எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

எல்லாப் பிரச்சினையையும் இராணுவ ரீதியில் மட்டும் தான் தீர்க்கலாம் என்று எண்ணியவர் பிரபாகரன்! அதுவே அவர்களுடைய அழிவுக்குக் காரணம்!! – தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் மணி

எந்தவொரு பிரச்சினையையும் இராணுவ ரீதியில் தீர்க்க முடியாது! ஆனால் எல்லாப் பிரச்சினையையும் இராணுவ ரீதியில் மட்டும் தான் தீர்க்கலாம் என்று எண்ணியவர் பிரபாகரன்! அதுவே அவர்களுடைய அழிவுக்குக் காரணம் என தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் மணி சவுக்கு என்ற காணொலிப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 76 நிமிடங்கள் நீண்ட இந்த நேர்காணலில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இராணுவ ரீதியான தீர்வே சாத்தியம் என்ற அசாதாரண நம்பிக்கையே விடுதலைப் புலிகளினதும் பிரபாகரனினதும் முடிவுக்கு ஒரே காரணம் என உறுதிபடக் குறிப்பிடுகின்றார்.

மேலும் தற்போதைய பிஜேபி அரசு பாபர் மசூ போன்ற ஒரு பிரச்சினையை காசி விஸ்வநாதர் – கயன்வாபி மசூதி விவகாரத்தை வைத்து தூண்டிவிட்டு 2024 தேர்தலை சந்திக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். இவ்விவகாரத்தில் 15,000 பேர்வரை கொல்லப்படலாம் என்றும் அதற்று பிஜேபி தலைவர்கள் தயாராக இருப்பதாகவும் பத்திரிகையாளர் மணி சவுக்கு காணொலி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

2006 இல் மாவிலாறு அணையை விடுதலைப் புலிகள் மூடிய போது தங்களுடைய முடிவை நோக்கிய பயணத்தை ஆரம்பித்து விட்டதாக கிஞ்சித்தும் எண்ணி இருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் மதியுரைஞராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அதனை மிக நன்கு உணர்ந்திருந்தார். அன்ரன் பாலசிங்கம் 2005இல் வன்னிக்குச் சென்றிருந்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவ்விடயத்தை எடுத்துச் சொல்ல முயன்ற போது, பிரபாகரன் அன்ரன் பாலசிங்கம் என்ன சொல்ல வருகின்றார் என்பதை உணர்ந்து கொண்டார். “அண்ணை சேரனின் ‘ஆடொகிராப்’ நல்ல படம் பார்ப்போம்” என்று சொல்லி அதனைப் பார்த்தனர். படம் முடிந்ததும் கதைப்போம் என்று ஆவலில் அன்ரன் பாலசிங்கம் பேச்சை ஆரம்பிக்க “நல்ல படம் அண்ணை, இன்னொருக்கா பார்ப்பம்” என்று பிரபாகரன் சொல்ல ‘ஆட்டோகிராப்’ படம் வன்ஸ்மோர் ஓடியது. அன்ரன் பாலசிங்கமும் தான் சொல்ல வந்ததை சொல்லிவிட வேண்டும் என்று இரண்டாம் காட்சி முடிந்ததும் ஆரம்பிக்க, “அண்ணை, இன்னொருக்கா படத்தை பார்ப்பம்” என்றார் பிரபாகரன். அன்ரன் பாலசிங்கம் புரிந்து கொண்டார்.

2009 ஜனவரி 02இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிக்கப்படாத தலைநகராகத் திகழந்த கிளிநொச்சி இரணுவத்தின் வசம் வீழ்த்த போதும் “பனை மரத்திலா வெளவாள! தலைவருக்கே சவாலா!!” என்ற புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகள் உசுப்பி விட்டுக்கொண்டே இருந்தது. இன்னும் சில குஞ்சுகள் இப்பவும் தான் விசிலடிக்கிறார்கள். பழக்கதோசத்தில்.

2008 – 2009 காலகட்டங்கள் நான் ஒரு முழுநேர ஊடகவியலாளனாகவே ஆகிவிட்டேன். அப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் 2016 இல் வெளியான ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற என்னுடைய நூல். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் எவ்வாறு நகர்த்தப்படும், எந்தெந்த காலப்பகுதிகளில் எந்தெந்த பிரதேசகங்கள் கைப்பற்றப்படும் என்பது முதல் முள்ளிவாய்க்காலில் 2009 ஏப்ரல் 16 இந்திய தேர்தலுக்கு முன்பாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டு இருந்துது. இத்திட்டத்திற்கு ‘புரஜகற் பீக்கன்’ என்றும் பெயரிடப்பட்டு இருந்தது. ஆனால் இத்திட்டம் பற்றி எனது நூல் தவிர வேறு எங்கும் பதிவுகள் இல்லை.

2009 காலகட்டத்தில் தேசம்நெற் இணையத்தின் பிரதான செய்தியாளராக இருந்தவர் காலம்சென்ற கண்டியைச் சேர்ந்த பி எம் புன்னியாமீன். அன்றைய நாட்களில் நானும் அவருமே பெரும்பாலும் செய்திகளைப் பதிவேற்றிக் கொண்டிருப்போம். வன்னிக் கள நிலவரங்களை அவர் தன்னுடைய தொடர்புகள் மூலம் பெற்றுக்கொண்டிருந்தார். யுத்தகளத்தில் இருந்த புலனாய்வாளர்கள் சிலரதும் தொடர்புகளும் அவருக்கு இருந்தது. அதனால் தேசம்நெற் வதந்திகளை தவிர்த்து களநிலவரங்களை வெளியிடக் கூடியதாக இருந்தது.

2009 மே 18இல் அவர் என்னை தொடர்புகொண்டு “பிரதர் பிரபாகரனை பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்” என்றார். இருந்தாலும் அந்தச் செய்தியை வெளியிடுவதில்லை என்று இருவருமே தீர்மானித்தோம். அவருக்கும் அச்செய்தி ஒரு புலனாய்வு அதிகாரியால் பரிமாறப்பட்டு இருந்தது. அன்று முழவதும் தொலைபேசி உரையாடலிலும் செய்திகளை உறுதிப்படுத்துவதிலுமே பொழுது கழிந்தது. வன்னி மண்ணில் இருந்து ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் கந்தகத்தூள் மணமும் இரத்தவாடையும் என்னை ஆட்கொண்டிருந்தது. மரண வீட்டின் சுழல் என் வீட்டிலும் தெரிந்தது. மறுநாள் காலை 2009 மே 19 “பிரதர், பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்” என்று பதட்டத்தோடு குறிப்பிட்டார். புலிகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும் அவர்கள் இவ்வாறான ஒரு முவைச் சந்திப்பார்கள் என யாரும் எண்ணி இருக்க வாய்ப்பில்லை. “செய்தியை வெளியிடலாமா?” என்றேன். “தகவல் நம்பகமானது, பிரதர்” என்றார். புன்னியாமீன் தகவலை மிக உறுதியாகவே தெரிவித்தார். தேசம்நெற் அச்செய்தியை வெளியிட்டது. வேறு இலங்கைத் தமிழ் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை.

அதன் பிற்பாடு மே 24இல் அப்போது விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சளராக இருந்த கேபி என்றறியப்பட்ட குமரன் பத்மநாதன் பிரபாகரனது மரணத்தை அறிவித்தர். அதற்கு அடேல் பாலசிங்கத்தினது தூண்டுதலும் முக்கிய காரணம் என குமரன் பத்மநாதனோடு உரையாடியதில் நான் அறிந்துகொண்டேன். இவ்வளவு காலமும் தமிழருக்காகப் போராடிய பிரபாகரனது மரணம் நினைவு கூரப்பட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஆனால் லண்டனிலும் சர்வதேவத்திலும் இயங்கிய புலிகளுக்கோ தங்கள் வசம் இருந்த 5 பில்லியன் டொலர் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்களிலேயே கவனம் இருந்தது. இந்த ஊழலில் அவர்கள் அன்ரன் பாலசிங்கத்தின் அஸ்தியையும் திருடி வைத்திருந்தது பின்னர் அம்பலமானது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது எனக்கு மிகக் கடுமையான விமர்சனம் இருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மரணம் என்னையே அறியாத சோகத்தை ஏற்படுத்தியது. தமிழீழத்தை அடையாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு அரசியல் தீர்வை எட்டக்கூடிய அளவுக்கு பேச்சுவார்த்தைகளில் புலிகளின் கை ஓங்கி இருந்தது. என் போன்றோரால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் ஒரு சர்வதிகாரமான ஆட்சியை வைத்து அதன் உச்சத்தில் இருந்தவர்கள். ஆனால் இன்று முகவரியற்ற வெற்றுடல்களாக அவற்றை உரிமை கோரவும் யாரும் இன்றி வீழ்ந்து கிடந்தனர். பிரபாகரன் மட்டுமல்ல அவருடைய மனைவி குழந்தைகள் அனைவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டது. பிரபாகரன் பிடிபட்டார் என்பதோ சரணடைந்தார் என்பதோ புலிகளுக்கும் தமிழர்களுக்கும் அவமானம் என்பதால் புலிகள் தரப்பு வெளிப்படையாக இருக்கவில்லை. அது இலங்கை அரசு தனது யுத்தக் குற்றங்களை மூடி மறைக்க மிக வசதியாகிவிட்டது.

2002இல் பிரபாகரன் இறுதியாக வழங்கிய மிகப்பெரிய ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக கேட்கப்பட்ட போது அதனை ஒரு ‘துன்பியல் நிகழ்வு’ என்று தெரிவித்து இருந்தார். இவ்வாறான துன்பியல் நிகழ்வுகள் அல்பிரட் துரையப்பா முதல் பல அரசியல் தலைவர்கள் உட்பட பல நூறு பேருக்கு நிகழ்ந்தது.

“உங்களை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா, இலங்கை அரசைக் கேட்டது” தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்த பிரபாகரன் “அண்ணை நடக்கக் கூடியதைப் பற்றி கேட்கச் சொல்லுங்கள்” என்று அசிரத்தையாகக் குறிப்பிட்டார். ஆனால் அவ்வாறான ஒரு துன்பியல் நிகழ்வு இறுதியில் பிரபாகரனுக்கும் நிகழ்ந்தது.

முத்த பத்திரிகையாளர் மணி அண்மைய பதிவில் ராஜீவ்காந்தியுடைய படுகொலையே விடுதலைப் புலிகளின் முடிவுக்கு மூலகாரணம் என்றும் இந்தியா இதற்காக 18 ஆண்டுகள் காத்திருந்தது என்றும் குறிப்பிட்டார். பத்திரிகையாளர் மணி மேலும் குறிப்பிடுகையில் இராணுவ அணுகுமுறை எந்தப் பிரச்சினையையும் தீர்காது என்பதை பிரபாகரன் உணர்ந்துகொள்ளவில்லை என்றும் செப்ரம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னும் அதை பிரபாகரன் உணரத் தவறிவிட்டார் என்றும் சுட்டிக்காட்டினார். பத்திரிகையாளர் மணியின் இந்த நேர்காணலில் விடுதலைப் புலிகள் பற்றிய மிகக் காத்திரமான விமர்சனத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். சில தகவல் பிழைகள் இருந்த போதும் அவருடைய மதிப்பீடு தரமாக அமைந்தது.

அத்தோடு இந்தியாவின் ஆர்எஸ்எஸ், பிஜேபி செயற்பாடுகள் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் ஊடுருவியிருப்பதையும் அதன் ஆபத்தையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இலங்கையில் பௌத்த சிங்களவர்கள் தமிழர்களுக்கு கொடுமை இழைத்தது போல் இந்தியாவில் இந்துக்கள் தொடர்ந்தும் இஸ்லாமியர்களுக்கு கொடுமைகளைச் செய்து வருகின்றனர் என்றும் 2024 தேர்தலையொட்டி காசி விஸ்வநாதர் ஆலயம் – கயன்வாபி மசூத சர்ச்சை இப்போதே தூண்டிவிடப்படுவதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்த ராமஜென்மபூமிக் காரர்கள் – பிஜேபி – ஆர்எஸ்எஸ் கூட்டு பாபர் மசூதி சர்ச்சை போன்று ஒன்றை உருவாக்கி 15,000 உயிர்களை அழித்து தேர்தலை வெற்றிகொள்வோம் என்ற உறுதியில் பிஜேபி தலைவர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆனால் பத்திரிகையாளர் மணி இலங்கை அரசுக்கும் பிஜேபி க்கும் உள்ள கூட்டை காணத் தவறிவிட்டாரோ என்ற ஐயப்பாட்டை அவருடைய நேர்காணலின் பிற்பகுதி ஏற்படுத்துகின்றது. பௌத்தத்தை பிஜேபி இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே பார்க்கின்றது. புத்தரை கிருஸ்ணணின் அவதாரமாகவும் எண்ணுகின்றனர். அதனால் பிஜேபியின் உறவு இலங்கை அரசோடு சற்று ஆழமானதாகவே உள்ளது.

மேலும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அழிவுதான் இலங்கையை இந்நிலைக்கு கொண்டு வந்தது என அவர் குறிப்பிடுவதிலும் எவ்வித உண்மையும் கிடையாது. தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்களை குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த ஆட்சியாளர்களை எப்போதுமே எதிர்த்தே வந்துள்ளனர். ராஜபக்சக்கள் யுத்தக் குற்றங்கள் இழைத்ததற்கும் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது.

ஒரு வகையில் பத்திரிகையாளர் மணி தன் தேசப்பற்றோடு இந்தியா இலங்கையை பல தடவைகள் காப்பாற்றி உள்ளது எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்தியா ஆரம்பம் முதலே இலங்கையை பகடைக்காயாக பாவித்து வருவதை காணத் தவறியுள்ளார்.

வுpமர்சனங்கள் இருந்த போதும் பத்திரிகையாளர் மணியின் நேர்காணல் ஒரு குறிப்பிடத்தக்க பதிவு தான்.

அரப் ஸ்பிரிங் (Arab Spring) முதல் காலிமுகத்திடல் ஸ்பிரிங் (Galleface Spring) வரை போராட்டங்கள் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்குமா? இந்தப் போராட்டங்கள் யாருக்காக?

காலிமுகத்திடலில் அசௌகரியத்தை விரும்பாத உயர் மத்திய வர்க்கம் எரிவாயு, பெற்றோல் இல்லாமையால் போராட புறப்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னதாகவே மத்திய கிழக்கு நாடுகளில் கணணி இளைஞர்கள் அந்நாடுகளில் இடம்பெற்று வந்த லஞ்சம், ஊழல் தொடர்பில் முறுகல் நிலையில் இருந்தனர். அதற்குப் பொறிதட்டும் வகையில் 2010 டிசம்பரில் ருனிசியாவில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவரிடம் பொலிசார் லஞ்சம் கேட்டு அவமானப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அத்தொழிலாளி தீக்குளித்து மரணித்தார். அத்தொழிலாளி தன் மீது வைத்த தீ, மத்திய கிழக்கில் பல நாடுகளுக்கும் பரவியது. பரப்பப்பட்டது. போராட்டங்கள் வெடித்தது.

புரட்சி வெடித்துவிட்டதாக, நவகாலனித்துவம் சரிந்து விட்டதாக கீ போட் மார்க்ஸிட்டுக்கள் ‘தண்ணி அடிக்காமலேயே உளற ஆரம்பித்தனர். கட்டுரை, கட்டுரையாக எழுதித் தள்ளினர். ஒருபடி மேலே போய் முதலாளித்துவத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டதாகவும் எழுதினர். ருனிசீயா, எகிப்து, யேமன், லிபியா என சிரியாவுக்கும் பரவிய இப்புரட்சியில் அமெரிக்க – பிரித்தானிய முதலாளித்துவக் கூட்டும் குளிர்காய்ந்தது. இந்த ‘அராபிய புரட்சி’யில் 180,000 பேர் உயிரிழந்தனர். ஆறு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். ருனிசியா தவிர்ந்த அரப் ஸ்பிரிங் நடைபெற்ற நாடுகள், அவை முன்னிருந்த நிலையைக் காட்டிலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டன. வாழ்நிலை மிகக் கீழ்நிலைக்கு சென்றது மட்டுமல்ல, இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னும் அவை முன்னைய நிலைக்கு வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஜேவிபி கிளர்ச்சி:

1971இல் இரவோடு இரவாக அதிகாரத்தை கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையில் ஜேவிபி புரட்சியில் இறங்கியது. இதற்காகப் போடப்பட்ட ஊரடங்கு காலத்தில் 1971 மார்ச்சில் தான் நானும் இவ்வுலகில் இலங்கையின் கலாச்சார தலைநகரான அனுராதபுரத்தில் அவதரித்தேன். 1971 ஜேவிபி புரட்சியில் என்ன நடந்தது? பிரேமாவதி மன்னம்பேரி என்ற கிராமத்து அழகியை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச் சென்று படுகொலை செய்தனர். இவ்வாறு பல்லாயிரக்கணக்காண இளைஞர்கள் யுவதிகள் கொன்றொழிக்கப்பட்டனர். இன்று ஜேவிபியின் ஒரு பகுதி அரசோடு, மறுபகுதி போராட்டகளத்தில், அதிலும் ஒரு பகுதி இந்த தீவைப்புகளுக்குப் பின்னால்.

தமிழீழ விடுதலைப் போராட்டம்:

மேதகுவில் 1980க்களின் முற்பகுதில் பஸ்க்கு தீ வைத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக கதை சொல்லப்படுகின்றது. முப்பது ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு தள்ளப்பட்டு, பத்தாண்டுகள் கடந்து; இன்று நாற்பது ஆண்டுகளில் தமிழ் மக்கள்; எண்பதுக்களில் இருந்த அரசியல் பொருளாதார நிலைகளிலும் பார்க்க கீழான அரசியல் பொருளாதார நிலையிலேயே கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளனர். போராட்டம் என்ற பெயரில் கொடுத்த உயிரிழப்புகள், பொருளிழப்புகள் எதுவும் தமிழர்களின் அரசியல் பொருளாதார நிலைகளை உயர்த்த தவறிவிட்டது மட்டுமல்லாமல் இன்னமும் கீழ்நிலைக்குத் தள்ளிவிட்டன.

தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார உரிமைகளில் அறிவுபூர்வமான நம்பிக்கை கொண்ட, அதற்காக இதயபூர்வமாக தங்களை அர்ப்பணிக்கத்தக்க அரசியல் தலைமைகள் போராட்டத்தை தலைமை தாங்க வரவில்லை. உணச்சிவசப்பட்ட இளைஞர்களால் உந்தப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம், அதன் முளையிலேயே தன் இலக்கை இழந்தது. தனிமனித வழிபாட்டிலும் அதற்காக சகோதரப் படுகொலைகளிலும் இறங்கியது. சிந்தனையும் இதயமும் தமிழீழ விடுதலையை கைவிட்டு, தனிமனித வழிபாடே போராட்டமான பின், தமிழீழம் முளையிலேயே கருகிவிட்டது. அதன் பின் இடம்பெற்றதெல்லாம் வெறும் அதிகாரத்துக்கான போட்டியே. பலமுடையவர்கள் பலமிழந்தவர்களை அழித்தொழித்தனர். நடந்து முடிந்தது விடுதலைப் போராட்டமே அல்ல. உணர்ச்சிக்கு அடிமையாகி போராட்டம் என்ற பெயரில் தமிழர்கள் சாதித்தது என்ன? தமிழர்களுக்கு கிடைத்தது வெறும் ஒப்பாரியும் சேதமும் தான். இந்த ஒப்பாரியை வைத்துக்கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் எஸ் சிறீதரனும் சாணக்கியணும் இன்னும் இன்னும் பேர்களும் பாராளுமன்றம் போய் தம்பட்டம் அடிப்பதும் அவர்களது வாக்கு வங்கியை பலப்படுத்துவதும் தான் இன்றும் நடைபெறுகின்றது.

காலிமுகத்திடல் போராட்டம்:

இப்போது இதே பாதையில் காலிமுகத்திடலில் போராடியவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிக்கிறோம், கார்களை எரிக்கின்றோம், பஸ்களை எரிக்கின்றோம் என்று நெருப்பை பற்ற வைத்துக்கொண்டுள்ளனர். இவர்களுடைய கூட்டுஉளவியல் அராஜகம் இலங்கை எதிர்நோக்குகின்ற எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகப் போவதில்லை. பதவியில் இருந்து இறக்கப்பட்ட ராஜபக்ச அடியாட்களை இறக்கி போராட்ட காரர்களை தாக்கியதால், மக்கள் கொதித்து எழுந்து; ஆனால் மிகத் திட்டமிட்டு முப்பது வரையான பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைத்தது என்பது சற்று ஆச்சரியம் தான். மிகவும் உசார் நிலையில் இருந்த பாதுகாப்புப் படைகள் ஒரு வீடு எரிக்கப்பட்ட பின்னும் ஏனைய வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததும் அதைவிட ஆச்சரியமானது தான். இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இவ்வளவு கண்ணியாமாக இயங்குகின்றன என கோத்தபாய ராஜபக்ச நிரூபிக்க முயற்சிக்கிறாரோ என்று எண்ணத் தோண்றுகிறது. அதற்குப் பின் மேற்குலகின் செல்லப் பிள்ளையான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக்கப்பட்டார். மேற்கு நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று தங்கள் வாழ்த்துக்களை நேரில் சென்று தெரிவித்துக்கொண்டுள்ளன. காலிமுகத் திடல் ஸ்பிரிங் – காத்து வாங்கும் போராட்டம் தனது இலக்கை எட்டியது?

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் போராட்டத்தை துண்டிவிட்டவர்களுக்கு எவ்வித அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலருக்கும் அவர்களுடைய பிரச்சினை தங்களுக்கு பெற்றொல், எரிவாயு கிடைக்கவில்லை என்பதே. பொருட்கள் விலையேறுகிறது என்பது உண்மை தான். மக்கள் அப்படித்தான் இருப்பார்கள், அவர்களுக்கு அரசியல் பொருளாதாரம் தொடர்பாக பெரிய புரிதல் இருப்பதில்லை என்பது உண்மைதான். இலவசக் கல்வியில் பல்கலைக்கழகம் வரை சென்று படித்துவந்த இளம்தலைமுறையினரும் இப்படி இருந்தால் சனநாயகம் எப்படி இயங்கும்? இந்த பொருளாதார பிரச்சினை பற்றி ஊடகங்களும் தங்களுடைய 24 மணிநேரச் செய்தியை நிரப்ப உணர்ச்சி பூர்வமான செய்திகளுக்கு மட்டுமே அலைகின்றன.

ஒரு பிரச்சினை வந்தால் பழியை யார் மீதாவது போட்டுவிட்டு போவதே வேலையாகிப் போய்விட்டது. பிறகு அதை வைத்து நாலு பேரை உசுப்பேத்தி எரிக்கிறது, கொழுத்துகிறது என்று தான் சுதந்திர இலங்iகியின் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு இன, மத பேதம் எதுவும் கிடையாது. ஆரம்பத்தில் சிங்கள இளைஞர், யுவதிகளை அரசு கொன்று குவித்தது. அதன் பின் தமிழர்களை அரசு கொன்று குவித்தது. பின் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என அரசு வன்முறையை அவிழ்த்து விட்டது. இப்போது இரண்டாவது சுற்று ஆரம்பித்துள்ளது.

போராட்டத்தை தூண்டியவர்களையும் போராட வந்தவர்களையும் காக்க மேற்கின் செல்லப் பிள்ளை ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவிக்கு கொண்டுவரப்பட்டுவிட்டார். அதிஸ்ரவசமாக விரல் விட்டு எண்ணக் கூடிய கொலைகளுக்குள் ‘போராட்டம்’ தணிய ஆரம்பித்துள்ளது. வாக்குகளால் பதவிக்கு வரமுடியாத ரணில் விக்கிரமசிங்க போராட்டம் என்ற பெயரில் இடம்பெற்ற தீ வைப்புகள் கொலைகளைத் தொடர்ந்து பதவிக்கு கொண்டுவரப்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்தது எப்படி பொருளாதார பிரச்சினைக்கும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட ‘போராட்டத்துக்கும்’ தீர்வானது? இது தான் மேற்குலகின் மாயா ஜாலம். ஆரப் ஸ்பிரிங் முதல் கோல்பேஸ் ஸ்பிரிங் வரை போராட்டங்களை மேற்குலகு தனக்கான வரப்பிரசாதமாக மாற்றிக் கொள்வதில் மிகக் கைதேர்ந்தவர்கள். ஆனால் போராட்டத்தை தூண்டுபவர்கள், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் உணர்ச்சி வசப்பட்ட முட்டாள்களாகவே உள்ளனர். அவர்களை வழிநடத்துவதற்கான புரட்சிகர சிந்தனையுடைய கட்சிகள் அங்கு இல்லை. அவ்வாறு இருந்தாலும் அவர்கள் முகவரி அற்றவர்களாகவே உள்ளனர் அல்லது இந்த அலைக்குள் அவர்களும் அள்ளுண்டு விடுகின்றனர்.

நாட்டின் பொருளாதார நிலையை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக இந்த் சூழலை மாற்றுவதற்கு பதிலாக அவரவர் தங்கள் குறுகிய அரசியல் லாபங்களுக்காக எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்றளவில் செயற்பட்டனர். மற்றும்படி எவ்வித அடிப்படை மாற்றத்தையும் அவர்களால் முன்வைக்க முடியவில்லை. ராஜபக்ச குடும்பம் கொன்றொழிக்கப்பட வேண்டிய நரகாசுரர்களாகவும் இந்தியாவும் மேற்குலகும் இலங்கையை காப்பாற்ற வந்த தேவதூதர்களாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பொருளாதார நெருக்கடியின் பின்னணி:

இன்றைய பொருளாதார நெருக்கடியை ராஜபக்ச குடும்பத்திற்குள் போட்டு மூடி மறைப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமன். ராஜபக்ச ஒன்றும் புனிதரும் அல்ல போராடுபவர்கள் யாவரும் பொறுப்பற்றவர்களும் அல்ல. வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் 24 மணி நேரத்தலைப்புச் செய்திகளுக்கு மட்டுமே பயன்படும்.

இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவின் சோசலிச விரிவாக்கத்தை தடுக்கவே அமெரிக்கா ஜப்பானில் ஹிரோசிமா மற்றும் நாகசாக்கி நகரங்களில் அணு ஆயதங்களை பரீட்சித்துப், பல லட்சம் மக்களைக் கொன்றுகுவித்தது. இப்போது உக்ரைனில் ஆயதங்களை குவித்து வருவதும் நேட்டோவை விஸ்தரித்து தன்னுடைய சந்தைப் பொருளாதாரத்தை விரிவாக்கவே. அமேரிக்கா பேசுகின்ற ஜனநாயகம், மனித உரிமைகள் அனைத்துமே மிகப் போலித்தனமானவை. அவர்கள் ஜனநாயகம் மனித உரிமைகள் பேசுவது சந்தைப் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு மட்டுமே.

இச்செய்தியை எழுதிக்கொண்டிருக்கின்ற போதே அமெரிக்காவில் வெள்ளை இனவாதி ஒருவர் கறுப்பின மக்கள் வாழும் பகுதியில் உள்ள சுப்பர்மாக்கற்றினுள் புகந்து பத்துப் பேரைப் படுகொலை செய்துள்ளார். அமெரிக்கா உலகெங்கும் ஆயதங்களை விற்று உலக சமாதானத்தை அழித்துவரவது மட்டுமல்ல தன்னுடைய நாட்டிலும் சமாதானத்தை அழித்து வருகின்றது. கொரோனா காலத்தில் அவரவர் பஞ்சம் வந்துவிடும் என உணவுப் பொருட்களை வாங்கி வீட்டில் சேர்க்க அமெரிக்காவில் ஆயுதங்களையும் தோட்டாக்களையும் வாங்கிக் குவித்தனர். தற்பாதுகாப்பிற்காம். இவர்கள் தன்னியக்க துப்பாக்கிகளை வாங்கியது என்ன கொரோனா வைரஸை சுடுவதற்கா?

புரட்சிக்கு எதிரான அபிவிருத்திக் கொள்கை:

இந்த இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமடைய ஆரம்பித்தன. அந்தக் காலகட்டத்தில் தான் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும் சுதந்திரமடைந்தன. இவ்வாறு சுதந்திரம் அடையும் நாடுகள் சோசலிச முகாமுக்குள் சாய்ந்து பொருளாதார தன்னிறைவடைந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களை தன்னுடைய முதலாளித்துவ கொள்கையின்பால் ஈர்த்து கடன்காராக, காலம்பூராவும் நவகாலனித்துவத்திற்குள் வைத்திருப்பதற்கு ஒரு கொள்கைத் திட்டத்தை வகுத்தது, முதலாளித்துவத்திற்கு தலைமை தாங்கிய அமெரிக்க – பிரித்தானிய நாடுகள். அது தான் புரட்சிக்கு எதிரான அபிவிருத்திக் கொள்கை.

ஒரு நாடு சுதந்திரம் அடைந்து சொந்தக் காலில் நிற்பதற்கு, பொருளாதார வளம் அவசியமாக இருந்தது. இந்தப் புரட்சிக்கு எதிரான அபிவிருத்தி கொள்கைத் திட்டத்தினூடாக அமெரிக்கா – பிரித்தானிய நாடுகள் இந்த சுதந்திர நாடுகளுக்குள் தங்கள் மூலதனத்தை ஊடுருவச் செய்து, அந்நாடுகளை தமது நவகாலனிகள் ஆக்கின. அது எவ்வாறு? உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மூலமாக அந்நாடுகளை கடன்காரர் ஆக்குவது. இறக்குமதிகளை ஊக்குவித்து; தங்கள் நாடுகளின் பொருட்களை இறக்குமதி செய்ய வைத்து; நுகர்வோர் கலாச்சாரத்தை தூண்டிவிட்டு; நாட்டையும் நாட்டு மக்களையும் கடன்காரர் ஆக்குவது. பின் கடன்காரர்களாக வைத்திருப்பதற்காக, நிபந்தனைகளை விதிப்பது. தாங்கள் இந்நாடுகளை தொடர்ந்தும் சுரண்டுவதற்கு வாய்ப்பாக திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது, இந்த வல்லாதிக்க நாடுகளின் நிபந்தனையாக இருந்தது. இலங்கை போன்ற சிறிய நாடுகளால் இந்த வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராகச் செயற்பட முடியாத நிலை. அதனால் படிப்படியாக நட்டை அந்நிய சக்திகளிள் சுரண்டலுக்கு அனுமதித்தனர்.

உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் இந்த வல்லாதிக்க சக்திகளின் முகவர்களே. உலகம் முழவதும் கொடும்கோலர்களுக்கும் சர்வதிகாரிகளுக்கும் (சதாம் ஹ_சைன், முகம்மர் கடாபி, ரொபேட் முகாபே, ஹொஸ்னி முபாரக், பேர்டினட் மார்க்கோஸ்) எதிர் புரட்சிகர அபிவிருத்திக் கொள்கையினூடாக வாரி இறைத்து அந்நாடுகளை வங்குரோத்து ஆக்கியதும் இந்த வல்லாதிக்க நாடுகள் தான். ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் தங்களுக்கு கடன்தர வேண்டாம், தங்களுடைய உற்பத்திப் பொருட்களை வரித் தடையில்லாமல் ஏற்றுமதி செய்ய அனுமதியுங்கள் என்ற போது இந்த வல்லாதிக்க நாடுகள் மறுத்துவிட்டன. இவ்வாறு தான் எங்களுடைய மூலப் பொருட்களை குறைந்த விலையில் வாங்கி அவற்றை முடிவுப் பொருளாக்கி, அதனை கூடிய விலைக்கு எமக்கே விற்றனர். எங்களுடைய பாலை குறைந்த விலையில் வாங்கி, அங்கர் மாவை எமக்கே கூடியவிலைக்கு விற்றனர். இங்கு பிரித்தானியாவில் கூட நாங்கள் பசுப்பாலைத் தான் பாவிக்கிறோம். ஆனால் இலங்கையிலோ மக்கள் அங்கர் பிரியர்களாகி விட்டனர். இந்தப் பொருளாதார நெருக்கடி வந்திராவிட்டால் நாங்கள் கோழி போடாத முட்டை சாப்பிடவும் பழகிக்கொண்டிருப்போம். மீளா முடியாத இன்னும் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்போம்.

போபால் விசவாயுக் கசிவு:

1984இல் நான் இளைஞனாக இருந்த காலம் எங்களை உலுக்கிய செய்தி. இந்தப் பெரிய இந்தியாவுக்கே அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் தண்ணி காட்டியது. 1984 டிசம்பர் 2இல் போபால் விசவாயுக் கசிவு 15,000 பேரைப் பலிகொண்டது. போபால் விசவாயூக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நிறுவனம் இன்றுவரை நட்ட ஈடு வழங்கவில்லை. இப்போது நாற்பது ஆண்டுகளாகியும் இன்னமும் பிள்ளைகள் ஊனமாகவே பிறக்கின்றன. இந்த அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் சுரண்டல் பொருளாதாரக் கொள்கைகள் ஏனைய நாடுகளில் ஏற்படுத்திய அழிவுகள் பசுமரத்து ஆணிபோல் இன்னமும் மனங்களில் உள்ளது. மறக்க முடியவில்லை. அதற்கு மேல் இன்னமும் இந்த நாடுகளின் சுரண்டல்களுக்காக பங்களாதேஸில் ஆடைத் தொழிற்சாலைகள் தீப்பிடித்து எரிந்து தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர்.

இலங்கையிலும் அவ்வாறான ஒரு பொருளாதார சுதந்திர வர்த்தக வலயத்தை அன்றைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா உருவாக்கினார். இலங்கையை சர்வதேச சந்தைக்கு திறந்துவிட்டார். சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடதுசாரிக் கட்சிகளோடு இணைந்து உருவாக்கிய தன்னிறைவு பொருளாதாக் கொள்கைக்கு சாவுமணி அடித்தார். தமிழ் தேசியவாதக் கட்சிகளும் ஜே ஆர் ஜெயவர்த்தனவோடு சேர்ந்து அந்த மணியை ஆட்டிவிட்டனர்.

பேர்டினட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்கோஸின் லஞ்சம் ஊழல்:

1980க்களில் எங்களை உலுக்கிய மற்றுமொரு செய்தி பிலிப்பைன்ஸில் பேர்டினட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்கோஸின் லஞ்சம் ஊழல் மற்றும் டாம்பீகரமான வாழ்க்கை. அதற்கு எதிராக போராட்டம் வெடித்து. இந்த பரம்பரையான குடும்ப ஆட்சித் தம்பதிகள் ஓரம்கட்டப்பட்டனர். அப்போது இமெல்டா மார்க்கோஸின் வீட்டு அலுமாரிகளில் அவருக்கு 1000 சோடி பாதஅணிகள் இருந்தது. இவ்வாறு பரம்பரை பரம்பரையாகவே பிலிபைன்ஸ்சை சூறையாடிய இப்பரம்பரையில் இருந்து; மார்க்கோஸ் தம்பதிகளின் மகன் பொங் பொங் மார்க்கோஸ் இன்று அவதார புருஷராக வந்துள்ளார். தனது பெற்றோரின் காலம் பிலிப்பைன்ஸின் பொற்காலம் என்று சொல்லி தற்போது தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளார். மக்கள் இப்போதெல்லாம் எதனையும் குறுகிய காலத்திலேயே மறந்துவிடுகின்றனர். ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் தேர்தல்கள் கூட ஒரு சூதாட்டம் ஆகிவிட்டது.

இலங்கையின் மத்திய வங்கியை சுருட்டிக்கொண்டு சென்ற, ஈஸ்ரர் குண்டு வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டதைப் பற்றி கவலையேபடாத முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆறாவது தடவையாக பிரதமராக்கப்பட்டு உள்ளார். மேற்குலகின் செல்லப் பிள்ளையான இவர் உலக வங்கிக்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கையை அடகு வைப்பாரா இல்லையா என்பது விரைவில் தெரியவரும். அல்லது பெற்றோல் பிரச்சினையும் எரிவாயுப் பிரச்சினையும் தீர அவரை ஆறாவது தடவையாகவும் கலைத்துவிடுவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

திறந்த சந்தைப் பொருளாதாரம்:

இலங்கையை கடன்காரர் ஆக்கிய வல்லாதிக்க நாடுகளின் எதிர் புரட்சி அபிவிருத்திக்கொள்கை இலங்கையை 16 தடவைகள் வங்குரோத்து அடையாமல் காப்பாற்றி இருந்தது. பதினேழாவது தடவையாகவும் அவர்கள் காப்பாற்றுவார்கள். இலங்கை மக்களுக்காக அல்ல இலங்கையை இன்னும் இன்னும் கொள்ளையடிப்பதற்காக. ஏன் இலங்கை இவ்வாறு கடனாளியானது? ராஜபக்ச குடும்பம் கொள்ளையடித்து என்பது பொருளாதாரத்தில் அரிவரி தெரியாதவர்களின் வாதம். இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும் ராஜபக்ச குடும்பத்தின் கொள்ளைக்கும் சம்பந்தம் கிடையாது. டொனால்ட் ரம்மில் இருந்து ராஜபக்ச வரை பொறிஸ் ஜோன்சன் உட்பட எல்லோருமே தங்கள் தங்கள் நாட்டை கொள்ளையடித்துள்ளனர். என்ன ராஜாபக்ச கொஞ்சம் மொக்குத்தனமாக செய்துவிட்டார் போல் தெரிகின்றது. உலக்கை போன ஓட்டையைப் பார்க்காமல் ஊசிபோன ஓட்டைக்கு போராட்டம் என்ற பெயரில் நாட்டை பெரும் கொள்ளையர்களிடம் தள்ளிவிட்டுள்ளனர்.

இலங்கையன் பெருமை:

திறந்த சந்தைப் பொருளாதாரமே செல்வத்தை உருவாக்கும் வறுமையை ஒழிக்கும் என்று உலகுக்கு வகுப்பெடுக்கின்றது அமெரிக்கா. ஆனால் உலகின் செல்வத்தில் 50 வீதத்தை தன்னகத்தே வைத்துள்ள அமெரிக்காவில் இலவச மருத்துவம் இல்லை. ஆனால் இலங்கையில் இலவச மருத்துவம். அடிப்படைச் சுகாதார சேவைகளை வழங்குவதில் இலங்கை இன்னமும் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மனித உரிமை என்பது பட்டினியாலும் வருத்தம் துன்பம் வந்து சாவதற்குமான உரிமையாகவே உள்ளது. இலங்கையில் இன்னும் இந்நிலை இல்லை. இலங்கையர்களாக இருப்பதில் பெருமைப்பட வேண்டிய விடயம். ஆசிறி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போதே மரணமானவரின் உடலை வைத்துக்கொண்டு அவ்வுடலை திருப்பிக் கொடுக்க 5 லட்சம் ரூபாய் கேட்டனர். அப்படியிருக்கும் போது இத்தனை தசாப்தங்கள் பல லட்சம் உயிரிகளை காப்பாற்றுவதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

பிரித்தானியாவில் கல்வி கற்கும் ஒவ்வொரு பிள்ளையும் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து வெளியேறுகின்ற போது £ 50,000 பவுண்கள் (500 x 50,000 = 25,000,000 ரூபாய் / 25 மில்லியன் ரூபாய்) கடனோடு தான் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். இலங்கையில் பல்கலைக்கழகம் முடிக்கும் மாணவனுக்கு ஒரு சதம் கடன் கிடையாது. உலகிலேயே உயர்கல்வியை முற்றிலும் இலவசமாக வழங்குகின்ற நாடுகளில் இலங்கை மிக முக்கியமானது. இலங்கையில் இலவசமாகக் கல்வி கற்ற மருத்துவர்களும் பொறியியலாளர்களும் தான் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டுள்ளனர். அந்நாடுகளை கட்டியெழுப்பவும் உதவுகின்றனர். இது இலங்கையர்கள் பெருமைப்பட வேண்டிய விடயம். அப்படியானால் பல தசாப்தங்களாக பல்கலைக்கழகம் வரை இந்த இலவசக் கல்வியை வழங்குவதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

பிரித்தானியாவில் நாங்கள் கொள்வனவு செய்யும் பெற்றோல் எரிவாயுவிற்கு நாங்கள் அவற்றின் நிர்ணயிக்கப்பட் விலையைக் காட்டிலும் கூடுதலாக வரியையும் சேர்த்து செலுத்துகின்றோம். ஆனால் இலங்கையில் பெற்றோலையும் எரி வாயுவையும் வாங்கிய விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்கிறது. அப்படியானால் குறைக்கப்பட்ட அந்தப் பெறுமதியை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

மண்வீடுகள் எல்லாம் கல்வீடுகளாகி உள்ளதே அதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

வீட்டுத்தோட்டம் செய்வதற்கு வழங்கப்பட்ட உபகரணங்கள், விதைகள், இலவச உலர் உணவுகள் இதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

உலகிலேயே அதிக விடுமுறை தினத்தை கொண்ட நாடு இலங்கை. இந்தச் சலுகை எப்படி சாத்தியமானது?

இவ்வளவு விடுமுறையும் கொடுத்து 16 லட்சம் அரச ஊழியர்களை தேவைக்கதிகமாக அமர்த்தி சம்பளம் கொடுக்கப்படுகின்றது. உத்தியோகத்தில் இருப்பவர்களும் வேலையே செய்யாமல் ஊதியம் பெற நினைக்கின்றனர். அமெரிக்காவிலோ பிரித்தானியாவிலோ இவை சாத்தியமில்லை.

கிளிநொச்சியில் சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற சம்பவம்:

பிரதேச செயலகத்திற்கு தன் காணி உறுதிப்பத்திரத்தை எடுக்கச் சென்றிருந்தார் என் சகோதரி ஒருவர். அங்கு நால்வருக்கு மேல் பணியில் இருந்தனர். 100 ரூபாயை வாங்கி அதற்கு பற்றுச் சீட்டைக்கொடுத்து காணி உறுதியை கையளிக்க வேண்டும். அவர் அலுவலகத்திற்குச் சென்ற போது அங்கு சேவை பெறுவதற்கு வேறு யாரும் வந்திருக்கவில்லை. அதேசமயம் இவர் சென்றதும் இருந்த பணியாளர்கள் ஆளுக்கு ஆள் கண்ணைக் காட்டினார்களேயொழிய யாரும் அவருடைய தேவையைக் கேட்கவில்லை. அவரை இருக்கும்படி உதரவிட்டுவிட்டு, குசு குசுத்தனர். பின்னர் ஒருவர் வந்தார் அவர் ‘நான் அக்ரிங் தான். அதுக்காகா நானா எல்லாருக்கும் அக்ரிங்’ என்று புறுபுறுத்துவிட்டு ஒரு மணிநேரம் இழுத்தடித்துவிட்டு காணி உறுதியைக் கொடுத்தனர். என் சகோதரி முழுநேரம் வேலை பார்ப்பவர். அவர்கள் தாங்கள் வேலை செய்யாமல் இருப்பதும் இல்லாமல் தன் நேரத்தையும் வீணடித்துவிட்டார்கள் என்று சினந்துகொண்டார். இலங்கையில் அரச ஊழியர்களின் நிலை இது தான். புகையிரத ஓட்டுனர் இரு மணிநேரம் தாமதமாக வந்து பல்லாயிரக்கணக்காணவர்களின் நேரத்தை வீணடித்தது போல.

இந்த லட்சணத்தில் ‘Gotta Go Home’ வேறு. கோட்டபாயா ராஜபக்ச செய்த மிகப்பெரிய முட்டாள்தனம் 15 வீதமாக இருந்த பொருட்களுக்கான வரியை ஐம்பது வீதத்தால் 8 வீதமாகக் குறைத்தது. இந்த வரிக்குறைப்புச் சலுகையை அனுபவித்தவர்கள்தான் இப்போது ‘Gotta Go Home’ கோஷம் போடுகின்றனர்.

கோவிட் தாக்கமும் உக்ரைன் யுத்தமும்:

இவ்விடத்தில் கோவிட் தாக்கத்தை தவிர்க்க முடியாது. அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் செல்வந்த நாடுகளாகவும் அறிவுக் கணதியான நாடுகளாக இருந்தும் அந்நாட்டு தலைவர்களின் முட்டாள் தனங்களினால் கோவிட்டினால் இறந்த மக்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கு. அமெரிக்காவில் கோவிட் இனால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது, அயல்நாடானான இந்தியாவில் கோவிட்டினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் என மதிப்பிடப்படுகின்றது. இந்நாடுகளில் இன்றும் பல நூறு பேர் இறந்துகொண்டுள்ளனர். பிரித்தானியாவில் சராசரி தினமும் 200 பேர் இறந்துகொண்டுள்ளனர். அது பற்றி அத்தலைவர்கள் கண்டுகொள்வதும் இல்லை. அவை செய்தியாக வருவதும் இல்லை. ஆனால் இலங்கையில் இந்நிலை ஏற்படவில்லை. நாட்டின் எல்லைகள் முடக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டதால் நாடு உயிராபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது.

ஆனால் கோவிட் தாக்கமும் உக்ரைன் யுத்தமும் இலங்கையின் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலகின் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கின்றது. பிரித்தானியாவில் 2 வீதமாக இருக்க வேண்டிய விலைவாசி உயர்வு ஏழவீதத்தைக் கடந்து விட்டது அமெரிக்காவில் அது பத்து வீதத்தை தொட்டுவிட்டது. இலங்கையில் 21 வீதத்தை கடந்துவிட்டது. ஆனாலும் இந்நாடுகளில் வேலையற்றோர் வீதம் இன்னமும் குறைவாகவே காணப்டுவது சாதகமான அம்சமே.

உலக விலைவாசி உயர்வு:

கோவிட்கால முடக்கத்திலும் மக்கள் வருமானத்தை இழக்காததும் (அரசு மற்றும் உதவிகள்) செலவீனங்கள் குறைந்திருந்ததும் (நாடுகள் முடக்கப்பட்டு இருந்ததால் செலவு செய்ய வழியிருக்கவில்லை.) இப்போது முடக்கம் தளர்ந்ததும் பொருட்களுக்கான தேவைகள் அதிகரித்துவிட்டது. ஆனால் கோவிட்காலத்தில் முடக்கப்பட்ட நிறுவனங்கள் இன்னமும் மீள இயங்க ஆரம்பிக்காததால் (குறிப்பாக சீனாவில் இருந்து உற்பத்தி சகஜநிலைக்கு வரவில்லை) பொருட்களின் தட்டுப்பாடு விலையை அதிகரித்தது. அத்தோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எரிபொருட்களின் விலையை எகிற வைத்தது. தானியங்களின் விலையை எகிற வைத்தது. அதனால் பொருட்களின் உற்பத்திச் செலவும் அதிகரித்தது. இந்த விலையேற்றம் என்பது தேவைகளின் அதிகரிப்பும் உற்பத்திச் செலவின் அதிகரிப்பும் இணைந்ததாக உள்ளது. அத்தோடு இலங்கை முற்றிலும் இறக்குமதியை மட்டுமே நம்பி இருந்ததால் நாட்டின் நாயணத்தின் பெறுமதி இறக்கம் இறக்குமதிப் பொருட்களின் விலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும். அமெரிக்க இந்த விலையேற்றத்தை சமாளிக்க சீனப் பொருட்களின் மீது விதித்திருந்த வரியை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த விலையேற்றம் மற்றும் பிரச்சினை இலங்கைக்கு மட்டுமான பிரச்சினையும் அல்ல.

கோத்தபாய செய்யத் தவறியதும் செய்ய வேண்டியதும்:

கோவிட் முடக்கம் உலகத்தையே முடக்கியது. இலங்கையில் அந்நியச் செலவாணியை ஈட்டும் உல்லாசப்பயணத்துறை முற்றாக ஸ்தம்பித்தது. நாட்டிற்கு எவ்வித வருமானமும் இல்லை. ஆனால் இறக்குமதி எகிறியது. இந்த நெருக்கடி நிலையை அரசு எதிர்வு கூறியிருக்க வேண்டும். அதனைச் சமாளிப்பதற்கான நீண்ட காலத் திட்டங்களை அரசு வகுத்திருக்க வேண்டும். கடன்களை மீளச் செலுத்த முடியாது என்ற அறிவிப்பை மிக நீண்ட காலத்திற்கு முன்னதாகவே அரசு அறிவித்திருக்க வேண்டும். அவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நீண்ட காலத்திற்கு முன்னரே முடக்கி இருக்க வேண்டும். உள்ளுர் உற்பத்தியை ஊக்குவித்திருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் அறிவு வளத்தை இதனை நோக்கி திசை திருப்பி இருக்க வேண்டும். இவ்வளவு சூரிய ஒளியை வருடம் முழவதும் பெறும் இலங்கை எரிசக்தியில் தன்னிறைவை காண்பதை நோக்கிச் சென்றிருக்க வேண்டும்.

எண்பதுக்கள் முதல் இன்று வரை ஆட்சிக்கு வந்த எந்த அரசும் இதனைச் செய்யவில்லை. ராஜபக்சாக்களும் செய்யவில்லை. ராஜபக்சாவை மாற்றி ரணிலைக் கொண்டு வந்து உலக வங்கிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கையை அடகு வைக்கும் போராட்டம், போராட்டம் அல்ல அரசியல் கும்மாளமாகவே அமையும். எவ்வித புரட்சிகர சிந்தனையும் இல்லாமல் வெறும் உணர்ச்சிப் பிளம்பில் நடக்கும் போராட்டங்களில் பொழுது போக்குக்காக ஈடுபட்டு எதிர்காலத்தில் உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் நாட்டை இட்டுச்செல்லாமல் நாட்டுக்கு உல்லாசப் பயணிகளை வரவழைத்து அந்நியச் செலவாணியை ஈட்டுவது இப்பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும்.

இந்தப் போராட்டங்கள் யாருக்காக?

ஏன் இந்தப் போராட்டகாரர்கள் கடன்களை மீளச் செலுத்தாதே என்று கோரவில்லை?
ஏன் இந்தப் போராட்டகாரர்கள் கடன்களை ரத்து செய்யக் கோரவில்லை?
ஏன் இந்த போராட்டகாரர்கள் அநியாய வட்டி வாங்காதே எனக் கோரவில்லை?
ஏன் இந்தப் போராட்டகாரர்கள் சர்வதேச நாணய நிதியத்தையும் உலக வங்கியையும் எதிர்க்கவில்லை?

இந்தப் போராட்டங்களினதும் ரணிலினதும் வரவினாலும் சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் தலையீடு செய்யும். நாட்டுக்கு மேலும் மேலும் கடன் வழங்குவார்கள். வட்டி வீதத்தை கூட்டுவார்கள். பெற்றோல் எரிவாயுவிற்கு வழங்கிய மானியத்தை குறைப்பார்கள் அல்லது நிறுத்துவார்கள். பெற்றோல் மற்றும் எரிவாயுவின் விலைகள் நிரந்தரமாக மிகக் கூடுதலாக அதிகரிக்கும். இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றிற்கு செலவிடப்படும் நிதி குறைக்கப்பட்டு அந்நிதி கடனுடைய வட்டியைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும். இறக்குமதிகள் அதிகரிக்கப்பட்டு இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளி கூடும். அதன் பின் இன்று போராடிய உயர்தர மத்தியதர வர்க்கம் இல்லாதவர்களைப் பார்த்து பிழைக்கத் தெரியாதவர்கள் என்று முத்திரை குத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தப் போராட்டங்கள் யாருக்காக? நிச்சயமாக இலங்கை மக்களுக்காக அல்ல.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி – என் பயண அனுபவம்: இலங்கை வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது என மறுக்க வேண்டும்! சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுக்கு உடன்படக் கூடாது!! அத்தியவசிய உணவு – எரிபொருளில் இலங்கை தன்னிறைவு பெற வேண்டும்!!!

கொரோனா மற்றும் காரணங்களால் நான்கு ஆண்டுகளுக்குப் பின், ஏப்ரல் 2ம் திகதி காலை லண்டன் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை பஹ்ரெயின், மாலைதீவு ரான்ஸிற் ஊடாக கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தை அடைந்தேன். வக்சீன் பாஸ்ட்போட், கோவிட் மெடிகல் இன்சுரன்ஸ், ஈவீசா ஆகியவற்றோடு இறங்கி குடிவரவு அலுவலர்களின் அனுமதிக்காக வரிசையில் நின்றேன். பெரிதாக நெருக்கடி இருக்கவில்லை. குடிவரவு அதிகாரி கோவிட் பாஸ்ட் போர்டை பாரத்து ஈவிசாவையும் பார்வையிட்டபடி நாட்டின் மோசமான பொருளாதார நிலையைப் பற்றி குறிப்பிட்டார். விலைவாசியைப் பற்றி குறிப்பிட்டார். ஆட்சியாளர்களைச் சொல்லித் திட்டினார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை நாட்டின் நுழைவாயிலிலேயே உணர முடிந்தது. அதன் பின் என் ஈவிசாவை பார்த்தவர், எனது பாஸ்ட்போட் இலக்கம் பொருந்தவில்லை என்றார். ஈவிசாவுக்கு விண்ணப்பிக்கும் போதே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. பாஸ்போட் இலக்கத்தின் கடைசி இலக்கம் பார்கோட்டுக்கு உரியது அதனை நான் போடத்தவறி இருந்தேன். நான் மீண்டும் ஈவிசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதற்கு செலவாகும். நேரம் எடுக்கும். ஆகவே மேலதிகாரியிடம் பேசுவதாக அழைத்துச் சென்றார் அக்குடிவரவு அதகாரி. மேலதிகாரியும் நாங்கள் இப்படிச் செய்வதில்லை இந்த அலுவலர் கேட்டதால் செய்திருக்கிறேன் என்று அவரை கவனிகச் சொன்னார். பிறகென்ன ஒரு நம்பரை இணைத்ததற்காக அவருக்கு 20 பவுண்கள் (8,000 ரூபாய்) வழங்க வேண்டி இருந்தது. வருபவர்களிடம் இருந்து பணம் கறப்பதற்காகவே இந்தப் பஞ்சப்பாட்டு பாடப்பட்டது என்ற உணர்வே எனக்கு வந்தது.

இதனையெல்லாம் முடித்துக்கொண்டு வெளியே வந்து என்னை அழைத்துச் செல்ல வந்திருந்த நண்பர்களைச் சந்தித்தால் கொழும்பில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் எவ்வித கெடுபிடியும் இல்லை. நேரடியாக கிளிநொச்சி செல்லத் திட்டமிட்டு இருந்த பயணம் கொழும்பில் தங்கிச் செல்வது என்று முடிவானது. ஊரடங்கு மறுநாள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும். இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வரும் சனி, ஞாயிறு தினங்களிலும் ஊரடங்கு போடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. நான் வந்த லிற்றில் எய்ட் நிகழ்வுகள் அந்த சனி, ஞாயிறு (ஏப்ரல் 9, 10) தான் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஊரடங்கு போடப்பட்டதற்கு பிரதான காரணம் மக்கள் போராட்டத்தில் இறங்கி அமைதியின்மை ஏற்படும் என்ற அச்சமே. ஆனால் புத்தாண்டு கொண்டாட்டங்களும் போராட்டங்கள் வலுவில்லாததாலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படாது என்ற எண்ணம் நான் தொடர்பு கொண்டவர்களிடம் இருந்தது. அதனால் நிகழ்ச்சியை திட்டமிட்டபடி சனி, ஞாயிறு தினங்களில் நடத்த முடிவு எடுக்கப்பட்டு அது சிறப்பாகவும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வழமையாக இலங்கை செல்கின்ற போது 20, 25 ரூபாய்களுக்கு தனியார் வாகனத்தை அமர்த்தி செல்வதுதான் வழமை. இரு வாரம் இலங்கையில் தங்கினால் எனக்கு ஒரு லட்சம் வரை போக்குவரத்துக்கு செலவாகிவிடும். இம்முறை அதற்கு மாறாக புகையிரதத்தில் செல்ல தீர்மானித்து திங்கட் கிழமை காலை 5:30 மணி புகையிரதத்தை பிடிக்க புகையிரதம் சென்றோம். காலை 5:35, 6:40, 11:30க்கு யாழ் செல்லும் புகையிரதங்கள் புறப்படும். ஆனால் காலை எட்டு மணிவரை ரிக்கற் கவுன்டர் திறக்கப்படவில்லை. அவை திறக்கப்பட்ட போதும் யாழ் செல்லும் புகையிரதம் செல்லுமா இல்லையா என்று யாரும் சொல்லவில்லை. யாருக்கும் தெரியவில்லை. பாரிய வரிசையில் எந்தத் தகவலும் இல்லாமல் அனைவரும் காத்து இருந்தோம். கைக்குழந்தைகளோடு தாய்மார். வேலைக்குச் செல்பவர்கள் என்று அனைவரும் வேறுவழியில்லாமல் காத்திருந்தனர். நீண்ட காத்திருப்புக்குப் பின் ரிக்கற் கவுண்டரில் உள்ளவர் சொன்னார் “யாழ்ப்பாணம் செல்லும் ரெயின் நிற்கிறது. ஆனால் ரைவர் இன்னமும் வரவில்லை. வரவாரோ தெரியாது” என்று. பல்லாயிரம் பேர் பயணிக்கும் ஒரு புகையிரதத்தின் சாரதி, இரு மணிநேரம் கழித்து வந்த பின்னரே ரிக்கற் வழங்கப்பட்டது. வழமையாக பல்லாயிரம் ரூபாய் செலவழித்து செல்லும் எனக்கு ஆயிரத்து ஐந்நூறு ருபாயோடு ஏசி யுடன் பயணம் சௌகரியமாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட இரு சம்பவங்களுமே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆட்சியாளர்களைத் திட்டுபவர்களும் தாங்களும் அந்த லஞ்சம் ஊழல்களிலேயே வாழ்கின்றனர். அதே போல் தனது கடமையைப் பொறுப்பாகச் செய்ய வேண்டிய ஒரு பணியாளர் பல்லாயிரக்கணக்காணவர்களை அங்கலாய்க்க வைத்து காக்க வைத்து எவ்வித அறிவித்தலும் இல்லாமல் இரு மணிநேரம் தாமதமாகப் பணிக்கு வருகின்றார். அந்த ரெயிலுக்காக காத்திருந்த பல்லாயிரக் கணக்கானவர்கள் சில மணிநேரங்களை இழந்துள்ளனர். இவ்வாறான பொறுப்பற்ற மனிதர்களும் பொறுப்பற்ற நிர்வாகமும் பொறுப்பற்ற அரசியல் வாதிகளும் நாட்டின் பொருளாதாரக் கட்டுமானங்களை நிலைகுலைய வைத்துள்ளனர். இதில் ஆட்சியாளர்களை மட்டும் குற்றசம்சாட்டி சார்புநிலை அரசியல் செய்வது இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு எவ்விதத்திலும் தீர்வாகாது.

ஆட்சியில் உள்ளவர்களின் அதிகார துஸ்பிரயோகம், லஞ்சம், ஊழல் எல்லைகளைக் கடந்தது. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவரது சகபாடிகளும் கொரோனாவுக்காக காலாண்டில் கடன் வாங்கப்பட்ட 200 பில்லியன் பவுணில் 10வீதமான 20 பில்லியனை ஆட்டையைப் போட்டது பிரித்தானிய நாளிதழ்களில் முன்பக்கச் செய்தியாகவே வெளிவந்தது. இலங்கை ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தினரும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல. ஆனால் இன்றைய பொருளாதார நெருக்கடி ஆட்சிக்கு வந்த எல்லா கட்சியினரும் எவ்வாறு மக்கள் பணத்தை ஆட்டையைப் போட்டனர் என்பதல்ல. அதுவும் பல காரணிகளில் ஒன்று.

இது முற்றிலும் இலங்கையின் பொருளாதாரக் கட்டுமானம் பற்றியது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரையுமான இலங்கைப் பொருளாதாரம் இறக்குமதிப் பொருளாதாரமாகவே வளர்ந்து வந்தது. 1971 சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இதில் ஒரு பாரிய மாற்றம், சிறிமாவோ பண்டாரநாயக்கவால் கொண்டுவரப்பட்ட போதிலும் அடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் உலக சந்தைக்கு இலங்கையைத் திறந்துவிட்டு, மேற்குநாடுகளின் நலன்களுக்கு சேவகம் செய்தது. எமது நாட்டின் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு முடிவுப் பொருட்களாக இறக்குமதி செய்யப்பட்டது. ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியாக கீழ்நோக்கி வீழ்ச்சியடைய இறக்குமதிச் செலவீனம் ரொக்கற் வேகத்தில் எகிறியது. போதாக்குறைக்கு 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தம். வருமானம் இல்லாமல் செலவு செய்தோம்.

எண்பதுக்களில் பல கிராமங்களில் மின்சாரம் இருக்கவில்லை, கல்வீடுகள் இருக்கவில்லை, மிதி வண்டிகள் இருந்தது, அத்தியவசியமற்ற பொருட்கள் இருக்கவில்லை, ரிவி இருக்கவில்லை. கார்கள் இருக்கவில்லை. ஆனால் இன்று மின்சாரம் இல்லாத வீடுகள் இல்லை. கொட்டில் வீடுகள் காணமுடிவதில்லை கல்வீடுகள் மட்டுமே, இப்போது மிதிவண்டிகள் இல்லை மோட்டார் சைக்கிள்கள் குவிந்துவிட்டது, வீடுகளில் அத்தியவசியமற்ற பொருட்கள் குவிந்து கிடக்கின்றது, கார்களும் பெருகிவிட்டது. வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டது. கோழி எச்சம் போடுவதால் கோழி வளர்ப்பதில்லை. மோபைல் போனும் சீரியலும் வந்ததால் ஆடு, மாடு வளர்க்க நேரமில்லை. அங்கரில் வாழகின்றோம். வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது.

கோப்ரேட் நிறுவனங்கள் லாபத்திற்காக அறிமுகப்படுத்தும் எல்லாவற்றையும் வாங்கிக் குவித்து சுகபோகம் அனுபவிக்கிறோம். இந்த வாழ்க்கைத் தரம் உழைப்பால் உயரவில்லை. கடனோடு உயர்ந்தது. 16 லட்சம் அரச ஊழியர்கள் தேவைக்கதிகமாக அமர்த்தப்பட்டு உள்ளனர். ஆனாலும் அரச அலுவல் ஒன்றைச் செய்ய மக்கள் இன்னமும் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. கணவர் இறந்து ஓராண்டாகியும் விதவையான சகோதரிக்கு இன்னமும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பெரும்பாலான அரசாங்க ஊழியர்கள் பொறுப்புடன் பணியாற்றத் தயாரில்லை.

வரவு இல்லாமல் செலவு செய்தால் வீடு மட்டுமல்ல நாடும் வங்குரோத்தில் தான் செல்லும். எங்களுடைய நுகர்வுச் கலாச்சாரத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்;. நாடு ஓரளவு தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். இதுவரையான பொருளாதார அணுகுமுறையில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். உள்ளுர் உற்பத்தி ஊக்குவிக்கப்பட வேண்டும். எரிபொருள், மருந்துவகைகள், மற்றும் அத்தியவசிய பொருட்கள் தவிர்ந்த அனைத்து இறக்குமதிகள் மீதும் நிரந்தர கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்.

ஆட்சியாளர்கள் நாட்டின் அன்றாட சூழ்நிலையை கணக்கிலெடுத்து நாளுக்கு நாள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றாமல் நீண்ட கால பொருளாதார திட்டங்களை முன்வைக்க வேண்டும். அதற்கு முதற்படியாக:
1. கடன்களை மீளச்செலுத்த முடியாது என அறிவிக்க வேண்டும்
2. சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தக்கூடாது – அதன் நிபந்தனைகள் நிராகரிக்கப்பட வேண்டும்
3. இறக்குமதிகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்
4. ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும்
5. தன்நிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நாடு நகர வேண்டும்

நாட்டு மக்களுக்கு ஏன் நாடு இந்நிலைக்கு தள்ளப்பட்டது என்ற உண்மையை ஆட்சியாளர்கள் விளக்கி, மேற்குறிப்பிட்டவற்றை உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்து, அதன்படி செயற்பட வேண்டும். இன்று ஆட்சியாளர்கள் பலவீனமாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் அதனிலும் பலவீனமானதாகவே இருக்கின்றன. சிறுபான்மைக் கட்சிகள் அரசியல் ஜோக்கர்களாக மாறி நீண்ட காலமாகிவிட்டது. அவர்கள் தங்கள் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவர்களுக்கு தங்கள் குறுகிய அரசியல் நலன்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.

மேற்குறிப்பிட்ட அதிரடி நடவடிக்கைகள் ஒரு குறுகிய காலத்திற்கு சில ஆண்டுகளுக்கு மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே. ஆனால் இந்நடவடிக்கைகள் நீண்ட காலத்தில் இலங்கைக்கு பாரிய நன்மை பயப்பதுடன் மக்களின் வாழ்நிலையிலும் வாழ்க்கைத் தரத்திலும் உண்மையான உயர்வை ஏற்படுத்தும்.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்கள் பற்றி கிளிநொச்சி செய்தியாளர் குறிப்பிடுகையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கிளிநொச்சியில் போராட்டம் ஒன்றைச் செய்ய ஒரு லட்சம் வழங்கியதாகவும் அப்போராட்டத்தில் 20 பேர் மட்டுமே கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார். எனது பயணத்தின் இறுதியாக ஏப்ரல் 13 மீண்டும் கொழும்பு திரும்பினேன். அப்போது காலிமுகத்திடலில் நிகழும் சுழற்சிமுறைப் போராட்டம் பற்றி பேசிக்கொண்டோம். அங்கு சென்று கடற்கரையோரத்தில் பொழுதைகழித்துவிட்டு வந்தால் உணவு குளிர்பானம் என்று ஒரு விடுமுறையைக் கழிப்பது போல் பன்பலாக இருக்கும் என்றனர். மறுநாள் நேரே சென்று பார்த்தேன் கடற்கரையை அண்மித்து விடுமுறைக் கழியாட்டம் போல் தான் இருந்தது. காரில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு போராடிக்கொண்டிருந்தனர். உணவு, குடிபானங்கள் விநியோகிக்கப்பட்டது. வந்தவர்கள் ரென்ற் அடித்து கடற்கரை காற்றையும் ரசித்து போராட்டத்தையும் நடத்தினர். மற்றும்படி வறுமைக் கோட்டில் இருந்த யாரும் அங்கு போராடியதாகத் தெரியவில்லை. காலிமுகத்திடல் போராட்டமானது நடுத்தர வர்க்கமும் அல்ல அதற்கும் மேல் கார் வைத்திருக்கக் கூடிய நடுத்தர வர்க்கத்தால் நடத்தப்படுகின்ற போராட்டம். அதில் நானும் கலந்து சிறப்பித்தேன்.

எனது பயணத்தின் ஒரு கட்டமாக லிற்றில் எய்ட் மாணவர்களைக் கூட்டிக்கொண்டு சிகிரியா, அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவு சென்று ஆடிப் பாடி கொண்டாடித் திரும்பினோம். நாம் சென்ற போது யாழ்ப்பாணம் கிளிநொச்சி பிரதேசங்களில் இருந்தும் வாகனங்களில் சுற்றுலா வந்திருந்தனர். தையல் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு குழவினரும் சுற்றுலா வந்திருந்தனர். நாம் நாற்பது பேர் சுற்றுலா சென்றோம். 45 பார்சல்கள் எடுத்து இருந்தோம். வாங்கிய சாப்பாடுகளில் 5 பார்சல்கள் மிஞ்சிவிட்டது. அதனை யாரும் பிச்சை எடுப்பவர்களிடம் கொடுக்கலாம் என்றால் சிகிரியாவில் இருந்து அனுராதபுரம் ஊடாக கிளிநொச்சிவரை யாரும் பிச்சை எடுப்பதை பார்க்கவில்லை. அப்பார்சல்களை யாரும் வீட்டுக்கு கொண்டு செல்லவும் தயாரில்லை. நானே கொண்டு சென்று என்வீட்டார் மறுநாள் சாப்பிட்டனர்.

ஆனால் லண்டன் வந்து இருநாட்களில் சூம்மீட்டிங்கில் இலங்கை பட்டினிச்சாவை நோக்கி நகர்வதாக பெரும்கதையாடல் நடந்தது. மருந்து இல்லாமல் மக்கள் உயிராபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த உரையாடல்கள் என் அனுபவத்திற்கு முற்றிலும் எதிர்மாறானதாகவே இருந்தது. அங்கு யாரும் பட்டினியின் விளிம்பில் இல்லை. உண்மை நிலை என்னவென்றால் இலங்கை முழவதுமே பல்வேறுதுறைசார்ந்த வேலைகளுக்கும் ஆட்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. வெள்ளிக்கிழமை வேலைக்கு வருபவர் மீண்டும் திங்கட்கிழமை விடுமுறை கழித்து வேலைக்கு வருவாரா என்ற பதட்டத்தில் வியாபார நிறுவனங்கள் இருக்கின்றன. கிளிநொச்சியில் மருத்துவரொருவரால் இரு மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட போனிக்ஸ ; என்ற உணவகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பணியாற்றுபவர்கள் எல்லோருமே மலையகத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்த முகாமையாளரிடம், ஏன் கிளிநொச்சியில் வேலைக்கு ஆட்கள் இல்லையா என்று கேட்டேன். அவர்கள் யாரும் ஓரிருநாட்களுக்கு மேல் நிற்பதில்லை என்றார். என்ன சம்பளம் வழங்குகிறீர்கள் என்று கேட்டேன். உணவு தயாரிப்பவருக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என்றும் வெய்ற்ரேஸ்க்கு நாற்பதினாயிரம் வழங்குவதாகவும் தெரிவித்தார். நான் அங்கு சென்ற செவ்வாய் அன்று அவர்கள் எல்லோரும் புத்தாண்டுக்கு ஊருக்குச் செல்வதால் உணவகம் சிலநாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. என்னோடு பேசிய முகாமையாளருக்கு இருக்கும் பதட்டம் இவர்களில் எத்தனை பேர் திரும்பி வேலைக்கு வருவார்கள் என்பது.

ஆனால் நான் இலங்கை செல்வதற்கு சில வாரங்களுக்கு முன் பிரித்தானியாவில் உள்ள பி அன் ஓ நிறுவனம் 850 பணியாளர்களை எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் வேலையால் நிறுத்திவிட்டு தொழில் முகவர்களுக்கூடாக குறைந்த சம்பளத்திற்கு ஆட்களை எடுத்தனர். பிரித்தானிய அரசு மிரட்டிப்பார்த்தும் எதுவும் ஆகவில்லை. ஆனால் இலங்கையிலோ அரசு 16 லட்சம் அரச ஊழியர்களை தேவைக்கதிகமாக வைத்து சம்பளம் வழங்குகிறது.

கிளிநொச்சி பகுதியில் பல்வேறு வேலைகளுக்கும் ஆட்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகக் கடினமாகி உள்ளது. ஏனைய நாடுகளைப் போல் இலங்கையிலும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் எரிபொருட்களின் விலை உயர்வாலும் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து செல்கின்றது என்பது உண்மையே. ஆனாலும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையை அவர்களால் சில அசௌகரியங்களுடன் முன்னெடுக்க முடிகின்றது. எரிபொருளே அங்கு முக்கிய சிரமத்தை ஏற்படுத்துகிறது. மின் வெட்டுக்கும் அதுவே காரணம். இதே வகையான பிரச்சினைகளை உலகின் பல நாடுகள் எதிர்கொள்கின்றன. அதில் இலங்கையும் ஒன்று.

2009 ஈவிரக்கமற்ற முறையில் தமிழீழ விடுதலைப் புலிகளை மௌனிக்க வைத்ததால் தமிழ் மக்கள் ராஜபக்ச குடும்பத்தினர் மீது மிகக் கடுப்பிலேயே உள்ளனர். ராஜபக்சக்களின் இனவாதக் கருத்துக்கள் நடவடிக்கைகள் காரணமாக முஸ்லீம், கிறிஸ்தவர் தரப்பிலும் மிகக் கடுமையான எதிர்ப்பு உள்ளது. அரசியல் எதிரிகளுக்கு எவ்வித குறைச்சலும் இல்லை. மேற்கு நாடுகளின் கிடுக்குப் பிடிக்குள் விழாமல் இருப்பதால் அந்நாடுகள் ராஜபக்சாக்களை ஒரு வழி பண்ண வேண்டும் என்ற அங்கலாய்ப்பில் உள்ளனர். இந்த சூழலைப் பயன்படுத்தி தவித்த முயல் அடிக்கும் போட்டியில் ஆளுக்கொரு பொல்லுக் கட்டையுடன் பல முதலைகள் கண்ணீர் வடித்தபடி காத்திருக்கின்றன. ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் அழுத கதைதான்.

இலங்கை அரசாங்கம் அதிகம் கடன் வாங்கியதும் நாட்டை அடகு வைத்துள்ளதும் இந்தியாவிடம் தான். தங்களின் இன்னொரு மாநிலமாக இலங்கையை அறிவிக்கவும் தயார் எனப் பகிடி விடும் அளவுக்கு இந்திய அமைச்சர்கள் வந்துவிட்டனர். ஆனால் சீனாவால் தான் தாங்கள் நாசமாய் போனதாக இலங்கை மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியம் ஏதோ இலங்கை மக்களை மீட்க வரவேண்டும் என்ற போக்கில் கதையளப்புகள் நடைபெறுகிறது. சுர்வதேச நாணய நிதியம் இலங்கை மக்களையும் நாட்டையும் பாழங்கிணற்றினுள் தள்ளுவதற்கே வழி செய்யும். 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கு நாடுகளும் அதன் காப்ரேட் நிறுவனங்களும் இலங்கையை கொள்ளையிடவும் சுரண்டவும் கதவுகளைத் திறந்துவிட்டது. தங்களுடைய லாபத்திற்காக உள்ளுர் உற்பத்திகளை பலவீனமாக்கி அழித்து இறக்குமதியை ஊக்குவித்தது. அதன் ஒட்டுமொத்த விளைவுகளே இவை. ராஜபக்சாக்களும் ஏனைய ஆட்சியாளர்களும் கொள்ளையடித்தது உண்மைதான். ஊசி போகின்ற அளவு என்றால் இந்த சர்வதேச நாணய நிதியமும் மேற்கு நாடுகளும் இந்தியாவும் அடித்தது உலக்கை போகின்ற அளவு கொள்ளை.

இந்தியா தனது நலனுக்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தூண்டிவிட்டு கூத்தடித்தது. இப்போது தான் இலங்கை மக்களை காப்பாற்றுதவதாக நாடகம் போடுகின்றது. தன் மக்கள் பட்டினியால் இறக்க, சாதியின் பெயரால் கொல்லப்பட இந்தியா இலைங்கையர்களுக்கு உதவுகின்றதாம். இலங்கை தன்னுடைய கடன்களை செலுத்த முடியாது என்று அறிவித்தால் முதல் பாதிப்பு இந்தியாவுக்குத் தான். அதனால் தான் இந்தியா இலங்கைக்கு முண்டுகொடுக்கின்றது. இலங்கையர்கள் மீதுள்ள அனுதாபத்தால் அல்ல.

நான் இலங்கையில் இருந்து மீண்டும் லண்டன் திரும்பும் போது மாலைதீவி, பஹ்ரெயின் வழியாகவே திரும்பினேன். கொழும்பில் இருந்து மாலைதீவு வரை விமானத்தில் விமானப் பணியாளர்களைத் தவிர நான் மட்டுமே பயணித்தேன். மாலைவீதில் விமானம் நிரம்பியது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வீழ்ச்சியையே அது பிரதிபலித்தது. நாடு பொருளாதாரத்தில் திண்டாட நாட்டில் பயங்கரமான நிலை நிலவுகின்றது என்ற மாயை சர்வதேச ரீதியில் கட்டமைக்கப்பட்டுவிட்டது. அதனால் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வரவில்லை. பொருளாதராரத்தை ஈட்ட முடியவில்லை. கோவிட் பிரச்சினை மேற்கு நாடுகளால் எண்ணை வாரத்து உக்ரெயினில் வளர்க்கப்படும் போர்த் தீ இலங்கை போன் மூன்றாம் உலகநாடுகளில் பாரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும்.

ஆனால் இந்தப் பின்னடைவை ஒரு வரப்பிரசாதமாகப் பயன்படுத்தி நாட்டில் சீரான தன்னிறைவு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் முயற்சிக்க வேண்டும். இலங்கையில் தற்போது 60 வீதம் நிலக்கரி மூலமான மின்சாரமும் 40 வீதம் நீர்வீழ்ச்சி மற்றும் மீள்சக்தி மூலமான மின்சாரமும் பிறப்பிக்கப்படுகின்றது. 60 வீத மின்சார வெட்டுக்குக் காரணம் நிலக்கரியை வாங்குவதற்கு நிதி இல்லாமையே. ஆனால் வெய்யிலும், காற்றும் உள்ள இலங்கையில் மீள்சக்தியூடான மின்சார உருவாக்கத்தை அதிகரித்து மின்சாரத்தில் தன்னிறைவை நோக்கி இலங்கை செல்ல முடியும் என்கிறார் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட பேராசிரியர் அ அற்புதராஜா. அரசு 2030இல் நிலக்கரி : மீள்சக்சி மின்சாரத்தை 60 : 40 இல் இருந்து 40 : 60 மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இவை தொடர்பான பாரிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நெருக்கடி நிலையை நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் சாதகமாகப் பயன்படுத்தி நாட்டை தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அரச வேலை வாய்ப்புகள் வீழ்ச்சியடையும்!! 16 லட்சம் அரச ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளனர்!!! – லிற்றில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முன்னாள் பா உ மு சந்திரகுமார்

அடுத்த பத்து ஆண்டுகளில் அரச வேலை வாய்ப்புகள் கடுமையாக மட்டுப்படுத்தப்படும் என லிற்றில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று நாடுள்ள நெருக்கடி நிலையில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவைச் செலுத்துவதிலேயே கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்றும் இந்நிலையில் புதிய தொழில் வாய்ப்புகளை வழங்குவது என்பது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக கிளிநொச்சியில் இயங்கி வரும் லிற்றில் எய்ட் அமைப்பின் 2022ம் ஆண்டின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் 10 April மிகச் சிறப்பாக இடம்பெற்றது. 200 பேர் மட்டுமே கொள்ளக் கூடிய மண்டபத்தில் 350 பேர்வரை கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். 250 மாணவர்கள் கணணி வன்பொருள் கற்கை, கணணி மென்பொருள் கற்கை, வடிவமைப்பு, தையல் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் டிப்ளோமா கற்கைகளைப் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு ஆசியுரை வழங்கிய ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோயில் பிரதம குரு முத்துகமார குருக்கள் சிவஸ்ரீ மகேஷ்வரநாத சர்மா, அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களை அடக்கி ஒடுக்குவதாகவும் ஆனால் லிற்றில் எய்ட் போன்ற அமைப்பு கீழேயுள்ள மக்களை கல்வியறிவூட்டி வளர்த்துவிடுவதாகவும் தெரிவித்தார்.

கருணா நிலைய குரு எஸ் கே டானியல் தனது ஆசியுரையில் லிற்றில் எய்ட் இவ்வளவு தொகையான மாணவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் இவ்வளவு தொகையான மாணவர்களுக்கு கல்வியும் சமூகப் பண்புமூட்டி அவர்களை நல்வழியில் பயணிக்கச் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மாற்றங்களை யாரும் இலகுவில் ஏற்றுக்கொள்வதில்லை ஆனால் லிற்றில் எய்ட் தங்களிடம் வரும் மாணவர்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை ஆளுமைகளாக விருத்தி செய்து அனுப்புவதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்வு லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. அவர் தனதுரையில் இச்சான்றிதழ்கள் கற்கையின் முற்றுப்புள்ளி அல்ல என்றும் சேர் ஐசாக் நீயூட்டன் குறிப்பிட்டது போல் நாம் கற்ற ஒரு துளிக்கல்விக்கான அத்தாட்சி மட்டுமே என்றும் கல்லாதது சமுத்திரத்தின் அளவானது என்பதைச் சுட்டிக்காட்டினார். பெறுபேறுகள், சான்றிதழ்கள், பட்டங்கள் அல்ல கல்வி எனக் குறிப்பிட்ட அவர், கல்வி என்பது அவற்றையும் கடந்தது எனத் தெரிவித்தார்.

வன்னி மண் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால் பல்வேறு சமூகச் சிக்கல்களை எதிர்கொள்கின்றது என்பதைச் கூட்டிக்காட்டிய த ஜெயபாலன் இளைஞர் வன்முறை, போதைவஸ்து பழக்கம், இளவயதுத் திருமணங்கள், வீதி விபத்துக்கள் மற்றும் இவற்றின் ஒட்டுமொத்த தாக்கமாக கல்வி வீழ்சி என்பன வன்னி மண் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை என்றும் இவற்றுக்கு மற்றவர்கள் மீது பழிபோடுவதைத் தவிர்த்து இதற்கான தீர்வைப் பற்றி தமிழர்கள் நாம் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜி தர்மநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசிய அவர் தொழில்நுட்ப அறிவு இல்லாமால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது கடினமாக இருக்கும் எனத் தெரிவித்தார். மாணவர்கள் நேரான (பொசிடிவ்) எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எமது பாரம்பரியமான ஆமையும் முயலும் கதை போல் அல்லாமல் ஆமையும் முயலும்; இணைந்து கூட்டாக தரையிலும் திண்ணீரிலும் செயற்படுவதன் மூலம் கூட்டு உழைப்பின் முக்கியத்துவதை;தை விளக்கினார் தர்மநாதன் விளக்கினார்.

லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தொடர்ந்தும் உரையாற்றுகையில் இன்றைய பொருளாதார நெருக்கடிகள் பற்றியும் குறிப்பிட்டார். இன்றைய நெருக்கடியான சூழலைக் கண்டு நாங்கள் அஞ்ச வேண்டியதில்லை என்றும் நெருக்கடியான காலகட்டங்களிலேயே மனித குலம் புதிய திருப்பு முனைகளை கண்டுகொண்டது வரலாறு என்றும். ஐரோப்பாவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகக் காரணம் அம்மக்கள் எதிர்கொண்ட அசாதாரண காலநிலை. அதுபோல் எமது நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி எமது கல்வியலாளர்களையும், மாணவர்களையும், வர்த்தகர்களையும், அரசியல்வாதிகளையும் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டும் எனத் தெரிவித்தார். மாணவர்களாகிய நீங்கள் இன்று கற்பது நாளை உருவாகப் போகின்ற பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண்பதற்காகவே அல்லாமல் வெறும் பெறுபேறுகளுக்காக, சான்றிதழ்களுக்காக, பட்டங்களுக்காக என்று குறுக்கிவிடாதீர்கள் எனத் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகளைப் பற்றி விதந்துரைத்த முனானாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் லிற்றில் எய்ட் எவ்வளவு சிரமங்களின் மத்தியில் இம்மண்ணில் செயற்பட்டு தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதற்கு காலம்சென்ற வி சிவஜோதியின் அர்ப்பணிப்பு மகத்தானது எனத் தெரிவித்தார். மு சந்திரகுமார் மேலும் குறிப்பிடுகையில் த ஜெயபாலன் கல்வியைக் கற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதை தனது சொந்த அனுபவத்தினூடாக மாணவர்களுக்குக் காட்டியவர் என்றும் எதிர்காலத்தில் அரச வேலைகளுக்காகக் காத்திராமல் தனியார் துறைகளிலும் சொந்த தொழில் முயற்சிகளை உருவாக்குவதிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்தார். சந்திரகுமார் மேலும் குறிப்பிடுகையில் அரசதுறையில் 16 லட்சம் பேர் தேவைக்கதிகமாக வேலைக்கமர்த்தப்பட்டு உள்ளதாகவும் கடந்த கால அரசுகளின் திட்டமிடப்படாத பொருளாதார நடவடிக்கைகளே நாட்டினை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

நாங்கள் விழுமியங்களை இழந்துவருகின்றோம் எனச் சுட்டிக்காட்டிய கிளி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய அதிபர் பெருமாள் கணேசன்; இலங்கையில் தமிழர்கள் மத்தியில் விழுமியங்களை முன்னெடுக்க எவரும் முன்வரவில்லை எனத் தெரிவித்தார். தெற்கில் அனாகரிக தர்மபால சிங்கள மக்களின் விழுமியங்களை முன்வைத்து அவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் தமிழ் தரப்பில் ஆறுமுகநாவலர் அதனைச் செய்யத்தவறியதை பெருமாள் கணேசன் அங்கு சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி மண்ணில் இவ்வளவு திரளான இளம் தலைமுறையினரை காண்பதும் அவர்களைக் கொண்டு லிற்றில் பேர்ட்ஸ் என்ற இந்த சஞ்சிகையை வெளியிட்டு இருப்பதும் ஒரு போற்றுதற்குரிய விடயம் எனவும் பெருமாள்கணேசன்; தனது நயவுரையில் குறிப்பிட்டார். லண்டன் மெயிலாக, த ஜெயபாலன் லிற்றில் மாமா என்ற என்ற பெயரில், “தமிழ் சமூகத்தில் கல்வியும் அறிவும் வெறுமனே பாடப் புத்தகங்களுக்குள்ளும் சான்றிதழ்களுக்குள்ளும் முடக்கப்பட்டு, உண்மையான கல்வி, அறிவு என்பன தொலைக்கப்பட்டு விட்டது” என்ற குறிப்பைச் சுட்டிக்காட்டிய அவர் எழுதவும் வாசிக்கவும் லிற்றில் எய்ட் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வரவேற்றோர். சஞ்சிகையில் வெளியான ஒவ்வொரு ஆக்கத்தையும் தனது ஆய்வுக்கு உட்படுத்திய பெருமாள்கணேசன் தனது மதிப்பீட்டை மிகக் காத்திரமாக முன்வைத்தார். கிளிநொச்சியின் ஆளுமைகளை இனம்கண்டு அவர்களது நேர்காணலை பதிவு செய்ததை விதந்துரைத்த அவர் சிறுவர் சஞ்சிகையில் சித்திரக் கதைகள், நாடகக் கதைகள், சித்திரங்கள் என்பனவும் எதிர்கால இதழ்களில் சேர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழக மாணவன் சனோசன் பத்மசேனன தன்னுரையில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு எண்ணம் போல் வாழ்வதன் அவசியத்தையும் சிறந்த எண்ணங்களை உருவாக்க்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இதுவொரு சம்பிரதாயபூர்வமான நன்றியுரையல்ல எனக்குறிப்பிட்ட லிற்றில் எய்ட் ஆசிரியை பவதாரணி அனைவரதும் ஒத்துழைப்பும் இன்றி இந்த சான்றிதழ் வழங்கும் இந்நிகழவை இவ்வளவு சிறப்பாகச் செய்திருக்க முடியாது எனத் தெரிவித்தார். நன்றியுரைக்குப் பின் மாணவர்கள் தங்களுக்குள் பாடல்களைப் பாடியும் ஆடியும் தங்கள் தகமையடைவைக் கொண்டாடினர்.

உரைகளின் நடவே மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பரிசுகள், ஆசிரியர்களுக்கான கௌரவிப்புகள் எனபன இடம்பெற்றன. கல்வியியலாளர்கள் நைற்றா பரீட்சைப் பரிசோதகர் – அபிமன், ஐசிரி கற்கைகளுக்கான சோனல் டிரெக்டர் சந்திரமோகன், அதிபர் வட்டக்கட்சி ஆரம்பப் பாடசாலை பங்கயற்செல்வன், அதிபர் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் பெருமாள்கணேசன், அதிபர் கிளிநொச்சி விவேகானந்த கல்லூரி திருமதி ஜெயா மாணிக்கவாசகர், முன்னாள் தையல் ஆசிரியர் ஹேமமாலினி உதயகுமார் ஆகியோர் மாணவர்களுக்கான சான்ஙிதழ்களை வழங்கினர். மாணவர்களும் மாணவிகளும் ஆரவாரத்துடன் தொழில்சார் ஆடைகளை அணிந்து வந்து தங்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் முடிவில் தையல் மற்றும் வடிவமைப்பு கலைகளில் பயிற்சி பெற்ற மாணவர்கள் உருவாக்கிய அழகியல் பொருட்கள் ஆடைகள் என்பன காட்சிப்படுத்தப்படட்டு விற்பனையும் இடம்பெற்றது. இப்பொருட்களை எதிர்காலத்தில் ஒன்லைனில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஆசிரியை அனுஷியா ஜெயநேசன் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இரு மணிநேரம் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

 

புலிப்பொறியினுள் வீழ்ந்த தீப்பொறி புளொட்டின் புலியின் இன்னுமொரு பிரதிபலிப்பே – பகுதி 35

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 35 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 15.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 35

தேசம்: இந்த புலம்பெயர் அரசியல் சூழலில் நாங்கள் பல்வேறு அரசியல் இலக்கிய நகர்வுகளை பார்த்திருக்கிறோம். நீங்கள் வந்த 92ஆம் ஆண்டு காலப்பகுதியில் தீப்பொறியும் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. இவ்வளவு அரசியலிலும் ஈடுபட்ட நீங்கள், தீப்பொறி அமைப்பிலிருந்து போன ஆட்களோடு அமைப்பிலும் இருந்திருக்கிறீர்கள் தொடர்பிலும் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் ஏன் அவர்களோடு ஒரு அரசியல் இணக்கப்பாட்டையோ தீப்பொறியை மீளக் கட்டமைக்கின்ற அந்த விடயங்களில் செயல்படவில்லை? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ஏனென்றால் அவர்களுக்கும் 92 காலப்பகுதியில் இருந்து 2010 அதற்கு பிற்பாடும் தமிழீழ மக்கள் கட்சி, பிறகு மே 18 என்ற ஒரு தொடர்ச்சி இருக்குதானே. அது எதிலயும் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ளவில்லை. என்ன காரணம்?

அசோக்: ஓம் 86 ஆம் ஆண்டில் பின் தளத்தில் நடந்த மத்திய குழுக் கூட்டத்தில் இருந்து தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் வெளியேற அதன் பிறகு சந்திக்கவும் இல்லை. தொடர்வும் இருக்கவில்லை. நாங்களும் இயக்கத்தினுள் உட்கட்சிப் போராட்டம், தள மகாநாடு, பின் தள மகாநாடு என பிரச்னைகளில் முழ்கி இருந்த நேரம். அவர்களும் சந்திக்கவில்லை. நானும் முயலவில்லை. நான் இங்கு ஐரோப்பாவுக்கு வந்து தான் அவரை சந்திக்கிறேன். தொடர்பு கிடைக்குது எனக்கு. அவர் கனடாவில் இருக்கிறார். நான் பிரான்சுக்கு வந்துட்டேன்.

தேசம்: அது 2016இல் நடக்குது என? அதற்கு முதலே கண்டீர்களா?

அசோக்: இல்லை. இங்க வந்து தான் சந்திக்கிறேன்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் நீங்கள் தொலைபேசி உரையாடலில் இருந்தீர்கள்? 90களில்…

அசோக்: வந்து கொஞ்ச காலம் அவர் தலைமறைவாக இருந்தார். அதற்குப் பிற்பாடு அவருக்கும் எனக்குமான உறவு வருது. அப்போ தமிழீழ மக்கள் கட்சி உருவாகிவிட்டது என்று நினைக்கிறேன்.

தேசம்: தமிழீழ மக்கள் கட்சி நான் நினைக்கிறேன் ஆனையிறவு தாக்குதல் கட்டத்தில்தான் உருவாகுது. அதற்கு முதல் அவர்கள் தீப்பொறி என்ற பெயரில் தான்…

அசோக்: எனக்கு நல்ல ஞாபகம் கனடாவிலிருந்து ரவி என்று சொல்லி அவரின் உண்மையான பெயர் இளங்கோ என நினைக்கிறேன். அவர் பாரிசுக்கு வாரார். வந்த இடத்தில் அவர் என்னை சந்திக்கிறார். தீப்பொறியா தமிழீழ மக்கள் கட்சியா என்று தெரியவில்லை. அந்தக் கட்சியினுடைய பத்திரிகை ஒன்று கொண்டு வந்தவர்.

தேசம்: தமிழீழ மக்கள் கட்சி ஒரு பத்திரிகை யை வெளியிட்டது.

அசோக்: அந்தக் கட்சி பத்திரிகையோடு வந்து என்னை சந்திக்கிறார்.

தேசம்: அதற்கு முதல் உங்களோடு தொடர்பு கொள்ளவில்லையா?

அசோக்: அந்த கட்சியோடு எந்த தொடர்பும் இருக்கவில்லை. முதலில் தீப்பொறி என்ற பெயரில் இயங்கிய அமைப்பு பிறகு தமிழீழ மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது என நினைக்கிறேன்.

தேசம்: …. சுவிஸ் மாநாடு ஒன்று நடத்தினது தானே.

அசோக்: சுவிஸ் சில் அல்ல. தாய்லாந்தில் இந்த மாநாடு நடக்குது. சபாலிங்கம் தோழர் இங்கே படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் தான் இந்த மாநாடு நடக்குது. 94 ஏப்ரல் கடைசி காலங்களில் மே முதல் வாரத்தில நடந்த தென நினைக்கிறேன். ஏனென்றால் எனக்கு தெரிந்த தோழர்கள் சிலர் இந்த மாநாட்டிக்கு சென்றிருந்தனர்.

தேசம்: அப்போ நீங்கள் அவர்களோடு தொடர்பு இல்லை.

அசோக்: அரசியல் சார்ந்து அந்த அமைப்போடு நான் எந்த தொடர்பும் வைத்துக் கெதள்ளவிரும்பவில்லை.

தேசம்: அவர்களும் உங்களோடு தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.

அசோக்: அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மீது தீப்பொறி மீது எனக்கு கடும் விமர்சனம் இருக்கு என்று. ஏனென்றால் கண்ணாடி சந்திரன், நேசன் தொடர்பாக கடும் விமர்சனம் இருக்குதானே. அவங்களும் தீப்பொறியில் இருக்கிறபடியால் தெரியும் நான் தீப்பொறிக்குள் வரமாட்டேன் என்று. நேசன், கண்ணாடி சந்திரன், பாண்டி போன்ற யார் யாரெல்லாம் புளொட்டுக்குள்ள மிக மோசமாக அதிகாரதுஸ்பிரயோகம் செய்தார்களோ, பல்வேறு தவறுகளுக்கு உடந்தையாக இருந்தார்களோ அவர்கள் தான் தீப்பொறிக்குள் இருக்கிறார்கள். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் புளொட்டில் இருந்து கடைசி வரை உட்கட்சிப் போராட்டம் நடாத்தி வெளியேறிய தோழர்கள் எவரும் தீப்பொறிக்குள் இல்லை.

இவர்களுடைய அரசியல் நடவடிக்கைகள் கடந்தகாலம் பற்றி தெரிந்த யாருமே அதற்குள் போகத் தயாராக இல்லை. ரகுமான் ஜான் தோழர் தொடர்பாக நல்ல அபிப்ராயம் இருக்கலாம். ஆனால் அவரை நம்பி யாரும் போக மாட்டார்கள். அவர் கோட்பாடு சார்ந்து சிந்திக்கக் கூடியவர். ஆனால் செயற்பாட்டு நடைமுறை தளத்தில் சரியாக அவரால் செயற்பட முடிவதில்லை. வழி நடத்தும் திறன் அவரிடம் இருப்பதில்லை.

அப்போ இளங்கோ வாரார் என்னை சந்திப்பதற்கு வந்து அந்த பத்திரிக்கையைத் தந்து அதனுடைய கொள்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

தேசம்: இவர் விடுதலைப் புலிகளில் இருந்து வந்தவரா?

அசோக்: அதற்குப் பிறகுதான் தெரியும் இவர் விடுதலைப்புலிகளில் இருந்தவர் என்றும் கிட்டுவினனுடைய வொடிகாட்ஸ் சாக இருந்தவர் என்றும். அவரும் தீப்பொறிக்குள் இருக்கிறார். அவர்தான் என்னை சந்திக்க வாரார். இந்த சந்திப்பு கலைச்செல்வனுடைய வீட்ட தான் நடக்குது.

தேசம்: கலைச்செல்வனும், லக்ஷ்மியும் தீப்பொறியில் இருக்கிறார்கள்…?

அசோக்: அந்தக் காலகட்டத்தில் அங்க வந்தபடியால் அவர்களுக்கு தொடர்வு இருந்திருக்கலாம். தாய்லாந்து மாநாட்டுக்கு கலைச்செல்வனும், லக்ஷ்மியும் போனது தெரியும். ஏனென்றால் சபாலிங்கம் படுகொலை செய்யப்படும் போது அவர்கள் இங்கு இல்லை. மரண இறுதி நிகழ்வுகளுக்தான் வந்தவர்கள்.

இளங்கோ கொள்கைப் பிரகடனம் எல்லாம் கதைக்கிறார். அவர் கதைத்து முடிய நான் கேட்டேன் ஏன் புதிய அமைப்பை தொடங்குகிறீர்கள் புலிகளோடு சேர்ந்து வேலை செய்யலாம் தானே என்று. ஏனென்றால் அதே இராணுவக் கண்ணோட்டம் அதே தமிழீழம். நான் சொன்னேன் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று சொல்லி அந்த பேச்சை அப்படியே ஆரோக்கியமாக முடித்துக்கொண்டோம். அதற்குப் பிற்பாடு எந்தவிதமான தொடர்பும் என்னுடன் வைத்துக் கொள்ளவில்லை. ரகுமான் ஜான் தோழருடன் தொடர்பு இருந்தது. அவர் இங்க பாரிசுக்கு மூன்று தடவை வந்தார். தீப்பொறி எல்லாம் உடைந்த பிறகுதான் பாரிசுக்கு வந்தவர். அவருக்கு தெரியும் கடும் விமர்சனங்கள் இருக்கிறபடியால் நான் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யமாட்டேன் என்று முதலே தெரிந்திருக்கும்.

தேசம்: உங்கள் விமர்சனங்களை தோழர் ரகுமான் ஜானிடம் வைத்துள்ளீர்களா?

அசோக்: ரகுமான் ஜான் தோழர் இங்கு வந்தபோது கடும் விவாதம். நீங்கள் எந்த அடிப்படையில் தோழர்களை விட்டுப்போட்டு போனீர்கள்? நாங்களும் விட்டுட்டு போயிருக்கலாம் தானே? நீங்கள் உண்மையிலேயே உட்கட்சி போராட்டம் நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் நாட்டுக்கு வந்திருக்கலாம். ஏன் எங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லையா? நாங்களும் தோழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தானே தளத்துக்கு போய் தள மாநாடு நடத்துறோம், நீங்கள் எங்களோடு வந்து இருந்தால் எவ்வளவு உறுதியான மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். கடைசியா தீப்பொறியை உருவாக்கி என்னத்தை நாங்கள் சாதித்தோம்? யாரும் உங்களோடு வரவே இல்லை, அதுவும் அதே புலிக் குணாம்சம். புளொட்டின் இன்னொரு பிரதி பிம்பமாக கூட தீப்பொறி இருக்கவில்லை. அதை விட மிக மோசமாக இருந்தது என்பதுதான் உண்மை என்று கடும் உரையாடல்.

நாட்டில் நடந்த ஆரம்பகால அனைத்து தவறுகளுக்கும் உடந்தையாக இருந்தது தீப்பொறியில் இருந்த ஆட்கள் தான். நாட்டில் குறிப்பிட்ட காலங்களில் நடந்த படுகொலைகளுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பாக இருந்தது நேசனும், கண்ணாடிச் சந்திரனும் தான். மத்தியதர வர்க்க குணாம்சம் இருக்கும்தானே அந்த சொகுசுகளை அனுபவிப்பது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பை எப்படி சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்கள் என்று சொல்லி எனக்கு தான் தெரியும். அதை நான் கண்ணால் பார்த்தேன். இவர்களை நம்பி நாங்கள் எப்படி போக முடியும்?

தேசம்: தோழர் ரீட்டாவின் மீதான பாலியல் பலாக்காரம் தொடர்பாக என்ன அபிப்பிராயம்?

அசோக்: இந்த பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட நேசன், ஜீவன் நந்தா கந்தசாமி அவங்க இரண்டு பேரும் நேரடியாக சம்பந்தப்படவில்லை. பாண்டி நேரடியாக சம்பந்தப்பட்டவர். அவர்களை இன்று வரையிலும் பாதுகாத்துக் கொண்டு நியாயப்படுத்தி கொண்டிருக்கின்ற நபர்கள் என்றால் அப்போது எப்படி இருந்திருப்பார்கள்? குறைந்தபட்சம் ஒரு சுயவிமர்சனம் வேண்டாமா? புளாட்டை போன்றே மோசமான அமைப்பாக தீப்பொறி இருந்தது.

தேசம்: அதைவிட மோசமாக போயிட்டுது…

அசோக்: தோழர் ரீட்டா தொடர்பான பிரச்சனையை ஜென்னியின் திட்டமிட்ட நாடகம் என்றார்கள். பிறகு ஆதாரங்கள், சாட்சியங்கள் இருந்த போது, சம்பவம் உண்மைதான் ஆனால் இதற்கும் தீப்பொறிக்கும் தொடர்பு இல்லை என்றும், வேறு ஆட்கள் தொடர்பு என்றும் சொன்னார்கள். ஆதாரம் கேட்டபோது பிறகு சொன்னார்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று. இப்போது ஜென்னியின் நாடகம் என்ற பழைய பல்லவியை பாடுகிறார்கள். எந்த நேர்மையும் உண்மையும் இவர்களிடம் இல்லை.

அடுத்தது தனிநபர் பயங்கரவாத செயல்களும் இராணுவ வாத கண்ணோட்டமும்தானே தீப்பொறிக்குள் இருந்தது. கோட்பாடுகளுக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கும் தொடர்பே இருக்கவில்லை. இல்லாவிட்டால் கிட்டுக்கு குண்டு விசுவார்களா? யோசித்துப் பாருங்கள். வெறும் இரரணுவ வாதம். என்ன ஆரோக்கியமான முன்னெடுப்பை செய்தீர்கள்? கட்டாயம் எங்களுக்கு சுய விமர்சனம் தேவை. இன்றைக்கு என்னை பொருத்தவரை நான் உட்பட யாருமே நல்லவர்கள் இல்லை. எல்லாருமே மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ஆட்கள் தான். யாருமே சுய விமர்சனம் செய்யத் தயாரில்லை. குறைந்தபட்சமாவது நாங்கள் சுய விமர்சனம் செய்யவில்லை தானே. என்னை பொருத்தவரை யாராவது என் மீது குற்றச்சாட்டு வைத்தால் அந்தக் குற்றம் உண்மை என்றால் அதை நான் முதலில் ஏற்றுக் கொள்வேன்.

தேசம்: மற்றது புளொட்டில் இருந்த மாசில்பாலன் அவர் அல்லது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தான் பிறகு தீப்பொறியில் இருந்தவர்கள் என்று நினைக்கிறேன். லண்டனில் தீப்பொறி யிலும் செயற்பட்டார்கள். அதுக்கப்புறம் 2010 வரைக்கும் 2009 முள்ளிவாய்க்கால் பிரச்சனை வரைக்கும் அவர்கள் தமிழீழ கட்சியிலிருந்து ஆனையிறவு தாக்குதல் எல்லாம் கொண்டாடுற மனநிலையில்தான் இருந்தது. அதற்கு பிறகு அவர்கள் திருப்பி புதிய திசைகள் என்று உருமாற்றம் பெறுகிறார்கள். அதில உங்களோடு நெருங்கி செயற்பட்ட நாவலன் தான் முக்கியமான ஆள். அதுக்குள்ளே ஏன் நீங்கள் போகவில்லை?

அசோக்: நான் மிகக் கவனமாக இருந்தேன். வார்த்தைகள் அல்ல முக்கியம். செயற்பாடே எனக்கு முக்கியம். மார்க்சியம், முற்போக்கு என்று எதையும் எங்களால் கதைக்க முடியும். ஆனால் அதற்கேற்றவாறு உண்மையாக நாம் வாழ்வதில்லை. செயற்படுவது இல்லை. நிறைய வாழ்வில் அனுபவப்பட்டு விட்டேன். எப்படி இவங்கள நம்பி போகமுடியும். மாசில் மாசில்பாலன் அப்பா இடதுசாரி என்று நினைக்கிறேன். நாட்டில் இருந்தவர்.

தேசம்: இருக்கலாம் பிற்காலத்தில் அவர் விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பில் பங்காற்றி இருந்தவர். நீங்கள் அதை தவறாக எடுக்கக்கூடாது அவர் உண்மையிலேயே புனர்வாழ்வு … சேர்த்தவர் ஏமாத்தியது என்று இல்லை.

அசோக்: அவர் இடதுசாரி பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்துதான் வந்தவர். அவரோடு எனக்கு உறவு இருக்கவில்லை. அறிந்திருக்கிறேன். அவருக்கு இரண்டு மூன்று சகோதரர்கள் லண்டனில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் தொடர்பாக எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அவர் இப்ப நோர்வேயில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் எழுதிய எழுதின கட்டுரைகளுக்கு எல்லாம் மிக மோசமான கமெண்ட்ஸ் கொடுத்தார். என் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டினார். அவர் இப்ப நோர்வேயில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனா மாசில்பாலன் அவங்க கொஞ்சம் ஆரோக்கியமான விழிப்புணர்வு கொண்ட தோழர் என்று நினைக்கிறேன்.

தேசம்: தீப்பொறியில் இருந்தவர்?

அசோக்: இப்ப அவர்களுடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது அரசியல் கோட்பாட்டு ரீதியாக சிந்திப்பவர்களாக தெரிகிறாங்க.

தேசம்: அவர்கள் ஒரு காலகட்டத்திலும் 2009 வரைக்கும் விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் ஆதரவு தளத்திற்கு போயிட்டு திருப்பி புலிகள் இல்லாமல் போனதும்…

அசோக்: நிறைய தோழர்கள் அப்படி இருந்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாமல் சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடுகள் அவர்களை அவ்வாறான நிலைக்கு கொண்டுபோய் விட்டது என நினைக்கிறன். அவங்களுக்கு வேறு தெரிவு இல்லை. ஆனால் விமர்சன ரீதியாக புலிகளை விளங்கிக் கொண்டு அதன் மீது விமர்சனம் வைத்து புலிகளை தேர்ந்தெடுத்திருந்தால் அது ஆரோக்கியமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் தனிப்பட்ட நலன்களுக்காக புலிகளை ஆதரித்தார்கள். ஆனால் இங்க வந்த பிறகுதான் கேள்விப்பட்டேன் தீப்பொறியும், அதன் பின்னான தமிழிழ மக்கள் கட்சியும் புலி ஆதரவு நிலையை கொண்டிருந்தது பற்றி. அவங்களுடைய தமிழிழம் என்ற பத்திரிகை படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அது புலிகளின் ஆதரவுத் தளமாக தான் அந்த பத்திரிகை இருந்தது. ஆணையிறவு தாக்குதலை ஆதரித்து தமிழ்தேசிய முற்போக்கு சக்தியான புலிகளை அடையாளப்படுத்துகின்ற போக்கு தீப்பொறியிடம் இருந்தது.

தேசம்: அந்த இடத்தில் அப்படித்தான் மாசில் பாலன் தோழர்களை நான் அடையாளம் காண்கிறேன்.

அசோக்: நான் நினைக்கிறேன் அது அவருடைய அரசியலில் உள்ள தவறான பார்வை. பேரினவாதத்திற்கு எதிராக செயற்பட முனையும் பலர் அரசியல் புரிதலில் தவறிழைத்து அவர்களும் மறுபுறம் தீவிர இனவாத தமிழ்த்தேசியததை தேர்வு செய்து விடுறாங்க. தீவிர இனவாத தமிழ் தேசியம் என்ன செய்யும் என்று கேட்டால் புலிகளையே ஆதரிக்க செய்யும். ஆரோக்கியமான முற்போக்கு தமிழ் தேசியத்தை தேர்ந்தெடுக்காத வரைக்கும் தமிழ்தேசிய போக்கு இப்படியான பிழையான வழிகளில்தான் கொண்டு போகும்.

தேசம்: தீப்பொறி தமிழீழ மக்கள் கட்சியாக புலிகளோடு இருந்திட்டு இப்ப மே 18 இயக்கம் அதுல நீங்க ஏதாவது தொடர்புபட்டிருக்கிறீர்களா?

அசோக்: தீப்பொறி, தமிழிழ மக்கள் கட்சியின் புலி ஆதரவு நிலைப்பாடு தொடர்பாக பிற்காலங்களில் தோழர் ரகுமான் ஜானோடு பேசி இருக்கிறன். அவர் புலிகள் தொடர்பாக கடும் விமர்சனம் கொண்டவராகவே இருந்தார். தீப்பொறி புலி ஆதரவு நிலை எடுத்த காலகட்டத்தில் அவர்வெளியேறி விட்டார் என நினைக்கிறேன்.

தோழர் ரகுமான் ஜானோடு அரசியல் தளத்தில் எந்தசெயற்பாட்டு உறவும் எனக்கு இருக்கவில்லை. தனிப்பட்ட உறவே இருந்தது. நிறைய அரசியல் உரையாடல் இருந்தது. அவரிடம் இருந்து அரசியல் கோட்பாட்டுத்தளங்களில் நிறைய கற்றுக்கொள் முடியும். இன்றைய தமிழ்ச் சூழலில் அவர் முக்கியமானவர் என்ற எண்ணம் என்னிடம் உண்டு. அவரும் சில தோழர்களும் சேர்ந்து வியூகம் என்று ஒரு சஞ்சிகை வெளியிட்டாங்க. வியூகம் வெளியிட்ட போது இங்க வந்தவர். நாங்க இங்க அதற்கு விமர்சன கருத்தரங்கு ஒன்றை செய்தோம். முள்ளிவாய்க்கால் முடிந்தபிறகு மே 18 தொடங்கிறார். மே 18 தொடங்கி இங்க வாரார். அப்போ நாங்கள் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம். அதில் மே 18 பற்றிய கொள்கை பிரகடன விளக்கங்கள் சொல்லப்படுது. நான்தான் அந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். தலைமைதாங்கும் போதே சொல்லிட்டேன் இவர் என்னுடைய தோழர் மே 18 அமைப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று.

தேசம்: அப்போ ஏன் நீங்கள் தலைமை தாங்கினீர்கள்?

அசோக்: தலைமை தாங்குவதற்கு முழுக்கமுழுக்க அதில் உடன்பாடு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை தானே.

தேசம்: அதை அரசியல் கலந்துரையாடலாக தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

அசோக்: தலைமை உரையில் நான் சொல்லிட்டேன் இதற்கும் எனக்கும் தொடர்பில்லை, மே18 அமைப்பு தொடர்பான கருத்துக்கள் விமர்சனங்கள் பற்றி ரகுமான் ஜான் தோழருடன் கதையுங்கள். இந்த அமைப்பை பற்றி சுதந்திரமான வெளியில் கலந்துரையாட நான் தலைமை தாங்குகிறேன் என்று சொல்லிட்டேன். ஆரோக்கியமான அரசியல் விமர்சன உரையாடல் வெளியை உருவாக்க முனையும் தளத்தில் நாம் கலந்து கொள்வதில் தவறில்லை. அதே நேரம் எங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதை நான் செய்தேன்.

ஆமை புகுந்த வீடும் ராகவன், நிர்மலா, ஷோபாசக்தி புகுந்த இலக்கியச் சந்திப்பும்! : பாகம் 34

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 34 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: நாங்கள் பரிசில் நடந்த கலை இலக்கிய முரண்பாடுகள் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம். அதுல நீங்கள் சொல்லி இருந்தீர்கள் எக்ஸில் முரண்பாடு. அன்றைக்கு முக்கியமாக ஷோபாசக்தி அந்த முரண்பாட்டை தூண்டியதாக குற்றம்சாட்டி இருந்தீர்கள். அது என்ன மாதிரி நடந்தது? எக்ஸில் அது என்ன பிரச்சனை?

அசோக்: எக்சில் சஞ்சிகையில் ஏற்பட்ட முரண்பாடுகள் கோட்பாடு சார்ந்த பிரச்சனை இல்லைத்தானே கோட்பாடுகளில் சினேக முரண்கள்தோன்றினால் விவாதங்கள், உரையாடல்கள், கற்றல்கள் முலம் தீர்த்துக் கொள்ளலாம். கோட்பாடு ரீதியான பெரிய முரண்பாடுகள் வந்தா ஒன்று சேருவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும். இது தனிப்பட்ட முரண்பாட்டில் இருந்து தான் தோற்றம் பெறுது. இங்க கோட்பாடும் இல்லை. சித்தாந்த பிரச்சனையும் இல்லை. முழுக்க முழுக்க தனிநபர் முரண்பாடுகள்தான். இங்க ஈகோ பிரச்சனைதான். இதை இலகுவாக தீர்த்திருக்க முடியும். திட்டமிட்டு சாதிய முரண்பாடாக்கி ஊதிப் பெருக்கடி வைத்த புண்ணியம் நம்ம சோபாசத்தியைத்தான் சாரும். இந்த காலகட்டத்திலதான் தமிழ்நாட்டில் தலித்திய இலக்கிய அரசியல் ஏழுச்சி கொள்ளுது. அப்ப இந்த தனிப்பட்டமுரண்பாடுகளை சாதிய பிரச்சனை சார்ந்த முரண்பாடாக கட்டமைத்தால் இவர்களுக்கு சாதகம் என சோபாசக்தியின் சாணக்கிய மூளை கணக்குப்போட்டு இருக்கும்.

தேசம்: இதுக்குள்ள சாதிய முரண்பாடு என்று சொல்லுற அளவுக்கு இல்லை. பெரும்பாலும் இதுக்குள்ள அரசியல்ரீதியாக இருந்தவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் சாதிய எதிர்ப்பை கொண்டவங்கதானே.

அசோக்: தனி நபர் முரண்பாட்டை கூர்மையாக்க மற்றவர்களின் ஆதரவை பெற கலைச்செல்வன், லக்சுமி ஆட்கள் மீது இவ்வாறன குற்றச்சாட்டை வைக்க வேண்டிய தேவை அவங்களுக்கு வருகிறது. இந்த முரண்பாட்டிக்கு நீங்கள் நியாயம் கற்பிப்பதற்கான தேவை ஒன்று ஏற்படும் தானே. ஒவ்வொரு சாதியிலும் பிறப்பது தற்செயல் நிகழ்வு. ஆதிக்க சாதியான வேளாளர்கள் என்று சொல்லப்படுகின்ற சமூகத்தில் பிறக்கிற ஆட்களை வந்து முழுக்க முழுக்க எங்கள் மீதான ஒடுக்குமுறையாளர்கள் என்று கருத இயலாது. ஏனென்றால் அதிலும் நல்ல சக்திகள் உண்டு. ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்படுகின்ற இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் இருப்பார்கள். இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை கவனித்தம் என்றால் அந்த போராட்டங்களில் தீவிரமாக முண்ணனி வகித்தவங்க வேளாள சமூகத்தை சேர்ந்த தங்களை சாதிய தற்கொலை செய்து கொண்ட இடதுசாரிய கருத்தியல் கொண்ட தோழர்களாக இருப்பாங்க.

எங்களை ஒடுக்கிற ஆதிக்கம் செலுத்துகிற தங்களின் சுய சாதியிலிருந்து விடுபட்டு தோழமையோடு எம்மை நோக்கி வருகின்ற சக்திகளை நாம் சாதியின் பெயரால் புறம் தள்ளக் கூடாதுதானே. இவங்களிட்ட சாதியம் தொடர்பான எந்த புரிதல்களும் இருக்கல்ல. கோட்பாட்டு அரசியலும் இருக்கல்ல. தங்களை முதன்மைப்படுத்துற அடையாள சிக்கல்தான் இவங்களிட்ட இருந்தது. இது கலைச்செல்வன், லக்சுமி பக்கத்திலிருந்து பறிக்கப்படுவதாக இவங்க நினைக்கும் போது இந்த முரண்பாடுகள் வருகிறது. இவங்களால சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்குதானே அந்தக் காரணங்கள் எல்லாம் வந்து சோடிக்கப்பட்ட கட்டுக்கதைகள் ஆகத்தான் இருந்தது. அதற்கான உருவாக்கத்திற்கான பின்புலமாக சோபாசக்தி தான் இருந்தவர். சோபாசக்தி நினைத்திருந்தால் அந்த பிரச்சனையை தீர்த்து இருக்கலாம்.

நான் எப்பவுமே புலிகள் மீதான விமர்சனத்தை வைப்பதற்கான காரணம் என்னவென்றால் புலிகள் எப்பவுமே ஒரு ஜனநாயக அமைப்புகளை ஜனநாயக சக்திகள் ஒன்று கூடுவதை எப்பவுமே விரும்புவது இல்லை. எங்க போராட்ட வரலாற்றை எடுத்து பார்த்தீர்களென்றால் ஈழத்தில் தமிழ்ப் பிரதேசங்களில், புகலிட நாடுகளில் சகல ஜனநாயக அமைப்புகளை உடைத்தது எல்லாம் புலிகள்தான். அதுக்குள்ள ஊடுருவுவார்கள் அல்லது அப்படியே உள்வாங்குவார்கள். அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி அப்படியே இல்லாமல் ஆக்குவார்கள். இதில் அபத்தம் என்னவென்றால் கலைச்செல்வன், லக்சுமி ஆளுமைக்குள் உட்பட்டிருந்த இவங்கள், சுயநலப்போக்கும், மோசமான அரசியலும் கொண்ட பிழையான சத்தியான சோபாசக்தியின் வலையில் சிக்கிக் கொண்டதுதான்.

தேசம்: புலிகள் எதையுமே உருவாக்கினது கிடையாது…

அசோக்: ஷோபாசக்தி புலிகளில் இருந்து வந்தபடியால் அவரிடமும் அந்த இயல்பு இருக்கும்.

நான் முதலே சொல்லிஇருக்கிறன் புலிகளிடமிருந்து வந்த யாரையும் நம்புவதும் இல்லை, நான் ஏற்றுக்கொள்வதும் இல்லை. போராளிகள் பற்றியதல்ல இந்த அபிப்பிராயம். புலிகளில் குறிப்பிட்ட மட்டங்களில் கருத்தியல் சார்ந்து இயங்கிய எல்லாரிடமும் தங்களைத் தவிர ஏனைய அமைப்புகள் உருவாகுவதையோ ஏனைய சக்திகள் உருவாகுவதையோ அவங்கள் விரும்புவது இல்லை. ஒரு இலக்கிய சஞ்சிகையோ, இலக்கிய சந்திப்போ சாதாரண அமைப்புகள் கூட தங்களை வரக்கூடாது என்றுதான் விரும்புவார்கள்.

தேசம்: தங்கட கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கினம்…

அசோக்: அப்படி தங்கட கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால் உடைப்பார்கள் அல்லது அவர்கள் மீது ஏதும் அதிகாரத்தை பிரயோகிப்பார்கள். இலக்கிய சந்திப்புக்கும் அதுதான் நடந்தது. எக்ஸிலுக்கும் அதுதான் நடந்தது.

தேசம்: நீங்கள் இதே குற்றச்சாட்டை தான் ராகவன் நிர்மலா நித்தி மீதும் வைத்தீர்களா?

அசோக்: என்னைப் பொருத்தவரை இவர்கள் புலிகளை எதிர்க்கின்ற இன்னொரு புலிகள்தான். அதுல நீங்கள் ராகவன் ஆக இருந்தால் என்ன, நித்தியானந்தனாக இருந்தா என்ன நிர்மலாவாக இருந்தால் என்ன, முழு பேரும் அந்த மனோநிலையோடு, அந்த அந்த ஆதிக்க உளவியல் கட்டமைப்போடுதான் சிந்திப்பாங்க செயற்படுவாங்க. இவர்களை எல்லாம் ஒரு ஜனநாயக சக்தியாக நான் ஒருபோதும் பார்க்கவில்லை. ஏனென்றால் இருக்கிற முரண்பாடுகளை தீர்க்கின்ற நபர்களாக அவர்கள் எப்பொழுதும் இருந்ததில்லை. முரண்பாடுகளை கூர்மையாக்கி, குழுவாதத்தை உருவாக்கி தாங்க நினைப்பதை சாதிப்பாங்க. அதற்கு நாங்களும் துணை போவம். நீங்க பார்த்தீங்க என்றால் இவங்களுக்கு பின்னால் நாங்கதான் போனோமே தவிர எங்களுக்கு பின்னால் அவங்க வரவில்லை. தங்களின் அதிகாரத்தில் மேலாதிக்கத்தில் அவங்க கவனமாக இருந்தாங்க.

எல்லாத்தின் உடைவுகளுக்கும் மூல காரணங்களை தேடி போனீர்கள் என்றால் புலிகளில் இருந்த பழைய உறுப்பினர்களாக தான் இருப்பார்கள். ஒன்று சோபாசக்தி ஆக இருக்கும் ஒன்று ராகவன் ஆக இருக்கும், ஒன்று நிர்மலாவாக இருக்கும், இவர்கள்தான் பின்புலமாக இருந்திருப்பார்கள். இலக்கியச் சந்திப்புகளின் உடைவுகளை தேடி போனீர்கள் என்றால் முடிவு அங்க தான் இருக்கும். ஆனா என்னதான் உடைவு இருந்தாலும் சோபாசக்தி, ராகவன், நிர்மலா எனைய முன்னாள் புலிகள் இவங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கும். ஒரே அணியில இருப்பாங்க. யோசித்துப்பாருங்க. புலிகளின் வன்முறைகளுக்கும் கொலைக் கலாச்சாரத்திற்கும் எதிராக புகலிடத்தில் செயற்பட்ட TBC ரேடியோவுக்கு என்ன செய்தார்கள்? உங்க தேசம் இணையத்தளத்தை முடக்க தங்களின்ற குழுவாத கும்பல்களோடு சேர்ந்து கையெழுத்து வேட்டை நடத்தினாங்களே. இதையெல்லாம் எந்த நோக்கத்தில் செய்தாங்க.

தேசம்: புலிகள் என்பதும் எங்களுடைய சமூகத்தின் ஒரு உற்பத்தி தானே. நீங்க சொல்லுற இந்த குணாம்சம் இந்தப் பிரிவிடம் மிகக் கூடுதலாக இருக்கு என்று சொல்லவாறீர்களா?

அசோக்: எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குணாம்சம் கொண்டவர்கள்தான் புலிகளிடம் போகிறார்களா அல்லது புலிகளுக்கு ஒரு சிந்தனை முறை இருக்குதானே புலிகளுடைய பயிற்றுவிப்பு கல்வியூட்டல்கள் சிந்தனை முறை இருக்குதானே அது இப்படித்தான் இவர்களை உருவாக்கிறது. தங்களை மீறி யாரும் வரக்கூடாது என்று. ஜனநாயக சக்திகளோ, தங்களை கேள்வி கேட்கின்றவர்களோ தங்கட இருப்புக்கு அது தடையாக இருக்கிறது என்று நினைப்பார்கள். தங்கட இருப்புக்கு ஒரு அமைப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். இல்லாதபட்சத்தில் அதை அழிப்பார்கள். இல்லாட்டி இவ்வளவு ஆரோக்கியமான இலக்கியச் சந்திப்புக்கு கடைசியில் என்ன நடந்தது?

இன்னொன்றையும் நீங்க அவதானிக்கலாம். புலிகள் பலரிடம் இந்த திறமை இருக்கு. எங்கட பலவீனங்களை கண்டு பிடித்து அதற்கு தீனி போடுவாங்க. பலரும் இவங்க பின்னால் அலைவதற்கு இதுவும் ஒருகாரணம். முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்கிற நாங்க தனிப்பட்ட வாழ்வில் மிகமிக பலவீனமானவங்க. அத அவங்க தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாங்க. எவ்வளவுதிறமை சாலி அவங்க பாருங்க.

தேசம்: இலக்கிய சந்திப்பு எப்படி இப்படி உடைந்தது ?

அசோக்: இலக்கியச் சந்திப்பின் உருவாக்கம் சிறு சஞ்சிகைகளினுடைய ஆசிரியர்களின் வாசகர்களின் இணைவாக இருந்து ஒரு காலகட்டத்தில் அராஜகங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக வருது ஜனநாயகத்தையும், அதிகார எதிர்ப்பையும் முன்னிலைப்படுத்திய புகலிட இலக்கியச்சந்திப்பை சார்ந்தவர்கள், விடுதலைப் புலிகளால் புகலிடத்திலும், இலங்கையிலும் இருந்த அச்சுறுத்தலால், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களாக இருந்தது இயல்பாக இருந்தது. அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு இயல்பான அரசியல் அதுக்குள்ள மேலோங்கியிருக்கிறது.

நான் முதலாவது இலக்கிய சந்திப்பில் தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு கலந்து கொள்கிறேன். அதுக்குப் பிறகு இரண்டு இலக்கிய சந்திப்பு பாரிசில் நடந்தது. அதை நாங்கள் லக்ஷ்மி, கலைச்செல்வன், புஸ்பராஜா, அசோக் பிரகாஸ், கிருபன், மோகன், உதயன், யோகராஜா நடத்தினோம். நாங்க எல்லா இலக்கிய சந்திப்புக்கும் போவோம். ஜெர்மனியில்தான் அதிகம்தான் நடந்தது. 2009 மே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்பு நிலைமை நிலமை மாறிப் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் பிரச்சனைக்குப் பிற்பாடு இலக்கிய சந்திப்பு ஒரு டேர்ன் எடுக்குது. முழுக்க முழுக்க புலிகள் அழிக்கப்பட்டதன் பிற்பாடு பாரிசில் நடந்த இலக்கிய சந்திப்பில் இலங்கை அரசு சார்பான ஒரு போக்கை அவர்கள் எடுக்கிறார்கள். அந்த எடுவைக்கு காரணம் அதுக்குள்ள இருந்த ஒரு சக்திதான். அதுல தலித் முன்னணி முக்கியமான ஆட்கள். அதுல ஷோபா சக்தியும் இருந்தவர். அடுத்தது ராகவன் ஆட்களும் அதுக்குள்ள இருந்தார்கள்.

புலிகள் மீது கடும் விமர்சனம் இருக்கு. முள்ளிவாய்க்கால் தொடர்பாக. பொதுமக்கள் அழிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் புலிகளுடைய நடவடிக்கையும் ஒன்று. அது விமர்சிக்கப்பட வேண்டியது. புலிகள் மீது கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட வேண்டியது. அதற்காக நீங்கள் பேரினவாத அரசின் ஆதரவு சக்தியாக மாற முடியாது. நான் முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒரு இனப்படுகொலை என்றுதான் பார்க்கிறேன். அது தொடர்பாகக் கருத்து முரண்பாடு இருக்கலாம். மிக மோசமாக கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்து இலங்கையில் ஜனநாயக சூழல் உருவாகிவிட்டது, ஜனநாயக இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி இலங்கைப் பேரினவாத அரசு ஆதரவு நிலை கொண்டு நடத்தும் போது எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியும். எப்படி நாங்கள் கலந்து கொள்ள முடியும்? அப்போ நான் அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இலக்கிய சந்திப்பின் பிரதான நோக்கத்தையே குழிதோண்டி புதைத்து விட்டார்கள்.

அதற்கு பிற்பாடு லண்டனில் நடந்த இலக்கிய சந்திப்பில் முரண்பாடு வருகிறது. இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி நடக்குது. இந்த இலக்கிய சந்திப்பு புகலிடத்திற்காக, அதன் அரசியல் இலக்கிய சமூக வெளிக்காக உருவாக்கப்பட்டது. எனவே, இலங்கைக்கு கொண்டு போக முடியாதென்று என்று பலரும் இதை எதிர்க்கிறாங்க. புகலிட இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டு போவதற்கான அவசியம், காரணம் என்ன என்ற முக்கியமான கேள்வி எங்களுக்கு எழுகிறது

தேசம்: புகலிடத்திற்காக உருவாக்கப்பட்ட இலக்கிய சந்திப்பை ஏன் இவர்கள் இலங்கைக்கு கொண்டு போக விரும்புகின்றார்கள்?

அசோக்: நல்ல கேள்வி. இவங்க முழுப்பேர்களுமே குறிப்பாக தலித் முண்ணனி, பிள்ளையான் அணி, ராகவனும் அவருடன் சேர்ந்த ஆட்களைப் பார்த்தீர்கள் என்றால், வெறும் இலங்கை அரசு ஆதரவாளர்களாக இருந்தார்களே தவிர தனித்துவ அடையாளங்கள் அற்றவங்க இவங்க. ஆழமான அரசியல் புரிதல்களோ, இலக்கிய ஆற்றலோ அற்றவங்க. இவங்க இலங்கைக்கு, வெறும் இலங்கை அரச விசுவாசத்தோடு தமிழ்ப் பிரதேசங்களுக்கு செல்லமுடியாது. அங்க யாரும் இவர்களை கவனிக்க மாட்டார்கள். அப்ப இவங்களுக்கு அடையாளம், ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இலக்கிய சந்திப்புக்கு ஒரு வரலாற்று தடம் பங்களிப்பு இருக்கிறது. இலக்கிய சந்திப்பு பற்றி இலங்கையில் பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அப்ப இந்த இலக்கிய சத்திப்பினுடாக, அங்கு தங்கட அடையாளத்தை, இருத்தலை நிறுவ முயலுறாங்க இதுதான் நடந்தது.

தேசம்: இதை உங்களைப் போன்றவர்கள் எதிர்க்க வில்லையா?

அசோக்: இவர்கள் இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததன் பின் இந்த இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்வதை நான் விட்டுட்டன். ஆனா இவர்களின் இந்த செயற்பாட்டிக்கு எதிராக கடும் கண்டனங்களை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறன். நான் சிறிரங்கன், நாவலன் பலர் இதுபற்றி எழுதியுள்ளோம்.

இலங்கைக்கு கொண்டு போவதற்கு இவங்க முடிவு செய்த லண்டன் இலக்கிய சந்திப்பில் பலர் இதனை எதிர்த்திருக்காங்க. கிருஸ்ணராஜா, லட்சுமி, சுசிந்திரன், றஞ்சி, சிவலிங்கம் தோழர் போன்றவங்க. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு இது. நீங்கள் நாட்டுக்கு கொண்டு போக இயலாது என்று. அதை மீறித்தான் அவங்க அங்கு கொண்டு போகிறார்கள். அப்போ இந்த ஜனநாயகப் பண்பை எப்பவும் ஏற்கவில்லை தானே இவர்கள். நாங்கள் எதற்காக ஒரு அமைப்பை உருவாக்கினோம், எதனை நோக்கி உருவாக்கினோம் என்ற அடிப்படை அம்சங்கள் எல்லாவற்றையும் இல்லாமலாக்கிப்போட்டு, நீங்கள் உங்களுடைய சுயநலத்துக்காக, உங்களுடைய அரசியலுக்காக கொண்டு போகின்ற போக்கு இருக்குதானே அது எனக்கு பெரிய அதிருப்தியாக இருந்தது.

இந்த ஜனநாயகத் தன்மை கொண்ட இலக்கிய சந்திப்பை தங்களின்ற அதிகார மேலாண்மை இருத்தலுக்காக பயகன்படுத்திக் கொண்ட இந்த நபர்களை பார்த்தால், இவங்களின்ற இந்த இலக்கிய சந்திப்பு தொடர்பு இடைக்காலத்தில்தான் ஏற்பட்டது. ஆனால் இந்த குறுகிய காலத்தில் தங்களுக்கேற்ற குழுவாதத்தை முரண்பாட்டை உருவாக்கி இலக்கிய சந்திப்பை தங்கள் உடமையாக்கிக் கொண்டாங்க. இதனைத்தான் நான் புலிக்குணம் என்றது. இதுதான் எனக்கு இருந்த விமர்சனமே தவிர தனிப்பட்ட ரீதியில் இவங்களோட எந்த முரண்பாடுகளும் எனக்கில்லை. சந்திக்கும்போது கதைப்பதுண்டு. அதேநேரம் கருத்துக்களும் விமர்சனங்களும் எனக்கு இருக்கும். இங்க ஒன்றை பதிவு செய்யணும். இவங்கட முரண்பாட்டிக்கு பிறகு இவங்க வெளியிட்ட எக்சில் சஞ்சிகையின் அட்டையில் லக்சுமியைபற்றி மிக மோசமாக தாக்கி எழுதி இருந்தாங்க. ஒரு இலக்கிய சஞ்சிகையின் அட்டையில் ஒருவரை தாக்கி மோசமாக எழுதி வெளியிட்ட பெருமை இவங்களைத்தான் சாரும்.

 

முரண்பாடுகள், படுகொலைகள், மரணங்கள் – சபாலிங்கம் முதல்… புலம்பெயர் இலக்கியச் சூழல்: பாகம் 33

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 33 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: தோழர் திரும்பவும் நாங்க அந்த புலம்பெயர் அரசியல் சூழல் பற்றி கதைப்பம். கிட்டத்தட்ட 92 இலிருந்து 30 ஆண்டுகள் புலம்பெயர் அரசியல்ல இருந்திருக்கீங்கள். இந்த அரசியல் சூழலில் பெரிய மாற்றங்கள் வந்துட்டு. 92 ல இருந்து 2010 மட்டுமான 20 ஆண்டுகள் புலிகள் அதிகாரத்தில் இருந்த காலகட்டம். புலிகள் கட்டுப்பாட்டில் தான் புலம் பெயர்ந்த தேசங்களும் இருந்தது. அதுக்கு பிறகு புலிகள் இல்லாத காலகட்டம். நாங்க அந்த முதல் காலகட்டத்தை பார்ப்போம். அந்தக் காலகட்டம் கூட புலிகள் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இங்கேயும் அரசியல் கருத்துக்களுக்கான சுதந்திரமின்மை ஒன்றும் இருந்தது. அதுகள பற்றி கொஞ்சம் சொல்லுங்க. ஏனென்டா நிறைய பேருக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது எவ்வளவு தூரம் அபாயகரமானதாக இருந்தது?

அசோக்: 92 களில் புலிகளின் அதிகார ராஜ்ஜியமாகத்தான் இருந்தது. சுதந்திரம் அற்ற தன்மை தான். புலிகள் பற்றி எதுவும் வெளிப்படையாகப் பேசமுடியாத சூழல். எங்கும் எதிலும் புலிகள்தான். அவங்களின்ற உளவு வலைப்பின்னல், கொலைக்கரங்கள் இங்க எல்லா இடங்களிலும் வியாபித்துக் கொண்டிருந்த காலம் அது. சிறுபத்திரிகைகள் வெளியிட இயலாது. புலிகளின் இந்த கருத்துச் சுதந்திர மறுப்பு, அடாவடித்தனங்களுக்கு எதிராக வெளிவந்து கொண்டிருந்த புகலிட இலக்கிய சஞ்சிகைகளின் வருகையும் இக்காலங்களில் குறைந்துவிட்டது. புலிகளுக்கு எதிரான ஒரு குரலா ஒலித்துக்கொண்டிருந்தது அந்த நேரத்துல இலக்கியச் சந்திப்புகள் தான்.

தேசம்: அது யார் தொடங்கினது…? எப்படி தொடங்கியது…?

அசோக்: அது ஜெர்மன்ல தான் 1988ல் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. சிறுபத்திரிகை ஆசிரியர்கள் படைப்பாளிகளின், இலக்கிய ஆர்வலர்களின் ஒன்று கூடலாகத்தான் இந்த இலக்கிய சந்திப்பு ஆரம்பத்தில் இருந்ததென நினைக்கிறேன். ஜெயரெத்தினம் என்ற இலக்கிய ஆர்வலரின் முன் முயற்சியால் இச்சந்திப்பு தொடங்கப்பட்டது. இதில் தோழர்கள் சிறி ரங்கன், பரா, பார்த்தீபன், பாரதி, சுசிந்திரன், சந்தோஷ், வாணிதாசன், ராகவன், சிவராஜன் போன்றவங்க முக்கியமானவர்களாக இருந்திருக்கிறாங்க. உண்மையில் இந்த இலக்கிய சந்திப்பின் வரலாற்றை சொல்லக்கூடியவர்கள் இவங்கதான். அது காலத்துக்கு காலம் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

தேசம்: அது எப்ப பாரிசுக்கு மாறுது…

அசோக்: 92 பாரிசில் நடந்த சந்திப்பில் தான் நான் முதலாவதாக கலந்து கொள்ளுறன். அந்த இலக்கிய சந்திப்பை பொறுப்பெடுத்து பாரிசில் நடத்தியவர்கள் கலைச்செல்வன், லஷ்மி, புஸ்பராஜா, சபாலிங்கம் போன்ற தோழர்கள்தான்.

நிறைய அரசியல் இலக்கியம் சார்ந்த நண்பர்களின் தொடர்வும் அறிமுகமும் இந்த இலக்கிய சந்திப்பில்தான் ஏற்படுகிறது. சபாலிங்கம் 94 மே யில புலிகளால படுகொலை செய்யப்படுகிறார்.

தேசம்: சபாலிங்கத்தை ஏன் புலிகள் கொலை செய்கிறார்கள்…?

அசோக்: சபாலிங்கம் ஆரம்ப காலத்திலேயே விடுதலைப் புலிகளோடு நெருக்கமான உறவில் இருந்தவர். இலங்கையில் மாணவர் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்தவர். ஒரு தடவை பிரபாகரன் காயப்பட்ட போது சபாலிங்கம் தான் அவரை காப்பாற்றி எல்லா உதவியும் செய்தவர்.

தேசம்: இலங்கையிலயோ…?

அசோக்: ஓம் இலங்கைல. அந்த காலகட்டத்தில் பிரபாகரனுக்கும் சபாலிங்கத்திற்கும் நெருங்கிய உறவு இருந்திருக்கிறது. அப்ப பிரபாகரனோட பலமும் பலவீனமும் சபாலிங்கத்துக்கு தெரியும். அவர் ஆவண சேகரிப்பாளர். அத்தோட அகதி தஞ்சம் கோருகின்றவர்களூக்கு உதவிகள் செய்றது. மனித உரிமைவாதி அவர். மனித உரிமைவாதி என்றால் புலிகளுக்கு சார்பாக இருக்க முடியாதுதானே. அப்ப விடுதலைப் புலிகளுக்கும் அவருக்கும் நிறைய முரண்பாடுகள் இருந்தது. அந்த நேரத்தில் அவர் தன்னைப்பற்றி ஒரு பயோகிராபி எழுத வெளிக்கிட்டவர். அவர் துணிந்தவர் நேரடியா ஓபனா கதைப்பார். அவர் பிரபாகரனை பற்றிய விமர்சனங்களை வெளிப்படையாக வைத்துக்கொண்டிருந்தவர்.

பரிஸ் இலக்கியச் சந்திப்புக்கு பிறகு சுவிஸ்ல இலக்கியச் சந்திப்பு நடந்தது. அதுல சபாலிங்கம், புஸ்பராஜா, கலைச்செல்வன், லச்சுமி எல்லாம் கலந்து கொள்கிறாங்க. அங்க நடந்த உரையாடலின் போது சபாலிங்கம் புலிகள் தொடர்பிலான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அது எப்படியோ புலிகளுக்கு…,

தேசம் : பொறுங்கோ இது தனிப்பட்டமுறையில நடந்ததா…?

அசோக்: இல்லை. இது இலக்கிய சந்திப்பில் நடந்தது.

தேசம்: தனிய புலிகள் மீது மட்டும் வச்சாதான் இல்ல பிரபாகரன் மீதும் அந்த விமர்சனத்தை வச்சாரா…?

அசோக்: புலிகள் வேற – பிரபாகரன் வேற இல்ல தானே. அந்த விமர்சனங்கள் ரெண்டுபேரையும் நோக்கி தான் போயிருக்கும். அது வந்து நான் நினைக்கிறேன், இவர் பயோகிராபி எழுதுற கதை வந்த காலகட்டங்களில் இவருடைய இந்த விமர்சனங்களும் அவங்களுக்கு ஒரு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கும். அதுக்குப் பிறகுதான் இந்த படுகொலை நடந்தது.

தேசம்: அப்ப இந்த குறிப்பிட்ட சம்பவம் – குறிப்பிட்ட நிகழ்ச்சி தான் இதற்கு பிரதான காரணமாக இருந்தது…?

அசோக்: அந்த நிகழ்ச்சி ஒரு தூண்டுதல். ஆனா அவர் நீண்ட காலமாகவே புலிகளுக்கு எதிரானவராக புலிகளின் மனித உரிமைமீறல்கள், படுகொலைகள் தொடர்பாக கடும் விமர்சனங்கள் அவருக்கு இருந்தது.

தேசம்: அப்போ அவர் எழுதியிருக்கிறார் நிறைய ஏற்கனவே…?

அசோக்: அவர் எழுதியது குறைவு. அது சம்பந்தமான டொக்கியூமென்ற்ஸ் எல்லாம் சேமித்து வைத்திருந்தார். புலிகளுடைய படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான எல்லா ஆவணங்களையும் சேர்த்துக் கொண்டிருந்தவர். அடுத்தது புலிகள் மாத்திரமல்ல, புதியதோர் உலகம் இருக்குதானே. புளொட்ல நடந்த படுகொலைகள் தொடர்பாக கோவிந்தன் என்ற பெயரில் தோழர் கேசவன் எழுதின புத்தகம், அதைக் கூட இங்க ரீ பிரின்ட் போட்டவர். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணங்களை எல்லாம் அவர் சேர்த்தவர். அவர் புலிகளுக்கு எதிரா மாத்திரமில்லை அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் எதிராகவும் இருந்தவர். கூடுதலா அந்த நேரத்தில் புலிகள் அதிக படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால அவருடைய கவனம் அவர்கள் மீது போனது.

தேசம்: அவருடைய கொலை வந்து எவ்வளவு பெரிய தாக்கத்தை புலம்பெயர் தேசங்களில் ஏற்படுத்தியிருந்தது..?
அசோக்: அது ஜெயபாலன், நிறைய பேரை பயமுறுத்தி போட்டுது.

தேசம்: சபாலிங்கம் படுகொலை தான் முதன்முதலில் இலங்கை, இந்தியாவுக்கு வெளியே நடந்த முதல் படுகொலை என நினைக்கிறேன்.

அசோக்: ஓம் புலம்பெயர் தேசத்தில் நடந்த முதல் படுகொலை. அந்தப் படுகொலைக்கு பிறகு சுதந்திரமா பேசுற தொணி எல்லாம் ஆட்களுட்ட குறைஞ்சு போய்விட்டது. ஏன் சபாலிங்கம் செத்தவுடனயே துண்டுப்பிரசுரம் வெளியிடுவதற்கு கூட யாருமே முன்வரவில்லை தானே. அந்த நேரம் மனிதம் குரூப் இருந்தது சுவிஸ்ல, அவங்க தான் முதன்முதலில் சபாலிங்கம் படுகொலை பற்றி கடுமையான அறிக்கை விட்டவங்க. அது மாதிரி இங்க பாரிசில் நாங்க ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தனாங்க. அந்த அறிக்கைய துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்க ஆக்கள் எவருமே வரவில்லை. பயம் நிறைய பேருக்கு. கடைசியில் நானும், இப்ப லண்டன்ல இருக்க நாவலனும் தான் வினியோகித்தம். அப்படியான நெருக்கடிதான் இருந்தது. அதுக்குப் பிறகு நாங்கள் சபாலிங்கம் காலமாகி ஒரு மாதத்தில் அஞ்சலிக் கூட்டம் நடாத்தினோம். அஞ்சலி கூட்டத்துக்கு வருவதா நிறைய பேர் சொன்னவங்கள். எதிர்பார்த்த அளவுக்கு யாருமே வரல. பேசுவதா ஒப்புக்கொண்ட ஆக்கலும் கூட வரல. கடைசியா நானும் தோழர் அழகிரி, சுகன், யோகராஜா நாங்க தான் பேசினது. நான் நினைக்கிறேன் ஒரு 15 பேர் தான் வந்திருப்பாங்க. அதுவும் பயந்து பயந்து வந்தவங்க. யாருமே வரல. அப்படி ஒரு பயத்தை அது கொடுத்திருந்தது.

தேசம்: இந்தக் கொலை சம்பந்தமாக யாராவது கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்ததா…?

அசோக்: அந்த வழக்கில் யாருமே கைது செய்யப்படவில்லை. வெளி நாட்டவர்கள், அகதிகள் மத்தியில் இதுபோன்ற படுகொலைகள் நடந்தால் இந்த அரசுகள் பெரிய கவனம் கொள்ளாது. தங்களுக்கு பாதிப்பு வந்தால் மட்டும்தான் கவனம் கொள்ளுவாங்க.

தேசம்: பிரித்தானியாவிலும் அப்படியான சம்பவங்கள் நடக்கிறதுக்கான வாய்ப்புகள் …

அசோக்: ஓம். குறைவு.

தேசம்: குறைவு எண்டில்ல அப்படி நடந்திருந்தால் கைதுசெய்யப்பட்டு இருப்பாங்க. தப்பி போவதற்கான வாய்ப்பு இல்லை. பிரான்சுல இத கண்டும் காணாம விடுறது. தங்களுக்குள் மோதிக் கொண்டு போகட்டும் என்று…

அசோக்: ஓம். அவங்களைப் பொறுத்தவரை தங்கள் சமூகததை, தங்கள் சட்டம் பாதுகாப்பை பாதித்தால், தங்களோட அரச நிர்வாகத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பாங்க. அதுவரை அது அவங்களுக்கு வெளிநாட்டார் பிரச்சனைதான். அது எங்க சமூகத்தோட பிரச்சனை. எத்தனை படு கொலைகள் நடந்தது. ஒரு தடவை யோகராஜா என்ற தோழரை புலிகள் தாக்கினாங்க. அவர் EPRLF தோழர். அவரும் நானும், நாவலனும் போய் பொலிசில் முறையிட்டோம். பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவங்களைப் பொறுத்தவரை இது தங்கட பிரச்சனை அல்ல. வெளிநாட்டார் பிரச்சனை. இப்படி பல சம்பவங்கள்…

தேசம்: அதனாலதான் புலிகளுடைய படுகொலை கடைசியானதுமில்ல. தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருந்தது.

அசோக்: ஓம்.

தேசம்: பாரிஸில் தான் கூடுதலான படுகொலைகள் நடந்தது. நாதன் படுகொலை …

அசோக்: ஓம். புலிகளுடைய படுகொலைகள் எல்லாம் வந்து, அரசுகள் பெருசா கவனத்தில் எடுத்து எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல. அது அவங்களுக்கு சாதகமா போய்விட்டது. அடுத்தது ஆட்களைக் கடத்திக் கொண்டு போய் அடிக்கிறது தொடர்பான பிரச்சனைகளும் இருந்தது தானே. இங்க மாத்திரம் இல்லை, அதை எல்லா இடங்களையும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தேசம்: அடிக்கிறது நடந்திருக்கிறது. ஆனா கொலை அளவுக்கு மற்ற நாடுகளில் போகல.

அசோக்: அந்த சூழல் பெரிய மோசமான ஒரு சூழல் தான். அதுக்குப் பிறகுதான் சிறு சஞ்சிகைகள் வெளியிடுவதற்கான தயக்கம் நிறைய பேர்கிட்ட வந்தது.

தேசம்: அப்படியிருந்தாலும் பரிஸில நிறைய இலக்கிய ஈடுபாடு நடந்தது. அந்த நேரம் ஒரு காலகட்டம் வரைக்கும் – நான் நினைக்கிறேன் 2007 வரைக்கும் புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு மையமாக பரிஸ் இருந்தது என்டு.

அசோக்: ஓம் ஆரம்பத்தில் மனோ ‘ஓசை’ சஞ்சிகையை வெளியிட்டவர். நான் வந்து முதன்முதல்ல அவருடைய சஞ்சிகையில தான் துடைப்பான் என்ற பெயரில் எழுதினனான். ஒரு இலக்கிய உறவு அவரோட தான் ஏற்பட்டது. ஓசை சஞ்சிகைக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி வந்தபோது தோழர் சபாலிங்கம்தான் உதவினவர். சபாலிங்கம் படுகொலைக்கு பிறகு ஓசை வெளிவரவில்லை. பிறகு மனோ ‘அம்மா’ என்றொரு சஞ்சிகை கொண்டு வந்தவர்.

தேசம்: அம்மாவுல தான்; நீங்க சேனன்…?

அசோக்: சேனன், வின்சென்ட் ரபேல் பலரும் எழுதினாங்க. நான் எழுதல்ல. அது சிறு கதைகளுக்காக கொண்டுவரப்பட்ட சஞ்சிகை. சபாலிங்கத்தின் படுகொலை அரசியல் எழுத்துக்களை கொண்டு வரும் பயத்தை கொடுத்து விட்டது.

தேசம்: அது 2000க்கு முன்பே வந்துட்டுதா…?

அசோக்: ஓம் வந்துட்டுது. அதோட அரவிந்தன், முகுந்தன், எல்லாருமாக சேர்ந்து ‘மௌனம்’ என்ற சஞ்சிகையை வெளியிட்டாங்க.

பிறகு ‘எக்ஸில்’ வந்தது. லட்சுமி, கலைச் செல்வன், ஞானம், விஜி, கிருஸ்ணராஜா ஆட்கள் சேர்ந்து இந்த சஞ்சிகையை கொண்டு வந்தாங்க. பிறகு அதுல முரண்பாடுகள் ஏற்பட்டு பிரிந்து, அதுக்கு பிறகு லட்சுமி கலைச்செல்வன் ‘உயிர் நிழல்’ என்ற சஞ்சிகையை கொண்டு வராங்க. பரிஸ் வந்து ஒரு அரசியல் இலக்கிய மையமாக இருந்தது.

தேசம்: 2007-2010 பரிஸ் ஒரு முக்கிய மையமாகத் தான் இருந்தது.

அதே நேரம் பரிஸ் ஒரு இலக்கிய அரசியல் முரண்பாட்டின் மையமாகவும் இருந்தது.

அசோக்: ஓம்… ஏனென்றால் இங்க வந்து அரசியல் இலக்கிய பிரக்ஞை உள்ள ஆட்கள் நிறைய பேர் இருந்தாங்கள். புலிகளோட நெருக்கடி இருந்த அந்த காலங்களில் எங்களுக்குள்ள அதற்கெதிரான ஒரு உத்வேகம் ஒற்றுமை இருந்தது. அதே நேரம் நீங்க சொல்வதுபோல் எங்களுக்குள்ளும் முரண்பாடுகள் இருந்தன.

தேசம்: புலிகளுடைய காலத்தில் புலிகளின் இந்த செயற்பாடுகள். உங்களுக்கு ஒரு ஊக்க சக்தியாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.?

அசோக்: புலிகளுடைய அடக்குமுறை என்பது ஐரோப்பிய நாடுகளில் எல்லா இடங்களிலும் பரவித்தானே இருந்தது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது தானே… அதற்கு எதிரான பிரச்சாரங்களை செயற்பாடுகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்தோம். இன்று புலி எதிர்ப்பு பேசுகிற பலரை அந்தக் காலத்தில் நான் கண்டதே இல்லை. 2009க்கு பிறகு நிறைய புலி எதிர்ப்பாளர்களை சந்திக்கிறன். இப்போ பேசுறது பிழை இல்ல. ஆனா அந்தக் காலத்துல அவங்களோட குரல் புலிகளுக்கு எதிராக ஒலிக்கவில்லை.

தேசம்: ஒலிக்க வேண்டிய காலத்தில் அது ஒலிக்கல்ல. ஒரு சந்தர்ப்பவாதமா தான் பார்க்க வேண்டியிருக்கு.

அசோக்: ஓம்.

தேசம்: அப்படி யாரைப் பார்க்கிறீர்கள் நீங்கள்…?

அசோக்: பெயர்கள் வேண்டாம். நிறைய பேர் இருக்கிறார்கள் அப்படி.

அந்த நேரத்தில கலைச்செல்வனும் நண்பர்களும் சேர்ந்து பள்ளம் என்றொரு இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டாங்க. இதற்காக புலிகள் கலைச் செல்வனைக் கடத்தி சென்று சித்திரவதை செய்தாங்க. இப்படி புலிகளின் வன்முறைக்கலாச்சாரம் இங்க இருந்தது.

தேசம்: கலைச்செல்வன் உங்களுடைய நெருங்கிய நண்பர்.

கலைச்செல்வன் எனக்கு மாத்திரம் அல்ல பலருக்கும் நெருங்கிய நண்பனாக இருந்தவர். உதவும் குணத்திற்கும், ஆபத்தில் உதவுவதற்கும் உதாரணம் காட்டமுடியும் என்றால் அது கலைச்செல்வனாகத்தான் இருக்கமுடியும். நிறைய தோழர்களிடையே நல்ல உறவு இருந்தது. ஒரு காலகட்டத்தில் மிக தீவிரமாக எல்லோரும் வேலை செய்தார்கள். அவர்களுடைய அந்த அராஜகங்களுக்கு எதிரான குரலையும் நடவடிக்கையும் நாங்கள் மறுக்க இயலாது.

தேசம்: அதை யாரும் மறுப்பதற்கில்லை.

அசோக்: அடுத்தது புஸ்பராஜா தோழர். எல்லாருக்கும் ஊக்கமாக இருந்தவர் அவர் சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர். சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் மிக நெருக்கமாக இருந்தவரும் அவர்தான்.

தேசம்: மற்றது அவருடைய ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற வரலாற்று நூலும் மிக முக்கியமானது. அதுல பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அதை ஆவணப்படுத்தி நூலாக கொண்டு வந்தது ஒரு முக்கியமான விஷயம்.

அசோக்: அடுத்தது புஸ்பராஜா தோழர் எங்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும் இருந்தவர்.

தேசம்: அரசியல் இலக்கிய தளங்களில் பரா மாஸ்டரின் பங்களிப்பும் முக்கியானது.

அசோக்: தோழர் பரா குடும்ப உறுப்பினர்கள் முழுப்பேருமே அரசியல் இலக்கிய மற்ற மனித உரிமை விடயங்களில் நிறைய செயற்பட்டாங்க. மல்லிகா, உமா, சந்தோஸ் எல்லாரும். இவங்க சிறு சஞ்சிகை ஒன்றைக் கூட வெளியிட்டாங்க. ‘சிந்தனை’ என்று பெயர்.

பாரா தோழருக்கு நீண்ட அரசியல் வரலாறு உண்டு. இலங்கையில் இடதுசாரி தொழிற்சங்கங்களை உருவாக்கியதில், அதனை முன்னெடுத்ததில் பரா தோழருக்கு நிறைய பங்குண்டு. அந்த வரலாறுகளெல்லாம் பதிவு செய்யப்படவேண்டியது. நானும் ஜெகாவும் பரா தோழரின் அனுபவங்களை ஒளிப்பதிவு செய்தோம். எழுத்தில் கொண்டு வரமுடியல்ல. சுவிஸ்ல ‘மனிதம்’ என்றெரு சஞ்சிகை நீண்ட காலம் வெளிவந்தது. அவங்க அமைப்பு வடிவத்தில் இயங்கினாங்க. ‘மனிதம்’ குரூப்புக்கு வரலாறு ஒன்று இருக்கு. ஒரு காலகட்டத்தில் பரிஸ் மாதிரி, சுவிஸிலையும் மிக மோசமான நெருக்கடியை புலிகள் கொடுத்தார்கள். அதற்கு எதிராக மனிதம் குரூப் நிறைய வேலை செய்தது. அந்த நண்பர்கள் துணிந்து புலிகளுக்கு எதிராக செயற்பட்டார்கள். ஜே ர்மனியில் தான் நிறைய சிறு சஞ்சிகைகள் வெளிவந்தன. பார்த்தீபன் ஆட்கள் ‘தூண்டில்’ என்றும், நிருபா ‘ஊதா’ என்றும், பாரதி ஆட்களும் ஒரு சஞ்சிகை வெளியிட்டாங்க. நான் இங்கு வருவதற்கு முன்னர் 80களின் கடைசி வரை நிறைய சிறுசஞ்சிகைகள் வெளிவந்திருக்கின்றன. எப்படியும் சுமார் 25 சஞ்சிகைகள் வெளி வந்திருக்கும் என நினைக்கிறன். அந்தளவிற்கு இலக்கிய சூழல் இருந்தது.

தேசம்: உங்களை பொறுத்த வரைக்கும் நீங்கள் பாரிஸில் வாழ்ந்தாலும் கலை இலக்கியச் சூழலை பொருத்த வரைக்கும் நீங்கள் எல்லைகளை கடந்து தான் வேலை செய்தீர்கள்.

அசோக்: இங்க வந்த பின் நிறைய தொடர்புகள் இருந்தது. Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்புடனும் உறவு இருந்தபடியால் அதன் ஆங்கில, தமிழ் பிரசுரங்களை யூரோப் ஃபுல்லா நாங்கள் விநியோகித்திருக்கிறோம். அந்த நேரம் நான் வேலை செய்ததை விட இதற்குப் பின்னால் அலைந்ததுதான் கூட. இதனால் நிறைய வேலைகளை இழந்திருக்கிறேன். தெரியும் தானே வேலைக்கு போனால் ஒழுங்காக வேலைக்கு போக வேண்டும். ஒருநாள் போகாவிட்டாலும் பிரச்சனை. நான் இப்படி ஜெர்மன், பெர்லின் போனேன் என்று சொன்னா இங்க வேலை போய்விடும்.

அடுத்தது தோழர் உமாகாந்தன். அவரும் இறந்து போய்விட்டார். அவரும் முக்கியமானவர். கட்டாயம் நிறைய பெயர்களை குறிப்பிட வேண்டும். ஆனால் பெயர்கள் உடனடியா ஞாபகம் இப்ப வரவில்லை. இந்த பெயர்களையெல்லாம் பதிவு செய்யவேண்டும். அடுத்தது நாங்கள் ‘நண்பர்கள் வட்டம்’ ஒன்றை இங்கு வைத்திருந்தோம். அந்த நண்பர்கள் வட்டத்துக்கு ஊடாக நிறைய வேலை செய்திருக்கிறம். நிறைய சந்திப்புகளை, கலந்துரையாடல்களை செய்திருக்கிறம். நிறைய புத்தக வெளியீடுகளை குறும்பட நிகழ்வுகளை புகைப்பட கண்காட்சி எல்லாம் செய்திருக்கிறம். நண்பர்கள் வட்டத்தில கலைச்செல்வன், லஷ்மி, அசோக் பிரகாஷ், கிருபன், மோகன், வன்னியசிங்கம், பிரதீபன், உதயகுமார் என்று நிறைய நண்பர்கள் இருந்தாங்க.

தேசம்: மற்றது நீங்கள் ‘அசை’ என்று ஒரு சஞ்சிகை கொண்டு வந்தீங்க அல்லவா?

அசோக்: அது மூன்று இதழ் வந்தது. அது ஒரு அரசியல் கோட்பாட்டுசஞ்சிகை. தொடர்ச்சியாக கொண்டுவரமுடியல்ல.

தேசம்: மற்றது இங்கே இருந்து அரசியல் கலை இலக்கியத்துடன் ஈடுபட்டவர்கள் கனடா வேறு நாடுகளுக்கும் போயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அசோக்: இங்கே இருந்து நிறைய பேர் போயிருக்கிறார்கள். வின்சென்ட் ரபேல், சேனன், கற்சுறா…

தேசம்: சேனன் லண்டனில் இருக்கிறார். கற்சுறா …

அசோக்: கற்சுறா, வின்சென்ட் ரபேல் கனடாவில் இருக்கிறாங்க. அவர் நிறைய திறமைசாலி. மொழியியல் தொடர்பாக மிக புலமைகொண்டவர். கற்சுறா இங்க இருக்கும் போது தேவி கணேசன் என்ற பெயரில் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். நல்ல சிறந்த கவிஞராக வரவேண்டியவர். சேனனின் இன்றைய அரசியல் வளர்ச்சியும் செயற்பாடும் முக்கியமானது. அவர் பாரிசில் இருந்திருந்தால் சோபாசக்தியோடு சேர்ந்து தன் அரசியலை அழித்திருப்பார். தப்பிவிட்டார்…

ஜெர்மனியில் சுசீந்திரன், பாரதி, சிறிரங்கன், பார்த்தீபன், சிவபாலன் என்று நிறைய. பார்த்தீபன் தூண்டில் என்றொரு சஞ்சிகையை வெளியிட்டவர். மற்றது பெண்கள் தொடர்பான நிறைய சந்திப்புகள் நடந்தது. இலக்கிய சந்திப்பு மாதிரி ‘பெண்கள் சந்திப்பு’ ம் இருந்தது. அதுல நிறைய பெண்கள் கலந்து கொண்டார்கள். இதுவும் ஜெர்மனியில் தான் 1990 இல் உருவானது. ஆரம்பத்தில் இதனுடைய முன்னணி செயற்பாட்டாளராக தேவிகா கங்காதரன் இருந்தாங்க என நினைக்கிறன். பிறகு தொடர்ச்சியான செயற்பாட்டில் நிருபா, உமா, இன்பா, ரஞ்சினி, மல்லிகா, தேவா …

தேசம்: லண்டனில் ராஜேஸ் பாலா…

அசோக்: ஓம். ராஜேஷ் பாலாவும் அதில் இருந்தாங்க. பிரான்சிலிருந்து லக்சுமி, சுவிசிலிருந்து ரஞ்சி, நோர்வேயிலிருந்து தயாநிதி போன்றவங்க முக்கியமானவங்களாக அதனோடு செயற்பட்டாங்க. தயாநிதி அந்த நேரத்தில காத்திரமான பெண்ணிய கோட்பாட்டு சஞ்சிகை ஒன்றை கொண்டு வந்தாங்க. சக்தி என்று பெயர். காலப்போக்கில் இலக்கிய சந்திப்பிலும், பெண்கள் சந்திப்பிலும் முரண்பாடு வந்தது என்பது இன்னுமொரு வரலாறு. ஒரு காலகட்டத்தில் ஆரோக்கியமான செயற்பாடுகளில் பெண்கள் சந்திப்பும், இலக்கிய சந்திப்பும் இருந்தது.

தேசம்: அடுத்தது பரிஸ் அரசியல் இலக்கியத்துக்கான களம். தலித் முன்னணியின் உருவாக்கம் ரஜாகரனுடைய கட்சியின் உருவாக்கம்.

அசோக்: நான் இங்க வந்ததும் ரஜாகரனுடன் தான் உறவு ஏற்பட்டது.

தேசம்: உறவுகளும் அதைத் தொடர்ந்து முரண்பாடுகளும்,,,

அசோக்: ஹட்டன் நெசனல் வங்கி கொள்ளை தொடர்பான பிரச்சனைகளிளால் இந்த முரண்பாடு வருகின்றது. அவர் ஜனநாயக உரையாடலுக்கான ஆளில்லை. தன்னுடைய கருத்துக்குக்கும் ஆளுமைக்கும் உட்பட்டு நாங்க இருந்தா அவருக்கு அது ஓகே. எந்த பிரச்சனையும் இல்லை. ஹட்டன் நெசனல் வங்கி கொள்ளை தொடர்பாக கேள்வி கேட்கத் தொடங்கித்தான் இந்த முரண்பாடுகள் வந்தது.

தேசம்: அவருடைய மொழியும் ஒரு ஆணாதிக்க மொழிதான்.

அசோக்: ஆனால் தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு நல்லவர். உபசரிப்பது, உதவி செய்வது. நான் வந்த பொழுது மிக நெருக்கடியான பொருளாதார நிலையில் நான் வீடு எடுப்பதற்கு அட்வான்ஸ் தந்ததே அவர்தான். பிறகு ஆரம்ப காலத்தில் எனக்கு ஒரு கேமரா வாங்கி தந்தார். எல்லாப்பணமும் கொடுத்து விட்டேன். நல்ல உபசரிப்பு செய்வார். ஆனால் அவருடைய தவறுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கேள்விகள் கேட்டால் பிரச்சனை.

தேசம்: ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் பிரச்சினையில்லை…

அசோக்: ஒரு காலகட்டத்தில் மிக நெருக்கமான நண்பர்களாக தான் நாங்கள் இருந்தோம். இப்படி அரசியல் முரண்பாட்டுக்கு அப்பால் தனிப்பட்ட ரீதியில் பார்த்தோம் என்றால் மிக அன்பான ஆட்களாக இருப்பார்கள். கஷ்டத்தில் உதவி செய்கிற தன்மை எல்லாம் இருக்கும். ஆனால் நிபந்தனை அடிப்படையில் தான் அது அமையும் அது கஷ்டம் எங்களுக்கு.

தேசம்: அதே மாதிரி தலித் முன்னணியுடன் உங்களுக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தது என்று நினைக்கிறேன்…

அசோக்: ஓம். தலித் முன்னணியினர் எனக்கு முதலே நண்பர்கள். தேவதாஸ், அசுரா என்கிற நாதன்.

தேசம்: ஏன் அந்த முரண்பாடு உங்களுக்கு தலித் முன்னணி உடைய ஏற்படுகிறது? என்ன பிரச்சினை அது?

அசோக்: தலித் முன்னணியுடன் இலங்கை அரசியல் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுதான். விடுதலைப் புலிகள் மீது எத்தகைய கடும் விமர்சனம் வைத்திருக்கிறனோ, அதைவிட மிகக் கடுமையான விமர்சனம் இலங்கை அரசு மீதும் எனக்கு இருக்கு. பேரினவாத அரசு ஒடுக்குமுறைகளை புறம்தள்ளி விட்டு, புலிகள்தான் எங்கள் எதிரி என்று சொல்லிக் கொண்டிருக்கமுடியாது. அப்போ இரண்டையும் நாங்கள் எதிர்க்க வேண்டும். புலிகளை எதிர்க்கிற அந்நேரம், பேரினவாத அரசையும் எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு என்னிடம் இருக்கிறது.

2009க்கு பிற்பாடு தான் என்னுடைய நிறைய தோழர்களுடன் முரண்பாடு வருது. அதுவரையில் மிக தீவிரமாக புலி எதிர்ப்பாளர்களாக, அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதாக சொல்லிக்கொண்ட நாங்கள், புலிகள் அழிக்கப்பட்ட உடனேயே இன்னாரு ஒடுக்குமுறையாளனான இலங்கை பேரினவாத அரசோடு இணைகிறோம். அதனை ஆதரிக்கிறம் .நியாயப்படுத்துறம்.

விமர்சன பூர்வமான கண்ணோட்டத்தோடு மக்களின் நன்மைக்காக நாங்கள் இலங்கை அரசோடு பேசலாம். அந்த வகையில் நீங்கள் மக்களின் நன்மைக்காக மக்களின் விடுதலைக்காக பேசுவது தவறு இல்லை. ஏனென்றால் நீங்கள் உரிமை பற்றி பேச வேண்டும் என்றால் உடன்பாட்டுக்கு வர வேண்டுமென்றால் அந்த அரசுடன் தான் பேச வேண்டும். ஆனால் அவங்க தனிப்பட்ட நலன்களுக்காக போய்ச் சேருகிறார்கள் ஆதரிக்கின்றார்கள் . அதை என்னால் சகிக்க முடியாமல் போய்விட்டது. வர்க்கத்தாலும், சாதித்தாலும் ஒடுக்கப்பட்ட எங்கட மக்களின் விடுதலை உரிமை பற்றி பேசுவதுதான் தலித்திய அரசியல். ஆனால் இவங்க ஒடுக்குமுறையாளர்களுடன் தனிப்பட்ட சுயநலன்களுக்காக கைகோர்க்கிறாங்க.

தேசம்: பொதுவாக பாரிஸ் இலக்கியத் தளம், அரசியல் தளம் போன்றவற்றில் பேசப்பட்ட மிகக் கூர்மையான முரண்பாடு என்டு நினைக்கிறேன். ஞானம் அவர்களுடனான முரண்பாடு. அது எப்படி..? அது வந்து அவர் இருக்கிற அரசியல் நிலைக்காக அல்ல. அதுக்கு முதலே அந்த முரண்பாடு வந்துட்டு என்டு நினைக்குறேன்.

அசோக்: ஞானம் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன் என நினைக்கிறன். நான் பாரிசிக்கு வந்த புதிதில் எனக்கு உதவி செய்ததில் முக்கியமானவர் ஞானம்.

தேசம்: அவர் மட்டக்களப்புகாரர் தானே…?

அசோக்: நாங்க ஒரே கிராமத்தை அதாவது களுதாவளை கிராமத்தை சேர்ந்தவங்க. புளொட் மாணவர் அமைப்பில் வேலை செய்தவர். மிகவும் நல்லவர். நல்ல திறமைசாலி. நல்ல ஆற்றலும் திறமையும் உள்ளவர். இங்க பாரிசிக்கு வந்த போது அவர் செய்த உதவிகளை மறக்கமுடியாது. இதுபற்றி முன்னர் சொல்லி உள்ளேன். இதில ஒரு பெரிய சிக்கல் என்னென்டு கேட்டால், வெறும் புலி எதிர்ப்பு என்று சொல்லி சொல்லி இலங்கை அரசோடு அதன் ஆதரவு சக்திகளோடு இணைய முடியாது. போய் சேர ஏலாது. அத்தோட புலிகளிலிருந்து கொண்டு எங்கட மக்களையும் தோழர்களையும் நண்பர்களையும் கொடுரமாக கொன்றொழித்துவிட்டு புலிகளோடு இருந்த காலத்தில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து விட்டு அதிகாரப் போட்டியால் தனிப்பட்டமுரண்பாடுகளினால் வெளியேறி விட்டு புலிகளை எதிர்க்கின்ற எந்த பேர்வழிகளையும் நான் நம்புவதில்லை.

புலிகள்ல மேல்மட்டங்கள்ல வேலைசெய்தவங்கள் இருக்காங்கள் தானே… நான் இவங்களை எப்போதும் எப்போதுமே நம்புறது இல்ல. புலிகளோட மனோநிலை என்டுறதுல ஒரு உளவியல் கட்டமைப்பு இருக்கும். அவங்கள் இயல்பாகவே அந்த உளவியல் கட்டமைப்பால் வடிவமைக்கப்பட்டிருப்பாங்க. அவங்களிட்ட ஜனநாயக பண்பாடே இருக்காது. ஜனநாயக அமைப்புக்களுக்கு எதிராக இருப்பாங்கள். புலிகள எதிர்க்கின்ற இன்னோரு புலிகளாதான் இருப்பாங்கள். அப்படி தான் நான் பிள்ளையானையும் , கருணாவையும் பார்க்குறன். அப்ப ஞானம் போன்ற ஆட்களின் இணைவு என்டது பலத்த அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் கொடுத்தது.

நீங்கள் ஒரு இடதுசாரிய முற்போக்கு சிந்தனைகளுடன் வளர்ந்தவர்கள் – பேசுபவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் கருணாவோடயும் பிறகு பிள்ளையானோடயும் – எந்த அடிப்படையில எப்பிடி வேலைசெய்வீங்கள். விடுதலைப் புலிகள் என்ற சொல்லாடலே ரத்தவாடை அடிப்பது. பிள்ளையான் கட்சியின் பெயரைப் பாருங்கள். தமிழ் மக்கள் வடுதலைப் புலிகள் . அதே ரத்தவாடை அடிக்கும் சொல்லாடல். இவர்கள் வன்னிப் புலிகளை எதிர்த்தார்களே தவிர எண்ணமும் செயலும் மனக் கட்டமைப்பும் புலி அரசியலைக் கொண்டதுதான்.

புலிகள் பிற்போக்குத்தனமான அரசியலை கொண்டு தமிழ்தேசிய வாதத்தை அணுகினாங்க. அதன் விளைவுகளை நாங்க பார்த்தோம் அனுபவித்தோம். இதே அரசியலை பிற்போக்கு அரசியலை கொண்டு பிள்ளையான் கட்சியினர் பிரதேசவாத அரசியலை கட்டமைக்கிறாங்க. எப்போதுமே தேசியவாதம், பிரதேச வாதம் போன்ற அடையாள அரசியல்கள் பிற்போக்குத்தனமான சிந்தனைகளையும் சுய நல பிழைப்பு வாதத்தையும் கொண்டவங்க கையில் அகப்படும் போது அது ஆபத்தான விளைவுகளைதான் கொடுக்கும். இவ்வாறான பிற்போக்குத்தன அரசியலை வைத்து அரசியல்வாதிகளும், அவர்களை அண்டிப்பிழைப்பவர்களும் வாழ்வாங்க. ஆனா பாதிக்கப்படுவது அப்பாவி மக்களும், இளம் தலைமுறையும்தான். இத நாங்க மட்டக்களப்பு பிரதேசத்தில பார்க்க முடியும். இதனால்தான் ஞானம் தொடர்பாக முரண்பாடுகள் எனக்கு வருகிறது.

தேசம்: உங்களுக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடு அதுக்குப் பிறகுதான் வருதா…?

அசோக்: இல்லை இல்லை இதற்கு முதலே முரண்பாடு தொடங்கி விட்டது. இப்ப கருத்தியல் சார்ந்து மிகத் தீவிரமானது இந்த கருணா பிள்ளையானோடு சேர்ந்த பிறகுதான். இதற்கு முதல் எப்படி இந்த முரண்பாடு தொடங்குது என்றால் ‘எக்சில்’ என்றொரு சஞ்சிகையை கலைச்செல்வன், லக்சுமி, ஞானம், விஜி, கிருஸ்ணராஜா, கற்சுறா இவங்கள் எல்லாருமா சேர்ந்து வெளியிடுறாங்க. அந்தக் காலகட்டத்தில் நானும் இங்க பாரிசில் இருந்தேன். இவர்களின் இந்த ஒருங்கிணைவு, சஞ்சிகை வெளியீடு தொடர்பாக எனக்கு சில சிக்கல்கள் இருந்தது. ஏனென்றால் உண்மையில் கருத்தியல் சார்ந்து ஒன்றுபட வேணும். கோட்பாட்டு செயற் தளத்தில் ஒரு ஒன்றிணைவு இருக்க வரவேண்டும். அப்போதுதான் ஆக்க பூர்வமாக செயற்பட முடியும்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு தனி நபர்கள் முரண்பாடுகள் இவங்களிடம் தலை தூக்கிறது. ஏனென்டா இந்த புத்தகத்தின் வருகைக்கான உழைப்பும் பொருளாதார ரீதியான உதவியும் கலைச்செல்வன், லட்சுமி பக்கம்தான் கூடுதலா இருந்தது. அவங்கட முயற்சியால்தான் அது வெளிவந்தது. அத்தோட கலைச் செல்வன், லக்சுமி அரசியல் சார்ந்து ஆளுமையானவங்க. அப்ப அதன் தாக்கம் இருக்கும். இவங்களால ஒருகட்டத்திற்கு மேல இணைந்து செயற்பட முடியல்ல. அரசியல் சமநிலை இவர்களிடம் இருக்கல்ல. முரண்பாடுகள் வருகிறது. முரண்பாடு வந்தவுடன் இவங்க கலைச்செல்வன், லட்சுமி மீது வைத்த கூற்றச்சாட்டு இருக்குத்தானே அது அபாண்டமான ஆரோக்கியமற்றதா இருந்தது.

தேசம்: யார் குற்றச்சாட்டுகள வைச்சது…?

அசோக்: ஞானம், கற்சுறா ஆட்கள்தான் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிட்டு. அப்ப ஞானமெல்லாம் எங்களுடன் மிக நெருக்கமான உறவு தான். கற்சுறாவோடும் நாங்கல்லாம் நெருக்கமான நண்பர்கள் தான். இந்த முரண்பாட்டின் அடிப்படையில நாங்க ஒரு சைட் எடுக்க வேண்டி வந்து விட்டது. நாங்கள் பார்த்தோம், கலைச்செல்வன், லட்சுமி ஆட்கள் பக்கம்தான் நியாயம் இருந்தது. நான் தோழர் புஷ்பராஜா எல்லாரும் கலைச்செல்வன் பக்கம்தான் சப்போர்ட் பண்ணினோம். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டம். பிரச்சனை மிக தீவிரமாக கூர்மை அடைந்தது.

பிரச்சினையின் போது இவங்க முன்வைக்கிற குற்றச்சாட்டு தெரியும்தானே. “இவன் வேளாளன், இவன் சாதி பார்க்கிறான்” போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இந்த குற்றச்சாட்டை நீங்கள் வேறாக்கள் மேல முன்வைக்க முடியும். ஆனா கலைச்செல்வன், லட்சுமி மேல முன்வைக்கிறது அபாண்டம். அவங்க சாதிய தற்கொலை செய்து கொண்டவர்கள். இயல்பாகவே அரசியல் ரீதியாக வளர்ந்தாக்கள். திட்டமிட்டு இந்த குற்றச்சாட்டுகளை அவங்க மேல முன்வைத்தார்கள். அத எங்களுக்கு சகிக்க முடியாமல் இருந்தது. அடுத்தது இவங்க நடந்துகொண்ட முறைகள். நாங்கள் புலிகளின் வன்முறைகள் பற்றி கதைக்கிறம். இவங்க கலைச் செல்வன் இல்லாத நேரம் பார்த்து லட்சுமி வீட்டுக்கு போய் கதவுல எல்லாம் அடிச்சு பெரிய கலாட்டா பண்ணினாங்க. என்ன பிரச்சனை என்றால் கருத்தியல் சார்ந்து வருகிற முரண்பாடுகள் அனேகமாக வன்முறைகளுக்கு போவதில்லை. ஆனா தனிநபர் பிரச்சனைகளால வாற முரண்பாடுகள் இப்படித்தான் வன்முறை மனோபாவத்தை ஏற்படுத்தும். அதுதான் இங்கையும் நடந்தது. இந்த பிரச்சனைகளுக்கு பிறகு பேர்லினில் நடந்த இலக்கிய சந்திப்பில் இவங்க நடந்துகொண்ட முறை மோசமானது. அடிபுடி வரும் நிலைக்கு போனது. நல்ல வேளை சுசிந்திரன், பாரதி, பரா ஆட்கள் தடுத்துவிட்டாங்க.

ஒரு பக்கம் நாங்க வன்முறைகளை எதிர்க்கிறோம். மறுபக்கம் இப்படி செய்றத ஏற்க முடியாது. அந்த அடிப்படையில் தான் நாங்கள் கலைச்செல்வன், லட்சுமி ஆட்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தோம். பிறகு அது பெரிய முரண்பாடா போய். அதுல அவங்க நடந்துகொண்ட முறை பிழை. அதால எங்களுக்கு அவங்கட நட்புகளும் போயிட்டு. உண்மையிலேயே இந்த முரண்பாட்டை தீர்த்திருக்க முடியும். ஞானமும், கற்சுறாவும் மோசமானவர்கள் இல்லை. நியாயங்களை ஏற்று இருப்பார்கள்.பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியும். ஆனா இந்த முரண்பாட்டை பயன்படுத்தி இதை கூர்மையாக்கியதில் வேறு சிலருக்கு பங்கு உண்டு. இவங்களும் அவங்களின்ற கதையை கேட்டு பின்னால போனாங்க. இந்த முரண்பாடு வந்த உடனே ஒரு குரூப் அவங்களுடன் இணைந்து கொண்டது. அது எப்ப எப்ப என்டு பார்த்துக் கொண்டிருக்கிற தவறான சக்திகள் இணைந்து கொண்டாங்க.

தேசம்: யார் அந்த தவறான சக்திகள்..?

அசோக்: அந்த நேரம் சோபாசக்தி எல்லாம் உடனடியாக போய் சேர்ந்தாங்கள்.

லிற்றில் நூலகம் திறந்துவைக்கப்பட்டதன் காணொலி

லிற்றில் நூலகத்தை அமரர் இராசமணி பாக்கியநாதனின் முத்த புதல்வர் ஸ்ரீகுமார் பாக்கியநாதன் இன்று திறந்து வைத்தார். தற்போது மலேசியாவில் வாழ்கின்ற தொழிலதிபரான இவரோடு, இவரது சகோதர சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். லண்டனில் இருந்து லிற்றில் எய்ட் இன் தலைவர் கதிரமலை நந்தகுமார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார். லிற்றில் எய்ட் தலைவர் க நந்தகுமார் லிற்றில் எய்ட் இன் செயற்திட்டங்களை பார்வையிடுவதுடன் லிற்றில் எய்ட்இன் மேற்பார்வையில் இயங்கும் முல்லைத்தீவில் உள்ள கற்சிலைமடுவின் குழந்தைகள் அமைப்பின் செயற்திட்டங்களையும் பார்வையிடுவார்.

முதல் காதல் தற்கொலையில்! எஞ்சிய வாழ்க்கை குற்ற உணர்வில்!! வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்!!! – பாகம் 32

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 32 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 05 மார்ச் 2022). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 32:

தேசம்: வணக்கம். நீண்ட உரையாடலில் இன்னுமொரு படி வந்து நிற்கிறோம். எண்பதுகளில் உங்களுடைய அரசியல் பயணத்தை நீங்கள் ஆரம்பித்திருந்தீர்கள். அந்த அரசியல் பயணம் ஒரு நீண்ட பயணம். அதற்கு பிறகு நாங்கள் 91 ஆம் ஆண்டு வரை இலங்கை இந்தியாவில் உங்களுடைய அரசியல் பங்களிப்பை பற்றி நாங்கள் கதைத்திருந்தோம். அதற்கு பிறகு நீங்கள் 92ஆம் ஆண்டு பாரிசுக்கு இடம்பெயர்ந்து பாரிசில் நடந்த அரசியல் இலக்கிய சூழல் பற்றி கதைத்துக் கொண்டு இருக்கிறோம். அதற்கு முதல் உங்களுடைய உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் கதைத்திருந்தோம்.

நீண்ட பயணம். கடினமான பயணம். அதில் நீங்கள் இழந்தது, உங்களுடைய வலிகளைத் தொடர்ந்து நீங்கள் ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டது வரைக்கும் கதைத்திருக்கிறோம். இதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பலத்த வலிகளுக்கு மத்தியிலும் சில விஷயங்களை உங்களால் சொல்லக் கூடியதாக இருந்தது. சில விடயங்கள் சொல்வதற்கு கஷ்டமான விடயங்களும் நடந்திருக்கு. தனிப்பட்ட முறையில் அது உங்களுக்கு நிறைய பாதிப்புகளையும் கொடுத்திருக்கு. அந்த வகையில் நாங்கள் மீளவும் உங்களோட அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலத்துக்கு ஒருக்காப் போயிட்டு வரலாம் என்று யோசித்தேன். அதுல பல விடயங்களை நீங்கள் கதைத்திருந்தீர்கள்.

அதில் உங்களுடைய அரசியல் ஆரம்பத்துக்கு முதல், அரசியலில் நீங்கள் முழுமையாக ஈடுபடுவதற்கு முதல், உங்களுடைய இளமை பிராயத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றி கதைத்தோம். அதில் உங்களுக்கு ஏற்பட்ட உறவு சம்பந்தமாகவும் கதைத்திருந்தோம். நான் குறிப்பாக கதைப்பது களுதாவளை கிராமத்தில் இளமைக்காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தோழியினுடைய உறவு பற்றி – லீலா என்பவருடைய உறவு பற்றி. உங்களுக்கு கதைப்பதற்கு சிலநேரம் கஷ்டமாக இருக்கலாம். அவருடைய முடிவு கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும் நான் நினைக்கிறேன் இந்த இடத்தில் கதைத்துச் செல்வது நல்லம் என்று. அதைப் பற்றி உங்களுக்கு சொல்ல முடிந்தால் நல்லம்…

அசோக்: இந்த சம்பவத்தை எப்படி தொடங்குவது, கதைப்பது என்று எனக்கு தெரியல்ல. இந்த சம்பவம் நடந்து 40 வருடங்களாகி விட்டது.

80 ம் ஆண்டு நடந்தது… நாம் நினைப்பது, காலம் வலிகளையும் குற்ற உணர்வையும் போக்கி விடும் என்று. அப்படி நடக்கிறது இல்லை. அடிமனதில் படிஞ்சி போய் இருக்கும். நினைவுக்கு வரும் போதெல்லாம் அதன் வேதனை கடுமையானது. ஆனா மனம் விட்டு இப்படி உரையாடுவது குற்றஉணர்வை, வலியை குறைக்க உதவும் என நினைக்கிறன்.

அந்தக் காலகட்டம் எண்பதுகளில் தெரியும்தானே ஒரு இலக்கிய வட்டம் நண்பர்கள் உலகம். இளந்தளிர் வாசகர் வட்டத்தை உருவாக்கிக் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. எங்களுடைய முழுமையான ஈடுபாடு இலக்கிய வாசிப்பு தான். வாசிகசாலை, வாசிப்பு, படிப்பு. அரசியல் ஆரம்பம் அப்பதான். நாங்கள் இயக்கத்துக்கு போகவில்லை அப்போ. முழுக்க முழுக்க இலக்கிய உலகம் தான்.

அந்த நேரம் எனக்கு நல்ல சிநேகையாக, தோழியாக, என் அன்புக்குரியவங்களாக இருந்தவங்க லீலா. இளமையிருந்தே நாங்க பழக்கம். வாழ்க்கையின் முதல் காதல்.

தேசம்: உங்களுடைய கிராமத்தைச் சேர்ந்தவர் அவர் உங்களுடைய பேனா நண்பி அல்ல…

அசோக்: பேனா நண்பி இல்லை, ஒரே கிராமத்தைச் சேர்ந்தவங்க நாங்க. எங்களுடைய இளந்தளிர் வாசகர் வட்ட நண்பர்கள். எல்லாரும் ஒரே நண்பர்கள் நாங்கள். அதுல லீலாவும் ஒருவர். இந்த நண்பர்களும் தோழர்களும்தான் காலப் போக்கில் என்னோடு புளொட்டிக்கு வந்தவங்க. இது பற்றி முன்னமே கதைத்திருக்கிறன்.

லீலா மிக மென்மையானவர். என்னுடைய நண்பர்கள் எல்லோருக்கும் நெருக்கமாவங்க. ஒரே கிராமம் என்றால் தெரியுங்தானே, ஒவ்வொரு நாளும் சந்திப்பம். கதைப்பம். எங்கட காதல் எங்க நண்பர்கள் வட்டத்தில இயல்பான விசியம். லீலாவுக்கு அப்பா இல்லை. அம்மா வேறு திருமணம் செய்து இன்னொரு ஊரில இருந்தாங்க. லீலா அம்மம்மாவோட இருந்தாங்க. மாமா இரண்டு பேர், மாமி என மிக அன்பான குடும்பம். அருமையான ஆட்கள். எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. லீலாவை மிக அன்பாக பாத்தாங்க.

திடீரென ஒருநாள் விவசாயத்திற்கு பயன்படுத்துற கிருமி நாசினியை லீலா குடிச்சிட்டாங்க. உடனேயே வீட்டிலிருந்து ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிட்டாங்க. என்ட நண்பனும் அவரின்ற அம்மாவும்தான் தான் கொண்டு போனவங்க. என்ட நண்பன் என்றது லீலாவுக்கு சகோதர முறையானவர். யோகன் சீவரெத்தினம் என்றுசொல்லி. என்னோடு பிறகு இயக்கத்திக்கு வந்தவர். அவங்க கொண்டு போகும் போது சொல்லியிருக்கிறார் என்னை காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்று. பெரிசாக தாக்கம் கொடுக்கல்ல. பேசும் நிலையிலதான் இருந்திருக்காங்க. ஹாஸ்பிடல் கொண்டு போகும் வரைக்கும் அவர் பேசிக் கொண்டுதான் இருந்திருக்கிறார். அப்போ ஹாஸ்பிடல் போய் சிகிச்சை கொடுத்த பிறகு நோர்மலா இருந்திருக்காங்க. ஆபத்தைத் தாண்டிவிட்டார் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார். “நான் செத்து இருந்தா எப்படியெல்லாம் கதைச்சிருப்பாங்க” என்றெல்லாம் லீலா சொல்லி இருக்காங்க. அந்தளவிற்கு சுகமாக இருந்திருக்கிறார். அந்த மருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தான் வேலை செய்யுமாம். அதற்குப்பிறகு தீடிரென மயக்கம் ஏற்பட்டு இறந்திட்டாங்க.

தேசம்: சிலவேளை அந்த நேரம் மருத்துவ வசதிகளும் அவ்வளவு வளர்ந்திருக்கவில்லை. இன்றைய சூழலில் என்றால் சிலவேளை காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

அசோக்: இதற்கு ஒரு வருஷத்துக்கு முதல் ஸ்லீப்பிங் டேப்லெட் சாப்பிட்டு பிரச்சனையாகி விட்டது. யாருக்கும் சொல்லவில்லை. நித்திரை மயக்கமாக வரும் போதுதான் சொல்லி இருக்கிறா. இப்படி நித்திரை குளிசை பாவித்தேன் என்று. பிறகு என்னுடைய நண்பர்கள் எல்லாம் சேர்ந்து முதல் உதவி செய்து காப்பாற்றீனாங்க. அதற்கும் காரணம் கேட்டும் அவங்க. சொல்லவில்லை. அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததாக தெரியல்ல. அடுத்தது கதைத்தால்தானே தெரியவரும். குடும்பத்தால் எந்தவொரு நெருக்கடியும் இல்லை. அருமையான குடும்பம்.

தேசம்: ஏன் அந்த முடிவுக்கு அவா போறா…

அசோக்: நண்பர்கள் அபிப்பிராயம் என்ன என்றால் நான் ஒரு காரணமாக இருக்கலாம். முதலும் நித்திரை குளிசை போட்டதற்கான காரணம் சொல்லவில்லை. என்னைவிட என்னுடைய நண்பர்கள் மிக நெருக்கம் அவங்களிட்டையும் காரணம் சொல்ல வில்லை. நானும் நினைக்கிறன் நான் தான் காரணமாக இருக்கலாம் என்று. அவங்களின்ற வீட்டைப் பொறுத்தவரை அம்மம்மா, மாமி, மாமா ஆட்கள் மிக அன்பானவங்க. வீட்டில்பிரச்சனை இருக்க சந்தர்ப்பம் இல்லை.

தேசம்: 80 கால கட்டங்களில் பொதுவாக தற்கொலையின் உச்சியில் இருந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதுலயும் குறிப்பாக விவசாயத்திற்கு பாவிக்கிற கிருமி நாசினியை குடித்துத்தான் நிறைய பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதற்கு பிறகு தான் நான் நினைக்கிறேன் உலகம் முழுதுமே சட்டமூலம் ஒன்று வந்தது கிருமிநாசினி யின் பாதுகாப்பு பற்றி. இதனைப் பாவிப்பதை, கட்டுப்படுத்த வேண்டுமென்ற விஷயங்களெல்லாம் அதற்குப்பிறகுதான் கூடுதலாக பேசப்பட்டு இன்று அது நிறைய குறைந்திருக்கின்றது. ஆனால் இன்றும் இலங்கையில் நிறைய தற்கொலைகள் இடம்பெறுகிறது.

தமிழர் மத்தியில் இந்த தற்கொலை வீதம் ஒப்பீட்டளவில் கூடுதலாக தான் இருக்குது. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அது ஏன் அவர்கள் எடுத்த உடன்… சில ஆய்வுகள் தெரிவிக்கிறது தற்கொலை பரம்பரையலகுடன் சம்பந்தப்பட்டதாகவும் சொல்லப்படுது. தற்கொலைக்கான எண்ணம் வரும்போது தற்கொலைக்கான துணை காரணிகளும் சேர்ந்து கொள்ளுது. அதுல தான் இந்த அரலி விதை அரைக்கிறதோ அல்லது இதுகள் வந்து இலகுவாக கிடைக்கக்கூடியதாக இருக்குது. அது உடனே வர தூண்டுதல் தானே

லீலாவினுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் உங்களுடைய நண்பர்கள் என்று நினைக்கிறேன் அப்படியா…

அசோக்: சகோதரர்கள் எல்லோரும் நல்ல நண்பர்கள் எல்லாம் ஒரே ஊர் ஆக்கள் தானே. இன்றைக்கும் என் நண்பர்கள் அவர்கள்.

தேசம்: எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உறவுக்காரர் உங்களுக்கு…

அசோக்: ஓம். சின்னம்மா, பெரியம்மா பிள்ளைகள். எல்லாம் என்னுடைய தோழர்கள். இயக்கத்துக்கு என்னுடன் வந்தவர்கள். ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனது யோகன் தான். யோகன் என்றால் சீவரத்தினம் என்று சொல்லி உங்களுக்கு தெரியும்.

தேசம்: அவருடைய பெயர் தான் உங்களுக்கு வைத்திருக்கிறீர்களா – புனைப்பெயராக?

அசோக்: இல்லை இல்லை என்னுடைய பெயரும் யோகன், அவருடைய பெயரும் யோகன். என்னைவிட வயது குறைவு அவர்.

தேசம்: அவரோட இப்பவும் உங்களுக்கு நல்ல உறவு இருக்குதா…

அசோக்: ஓம் என்னுடைய பிரண்ட் நல்ல தோழர். பிறகு இயக்கத்துக்கு எங்களோடு வந்த தோழர். மச்சான் முறையானவர். சொந்தங்கள் தானே.

தேசம்: அவருடைய இந்த மரணத்துக்கு இந்த நிலைப்பாட்டுக்கு என்ன காரணம்? நீங்கள் வேறு ஒரு உறவுக்குள்ள போயிட்டீங்க என்று நினைக்கிறாவா? அல்லது …

அசோக்: அந்த நேரம் நிறைய பென் பிரண்ட்ஸ் இருந்தது தானே. அந்தக் காலம் பேனா நட்பு உலகம் தானே. 80 ஏப்ரல் தான் இந்த மரணம் நடக்குது. நண்பர்களுடைய அபிப்ராயம் என்ன என்று கேட்டால் என் பேனா நட்புக்கள் தொடர்பான சந்தேகம் இருக்கலாம் என்று. ஏனென்றால் வேற நெருக்கடி அவங்களுக்கு இல்லை. தற்கொலை செய்வதற்கான புறச்சூழல் அவங்களுக்கு வேறு இல்லை. பேசியிருந்தால் இருந்தால் சந்தேகத்தை போக்கி செய்து இருக்கலாம். என்னோட பேசாவிட்டாலும் பரவாயில்லை, நண்பர்களோடு பேசி இருக்கலாம். செய்யவில்லை. அவரோடு மிக நெருக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள். கடைசியில அவங்களோடயும் கதைக்கவில்லை.

தேசம்: இன்றைக்கும் பார்த்தீர்களென்றால் குடும்பங்களில் நடக்கின்ற நிறைய பிரச்சனைகளுக்கு தற்கொலைகளுக்கு அதீத அன்பு என்று சொல்வதா அல்லது பொசசிவ்னஸ் அது அவர்களை ஏதோ ஒருவகையில் ஒரு பாதுகாப்பு இன்மை நிலவுவதாக ஒரு எண்ணத்தை கொடுக்கும். அது கன பேரை இப்படியான சம்பவங்களுக்கு தூண்டி இருக்கு. அது பல்வேறு காரணங்களும் இருக்கு. சிலபேருக்கு இயல்பாகவே தற்கொலைக்கான காரணிகள் அவர்களுடைய பரம்பரை அலகில் இருக்கும். இவ்வாறு தற்கொலைக்கான காரணங்கள் பல. அதுல எது இந்த முடிவுக்கு இட்டுச் செல்கிறது…

அசோக்: என் மேல சந்தேகம் வந்திருக்கலாம். பேனா நட்புகள் அது இதுவென்று. மனதுக்குள்ளே அதைப் பற்றிய சந்தேகங்கள் இருந்திருக்கலாம். உண்மையிலேயே எனக்கு வேதனையான வலியான விசியம் என்னவென்றால் பிரச்சனையை என்னிடம் கதைத்திருக்கலாம். அல்லது என் நண்பர்களிடம் கதைச்சிருக்கலாம். நினைக்கும்போதெல்லாம் பெரிய வலியாக இருக்கும். பெரியகுற்ற உணர்வாக இருக்கும்.

தேசம்: உண்மையிலேயே கன விடயங்களில் இந்த விடை தெரியாத கேள்விகள் என்று பட்டியலுக்குள் தான் இது எல்லாத்தையும் நாங்கள் போட வேண்டும். ஏனென்றால் உள்ளுணர்வு ரீதியாக என்னத்தை அவர் யோசித்தார் என்று எங்களுக்கும் தெரியாது.

அசோக்: நிறைய பேனா நண்பர்கள் இருந்தபடியால் அந்த சந்தேகங்கள் வந்து இருக்கலாம். என் நண்பர்கள் அபிப்பிராயம். செல்வியின் நட்பு காரணமாக இருக்கலாம் என்று. ஆனா அந்த நேரத்தில செல்வி எனக்கு பென் பிரண்ட்தான். லீலா இறந்ததற்கு பின்னர்தான் 83ல்தான் செல்வியோடு எனக்கு உறவு வருகிறது. அவங்க என்னுடன், என்ட நண்பர்களுடன் பிரச்சனையை கதைத்திருக்கலாம்.

பெரிய மன வருத்தம் என்ன என்று கேட்டால் மிக நெருக்கமான நண்பர்களிடம் கூட இதைப்பற்றி கதைக்கவில்லை. என்னுடன் இப்பவும் கதைப்பார்கள் நண்பர்கள். மிக நெருக்கமான நண்பர்கள் அவர்கள். என்னை விட மிக நெருக்கமாக லீலாவோடு இருந்த நண்பர்கள் அவங்க. அவங்க தற்கொலை பண்ணிக் கொள்வதற்கு முதல் நாள் நானும் ரவியும் சந்திக்கிறோம் லைப்ரரியில் அவங்களை.

தேசம்: அதுல நீங்கள் ஒரு மாற்றத்தையும் கவனிக்கல…

அசோக்: இல்லை இல்லை. வழமைபோலத்தான் இருந்தாங்க.

தேசம்: அதற்குப் பிறகு அவருடைய இறுதி நிகழ்வுகள் சம்பந்தமாக எப்படி அது உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது…

அசோக்: அரசரெத்தினம் என்று சொல்லி. நாங்க அரசன் என்கிறது. யோகன் சீவரெத்தினத்தின் அண்ணா. எனக்கு மச்சான் முறையானவர். என்னோடு மிக அன்பானவர். என் கிராமத்தைப் பற்றி சொல்லும் போது இவரைப்பற்றி சொல்லி இருக்கிறன். TULF க்கு எங்க ஊரில் முக்கியமான ஆளாக இருந்தவர். தமிழ் இளைஞர் பேரவையிலும் இருந்தவர். 82இல் சிறைக்கு போயிட்டு வரும்போது கடுமையான பொலீஸ் நெருக்கடியில் கூட என்னை தோளில் வைத்துக்கொண்டு எங்கட கிராமத்தின் வீதியெல்லாம் ஊர்வலமாக கொண்டு சென்றவர். லீலாவின் அண்ணா முறையானவர். இறுதி நிகழ்வுக்கு வரும்படி கூப்பிட்டார். நண்பர்களும் கூப்பிட்டாங்க. அப்ப எனக்கு எல்லாமே இருண்டு போய் இருந்தது. எதையும் யோசிக்க முடியல்ல. கடும் வேதனையாக இருந்தது. போக விரும்பல்ல.

பிறகு கொஞ்ச காலத்துக்குப் பிறகு லீலாவின் மூத்த மாமா கேட்டாங்க. இளைய மாமாவுக்கு என் மீது கோபம் இருந்தது. அவர் என்னோடு கதைப்பதை விட்டு விட்டார். இப்ப யோசிக்கும்போது நான் போய் இருக்க வேண்டும். அந்த குற்ற உணர்வு இருக்கிறது.

அன்றைய நண்பர்கள் பலர் நாங்க இன்றைக்கும் நண்பர்களாக தோழர்களாக இருக்கிறம். பழைய நினைவுகளை கதைக்கும்போதெல்லாம் லீலாவின் நினைவுகளும் வரும். அப்ப கடும் வேதனையாக வலியாக இருக்கும். உறவுகளுக்கும், நேசிப்புக்களுக்கும் நேர்மை அவசியம். அதில் நான் தவறிழைத்துவிட்டன் என்றுதான் நினைக்கிறன்.

தேசம்: எண்பது காலகட்டங்களில் அது முக்கியமானது. விவசாய கிருமி நாசினிகளை குடிக்கிறது. அரளி விதை சாப்பிடுவது சாதாரண நிகழ்வாக தான் இருந்தது. இப்ப அந்த வகையில் ஏற்படும் மரணங்கள் குறைக்கப்பட்டு இருக்கு. ஆனாலும் தற்கொலை என்பது தமிழ்ச் சூழலில் முக்கியமான ஒரு பிரச்சனையாக தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். புலம்பெயர் சூழலில் எல்லாம் நிறைய தற்கொலை நடந்தது. அது சில சமயங்களில் தமிழர்கள் மத்தியில் இந்த பரம்பரையியல் தாக்கம் நிறைய இருக்குதா என்றும் நாங்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். உளவியல் சார்ந்த விழிப்புணர்வும் எங்கட சமூகத்தில் இல்லைதானே. அதுகள் சார்ந்தும் நாங்கள் கூட கவனம் எடுக்க வேண்டும். மிகக் கஷ்டமான ஒரு விடயத்தை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

இப்ப உங்களிடம் நான் நினைக்கிறேன் ஒரு குற்ற உணர்வு இருக்கிறது என்று.

அசோக்: அது நீண்ட காலமாக இருக்கிறது. அதனால் தான் பேர்சனல் வாழ்க்கையை கதைக்கும் போது இதையெல்லாம் கதைக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு ஒரு ஃப்ரீ வேண்டும். நான் ஆரம்பத்திலேயே களுதாவளை பற்றி கதைக்கும் போது இதை கதைக்கவில்லை. ஏனென்றால் பர்சனல் வாழ்க்கை வரும்போது இதைப்பற்றி கதைக்கலாம் என்று இருந்தேன். ஏனென்றால் ஒரு அரசியல் சமூக வாழ்க்கையில் ஈடுபடும் எனக்கு ஒரு ஒளிவுமறைவு இருக்கக் கூடாது.

தேசம்: இந்தக் கடந்த கால வாழ்க்கை சம்பவங்கள் பற்றி ஜெயந்தி எப்படி உணர்ந்துகொண்டா? அவ அப்படி உங்களுக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தார் என்பதை சொன்னீர்கள் என்றால் இதை பார்க்கிறவர்களுக்கும் சிலவேளை உதவியாக இருக்கும்.

அசோக்: கடந்த கால வாழ்க்கை தொடர்பாக நான் ஜெயந்தியிடம் மாத்திரம் அல்ல, செல்வியோடையும் நிறைய கதைத்திருக்கிறேன். ஏனென்றால் குடும்ப வாழ்க்கைக்கு முக்கியமான அடிப்படை மனம் திறந்த உரையாடல். அது எங்களில் குற்றம் இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள வேண்டும். நியாயப்படுத்தல் செய்ய இயலாது நாங்கள். லீலாவின் மரணம் தொடர்பாக நான் நியாயப்படுத்த இயலாது. எனக்கு அதில் எந்த விதமான காரணமும் இல்லையென்று. நாங்கள் இன்னுமொரு பக்கத்தில் போய் குற்றத்தை போடக்கூடாது. அந்த இறப்புக்கு காரணம் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் நான் யோசிக்கிறன் நான்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று. நான் என் பேனா நட்புக்கள பற்றி லீலா கேட்காவிட்டாலும் நான் அந்த உறவுகள் பற்றி அவங்களோடு கதைத்திருக்க வேண்டும்.

ஜெயந்தியிடம் என் கடந்த கால வாழ்க்கைப் பயணம் பற்றி வெளிப்படையாக மனம் விட்டு கதைத்திருகிறன். குடும்ப வாழ்க்கைக்கும் சுய விமர்சனம் அவசியம். அப்பதான் எங்கட தவறுகளை திருத்திக் கொள்ளமுடியும். பரஸ்பரம் நம்பிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.

தேசம்: ஒன்று அதை நீங்கள் வெளிப்படையாக சொல்லியும் இருக்கிறீர்கள். அதே நேரம் அவர்களும் அதை உணர்ந்து கொண்டு ஒரு சுமுகமான உறவை வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சி. அதே சமயத்தில் நீங்கள் எந்த குற்ற உணர்வில் வாழ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அவங்களுடைய எண்ணம் துரதிஷ்டவசமாக அப்படி அமைந்துவிட்டது. அதற்காக நீங்கள் குற்றவாளியாகவோ அல்லது குற்ற உணர்வுடனோ வாழ வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். இவ்வளவு விடயத்தையும் மனம் திறந்த கதைத்ததற்கு உங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த பாகத்தில் புலம்பெயர் சூழலில் இருந்த அரசியல் இலக்கிய சூழல் அதுக்கு ஊடாக உங்கள் பயணத்தை பற்றி பார்ப்போம்.

லிற்றில் நூலகத் திறப்பும் நூலகர்களுக்கான பாராட்டும்!!!

யாழ் பொதுசனநூலகத்தின் ஓய்வு பெற்ற பிரதம நூலகர் ச தனபாலசிங்கம் அவர்களினதும் சுன்னாகம் பொதுநூலகப் பிரதம நூலகர் ஜெயலட்சுமி சுதர்சன் அவர்களினதும் நூலக சேவையை கௌரவிக்கும் நிகழ்வு லிற்றில் நூலகத் திறப்பு நிகழ்வு இற்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று மார்ச் 13ம் திகதி கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள் என 200 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

லிற்றில் நூலகம் திருநகரைச் சுற்றியுள்ள பத்துவரையான கிராம மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்டும் நோக்கோடு ஆரம்பிக்கப்படுவதாக லிற்றில் எய்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களோடு பொதுநூலகமாக ஆரம்பிக்கப்படுகின்ற இந்நூலகம் காலக் கிராமத்தில் வர்த்தகம், கணணி மற்றும் தையல் கலைக்கான நூலகமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நீண்டகாலத் திட்டம் எனவும் த ஜெயபாலன் தெரிவித்தார்.

தமிழ் பிரதேசங்களின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக இருப்பது வாசிப்பை எம்மவர்கள் கைவிட்டது எனத் தெரிவித்த லிற்றில் எய்ட் இன் இயக்குநர் – இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி வாசிப்பு பழக்கத்தை தூண்டுவதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்ட முடியும் என்றும் அதனால் சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தில் தாங்கள் கூடுதல் கவனம் எடுக்க உள்ளதாகவும் அதற்காகா மாதாந்த வாசிப்பு வட்டம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். லிற்றில் நூலகத்திற்கான பயிற்சி நூலகராக கே இவாஞ்சலி பொறுப்பேற்றுள்ளார்.

லிற்றில் நூலகத்திற்கான திட்டம் நீண்டகாலமாக இருந்த போதும் அதற்கு செயல்வடிவம் கொடுத்தது அமரர் இராசமணி பாக்கியநாதனின் பிள்ளைகளே. உலகின் வெவ்வேறு பாகங்களில் அவர்கள் வாழ்ந்த போதும் தாயக மக்களின் எதிர்கால வாழ்வில் அக்கறைகொண்டு இந்நூலகத் திட்டத்திற்காக எட்டு இலட்சம் ரூபாய்கள் வரை வழங்கி உள்ளனர். நூலக அறையை வடிவமைப்பதுஇ அதற்கான தளபாடங்களை பெற்றுக்கொள்வதுஇ நூல்களைப் பெற்றுக்கொள்வது என்பனவற்றோடு பத்திரிகை வாசிப்புக்கான குடில் ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது. பத்திரிகை வாசிக்க வருபவர்கள் நூலகத்திச் செயற்பாடுகளை பாதிக்காமல் இருப்பதற்காகவும் இடவசதிக்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லிற்றில் நூலகத்தை அமரர் இராசமணி பாக்கியநாதனின் முத்த புதல்வர் ஸ்ரீகுமார் பாக்கியநாதன் திறந்து வைத்தார். தற்போது மலேசியாவில் வாழ்கின்ற தொழிலதிபரான இவரோடு இவரது சகோதர சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். லண்டனில் இருந்து லிற்றில் எய்ட் இன் தலைவர் கதிரமலை நந்தகுமார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார். லிற்றில் எய்ட் தலைவர் க நந்தகுமார் லிற்றில் எய்ட் இன் செயற்திட்டங்களை பார்வையிடுவதுடன் லிற்றில் எய்ட்இன் மேற்பார்வையில் இயங்கும் முல்லைத்தீவில் உள்ள கற்சிலைமடுவின் குழந்தைகள் அமைப்பின் செயற்திட்டங்களையும் பார்வையிடுவார்.

இந்நூலகத் திறப்பு விழா நிகழ்வு ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சி இதயராசா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அ கேதீஸ்வரன் கலந்துகொண்டார். எழுத்தாளர் கருணாகரன் “ஏன் புத்தகங்கள்? எதற்காக வாசிப்பு?” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் லிற்றில் எய்ட் மாணவர்களின் தயாரிப்பில் ஒரு குறும் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
2009 மார்ச் 19இல் லண்டனில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் அமைப்பு அதற்கு முன்பிருந்தே தனது உதவிப் பணிகளை கடந்த 13 ஆண்டுகளுக்கு மோலாக மேற்கொண்டு வருகின்றது.

லிற்றில் எய்ட் இன் இந்த லிற்றில் நூலகத் திட்டத்தை மிகவும் வரவேற்ற நூலகவியலாளர் என் செல்வராஜா இந்நூலகம் கிளிநொச்சி – வன்னி மண்ணின் ஒரு சிறப்பு நூலகமாக வளரவேண்டும் என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் நூலகப் பயிற்சிகளையும் ஆலோசணைகளையும் தொடர்ச்சியாக வழங்கிவருவதோடு நூல்களைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளுக்கும் உதவி வருகின்றார்.

ஸ்கொட்லாதில் உள்ள ‘புக் அப்ரோட்’ அமைப்போடு இணைந்து பல லட்ச்சக்கணக்கான குறிப்பாக சிறார்களுக்கான ஆங்கில நூல்களை குறிப்பாக தமிழ் பிரதேசங்களுக்கு கொண்டுவர முயற்சி எடுத்தவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. அப்பணியில் அவரோடு லிற்றில் எய்ட் இணைந்து பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது சுகவீனமாக உள்ள அவர் பூரண சுகமடைந்து தனது நூலக சேவையைத் தொடர இயற்கை அன்னையை வேண்டுகின்றோம் என லிற்றில் எய்ட் சார்பில் அதன் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி தெரிவித்தார்.