எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இரணைமடுக்குளத்தில் மீன்பிடிக்க படையினர் அனுமதி மறுப்பு.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு அத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட அனுமதி மறுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இரணைமடுக்குளத்தில் மீன்பிடித் தொழிலை தங்கள் வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு ஈடுபட்டு வந்த குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

இரணைமடுக்குளத்தின் அண்மையிலுள்ள சாந்தபுரத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்கள் இம்மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளன. இக்குடும்பங்கள் தற்போது மீண்டும் அத்தொழிலை மேற்கொள்ள படையினர் அனுமதிக்கவில்லை என சம்பந்தப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மீன்பிடி அமைச்சு அனுமதி வழங்கியுள்ள போதும் படையினர் இதற்கு அனுமதி வழங்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இத்தொழிலை நம்பி வாழ்ந்த குடும்பங்கள் தற்போது பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள அச்சமூட்டும் கொள்ளைச் சம்பவங்கள்!

யாழ்.குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் குடாநாட்டில் காணப்பட்ட கொள்ளை மற்றும், கடத்தல் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், குடாநாட்டு மக்கள் அச்சம் கொள்ளும் வகையிலான கொள்ளைச் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.

நேற்றிரவு யாழ்.சங்கானையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமும் கொள்ளையிடப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் கத்தி வெட்டுக்குள்ளாகிய சம்பவமும் அப்பகுதி மககள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கானை இழுப்பைத்தாழ் முருகமூர்த்தி ஆலய பிரதம குருக்கள் வீட்டிற்குள் கொள்iளையிட வந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அவரது மோட்டார் சைக்கிகளை அபகரித்துச் சென்றதுடன் அவரையும் அவரது இரு மகன்மார்களையும் துப்பாக்கியினால் சுட்டும், வாளால் வெட்டியும் காயப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த நித்தியானந்த குருக்களும், அவரது இரு மகன்மார்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலய குருக்கள் வவுனியாவிலிருந்து புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்து கொண்டு நேற்று சனிக்கிழமை சங்கானையிலுள்ள தங்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு 8.40 மணியளவில் அவரது வீட்டிற்கு வந்த மூவர் மோட்டார் சைக்கிளை களவாட முற்பட்டுள்ளனர் இதனைத் தடுக்க முற்பட்ட குருக்களையும் அவரது இரு மகன்மாரையும் துப்பாக்கியினால் சுட்டும் வாளால் வெட்டியும் கொள்ளையர்கள் காயப்படுத்தியுள்ளனர். சம்பவத்தில் சி.நித்தியானந்த குருக்கள் (வயது 56) அவரது மகன்மாரான ஜெகானந்தசர்மா (வயது 26) சிவானந்தசர்மா (வயது 32) ஆகியோரே கொள்ளையர்களினால் காயப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வரவு செலவுத்திட்ட மூன்றாம் நிலை வாசிப்பிலும் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர்த்துள்ளது.

நேற்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட வாக்கெடுப்பின்பொது தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பில் கலந்து கொண்டு எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர்ப்பதற்காக வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று பாராளுமன்றில் நடைபெற்ற 2011ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்காமல் வாக்களிப்பில் கலந்து கொள்வதை தவிர்த்தது. தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும், அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என்கிற காரணத்தினால் ஓரு நல்லெண்ணத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் நடவடிக்கையாக வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொண்டதாக கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. அதே வேளை இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் புனர்வாழ்வு மற்றும், அபிவிருத்திப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமான நிதி பாதுகாப்பிற்கு ஒதக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது நிலை வாக்கெடுப்பின் போது கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்த்தோ அல்லது ஆதரவாகவோ வாக்களிக்கவில்லை. இந்நிலையில் 116 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் நிறைவேறியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தன.

வடபகுதி விவசாயிகளுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் இன்னமும் பயனாளிகளிடம் சேரவில்லை.

வடபகுதி விவசாயிகளுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் இது வரையும் பயனாளிகளுக்கு கைளிக்கப்படாமலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி விவசாயிகளுக்கென 500 உழவு இயந்திரங்கைளை இந்திய அரசு வழங்கியிருந்தது.

கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா யாழ்.பொது நூலக முன்றலில் வைத்து இவற்றை வட மாகாண ஆளுநரிடம் கையளித்திருந்தார். இதனை கைளித்து 15 நாட்களாகியும் பயனாளிகளிடம் இவற்றைக் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

வடமாராட்சியில் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்காதவர்கள் எழுத்து மூலம் சாட்சியங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிப்பு.

கடந்த 13ஆம் திகதி வடமராட்சிப் பிரதேசத்தில் இடம்பெற்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக நடைபெற்ற சாட்சியங்களில் கலந்து கொள்ளாதவர்கள் தங்களது சட்சியங்களை எழுத்து மூலமாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் குறிப்பிட்ட அமர்வில் சாட்சியமளிக்க முடியாமல் போனவர்கள் தங்களது சாட்சியங்களை எழுத்து மூலமாக தங்கள் பிரிவின் கிராமசேவையாளர் மூலம் உறுதிப்படுத்தி பிரதேசச் செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லா இசைப்பிரியாக்கள் பற்றிய உண்மையும் வெளிவரவேண்டும்! தண்டிப்பதற்காக அல்ல! உண்மையை அறிந்து அமைதிகொள்ள! : வாசுதேவன்

Isaipiriya_LTTE_Jounalistஅந்த அழகிய கண்கள் இன்னமும் என் மனதை உறுத்துகிறது! உன் மரணம் என்னை உறைய வைத்துவிட்டது! முன்பொருமுறை உன்னை நிதர்சனம் தொலக்காட்சியில் உன் அழகைப்பார்த்து பார்த்து என் நண்பனுக்கு மணிக்குட்டி என என் ஆண்மைக்கே உரிய வக்கிர புத்தியுடன் கூறியது இன்னமும் நினைவிருக்கிறது! ஆனால் நீ இன்று இல்லை! நீ ஏன் கொல்லப்பட்டாயோ தெரியவில்லை. ஆனால் நீ கொல்லப்பட்டு ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில் உன் சடலத்தின் புகைப்படங்களை பார்க்கிறோம்! உன் சடலத்தை இணையங்களில் புலிவியாபாரிகள் ஏலம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்! உற்றுப் பார்க்கிறேன். ஆம் நீ சுடப்பட்டுதான் இறந்திருக்கிறாய்! ஆனால்.. ஆனால்… அப்போது என் மனம் சஞ்சலப்படுகிறது நீ எப்படி கொல்லப்பட்டாய் என்பது புலனாகிறது.

ஆனால் 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30திகதி புலிகளால் கைது செய்யப்பட்ட செல்வி எப்படி கொல்லப்பட்டிருப்பாள் என்ற கேள்வி என்னை இப்போ உறுத்தத் தொடங்கிறது! அகில உலக பென் விருது பெற்ற ஒரு பெண் கவி! இவளைக் கடத்திய புலிகள் இவளை சுட்டுக் கொன்றிருப்பாரகளா? அடித்துக் கொன்றிருப்பாரகளா? அல்லது உயிருடன் தான் புதைத்திருப்பார்களா? 1991இல் மோபைல் கமரா கிடையாததால் தான் அவளின் படங்களும் இணையத்தில் உலா வரவில்லையோ என்னவோ! யாரும் அதைப்பற்றி கதைப்பதும் கிடையாது! இன்று மனித உரிமைகள் பற்றி கூவுபவர்கள் தயவு செய்து சொல்லுங்கள் செல்வியை எப்படிக் கொன்றீர்கள்? ரவைகள் வீணாகிவிடும் என்று உயிருடன் தான் புதைத்திருந்தாலும் பரவாயில்லை! தயவு செய்து கூறுங்கள்! அவளின் சொந்தங்கள் உங்களை இன்னமும் மன்னிக்க தயாராவே உள்ளார்கள்!

நேற்று முன்தினம் மீளவும் இசைப்பிரியா வருகிறாள். இந்த முறை சனல் 4 தொலைக்காட்சியில் வருகிறாள். அவளின் தோழி, கொல்லப்பட்டது இசைப்பிரியா தான் என உறுதியளித்து விட்டு அவள் ஒரு போராளி அல்ல, ஒரு ஊடகவியலாளினி மற்றும் அவள் ஒரு சிறந்த கலைஞி என்று கூறுகிறாள். எனக்கு கோபம் மீளவும் வருகிறது! ஆயுதம் தரிக்காது ஒரு பெண்! என்னைப் போன்ற ஒரு கலைஞி அவளை எப்படி இப்படிக் குரூரமாக கொலை செய்யலாம்? ஆனால் மீளவும் என்மனம் எங்கோ போகிறது! இன்று தொலைக்காட்சியில் பார்த்த அந்தக் குரூரத்தை நேரில் பார்த்த அந்தக் கணங்களை நோக்கி என் மனம் மீளவும் போய்விடுகிறது! செப்டெம்பர் 21, 1989 அன்று மதியம் திருநெல்வேலியில் நண்பன் வீட்டில் இருந்து மானிப்பாய் செல்ல சைக்கிளில் போகையில் பட், பட் என்று துப்பாக்கி சத்தம். சனங்கள் அல்லோல கல்லோலப்பட்டு ஓடுகிறார்கள்! ஒரு பெட்டையை யாரோ மண்டையில் போட்டு விட்டார்கள்! நான் சைக்கிளில் அந்த இடத்தை கடந்து தான் போக வேண்டும்! ஒன்றரை ஆண்டுகள் யாழ் வைத்தியசாலையில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் அவதியுற்றதாலோ என்னவோ இரத்தம் என்றால் எனக்கு மயக்கம் வரும். இருந்தாலும் விரைவாக நான் அந்த இரத்தம் சொட்டும் உடலைக் கடந்து தான் போக வேண்டும்!

ஆமி வரமுன் போக வேண்டும். இதயம் வேகமாக துடிக்க எழுந்து நின்று சைக்கிளை மிதிக்கிறேன். சடலத்தை கடக்கும் போது திரும்பி பார்க்கிறேன்! இரத்த வெள்ளத்தில் ஒரு பெண்! அந்த சிவப்பு ரத்தம் என் தலையை கிறுகிறுக்க வைக்கிறது, மயக்கம் வருவது போல் உள்ளது, இருந்தும் வேகமாக சைக்கிளை மிதிக்கிறேன், சிறிது தூரம் போனதும் திரும்பி பார்க்கிறேன், எதுவும் தெரியவில்லை. ஆனால் அந்த பெண்ணில் இருந்த வடிந்த குருதிச் சிவப்பு மட்டும் மின்னல்போல் கண்களுக்கள் பளிச்சிடுகிறது. அவள் இறந்து விட்டாளா? இல்லையா கேள்விகள் வர கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் விடுப்பறிய சைக்கிளை நிறுத்தினேன்! ஆரோ காட்டிக் கொடுக்கிறவளாம் என்றார் ஒருவர்! இல்லை அவள் புலி என்றார் இன்னொருவர்! பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அது ஒரு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் ராஜனி திரணகம என்று! அவளும் ஒரு எழுத்தாளி! கலைஞி எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் காக்கும் ஒரு மருத்துவ கலாமணி! தெருவேராத்தில் ஒரு தெரு நாயை கூட இப்படி சுட்டுக் கொன்றிருக்க மாட்டார்கள்! அவளை யார் கொன்றார்கள் என்ற விவாதமே இன்னும் தொடர்கிறது! தயவு செய்து யாராவது கூறுங்கள்! யார் கொன்றீர்கள் ஏன் கொன்றீர்கள்? விசாரணை தான் வேண்டாம்! ஒரு உண்மையை கூறும் கவுன்சிலாவது அமைத்து நடந்த உண்மைகளை கூறுங்கள்!

1984 என்று நினைக்கிறேன்! யாழ் நவாலி கல்லுண்டாய் வெளிக்கு அருகில் ஒரு புதை குழியிலிருந்த இரு சடலங்கள் அந்த பகுதி மக்களால் தோண்டி எடுக்கப்படுகிறது! ஒரு ஆண். ஒரு பெண்! அந்த பெண்ணும் கிட்டத்தட்ட இசைப்பிரியா போன்றே தோற்றம் கொண்டவள்! ஓழுங்காக புதைக்காமையல் துர்நாற்றம் வீச சந்தேகத்தில் மக்கள் தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்ட அந்த சடலங்கள் அடையாளம் காணாமலே புதைக்கப்பட்டன. அந்த காலப் பகுதியில் இராணுவம் நிலை கொண்டிருக்கவில்லை. இயக்கங்களே அந்த பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இவைபோல் இன்னும் எத்தனை புதைகுழிகளில் எத்தனை இசைப்பிரியாக்கள் உறங்குகிறார்களோ தெரியாது! இந்த உண்மைகளை கூற யாராவது முன்வருவார்களா?

விடுதலைப் புலிகளின் புலேந்திரன் அம்மான் திருமலையில் இருந்த போது சிங்கள் குடியேற்றங்கள் அடிக்கடி தாக்கப்படும்! அங்கு பெண்கள் குழந்தைகள் என்று பாராது பல்வேறு கொலைகள் அன்று நடைபெற்றது! அந்த கொலைகளை நடாத்திய ஒரு நபர் யாழ் வந்திருந்தபோது தங்கள் வீர பிரதாபங்களை கதைகதையாக சொல்வார்கள். அதில் கேட்கவே மனம் பதைபதைக்கும் ஒரு விடயம். பெண்களை கொல்கையில் அவர்கள் கால்களுக்கிடையில் வாளை எப்படி சொருகினார்கள் என்று நேர்முக வர்ணனை செய்வது! அழகான அந்த பெண்களின் அழகினை அவர்கள் அன்று வர்ணித்தபோது அவர்களும் இந்த இசைப்பிரியா போல் அழகாக இருந்திருப்பார்கள் என்ற கற்பனையே என்முன் இன்று வருகிறது! ஆனால் இதைப்பற்றி இப்போது கதைத்தால், ‘அது பழைய கதை. செய்தவர்கள் எல்லாம் செத்து விட்டார்கள். அதைக் கிளறாது வன்னயில் நடந்த கொடுமைக்கு நியாயம் வேணும்’ என்று கூறுகிறார்கள்! ஆனால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறரர்கள். அவர்களிற்கும் அந்த பெண்கள், இசைப்பிரியாகள் தானே! செய்தவர்கள் பலர் இன்றும் உயிருடன் உள்ளார்கள்! செய்தவர்களிற்கு தண்டணைதான் வேண்டாம், குறைந்தபட்சம் நடந்த உண்மைகளாவது தெரிய வேண்டாமா? இனிவரும் காலங்களில் தமிழ் தரப்பு இப்படிச் செய்யாது என்பதற்கு இந்த உண்மைகள் உத்தரவாதம் தராதா?

வன்னி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டமை மறுக்க முடியதா உண்மைகள்! புலிகள் இராணுவம் இரண்டுமே மனித உரிமைகளை மீறியுள்ளனர். வெறுமனே இராணுவத்தின் மனித உரிமைகளை சுட்டிக்காட்டும் தமிழ் அமைப்புகள் புலிகளால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மற்றும் போர்க்குற்றச் சாட்டுகளை மறுதலிப்பது தான் மிகவும் மோசமான அராஜகம்! இன்று இராணுவத்தில் உள்ள சில அதிகாரிகளே தமது தரப்பு பிழை விட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களே இந்த ஆதரங்களை கசியவும் விட்டுள்ளார்கள். ஆனால் இசைப்பிரியாக்களை வைத்து இன்னமும் புலிகளை புனிதர்களாக காட்டுவதில் முழுக்கவனம் செலுத்துவதுடன் தங்கள் சொந்த இலாபங்களிற்காகவே இன்று இசைப்பிரியா போன்ற பெண்களின் மரணத்தை காவித்திரிகிறார்கள்! இந்த இசைப்பிரியாவையும் இன்னும் நூற்றுக்கணக்கான இசைப்பிரியாக்களையும் இந்த புலம்பெயர் சமூகம் நினைத்திருந்தால் அன்று காப்பாற்றியிருக்க முடியம்! புலிகளை உசுப்பேத்துவதை நிறுத்தி மக்களை கேடயங்களை பாவிப்பதை நிறுத்தி புலிகளை ஆயுதங்களை கீழே போடவைத்திருந்தால் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கப்பட்ட மக்களை விடுவிக்கும்படி கோரியிருந்தால் இந்த இசைப்பிரியா காப்பற்றப்பட்டிருப்பாளோ என்னவோ?

எல்லாம் நடந்து முடிந்து ஒன்றரை ஆண்டுகள் போன பின்னர் பழிக்கு பழி ரத்தத்திற்கு ரத்தம் என்று புலிக்கொடியுடன் இன்னமும் ஒரு கூட்டம் ஓடித்திரிகிறது! கேட்டால் வன்னி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டுமாம்! மகிந்தாவையும் அவர் கூட்டாளிகளையும் கூண்டில் ஏற்ற என்று புலம்பெயர் சமூகத்திடம் ஆயிரக்கணக்கில் பெற்ற காசை வங்கியில் வைப்பிலிட்டு விட்டு ஒரு 3000 பவுண்களுடன் இறுதி நேரத்தில் கிழக்கு லண்டன் இமிக்கிறேசன் லோயரை பிடித்த இந்த கூட்டமா வன்னியில் இறந்த மக்களிற்கு நீதி பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? நீங்கள் அவர்களிற்கு நீதி வாங்கி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை நிம்மதியாக இனியாவது இருக்கவிடுங்கள்! இதுபற்றி அங்குள்ள மக்கள் மிகத்தெளிவாகவே இருக்கிறார்கள்! புலிகளால் நாம் பட்டதுபோதும்! புலம்பெயர் மக்கள் புலிப்பூச்சாண்டி காட்ட காட்ட இங்குதான் நாம் வேதனைப்படுகிறோம். ஏற்கனவே வெள்ளம் வந்து தகர குடியிருப்புகளை அள்ளிச்சென்ற நிலையிலும் இன்னமும் அதைப்பற்றி அக்கறை காட்டாத புலம்பெயர் தமிழ் சமூகம் மாவீர்தின வெற்றி, மகிந்தா வெற்றியென்று தம் ஈகோக்களை திருப்திப்படுத்தியபடி உள்ளனர். இவர்களா அந்த மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள். இவர்களின் ஒரே கவலை வன்னி மக்களை இன்னமும் இராணுவம் கொல்லவில்லையே என்பது தான்! இன்னமும் இசைப்பிரியாக்கள் இறக்கிறார்கள் இல்லை என்பதே இவர்களின் கவலை!

கடந்த சில வாரங்களாக தமிழ் இணையங்கள், தொலைக்காட்சிகளை ஆக்கிரமிக்கும் இறந்த பிணங்களின் உடலங்களில் வக்கிரமானவை பெண்கள் பற்றிய படங்கள்! எமது கலாச்சரம் பற்றி தம்பட்டம் அடிக்கும் தமிழர்கள் ஒரு வக்கிர புத்தியுடன் இணைக்கும் இந்த படங்கள் இறந்த அந்த பெண்களை இன்னமும் மானபங்கப்படுத்துகிறது! போர் குற்றம் என்று குற்றம் சுமத்துபவர்கள் இன்று மனித நேயத்தை தொலைத்து விட்டு பிணங்களை வைத்து வியாபாரமும் விபச்சாரமும் செய்கிறார்கள்! மேற்குலகில் பல பெண்கள் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட போதும் அவர்களின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளிவிடுவதே கிடையாது! விசாரணைக்கு அவை சம்பந்தபட்டவர்களிடம் கொடுக்கப்படுவதுடன் அந்தப் படங்கள் வெளிவருவதே கிடையாது! ஆனால் எம்மவர்கள் மிகவும் கேவலமாக இந்த பெண்களின் படங்களை தங்கள் சுயநல விளம்பரங்களிற்கும் பணத்திற்கும் இன்று விற்பதை நான் விபச்சாரம் என்று கூறாது என்னவென்று கூறுவது!

நடந்து முடிந்த யுத்தம் பல உண்மைகளை மறைத்து நிற்கிறது! இங்கே குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவது தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது! அனைவரும் ஏதோவகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாறாக மேலும் குரோதங்களை வளர்க்கும். உண்மைகள் வெளிவரவேண்டும்! குற்றம் இழைத்தவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்! பொது மன்னிப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டு மீளவும் தவறுகள் நடைபெறாத வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்! திரும்ப திரும்ப இசைப்பிரியாக்களை தொலைக்காட்சியிலும் வானொலியிலும் கொல்வது அவர்களின் ஆத்மாக்களையும் கொன்று புதைப்பதற்கு ஒப்பானது!

மனிதஉரிமைகள் தினமான இன்று சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தினமான இன்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 800 தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு உண்ணாவிரத்தில் ஈடுபடப்போவதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் இல்லையேல் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என இக்கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனித உரிமைகள் தினமான இன்று சர்வதேசத்தின் கவனத்தைப் பெறும் நோக்கில் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இக்கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக எதுவித விசாரணைகளும் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இக்கைதிகள் தம்மீதான வழக்கு விசாரணகள் நடைபெற வேண்டும் அல்லது, விடுதலை செய்யப்பட வேண்டும் என்ககோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர். அரசியல்வாதிகளிடமும் வேண்டுகோள் விடுத்து வந்துள்ளனர். இவற்றிக்கு சாதகமாக எதுவும் நடைபெறவில்லை. எனவே மனித உரிமைகள் தினமான இன்று உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கவனயீர்ப்பினைப் பெறும் நோக்கில் அடையாள உண்ணாவிரதத்திலீடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இலத்திரனியல் நுட்ப முறையிலான அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

மோசடி செய்யப்படாத வகையில் நவீன இலத்திரனியல் நுட்பத்துடனான அடையாள அட்டைகள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜகத் பீ.விஜேவீர தெரிவித்துள்ளார். பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இந்த அடையாள அட்டைகள் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நபரின் தகவல்கள் நுண்இலத்தரனியல் பொறிமுறையில் பதிவு செய்யப்படுவதால் இதில் மோசடிகள் மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே அடையாள அட்டைகள் வைத்திருப்போருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை தொடர்பான மோசடிகள், போலியான அடையாள அட்டைகளை தயாரிக்கும் முயற்சிகள் யாவும் இப்புதிய அடையாள அட்டை நடைமுறைக்கு வரும்போது அற்றுப்போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day: புன்னியாமீன்.

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும்.

1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் “மனித உரிமை ஆணைக் குழு” உதயமாகியது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இம் மனித உரிமை ஆணைக் குழு, தனது முதல் வேலைத்திட்டமாக ‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் (Universal Declaration of Human Rights) பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

டிசம்பர் 10, 1948-ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள “பலேடு சாயிலோற்’ என்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

இந்த புனித நாள் 1950 -ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி “சர்வதேச மனித உரிமைகள் தினமாக” (International Human Rights Day) கொண்டாடப்பட்டு வருகிறது. “சகல மனிதப் பிரஜைகளும் சமத்துவமானதும், விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுடனேயே பிறக்கின்றனர்” என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும், செயற்திட்டங்களும் இத்தினத்தில் முழு உலகிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று மனித உரிமைகளைப் பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது.

இந் நிகழ்வுகளின் பிரதான நிகழ்ச்சி இத்தினத்தில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும். அதே நேரத்தில் உலகளாவிய ரீதியில் அரசுகளும், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளையொட்டி பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கென தொனிப் பொருள் ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டுக்கான தொனிப்பொருள் “எங்கள் எல்லோருக்குமான கௌரவமும் நீதியும்’ (dignity and justice for all of us) என்பதாகும்.
1776 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனத்தின், ‘எல்லாப் பிரஜைகளும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்றன அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகளாகும்.” என கூறப்பட்டிருந்தது. எனவே மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது.

மனித உரிமைகளின் சுருக்க வரலாறு.

மனித உரிமையின் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கொண்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் இது விரிவு படுத்தப்பட்டுள்ளது. கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட ‘நோக்கப் பிரகடனமும்,’ கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியாவின் அசோகப் பேரரசனால் வெளியிட்ட ‘அசோகனின் ஆணையும்” கிபி 622 இல் முகமது நபி அவர்களால் உருவாக்கப்பட்ட “மதீனாவின் அரசியல் சட்டமும்” விதந்து கூறக்கூடியவை. ஆங்கிலச் சட்ட வரலாற்றில் 1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்” (Magna Carta Libertatum) முக்கியத்துவம் பெறுகின்றது.

மறுமலர்ச்சிக் காலத்தில் 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட “கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்” (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதல் பதிவு எனக் கூறப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘பிரித்தானிய உரிமைகள் சட்டமூலமும்”, 1789 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரான்சின் தேசியசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மனிதர்களுக்கும், குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கையும்”. 1776 ம்ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை அடுத்து முன்வைக்கப்பட்ட ‘ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கையும்”, 1789ம்ஆண்டு பிரான்ஸியப் புரட்சியை அடுத்து ‘மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள்” அறிக்கையும். முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் “லீபர் நெறிகள்” 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.

முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வொர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் “சர்வதேச சங்கம்” உருவானது. இச்சங்கம், மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் நடைபெறக்கூடாது, என்பதைக் குறிக்கோலாகக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில் ஆயுதக் களைவு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல், நாடுகளிடையேயான முரண்பாடுகளை கலந்துபேசுதல், இராஜதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இம்முயற்சிகள் பூரண வெற்றியினைத் தரவில்லை. ஆனாலும், மனித உரிமைகளுடன் இத்திட்டங்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவை இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்

1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘சர்வதேச மனித உரிமை சாசனம்” 30 உறுப்புரைகளைக் கொண்டது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மனித உரிமைகள் பற்றிய உறுப்புரைகளை ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனத்துக்கு இசைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வுறுப்புரைகள் தற்போது விரிவான செயற்பாடுகளை மையமாகக் கொண்டு காலத்துக்குக் காலம் விரிவுபடுத்தப்பட்டதாக பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளன. உதாரணமாக 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டுப் பிரகடனத்தில் “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் எனக் கூறப்படுகின்றது.

மனித உரிமை பிரகடனம் முப்பது உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. இரண்டாவது உறுப்புரை இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. உறுப்புரை மூன்றிலிருந்து இருபத்தொன்று (3 – 21) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தியேழு வரையானவை (22 – 27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இறுதி சரத்துக்களான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச் சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.

சர்வதேச மனித உரிமை சாசனம் 30 உறுப்புரைகளும் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

உறுப்புரை 1: சமத்துவ உரிமை – சகல மனிதர்களும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

உறுப்புரை 2: ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை – இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன எத்தகைய வேறுபாடுகளுமின்றி இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும், சுதந்திரங்களுக்கும் அனைவரும் உரித்துடையவராவர். அதாவது நிறத்தில், பாலினத்தில், மதத்தில், மொழியில் வேறுபாடு இருப்பினும் அனைவரும் சமமே!

உறுப்புரை 3: வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆளெவருக்குமான உரிமை. அதாவது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு

உறுப்புரை 4: அடிமை நிலை, அடிமை வியாபாரம் அவற்றில் எல்லா வகையிலும் விடுபடுவதற்கான சுதந்திரம். அதாவது உங்களை அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை. அதேபோல ‘யாரையும் அடிமையாக நடத்த உங்களுக்கும் உரிமை இல்லை”.

உறுப்புரை 5: சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

உறுப்புரை 6: சட்டத்தின் முன் ஆளாக கணிக்கப்படுத்துவதற்கான உரிமை
. அதாவது சட்டத்தால் சமமாக நடத்தபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு

உறுப்புரை 7: சட்டத்தின் முன் அனைவரும் சமன். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள்.

உறுப்புரை 8: ஒவ்வொரு நாடுகளிலும் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களுக்காக தகுதியான நியாய சபை முன் பரிகாரம் பெறுவதற்கான உரிமை. அதாவது ஒருவரது உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

உறுப்புரை 9: சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது. அதாவது நீதிக்கு புறம்பாக உங்களை காவலில் வைக்கவோ, உங்கள் தேசத்தில் இருந்து நாடு கடத்தவோ உரிமை இல்லை.

உறுப்புரை 10: நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை

உறுப்புரை 11:
1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை சுத்தவாளியென ஊகிக்கப்படும் உரிமை. அவ்விளக்கத்தில் அவர்களது எதிர்வாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும்.

2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லது செய்யாமை புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறொன்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.

உறுப்புரை 12: அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு, அல்லது தொடர்பாடல்களில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம். அனைவருக்கும் நமது அந்தரங்கத்தை காத்துக்கொள்ள உரிமை உண்டு.

உறுப்புரை 13: ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கான, நாட்டை விட்டு வெளியேற, திரும்பி வருவதற்கான உரிமை

உறுப்புரை 14: ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு

(1.) வேறு நாடுகளுக்குச் செல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வழங்குவதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

(2.) அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும், நெறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.

உறுப்புரை 15:
(1.) ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை உண்டு.

(2.) எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.

உறுப்புரை 16: விரும்பிய ஒருவரை திருமணம் செய்துகொள்ள குடும்ப பாதுகாப்பிற்கான உரிமை

(1.) பராய வயதையடைந்த ஆண்களும், பெண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காரணமாக கட்டுப்பாடெதுவுமின்றி திருமணம் செய்வதற்கும், ஒரு குடு்ம்பத்தை கட்டியெழுப்புவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் செய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் கலைக்கப்படும் பொழுதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.
(2.) திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்.

(3.) குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.

உறுப்புரை 17: சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை
(1.) தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
(2.) எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ச மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது.

உறுப்புரை 18: மதம் மற்றும் நம்பிக்கையை பின்பற்றுவதற்கான சுதந்திரம் சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயிலல், வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேரொருவருடன் கூடியும், பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.

உறுப்புரை 19: கருத்து, தகவலிற்கான சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலையீடின்றிக் கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கும், எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகளைப் பொருட்படுத்தாமலும், தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.

உறுப்புரை 20: எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ள, சங்கத்தில் உறுபினராக உரிமை உண்டு
(1.) சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு.

(2.) ஒரு சங்கத்தில் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.

உறுப்புரை 21: அரசியல் உரிமை – அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபற்றவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை
(1.) ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு.
(2.) ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

(3.) மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் எல்லையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பானது, குறித்த காலத்தில் நீதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 22: சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கூடிய உரிமை – .

உறுப்புரை 23: தொழில் புரியவும், ஊதியத்தைப் பெறுவதற்குமான உரிமை

(1.) ஒவ்வொருவரும் தொழில் செய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர்.

(2.) ஒவ்வொருவரும் வேறுபாடெதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவராவர்.

(3.) வேலை செய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும்.
(4.) ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.
உறுப்புரை 24 இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை – இளைப்பாறுவதற்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரும் உரிமையுடையவர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான விடுமுறைகள் அடங்கும்.

உறுப்புரை 25: நல்ல வாழ்க்கை தரத்திற்கான உரிமை
(1.) ஒவ்வொருவரும் உணவு, உடை, உரையுள், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர்.
(2.) தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அவை திருமண உறவிற் பிறந்தவையாயினுஞ்சரி அத்தகைய உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பினைத் அனுபவிக்கும் உரிமையுடையன.

உறுப்புரை 26: கல்விக்கான உரிமை
(1.) ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கன வாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்.

(2.) கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 27: தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அறிவியல் வளர்சியை பகிர்ந்து கொள்ளும் உரிமை –
(1.) சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
(2.) அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தா என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.

உறுப்புரை 28: மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக முறைமையில் பங்குபற்றும் உரிமை இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட்டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.

உறுப்புரை 29: ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்
(1.) எந்த ஒரு சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகவிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
(2.) ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும்.
(3.) இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.

உறுப்புரை 30: இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் நீக்கும் உரிமை கிடையாது இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது செயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.

மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும்.

தற்கால உலக அரசியல் அரங்கில் குடியியல், அரசியல் உரிமைகள் சம்பந்தமாகவோ, பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் சம்பந்தமாகவோ, எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும், மனித உரிமைகள் என்பதே பிரதான அம்சமாகத் திகழ்கிறது. மனித உரிமைகள் பற்றிய இந்தப் புதிய அக்கறை எழுச்சிபெற்ற மானுடத்தின் வெளிப்பாடு என்பது தெளிவானதே.

இவ்விடத்தில் 1998 மார்ச் 18ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54வது அமர்வில் அப்போதைய செயலாளர் நாயகம் கோபி அன்னான் நிகழ்த்திய உரை மனித உரிமைகள் தொடர்பான புதிய விளக்கத்தை வழங்குகின்றது. அதாவது ‘ சகல மக்களும் வன்முறை, பட்டினி, நோய், சித்திரவதை, பாகுபாடு ஆகிய பயங்கரவாதப்பிடியிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக வாழவே விரும்புகின்றனர்.”

1979 இலிருந்து பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிப்புக்குட்படத் தொடங்கின. 1995 இல் எல் சல்வடோர், கம்பொடியா, ஹெயிட்டி, ருவண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் ஐ. நா தன் கவனத்தைச் செலுத்தியது. 1993 ஜுன் 14 இல் வியட்னாமில் நடந்த 2வது மனித உரிமைகள் மகாநாடு பெண்கள் உரிமைகள் பற்றி கவனம் செலுத்தியது. இலங்கையில் யுத்த நிலையின் போது உரிமை மீறல்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்தது.

இலங்கை இப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சரத்தில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள்ளார்கள்? உண்மையை கூறுவதானால் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை சரத்துக்களையும் இலங்கை மீறியுள்ளதற்கான ஆதாரங்கள் பலதை உதாரணப்படுத்தலாம்.

மனித உரிமைகள் என்பது சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமூக சமத்துவத்துக்கும், பூரணத்துவம் வாய்ந்த ஊடகமாக உள்ளது. ஐ. நா. தாபனம இந்த மனித உரிமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும், பாதுகாக்கவும் ஒரு மையமாகச் செயல்படுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையிலே குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக் கூறும் இருபத்தியோராம் உறுப்புரையை மீறியது. அதாவது மலையகத் தோட்டத் தொழிளாலர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு சிங்களச்சட்டம் மூலம் சரத்து 2 உம் 3 உம் மீறப்பட்டன. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் மூலம் சாரம் 3, 5, 12, 17 ஆகியவை மீறப்பட்டுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலம் சாரம் 4, 15, 23 ஆகியவை மீறப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப்பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சாரம் 26 மீறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம் மூலம் சரத்துக்கள் 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 மீறப்பட்டுள்ளன. இவ்வாறு அடிக்கிக் கொண்டு போகலாம். இந்நிலை யுத்தகாலத்தில் மிகைத்திருந்தது.

இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப்படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் அசமத்துவ நிலை, எதேச்சையாகக் கைது செய்யப்படல், காணாமற் போதல், தடுப்புக்காவல் தண்டனைகள், சிறைக்குள் படுகொலை, ஆகிய மனித உரிமை மீறல்கள் இனிமேலும் நடைபெறாதவாறு ஐ.நா சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர் நாடி, அது சகலராலும் மதிக்கப்பட அது பற்றிய விழிப்புணர்வு தேவை.

http://puniyameen.blogspot.com/2010/12/international-human-rights-day.html

கல்முனை மின்சாரஅதியட்சகர் சடலமாக மீட்பு.

கல்முனை மின்சார சபைக்கட்டத்தில் தூக்கிடப்பட்ட நிலையில் மின் அதியட்சகரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபையின் கல்முனைக்கிளையில் கடமையாற்றி வந்த சிரேஸ்ட மின்அத்தியட்சகரான பிரேமதாச (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைப்பட்டுள்ள நிலையில் இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.