எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஆபாசப்படம் எடுத்தவர் பிணையில் விடுவிப்பு

camara.jpgயுவதி ஒருவரை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட் படுத்தியதுடன், ஆபாசமாகப் படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிங்கள பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை மாத்தறை நீதிவான் ஏம்.ஏ.கே. பீரிஸ் 75 ஆயிரம் ரூபா சரீரப்பிணையிலும் 7500ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதித்தார்.

வெலிகம பே ஹோட்டலில் புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து சந்தேக நபர் யுவதியை மாத்தறை பஸ் நிலையத்தில் கைவிட்டுச் சென்றுள்ளார் என பொலிஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்தயுவதி தனது ஊரான தியகொடைக்குச் சென்று பெற்றோருக்கு விடயத்தைக் கூறி தியகொட பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

தியகொடை பொலிஸாரும் மாத்தறை பொலிஸாரும் இணைந்து இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டனர் சந்தேக நபரைக் கைதுசெய்தனர். சந்தேக நபர் வெள்ளிக்கிழமை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். மேல் விசாரணையை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் யுவதியை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி அதன் அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

வவுனியா வைத்தியசாலையின் தமிழ் டாக்டர்களுக்கு அனுப்பப்பட்ட அச்சுறுத்தல் கடிதம் குறித்து விசாரணை

வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 தமிழ் வைத்தியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் கடிதம் தொடர்பாக விசாரணைகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். அச்சுறுத்தல் கடிதங்கள் தனித்தனியே தமிழ் வைத்தியர்களுடைய முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறித்த கடிதப் பிரதிகள் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையில் பாதுகாப்பின்மை காரணமாக வவுனியாவிலிருந்து வெளியேறிய பெரும்பான்மை வைத்தியர்கள் அனைவரும் மீண்டும் கடமைக்குச் சமுகமளித்துள்ளனர் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது. இவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 60 பொலிசாரைக் கொண்ட குழு ஒன்று 24 மணி நேரமும் வைத்தியசாலை மேல் மாடியில் நிலைகொண்டுள்ளது. பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் தங்கும் விடுதிகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதான வாசல் உட்பட வைத்தியசாலை வளவிற்குள் செல்லும் சகல வழிகளிலும் பொலிஸார் கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜெனீவா சாசனத்துக்கு எதிராக இலங்கையில் போர் குற்றங்கள்; சர்வதேச சமூகம் மௌனம் -தமிழ் கூட்டமைப்பு விசனம்

ahathi.jpgயுத்தத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான கடுமையான பொருளாதார, உணவு, மருத்துவ தடைகள் ஜெனீவா சாசனத்தின் பிரகாரம் போர் குற்றங்கள் மாத்திரமன்றி தமிழ் மக்களுக்கு இனப்படுகொலையின் ஓரங்கமான கொள்கையுமாகும் என்று சுட்டிக்காட்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சர்வதேச சமூகத்தின் மௌனம் குறித்து ஏமாற்றத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தமிழ் கூட்டமைப்பின் பத்திரிகை அறிக்கை தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; விடுதலைப்புலிகளின் பகுதிகளில் தமிழ் மக்களும் பொதுமக்களின் உள்சார் கட்டமைப்பும் குறிப்பாக ஆஸ்பத்திரிகள் வேண்டுமென்றே படிமுறையாக ஆயுத படைகளினால் இலக்கு வைக்கப்படுகின்றன. நத்தார் / புதுவருடம்/ தைப்பொங்கல் பண்டிகை காலப்பகுதியான தற்போதைய காலகட்டத்தில் இந்த நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 17 இல் வட்டக்கச்சி பகுதியில் 4 முறை இலங்கை வான்படை நடத்திய தாக்குதலில் 5 மாத குழந்தை மற்றும் 25 வயது இளைஞர் கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் அகதிகளாயினர். டிசம்பர் 19 இல் முள்ளிவாய்க்கால் கிராமத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். அதேநாளில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் முல்லைத்தீவு பொதுமருத்துவமனை நாசமடைந்தது. மருத்துவப் பணியாளர் இருவரும் காயமடைந்தனர். டிசம்பர் 20 இல் படையினரின் எறிகணைத் தாக்குதலில் வட்டக்கச்சியில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் குடியிருப்புகள் நாசமடைந்தன. இதேநாளில் முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை இலக்கு வைத்து வான்படையினர் 8 குண்டுகளை வீச மீன்பிடி படகுகளும் தளபாடங்களும் அழிந்துபோயின.

டிசம்பர் 25 நத்தார் நாள் கிளிநொச்சி பொது மருத்துவமனையை இலக்கு வைத்து படைத்தரப்பு மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் பலர் உயிர் தப்பினர். டிசம்பர் 27 இல் வான்படையினர் இயக்கச்சி, இரணைமடு மற்றும் வட்டக்கச்சி பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் 24 வயது இளம் பெண் கொல்லப்பட்டார். 10 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். 18 வயது இளம்பெண் இரு கால்களையும் இழந்தார். டிசம்பர் 30 இல் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கிளிநொச்சி மருத்துவமனை கடும் சேதமடைந்தது.

டிசம்பர் 31 இல் படையினர் முல்லைத்தீவு பரந்தன் வீதியில் உள்ள முரசுமோட்டை பகுதியில் மக்கள் குடியிருப்புகளை இலக்குவைத்து நடத்திய தாக்குதலில் மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 16 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். கரைச்சி பகுதியில் அதே நாளில் இடம்பெயர்ந்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஜனவரி 1 இல் புதுவருடப் பிறப்பு நாளில் மீண்டும் முரசுமோட்டை மற்றும் கண்டாவளை பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.

ஜனவரி 2 இல் புதுக்குடியிருப்பு பகுதியில் படையினர் நடத்திய தாக்குதலில் இரு நோயாளர் காவு வாகனங்களும் 13 பொதுமக்களும் படுகாயமடைந்தனர். அதேநாளில் முரசுமோட்டை 3 ஆம் கட்டையில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். ஜனவரி 3 ஆம் நாள் வன்னி புளியம்பொக்கணை பகுதியில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் படுகாயமடைந்தனர். வன்னிப் பெருநிலப்பரப்பில் 3 இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்கள் உள்ளக அகதிகளாகி உள்ளனர்.

ஜெனீவா சாசனங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு இனப்படுகொலையை அரசு மேற்கொண்டு வருவது போர்க்குற்றமாகும். ஆனாலும், இது தொடர்பில் சர்வதேச சமூகம் தொடர் மௌனம் காத்து வருகிறது. மாறாக இலங்கைக்கு படைத்தரப்பு உதவிகளை வழங்கி வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி சீத்தாதேவி மகளிர் கல்லூரி மாணவி மரணம்: இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டது.

திடீரென மரணமடைந்த கண்டி சீத்தாதேவி மகளிர் கல்லூரி மாணவியின் இரண்டு கண்களும் இலங்கை கண்தானசபைக்கு தானம் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் முடிவடைந்த க. பொ. த. (சா/த) பரீட்சைக்கு தோற்றிய கண்டி சீத்தாதேவி மகளிர் கல்லூரி மாணவியான பிரதீபிகா ரனசிங்க (17) என்ற மாணவி இரவு உணவு உண்டபோது அது தொண்டையில் சிக்குண்டு சுவாசப்பை வாயிலை அடைத்ததன் காரணமாக மரணமானார்.

இவரது மரண விசாரணையில் மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி பெரேரா பிரேத பரிசோதனை நடத்தி சாட்சியமளித்தார். ஹரிகடுவ திடீர் மரண விசாரணை அதிகாரி ஆர். டி. என். பண்டா சாட்சியங்களைப் பதிவு செய்தபின் உணவு சுவாசப் பையினுள் சிக்குண்டதால் ஏற்பட்ட மரணமெனத் தீர்ப்பளித்தார். அதனை அடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி பெற்றோரின் விருப்பப்படி கண்தானம் செய்யப்பட்டதை பாராட்டினார். அடுத்த வாரம் நிட்டம்புவையைச் சேர்ந்த இருவருக்கு இக்கண்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கண்தான சங்கத் தலைவர் ஹட்சன் சமரசிங்கசிங்க தெரிவித்தார். பலகொல்ல பொலிஸார் சாட்சியங்களை நெறிப்படுத்தினர்.

காஸாவில் இருந்து கிளிநொச்சிவரை புரிந்துகொள்ளாத பாடம் : த ஜெயபாலன்

Attack on School in Gazaகிளிநொச்சியை இலங்கை அரசபடைகள் கைப்பற்றியதாக ஜனவரி 2ல் அறிவிக்க அதற்கு பல்லாயிரம் மைல்கள் தொலைவில் மத்திய கிழக்கில் காஸாவிற்கு ஜனவரி 3 அன்று இஸ்ரேலியப் படைகள் அனுப்பப்பட்டு காஸா முற்றுகைக்கு உள்ளானது. காஸாவாக இருந்தாலென்ன கிளிநொச்சியாக இருந்தாலென்ன யுத்தத்தில் ஈடுபட்டவர்களின் நோக்கங்கள் ஒரே மாதிரியானவையாக அதிகார வேட்கை குன்றாததாக அப்படியே இருக்கின்றது. ஆனால் காஸாவிலும் சரி கிளிநொச்சியிலும் சரி பொதுமக்களுக்கு ஏற்பட்ட ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இழப்புகளும் துயரங்களும் தொடர்கதையாகத் தொடர்கிறது.

‘சுதந்திரக் காற்றை சுவாசிக்க வன்னி மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுப்பேன்’ என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது வாக்கு வங்கியை நிரப்புவதற்கு ஆரம்பித்து வைத்த யுத்தம் ஒரு குறியீட்டு வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்து உள்ளது. அதே பாணியில் பெப்ரவரி 10ல் வரவுள்ள தேர்தலில் தனது வாக்கு வங்கியை நிரப்ப இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மட் தனது துருப்புக்களை காஸாவிற்கு அனுப்பி உள்ளார். ‘இது பாலஸ்தினியர்களுக்கு எதிரான யுத்தமல்ல ஹமாஸின் ஏவுகணைகளை அழிப்பதற்கான யுத்தம்’ என்று விளக்கம் அளிக்கும் எகுட் ஒல்மட் அங்கு சில தினங்களுக்கு உள்ளாக கொல்லப்பட்ட பல நூற்றுக் கணக்கான பாலஸ்தீனிய பொது மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. அந்த மரணங்களுக்கு ஹமாஸே பொறுப்பு என்று பொறுப்பற்ற விதத்தில் பதிலளிக்கிறார்.

கிளிநொச்சியினதும் காஸாவினதும் புவியியல் அமைவுதான் மாறுபட்டு உள்ளதே அல்லாமல் இந்தப் பிரதேசங்களின் யுத்தப் பின்னணியும் அதில் ஈடுபடுபவர்களின் பின்னணியும் பெரும்பாலும் ஒரே மாதிரியானவையே. பிரித்தானிய காலனியாதிக்கத்துக்குள் இருந்தது உட்பட, இலங்கை – இஸ்ரேல் உள்நாட்டு யுத்தங்களில் ஒத்த புள்ளிகள் நிறையவே உள்ளன. மேலும் தமிழீழ விடுதலை இயக்கங்கள் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பிடம் பயிற்சி எடுத்ததும், இலங்கை இராணுவம் மொசாட்டிடம் பயிற்சி எடுத்ததும் தெரிந்ததே. பிற்காலங்களில் இஸ்ரேலிய இராணுவம் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஒரே காலப்பகுதியில் பயிற்சிகளை வழங்கியதும் அம்பலமாகி இருந்தது.

இலங்கை, இஸ்ரேலிய அரசுகளின் ஒடுக்குமுறையும் கட்டற்ற இராணுவப் போக்கும் பற்றி விரிவாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. இரு அரசுகளுமே பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்துவதாகக் கூறிக்கொண்டு தங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தங்கள் இராணுவ இயந்திரத்தை முடுக்கிவிட்டு உள்ளனர். தன்னால் வளர்க்கப்பட்ட பின்லாடனால் (அல்கைடா) செப்ரம்பர் 11, 2001ல் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலை வைத்துக் கொண்டு உலகின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களை எல்லாம் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தியது அமெரிக்கா. அந்த முத்திரை விடுதலைப் புலிகளுக்கும் ஹமாஸிற்கும் சேர்த்துக் குத்தப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனால் அந்த பயங்கரவாத முத்திரையைக் குத்தவதற்கு அமெரிக்காவிற்கு எவ்வித யோக்கியதையும் கிடையாது. இன்று இலங்கை இஸ்ரேல் உட்பட அரச பயங்கரவாதங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கிறது அமெரிக்கா. ‘இஸ்ரேல் தனது நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை (காஸா மீது தாக்குதல் நடத்துவதை) எடுப்பது தவிர்க்க முடியாது’ என்று ஜோர்ஜ் புஸ் காஸா மீதான தாக்குதலுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார். உலக சமாதானத்தைச் சொல்லி ஆட்சியைக் கைப்பற்றிய தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, காஸா பற்றி மௌனமாகவே இருக்கிறார். இன்னும் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக பதவியேற்க உள்ள அவர் இஸ்ரேல் விடயத்தில் ஜோர்ஜ் புஸ்ஸின் தடங்களையே தொடருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து அரசுகள் மட்டும் தான் அதிகார வேட்கையுடன் நடந்துகொள்கின்றன என்று கூறிவிட முடியாத அளவுக்கு அரச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களும் அதிகார வேட்கையுடனேயே இயங்குகின்றனர். இதில் விடுதலைப் புலிகளும் ஹமாஸ்ம் ஒருவரை ஒருவர் மிஞ்சியவர்கள். தங்களுடன் உடன்படாதவர்களை தீர்த்துக் கட்டும் இவர்களின் அரசியல் இவர்களின் அமைப்புகளில் ஸ்தாபனப்படுத்தப்பட்டு உள்ளது. ஹமாஸ்ற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள வேறுபாடு, முன்னையது மத அடிப்படைவாத அமைப்பு பின்னையது இன அடிப்படைவாத அமைப்பு. இரு அமைப்புகளுமே மக்கள் விடுதலை என்ற பெயரில் அவர்களை மந்தைகளாகவே நடத்துகின்றனர்.

யசீர் அரபாத்தின் ‘பற்றா’ இயக்கத்தைசச் சேர்ந்த பாலஸ்தீனிய ஜனாதிபதி மொகமட் அப்பாஸ், ஹமாஸ் இயக்கத்தின் இராணுவ பலம் அழிக்கப்படுவதை மறைமுகமாக விரும்புகிறார். ஹமாஸ் காஸாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளது. ‘பற்றா’ வெஸ்ற் பாங் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்த உள்ளது. இந்த ‘ஹமாஸ் – பற்றா’ முரண்பாட்டில் ‘பற்றா’ இயக்கத்தைச் சார்ந்தவர்கள் சிலரை ஹமஸ் இந்த போர்ச் சூழலிலும் படுகொலை செய்து உள்ளது. ஆனால் பாலஸ்தீனிய பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படுவதால் குறைந்த பட்சம் மொகமட் அப்பாஸ் இஸ்ரேலுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டு உள்ளார்.

ஆனால் இலங்கையில் நிலைமை அவ்வாறில்லை. தமிழ் மக்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை தங்கள் அதிகார  ஆசையை தக்க வைத்துக் கொண்டால் சரி என்று புலி எதிர்ப்பு அணிகள் எல்லாம் மகிந்தவின் சிவப்புச் சால்வையில் தொங்கிக்கொண்டு உள்ளனர். இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் வன்னி யுத்தத்தில் தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றி மூச்சுக் கூடவிடவில்லை. அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது என்று அர்த்தமில்லை. ‘புலிக்கு இறைத்த நீர் வாய்கால் வழியோடி மக்களுக்கும் பொசிந்து உள்ளது.’

இலங்கையில் உள்ள புலியெதிர்ப்பு தமிழ் அரசியல் தலைமைகள் இலங்கை அரசின் தயவில் தங்கி இருப்பதாலும் புலிகள் பலமிழந்து போகும் பொது ஏற்படும் வெற்றிடத்திற்கு தாங்கள் தெரிவு செய்யப்படுவோம் என்ற கனவிலும் மறந்துபோயும் மகிந்தவின் மனம் கோணாமல் நடந்தகொள்ள வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் புலம்பெயர் நாடுகளில் ‘அதிகாரத்தை தகர்கிறோம் பார்’ என்று இஸங்கள் பேசியவர்களும் மகிந்தவின் சிவப்புச் சால்வையில் ஒரு துண்டைப் பிடித்தவிட வேண்டும் என்று உன்னி உன்னிப் பார்க்கிறார்கள். மக்களின் பக்கத்தில் நின்று பிரச்சினையை நோக்க இவர்கள் தயாரில்லை. இவர்களது புலியெதிர்ப்பு ‘கட்ராக்’ நோயினால் இவர்களுக்கு பார்வைக் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு வலது – இடது என்று விதிவிலக்கு எதுவும் இல்லை.

இவ்விடத்தில் கட்டுரையாளர் நஜிமில்லாஹி தேசம்நெற்றில் எழுதிய கட்டுரையின் ஒரு குறிப்பை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ”இலங்கையின் சமகால அரசியல் முக்கிய அடையாளமாக இனவாதம் இருந்து வருவது ஒன்றும் நமக்குப்புதிதல்ல. எனினும் சிறிது காலம் வெளிப்படையான இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் இங்கு ஓரளவு தணிந்திருந்தன. கிழக்கு அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கில் இராணுவ வெற்றிகள் பலவற்றை அரசாங்கம் அடைந்து வருவதையடுத்தே தற்போது இந்த இனவாத அலை மேற்கிளம்பியுள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பௌத்த பேரினவாதக் கருத்துநிலை வெகுசனப்பரப்பில் ஊட்டி வளர்க்கப்படுகிறது.

எனவே சிறுபான்மை அரசியல்-சமய தளங்களில் ஒரு பெரும் மோதலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதே இச்செயற்பாடு என எண்ணத் தோன்றுகிறது. பௌத்த அடிப்படைவாதம் முஸ்லிம்களின் சமய மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து குறுகிய மனப்பான்மையை கொண்டுள்ளன. தற்போது முஸ்லிம்களின் சில சமய நடவடிக்கைளில் தலையீடுகளைச் செய்து வருகின்றனர். முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுக்கின்றனர் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதுவெல்லாம் இப்போது செய்யப்படுவதன் நோக்கமென்ன? அரசாங்கம் இராணுவ வெற்றிகளை அடைந்து வரும் இந்நிலையிலேயே இது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கிலும் ஒரு பூரண வெற்றி கிடைத்த பின்னர் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான நேரடி மோதல்களை பௌத்த அடிப்படைவாதிகள் மேற்கொள்ளக்கூடும்.”

கட்டுரையாளர் நஜிமில்லாஹியின் அச்சம் (முழுமையாக அவருடைய கட்டுரையைப் படிக்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்: பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும், பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு : நஜிமிலாஹி : http://thesamnet.co.uk/?p=6137) மிகவும் நியாயபூர்வமானது.

கிழக்கை வெற்றி கொண்ட மகிந்த அரசு முற்றிலும் ஒரு பொம்மை மாகாணசபையொன்றை கிழக்கில் உருவாக்கி உள்ளது. மகிந்த மாத்தையாவின் பஸ்ஸில் எங்கு போகிறோம் என்று கேட்காமலேயே தொங்கிக்கொண்டு ஏறியவர்கள் கருணா – பிள்iளையான் அணியினர். மகிந்த மாத்தையாவின் உண்மையான ‘கோளயாக்கள்’. அப்படி இருந்தும் கிழக்கு மாகாண சபைக்கு குறைந்தபட்சம் 13வது திருத்தத்தைக் கூட முழுமையாக கொடுக்க ஜனாதிபதி தயாராகவில்லை.

இப்போது வடக்கை விடுவிக்கிறேன் சுதந்திரக் காற்றை வீசச் செய்கிறேன் என்று கிளிநொச்சியில் இருந்து முல்லைத் தீவுக்கு இராணுவம் புறப்பட்டு உள்ளது. வடக்குக்கான உள்ளுராட்சித் தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அரசு ஜனவரி 6ல் அறிவித்து உள்ளது. கிழக்கு போன்று வடக்கிலும் டக்ளஸ் மற்றும் புலியெதிர்ப்பு அணிகளின் ஆதரவுடன் தேர்தல் இடம்பெற்று ஒரு பொம்மை அரசு உருவாக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகளே நிறைய உள்ளது. அந்த பொம்மை அரசுகளில் தங்களுக்கும் ஒரு இடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் புலத்தில் இருந்தும் சிலர் ஓடிச்சென்று தங்கள் முன்னாள் அமைப்புகளுடன் ஒட்டிக்கொள்ளலாம். சின்னமாஸ்ரர், பிரபாகரன், ஜெகநாதன், குமாரதுரை என்று இந்தப் பட்டியல் இன்னும் இன்னும் நீளலாம்.

ஆனால் இந்த வடக்கு – கிழக்கு மாகாண அரசுகள் தமிழ் மக்களின் குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகளைத் தன்னும் தீர்க்கக் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகமே.

இன்று மக்களுக்கு அரசியல் தீர்வு என்பதிலும் பார்க்க அவர்கள் சுவாசித்து தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது உண்மை. அந்த வெளி எதிர்காலத்தில் நிரந்தரமாக பிரச்சினையைத் தீர்பதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். இவ்விடயத்திலேயே மகிந்தவின் அரசு மீதான நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகிறது. பொங்கல் பரிசாக குடாநாட்டு மக்களுக்கு 24 மணிநேர மின்சாரம், கிழக்கு மக்களுக்கு அபிவிருத்தி என்ற கதையாடல்கள் மூலம் அடிப்படைப் பிரச்சினையை அரசு ஓரம்கட்டப் பார்க்கிறது. கிளிநொச்சி பிடிக்கப்பட்டதை தனது கட்சி அலுவலகங்களுடாக வெடிகொழுத்திக் கொண்டாடிய அரசு, கொழுத்திய வெடியில் இலங்கை மக்களின் பால்மா பிரச்சினை அடிபட்டுப்போனது.

இலங்கை – சிங்கள, தமிழ், முஸ்லீம் ,மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பி குறுகிய சுயநல அரசியல் நோக்குடன் செயற்பட்ட காலம்காலமாக பதவிக்கு வந்த அரசுகள், நாட்டை இந்த யுத்தச் சூழலுக்குள் தள்ளி சிரழித்து உள்ளன. இந்த நச்சுச் சூழலில் இருந்து உடைத்து வெளியே வந்து மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் இலங்கை – இஸ்ரேலிய அரசுகள் கவனம்கொள்ளும் என்ற சிறு நம்பிக்கையை ஏற்படுத்தும் எவ்வித சமிஞ்சையையும் அவர்கள் காட்டவில்லை.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்காது என்ற பாடத்தை இலங்கை – இஸ்ரேலிய அரசுகள் புரிந்துகொள்ளத் தவறியுள்ளன.

ஹமாஸ் – புலிகள் வானத்தில் இருந்து பூமியில் தற்கொலைப் போராளிகளாகக் குதிக்கவில்லை. அங்கிருந்த அரசியல் சூழல் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. அந்த அரசியல் சூழலில் அடிப்படை மாற்றம் ஏற்படும்வரை ஹமாஸை – புலிகளை அழிக்க முடியாது. ஹமாஸ்க்கும் புலிகளுக்குமான தேவை இருக்கும் வரை சேக் அமட் யசின் – பிரபாகரன் போன்றவர்கள் தங்கள் பயங்கரவாத அரசியலை தொடர்வதில் அவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை.

இன்று (ஜனவரி 6) இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில் காஸாவில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில்  30 மாணவ மாணவியர் கொல்லப்பட்டு உள்ளனர் என்ற கோரச் செய்தி வெளிவந்தது. செஞ்சோலையில் கடந்த ஆண்டு 64 மாணவிகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது. தவறான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் எப்படி விமானத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும்? ஹமாஸ் – புலிகள் பொறுப்பற்று நடந்தால் அவைசார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படித் தண்டிக்க முடியும்? இவ்வாறான தாக்குதலை நடத்துகின்ற இலங்கை – இஸ்ரேலிய அரசுகளின் பொறுப்பென்ன?

சேக் அசாத் யசின் – பிரபாகரன் ஆகியோரின் விளைநிலங்களே இந்த இலங்கை – இஸ்ரேலிய அரசுகளின் அரச பயங்கரவாதம் என்றால் மிகையல்ல.

இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது பற்றியது அல்ல எமது ஆதங்கம். அந்த இராணுவ நடவடிக்கையில் கொல்லப்படுவது பெரும்பாலும் அப்பாவிப் பொது மக்களும், பலாத்காரமாகவும் பொருளாதார நெருக்குதலாலும் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு சிறிய பயிற்சியுடன் முன்னரங்க காவல்நிலைகளில் விடப்படும் இளம் போராளிகளின் இழப்புமே. மேலும் பொருளாதார அடிமட்டத்தில் இருந்து தள்ளப்பட்ட இராணுவ வீரர்களதும் இழப்பும். இந்த இழப்புகளின் மீது பெறப்பட்டது தான் இந்த கிளிநொச்சி நகர் மீதான வெற்றி.  இது ஒரு குறியீட்டு வெற்றியே அல்லாமல் வேறொன்றுமல்ல.

அந்த வெற்றியின் மீது காதல் கொண்டு அறிக்கைகளும் கருத்துகளும் தூள் பறக்கின்றன. அதில் புலம்பெயர் தீவிர புலி எதிர்ப்பு அணியும் பின்நிற்கவில்லை. மகிந்த அரசு ஏதோ தமிழ் மக்களுக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்துவிட்டதாக இவர்கள் போடும் கூத்து தாங்க முடியவில்லை. ‘புலிகள் அங்கு தாக்கி விட்டார்கள். இங்கு தாக்கிவிட்டார்கள். தமிழீழத்தை அண்மித்துவிட்டோம்’ என்று புலம்பெயர் புலி அதரவு வாலாக்கள் போட்ட கூத்திற்கு எவ்வித குறைவில்லாமல் புலம்பெயர் மகிந்த ஆதரவு வாலாக்கள் கூத்தடிக்கிறார்கள்.

காஸா மீதான இஸ்ரெலின் தாக்குதலைக் கண்டிக்கும் ஜனநாயகம் – மாற்றுக் கருத்து பேசுபவர்கள் முரண்நகையாக இலங்கை அரசு வன்னி மீது மேற்கொள்ளும் முற்றுகையை வரவேற்கின்றனர். புலிகள் அழிக்கப்பட்டாலேயே தமிழ் மக்களுக்கு விமோசனம் என்றும் இலங்கை அரசபடைகளின் வன்னி யுத்தம் தவிர்க்க முடியாதது என்று விளக்கம் வேறு. யுத்தம் என்பது புனிதமானது அல்ல. ஹமாஸ் நடத்தும் யுத்தமும் புனிதமானதல்ல. ஹமாஸ், விடுதலைப் புலிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களுமல்ல. சளைத்தவர்களுமல்ல. எதிலும். இஸ்ரேலினுடைய இராணுவ நடவடிக்கை எவ்வளவு மோசமானதோ அதேயளவு இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளும் அடிப்படையில் மோசமானதே. ஹமாஸ் விடுதலைப் புலிகள் இரண்டுமே ஒரே அடிப்படைவாத அரசியலையும் ஒரே மாதிரியான அரசியல் மற்றும் இராணுவ தந்திரோபாயங்களைக் கொண்ட அமைப்புகளே. இவற்றில் ஏற்ற இறக்கங்கள் பார்ப்பதில் அர்த்தமில்லை.

அடிப்படை அரசியல் பிரச்சினைக்கான தீர்வை கொண்டிராத இராணுவ நடவடிக்கைகளும், வெற்றிகளும் இஸ்ரேல் – இலங்கையில் மட்டுமல்ல உலகின் எப்பாகத்திலும் நிரந்தர அமைதியை ஏற்படுத்தப் போவதில்லை. இதந்தப் பாடம் இஸ்ரேலுக்கோ இலங்கைக்கோ புதிதல்ல. 2006ல் இஸ்ரேல் லெபனானில் இதைக் கற்றுக்கொண்டது. ஆனால் புரிந்து கொள்ளாமல் மீண்டும் கஸாவில் அதே தவறைச் செய்கிறது. யாழ்ப்பாணத்தை, கிழக்கை இலங்கை அரசு வெற்றி கொண்டது. ஆனால் அங்கு வன்முறைகள் தொடர்கிறது. இன்றுள்ள இராணுவச் சமநிலை மாற்றப்படாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இதில் இந்தியா உட்பட சர்வதேச அரசியல் மாற்றங்கள் அரசியல் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அது இராணுவச் சமநிலையை மாற்றமடையச் செய்யலாம். இவை தனியாக விவாதிக்கப்பட வேண்டும்.

ஹமாஸ் – விடுதலைப் புலிகள் போன்ற அடிப்படைவாத இயக்கங்கள் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்க முடியாது. ஆனால் மட்டற்ற அரச பயங்கரவாதம் அவர்களின் பயங்கரவாதத்திற்கு விளைநிலமாக உள்ளது. முன்னையதற்கு முற்றுப் புள்ளி வைத்து அடிப்படை அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் அதுவே ஹமாஸ் – புலிகளின் அடிப்படைவாத அரசியலின் முடிவின் ஆரம்பமாக இருக்கும். அடிப்படை அரசியல் மாற்றம் இல்லாத இந்த இராணுவ நடவடிக்கைகளும் வெற்றிகளும் அடிப்படைவாத பயங்கரவாத அரசியலுக்கான விளைநிலங்களாக மாறுவது தவிர்க்க முடியாது. இந்தப் அடிப்படைப் பாடத்தை திரும்பத் திரும்பக் கற்றுக்கொண்டும் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். இஸ்ரேலிய அரசு – இலங்கை அரசு – ஹமாஸ் – புலிகள் புரிந்துகொள்ள மறுக்கும் அரசியலுக்கு பாலஸ்தீனியர்களும் தமிழர்களும் செலுத்தும்விலை மிக மிக அதிகம்.

பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும், பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு : நஜிமிலாஹி

Sri lanka Mapமனித உரிமைகள் பற்றி அதிகம் பேசப்படும் காலகட்டம் இது. மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அவதானங்கள் அதிகரித்து வரும் இன்றைய நிலையில் இலங்கை மனித உரிமைகளை மீறும் விடயத்தில் உலகில் முன்னணி இடம் வகிக்கும் நாடுகள் வரிசையில் இடம்பிடித்துள்ளதை நாம் அறிவோம். இன்று மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் உச்சகட்டமாக ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’ (Responsibility to protect-R2P)  என்றொரு கருத்தாக்கம் சர்வதேச அரசியல் அறிஞர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நெருக்கடிக் குழு ( International Crisis Group) என்ற அமைப்பின் தலைவர் கரீத் இவான்ஸ் கொழும்பில் நடந்த மாநாடொன்றில் இலங்கைக்கும் இவ்வெண்ணக்கருவின் பொருத்தப்பாடு பற்றி விளக்கினார். “ ஒரு நாட்டில் வாழும் மக்களைப் பாதுகாக்க வேண்டியது அந்த நாட்டு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். தனது இயலாமை காரணமாகவோ அன்றி வெறுப்பின் காரணமாகவோ அரசாங்கம் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியது பரந்த சர்வதேச சமூகத்தின் கடமையாகிறது. இதுவே சுருக்கமாக ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’என்று சொல்லப்படுகிறது. இலங்கை இப்போது இந்த R2P நிலைமையிலேயே இருக்கிறது”. கரீத் இவான்ஸ் இங்கு மேலும் கூறுகையில் “கம்போடியா ருவாண்டா, ஸ்ரேபிரேனிகா மற்றும் கொசோவோ பாணியிலான பாரியளவிலான கொடூர நிலைமை இப்போது இங்கே காணப்படாமல் இருக்கலாம். அல்லது உடனடியாக அப்படியான ஒரு நிலமை தோன்றும் ஒரு சூழல் இப்போது இங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அத்தகைய ஒரு மோசமான நிலைமை ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை இப்போது இங்கு இருக்கிறது. எனவே அது ஒரு R2P நிலைமைதான். சர்வதேச சமூகத்தின், இந்த நிலைமை இன்னும் மோசமடைந்து செல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதையே இது வேண்டி நிற்கிறது”.  கரீத் இவான்ஸின் இந்தக் கருத்து சில சிங்கள அறிவுஜீவிகளாலும் அரசியல் வாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
 
எனினும் இலங்கையின் சமகால அரசியல் போக்குகளைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் இலங்கையை இத்தகையதொரு நிலைமைக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன என சொல்லத் தோன்றுகிறது. உடல்சார் வன்முறைகள் இல்லாவிட்டாலும் கருத்தியல்சார்  வன்முறை ரீதியாக் சிறுபான்மையோருக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் செயற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக் கெதிராக இந்தக்கருத்தியல் வன்முறையை ஜாதிக ஹெல உறுமயசார்ந்த அரசியல் அணியினர் மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களை வரலாரற்றவர்கள் வந்தேறுகுடிகள் நாட்டுரிமம் அற்றவர்கள் போன்ற  மெகா கதையாடல்களை அவிழ்த்து விடுவதன் மூலம் ஹெல உறுமய இதனைச்சாதித்து வருகிறது. வெகுசன மக்கள் பரப்பில் இது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கலாம். மஹிந்த அரசாங்கம் இந்த இனவாத சக்திகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவதாக இல்லை. இராணுவத்தளபதி கூட நாட்டுரிமம் தொடர்பில் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்தும் சிறுபான்மை நலனுக்கு எதிராகவே அமைந்திருந்தது.
 
இலங்கையின் சமகால அரசியல் முக்கிய அடையாளமாக இனவாதம் இருந்து வருவது ஒன்றும் நமக்குப்புதிதல்ல எனினும் சிறிது காலம் வெளிப்படையான இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் இங்கு ஓரளவு தணிந்திருந்தன. கிழக்கு அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கில் இராணுவ வெற்றிகள் பலவற்றை அரசாங்கம் அடைந்து வருவதையடுத்தே தற்போது இந்த இனவாத அலை மேற்கிளம்பியுள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பௌத்த பேரினவாதக் கருத்துநிலை வெகுசனப்பரப்பில் ஊட்டிவளர்க்கப்படுகிறது.

எனவே சிறுபான்மை அரசியல்-சமய தளங்களில் ஒரு பெரும் மோதலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதே இச்செயற்பாடு என எண்ணத் தோன்றுகிறது. பௌத்த அடிப்படைவாதம் முஸ்லிம்களின் சமய மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து குறுகிய மனப்பான்மையை கொண்டுள்ளன. தற்போது முஸ்லிம்களின் சில சமய நடவடிக்கைளில் தலையீடுகளைச் செய்து வருகின்றனர். முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுக்கின்றனர் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதுவெல்லாம் இப்போது செய்யப்படுவதன் நோக்கமென்ன? அரசாங்கம் இராணுவ வெற்றிகளை அடைந்து வரும் இந்நிலையிலேயே இது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கிலும் ஒரு பூரண வெற்றி கிடைத்த பின்னர் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான நேரடி மோதல்களை பௌத்த அடிப்படைவாதிகள் மேற்கொள்ளக்கூடும்.
 
அப்படியானால் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் பயங்கரமானவை என்பதையே சமகால அரசியல் நடப்புகள் காட்டுகின்றன. ஏனவே R2P போன்ற கருத்தாக்கங்கள் இலங்கைக்கும் பொருந்தி வருகிறது. இக்கருத்தாக்கத்தை மக்கள் மயப்படுத்துவதும் இலங்கைக்க்ன அதன் பொருத்தப்பாட்டை சர்வதேச சமூகத்துக்கு எடுத்தக்காட்டுவதும் சமூக சக்திகளின் தலையாயப் பொறுப்பாகும்.
 
இப்போது கருத்தியல் வடிவில் முன்வைக்கப்படும் இந்த வன்முறைகள் பின்னர் மக்களை உணர்ச்சியூட்டி சமூக மோதல்களாக திட்டமிட்டு மாற்றப்படலாம். அதன் பின் ஏற்படப்போகும் அழிவுகள் மோசமானவை. எனவே இந்த விவகாரம் சிறுபான்மை சமூக சக்திகளாலும் பெரும்பான்மையின மாற்று அரசியல் செயற்பாட்டாளர்களாலும் சிறந்தமுறையில் அணுகப்பட்டு முடிவுகள் கண்டடையப்பட வேண்டும். எனவே சிறுபான்மை சமூகங்கள் தங்களது அரசியல் களத்தை வடிவமைக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு வந்துள்ளனர். சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தை எதிர்கொள்ளத்தக்க வகையில் சிறுபான்மை அரசியல் களம் வடிவமைக்கப்பட வேண்டும். பௌத்த அடிப்படைவாதக்குழுவொன்று இப்போது பாரிய திட்டமொன்றுடன் இயங்கத் தொடங்கயுள்ளது.

நடைமுறையிலிருக்கம் இந்த அரசாங்கத்தின் துணையுடன் இலங்கையை பௌத்தமயப்படுத்தம் திட்டமொன்றை வகுத்தள்ளனர். இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்தவதில் முதலில் முன்னுள்ள தடைகளை அடையாளங்கண்டு அவைகளை அழித்தாக வேண்டும். புலிகள் இதற்குப்பாரிய தடையாக இருந்தனர் இராணுவ ரீதியான வெற்றிகள் இத்தடையையும் விரைவில் முற்றாக நீக்கிவிடுவதற்கான நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்துள்ளது.
 
அரசியலன்றி சமயமே இந்த அரசியல் பௌத்தவாதிகளின் முக்கிய இயங்கு தளமாகும். இலங்கையைப் பொறுத்தவரை இந்துக்களும் பௌத்தர்களும் சமய ரீதியாக முரண்பட்டுக் கொள்ளவில்லை. இனம் சார்ந்த அரசியல் முரண்பாடுகளே இரு சமூகங்களுக்குமிடையில் நிகழ்ந்தது. சமய அடிப்படையில் இந்து சமயமும் பௌத்தமும் இந்தியாவில் தோற்றம் பெற்றன. இப்போதுள்ள நிலையில் இந்து சமயம் பௌத்தத்தை உள்வாங்கிக் கொண்டு விட்டது. இலங்கையிலும் இவ்விரு மதங்களும் தங்களுக்கிடையில் இடையூடாட்டத்தைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்துக்களும் பௌத்தர்களும் ஒரே வணக்க ஸ்தலங்களில் வழிபடுமளவுக்கு சமய நெருக்கத்தினைக் கொண்டுள்ளனர்.

இந்நெருக்கம் அரசியல் தலையீடுகள் இல்லாவிட்டால் ஒரு ஆரோக்கியமான சமூக உறவை அவர்களுக்கிடையில் ஏற்படுத்தும். எனவே ஹெல உருமயவின் செயற்பாடுகள் தமிழ்த் தேசத்துடன் நேரடியான மோதுகை உறவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. எனினும் அரசியல் தளங்களில் ஒட்டுமொத்தச் சிறுபான்மையினரும் புறக்கணிக்கப்படுவதற்கான சூழலையே தேசிய அரசியல் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே சிங்கள தேசத்தின் அதிகார அரசியலுக்கு சவால் விடுக்கக் கூடிய சக்திகள் இல்லாத இலங்கையில் சிறுபான்மைக் காப்பீடென்பது இனி சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன்தான் சாத்தியமாகும். எனவே R2P போன்ற கருத்தாக்கங்களை உரையாடல் மயப்படுத்தி சிறுபான்மைச் சமூகங்களாகிய நமது பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும் பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு என்பதை உணர்ந்தாக வேண்டும்.   

காஸா மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல், அமெரிக்க கொடிகள் தீக்கிரை; ஐ. நா அலுவலகங்கள் மீது கல்வீச்சு

ag-gasa.jpgகாஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்தும் உலகின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஐ. நா. வின் முயற்சிகள் தோல்வியுற்று இஸ்ரேல் தரை மார்க்கமான தாக்குதலை காஸாமீது ஆரம்பித்துள்ளதால் மிக மோசமான நெருக்கடிகளுக்கு அங்குள்ள மக்கள் முகங்கொடுக்கின்றனர். பள்ளிவாசல்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் தஞ்சமடைந்த அப்பாவிகளையும் இஸ்ரேல் இராணுவம் தாக்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தாக்குதலில் அறுபது பேர் உயிரிழந்தனர். காஸாவில் இதுவரை ஐநூற்றுக்கும் மேலானோர் உயிரிழந்தும் இரண்டாயிரம் பேர் காயமடைந்துமுள்ளனர். தரைத்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் காஸாவின் சில பகுதிகளை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நான்கு பக்கங்களிலும் காஸாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேலின் தாக்குதலால் அங்கு பெரும் மனித அவலம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களே பலியாகியும், காயமடைந்துமுள்ளனர். இவ்வாரான நிலைமைக்கு காரணமான இஸ்ரேலைக் கண்டித்து அரபு நாடுகள் உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. பெருந்தொகையானோர் இதில் பங்கேற்பதால் பொலிஸார் திணறுகின்றனர். எகிப்து, லெபனான், மொரோக்கோ, நோர்வே, பிரான்ஸ், கிரேக்கம், கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. எகிப்தில் இடம்பெற்ற காஸாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் அறுபதாயிரம் பேர் கலந்து கொண்டனர். தலைநகர் ஸ்தான்புல் மக்கள் வெள்ளமாகக் காட்சியளித்ததால் அன்றைய தினம் வழமையான அலுவலகங்கள் அனைத்தும் செயலிழந்தன. அரபு ஆட்சியாளர்களையும் எகிப்து ஜனாதிபதியையும் மிக மோசமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர்.

இஸ்ரேலைக் கண்டிக்கும் மிக மோசமான வார்த்தை கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெனர்கள், போஸ்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. நோர்வே, கனடா, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பெருமளவானோர் கலந்து கொண்டனர். இவர்கள் கடும் ஆவேசத்துடன் காணப்பட்டதால் பொலிஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முடியவில்லை. நிலைமை மோசம டையவே கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள் நடந்த அனைத்து நாடுகளிலும் இஸ்ரேல், அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டன. ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா, இஸ்ரேல் தலைவர்களின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. சில நாடுகளில் இருந்த ஐ. நா. அலுவலகங்கள் அடித்து நொருக்கப்பட்டன. ஈராக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புஷ்ஷ¤க்கு காலணிகளை வீசிய ஊடகவியலாளரின் புகைப் படமும் ஏந்திச் செல்லப்பட்டது. கர்பவாவில் இது நடந்தது.

உரிமைகளைப் பாதுகாக்க நாளை தலைநகரில் எதிரணி ஆர்ப்பாட்டம்

ranil-2912.jpgயுத்தத்தையும் இராணுவ வெற்றியையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அரசாங்கம் அரசியல் நாடகமாடி வருவதாகவும் நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் இறைமை, ஜனநாயகம், மக்களின் உரிமைகள் போன்றவற்றை பாதுகாக்கும் பொருட்டு நாளை புதன்கிழமை தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார். “பொறுத்தது போதும்’ எனும் தொனிப்பொருளில் நாளைய தினம் ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட பல்வேறு எதிரணிகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெரஸ் அலுவலகத்தில் நடைபெற்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

நாட்டில் ஜனநாயகமும் இறைமையும் பாதுகாக்கப்படாமல் எவ்வளவு காலத்துக்கு யுத்தம் செய்தாலும் மக்களுக்கு நல்ல தீர்வெதுவும் கிட்டப் போவதில்லை. யுத்தத்தில் கிளிநொச்சி படையினர் வசம் வீழ்ந்தது உண்மைதான். படைவீரர்களின் அந்தத் திறமையை நாமும் சேர்ந்து பாராட்டுகின்றோம். கௌரவிக்கின்றோம். இந்த யுத்த வெற்றி இராணுவத்துக்கும் நாட்டு மக்களுக்குமே உரியதாகும். ஆனால், ராஜபக்ஷ அரசாங்கம் யுத்த வெற்றியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அதேசமயம் அரசியல் யாப்பையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. அரசு யாப்புக்கு முரணாகச் செயற்பட முடியாது. நினைத்தபடி யாப்பை மாற்றவும் முடியாது.

ஜனாதிபதியும் அவரது அரசும் அரசியல் யாப்பையும் சட்டத்தையும் மதித்துச் செயற்படத் தவறியுள்ளது. தன்னிச்சையான போக்கில் செயற்பட்டு வருகின்றது. நாட்டு மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டுள்ளனர். யுத்தத்தில் முனைப்புக்காட்டும் அரசு நாட்டு மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் நாம் மேற்கொண்ட போர் நிறுத்த உடன் படிக்கைக்கு எவரும் தவறான அர்த்தம் கற்பிக்க முடியாது. அன்றைய போர் நிறுத்தத்தின் மூலம் பல்வேறு நன்மைகளை அடைய முடிந்தது. கிழக்கை மீட்டெடுக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் அக்கால கட்டத்தில் பலமடைந்ததாகக் கூறுவதும் தவறானதே. இக்கால கட்டத்தில் எந்தவொரு நாடும் புலிகளுக்கு ஆயுதம் வழங்கவில்லை. அதற்கு நாம் இடமளிக்கவுமில்லை. அன்று போர் நிறுத்த உடன்படிக்கையை ஆதரித்தவர்களில் இன்றைய இராணுவத்தளபதியும் ஒருவர் என்பதை பகிரங்கமாகத் தெரிவிக்கின்றேன்.

அன்று நான் மக்களிடம் போர் நிறுத்தம் செய்து சமாதான முயற்சிகளை முன்னெடுக்கவே மக்களிடம் ஆணைகேட்டேன். அதன் பிரகாரமே போர்நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தேன். இடைநடுவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு எமது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. அதன் பின்னர் நடந்தவற்றுக்கு ஆட்சியிலிருக்கும் அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும். யுத்த முனையில் படைவீரர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுவதாக தகவல்கள் கிட்டியுள்ளன. படைத்தரப்பிலிருந்து நிறையத் தகவல்களைத் திரட்டியுள்ளேன். காயமடையும் படைவீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே காணப்படுகின்றன. அவர்களை போர்களத்திலிருந்து கொண்டுவர ஒரு அம்புலன்ஸ் கூட வழங்கப்படவில்லை. பஸ்களிலும், டிராக்டர் வண்டிகளிலுமே கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளன. அதற்குரிய ஆதாரம் கூட என்னிடம் இருக்கின்றது. (பஸ்ஸிலும் டிராக்டரிலும் காயமடைந்த படைவீரர்களை ஏற்றப்படும் படங்களை ரணில் ஊடகவியலாளர்களிடம் காண்பித்தார்) இவற்றைச் சுட்டிக்காட்டியதால்தான் இராணுவத்தளபதி ஆத்திரமடைந்துள்ளார்.

போர் மாயையில் மூழ்கி பொருளாதாரச் சீரழிவை மூடி மறைப்பதில் அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றது. இதற்கெதிராகவே நாளை புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மக்களையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் பிரதான நோக்கமாகும். தலைநகர் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன, மத, மொழி, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவிருக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் இணைந்து அரசுக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணி: 12 எம்.பிக்களும் இன்று ஆளும் தரப்பில் அமர்வு

parliamnet-1511.jpg
அரசாங்கத்தில் இணைந்து கொண்ட தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரும் இன்று (6) ஆளும் தரப்பு ஆசனங்களில் அமர உள்ளதாக கட்சி செயலாளர் நந்தன குணதிலக தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணி அண்மையில் அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது.

இதன்படி தமது கட்சி எம்.பிக்கள் அரச தரப்பில் அமர உள்ளதாக அவர் கூறினார். இதேவேளை தே.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரையும் ஆளும் தரப்பில் அமர வைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடையாது எனவும் சிலரை மட்டுமே ஆளும் தரப்பில் அமரவைக்க முடியும் எனவும் உதவி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நைல் இத்தவெல கூறினார். ஆளும் தரப்பில் 116 ஆசனங்களே உள்ளதெனவும் சிரேஷ்ட அடிப்படையில் உள்ளவர்கள் ஆளும் தரப்பில் உட்கார வைக்கப்படுவர் எனவும் கூறிய அவர் கூறினார்.

பொங்கல் பரிசாக யாழ். மாவட்டத்துக்கு 24 மணிநேர மின் விநியோகம்

power1.jpgயாழ். மாவட்டத்துக்கு பொங்கல் பரிசாக 24 மணித்தியால மின்சார விநியோகத்தை மின் சக்தி வள அமைச்சு வழங்கவுள்ளது. தற்போது சீன நிறுவனத்தினால் சுன்னாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “நோத்பவர்’ மின் உற்பத்தி நிலையம் தனது செயல்பாட்டை பூரணப்படுத்தியிருப்பதால் அடுத்த இருவாரங்களுக்குள் உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிறுவனம் தினமும் 35 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் திறன் கொண்டுள்ளதால், குடாநாடு முழுவதும் நாள் முழுவதும் தேவையான மின்சாரத்தை வழங்க முடியுமென யாழ். மாவட்ட மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது குடாநாட்டுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் கடந்த வருடத்துடன் முடிவடைவதால், புதிய சீன நிறுவனமே மின் உற்பத்தியை தொடரமுடியும். இதேவேளை வடபகுதிக்கு லக்ஸபான மின்சார பாதையை விஸ்தரிப்பதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக அரச கட்டுப்பாட்டுப் பகுதியாகவுள்ள மாங்குளம் வரையான விஸ்தரிப்பு வேலைகள் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ளன.