யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவன் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிரேஸ்ட மாணவர்கள் மூவருக்கு பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளைத தொடர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சிரேஸ்ட மாணவர்களால் பகிடிவதைக்குட்படுத்தப்பட்டு கடும் தாக்குதல்களுக்குள்ளான நிலையில் கலைப்பீட முதலாம் வருட மாணவனான ராஜேஸ்கண்ணா என்பவர் கூடுதலான பனடோல் வில்லைகளை உட்கொண்டதால் யாழ்.பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட மூன்று மாணவர்களே இவ்வாறு பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பல்கலைக்கழக நிர்வாகம் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
——————————————
Nov 25, 2010.
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை நடைபெறுவதில்லை என மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தெரிவிப்பு.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் பகிடி வதை தடைசெய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதில்லை எனவும் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் சிறு சிறு முரண்பாடுகள் காரணமாக சில மோதல் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வன்னியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்டமை குறித்து அவர் குறிப்பிடுகையில் மாணவர்கள் மத்தியில் எவ்வித பாகுபாடுகளும் இல்லை எனவும், அவர்கள் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதாகவும் ஆனால். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் விடுதியில் ஒன்றாக தங்கியிருப்பதன் காரணமாக சில சமயங்கள் முரண்பாடுகள் எற்பட்டு அவை மோதல்களில் முடிவடைகின்றதாகவும், அண்மையில் இடம்பெற்ற சம்பவமும் இவ்வாறானதே எனவும் அவர் தெரிவித்தார்.
http://thesamnet.co.uk/?p=23431
——————————————-
NOV 24, 2010
யாழ். பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்க துணைவேந்தர் மறுப்பு.
கடந்த திங்கள் கிழமை யாழ்.பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் ஒருவர் சிரேஸ்ட மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட விடயம் குறித்து யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்கம் கேட்கச் சென்ற யாழ். ஊடகவியலாளர்களை துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!
துணைவேந்தர் வேலைப்பழுவுடன் இருப்பதால் அவரைச் சந்திக்க முடியாது என தணைவேந்தரின் செயலர் தெரிவித்து ஊடகவியலார்களை திருப்பியனுப்பியதாகவும், எவ்வளவு முயற்சி செய்தும் துணைவேந்தர் என்.சண்முகலிங்கனை சந்திக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவன் தடிகளாலும் கை கால்களாலும் சிரேஸ்ட மாணவர் குழுவொன்றினால் மாறி மாறித் தாக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும், தாக்குதல் நடத்திய மாணவர்களின் பெயர்களையும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
http://thesamnet.co.uk/?p=23415
——————————
Nov 23, 2010
தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!
யாழ். பல்கலைக் கழகத்தில் சிரேஸ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உட்பட்டதாகக் கூறப்படும் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்ட நிலையில் யாழ். போதனா வைததிய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். பல்கலைக்கழக விடுதியில் வசிக்கும் கலைப்பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவனாகிய எஸ்.ராஜேஸ் கண்ணா (வயது 23)என்பவருக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன் பாடசாலை அதிபர் மாணவர்களை ஏசியதால் நான்கு மாணவிகள் நஞ்சருந்திய சம்பவம் ஒன்று வலிகாமம் பாடசாலை ஒன்றில் நிகழ்ந்தது அறிந்ததே. (பாடசாலையில் வைத்து நஞ்சருந்திய நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி.)மேலும் பல்கலைக்கழக மாணவிகள் மத்தியில் தற்கொலை வீதம் அதிகமாக உள்ளதாகவும் அதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரின் பாலியல் துஸ்பிரயொகங்கள் காரணமாக இருப்பதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்)
நேற்று திங்கள் கிழமை மாலை எஸ்.ராஜேஸ் கண்ணா தங்கியிருந்த பாலசிங்கம் விடுதியில் வைத்து மூன்று மாணவர்கள் இவரைத் தாக்கியுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் தடுப்பு முகாமிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது தாக்குலை மேற்கொண்ட மாணவர்கள் இவரை பகிடிவதை செய்யும் நோக்கத்துடன் தாக்கவில்லை எனவும், குறித்த மாணவர் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் அதனால் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சையளிக்க உரிய மருந்து இல்லாததால் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊடாக கொழும்பிலிருந்து அம்மருந்தினைப் பெற ஏற்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
http://thesamnet.co.uk/?p=23400