எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு- இருதரப்பு பேச்சு இன்று ஆரம்பம்

sr.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி நேற்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார். நேற்று பிற்பகல் 4.30 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள சர்தாரிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

எதிர்வரும் 30ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்தாரி, இலங்கை அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார். இவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி. மு. ஜயரட்ன, அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் 40 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவினரும் வருகை தந்துள்ளனர். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரோமி, பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார், பாக். வர்த்தக சம்மேளனத் தலைவர் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் ஆகியோர் இதில் அடங்குவர்.

படைத் தலைமையகம் உள்ள இடங்களில் உல்லாச ஹோட்டல்கள் – கோட்டாபய ராஜபக்ஷ

சுற்றுலாக் கைத்தொழில் துறையில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழும் சீனாவின் சங்கிரில்லா நிறுவனம் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட முன்வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்த முதலீடு தொடர்பான உடன்படிக்கை நேற்று முன்தினம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்ட தாகவும் கூறினார்.

இந்த முதலீட்டின் மூலம் இராணுவ தலைமையகம் அமைவுற்றிருக்கும் பிரதேசம் அடங்கலான பகுதியில் உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட்டார். இராணுவ தலைமையகம் உள்ளிட்ட முப்படை தலைமையகங்களும் பத்தர முல்லையிலுள்ள 55 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

களுத்துறை தீயணைப்பு மற்றும் அனர்த்த சேவைப் பிரிவு, களுத்துறை நகர சபையின் இணையதள அங்குரார்ப்பண வைபவம் என்பன பிரதியமைச்சர் ரோகித அபேகுண வர்தன தலைமையில் களுத்துறை நகர மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உடன் சந்திப்பு.

Wikramabahu Karunaratnaலண்டன் வந்துள்ள இலங்கையின் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண உடனான சந்திப்பு நவம்பர் 28 2010ல் வோல்தம்ஸ்ரோவில் இடம்பெற உள்ளது. இச்சந்திப்பை தேசம், ASATiC என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. மே 18 2009ற்குப் பின்னான அரசியல் நிலைமைகள் இடதுசாரி முன்னணி தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்துவந்த போதும் தொடர்ச்சியாக தமிழ் தேசியத் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டு வந்தமை இடதுசாரி முன்னணியின் எதிர்காலச் செயற்பாடுகள் பற்றி இச்சந்திப்பில் கலந்துரையாடப்படும்.

நடந்து முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான இடதுசாரி முன்னணியை ஆதரிக்குமாறு மே 18 இயக்கம் மற்றும் முற்போக்கு சக்திகள் கேட்டுக்கொண்டிருந்தன. (இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!) இது தொடர்பாக இடதுசாரி முன்னணியுடன் இணைந்துகொண்ட எம் கெ சிவாஜிலிங்கம் உடனான சந்திப்பினையும் தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்தது. (ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் இலண்டன் வந்தடைந்தார்! இன்று கிழக்கு லண்டனில் பொதுக்கூட்டம்!! – கேள்விநேரம்)

ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் லண்டன் கூட்டாளிகளும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஆதரித்து இருந்தனர். தங்கள் அரசியல் முடிவுகள் மண்கவ்விய நிலையில் முதற்தடவையாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரிஎப் இடதுசாரி முன்னணித் தலைவருடனான வெளிப்படையான சந்திப்பை Nov 25 2010 ஏற்பாடு செய்திருந்தது. (கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் மக்களுடன் சந்திப்பு – பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு)

தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பலமாக இருந்த காலகட்டத்தில் விக்கிரமபாகு கருணாரட்ணவை வன்னிக்கு அழைத்து மாவீரர் நாளில் உரையாற்ற வைப்பதன் மூலம் தமிழ் – சிங்கள மக்களிடையே அரசியல் ரிதியான புரிந்தணர்வுக்கு அது வழியேற்படுத்தும் என்பதையும் தேசம் சஞ்சிகைகயில் சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் முள்ளிவாய்க்கால் வரை பொறுத்திருந்து ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் கூட அரசியல் ஞானம் பெறாமல் கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரத்திற்கு புறப்பட்டு உள்ளது தமிழ் தேசியம்.

வோல்தம்ஸ்ரோவில் இடம்பெறும் சந்திப்பில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை தொடர்பில் இடதுசாரி முன்னணியின் நிலைப்பாடு எதிர்காலத்தில் தமிழ் அமைப்புகளுடன் எவ்வாறான ஒரு உறவை இடதுசாரி முன்னணி வளர்த்துக்கொள்ளும் என்பன போன்ற விடயங்களுக்கு இச்சந்திப்பில் விளக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்திப்பில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களுக்குள்ள கேள்விகளை இங்கு பதிவிடும் பட்சத்தில் அவற்றை விக்கிரமபாகு கருணாரட்னவின் முன் வைக்கமுடியும்.

நிகழ்வு விபரம்:

இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன உடனான கலந்துரையாடல்

November 28, 2010 @ 19:30

 Lord Broke Hall, Shernhall St, Walthamstow, London, E17 3EY

 Joint Invitation: ThesamNet & ASATiC

 T Jeyabalan (07800 596 786), T Sothilingam (07846 322 369)

இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியத் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.

Kirishna_SM_ExternalAffairsMinister_Indiaவட மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண மக்களுக்கும் தென்னிந்தியாவிலுள்ள மக்களுக்கும் உள்ள உறவு தொடர்பாக தெரியாவிட்டால் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவு பூரணமடையாது என யாழ்ப்பாணத்தில் வைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல நூற்றாண்டு காலமாக இந்தியாவின் வரலாறு கலாசாரம், சமயம், வர்த்தகம் போன்றவற்றுடன் தொடர்புபட்டே இருந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிப்பதற்கு இதுவே பொருத்தமான காரணம் எனவும் அவர் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை யாழப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இந்திய அரசின் உதவியுடனான நூறு உழவு இயந்திரங்களையும் வழங்கி வைத்தார்.

._._._._._.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் இன்று திறப்பு- 27 Nov 2010

MR&SM_Kirishnanஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கிறார். இன்று காலை யாழ்ப்பாணம் செல்லும் அவர், விவசாயிகளுக்கு 500 டிராக்டர் வண்டிகளைக் கையளிப்பதுடன், யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் துணைத் தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார்.

அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற் கட்டமான 1,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அரியாலையில் அங்குரார்ப்பணம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி செல்லும் இந்திய வெளிவிவகார வட பகுதிக்கான புகையிரதப் பாதை அமைக்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமைக்கப்படவுள்ளன. மதவாச்சியிலிருந்து மடு வரையும், மடுவிலிருந்து தலை மன்னார் வரையிலும், ஓமந்தையிலிருந்து பளை வரையிலுமாக அமைக்கப்படவுள்ளன.

“தென்னிலங்கையில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் குடியேற விரும்புவதில் என்ன தவறு?” -ஜனாதிபதி தமிழ் கட்சிகளிடம் கேள்வி.

கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேற விரும்புவதை தவறு என எவ்வாறு கூறமுடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் கட்சிகளிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது வடக்கில் இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கப்படுவது குறித்து தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளரும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிப்பவருமான எம்.கே சிவாஜிலிங்கம் ஜனாதிபதியிடம் தெரிவித்த போது சற்று உணாச்சிவசப்பட்ட நிலையில் ஜனாதிபதி இக்கேள்வியைக் கேட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தாரான ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

தெற்கில் தமிழ் மக்கள் குடியேறி ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் ஏன் சிங்கள மக்கள் குடியேறி வாழ முடியாது? அதில் என்ன தவறு இருக்கின்றது? என ஜனாதிபதி தமிழ் கட்சிகளிடம் கேட்டுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பின் அவசியம் கருதி வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சிறு குற்றங்களுக்காக சிறைகளிலுள்ள தமிழ் கைதிகள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தி அக்கைதிகளின் விரைவான விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு தான் உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார். நேற்றைய சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் முக்கியஸ்தரான எம்.கே சிவாஜிலிங்கம் கருத்துக்கூறுகையில் ஜனாதிபதியுடனா சந்திப்பு திருப்தியளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி.

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கியதால் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். நேற்று மாலை யாழ் புங்கன்குளம் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிவநாதன் தயானந்தன் என்ற 15 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்று யாழ்ப்பாணம் உட்பட வடபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்தது. இவ்வேளையில் கோழிக்கூடு ஒன்றை வேறு இடத்தில் மாற்றி வைக்க முயன்ற மாணவனே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மற்றுமொரு சிறுவன் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் மழையினால் இடம்பெயரும் மக்கள் பொது இடங்களில் தங்க அனுமதி மறுப்பு.

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சிப் பகுதியிலும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், இவ்வாறு இடம்பெயரும் பொதுமக்கள் பொது இடங்களில் தங்குவதற்கு படையினர் தடைவிதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களில் பலர் இன்னமும் தறப்பாள் கூடாரங்களில் தங்கி வரும் நிலையில, அக்கூடாரங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவற்றிலிருந்து இடம்பெயர வேண்டி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயரும் மக்கள் அருகிலுள்ள பாடசாலைகள். கோவில்களுக்குச் செல்ல முற்பட்டபோது படையினர் அவ்வாறு அவர்கள் அங்கு தங்க அனுமதி மறுத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் நண்பர்கள் உறவினர்கள் விடுகளில் தற்போது தங்கியுள்ளனர்.

‘நாம் அழிந்த வரலாறு போதும். இனி அழிவுகளில் இருந்து எழுந்து நிமிர்வோம்’ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Douglas_Devanandaவடமாகாண விவசாயிகளுக்காக இந்தியா வழங்கும் உழவு இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (நவம்பர் 27 2010) ஆற்றிய உரை.

அனைவருக்கும் வணக்கம்!….

எமது தேசமெங்கும் இரத்த ஆறு கொட்டிப்பாய்ந்த கொடிய வரலாறு ஒழிந்து முடிந்து, சமாதான நதி பெருக்கெடுத்து பாயும் காலம் இது!…

நாம் விரும்பும் சமாதானம் என்பது சகல மக்களும் அனுபவித்தே தீர வேண்டிய அரசியலுரிமை சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.

அந்த வகையில் அரசியலுரிமை சுதந்திரத்தை எமது மக்கள் அனுபவிக்க முடிந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் முன்னெடுத்து வருகின்ற இவ்வேளையில்….

இதே சம காலத்தில் எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவோம் என்ற உண்மையை மக்களாகிய உங்களுக்கு உறுதியாக மெய்ப்பிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இன்றைய நாளை நாம் கருத வேண்டும்.

இது சாதாரண நாள் அல்ல. நாம் அழிந்த வரலாறு போதும். இனி அழிவுகளில் இருந்து எழுந்து நிமிர்வோம் என்பதற்கு கட்டியம் கூறும் அர்த்தமுள்ள நாள் இன்றைய நாள்.

ஆகவேதான் இன்றைய இந்த நிகழ்வில் எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவின் பிரதமர் கெளரவ திரு மன்மோகன் சிங் அவர்களின் நல்லெண்ண  து}துவனாக எஸ். எம் கிருஸ்ணா அவர்கள் வருகை தந்திருக்கின்றார்.

இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தின் ஆரம்பங்களில் இந்தியாவில் இருந்து சமாதான து}துவனாக வந்திருந்தவர் திரு பார்த்தசாரதி அவர்கள்.

அப்போது எமது மக்கள் கீதை சொன்ன கண்ணன் வண்ண தேரில் வருகிறான் போன்ற பக்தி பாடல்களை எங்கள் தேசமெங்கும் இசைக்க விட்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அதை வரவேற்றிருந்தனர்.

அது போலவே, இன்றும் இந்தியாவில் இருந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் து}துவனாக எம்மை நாடி வந்திருக்கிறார் எஸ்.எம் கிருஸ்ணா அவர்கள்.

உலகத்தின் ஒளியாகவும், சமாதான தூதுவனாகவும் யேசு பிரான் அவதரித்த நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நீதிக்காகவும், தர்மத்திற்காகவும் உபதேசம் செய்த கிருஸ்ண பரமாத்மாவின் வடிவமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஸ்ணா அவர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றார்.

அவரை ஈழத் தமிழர்கள் சார்பாகவும், எமது அரசாங்கத்தின் சார்பாகவும் நான் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.

அது மட்டுமன்றி. எமது மக்களுக்காக இனி வரப்போகின்ற அரசியலுரிமை சுதந்திரத்திற்காகவும், அழிந்து போன எமது தேசத்தை மறுபடியும் கட்டி எழுப்பும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச அவர்களின் இன்னொரு வடிவமாகவும், அவரது பிரதிநிதியாகவும் எமது நண்பர் பசில் ராஜபக்ச அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.

எப்போதுமே எம்மோடு ஒத்துழைத்து வட பகுதி மக்களின் துயரங்களோடும் துன்பங்களோடும் பங்கெடுப்பதோடு மட்டுமன்றி எமது மக்களுக்காக முன்னெடுத்து வருகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருப்பவரும், வட பகுதி மக்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாக திகழ்பவருமான வட மாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.

துணிச்சலான பெண்மணிகளாக எம்மோடு சேர்ந்து யாழ் மாவட்ட அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வரும் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவர்கள், மற்றும் எமது யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள், எமது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று மக்களாகிய உங்களுக்கு நம்பிக்கை தரும் சகலரும் இங்கு வந்திருக்கின்றோம்.

எமது மக்களில் பலர் இறந்து போன தங்களது உறவுகளை நினைத்து துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது எனக்கு புரிகின்றது.
 
இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது எமது மக்களுக்கு கிடைத்திருந்த ஒரு பொன்னான வாய்ப்பு. அதை ஏற்று, சரி வர பயன்படுத்தியும் இருந்தால் நாம் கடந்த காலங்களில் அழிவுகளை சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்திருக்காது.

மக்களாகிய நீங்கள் உங்களது பிள்ளைகளை அல்லது உறவுகளை அழிவு யுத்தத்திற்கு பலி கொடுத்திருக்க வேண்டிய அவலங்கள் இங்கு நடந்திருக்காது.

தவறான வழி முறையில் வழிநடத்தப்பட்டிருந்தாலும் இழந்து போன உயிர்கள் யாவும் எமது மக்களாகிய உங்களது பிள்ளைகள் என்ற வகையில், எங்களது உறவுகள் என்ற வகையில் நாமும் உங்களது துயரங்களில் பங்கெடுக்கின்றோம்.
 
நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லதாக நடக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும்.
 
கடந்த காலங்களில் உங்களுக்கு அழிவுகளை பெற்று தந்த தவறான வழிமுறைகளை நீங்கள் உணர்ந்து, தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியிருந்த அனைத்து வழிமுறைகளையும் நீங்கள் இன்னமும் முழுமையாக புரிந்து கொண்டு செயற்பட முன்வருவீர்களேயானால் நாம் கடந்த இருபது வருடங்களில் சந்தித்திருந்த அழிவுகளை மிகவும் குறுகிய காலத்தில் நாம் கட்டி எழுப்பி விடலாம்.

இது போன்ற நிகழ்வுகளும் திட்டங்களும் இங்கு நடந்து கொண்டிருப்பதும்,  நீங்கள் பயனாளிகளாக வந்து உங்களுக்கான உதவிகளை பெற்று கொண்டிருப்பதும், மிகவும் மகிழ்ச்சிகரமானதும் நம்பிக்கை தரக்கூடியதுமான விடயங்களாகும். நாம் கடைப்பிடித்து வருகின்ற இணக்க அரசியல் செயற்பாட்டின் மூலம் இது போன்ற பல தேவைகளை நிறைவேற்றி முடிக்க முடியும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. ஒருவன் நடுக்கடலில் வீழ்ந்து விட்டான் என்பதற்காக அவன் கடலை திட்டிக்கொண்டிருக்க முடியாது. நம்பிக்கையோடு கரையேற  முயற்சிக்க வேண்டும். கையில் கிடைக்கின்ற ஏதாவது ஒன்றை முதலில் கெட்டியாக பிடித்துக்கொண்டு கரையேற முயற்சிக்க வேண்டும். அது போலவே எமது பிரச்சினைகளையும் நாம் அணுக வேண்டும்.

யாருடன் பேசி நாம் எமது மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமோ அவர்களுடன் இணைந்துதான் எதையும் சாதிக்க முடியும்.

நாம் கட்டம் கட்டமாக எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்று உங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கின்றோம். அது நிச்சயம் நடக்கும். நாங்கள் அதை நடாத்திக் காட்டுவோம்.

எமது மக்களுடைய மீள் குடியேற்றம், அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள், உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த பிரதேசங்களை மீண்டும் மக்கள் குடியிருப்பாக மாற்றியமைத்தல்  போன்ற எல்லா பிரச்சினைகளும் கட்டம் கட்டமாக நிறைவேறி வருவதை நீங்கள் கண்டு வருகின்றீர்கள்.

இவைகள் எல்லாம் நாங்கள் அரசாங்கத்தில் பங்கெடுத்திருப்பதாலும், அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொண்டதாலும்  நடந்து கொண்டிருக்கும் காரியங்களே என்பதை நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்கள்.

இது போலவே எமது அரசியலுரிமை பிரச்சினைக்கும் நாம் தீர்வு காண்போம் என்பதை உறுதியாக தெரிவிக்க விரும்புகின்றேன். எமக்கு இன்னமும் அதிகமான அரசியல் பலம்  கிடைத்திருந்தால் நாம் இன்னமும் விரைவாக அவைகளை நிறைவேற்றியிருப்போம்.

நேற்றைய தினம் எமக்குள் பொது உடன்பாடு கண்டு செயற்பட்டு வரும் பல்வேறு கட்சிகளும் இணைந்த தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது. இந்த சந்திப்பானது மிகவும் திருப்திகரமானதாகவும், நம்பிக்கை தருவதாகவும், முன்னேற்ற கரமானதாகவும் அமைந்திருந்தது.

ஆகவே எமது மக்களின் விடிவிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தமது முரண்பாடுகளை மறந்து நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் நான் இந்த நிகழ்வின் ஊடாக அழைப்பு விடுக்க விரும்புகின்றேன்.

இதே நேரத்தில் இந்த நாட்டில் நிலவியிருந்த சகல வன்முறைகளும் இன்று முடிவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. எமது சமூகம் ஒரு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட சமூகமாக முழுமையாக மாறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும்.

நேற்றிரவு 2.00 மணியளவில் நான் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி கொடிகாமம் பகுதி ஊடாக வந்துகொண்டிருந்த போது யாழ் தினக்குரல் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து எனக்கு அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருந்தது.

தமது அலுவலகத்தின் அருகில் யாரோ சிலர் இரும்பு தடி பொல்லுகளுடன் வந்து நிற்பதாகவும் தம்மை ஆபத்தில் இருந்து பாதுகாக்குமாறும் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. நான் உடனடியாகவே யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு செல்லுமாறு தெரிவித்திருந்ததோடு அந்த நள்ளிரவு வேளையில் நானே நேரடியாக தினக்குரல் அலுவலகம் நோக்கி சென்று தினக்குரல் ஊழியர்களுடன் பேசி நிலைமைகளை அவதானித்து உரிய நடவடிக்கையினையும் எடுத்திருந்தேன்.

இது போன்ற அச்சுறுத்தல் சம்பவங்களில் எந்த தரப்பினரும் ஈடுபடுவதை தவிர்த்து இன்று உருவாகியிருக்கும் இந்த ஜனநாயக சூழலை பாதுகாக்க சகலரும் முன்வர வேண்டும் என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்த ஜனநாயக சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எமது விருப்பங்களை வெளிப்படையாகவே ஏற்று கருத்துச் சொல்லி வருகின்றார். அது மட்டுமன்றி  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அபிவிருத்தி, அன்றாட அவலங்களுக்கான தீர்வு முதற்கொண்டு, அரசியல் தீர்வு வரைக்கும் அனைத்தையும் நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்தின் ஊடாக நாம் நிறைவேற்றுவோம். அதற்கு ஈ.பி.டி.பி யினராகிய நாம் பொறுப்பு.

நடக்கும் என்று நம்பிக்கையோடு செயற்பட்டால் அது நடக்கும். நடக்காது என்று கூறி நாம் விலகி இருப்போமேயானால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை.

எமக்கு பக்க பலமாக, தமிழ் மக்களுக்கு உறுதுணையாக, எமது மக்களின் அரசியலுரிமைக்கு தீர்வு காணும் விடயத்தில் எமது அரசாங்கத்திற்கும், எமக்கும் துணையாக எமது நட்பு நாடாகிய இந்தியா இருக்கின்றது.

அதற்கு அடையாளமாகவே பல்வேறு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளோடு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா அவர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றார்.

அதே போல் நண்பர் பசில் ராஜபக்ச அவர்கள் இலங்கை இந்திய அரசுகளுக்கிடையிலான ஒரு உறவுப்பாலமாக செயலாற்றுவதோடு இன்று இந்த மண்ணையும் மக்களையும் நோக்கி வர விரும்பியிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம். கிருஸ்ணா அவர்களையும் அழைத்து வந்திருக்கிறார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையிலான அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இன்று கைகுலுக்கி நேச சக்திகளாக செயற்பட்டுக் கொண்டிருப்பது இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கும் பெரிதும் சாதகமான ஒரு விடயமாகும்.

ஆகவே இலங்கை இந்திய நட்புறவு வளர வேண்டும் என்று நான் தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துகின்றேன்.

இதே வேளையில் எமது மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை புரிந்து வருகின்ற இந்திய அரசுக்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் தமிழ் மக்களின் சார்பாக நான் நன்றி தெரிவித்து எனது உரையை இத்துடன் முடிக்கின்றேன்.

யாழ் பல்கலையின் உப வேந்தராவதற்கு ரட்னஜீவன் ஹூல், வசந்தி அரசரட்ணம், என் சண்முகலிங்கம் தெரிவு.

இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தெரிவில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வசந்தி அரசரட்ணம் என் சண்முகலிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 14 வாக்குகளையும் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் 9 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பேராசிரியர் என் சண்முகலிங்கனும் 9 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஏனைய வேட்பாளர்களான பேராசிரியர் சத்தியசீலன் 8 வாக்குகளையும் பேராசிரியர் ஞானகுமாரன் 5 வாக்குகளையும் பெற்றுள்ளனர். விரிவுரையாளர் அல்வாப்பிள்ளை தனேந்திரன் ராஜரட்னம் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உபவேந்தருக்கான முதல் கட்டம் முடிவடைந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார். இவ்விடயத்தில் ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசணையைப் பெறுவார். தெரிவு செய்யப்பட்ட மூவரில் யார் உபவேந்தர் என்பது ஒரு வாரத்தில் தெரியவரும்.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல்

ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க தமிழ்க் கட்சிகளின் அரங்கம் முடிவு

Tamil_Arangam_Met_MR_26Oct10வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அப்பகுதி மக்களின் நலன், வாழ்வாதாரம் தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலுள்ள சகல மக்களுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்றதொரு திறமையான தலைவர் வேறு எங்கும் கிடையாது எனவும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamil_Arangam_Met_MR_26Oct10தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியபோதே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கருத்தை தெரிவித்தனர்.வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் எந்தவொரு நபரையும் மீளக்குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்காது என சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றிய பின்னர் ஒழுங்கான முறையில் மக்கள் அவர்களின் இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.

Tamil_Arangam_Met_MR_26Oct10இச்சந்திப்பின்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார் எம்.பி., வீ. ஆனந்த சங்கரி, ரி. சித்தார்த்தன், எஸ். சதானந்தம், ரி. ஸ்ரீதரன், பி. குமார், கே. சிவாஜிலிங்கம், சீ. சந்திரஹாசன், எஸ். பேரின்பநாயகம், கே. சுரேந்திரன், என். குமரகுருபரன், ஏ. ராஜமாணிக்கம், கே. தயாலினி, ஜீ. ராஜ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.