில் யுத்தநிறுத்தம் சாத்தியமென ஹமாஸ் அறிவித்துள்ளது.  காஸாவில் கடந்த இரு வாரங்களாக இடம்பெறும் மோதல்கள் மிகப் பெரிய பிராந்திய நெருக்கடியைத் தோற்றுவிக்கும் கட்டத்தை நெருங்கியுள்ளது. சிறுவர்கள், குழந்தைகள் எனப் பலியாவோரின் தொகை உயர்ந்தவண்ணமுள்ளன. காஸாவுக்குள் ஆழ ஊடுருவியுள்ள இஸ்ரேல் இன்னும் தங்கள் இலக்குகளை அடையவில்லை.

ஹமாஸின் ரொக்கட் தளங்களை தகர்ப்பதே நோக்கம் எனத் தெரிவித்துள்ளது. அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதாயின் பொதுமக்களை கேடயங்களாகப் பாவிப்பதை ஹமாஸ் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தது.  ஹமாஸின் தலைமையகம் ஸியோனிஸ்டுகளை எதிர்த்து மூர்க்கமாகப் போராடும்படி தனது உறுப்பினர்களைக் கேட்டுள்ளது.  காஸாவில் எமது குழந்தைகளைக் கொலை செய்யும் சியோனிஸ்ட் வெறியர்கள் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் கொலை செய்ய எண்ணியுள்ளதாகவும் ஹமாஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல இஸ்ரேல் தடையாக உள்ளதாக ஐ. சி. ஆர். சி. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவசர கால சட்டம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

sl-parlimant.jpgஅவசர காலச் சட்டம் நேற்று பாராளுமன்றத்தில் 96 மேலதிக வாக்குகளால் நிறை வேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. நேற்றைய வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான பைசல் காசிம், எஸ். ரஜாப்தீன் ஆகியோர் மட்டுமே சபையில் இருந்தனர். ஐ. தே. கட்சி உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை. அதேபோன்று ஆளும் தரப்பில் இ. தொ. கா. மற்றும் மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்களும் சபையில் இருக்கவில்லை. சபையிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 10 பேர் மட்டுமே பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடும்.

புலிகள் அமைப்பை தடைசெய்வது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் -அமைச்சர் கெஹலிய

kkhaliya.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்வது தொடர்பான முடிவு இன்று புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தின்போது எடுக்கப்பட விருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். விடுதலைப்புலிகளை இலங்கை அரசு தடைசெய்ய வேண்டுமென நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் புலிகள் ஜனநாயக வழிக்கு திரும்புவதற்காக போதுமான கால அவகாசத்தை அரசாங்கம் வழங்கியது. ஆனால், அவர்கள் அதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டனர். இப்போது புலிகளை தடைசெய்தேயாக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

விடுதலைப்புலிகளை தடைசெய்வது அவசரகால விதிகளின் கீழா அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையிலா என்பது குறித்து அரசாங்கம் சட்டஆலோசனைகளை தற்போது ஆராய்ந்து வருகின்றது. இன்று புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடும் அமைச்சரவைக்கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவிருக்கிறது எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி கண்டி தலதா மாளிகையை புலிகள் தாக்கியபோது அந்த இயக்கத்தை அரசு தடைசெய்திருந்தது. அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து கொண்டதால் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுக்கும் பொருட்டு 2002 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி தடைநீக்கப்பட்டது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்காத பயங்கரவாத இயக்கமாகவே புலிகள் இயக்கம் தொடர்ந்து காணப்படுகின்றது. அவர்களுக்கு அவர்களின் பாஷையிலேயே பதிலளிக்கப்பட வேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

முகமாலை, கிளாலி முன்னரங்கு நிலைகள் படையினரின் கட்டுப்பாட்டில்

_army.jpgமுகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலு ள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதியை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 53 வது மற்றும் 58 வது படைப்பிரிவினர் இந்தப் பகுதியிலுள்ள முன்னரங்கு நிலைகளை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலுள்ள படையினர் இங்கிருந்து தென்பகுதியிலுள்ள பளையை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனகநாணயக்கார, கடற் படைப் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ண மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரிகேடியர் உதய நாணயக்கார இங்கு மேலும் தகவல் தருகையில்:- யாழ்ப்பாணம், முகமாலை மற்றும் கிளாலி பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப்பிரிவினர் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை இலக்குவைத்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த 500 தொடக்கம் 600 மீற்றர் வரையான முன்னரங்கு பாதுகாப்பு நிலைகளை படையினர் மீட்டெடுத்துள்ளனர். தற்பொழுது முன்னெடுக்கும் படை நடவடிக்கையின் போது படையினரை இலக்கு வைத்த புலிகளின் பதில் தாக்குதல்கள் குறைந்துள்ளதாகவும், புலிகள் பின்வாங்கிச் செல்லும் நிலைகள் காணப்படுவதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

ஆணையிறவுக்கு தெற்கு மற்றும் அதன் கரையோரப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் தட்டுவான் கட்டு மற்றும் தமிழ்மடப் பிரதேசத்தில் தமது நிலைகளை பலப்படுத்தியுள்ளனர். ஆணையிறவுக்கு தெற்கை கைப்பற்றியதை அடுத்து தெற்கு பகுதியில் அமைந்துள்ள புலிகளின் சகல விநியோகப் பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது முல்லைத்தீவு பகுதியிலுள்ள கிழக்கு கடற்கரை பிரதேசமும் அதனை அண்மித்த பகுதிகளும் மாத்திரமே புலிகளின் விநியோக பாதையாக உள்ளது. ஒலுமடுவுக்கு கிழக்கேயும், ஒட்டுசுட்டானுக்கு மேற்கேயும் நிலைக்கொண்டிருந்த இராணுவத்தின் நான்காவது மற்றும் மூன்றாவது செயலணியினர் ஏ- 32 பிரதான வீதியில் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் மற்றும் ஒலுமடு வரையான பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இராணுவத்தின் 59 வது படைப்பிரிவினர் ஒட்டு சுட்டானிலிருந்து முள்ளியவளை வரையான வீதியை நோக்கி தற்பொழுது முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு பகுதியிலுள்ள தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை புலிகள் நாளுக்கு நாள் பாதுகாப்புப் படையினரிடம் இழந்து வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். முகமாலையிலிருந்து தெற்காகவுள்ள ஆணையிறவுக்கு 19 கிலோ மீற்றரும், அங்கிருந்து கிளிநொச்சிக்கு சுமார் நான்கு கிலோமீற்றர் தூரமும் உள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மீட்பு வெற்றி ஐ.தே.கட்சிகே சொந்தமானது – எஸ்.பி. திஸாநாயக்க

sbdisanayakka.jpg“தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுக்கு அழைத்து பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம்” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் மற்றும் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம். படையினர் பெற்ற வெற்றி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இந்த வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசேயாகும்.

2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து விடுதலை புலிகளை சமாதான பேச்சு நடத்தியமையால்தான் வடக்கு – கிழக்கு மாகாணத்தை இன்று படையினரால் மீட்க முடிந்தது. அப்போது செய்துகொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அமைச்சர்களும் விமர்சித்தார்கள். ஆனால் இன்று அதன் பயனை அவர்கள் அனுபவிக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ அரசு இதனை மறந்து விடக்கூடாது. இன்று படையினர் பெற்ற வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியும் காரணம் – என்றார் அவர்.

ஆட்டோ: பெற்றோல் நிவாரணம்: சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

presidentmahinda.jpgமுச்சக்கர வண்டிகளுக்கென குறைந்த விலையில் அரசினால் வழங்கப்படவுள்ள பெற்றோலுக்கான நிவாரணத்தை சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று (06) அலரி மாளிகையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு குறிப்பிடுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; சமுர்த்தி வங்கிகளினூடாக பெற்றோல் சகாய விலையை பெற்றுக் கொள்வதாயின் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சமுர்த்தி வங்கியில் தம்மை பதிவு செய்து கொள்வது கட்டாயம். 250,000 முச்சக்கர வண்டிகளுக்கென வருடாந்தம் 6000 மில்லியன் ரூபாவை மானியமாக பெற்றுக் கொடுத்தமை தொடர்பாக அரசுக்கு மேற்படி சங்க உறுப்பினர்கள் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேற்படி தொகையை வடக்கில் யுத்தம் புரிவோரின் குடும்பங்களின் நலன்புரி விடயங்களுக்கு பயன்படுத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி; “மக்களுக்கு பெற்றுக் கொடுத்த சலுகைகளை மீளப் பெறுவது எனது நோக்கமல்ல. இதனை விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம். விரும்பாதோர் படையிணரின் குடும்பங்களின் நலன்புரி விடயங்களுக்கு வழங்கலாம் என்றும் தெரிவித்தார். அத்துடன் முச்சக்கர வண்டிகளை காஸில் இயக்கக் கூடிய விதத்தில் அதனை மாற்றியமைக்க வெகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். முச்சக்கர வண்டிகளுக்கு பொருத்துவதற்கான மீட்டர்களை தருவிக்கும் போது அவற்றுக்கு வரிச்சலுகை வழங்குவது சம்பந்தமாக யோசிப்பதாகவும் தெரிவித்தார்.