காணொலிகள்

காணொலிகள்

தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் வீட்டுச் சின்னத்தை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு!

தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் வீட்டுச் சின்னத்தை மோசடி செய்ததாக ரோ புலிகள் என அறியப்பட்ட தியாகராஜா திபாகரன், பாலநந்தினி பாலசுப்பிரமணியம் மற்றும் சொக்நாதன் கேதீஸ்வரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானிய நடைமுறைப்படி ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தேசம்நெற்க்கு தெரியவந்துள்ளது. பிரித்தானிய சட்டப்படி ஒரு அமைப்பினுடைய பெயரையோ சின்னத்தையோ அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமானது. Intelectual Property Act 2014 – அறிவுசார் உடைமைகள் சட்டம் 2014 இன் படி தக்க அனுமதியின்றி தியாகராஜா திபாகரன், பாலநந்தினி பாலசுப்பிரமணியம் மற்றும் சொக்நாதன் கேதீஸ்வரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒழுங்காற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி இந்தியாவின் நலன்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்படத் துணியாத போதும் வெளிப்படையாக தங்கள் கட்சியை இந்திய புலனாய்வுப் பிரிவான ரோவின் முகவர்கள் வழிநடத்துவதை விரும்பவில்லை. அந்த அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தில் தமிழரசுக்கட்சியின் கிளை ஆரம்பிக்கப்பட்டது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த கட்சியின் செயலாளர் பா சத்தியலிங்கம் இலங்கைக்கு வெளியே தாங்கள் கிளைகள் எதனையும் ஆரம்பிப்பதற்கு அனுமதிவழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பின் தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ்வின் – லங்காசிறி மற்றும் ஐபிசி ஊடக அமைப்பின் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான திபாகரன் மற்றும் நிலா அணி தங்கள் ரோ நடவடிக்கைகளை நியாயப்படுத்த, ரோவின் தமிழ்நாட்டுப் பிரிவான க்யூ பிராஞ்சின் கட்டுப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களை தடுத்து வைக்கும் சித்திரவதை முகாம்களை; அவை சித்திரவதை முகாம்கள் அல்ல என்றும் அங்கு இலங்கைத் தமிழர்கள் யாரும் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றும் ஐபிசி குழுமத்தைச் சேர்ந்த தமிழ்வின் – லங்காசிறி ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

தோழர் பாலன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு நீண்டகாலம் கொடுமைப்படுத் தப்பட்டனர். பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்த தோழர் பாலன் என அறியப்பட்ட எஸ் பாலச்சந்திரன் சிறப்பு முகாம்கள் என்ற சித்திரவதை முகாம்கள் பற்றி தேசம் சஞ்சிகையில் தொடராக எழுதியவர். தற்போது இக்கட்டுரைகளின் தொகுப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளிவந்துள்ளது. தோழர் பாலன் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை என்ற போராட்ட அமைப்பை நிறுவி வழிநடத்தியவர்களில் ஒருவர். சிறப்புமுகாம்களில் அனுபவித்த கொடுமைகளின் அடிப்படையிலும் தான் அவருக்கு பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கிடைத்தது.

 

தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவுக்கு செவிசாய்த்தமைக்காக தமிழரசுக் கட்சியின் – தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்தனர். ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் பத்மநாபாவையும் அவருடைய தோழர்களையும் படுகொலை செய்தனர், தங்கள் அமைப்பிற்குள்ளேயே மாத்தையாவைப் படுகொலை செய்தனர். ஆனால் தற்போது இந்த அமைப்பில் ஒருசாரார் தாங்கள் தடைகளை உடைப்பதில் வல்லவர்கள் என்று சொல்லி இந்திய புலனாய்வுப் பிரிவான றோ வோடு சேர்ந்து பிரபாகரன் குடும்பத்தையே உயிர்த்தெழ வைத்துள்ளனர். இன்னொரு பிரிவு தமிழரசுக் கட்சியை புலியரசுக்கட்சியாக்குவோம் என்று பொக்ஸடித்து முற்றுகையிட்டுள்ளது. இன்னுமொரு பிரிவோ இலங்கைப் புலனாய்வுத்துறையினரோடு சேர்ந்து இயங்குகிறது. இவற்றுக்குள் தங்களை இணைத்துக்கொள்ள முடியாத பலர் பலவாக உடைந்து சிதறியுள்ளனர். இவர்கள் யாருடைய உறவும் வேண்டாம். செய்தியும் வேண்டாம் எனப் பலர் ஒதுங்கித் தனித்து வாழ்கின்றனர்.

லண்டன் தமிழரசுக்கட்சியை ‘றோ புலிகள் – திவாகரன் – நிலா’ கொம்பனி பொக்ஸடித்து முற்றுகையிட்டுள்ளது!

ஒருவர் தான் ஒரு முட்டாள் என்று உணர்வதற்குக்கூட ஒரு அடிப்படை அறிவு அவசியம். அந்தக் குறைந்தபட்ச அறிவும் இல்லாதவர்கள் தங்களைத் தாங்களே மிகச் சிறந்த சிந்தனையாளர்களாக, அறிவுஜீவிகளாக நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். இத்தகையவர்கள் அண்மைக்காலமாக புலம்பெயர் அரசியல் சூழலில் பெரும் தொந்தரவாக மாறியுள்ளனர். ‘புலிகளின் இளவரசி துவாரகா வந்துவிட்டார்’ என்றும் அவருக்குப் பின்னால் தாயார் மதிவதனியும் தந்தை பிரபாகரனும் வருகிறார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து ஒரு கூட்டம் அப்துல்லா என்பவர் தலைமையில் புறப்பட்டுள்ளது. அதே அமைப்பிலிருந்து இன்னுமொரு கூட்டம், இந்தியாவின் உளவு நிறுவனமான றோ தமிழீழம் எடுத்துத்தரும் என்று திபாகரன் – நிலா தலைமையில் சன்னதம் ஆடுகின்றது. புலிகளின் இந்தத் தரப்புகளை மக்கள் நம்புவதாகத் தெரியவில்லை. ஆனால் அத்தரப்புகள் தங்களைத் தாங்களே வெகுவாக நம்பி சிற்றின்பம் காண்கின்றனர்.

இந்த முட்டாள்தனங்களை தொந்தரவாக எண்ணிக் கடந்துசெல்ல முடியாதபடி, இவர்கள் தாங்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக வேறு கதையளந்து வருகின்றனர். இப்புலிகளின் இரு தரப்புகளையும் இந்தியாவின் உளவுத்துறையான றோ அமைப்பே பின்னணியில் இருந்து இயக்குகின்றது எனத் தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை ராஜபக்ச சகோதரர்கள் நடத்தினார்கள் என்பதிலும் பார்க்க இந்திய உளவுத்துறையான றோவே இந்த யுத்தத்தை நடத்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையின் புலனாய்வுத்துறையினருக்குப் பயிற்சி அளித்ததே இந்திய புலனாய்வுத்துறையினர் எனத் தெரிவித்த அவர், கருணாவை தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரித்ததிலும் றோவினுடைய பங்களிப்பு இருந்ததாகத் தெரிவித்தார். ஆனால் இத்தகவலை தேசம்நெற் ஆல் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால் பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் தப்புவதற்க்கு நிறைய வாய்ப்புகள் இருந்ததாக றோ அமைப்பைச் சார்ந்த இராணுவத் தளபதி மதன்குமார் ஆணித்தரமாக கருத்து வெளியிட்டு வருகின்றார். துவாரகாவின் வருகைக்கும் அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

மறுமுனையில் திபாகரன் – நிலா கொம்பனி லண்டணிலிருந்து டெல்லிக்கு காவடி எடுத்ததை தேசம்நெற் பலதடவை அம்பலப்படுத்தியதுடன், இவர்கள் தமிழரசுக் கட்சியை புலி அரசுக் கட்சியாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர் என்பதை பெப்ரவரி 25இல் வெளியிட்ட கட்டுரையில் வெளிப்படுத்தியும் இருந்தது. றோ தமிழீழம் எடுத்துத் தரப்போகின்றது என்று நம்பும் இக்குழுவின் செயற்பாடுகள் தமிழ் மக்களை கேவலப்படுத்தும் வகையிலும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சேவகம் செய்யும் பாணியிலும் அமைந்துள்ளது. அடிப்படைவாத பிஜேபி – ஆர்எஸ்எஸ் இன் கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி இன, மத உணர்வுகைளத் தூண்டிவிடும் வகையில் இவர்கள் நடந்துகொள்கின்றனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த போதும் மத அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் ஒரு கிறிஸ்தவர் என்பதால் அவருக்கு எதிரான பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர். இதேபாணியில் பா உ சுமந்திரனையும் கிறிஸ்தவர் என்பதற்காக தாக்குவதையும் பரவலாகக் காண முடிகின்றது.

இந்தியாவுக்கு சீனா எதிரி, அதனால் சீனாவை தமிழர்களின் எதிரி என்று காட்டி இந்தியாவுக்கு காக்கா பிடித்து தமிழீழம் பெற்றுவிடலாம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளுர் மதியுரைஞராக இருந்த மு திருநாவுக்கரசுவின் அதிரடித் திட்டம். வன்னி யுத்த காலத்தில் தமிழகத்தைச் சென்றடைந்த மு திருநாவுக்கரசு றோ வின் அரவணைப்பில் இருந்து வருகின்றார். அவர் வளர்த்தெடுத்த வாரிசுகள் தான் ‘திபாகரன் – நிலா’ கொம்பனி. இவர்கள் றோ தமிழீழம் வாங்கித் தரும் என்று சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செய்யும் இக்குழு, ‘இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை தேசியத் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்தது மிகப்பெரும் அரசியல் தவறு’ என்று அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தற்போது இக்குழுவே தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளையையும் கைப்பற்றியுள்ளது. மார்ச் மாதம் 10ம் திகதி தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளைக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய இருந்த போதே தேசம்நெற் இவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்தி இருந்ததுடன் இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சிறிவாஸ் சின்னத்துரையிடம் இது பற்றிக் கேள்வியும் எழுப்பி இருந்தது. நேற்று மார்ச் 13இல் லண்டன் வெஸ்ற்மினிஸ்ரரில் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு வந்திருந்த சின்னத்துரை சிறிவாசிடம் மார்ச் 10இல் இடம்பெற்ற கூட்டம் தொடர்பாகக் கேட்டபோது: “நான் கூட்டத்தை கூட்டியது தமிழரசுக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கே. தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளைக்கான அலுவலர்களைத் தெரிவு செய்வதற்காக அல்ல. ஆனால் கூட்டத்தை திசை திருப்பி புதிய அலுவர்களுக்கான தெரிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டதால் தான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன்” என்றார் சின்னத்துரை சிறிவாஸ்.

றோ புலிகள் தமிழரசுக் கட்சியைக் கைப்பற்றுவார்கள் என்பதை தேசம்நெற் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தது. மார்ச் மாதம் 10ம் திகதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவே பெப்ரவரி 17 அன்று தமிழரசுக் கட்சி போறம் லிமிடட் (Ilankai Thamil Arasu Kadchi (ITAK) Forum Ltd என்று ஒரு தனியார் நிறுவனமாக திபாகரன் – நிலா குழு பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்களாக கீத் என அறியப்பட்ட சொக்கநாதன் கேதீஸ்வரன், திபாகரன் என்று அறியப்பட்ட தியாகராஜா திபாகரன், நிலா என அறியப்பட்ட பாலநந்தினி பாலசுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர். பாலநந்தினி பாலசுப்பிரமணியம் நிறுவனத்தின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஸ்வரன், ஞானேஸ்வரன் ஆகியோர் திபாகரனின் உறவினர்கள், நண்பர்கள். கமலேஸ்வரன் லண்டன் வந்த சமயத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உறுப்பினர்களை உள்வாங்க மேற்கொண்ட நடவடிக்கையை ‘திபாகரன் – நிலா’ குழு தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது. நோர்த் ஹரோவில் ஜனவரி 28இல் நடைபெற்ற ஒன்றுகூடலில் இதற்கான திட்டமிடல் நடந்துள்ளது. ஆனால் தற்போது இந்த றோ புலிகளின் குளறுபடியை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராகத் திருப்புகின்ற முயற்சி நடைபெறுகின்றது. ஆனால் தேசம்நெற் அறிந்தவரை ‘திபாகரன் – நிலா’ குழு சுமந்திரனுக்கு முற்றாக எதிரானவர்கள். திபாகரன் – நிலா – திருநாவுக்கரசு என்ற இந்த றோ புலிகள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனுடன் நெருங்கிப் பணியாற்றியவர்கள். இவர்களுக்காக எஸ் சிறிதரன் இலங்கை அரசியல் யாப்பு என்ற திருநாவுக்கரசுவின் நூலையும் இலங்கையில் வெளியிட்டு இருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் லண்டன் வந்திருந்த போது திபாகரனும் மயூரனும் எஸ் சிறிதரனை கிழக்கு லண்டனில் உள்ள வோல்தம்ஸ்ரோவில் வைத்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் கிளையை இப்படிக் குளறுபடியாகக் கைப்பற்றும் திபாகரன் – நிலா குழுவின் எண்ணத்திற்கு உடன்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்பதவி மீது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு நிதியாதரவு வழங்கும் ஒரு தொழிலதிபரும் கண் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் தற்சமயம் லண்டனிலேயே கல்வி கற்கின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

என்னதான் கொம்பனிச் சட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழரசுக்கட்சி போறம் லிமிடட் (Ilankai Thamil Arasu Kadchi (ITAK) Forum Ltd டை பதிவு செய்த போதும் இதற்கும் தமிழரசுக் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் ஏற்படப்போவதில்லை. தமிழரசுக் கட்சியும் இந்த அமைப்பைக் கண்டுகொள்ளப் போவதில்லை. இது ‘திபாகரன் – நிலா’ குழுவின் இன்னுமொரு ஆர்வக்கோளாறு குளறுபடி மட்டுமே. புதிய உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் சந்தாவைச் செலுத்தினால் உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனால் அலுவர்களாக தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்ட தலைவர் சொக்கநாதன் கேதீஸ்வரன், உப தலைவர் தியாகராஜா திபாகரன், செயலாளர் பாலநந்தினி பாலசுப்பிரமணியம் ஆகியோர் இந்த உறுப்புரிமையைத் தக்க வைக்க முடியாது. ஏற்கனவே தமிழரசுக் கட்சி மாநாடு கூட்டி தெரிவு செய்த தலைவரே தலைவராக முடியாமல் திண்டாடுகிறார். இதற்குள் ‘திபாகரன் – நிலா’ கொம்பனியின் நப்பாசைக்குக் குறைவில்லை.

 

லண்டன் ஹரோ தமிழ் தம்பதிகளின் ஒரு மில்லியன் பவுண் – 40 கோடி ரூபாய் மோசடி!! தம்பதிகள் தலைமறைவு!!!


வீட்டுக்கடன் மோசடியில் ஒரு மில்லியன் பவுண்கள் வரை ஏமாற்றி அபி – ரகு தம்பதிகள் தலைமறைவாகி உள்ளனர்.

அபி – ரகு தம்பதிகளிடம் சில நூறாயிரம் பவுண்களை இழந்ததாக பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினர் தேசம்நெற்றிடம் தொடர்புகொண்டு அவர்களது முகவரியை அறிந்து சொல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அண்மையில் அபி – ரகு தம்பதிகளினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட இரு முகவரிகளுக்கு கடன் மற்றும் கட்டண வசூலிப்புப் பிரிவினர் மேற்கொண்ட விஜயத்தில் அக்குடும்பத்தினர் அங்கு இருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

ரகு என்று அறியப்படும் ராகுலன் லோகநாதன் கொழும்பைச் சேர்ந்தவர். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவர். 1985 இல் பிறந்த அபி என்று அறியப்பட்ட அபிராமி கணேசலிங்கம் யாழ் நல்லூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

அபி – ரகு தம்பதிகளால் பாதிக்கப்பட்ட சிவராஜா சிவரூபன் தேசம்நெற்றிடம் சம்பவம் பற்றி தெரிவிக்கையில் நோர்வேயில் வாழும் தான் லண்டனில் வீடு வாங்குவது தொடர்பில் தன்னுடைய உறவுப் பெண்ணான அபிராமி கணேசலிங்கத்திடம் 2018இல் தொடர்பு கொண்டதாகவும் அவர் தன்னால் உடனடியாகவே அதனைச் செய்து தரமுடியும் என்று ஊக்கப்படுத்தி அதற்கான முற்பணத்தை உடனடியாக அனுப்பி வைக்கும்படி கோரியிருக்கின்றார். தனக்கு உறவு முறையாகவும் இருந்தவராதலால் 100 000 பணத்தை வங்கியூடாக அனுப்பி வைத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அபி பணத்தை பெற்றுக்கொள்வதில் காட்டிய ஆர்வத்தை வீடு வாங்கியத்தில் காட்டவில்லை என்று தெரிவிக்கும் சிவரூபன் வீடு வாங்குவதை வெவ்வேறு காரணங்களைச் சொல்லி இழுத்தடித்து வந்ததாகத் தெரிவித்தார்.

என்ஐ நம்பர் எடுக்க வேண்டும் லண்டனில் முகவரி வேண்டும் அது வேண்டும் இதுவேண்டும் என்று நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி ஒரு வருடமானதன் பின் அபியில் இருந்த நம்பிக்கை கரைந்துவிட்டதால் தான் பணத்தைத் திருப்பிக் கேட்டதாக தேசம்நெற்றிடம் தெரிவித்தார். அப்போது தான் அபி அப்பணத்தை தான் வேறொரு வங்கியில் வைப்பிட்டதாகவும் அது ஒரு வருடத்திற்குப் பின்னரே எடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். ‘நான் இதனை வைப்பிடச் சொல்லவில்லையே?’ என்று கேள்வி எழுப்பிய சிவரூபன் பிரான்ஸில் உள்ள அபி குடும்பத்தின் இரத்த உறவுகளையும் தொடர்புகொண்டுள்ளார். அவர்களோ சிவரூபனின் தொடர்புகளை புளொக் செய்து விட்டனர். இறுதியில் சிவரூபன் கிழக்கு லண்டனில் உள்ள சதா சொலிசிற்றேஸின் சட்ட உதவியைப் பெற்று தனக்கு இழைக்கப்பட்டது அநீதியானது என்பதை சட்டப்படி நிரூபித்தார். நீதிமன்றத்திற்கு ஒரு தடவை வந்திருந்த அபிராமி கணேசலிங்கம் தெரிவித்த கதைகளை நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை.

2021இல் அபிராமி கணேசலிங்கம் சிவரூபன் சிவராஜாவிடம் பெற்றுக்கொண்ட 100 000 பவுண் பணத்தையும் 2018 முதல் அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இதற்கிடையே தேசம்நெற் மற்றுமொரு வயோதிபத் தம்பதிகளுக்கு அபி – ரகு தம்பதிகள் செய்த மோசடியை 2022 ஜனவரியிலும் மார்ச்சிலும் அம்பலப்படுத்தியது. லண்டன் குரொய்டனில் தங்கள் சொந்த வீட்டில் வாழும் முதிய தம்பதியினர் தங்கள் வீட்டை பறிகொடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து 200,000 பவுண்களை (8 கோடி ரூபாய்) முதலீட்டுக்காகப் பெற்றுக் கொண்ட தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் ரெய்டன் – Raidenn Limitted அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. ரகு லோகன் என அறியப்பட்ட ராகுலன் லோகநாதன் (45) என்பவரினால்; கொம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கே இத்தம்பதியினர் முதலீட்டுக்காக 200,000 பவுண்களை வழங்கி இருந்தனர். தற்போது இந்நிறுவனம் அவர்களுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் கட்டிடம் இருக்கின்றதேயொழிய அங்குள்ள யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை.

ராகுலன் லோகநாதன், அபிராமி கணேசலிங்கம் ஆகிய இருவரும் ரீமோட்கேஜ் எடுத்து முதலீடுகளை மேற்கொண்டு லாபமீட்ட முடியும் என ஆசை வார்த்தைகளைக் கூறி நம்பிக்கையூட்டி இந்த வயோதிபத் தம்பதிகள் உட்பட சிலரை அவ்வாறு செய்ய வைத்துள்ளனர். ஆனால் முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டுவது என்பது பல்வேறு புறச் சூழல்களிலும் தங்கியுள்ளது. ஆனால் இந்த முதலீட்டை மேற்கொண்டவர்களுக்கு இதன் ஆபத்துக்கள் பற்றி சொல்லப்பட்டதா என்பதோ சம்பந்தப்பட்ட இருவருமே நிதி ஆலோசணைகளை வழங்கத் தகுதி உடையவர்களா என்பதும் உறுதிபடத் தெரியவில்லை. ஆனால் இத்தம்பதிகளோ மேட்டுக்குடித்தனமான டாம்பீகமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். ராகுலன் லோகநாதன் பிரித்தானியாவின் மட்டுமல்ல உலகெங்கும் அறியப்பட்ட உதைபந்தாட்ட விளையாட்டு பிரமுகர் டேவிட் பெக்கத்துடன் நின்று எடுத்த புகைப்படங்களை எல்லாம் தன் முகநூலில் பரிமாறியிருந்தார். இத்தம்பதியினரின் சில படங்களும் அவர்களின் டாம்பீகமான வாழ்க்கையை வெளிப்படுத்தி நின்றன. ஆனால் இவர்களை நம்பி முதலீட்டை மேற்கொண்டவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களை நம்பி முதலிட்டவர்களுடனான சகல தொடர்புகளையும் ரகு – அபி தம்பதியினர் துண்டித்துள்ளதைத் தொடர்ந்தே இவ்விடயம் பொதுத் தளத்திற்கு வந்துள்ளது. பிரித்தானியா குறிப்பாக லண்டன் சுதந்திரமான செயற்பாட்டுக்கான களமாக இருந்தாலும் இந்தச் சுதந்திரம் என்பது மோசடிகளுக்கான சுதந்திரமாகவும் இருக்கின்றது. இந்த மோசடிகளுக்கு நடைமுறை விதி முறைகளில் உள்ள ஓட்டைகளும் உதவுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். லண்டன் உலகின் நிதிப்பரிவர்த்தனையின் தலைநகரமாக இருக்கின்ற அதே நேரம் நிதி மோசடியாளர்களின் கூடாரமாகவும் இருக்கின்றது. லண்டனில் மோசடிகள் இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல. தமிழர்கள் மத்தியிலும் இம்மோசடிகள் நிறைந்துள்ளது.

“வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்ற பழமொழி; ஒரு மனிதனின் வாழ்வில் வீட்டைக் கட்டுவது அல்லது வாங்குவது திருமணம் செய்து கொள்வது என்ற இரு விடயங்களுமே மிக முக்கிய அம்சங்களாக கணிக்கப்படுவதை குறித்து நிற்கின்றது. அப்படியான கஸ்டங்களுக்கு மத்தியில் வாங்கிய வீட்டை முதுமையில் பறிகொடுப்பது என்பது மிகக் கொடுமையானது. அவ்வாறான ஒரு நெருக்கடியில் தமது முதுமையில் கணவன் அல்ஸ்மியர் என்ற மறதி நோய்க்கு ஆளாகிய நிலையில் வீட்டையும் இழக்கும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். லண்டன் குரொய்டனில் வாழும் இத்தம்பதியினரை நேரடியாகச் சந்தித்து அவர்கள் சேகரித்து இருந்த கட்டு ஆவனங்களையும் தேசம்நெற் பார்வையிட்டு இருந்தது. குரொய்டன் தம்பதியினரிடம் இருந்து பெற்ற 200,000 முதலீட்டுக்கான வருமானம் செப்ரம்பர் 2021இல் நின்று போனது. இது தொடர்பாக தம்பதிகள் ரெய்டன் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது இந்தா பணத்தை போடுகின்றோம் என்று சொல்லப்பட்டதேயல்லாமல் பணம் போடப்படவில்லை. மாதாந்தம் 1500 பவுண்களும் 400 பவுண்களுமாக 1900 பவுண் பணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேசம்நெற்றை அத்தம்பதியினர் டிசம்பரில் தொடர்பு கொண்ட போது அத்தம்பதியினருக்கு கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேசம்நெற் ராகுலன் லோகநாதன் மற்றும் அங்கு பணியாற்றியதாக சொல்லப்பட்ட அபிராமி கணேசலிங்கம் ஆகியோரது தொலைபேசியூடாக தொடர்புகொள்ள முயற்சித்தோம் ஆனால் அது பலனளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர்களுடைய முகநூலூடாகவும் அவர்களுடைய நண்பர்களுடைய முகநூலூடாகவும் தொடர்புகொள்ள முயற்சித்து அபி கணேசலிங்கம் ரகு லோகநாதனை தொடர்பு கொள்ளுமாறு கேட்டிருந்தோம். அந்நிலையில் அபி கணேசலிங்கம் 2022 ஜனவரியில் தேசம்நெற்றை தொடர்பு கொண்டிருந்தார். அவரிடம் முதலீடு செய்யலாம் என்று சொல்லி ரீமோட்கேஜ் எடுத்து கொடுத்து தற்போது அவர்கள் தங்கள் முதலீட்டுக்கான வருமானம் இல்லாமல் வீட்டை இழக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அவர் உடனடியாகவே தனக்கும் ரெய்டன் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்று விட்டார். அப்படியானால் நீங்கள் எப்படி பாதிக்கப்பட்ட க்ளைன்ற்றோடு தொடர்பில் இருந்தீர்கள் என்ற தேசம்நெற் கேட்டபோது தான் 2013 அளவில் அதில் வேலை செய்ததாகவும் தாங்கள் ரீமோட்கேஜ் போன்றவற்றை செய்து கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார். அப்படியானால் பாதிக்கப்பட்டவர் எப்படி குறித்த முகவரியில் வந்து ரீமோட்கேஜ் பற்றி பேசியுள்ளார் என தேசம்நெற் கேள்வி எழுப்பியது. திரு பில்சாட் என்பவரே மோட்கேஜ் விடயங்களை கையாண்டவர் என்றார். அவரே அந்நிறுவனத்தின் பிரென்ஜைஸி எனத் தெரிவித்ததுடன் அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றார். அப்படியானால் அதன் பிரென்ஜைசர் யார் (தாய் நிறுவனத்தின் உரிமையாளர்) எனக்கேட்ட போது ராகுலன் என்றார். ராகுலன் உங்கள் கணவரா? என்று தேசம்நெற் சார்பில் கேட்கப்பட்ட போது. ‘ஓம்’ என்றார் அபி. அப்படியானல் உங்கள் கணவருடைய நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றி இருக்கின்றீர்கள். பாதிக்கப்பட்டவருடைய மோட்கேஜ் விடையத்தை நீங்கள் கையாண்டு இருக்கிறீர்கள்? என்று தேசம்நெற் தனது கேள்விகளைத தொடர்ந்தது. என்னுடைய கணவருக்கு இருக்கும் வர்த்தக தொடர்புகள் பற்றி தனக்குத் தெரியாது அதனை அவரோடு தான் கதைக்க வேண்டும் என்றவர்இ ஆனால் தான் தனக்கு குழந்தை கிடைப்பதற்கு முன் வரை வேலை செய்ததாகவும்இ குழத்தைகள் பிறக்க 2013இல் வேலையை விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் இல்லை. நீங்கள் சில மாதங்களுக்கு முன் வரை மின் அஞ்சல் தொலைபேசியூடாக தொடர்பில் இருந்துள்ளீர்கள் அதற்கான ஆதாரங்கள் தேசம்நெற் இடம் உள்ளது என்று தெரிவித்ததுடன் அவருடைய கணவரை தொடர்பு கொள்ளுமாறு தேசம்நெற் கேட்டுக்கொண்டது.

இச்செய்தி எழுதப்படும் வரை ராகுலன் லோகநாதன் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அபி கணேசலிங்கம் முதலும் கடைசியுமாக அன்றைய உரையாடலின் பின் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அந்த உரையாடலை அடுத்து ராகுலன் லோகநாதன் அபி கணேசலிங்கம் இருவரது முகநூல்களும் மூடப்பட்டது. அதேசமயம் தேசம்நெற் அபி கணேசலிங்கத்துடன் உரையாடியதன் பின் பாதிக்கப்பட்ட சிலருடன் ரெய்டன் தொடர்பு கொண்டதாக தேசம்நெற்க்கு தெரியப்படுத்தப்பட்டது. அபி கணேசலிங்கம் தேசம்நெற்க்கு கூறியதற்கு மாறாக அவர் பாதிக்கப்பட்ட தம்பதியரோடு யூன் 7 2021 மற்றும் ஒக்ரோபர் 4 2021 இல் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஜனவரி 18 2021 காலை 8:23 மின் அஞ்சல் அனுப்பி உள்ளார். அதனால் அபி கணேசலிங்கம் 2013இற்குப் பின் வேலை செய்யவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது. கம்பனி ஹவுஸ் ஆவணங்களின் படி ரெய்டன் நிறுவனத்தின் பெறுமதி வெறும் ஒற்றைத்தான ஆயிரத்திற்குள்ளேயே இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட இந்த தம்பதியினர் ரெய்டனில் வைப்பீட்டுக்கு வழங்கிய முதலீடு முத்தான ஆயிரமாக இருந்தது. ரெய்டன் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களிடம் வாங்கிய பணத்தை கஃப்லிங் என்ற நிறுவனத்திலேயே முதலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி தங்களையே முதலான தொடர்பாளர்களாகவும் ரெய்டன் பதிவு செய்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்மையான முதலீட்டாளர்களுக்கும் இடையே எவ்வித சட்ட ரீதியான தொடர்பும் இல்லை. அபி கணேசலிங்கம் இல்லாத நேரங்களில் பிரியா, மேகா ஆகிய பெயர்களில் சிலர் மின் அஞ்சலில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பையும் ரெய்டன் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் முதலீட்டுக்கு என்ன ஆனாது என்று தெரியாமல் இருண்ட எதிர்காலத்தோடு தாங்கள் குடியிருக்கும் வீட்டை இழக்கும் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

2022 பெப்ரவரியில் தேசம்நெற் இச்செய்தியை வெளிக்கொண்டுவந்ததற்கு எதிராக அபிராமி கணேசலிங்கம், ராகுலன் லோகநாதன் ஆகியோர் கூட்டாக த ஜெயபாலன் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக கொண்டுவர முற்பட்ட இடைக்காலத் தடையை வில்சன் கவுன்ரி கோட் நிராகரித்துள்ளது. மாவட்ட நீதிபதி கன்வர் முன்நிலையில் அபிராமி கணேசலிங்கம் தன்பக்கத்து வாதத்தை வைத்து தடையுத்தரவைக் கோரி இருந்தார். இந்த விண்ணப்பத்தில் அபிராமி கணேசலிங்கம் முதலாவது வாதியாகவும் ராகுலன் லோகநாதன் இரண்டாம் வாதியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தனது விண்ணப்பத்தை முன்வைத்து அபிராமி கணேசலிங்கம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கையில் தானும் தனது குடும்பமும் சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டதாக ஒன்லைன் வெளியீடு ஒன்றில் குறிப்பிட்டு இருந்ததாகவும் அதனால் தனது குடும்பத்தினர் பயமுறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் பிரதிவாதிகள் தங்களுடைய நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இவ்விணையத்தளத்தில் கருத்துக்களை எழுதியதாகவும் அதனால் அப்பதிவை நீக்குவதற்கான இடைக்காலத்தடையுத்தரவை அவர் கோரியிருந்ததாக அந்த விண்ணப்பத்தை நிராகரித்து வழங்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விண்ணப்பத்தில் இச்செய்தியை எழுதிய தம்பிராஜா ஜெயபாலன் முதலாம் எதிரியாகவும் ரவிச்சந்திரன் சேனாதிராஜா இரண்டாம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரவிச்சந்திரன் சேனாதிராஜாவின் துணைவியார் புஸ்பாவதி சேனாதிராஜா மூன்றாம் எதிரியாகவும் இவர்களுடைய மகள் சிவானி ரவிச்சந்திரன் நான்காம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரவிச்சந்திரன் சேனாதிராஜா தன்னுடைய நண்பரான செல்வராஜா செல்வச்சந்திரனை ரீமோட்கேஜ் செய்து கொடுப்பதற்காக அபிராமி கணேசலிங்கத்திடம் அறிமுகப்படுத்தியதாக தேசம்நெற்றிடம் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்

பின்னாட்களில் இந்த ரீமோட்கேஜ் விடயம் விபரீதமாக ரவிச்சந்திரன் சேனாதிராஜா அபிராமி கணேசலிங்கம் தம்பதிகளின் வீட்டுக்கு நியாயம் கேட்கச் சென்றதாகவும் அப்போது தாங்கள் தன்னை தாக்க வருவதாக அவர் பொலிஸில் முறையிட்டு இருந்ததாகவும் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். இவை எதுவற்றிலுமே தன்னுடைய மனைவிக்கும் மகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தங்கள் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயற்படுவதாக அபிராமி – ராகுலன் தம்பதியினரால் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5ம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரன். ஆறாம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரனின் துணைவியார் ஜெயவதனி செல்வச்சந்திரன். செல்வச்சந்திரன் – ஜெயவதனி தம்பதிகளின் மகள் கௌசிகா செல்வச்சந்திரன் ஏழாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்டு உள்ளார். எட்டாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்ட நடராஜா ரபீன்திரன் தேசம்நெற் இல் வெளியான வயதான தம்பதிகளோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர். ரெய்டன் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் இவர் தொடர்பில் உள்ளதாக தெரியவருகிறது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. கடைசி எதிரியான சிவரூபன் சிவராஜா யாழ் நல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட அபிராமி கணேசலிங்கத்தின் மிக நெருங்கிய உறவினர். தான் வெளிநாடு வருகின்ற போது அபிராமி பிறந்திருக்கவில்லை என அவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தானும் அபிராமியின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் முதலீட்டுக்காக நூறாயிரம் பவுண்களை வழங்கியதாகவும் ஆனால் ஆரம்பத்திலேயே ஏதோ சரியாகப்படவில்லை என்பதை உணர்ந்து பணத்தை மீளப்பெற முயன்றதாகவும் இன்னமும் தனக்கு பணம் வந்து சேரவில்லை எனவும் தேசம்நெற்க்கு தெரிவித்தார். இச்சமயத்திலேயே அபிராமி கணேசலிங்கம் சிவரூபன் சிவராஜாவுக்கு சாதகமாக கவுன்ரி கோட் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார். ஆனால் மேன்முறையீட்டு வழக்கிற்கு அவர் வரவில்லை. அதனைத் தொடர்ந்து 2023 முற்பகுதியில் அம்மேன்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட ஏற்கனவே கவுன்ரி கோட் இனால் வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது. சிவரூபன் சிவராஜாவுக்கு நீதி கிடைத்தும் அவருக்குச் சேரவேண்டிய நிதி வந்து சேரவில்லை. ஆனால் அந்த குரொய்டன் வயதான தம்பதிகளோ நீதிக்கும் நிதிக்கும் வெகு தொலைவில் நிற்கின்றனர். இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்ற போதே லண்டனில் வாழும் சீனப் பின்னணியுடைய ஆசியப் பெண்ணொருவர் தேசம்நெற்றை தொடர்பு கொண்டார். தன்னை ஜெய் என்று அறிமுகப்படுத்திய அவர் அபியின் தொடர்புகள் ஏதும் கிடைக்குமா என்று கேட்டார். தானும் பல்லாயிரக் கணக்கில் அவரிடம் பறிகொடுத்துவிட்டதாகவும் பண்டிகைக் காலம் முடிய தொடர்புகொள்வதாகவும் கூறினார். அபி – ரகு தம்பதிகளின் மோசடிகள் தொடர்பில் தேசம்நெற்றை தொடர்புகொண்டவர்கள் இழந்ததே சில மில்லியன்களைத் தாண்டுகின்றது.

தங்களை பிரபல்யங்களோடு அடையாளம் காட்டி தங்கள் டாம்பீகங்களை சமூகவலைத் தளங்களில் போட்டு மற்றவர்களை ஏமாற்றி தங்கள் வலைக்குள் வீழ்த்தி கொள்ளையடித்து பாதிக்கப்பட்டவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பலரும் இத்தம்பதியினரால் பெரும் கடன்சுமைக்கு உள்ளாகியுள்ளனர். தமிழ் மக்கள் மத்தியில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு திறமையாகக் கருதப்படும் போக்கு உள்ளது. பல செல்வந்தர்கள் தாங்கள் பணம் வைத்திருப்பதால் தங்களை திறமையானவர்கள் என்று எண்ணிக்கொள்பவர்கள் பலர். பணம் படைத்தவர்களில் அபி – ரகு போன்ற மிகச்சிலரே அவர்களுடைய அதீத பேராசையால் அம்பலப்பட்டுள்ளனர். மிகப் பலர் ‘ஓம் சரவணபவ’ உட்பட தங்களுடைய பணப் பலம் அரசியல் பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சட்டத்திலிருந்து தப்பித்து விடுகின்றனர். தவறணை நடத்துவது அங்கு போதைப் பொருளும் விற்பது கோயில் நடத்துவது கோல்மால் செய்வது குழந்தைகளை பாலியல் சுரண்டல் செய்பவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது அடியாள் வைத்து ஆளை மிரட்டுவது என்று பணக்கொழுப்பு செய்கின்ற காடைத்தனங்கள் எல்லை மீறிவருகின்றது. தேசம்நெற் இதனைத் தட்டிக்கேட்டால் தங்கள் பணப்பலத்தைக் கொண்டு சட்டதை வைத்து மிரட்டுவது அடியாட்களை வைத்து மிரட்டுவது சமூக வலைத்தளங்களில் தேசம்நெற் ஊடகவிளலாளர்களைத் தூற்றுவது என்று கடந்த கால்நூற்றாண்டுகளாக பல இடைவிடாத முயற்சிகள் நடைபெறுகின்றது. தமிழ் ஊடகங்களில் கூடுதலான சட்ட மிரட்டல்களை எதிர்கொண்ட ஊடகமாக தேசம்நெற் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குரலாக குரலற்றவர்களின் குரலாக தேசம்நெற் தொடர்ந்தும் இயங்கும்.

பாலஸ்தீன விடுதலைக்கான போரின் புதிய பரிமாணம்: பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தம்

48 மணி நேரங்களைக் கடந்து நடக்கின்ற பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தத்தில் இரு தரப்பிலும் 2000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 5000 பேர் வரை காயப்பட்டுள்ளனர். ஒக்ரோபர் 7 சனிக்கிழமை காலை ஆறரை மணி அளவில் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிவரும் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தென் பகுதியை தரை, கடல், ஆகாய மார்க்கமாக தாக்க ஆரம்பித்தனர். எவரும் எதிர்பாத்திராத வகையில் மிகத்திட்டமிட்ட முறையில் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

அல் அக்சா ப்ளட் – Al Aqsa Flood என்று பெயரிலியே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியது. காஸா மக்களின் புனிதத்தலமான அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலிய இராணுவப் பொலிஸார் நுழைந்து சோதணை நடத்திய அத்துமீறலுக்காகவே இத்தாக்குதல் நடத்தப்படுவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள் நுழைந்து இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதற்காகவே அன்றைய பிரதர் இந்திராகாந்தி சீக்கிய மெய்பாதுகாப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அல் அக்சா மசூதி மட்டுமல்ல தொடர்ச்சியான மிக மோசமான அடக்குமுறை இத்தாக்குதலுக்கு காரணமாய் அமைந்துள்ளது.

1948 மே 14இல் அமெரிக்காவின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற நாட்டின் வரலாற்றில் நடந்த மிகப் பாரிய தாக்குதல் இதுவாகும். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கி மதில்களை எழுப்பி இருந்தது. இம்மதில்கள் உடைக்கப்பட்டு தரையாலும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியும் கடலாலும் ஹமாஸ் தாக்குதலை நடத்தி இருந்தது. இத்தாக்குதல்களில் 25க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினர், பொலிஸார் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இன்னும் பல நூறுபேருக்கு என்ன நடந்தது என்பது உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. இஸ்ரேலின் வரலாற்றில் இவ்வாறான பெரும் தொகை இழப்பு அந்நாட்டுக்கு முன்எப்போதும் ஏற்பட்டதில்லை. உலகின் பாதுகாப்பு மிக நவீனமயமாக்கப்பட்டு, மிகப் பலமான, மிக வலுவான புலனாய்வு கட்டமைப்பைக் கொண்ட நாடாக இருக்கும் இஸ்ரேல் முற்றிலும் எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். அவர்கள் புலனாய்வுக்கும் பாதுகாப்புக்கும் கொட்டிய பில்லியன் டொலர்கள் எவ்வித பயனுமற்றதாக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவையும் ஈரானின் ஆதரவையும் தவிர தொழில்நுட்பமோ பணபலமோ இல்லாமல் மிக இரகசியமாக இவ்வளவு பெரிய தாக்குதலை உலகின் மிகப் பலமான பாதுகாப்பான நாட்டுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல் இஸ்ரேலையும் அதன் ஆதரவு சக்திகளான அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் உலுப்பியுள்ளது என்றால் மிகையல்ல. மனித உரிமைகள் பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இஸ்ரேலின் பாலஸ்தினியர்கள் மீதான இனச்சுத்திகரிப்பை கண்டிப்பதில்லை. ஹமாஸ் றொக்கட் தாக்குதலை நடத்தி ஓரிரு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டால் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடாத்தி பல நூறு பலஸ்தீனியர்களை படுகொலை செய்வர். இப்பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது பற்றி மேற்கு நாடுகள் அலட்டிக்கொள்வதில்லை. இப்பலஸ்தினியர்களுக்கு மனித உரிமைகள் இருப்பதாகவே மேற்கு நாடுகள் கருதுவதில்லை.

தற்போதைய தாக்குதல் தொடர்பில்: இஸ்ரேல் மிக மோசமான பதில் தாக்குதலை நடத்தும் என்றும் தங்கள் பதிலடியில் ஹமாஸின் இடங்களை சுக்குநூறாக்குவோம் என்றும் ஆட்சியில் உள்ள வலதுசாரி இனவாதத் தலைவரான பிரதமர் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் காஸாவில் உள்ள மக்களை வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் காஸா உலகின் சனத்தொகை அடர்த்தி மிகக் கூடிய இடம் மட்டுமல்ல கடந்த 17 ஆண்டுகளாக இஸ்ரேலின் முற்றுகைக்குட்பட்ட திறந்தவெளி சிறைச்சாலையாகவும் சர்வதேசத்தினால் உணரப்படுகிறது. இஸ்ரேலிய இனவாதப் பிரதமர் காஸாவை முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு அவர்களை வெளியேறும்படி கோரியதை எந்த மேற்கு நாடுகளும் கண்டிக்கவில்லை. இனவாதப் பிரதமர் நெத்தன்யாகு காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு தயாராகுனிறார் என்கின்ற அச்சம் அரபுலக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அண்மைய தாக்குதலில் ஹமாஸ் படையினர் தாங்கள் இஸ்ரேலிய பொதுமக்களைத் தாக்கவில்லை என்றும் பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களையே தாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் அல்ல என்றும் ஆயதம் தாங்கிய ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அவர்கள் சர்வதேச வரையறுப்புகளின் படி பொதுமக்களாக கருதப்பட மாட்டார்கள் என்றும் ஹமாஸ் தனது தாக்குதலையும் படுகொலைகளையும் நியாயப்படுத்தி உள்ளது. இத்தனை வருடங்களாக இஸரேலிய படைகள் பாலஸ்தினியர்களை வகைதொகையில்லாமல் படுகொலை செய்து வருகின்றது. அதற்கு இவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்றும் ஹமாஸ் கேள்வி எழுப்புகின்றது.

பாலஸ்தினிய – இஸ்ரேல் யுத்தத்தின் பின்னணி:

யுதர்களுக்கு என்றொரு நாடு இல்லாத நிலையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்த யுதர்களுக்கு பாலஸதீனத்தில் ஒரு நாட்டை உருவாக்க சியோனிச இயக்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலேயே பாலஸ்தீனமும் இருந்தது. காலனித்துவ நாடுகள் அனைத்தும் கூறுபடுத்தப்பட்டு சூறையாடப்பட்டும் தங்கள் கால்களில் நிற்க முடியாமல் பலவீனப்படுத்தப்பட்டும் காலனித்துவ ஆட்சியாளர்களால் ஆக்கப்பட்டமை வரலாறு. இந்த காலனித்துவ சுரண்டலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் இன்றும் மூன்றாம் உலக நாடுகள் யுத்தம், வறுமை போன்றவற்றினால் சீரழிந்து கொண்டிருக்கின்றது. ஆபிரிக்க கவிஞனொருவன் சுட்டிக்காட்டியது: அவர்கள் வரும்போது எங்களிடம் எல்லாம் இருந்தது. அவர்கள் பைபிளைக் கொண்டு வந்து தந்துவிட்டு எங்களிடம் இருந்த எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டனர். இப்போது எங்களிடம் பைபிள் மட்டும் தான் இருக்கின்றது. வேறு எதுவும் இல்லை.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் அவ்வாறு பாதிக்கப்பட்ட பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாலஸ்தினத்தில், அமெரிக்காவின் உதவியுடன் 1948 மே 14 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. பாலஸ்தின மண் பறிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் மத்திய கிழக்கு நாடுகள் மிகுந்த அதிருப்தியடைந்திருந்தன. அன்று முதல் மதிய கிழக்கு மிகப் பதட்டமான யுத்தப் பிரதேசமாகவே இருந்து வருகின்றது. இப்பகுதி பல யுத்தங்களைக் கண்டுள்ளது. ஆனால் இந்த யுத்தங்கள் எதிலுமே இஸ்ரேலியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் 24 மணி நேரத்தில் இவ்வளவு பெரும் இழப்பையோ தாக்குதலையோ சந்தித்து இருக்கவில்லை. இஸ்ரேலின் எல்லைக்கு வெளியே நடந்த யுத்தத்தை ஹமாஸ் தற்போது இஸ்ரேலுக்கு உள்ளேயே கொண்டு சென்றுள்ளது.

பாலஸ்தீனிய மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் அம்மண்ணில் வாழ்ந்த பாலஸ்தினிய மக்களை இஸ்ரேல் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நடத்தி வந்தனர். அப்பகுதியில் வாழ்ந்த பாலஸ்தினியர்கள் வேறுநாடுகளுக்கு கல்வி மற்றும் நோக்கங்களுக்காகச் சென்ற போது அவர்கள் மீண்டும் தங்கள் பிரதேசங்களுக்கு வரும் உரிமை மறுக்கப்பட்டது. இஸ்ரேல் கடந்த 75 ஆண்டுகளாக பலஸ்தினியர்களை இனச்சுத்திகரிப்புச் செய்வதிலேயே குறியாக இருந்தது. இன்றும் தொடர்கின்றது.
இஸ்ரேலினுடைய புலனாய்வுப் படை மொசாட் அதன் படுமோசமான கொலைத் திட்டமிடல்களுக்கு மிகப் பெயர்பெற்றது. அவர்களையே ஹமாஸ் உச்சிக்கொண்டு இத்தாக்குதலை ஏற்படுத்தியதுடன் தொடர்ந்தும் ஆயுத தளபாடங்களை மீள் விநியோகம் செய்து புதிய ஆக்கிரப்பு நகரம் ஒன்றைக் கைப்பற்றி உள்ளனர்.

ஐந்து தசாப்தங்களுக்கு முன் இஸ்ரேலின் யொம் கிப்பூர் பகுதியில் எகிப்தின் அன்வர் சதாத் யுத்தத்தைத் தொடுத்த அதே பாணியில் ஹமாஸ் அதே தினத்தில் யுத்தத்தைத் தொடுத்தனர். முன்னைய யுத்தத்தில் எகிப்து தோல்வியடைந்தது. இந்த யுத்தத்தில் ஹமாஸினால் ஒரு போதும் யுத்தத்தை வெல்ல முடியாது. ஹமாஸ் ஒரு ஆயத அமைப்பு மட்டுமே. ஆனால் ஹமாஸ் பாலஸ்தினிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேல் உடனும் மேற்கு நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டிருந்த போதும் மத்திய கிழக்கு அராபிய மக்கள் பாலஸ்தினியர்கள் அனைவருமே ஹமாஸின் தாக்குதலைக் கொண்டாடுகின்றனர். பாலஸ்தின மக்களை தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கினால் இவ்வாறான தாக்குதல் தவிர்க்க முடியாது என்றும் இந்தப் பிரச்சினையின் காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழும்ப ஆரம்பித்துள்ளது.

மூனிச் ஒலிம்பிக் தாக்குதல்:

இஸ்ரேலின் கறுப்பு சனி ஆன தாக்குதலை ஹமாஸ் மிக நிதானமாக பதிவு செய்து உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டது. தற்போது உலகின் அனைத்து ஊடகங்களின் கவனமும் திசை திருப்பப்பட்டுள்ளது. உக்ரைன் யுத்தத்தைப் பற்றியோ, அப்கானிஸதான் நிலநடுக்கத்தில் இரண்டாயிரம் பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டது பற்றியோ ஊடகங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஹமாஸ் உலகத்தை பாலஸ்தீனியர்களின் ஒடுக்குமறை மீது மிகத் திட்டமிட்டு திருப்பியுள்ளது. இவ்வாறான செயலை பாலஸ்தீன விடுதலை அமைப்பு சார்ந்த குழவொன்று 1972இல் மேற்கொண்டது. 8 கறுப்பு செப்ரம்பர் படையணி ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற மூனிச் நகர விளையாட்டுத் திடலுக்குள் புகந்து இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை படுகொலை செய்து 11 வீரர்களை பணயக்கைதிகளாக கைப்பற்றினர். இறுதியில் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சி தோல்வியடைய பணயக்கைதிகள் கொல்லப்பட்டனர். கறுப்பு செப்ரம்பர் படையினர் ஐவரும் கொல்லப்பட்டனர். மூவர் கைது செய்யப்பட்டனர். அதன் சில வாரங்களில் பாலஸ்தினிய படைகள் ஜேர்மனியின் லுப்தான்ஸா எயர்லைனைக் கடத்தி வைத்து தங்கள் வீரர்களை மீட்டனர்.

இவ்வாறு ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரரைக் கடத்தி சில நூறு தங்கள் வீரர்களை ஹமாஸ் மீட்டிருந்தது. தற்போது பிந்திக் கிடைக்கும் செய்திகளின் படி ஹமாஸ் 50 இராணுவ வீரர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இது இஸ்ரேலிய இராணுவத்துக்கும் மொசாட்டுக்கும் மிகப்பெரும் தலையிடியாக அமைய உள்ளது.

பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும்:

அன்றைய இலங்கை ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஜே ஆர் ஜெயவர்த்தன மிகுந்த இனவாதி என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு இனவாதக் கட்சியாகவே தன்னை கட்டமைத்திருந்தது. ஜே ஆருக்கும் அவரது படைக்கும் ஆலோசனையும் உதவியும் நல்கியது மொசாட். அன்றும் இன்றும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கு நாடுகளின் சார்பையே எடுத்து வருகின்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இவர்களின் நெருங்கிய நட்புகள். நூறு தமிழர்களைக் கொன்றால் அதில் ஒரு ஈழப் போராளியும் கொல்லப்படுவான் என்ற மொசாட்டின் ஆலோசனை எண்பதுக்களில் அன்றைய பத்திரிகைகளில் இடம்பிடித்திருந்தது. இந்தத் தந்திரத்தைத் தான் மொசாட் பாலஸ்தினியர்கள் மீது இன்றும் மேற்கொள்கின்றது. ஜே ஆர் ஜெயவர்த்தனவின் காலத்திலேயே மிக மோசமான இனப்படுகொலைகளும் இனச் சுத்திகரிப்பும் இடம்பெற்றது.

மாறாக இடதுசாரி நிலைப்பாட்டோடு செயற்பட்ட ஈரோஸ் (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை அமைப்பு) அமைப்பின் லண்டனில் வாழ்ந்த ஸ்தாபகர் இரத்தினசபாபதி மற்றும் புளொட் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) செயற்பாட்டாளர் மகா உத்தமன் ஆகியோர் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு தொடர்பைப் பெற்று தங்களுடைய வீரர்களை பயிற்சிகளுக்காக பாலஸ்தீனம் அனுப்பி வைத்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு சிலரும் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஈரோஸ் அமைப்பில் அன்றைய நாட்களில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் இல்லாததால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே கூடுதலாக இப்பயிற்சிகளைப் பெற்றனர். இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் பிஎல்ஓ பயிற்சி எடுத்தனர். அவர்களில் சிலர் இன்னமும் மேற்குநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்கின்றனர். இவர்களுடைய பெயர்களுக்கு முன் பிஎல்ஓ என்ற அடைமொழியும் இருக்கும். பாலஸ்தீனத்தில் முதலாவது இஸ்ரேலிய ராங்கை குண்டு வைத்து தகர்த்தது பயிற்சிக்குச் சென்ற புளொட் வீரர் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கும் (ரெலோ) தவிர்ந்த ஏனைய இடதுசார்புடைய போராளிக்குழக்கள் மத்தியில் பாலஸ்தீன விடுதலைக்கு சார்பான நிலைப்பாடு இருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் சமாந்தரமாகப் பயணித்த காலம் அது. பாலஸ்தின விடுதலை அமைப்பின் அப்போதைய தலைவர் யஸீர் அரபாத் ஈழப்போராளிகள் மத்தியில் மதிக்கப்பட்ட ஒரு தலைவராக இருந்த காலம்.

ஈழப் போராளி அமைப்புகள் மத்தியில் இருந்த பிளவுகள் போன்ற பாலஸ்தீனப் போராளிகள் மத்தியிலும் பல பிரிவுகள் காணப்பட்டது. அவர்களிடையே முரண்பாடுகள் பகை முரண்பாடுகளும் இருந்தது. சில படுகொலைகளும் இடம்பெற்றுள்ளது. ஆனால் தமிழீ விடுதலைப் புலிகள் போன்று ஏனைய அமைப்புகளை முற்று முழுதாக துடைத்து அழிக்கின்ற அதிகார வெறி பாலஸ்தின விடுதலை போராட்டத்தில் இருக்கவில்லை. மேலும் அங்கு விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்ட அளவுக்கு ஈழவிடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படவில்லை. மக்கள் வேறு விடுதலைப் போராளிகள் வேறு என்ற நிலை எப்போதும் இருந்தது. சர்வதேசச் சூழல் அதனைக் கையாள்கின்ற அறிவுநிலை ஈழ விடுதலைப் போராட்டத்தை புலிகள் ஏகபோகமாக்கிய பின் இருக்கவில்லை. 1991ற்கு முன் புலிகள் அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளையும் இல்லாதொழித்து முஸ்லீம்களையும் விரட்டியடித்து இனச்சுத்திகரிப்புச் செய்தனர். அதனால் 2009இல் புலிகளைக் காப்பாற்ற எவரும் இருக்கவில்லை.

தற்போது ஹமாஸ் உடைய தாக்குதலை வரவேற்று இஸ்ரேலையும் அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் முட்டாள்கள் என்று குறிப்பிட்ட ஹிஸ்புல்லா லெபனானின் எல்லையில் இருந்த இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தாங்கள் இந்த யுத்தத்தில் நடுநிலை வகிக்கவில்லை என்றும் ஹமாஸின் தாக்குதலை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளனர். பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஏனை பாலஸ்தீன விடுதலை குழுக்களும் இத்தாக்குதலை கொண்டாடுகின்றனர். இத்தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலின் மிக முக்கிய எதிரியான ஈரான் இருப்பது பரகசியமானது. ஈரான் இத்தாக்குதல்களைக் கொண்டாடுகின்றது.

மொசாட் புலிகள் இலங்கை இராணுவம்:

இஸ்ரேல் என்ன தான் பாலஸ்தினியர்களை அழித்து அவர்கள் மண்ணில் நாட்டை உருவாக்கி அவர்களை அகதிகளாக வாழ நிர்ப்பந்தித்த போதும் அதே அடக்குமுறைக்கு உள்ளான கணிசமான தமிழர்கள் மத்தியில் யுதர்களுக்கும் இஸ்ரேலுக்கும் ஆதரவான நிலை எப்போதும் இருந்து வந்தது. இஸ்ரேலினுடைய அறிவு, வளம், பலம், எதிரியை அழிக்கும் கைங்கரியங்கள் பற்றி அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. உலகில் தங்களை விடுதலைப் போராளிகளாகக் காட்டிக்கொண்ட புலிகள் மொசாட் இடமும் பயிற்சிகள் பெற்றனர். அதில் ஆச்சரியம் என்னவென்றால் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கு ஒரே காலகட்டத்தில் ஒரே இடத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இத்தகவல் ஆதாரபூர்வமாக நூலில் பதிவு செய்யப்பட்டும் உள்ளது.

உலகின் பல பாகங்களிலிருந்தும் நாடற்ற யூதர்கள் கப்பலில் கொண்டு வந்து பாலஸ்தீனத்தில் இறக்கப்பட்ட பாணியில் இதனையொத்த ஒரு முயற்சியை லண்டனில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் மேற்கொண்டனர். அதுவே ‘வணங்கா மண்’ கப்பல் பயணம். இதனை ஆரம்பித்தவர்களில் காலாநிதி நித்தியானந்தனும் ஒருவர். இவர்களின் முட்டாள்தனம் கப்பல் ஏற்பாடு செய்யப்பட்ட தினங்களிலேயே கைவிடப்பட்டு நபர்கள் பயணிப்பதில்லை என்றும் பொருட்களை ஏற்றிச் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இக்கப்பல் பல மாத இழுபறியின் பின் கொழும்புத் துறைமுகத்தையடைந்து கொண்டு சென்ற பொருட்கள் பழுதடைந்த நிலையில் குப்பையாகக் கொட்டப்பட்டது வரலாறு.

பாலஸ்தின – இஸ்ரேல் யுத்தத்தின் உயிரிழப்புகளும் காயப்பட்டவர்களும் கடத்திச் செல்லப்பட்டவர்களும் இச்செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போதே அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இரும்புக் கரம் கொண்டு இராணுவ தாங்கிகளைக் கொண்டு அடக்கி, நவீன தொழில்நுட்பத்தையும், புலனாய்வையும் கொண்டு ஒடுக்கி ஆள முடியாது என்பதை பாலஸ்தினிய விடுதலை போராளிகள் நிரூபித்துள்ளனர். பாலஸ்தினியர்களுடைய பிரச்சினையின் வேரை அறிந்து அவர்களுடைய சுயாட்சியை உறுதிப்படுத்துவதைத் தவிர இஸ்ரேல் சுமூகமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை இஸ்ரேலியர்களும் இஸ்ரேலும் உணர்ந்து கொள்வது தவிர்க்க முடியாது. இத்தாக்குதல்களுக்கு பழிவாங்க இஸ்ரேல் பல ஆயிரம் பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்யலாம். ஆனால் அவை இப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல. இஸ்ரேலின் சமாதானத்துக்கு பாலஸ்தினியர்களின் சுயாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனம் தனிநாடாக வேண்டும்.

பொன்னையா சுப்பிரமணியன்: காணாமல் ஆக்கப்பட்ட மலையகக் குரல்! – காணொலி

மணியன் மாஸ்ரர் என்றழைக்கப்படும் பொன்னையா சுப்பிரமணியன் மலையகத்திலிருந்து வடமாகாணத்துக்குப் புலம்பெயர்ந்து வன்னியில் மலையகத் தமிழர்களின் குரலாக இருந்தவர். தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில் மொழிபெயர்பாளராக இருந்த இவர் வன்னி இறுதி யுத்தத்தின் பின் வன்னியில் இருந்த மலையக மக்களின் குரலாகச் செயற்பட்டவர். பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் உட்பட இன மத பேதம் கடந்து பல தரப்பட்ட அரசியல் கட்சிகளோடும் தொடர்பில் இருந்தவர்.

இந்நேர்காணல் மேற்கொள்ளப்பட்ட சில வாரங்களுக்குள்ளாகவே இவர் காணாமல் ஆக்கப்பட்டார். இவர் காணாமல் ஆக்கப்படுவதற்கு முற்பட்ட காலகட்டங்களில் இவர் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனுடன் மிகுந்த முரண்பாட்டைக் கொண்டிருந்தார். எஸ் சிறிதரன் மலையகத் தமிழர்களை அவமதித்துப் பேசிய ஓடியோ பதிவுகள் வெளிவந்திருந்த காலம். பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனை அம்பலப்படுத்துவதில் முன்நின்றவர். அதனைத் தொடர்ந்தே அவர் காணாமல் ஆக்கப்பட்டார்.

மிகவும் அறியப்பட்ட, உயர்மட்ட அரசியல் தலைமைகளோடு உறவுகளைக் கொண்டிருந்த போதும் மலையகத் தமிழர்களுக்கு தேயிலைத் தோட்டங்களில் மட்டுமல்ல வன்னி மண்ணில் என்ன நடந்தாலும் கேட்க நாதியில்லை என்ற நிலையே இன்னமும் தொடர்கிறது. 200 ஆண்டுகளுக்குப் பின்னும் மலையகத் தமிழர்களின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை.

அவர் காணாமலாக்கப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன் ஓகஸ்ட் 21 2016இல் பதிவு செய்யப்பட்ட இந்நேர்காணல் முதற்தடவையாக காணொலியாக வெளியிடப்படுகின்றது.

பிரேமானந்தா – பிரேமகுமார் – ஜெயந்திரன் கொடியவர்களின் கூடாரமாகும் லண்டன், பாரிஸ் சைவ ஆலயங்கள்!

இலங்கை, இந்தியாவில் பிரேமானந்தா முதல் லண்டனில் பிரேமகுமார் பாரிஸில் குடுமி ஜெயா என அறியப்பட்ட ஜெயந்திரன் வரை மக்களின் மத நம்பிக்கைகளை வைத்து, நம்பிக்கையை வளர்த்து மோசம் செய்கின்ற நிலை அறிவியல் வளர்ந்த மேற்கு நாடுகள் வரை தொடர்கின்றது. 13 பாலியல் வன்புணர்வு உட்பட 50 வரையான சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை இழைத்த இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்தா பற்றிய ஒளிப்பதிவில் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் ‘தமிழா தமிழா’ த பாண்டியண் சொல்கின்ற போது சமூகத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் எவ்வாறு இந்தக் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்று தெரிவித்தார். பாலியல் குற்றவாளியை விடுதலை செய்யுமாறு கேட்டவர் வடக்கு கிழக்கின் முதலமைச்சராக இருந்த முன்னாள் நீதிபதி சி.வி விக்கினேஸ்வரன். இவருக்கும் பிரேமானந்தாவுக்குமான உறவு இலங்கையில் பிரேமானந்தா ஆச்சிரமம் நடத்துகின்ற போது 1983 இனக்கலவரத்துக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. அப்போது சி.வி விக்கினேஸ்வரன் உயர் நீதிமன்ற நீதிபதி.

இளம்பெண்களை வன்புணரும் பாலியல் வெறியனை கும்பிட்டு வந்த நீதிபதி சி.வி விக்கினேஸ்வரன் தன் முன் – சட்டத்துக்கு முன் நிறுத்தப்படும் விடுதலைப் போராட்ட போராளிகளுக்கு அதிகபட்ச தண்டணையை வழங்கி வந்தவர். ஆனால் பிரேமானந்தா போன்ற காமுகர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட போது அவரை விடுதலை செய்ய மன்றாடியவர்.

பிரேமானந்தா முதல் பிரேமகுமார் வரைக்கும் முன்னாள் நீதிபதியும் முதலமைச்சருமாக இருந்த சி.வி விக்கினேஸ்வரன் மட்டுமல்ல லண்டனில் பாரிஸில் இருந்த சைவ ஆலயங்களும் அதன் முக்கியஸ்தர்களும் கூட பாலியல் குற்றவாளிகளுக்கு கூடாரமாகச் செயற்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள ஆலயங்களின் முக்கியஸ்தர்கள், அறங்காவலர்கள் பிரேமகுமார் ஆனந்தராஜா, பாலியல் குற்றவாளி என பிரித்தானிய நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அக்குற்றவாளிக்கு ஆதரவாக நற்சான்றிதழ் வழங்கி உள்ளனர். சிறார்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுக்க வேண்டிய ஆலயங்கள் காமுகர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தின் மீது அபாண்டமான வதந்திகளைப் பரப்பியும் வருகின்றனர்.
பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜாவை காப்பாற்றுவதில் அவருக்கு உறுதுணையாக நின்றது ஹைகேற்றில் உள்ள உயர்வாசற் குன்று முருகன் ஆலயம். ஆலயத்தின் நிர்வாகசபைக்கான தேர்தலில் அதில் போட்டியிட்ட தெய்வேந்திரம்பிள்ளை காங்கேயன், தான் தெரிவு செய்யப்பட்டால் சமூக விழுமியங்களைப் பேணுவேன் என அவர் காங்கேயன் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் செப்ரம்பர் 22இல் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் பாலியல் குற்றவாளிக்கு துணைபோவதாகவே ஆலயத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தது.

லண்டன் ஹைகேற் உயர்வாசற் குன்று முருகன் ஆலயத்தின் அறங்காவல் சபைத் தலைவராக யாழ் காரைநகரைச் சேர்ந்த கதிரவேலு நாகராஜா உள்ளார். தெய்வேந்திரம்பிள்ளை காங்கேயன் செயலாளராகவும் யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த பத்மநாதன் பார்த்தீபன் பொருளாளராகவும் உள்ளனர். உரும்பிராயைச் சேர்ந்த செல்லையா சோதிலிங்கம் அறங்காவல் உறுப்பினராகவும் உள்ளனர். இந்த அறங்காவலர் சபையினால் நடத்தப்படும் ஹைகேற் உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தில் பிரேமகுமார் ஆனந்தராஜா மிகுந்த செல்வாக்கை கொண்டிருந்தார். இவருடைய வழக்கு வூட்கிறீன் நீதி மன்றத்தில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆலயத்தில் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விசேட பூசைகள் நடாத்தப்பட்டது. தண்டனை குறித்த நீதிமன்ற அமர்வின் போதும் பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு ஆதரவாக பார்த்தீபன் நீதிமன்று சென்று தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார். இவர்களுடன் தேசம்நெற் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அவர்கள் யாரும் இணைப்புக்கு வரவில்லை. அவர்களுக்கு குறும் செய்தியும் அனுப்பப்பட்டது. ஆனால் பதிலில்லை. தனாதிகாரி பார்தீபன் முதற் தடவை எடுத்த போது “வேலையாக உள்ளேன் பிறகு எடுக்கிறேன்” என்றார். ஆனால் அவர் பின்னர் எடுக்கவில்லை.

இரு ஆண்டுகளுக்கு முன் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே பிரேமகுமாரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொலிஸார் ஹைகேற் முருகன் ஆலயத்திற்கு அறிவித்திருந்தனர். அத்தோடு இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை பற்றிய தொடர்ச்சியான கூட்டங்கள் சூம் ஊடாக நடந்துள்ளது. இக்கூட்டத்தில் அப்போது ஆலயத்தின் தலைவராக இருந்த சபாபதிப்பிள்ளை ஸ்றிகாந்தா, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர், மெற்ரோ பொலிட்டம் பொலிஸ் உத்தியோகஸ்தர் என மூவர் கலந்துகொண்டு நிலைமையை அவதானித்து வந்தனர். நாகராஜா தலைமையிலான புதிய நிர்வாக சபை பாலியல் குற்றம்சுமத்தப்பட்ட பிரேமகுமாரோடு நெருக்கமாக இருந்தது.

பிரித்தானியாவில் உள்ள சைவ ஆலயங்களில் ஹைகேற் முருகன் ஆலயமே முதலில் உருவானது. 1975இல் சபாபதிப்பிள்ளை இவ்வாலயத்தை உருவாக்கினார். தமிழ் ரைம்ஸ் என் எஸ் கந்தையா, பேர்மிங்ஹாம் பாலாஜி கோயிலை உருவாக்கிய டொக்டர் ராஓ, லண்டனுக்கு வெளியே ஒரு கோவிலை உருவாக்கிய வைரவமூர்த்தி, விநாயகமூர்த்தி, விம்பிள்டன் பிள்ளையார் கோவிலை உருவாக்கிய ரட்ணசிங்கம், ஸ்ரோன்லி அம்மன் ஆலயத்தை உருவாக்கிய குணசிங்கம் ஆகிய ஏழு பேர் இந்த ஆலயத்தின் அறங்காவலர்களாக இருந்தனர். சபாபதிப்பிள்ளையின் மகனே முன்னைய நிர்வாகத் தலைவராக இருந்த டொக்டர் ஸ்றிகாந்தா. இவர் பிரித்தானியாவின் மிகப்பிரசித்தி பெற்ற ‘மூர் ஐ ஹொஸ்பிரல்’லில் தசாப்தங்கள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

பிரித்தானியாவில் உள்ள சைவ ஆலயங்களில் ஹைகேற் முருகன் ஆலயமே மிகக் கூடுதலான சொத்துக்களைக் கொண்டுள்ளது. இவர்களிடம் உள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு 45மில்லியன் பவுண்கள் எனமதிப்பிடப்படுகின்றது. இருந்த போதும் இவ்வாலயம் இதுவரை குறிப்பிடத்தக்க சமூக செயற்பாடுகளை தாயகத்திலோ லண்டனிலோ மேற்கொள்வதில்லை.

பிரேமானந்தா பற்றிய நேர்காணலில் வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழர்கள் கோயில்களைக் கட்டி கோடி கோடியாகச் சம்பாதிப்பதாக்க குறிப்பிட்டிருந்தார் மூத்த பத்திரிகையாளர் த பாண்டியன். அதில் அவர் லண்டனில் உள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

பாண்டியன் குறிப்பிட்டது போல் ஆர் ஜெயதேவன் புலிகளுடன் நெருக்கமாக இருந்த காலம் ஒன்று இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் லண்டனில் இருக்கும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அங்கு வருகின்ற ஆலய வருமானத்தைப் பயன்படுத்தி பெருமளவில் பொதுத் தொண்டுகளைத் தாயகத்தில் மேற்கொண்டு வந்தது. அப்போது ஆலய நிர்வாகத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த எஸ் கருணைலிங்கம் ஆலய வருமானத்தில் செலவு போக மூன்றிலொரு பங்கை தாயக மக்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தார். சில தடைகள் இருந்தாலும் அது இன்றை வரைக்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அன்று இந்த முன்மாதிரியைத் தொடர்ந்து லண்டனில் புலிகளும் இரு கோவில்களை நிறுவினர். வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் மற்றையது என்பீல்ட் நாகபூசணி ஆலயம். இந்த ஆலயம் தொடர்பான சர்ச்சையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆர் ஜெயதேவனை விசாரணைக்கு இலங்கைக்கு வரவழைத்து அவரைத் தடுத்து வைத்து படுகொலை செய்யவும் முயற்சித்தனர். அக்காலகட்டத்தில் தேசம் உட்பட பலரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலைக் கண்டித்து அழுத்தங்களை வழங்கினர். அதன் பின் பிரத்தானிய அரசினதும் அழுத்தங்களால் ஆர் ஜெயதேவன் விடுவிக்கப்பட்டார்.

பிரேமகுமார் ஆனந்தராஜா என்ற பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதல் வழங்கியவர்களின் சமூக அக்கறையற்ற தன்மையை தேசம்நெற் வன்மையாகக் கண்டித்துப் பல பதிவுகளை வெளியிட்டு வந்தது. பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு நற்சான்றிதழ் வழங்கிய கலாநிதி நித்தியானந்தனின் சமூகப்பொறுப்பற்ற செயலை தேசம்நெற் அம்பலப்படுத்தியது. ஏனையவர்களும் அம்பலப்படுத்தப்படுவார்கள் என தேசம்நெற் எச்சரித்தது.

அதற்காக சமூவலைத் தளத்தில் ஆர் ஜெயதேவன் ஊடகவியலாளரான த ஜெயபாலன் (என்) மீது கொதித்து எழுந்து பதிவுகளை வெளியிட்டார். அப்பதிவில் ‘குற்றும் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி’ என்ற சட்டத்தின் தாரக மந்திரத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால் பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜா நீதிமன்றத்தால் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பின்னரே நாற்பது பேர் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதனை நீதிமன்றத்தில் நீதிபதியும் பிரதிவாதியின் சட்டத்தரணியிடம் உறுதிப்படுத்திக் கொண்டார். “பிரேமகுமார் ஆனந்தராஜா ஒரு பாலியல் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டது தெரியப்படுத்தப்பட்டே இந்நற்சான்றிதழ் பெறப்பட்டது” என்பதை நீதிபதி பெப்ரவரி 02 தண்டனைக் காலத்தை தீர்மானிக்கும் வழக்கின் போது உறுதிப்படுத்திக்கொண்டார்.

வன்முறையான கிரிமினல் குற்றங்கள் கொலைகள் உட்பட, நிதி மோசடிகள் போன்ற விடயங்களில் உணர்ச்சி வசப்பட்டு அந்தக் கணப்பொழுதின் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு வன்முறைக் குற்றங்கள் தேவையின் உந்துதலால் நிதிமோசடிகள் நிகழலாம். அவ்வாறான சமயங்களில் நற்சான்றிதழ் வழங்குவது பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை.

ஆனால் மிகத் திட்டமிட்டு சாதுரியமாக இளம்பெண்களைத் துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு இளம்பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு ஆலயங்களை கூடாரமாக்குவது அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது அயோக்கியத்தனமான செயல். இவ்வாறான சமூகத் தலைவர்களை யோக்கியமற்ற அயோக்கியர்கள் என்றால் மிகையல்ல. பாதிக்கப்பட்ட மாணவி கலாநிதி நித்தியானந்தனின் தமிழ் பள்ளியில் படித்த குழந்தை. ஆனால் கலாநிதி நித்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்தவனைக் கண்டிக்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தான் கையெழுத்திட்டதாக சிலருக்கு குறிப்பிட்டிருக்கின்றார். இந்த அயோக்கியத்தனத்துக்கு ஆர் ஜெயதேவன் வக்காலத்து வாங்குகின்றார். ஈழபதீஸ்வரர் ஆலயம், ஹைகேற் முருகன் ஆலயம் போன்றன முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடமாக வேண்டுமேயொழிய பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டுமேயொழிய காமுகர்களுக்கு புகலிடமாகவும் அவர்களைக் காப்பாற்ற கையெழுத்து வேட்டையும் நடத்தக்கூடாது. இவர்களுக்கு பாடம் புகட்ட இன்னும் பல பெரியார்கள் வரவேண்டும்.

மேற்குறிப்பிட்ட இரு ஆலயங்கள் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கும் ஆலயங்கள், பள்ளிகள், தேவாலயங்கள், குருதுவாராக்கள் கொடியவர்களின் கூடாரமாகவும் பணம் சுரண்டுபவர்களாகவும் இருப்பதற்கு முற்றுப்புள்ளி முதலில் வைக்க வேண்டும். ஆனால் இவ்வாலயங்கள் அப்படிச் செய்வதில்லை. பிரான்ஸின் லாகுர்னே இல் உள்ள சிவன் ஆலயத்தின் உரிமையாளரான வெற்றிவேலு ஜெயந்திரன் அதன் வருமானத்தைக் கொண்டு நல்லூரடியில் ‘லக்ஸ் ஹொட்டல்’ என்ற பெயரில் காமவிடுதியை நடத்தி வருகின்றார். அதற்காக ஒரு சில மணித்தியாலங்களுக்கு ஹொட்டலை ‘புக்கிங்’ செய்யும் வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு சமூகத்தின் கலாச்சார விழுமியங்கள் சீரழிக்கப்படுகின்றது. பல இளம் பெண்களின் வாழ்வைச் சீரழித்த ஜெயந்திரன் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களில் வறுமையில் உள்ள குடும்பங்களில் இருந்து இளம் பெண்களை வேலைக்கு எடுப்பதாகவும் பின் அவர்களுக்கு போதையூட்டி தன் பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வதாகவும் இந்த ஹொட்டலுக்கு சாரதியாக இருந்தவர்களில் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். குறிப்பிட்ட நபரைத் தொடர்பு கொண்டு இந்த லக்ஸ் ஹொட்டலில் ஒரு ‘ரூம் புகிங்’ செய்ய வேண்டும் எனக் கேட்டபோது, “அண்ணை இந்த ஹொட்டல் நல்லதில்லை. அது மற்றைய விசயங்களுக்குதான் பாவிக்கிறவை” என்றார் அச்சாரதி. “இப்பதான் இப்படியா?” என்று கேட்டபோது, “அப்ப இருந்தே இப்படித்தான்” என்றார் அவர். “உங்களிடம் யாராவது முறையிட்டார்களா?” என்று கேட்டபோது, “ஆறு வருசத்துக்கு முதல் ஒரு நாள் ஒரு வடிவான நல்ல வெள்ளை கலரான பொம்பிளப் பிள்ளை அழுதுகொண்டு ஓடி வந்தாள். தனக்கு எதனையோ தந்து குடிக்கச் சொன்னதாகவும் தன்னை துஸ்பிரோகம் செய்ய முற்பட்டு தன்னை அடித்ததாகவும் சொன்னாள்” என்றார். “அதைவிட நிறைய கேள்விப்பட்டு இருக்கிறன். இதையெல்லாம் பார்த்துப் போட்டு பாவங்களை சம்பாதிக்க வேண்டாம் என்று போட்டுத்தான் அங்கயிருந்து விலத்தீட்டன்” என்றார். “அவன் கோயில் வைச்சிருக்கிறான் காசிலை குறைவிடான். ஆனால் வாயைத் திறந்தா ஒரே தூசணமும் சாதியை இழுத்தும் தான் கதைப்பான். எனக்கு ஒரு மாதிரியாத் தான் இருக்கும்” என்றார் அந்தச் சாரதி. அவர் இப்போது யாழில் இல்லாவிட்டாலும் அவருடைய பாதுகாப்பிற்காக அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

குடுமி ஜெயா என்று அறியப்பட்ட கைதேர்ந்த ஒரு அயோக்கியனை கடவுளுக்கு இணையாக வைத்து லாகுர்னே சிவன் கோவிலில் காசுக்காகப் பாடி கூத்தடிக்கின்ற ஒரு காவிக்கூத்தாடி தான் இந்திரநாதன் நாகலிங்கம். பாரிஸில் குடும்பமாக வாழ்கின்ற இவருக்கும் இளவயதில் மகளும் இருக்கின்றார். ஆனால் இவர் குடுமி ஜெயாவின் நெருங்கிய நண்பரும் கூட. புலம்பெயர் தேசத்தில் இருந்து அயோக்கியர்களுக்கும் காமுகர்களுக்கும் கதைவசனம் எழுதும் இந்திரன் என்று அறியப்பட்ட இவர் பொதுமேடைகளில் சமூகம் பற்றி சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசுகின்றார். பாடுகின்றார். ஆனால் நடைமுறையில் அவரது பேச்சுக்கும் பாட்டுக்கும் சம்பந்தமில்லாமல் சமூகத்தை சீரழிப்பவர்களை இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்பவர்களை கடவுளோடு இணைத்து சமூகத்தை சீரழிக்கின்றார்.

பிரித்தானியாவில் உள்ள நியுகாஸ்டில் உதைபந்தாட்டக் கழகத்தை சவுதியரேபியா கொள்வனவு செய்ததை அடுத்து பெரும் சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. காரணம் சவுதியரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மன் ஊடகவியலாளர் ஜமால் கொஷொக்கியை படுகொலை செய்தவர் என்பதால் அது உதைபந்தாட்டக் கழகத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் என்பதன் அடிப்படையிலேயே இந்த சர்ச்சை எழுத்துள்ளது. ஒரு உதைபந்தட்டக் கழகம் கூட தன்னுடைய விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கின்ற போது ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கியுள்ள கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி வருகின்றது.

பிரித்தானியாவில் தமிழர்களின் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் ஒப்பிரேசன் என்வர் என்ற ஸ்கொட்லன்ட் யாட்டின் பொலிஸ் நடவடிக்கையோடு ஊடகவியலாளராக நானும் அன்றைய கவுன்சிலர் போல் சத்தியநேசனும் ஈடுபட்டிருந்தோம். வேறும் பலரும் ஈடுபட்டு இருந்தனர். அதனை தலைமை தாங்கி நடத்தியது பின்நாட்களில் துணை ஆணையாளராக இருந்த சேர் ஸ்ரிபன் ஹவுஸ். அவர் ஜனவரி 2022இல் உள்துறை அமைச்சு லோசகருக்கு கூறிய ஒரு சொல் பெரும் அதிர்வலையை மார்ச் 2, 2023இல் ஏற்படுத்தி உள்ளது. ‘பாலியல் வன்புணர்வு’ rape என்பதை அவர் ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று குறிப்பிட்டுவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று தான் ஒருபோதும் குறிப்பிடவில்லை என சேர் ஸ்ரிபன் ஹவுஸ் கடுமையாக தன்னுடைய மறுப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் வன்புணர்வு என்ற மிகக்கொடுமையான குற்றச்செயலை ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று மிதமாகக் குறிப்பிட்டு அக்குற்றத்தின் கொடுமையை சேர் ஸ்ரீபன் ஹவுஸ் குறைத்துவிட்டார் என்பதே குற்றச்சாட்டு. பாலியல் குற்றங்களுக்கு எதிராக மிக உறுதியாக போராடுகின்ற நாடுகளில் ஆலயங்களை வைத்திருக்கும் எம் ஆணாதிக்க ஆசாமிகள் இக்குற்றங்களை இழைக்கும் கொடியவர்களை பாதுகாப்பதோடு பாதிக்கப்பட்ட இளம்பெண்களையும் அப்பிள்ளைகளின் தாய்மார்களையும் எள்ளிநகையாடுகின்றனர். இவற்றை அம்பலப்படுத்தினால் அதனை gutter reporting, gutter journalism என்று கொக்கரிக்கின்றனர்.

பெண்களை கீழானவர்களாக நோக்குகின்ற பெண்கள் துன்புறுத்தப்பட்டால் அதற்கு அவர்களது நடத்தையே காரணம் என்று எண்ணுகின்ற பெண்கள் சொல்வதை நம்ப மறுக்கின்ற ஆணாதிக்கச் சிந்தனை தான் இந்நிலைக்குக் காரணம். இந்த ஆணாதிக்கச் சிந்தனை இருக்கின்ற வரை பிரேமானந்தா, பிரேமகுமார், குடுமி ஜெயா போன்றவர்கள் எப்போதும் போற்றப்படுவார்கள். எங்களுடைய ஆலயங்கள் முற்று முழுதாகவே ஆண்களுடைய – ஆணாதிக்க வாதிகளுடைய கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இயற்கை நிகழ்வான தீட்டை காரணம் காட்டி பெண்களை ஒதுக்கும் இந்த ஆணாதிக்க அயோக்கியர்களை ஆலயங்களில் இருந்து விரட்டாதவரை ஆலயங்கள் கொடியவர்களின் கூடாரமாகவே அமையும். ஹைகேற் முருகன் ஆலயம், வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம், லாகுர்னே சிவன் ஆலயம் மற்றும் ஆலயங்கள் ஆணாதிக்க கருத்தியல் கொண்ட பெண்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு வக்காலத்து வாங்குகின்ற ஆசாமிகளை அறங்காவலர்களை விரட்டியடிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி இந்த ‘உண்டியல்’களை காயவிட்டால் போதும்.

பெண்களை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்த: பெண்களுக்கு போதைவஸ்தூட்டி பாலியல் இச்சைக்கு உட்படுத்துவதை தடுக்க, பெண்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க இந்த ஆலயங்களின் உண்டியலை காயப்போடுங்கள். உண்டியலைக் காயப்போட்டால் ஆசாமிகள் ஓடிவிடுவார்கள். கடவுள் உண்டியலுக்குள் போடும் பணத்தை வைத்து யாருக்கும் அருள்பாலிப்பதில்லை. அதனால் சாமிக்கு லஞ்சம்கொடுக்கும் பழக்கத்தை கை விடுங்கள்.

பிரபாகரனின் கடைசி மணிநேரங்கள்… என்னதான் நடந்தது? ஏன் மே 17 திகதி வரை காத்திருந்தனர்? Project Beacon, Operation Beacon பற்றி ஏன் பேசுகின்றார்கள் இல்லை?

“பேச்சு வாரத்தைக்கு வாருங்கள். அதனை விட வேறு வழியேதும் இல்லை” எனறார் விசாக தர்மதாஸ. இவருடைய மகன் இராணுவத்தில் இருந்தவர் கிளிநொச்சியில் நடைபெற்ற யுத்தத்தின் போது காணாமல் போயிருந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களினதும் யுத்தத்தின் போது காணாமல் போன படைவீரர்களைப் பெற்றவர்களதும் அமைப்பின் ஸ்தாபகரான விசாகா தர்மதாஸாவை நான் லண்டனில் சந்தித்து நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். இந்த நேர்காணலை தமிழர் தகவல் நடுவத்தின் காலம்சென்ற பொறுப்பாளர் வைரமுத்து வரதகுமார் ஏற்பாடு செய்துதந்திருந்தார். வரதகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு மிக வேண்டப்பட்டவர். பிரபாகரனின் மிக நெருங்கிய வட்டத்தில் ஒருவர். எதிர்பாராத விதமாக இந்நேர்காணல் புலிகளின் ஆயுதங்கள் மௌனிப்பதற்கு ஓராண்டு முன்பாக 2008 மே 18 இல் நடைபெற்றது. பிரித்தானியாவில் சறே பகுதியில் விசாகா தர்மதாஸ தங்கியிருந்த வீட்டில் தான் இந்நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.

2009 பெப்ரவரி 3 இல் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கத்தை லண்டனில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து சந்திதேன். சிவாஜிலிங்கம் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த யுத்தத்தின் போது மேற்குநாடுகளில் தான் இருந்தனர். இச்சந்திப்பை முன்னாள் ரெலோ உறுப்பினர் த சோதிலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார். எம் கெ சிவாஜிலிங்கம் பிரபாகரனின் ஊரவர். உறவினர். பிரபாகரனை தன்னுடைய பதின்ம வயதில் காப்பாற்றியவர். பிரபாகரனுடைய பெற்றோருக்கும் இறுதியில் கூட இருந்து செய்ய வேண்டியனவற்றைச் செய்தவர். விடுதலைப் புலிகள் வேறொரு உலகத்தில் வாழ்ந்து வந்ததாகக் கூறியவர். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்துவிட்டு சரணடைவதே தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உகந்தது என மே 17 2009 இல் புலிகள் சரணடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரேயே பெப்ரவரி 3, 2009 இல் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.

இலங்கையில் அறியப்பட்ட மிக முக்கியமான ஊடகவியலாளரான தராக்கி என்று அறியப்பட்ட தர்மரட்ணம் சிவராம் தமிழ்நெற், தமிழ் கார்டியன் ஆகிய ஊடகங்களில் இணைந்து பணியாற்றியவர். இவர் படுகொலை செய்யப்பட்டது ஏப்ரல் 29, 2005. அப்போது ஜனாதிபதியாக சந்திரிகாகுமாரதுங்க இருந்தார். பிரதம மந்திரியாக மகிந்த ராஜபக்ச இருந்தார். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது நவம்பர் 19, 2005இல். ஆனால் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னரேயே அதாவது தராக்கி சிவராம் கொல்லப்படுவதற்கு முன்னரே அவர் ‘Project Beacon’ பற்றித் தனக்கு நெருக்கமானவர்கள் சிலருடன் பேசியுள்ளார். இந்தப் புரஜக்ற் பீக்கன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டுப்படுத்துவதற்கான திட்டம் இணைத் தலைமை நாடுகளான: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய நாடுகளால் வரையப்பட்டிருந்தது. நோர்வே பேச்சுவாரத்தை பற்றிய விபரங்களை இந்தியாவுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தி வந்ததால், இந்தியாவும் இந்த புரஜக்ற் பீக்கன் பற்றி நன்கு அறிந்தே இருந்தது.

தராக்கி சிவராமின் நெருங்கிய உறவினரொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்தும் ஈடுபடுத்துவதற்கு அழுத்தம் வழங்குவதற்கு இத்திட்டம் வரையப்பட்டது என்றும் அவர்கள் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகினால் அவர்கள் ஓரம்கட்டப்படவார்கள் என்ற எச்சரிக்கையை இத்திட்டம் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருந்தது என்றும் தெரிவித்தார்.

ஆனால் புலிகள் இந்த எச்சரிக்கையை பெரிதாகக் கருதவில்லை. ரணிலின் சதி என்றே கருதினர். ஏற்கனவே கருணாவை தங்களில் இருந்து பிரித்து இயக்கத்தை பலவீனப்படுத்தியதற்காக ரணிலுக்கு பாடம் புகட்ட புலிகள் நினைத்தனர். ‘மொக்கு சிங்களவன்’ என்று எண்ணும் புலிகள் ரணில் ‘நரித்தனமாகப் பேச்சுவாரத்தைக்கு அழைத்து இழுத்தடிப்பான்’ அதனால் மஹிந்தவை கொண்டுவந்தால் அடித்து நொருக்கி தாங்கள் நினைத்ததை சாதிக்கலாம் என்று கருதினர். அதனால் 2005இல் இடம்பெற்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க விரும்பிய வடக்கு கிழக்கு தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்த புலிகள், மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினர். அதற்காக 200 கோடி ரூபாய் பணத்தை ராஜபக்சக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்திய தலைவர் பிரபாகரனின் சாணக்கியம்.

பதவிக்கு வந்த ராஜபக்சக்கள் சில வாரங்களிலேயே டிசம்பர் 2005இல் இணைத் தலைமைநாடுகளின் ‘Project Beacon’ னை திருப்திப்படுத்தும் வகையிலான ‘Operation Beacon’ இராணுவத் திட்டத்தை இணைத்தலைமை நாடுகளிடம் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வைத்து கையளித்தனர். புலிகள் பேச்சு வார்த்தைகளில் ஆர்வம் காட்டாததால் ஒப்பிரேசன் பீக்கன் இராணுவத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவும் இணைத் தலைமை நாடுகளும் பச்சைக்கொடி காட்டினர். கண்துடைப்பிற்காக அல்லது எதிர்காலத்தில் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, கனரக ஆயுதங்கள் பயன்படுத்தக் கூடாது, பொது மக்களின் இழப்புகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசை இணைத் தலைமை நாடுகளும் இந்தியாவும் கேட்டுக்கொண்டன. தங்களுக்கு தேவையான வளங்களையும் இலங்கை அரசு கேட்டிருந்தது. இராணுவ தளபாடங்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் என்பன இலங்கைக்கு தாராளமாக வழங்கப்பட்டது.

புலிகளுக்கு மிகத் தெளிவாக அறிவிக்கப்பட்டு விரிக்கப்பட்ட வலையில் புலிகள் விழ ஆரம்பித்தனர். பேச்சுவார்த்தைகளில் இருந்து ஓரம்கட்டப்பட்ட அன்ரன் பாலசிங்கமும் ஒப்பிரேசன் பீக்கன் பற்றி அறிந்திருந்தார். தனிப்பட்ட சிலருடன் தலைவரின் எதிர்காலம் குறித்து வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.

யூலை 21 2006இல் புலிகள் மாவிலாற்றின் சுளியை மூடி அப்பகுதிச் சிங்கள விவசாயிகளுக்கான நீரோட்டத்தை தடுத்தனர். அரசு மாவிலாற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மட்டுமல்ல புலிகளையே துடைத்து அழிப்பதற்கான ‘ஒப்பிரேசன் பிக்கன்’ திட்டத்தை அடுத்த 5 நாட்களில் 2006 யூலை 26இல் மாவிலாற்றில் ஆரம்பித்தது. இரண்டு நாட்களில் மாவிலாற்றில் இராணுவம் நிலைகொண்டது. ஓகஸ்ட் 11இல் மாவிலாறு நீர் வழமைபோல் திறந்துவிடப்பட்டது.

30 ஏப்ரல் 2007 வரையான ஓராண்டுக் காலத்திற்குள் ஒப்பிரேசன் பீ(B)க்கன் திட்டத்தின்படி திருகோணமலையின் சம்பூர் முதல் பனிச்சங்கேணி வரையான கடற் பிரதேசத்தையும் நிலப்பரப்பையும் பாரிய அளவிலான உயிர்ச் சேதங்கள் இல்லாமல் இலங்கைப் படைகள் கைப்பற்றினர். இந்த ஒப்பிரேசன் பீ(B)க்கன் திட்டத்தின்படி மே 1, 2007 முதல் ஏப்பிரல் 30, 2008 ற்குள் மன்னார் முதல் பூனெரியன் வரையான கடற்பரப்பையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் கைப்பற்றுவது, அடுத்து மே 1, 2008 முதல் ஏப்ரல் 30, 2009 வரையான காலப்பகுதிக்குள் ஆணையிறவு முதல் கொக்குத் தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் கைப்பற்றுவது என்பதும் திட்டம். மேலும் அம்பாறை, சிலாவத்துறை, பருத்தித்துறை ஆகியவற்றினது கட்டுப்பாட்டையும் உறுதி செய்வதன் மூலம் புலிகளுக்கு இராணுவ தளபாடங்கள் வந்தடைவதைத் தடுத்து நிறுத்துவதுடன், அவர்களை முள்ளிவாய்க்காலில் முடக்குவதே அத்திட்டமாக இருந்தது. அதன் பின்னரான மே 1, 2009 முதல் ஏப்ரல் 30, 2011 வரையான இரண்டு ஆண்டு காலப்பகுதி புலிகளைக் களையெடுப்பதற்கான காலப்பகுதியாக வகுக்கப்பட்டது. அப்போது மஹிந்த ராஜபக்ச தனது இரண்டாவது முறையும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுவிடுவார் என்பதே கணிப்பு.

இத்திட்டம் தொடர்பில் புலிகள் புலனாய்வு எல்லாம் செய்து எதனையும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கவில்லை. ஓப்பிரேசன் பிக்கன் திட்டம் மஹித் ராஜபக்ச பதவிக்கு வருவதற்கு முன்னரேயே தமிழ்செல்வனிடம் கையளிக்கப்பட்டிருந்து. ஆனாலும் இத்திட்டத்தை முறியடிப்பதற்கு புலிகளால் எவ்வித எதிர்வினையும் ஆற்ற முடியவில்லை. இராணுவத்தை சமாளிப்பதைத் தவிர அவர்களால் திட்டமிட்ட தாக்குதல்களைத் தொடர முடியவில்லை. புலிகளின் புலானாய்வுப் பிரிவினர் அறிந்திராத பாதைகளினூடாக சந்து பொந்துகளால் எல்லாம் அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்த யுத்தம் இத்தனையாம் திகதி முடிவுக்கு வரவுள்ளது என்று தேசம்நெற் செய்தியை வெளியிடும் அளவுக்கு இந்த ஒப்பிரேசன் பீக்கன் இராணுவத்திட்டம் இருந்தது. சிவராமினால் உருவாக்கப்பட்ட ரமில்எடிட்டேர்ஸ்.கொம் (tamileditors.com) என்ற இணையத்தளத்தில் டிசம்பர் 24, 2007 இது பற்றிய கட்டுரையொன்றும் எழுதப்பட்டு ஏதோ இராணுவம் குறிப்பிட்டபடி முன்னேறவில்லையென அக்கட்டுரையில் சடையப்பட்டு இருந்தது.

வவுனியாவுக்கு திருப்பி அடித்திருப்பம் என்பதெல்லாம் வெறும் கற்பனை. எந்தவொரு சர்வதேச நாடும் பேச்சுவாரத்தை பற்றியே பேசவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் ஆயதங்களை ஒப்படைத்து சரணடையுமாறே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒரே குரலில் ஒலித்தன. அமெரிக்காவும் இந்தியாவும் புலிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் செல்வதை பல வழிகளிலும் தடுத்தன. புலம்பெயர்ந்த சர்வதேச அரசியல் புரியாத ஆர்வக்கோளாறான அமெரிக்காவில் உள்ள பேர்ள் (PEARL) போன்ற புலிகளின் ஆதரவாளர்கள் தான் சில முட்டாள்தனமான பிரம்மைகளை உருவாக்கினர்.

தமிழ்டிப்ளோமற் (TamilDiplomat) இணையத்தில் தராக்கி சிவராம் பற்றிய நினைவுக் கட்டுரையை அண்மையில் எழுதிய பரணி கிருஸ்ணராஜனி, புரஜக்ற் பிக்கன் பற்றி புலிகள் அறிந்திருந்தும் ஏன் அந்த வலைக்குள் விழாமல் இருப்பதற்கான மாற்றுவழி பற்றி அவர்கள் முயற்சிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான பதிலை பரணி கிருஸ்ணராஜினியால் எழுத முடியவில்லை.

புலிகள் மற்றையவர்களின் பலவீனங்களை நன்கு அறிந்திருந்த அளவுக்கு தங்களுடைய பலவீனங்கள் பற்றி எந்த அறிவையும் பெற்றிருக்கவில்லை. தங்களது எல்லைகளுக்கு அப்பால் சர்வதேச அரசியல் பற்றிய அறிவு இருக்கவில்லை. முகநூலுக்கு வரும் லைக்குகளையும் கொமன்ற் களையும் பார்த்து இன்புறுவது போல் புலம்பெயர்ந்து வாழும் விசிலடிச்சான் குஞ்சுகளின் சூரியத்தேவன், தேசியத் தலைவர், அடங்காத் தமிழன் போன்ற விம்பங்கள் ‘பனை மரத்தில வெளவாலா எங்களுக்கே சவாலா’, ‘உள்ளுக்கு விட்டு அடிப்போம்’ போன்ற புலித்தேசிய அல்வா ஆய்வாளர்களின் பிதற்றல்கள் எல்லாமே மே 16, 2009 வரை புலிகளை கனவுப் போதையில் வைத்திருந்தது. வன்னியில் இருந்த புலிகள் குண்டுச் சத்தத்தில் கனவுப் போதையில் இருந்து விழித்துக் கொண்டபோது அது காலம் கடந்ததாகி விட்டது. புலம்பெயர் தேசத்தில் குண்டு விழாததால் இன்னமும் பலர் கனவுப் போதையில் இருந்து எழவில்லை. அவர்கள் ஒரு பரலல் யூனிவேர்ஸில் (parellel universe) தான் இன்னமும் வாழ்கின்றனர். அவர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் த கணேசலிங்கம் போன்ற அரசியல் முட்டாள்கள் பொங்கு தமிழ் நடத்தி தங்களில் தேசியம் பொங்கி வருவதாகக் காட்டிக்கொண்டு முத்தையா யோகேஸ்வரி போன்ற சிறுமிகளை வன்புனர்வதிலும் அதனை வெளியே வந்துவிடாமல் மறைப்பதிலுமே படுபிசியாக இருந்தனர். ‘புரஜக்ற் செக்ஸில்’ (project sex) ‘ஒப்பிரேசன் இன்ரகோர்ஸ்’ (operation intercourse) இல் பிஸியாக இருந்தவருக்கு புரஜக்ற் பீக்கன் பற்றியோ ஒப்பிரேசன் பீக்கன் பற்றியோ எதுவும் தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை.

ஏப்ரல் 30, 2009 இல் தான் இந்த யுத்தம் முடிவடைய வேண்டும் என ராஜபக்சக்கள் கணிப்பிட்டதற்கு முக்கிய காரணம் மே 16இல் இந்திய தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக. இந்த யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் வரை பாரிய உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டே வந்தது. 2006 யூலை முதல் 2009 பெப்ரவரி வரை 3000 பேர்வரை கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க இழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏப்ரல் 5 இல் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தை இராணுவம் முற்றுகையிட்டபோது, அது உடைக்கப்பட்டு பிரபாகரன் காப்பாற்றப்பட்டார். புலிகளின் பெரும் தளபதிகள் இதன்போதே கொல்லப்பட்டனர். இப்போது தான் கனவுலகத்தில் பொங்குதமிழ் நடத்தி யுத்த முழக்கம் முழங்கிய புலம்பெயர் தமிழர்கள் சிலர் விழித்துக்கொண்டனர்.

இந்த யுத்தத்தை என்ன விலைகொடுத்தும் எப்படியாவது மே 16 வரை இழுத்துச் செல்ல வேண்டும் என்று புலிகள் பெருமுயற்சி எடுத்தனர். அதனால் தான் பாரிய அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டது. யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புமே தங்களது வெற்றியை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருந்தனரேயல்லாமல், மக்கள் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருக்கவில்லை. யுத்தத்தின் சகல விதிமுறைகளும் தூக்கியெறியப்பட்டது. இறுதிச் சில வாரங்கள் யுத்தத்தின் எவ்வித விதிகளும் கடைப்பிடிக்கப்படாமலேயே யுத்தம் நடைபெற்றது.

இந்திய தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் வெற்றியும் அமையப் பெற்றால், தாங்கள் காப்பாற்றப்படுவோம் எனப் புலிகள் மலையாக நம்பியிருந்தனர். புலிகள் தங்கள் ஆய்வுக் கதையாடல்களிலும், மக்கள் வகைதொகையாகக் கொல்லப்பட்டால் சர்வதேசம் தலையிடும் என்று ‘கொசோவோ’ உதாரணத்தையும் வைத்துக்கொண்டு ரீல்கள் விட்டு அங்கு மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாகினர். கலாநிதி ரட்டணம் நித்தியானந்தன் போன்ற அரசியல் முட்டாள்கள் வணங்கா மண் அனுப்புகிறோம் என்று தங்களுக்கு தமிழ் தேசியச் சாயம் பூசி கூத்தாடினர். இப்போது பாலியல் துஸ்பிரயோகம் செய்தவருக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளார்.

மே 16, 2009இல் ‘மம்மிக்காக காத்திருக்கும் தம்பி’ என்ற கட்டுரையை தேசம்நெற் வெளியிட்டது. அதே தினம் ‘இந்திய தேர்தல் முடிவு விடுதலைப் புலிகளின் கருப்புச் சனி’ என்று மற்றையொரு கட்டுரை எழுதினேன். ஆம் புலிகள் எதிர்பார்த்தது நிகழவில்லை. தமிழகத்தில் கருணாநிதியும் டெல்லியில் காங்கிரஸ்ம் ஆட்சியமைத்தது. உண்மையில் புலிகள் எதிர்பார்த்தது நடந்திருந்தாலும் அவர்களை யாராலும் காப்பாற்ற முடிந்திராது என்ற உண்மையை உணரும் அரசியல் அறிவை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அவர்களை உசுப்பிவிட்ட புலத்து தமிழர்களுக்கும் அது பற்றிய தெளிவு இருக்கவில்லை.

வன்னியின் மொத்த நிலப்பரப்பு 7,859 சதுர கிலோ மீற்றர். முல்லைத்தீவின் மொத்த நிலப்பரப்பு 2,817 சதுர கிலோ மீற்றர். ஆனால் மார்ச் மாதம் 3ம் திகதி புலிகள் வெறும் 14 சதுர கிலோ மீற்றர் எல்லைக்குள் குறுக்கப்பட்டு விட்டனர். அப்போது அங்கு 2,00,000 பேர் இருந்தனர். மே 16, 2009 இல் புலிகளுடைய நிலப்பரப்பு வெறும் 5 சதுர கிலோ மீற்றர்களாகக் குறுக்கப்பட்டு விட்டது. மறுநாள் மே 17இல் வெளிவந்த சூசையின் தொலைபேசி அழைப்பில் “போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது” எனத் தெரிவித்து இருந்தார்.

இச்சண்டையில் சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகியோர் கொல்லப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகின்றது. தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் இறுதிக் கட்டத்தில் பொட்டம்மான் தன்னுடைய குடும்பத்தோடு. தற்கொலை செய்துகொண்டு தன்னுடைய உடலும் யாருக்கும் கிடைக்காதவாறு பார்த்துக்கொண்டார் என பொட்டம்மானோடு உரையாடியதாகக் கூறும் முன்னாள் போராளி விபரிக்கின்றார்.

எண்பதுக்களின் பிற்பகுதியில் இந்திய இராணுவ காலகட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்களுக்கு அதனைத் தெரிவித்துள்ளார். அவர் போகின்ற இடங்களுக்கு பெற்றோல் கானும் (petrol can)கொண்டுசெல்வது வழமை என இந்திய இராணுவ காலகட்டங்களில் புலிகளின் உறுப்பினராக இருந்த அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஆனால் இத்தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.

இப்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருப்பவர்களின் எண்ணிக்கை 165,000 எனப் புலிகள் அறிவித்தனர். இவர்கள் பெரும்பாலும் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் அவர்களின் குடும்பங்களுமே என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. மணித்தியாலங்கள் கடந்து செல்ல 5 சதுர கிலோ மீற்றர் 500 சதுர மீற்றரானது. இராணுவம் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்ட படையினரை மே 17 அதிகாலை மீட்டெடுத்தது. மே 18 அதிகாலை 250 சதுர மீற்றராகவும் ஆனது.

மே 17 இரவு – மே 18 அதிகாலையில் செல்வராஜா பத்மநாதன் (கெ பி), ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான விஜய் நம்பியாருடன் தொலைபேசியில் கதைத்து பிரபாகரனை எப்படியாவது விடுவிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு முன்னரே மே 15 2009 வெள்ளிக் கிழமை இரவே புலிகள் கெபி க்கு தாங்கள் சரணடையத் தயார் என்ற செய்தியை அனுப்பியதாகவும் தான் வெளிநாட்டு ராஜதந்திரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்தததாகவும் கெபி தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். அன்று வெள்ளிக் கிழமை மாலையாகிவிட்ட நிலையில் ராஜதந்திரிகள் அலுவலகங்களை மூடிக்கொண்டு வீட்டுக்கு போய்விட்டதாகவும் தன்னால் அமெரிக்க ஐரோப்பிய ராஜதந்திரிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கெபி தெரிவித்தார். அதேசமயம் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ புலித்தேவன் ஆகியோர் தொடர்பை மேற்கொள்ள முடிந்த ஊடகவியலாளர்கள் பிரான்ஸிஸ் ஹரிசன், மேரி கொலின் மற்றும் சர்வதேச நாடுகளில் உள்ள ராஜதந்திரிகளுக்கு தாங்கள் சரணடைய உள்ளதைத் தெரியப்படுத்தி உள்ளனர். இந்த அழைப்புகள் மே 18 அதிகாலை 5:45 மணி வரை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது கொழும்பில் பசில் ராஜபக்சவுக்கும் தெரியப்படுத்தப்பட்டு இருந்தது.

தேசம்நெற் க்கு அன்று கிடைத்த தகவல்களின் படி புலிகள் தரப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் அனைத்தையுமே அரசதரப்பு ஏற்றுக்கொண்டதாக புலிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வேண்டுகோள்களை உறுதிப்படுத்துவதற்கு எவ்வித பொறிமுறையும் அங்கிருக்கவில்லை. யுத்த களத்தில் இவ்வாறான சரணடைவுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மாதம் எடுக்கும். ஆனால் புலிகள் கையறு நிலையில் சரணடையும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எஞ்சியிருந்தவர்கள் அனைவருமே வெள்ளைக்கொடியோடு சரணடைந்தனர்.

மே 17 காலையில் 250 சதுர மீற்றர் பரப்பளவிற்குள் இருந்து புலிகள் வெள்ளைக் கொடியோடு சரணடையும் வேளை ஏனைய இடங்களில் மக்களோடு மக்களாக வெளியேறுகின்ற போது பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவ்வாறு இல்லாமல் மக்களோடு மக்களாக வெளியேறிய புலிகளின் முக்கிய தலைவர்களையும் முகாம்களில் இருந்து இராணுவம் அழைத்துச் சென்றது.

இவர்கள் யாவரும் உலகின் அனைத்து யுத்த விதிகளையும் மீறி படுகொலை செய்யப்பட்டனர். அந்த மே 17 அன்று வெள்ளைக் கொடியோடு மக்களோடு அல்லாமல் சரணடைந்தவர்களில் யாரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை. “அன்று தலைவருக்கு பக்கத்தில் நின்றேன். தப்பி வந்தேன்” என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. அவர்கள் அனைவருமே தலையில் முகத்தில் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். இதுவரையான இந்த விபரிப்பை கதையாடலை தமிழுணர்வாளர்களோ புலித் தேசியவாதிகளோ பெரிதாக யாரும் மறுக்கப்போவதில்லை. இலங்கை இராணுவம் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர்கள் யாவரும் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டனர் என்ற விபரிப்பை கதையாடலை மட்டுமே இலங்கை இராணுவம் திரும்பத் திரும்ச்சொல்வார்கள்.

அதன் பின் துடைத்துத் துப்பரவு செய்யும் ஒப்பிரேசன், கொமான்டர் ரஞ்சித் பந்துல கொடிப்பிலி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மேஜர் ஜெனரல் ஜெயத் டயஸ், சவிந்திர டி சில்வா போன்ற இராணுவ அதிகாரிகள் இறுதிநேர ஒப்பரேசனில் தொடர்பில் இருந்தவர்கள். அதில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனியின் இலங்கைத் தூதுவராயத்தில் பணியில் நியமிக்கப்பட்டு பின்னர் எழுந்த மனித உரிமைக் குற்றச்சாட்டுகளால் அங்கிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது.

சரணடைந்தவர்களில் மகளீர் அணித் தலைவி தமிழினி பிடிபட்டு இருக்கும் போது ஆனந்தி சில்வா அவரைக் கண்டு ‘தமிழினி அக்கா’ என்று அழைத்துள்ளார். சீலையோடு தலையை குனிந்தபடி இருந்த தமிழினி குரலைக் கேட்டு தலையை நிமித்தினார். மேஜர் ஆனந்தி சில்வா தமிழை ஒரு தமிழனைப்போல் கதைக்கவும் எழுதவும் தெரிந்தவர். இவர் 2002 புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் ஒரு ஊடகவியலாளராகக் கலந்துகொண்டார். அதன்போது புலிகளுடன் நல்லுறவைப் பேணிய ஆனந்தி சில்வா புலிகளைப் பற்றி செய்தித் தொடர் எழுதப்போகிறேன் என்று அவர்களுடன் உடன்பட்டு வன்னியில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அதனால் தமிழினியோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அன்று தமிழினி அவருடைய கண்ணில் பட்டதால் உயிர் தப்பி இருந்தார்.

சரணடைந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற விபரிப்பை ஏற்கும் தமிழுணர்வாளர்கள், புலித்தேசியவாதிகள் அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பிரபாகரனும் ஒருவர் என்பதை மிகக்கடுமையாக எதிர்த்து, இலங்கை இராணுவத்தின் கதையாடலை இந்த இடத்தில் ஏற்றுக்கொள்கின்றனர். மே 16 இல் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் பிரபாகரன் மட்டும் தன் மனைவி மகள் கடைசி மகனைப் பிரிந்து ஒழிந்திருந்து சண்டையில் கொல்லப்பட்டார் என்கின்றனர். இன்னுமொரு சிலர் பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுக்கொன்றார் என்கின்றனர்.

இன்னுமொருவர் சொர்ணத்தைச் சுடச்சொல்லி பிரபாகரன் கட்டளையிட சொர்ணம் அவரைச் சுட்டார் என்கின்றனர். ஆனால் அதற்கு முதல் நாளே சொர்ணம் சண்டையில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த உரையாடல்களைச் சொல்பவர்கள் யாரும் தாங்கள் பிரபாகரனுடன் இறுதி நேரத்தில் நின்றதாகவோ தொடர்பில் இருந்ததாகவோ தெரிவிக்கவில்லை. இக்கதைகள் அனைத்தும் தாங்கள் பிரபாகரன் மீது கட்டிய விம்பத்தை தொடர்ந்தும் காப்பாற்றும் ஒரு முயற்சியே.

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் புலம்பெயர்ந்த தமிழர்களுடனான உரையாடல்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். அதனை பல இராணுவத் தளபதிகளும் கூறியுள்ளனர். ஆனால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை வெளியிடவில்லை.

அக்காலங்களில் பல்வேறு தவறான செய்திகள் ஊகங்களாக வெவ்வேறு ஊடகங்களில் வந்தபோதும் தேசம்நெற் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியது. இலங்கையில் அன்று எமது ஊடகவியலாளராக இருந்த காலம்சென்ற பி எம் புன்னியாமீன், யுத்தகளத்தில் நின்ற இராணவத் தளபதியூடாக அதனை உறுதிப்படுத்தி இருந்தார். மே 20 அன்று தேசம்நெற் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட செய்தியை ஈழத்தமிழ் ஊடகங்களில் முதன் முதலாக வெளியிட்டது. மறுநாள் 21இல் “இந்தியாவின் மிகப்பெரும் துரோகம்! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள், அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டனர்!!” என்ற செய்திக்கட்டுரை தேசம்நெற்றில் வெளியானது. பரதெனிய பல்கலைக்கழகத்தில் என்னுடைய நண்பரோடு ஒன்றாகப் பயின்ற இன்னுமொரு இராணுவத் தளபதியும் பிரபாகரனின் குடும்பத்தினர் சரணடைந்ததை உறுதிப்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் வெளிப்படையாக வந்து இதுதான் நடந்தது என்று சொல்வதற்கு அண்மைய எதிர்காலத்தில் எவ்வித வாய்ப்பும் இல்லை.

பிரபாகரன் பற்றிய எந்தக் கதையாடலை யார் கேட்க விரும்புகின்றனரோ அதற்கமைய இந்தக் கதையாடல்கள் அமையும். உண்மைகள் உறங்குவதில்லை.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி – சுபாஸ் சந்திரபோஸ் விமானவிபத்தில் கொல்லப்பட்டதாகவும் அவருடைய அஸ்தி ஜப்பானில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. அந்த இடத்துக்கு இந்திய அரசு வாடகையும் செலுத்துகின்றது. ஆனால் சுபாஸ் சந்திரபோஸ் ரஷ்யாவில் தலைமறைவாக வாழ்வதை பிரதமர் நேரு அப்போதைய பிரித்தானிய பிரதமர் அட்லிக்கு காட்டிக்கொடுத்து ஸ்ராலினூடாக அவரைக் கைது செய்து தூக்கிலிட்டனர் என்பது சில தசாப்தங்களின் பின் வெளியான உண்மை. உண்மைகள் எப்போதும் கசப்பானவை.

மே 16இல் புலிகளின் கையறுநிலை அப்போது மத்திய கிழக்கில் ஜோர்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. புலிகளின் பிரபாகரனின் சரணடைவு பற்றியும் மஹிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். “நான் பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நாட்டுக்கு நான் திரும்பப்போகின்றேன்” என்று குறிப்பிட்டு விட்டு மஹிந்த ராஜபக்ச மே 17 காலை கட்டுநாயக்காவில் தரையிறங்கி மண்ணை முத்தமிட்டார். பிரபாகரன் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றார் என்ற மமதையை மஹிந்த ராஜபக்சவின் உடல்மொழியும் உரையும் உறுதிப்படுத்தியது.

எல்லோருடனும் வெள்ளைக்கொடியோடு பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் சரணடைந்தனர் என்ற உண்மை மிகக் கசப்பானது. அதற்குப் பின் நடந்த சம்பவங்கள் இன்னமும் கசப்பானவை. ஈபிடிபி தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்த அண்மையில் வெளியிட்ட பதிவில் வருமாறு குறிப்பிடுகின்றார்.

தான் இதையெல்லாம் செய்யவில்லை என்று தோழர் டக்ளஸ் தேவானந்தா சொல்ல வருவதன் மூலம் அவர் குறிப்பிடுவது. இதையெல்லாம் பிரபாகரன் செய்தார் என்பதற்கே. அவர் குறிப்பிட்டுச் சொல்கின்ற விடயங்களும் அதற்கும் மேலாக நடந்ததும் வீடியோக் கிளிப்பாகப் பதிவு செய்யப்பட்டு வந்தது. அதன்படி சரணடைந்த பிரபாகரனின் குடும்பத்தினர் பனாங்கொடை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரபாகரன் குடும்பத்தினர் மனித விழுமியங்களுக்குப் புறம்பாக நடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். மதிவதனியும் துவாரகாவும் பாலியல்துன்புறுத்தல்களை அனுபவித்தனர். இவை பதிவு செய்யப்பட்ட காணொலி அங்கிருந்த இராணுவத் தளபதிகளினால் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. அரசியல் உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு காண்பிக்கப்படுவதற்காக இது பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அந்தக் காணொலி தேசம்நெற் க்கு நெருக்கமான ஒருவராலும் பார்க்கப்பட்டது. அதுபற்றிய பதிவும் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. அந்தக் காணொலியின் பிரதியை எடுக்க முயன்றபோது அது உடனடியாகவே மறைக்கப்பட்டது. அந்த காணொலியில் காணம்பிக்கப்பட்ட விடயத்தையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரணமாக ஒரு தமிழனாக இந்த விடயத்தை ஜீரணப்பது மிகக் கடுமையானது. புலிகளுடைய பிரபாகரனுடைய எதிரிகள் கூட இந்நிலைமையை ஜீரணிக்க கஸ்டப்பட்டார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது அவருடைய அரசியல் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வைப்பவர்கள் கூட பிரபாகரன் தனது குடும்பத்தோடு இறுதிவரை அம்மண்ணில் நின்று போராடியதையும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் அப்போராட்டத்துக்கு அர்ப்பணித்ததையும் மிகப் பெருமையாகவே கருதுகின்றனர். இந்த சரணடைவது என்பது யுத்தத்தின் ஒரு அம்சம். தவிர்க்க முடியாதது.

ஒரு சில நாட்கள் சரியான உறக்கமும் உணவும் இல்லாதிருந்தால் நாம் சிந்திக்கவோ சரியான முடிவுகளை எடுக்கவோ முடியாது. அப்படி இருக்கையில் ஒரு சில கிலோ மீற்றருக்குள் ஒரு சில வாரங்கள் தக்க உணவு, உறக்கமின்றி நிம்மதியின்றி இருந்த ஒருவர் மிக நேர்த்தியான முடிவை எடுக்க முடியாது. அன்று இந்த சரணடைவைத் தவிர வேறேதும் வழியில்லை.

இந்நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அறிவின்மையும் வஞ்சப்புகழ்ச்சிகளும் அவர்களுடைய சுயநலன்களும் முக்கிய காரணம். பிரபாகரனும் புலிகளும் தமிழ் சமூகத்தின் உற்பத்திகள் தான். அவர்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. பிரபாகரன் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என இரா சம்பந்தன் அவர்களும் விரும்பி இருந்தார். அவர் புலிகளையோ மக்களையோ காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை இதை எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.

விடுதலைப் புலிகளை குறிப்பாக பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் படுகொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இலங்கைக்கு அவ்வளவாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஜேவிபி இன் ரோஹன விஜய வீர, பிகெகெ ஓச்சுலான் போன்று சிறையில் அடைத்து தமிழ் மக்களது உள்ளுணர்வை நொருக்க ராஜபக்சக்கள் விரும்பி இருக்கலாம். சில சமயம் ஏனைய ஆயுத அமைப்புகள் அரசியலுக்கு வந்தது போல் புனர்வாழ்வு பெற்று பிரபாகரனும் பிற்காலங்களில் அரசியலுக்கு வந்திருக்கலாம். இப்படித்தான் நடக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாது. ஆனால் பிரபாகரன் சரணடைந்தது இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் இந்தியாவே பிரபாகரனது குடும்பத்தில் எந்தவொரு உறுப்பினரும் உயிருடன் இருக்கக் கூடாது என்ற உத்தரவை இலங்கை அரசுக்கு வழங்கியதாகவும் இலங்கை உயர்பீடத்தில் இருந்து சில தகவல்கள் தேசம்நெற்க்கு எட்டியது. பிரபாகரனோ அல்லது அவரது குடும்பத்தினரோ உயிருடன் இருந்தால் தமிழகத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஏப்பிரல் 5இல் விடுதலைப் புலிகள் பின்னடைவைச் சந்தித்த போது, புளொட் அமைப்பினூடாக இந்தியாவுக்கு புலிகள் தாங்கள் சரணடைவதற்கு தயாராக இருப்பதை தெரியப்படுத்தி இருந்தனர். இதனை புளொட் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தினூடாக இந்திய அரசுக்கு தெரியப்படுத்தி இருந்தது. இந்தியத் தூதரகம் பிரபாகரனும் பொட்டம்மானும் தவிர்ந்த ஏனைய போராளிகளை தாங்கள் காப்பாற்றவும் ஏற்றுக்கொள்ளவும் தயார் என்றும் ஆனால் அவர்கள் இருவரையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரியப்படுத்தி இருந்ததாக புளொட் வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தன.

இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இன்றி இலங்கை அரசால் இந்த யுத்தத்தை வென்றிருக்க முடியாது. ஆகையால் இந்தியாவின் விருப்பத்திற்கமைய பிரபாகரனின் குடும்பத்தினர் மீளவும் முள்ளிவாய்கால் கொண்டு செல்லப்பட்டு அங்கு படுகொலை செய்யப்பட்டனர். மே 17 அதிகாலையில் சரணடைந்த பிரபாகரன் குடும்பத்தினர் மே 18இல் மீண்டும்  முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். பிரபாகரனின் துணைவியார் மதிவதனியினதும் துவாரகாவினதும் உடல்கள் இந்தியாவின் என்டிரி NDT சனலில் மட்டும் ஒரு தடவை காண்பிக்கப்பட்டது. அதன்பின் அப்படங்கள் உடனடியாகவே நீக்கப்பட்டது. அதனைத் தவிர வேறு எங்கும் அவர்களின் படங்கள் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டது.

பிரபாகரனின் தலையில் ஏற்பட்ட காயத்தை ஆய்வு செய்த ஐரோப்பிய நிபுணர் பிரபாகரனுக்கு மிகக் கிட்ட (ஒரு மீற்றருக்குள்) இருந்தே துப்பாக்கி வேட்டுத் தீர்க்கப்பட்டு கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுவொரு தற்கொலையல்ல படுகொலையென்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சமூகம் இந்தப் படிப்பினைகளில் இருந்து நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும். அடைந்தால் தமிழீழம் இல்லையேல் மரணம், செய் அல்லது செத்துமடி போன்ற உணர்ச்சிகரமான போதையூட்டும் மொழிகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும். வாழ்க்கை என்பது அது அல்லது இது என்ற பைனறி (binary language) மொழியல்ல. வடக்கு கிழக்கை ராஜ்ஜியமாக ஆண்ட புலிகள் அரசியல் அனாதைகளாகி பூஜ்ஜியமானது மிகச் சோகமான வரலாற்றுப் பதிவு. அரசியலுக்கு மேல் மக்களுக்கு மேல் ஆயுதங்களைக் காதலிப்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகக் காத்திரமான பாடம்.

தேசம்நெற் பிரபாகரனின் மரணச் செய்தியை வெளியிட்டு நான்கு நாட்களின் பின், மே 24 அன்று அனைத்துலக வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்ட செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாதன் (கெபி) “தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீர வணக்கங்கள்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டு பிரபாகரனின் மரணத்தை உலகிற்கு அறிவித்தார். சில தினங்கள் பிரபாகரனின் மரணத்தை மறுத்துவந்த கெபி அதன்பின் அடேல் பாலசிங்கம் மற்றும் சிலரோடு உரையாடி புலிகளின் தலைவரின் மரணத்தை அறிவித்து அவருக்கான கௌரவத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவ்வறிக்கையை வெளியிட்டார். அதன் பின் தேசம்நெற் கெபி உடன் தொலைபேசியூடாக நேர்காணல் ஒன்றை மேற்கொண்டது. இந்நேர்காணலை அவருடைய ஆதரவாளரான லண்டனில் வாழும் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான வாசுதேவன் ஏற்படுத்தித் தந்தார். அந்நேர் காணலின் ஒலிப்பதிவு:

எதிர்காலத்தில் அரசியல் படுகொலையற்ற அரசியல் செய்வோம்! செய்வதற்குமுன் சிந்தித்து செய்வோம்!! எதற்காகவும் செத்துமடிய வேண்டாம்!!

பாலியல் குற்றவாளிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கும் கலாநித்திகளும் கல்லாநித்திகளும்! சிறுவயதில் பாலியல் கொடுமையை எதிர்கொண்டவர்களின் பகிர்வு!!

பதின்மூன்று வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பாலியல் குற்றவாளி பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 42 பேர் நற்சான்றிதழ் வழங்கி குற்றவாளிக்கு கிடைக்க இருந்த அதிகபட்ச தண்டணையை குறைக்க அல்லது குற்றவாளியை தண்டணையில் இருந்து விடுவிக்க தீவிர முயற்சி எடுத்துள்ளமை தேசம்நெற் க்கு தெரியவந்துள்ளது. பாலியல் குற்றவாளி பிரேமகுமாருக்கு நற்சான்றிதழ் வழங்கும் முயற்சியில் முன்னின்றவர்களில் கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் மிக முக்கியமானவர். சமூகத்தில் தன்னை மதிப்புக்குரியவராக கட்டமைத்து வைத்துள்ள கலாநிதி நித்தியானந்தன் டொக்டர் நித்தி என்றும் அறியப்பட்டவர். ரட்ணம் பவுண்டேசன் ஸ்தாபகர் மட்டுமல்ல மேற்கு லண்டன் தமிழ் பள்ளியை நிறுவி நீண்டகாலம் அதன் அதிபராகவும் செயற்பட்டவர். நித்தி, தன் பள்ளியில் கற்ற மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டுகொளாமல் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டு ஒரு பாலியல் குற்றவாளிக்காக நற்சான்றிதழ் வழங்கி உள்ளார். இந்த நற்சான்றிதழ்களைப் பெறுவதற்குப் பெரும் முயற்சிகளையும் முடுக்கி விட்டிருந்தார். இது சமூகச்செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும் கடுமையான ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் குற்றவாளி பிரேமகுமாருக்கு தண்டனை வழங்கப்பட்ட பெப்ரவரி 2ம் திகதி குற்றவாளிக்கு நற்சான்றிதழ் வழங்கிய 42 பெயரின் விபரங்களும் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. அதில் நித்தி மிக முக்கியமானவர். இவரும் இவரது சகபாடிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எதிராக வாதந்திகளையும் பரப்பி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது. “இவையள் காரில் கொண்டு திரிந்து ஏற்றி இறக்க கேட்க்கிறது… இவை ஒழுக்கா இருக்கவில்லை…” என்றெல்லாம் பொருள்படும் வகையில் கதைத்து நித்தி, பாலியல் குற்றவாளிக்கு தன்னுடைய முழு ஆதரவையும் வழங்கி வருகின்றார்.

பாதிக்கப்பட்டவரையும் அவருடைய தாயாரையும் கொச்சைப்படுத்தும் கதையாடல்கள் கலாநித்திகளாலும் கல்லாநித்திகளாலும் பரப்பப்பட்டுள்ளது. “அவவுக்கு பரீட்சையை எதிர்கொள்ளத் தைரியமில்லாமல் இப்படிச் செய்திருக்கிறா?”, “காரில் ஏத்தி இறக்க கேட்கிறவைக்கு ஒரு பாடம் படிப்பிக்கத் தான் நான் கரக்டர் சேட்டிபிக்கற் குடுத்தனான்”, என்றொல்லாம் வாந்தி பரப்பினதோடு நில்லாமல் ஒரு இணையத்தில் “கள்ளக் காதலியின் 13 வயது மகளோடு உறவு” என்ற அளவுக்கு கதைகள் பரப்பப்பட்டு செய்திக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸில் இருந்து இச்செய்தியை வெளியிட்டவர்களின் தொடர்பு இலக்கம்: 0033753627270 இவ்விலக்கத்துக்கு உரியவர்கள் வெளிக்கொணரப்படுவது அவசியம்.

மேலும் ஆச்சுவே உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தில் குற்றவாளியான பிரேமகுமாரை விடுவிக்க வேண்டும் தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விசேட பூசைகள் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் பாலியல் குற்றவாளியான பிரேமகுமாருக்கு நற்சான்றிதழ் வழங்கியபட்டியலிலலும் ஆச்சுவே உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்துடன் தொடர்பானவர்கள் சிலர் உள்ளனர். இப்பட்டியலில் சில மருத்துவர்களும் பெண்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அடங்குகின்றனர். இவர்களின் முழமையான பதிவு விரைவில் தேசம்நெற்றில் வெளியிடப்படும்.

தனக்கு ஜேர்மனியில் இழைக்கப்பட்ட பாலியல் துஸ்பிரயோகத்தை பகிர்ந்து கொள்ளும் தமிழ் பெண் ஜென்னி ஸ்ரேக், “எனக்கு நிகழ்ந்த கொடுமையை அறிந்தும் தமிழ் சமூகம் என்னோடு நிக்கவில்லை. அது என்னை மிகவும் வருத்தியது. நான் கைவிடப்பட்டது போலவும் உணர்ந்தேன்” எனத் தெரிவித்தார். “ஐந்து வயதில் தொடங்கியது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. பின்னிரவில் யாருக்கும் சத்தம் கேட்டுவிடாமல் என்னை காப்பற் (carpet) போடப்பட்ட மாடிப்படிகளால் தூக்கிக் கொண்டு வந்த வரவேற்பறையில் உள்ள சொகுசு இருக்கையில் படுப்பார் தன் மீது என்னை படுக்கவைப்பார். நீண்ட ரஸ்க்கை உமிந்ததைவிட எதுவும் தெரியாத அந்த வயதில் தன்னுடையதை என்னுடைய தொண்டைக்குள் திணித்தது இன்னமும் மங்கலாக ஞபகம் இருக்கின்றது” என்று தனக்கு இளம் வயதில் நடந்ததை விபரித்தார் ஜென்னி.

ஜென்னி மேலும் குறிப்பிடுகையில் “அந்த வயதில் இருந்து குழப்பம், கோபம், அவமானம், மறுதலிப்பு. என்னுடைய குழந்தைப் பருவம் எங்கே?” என்று கேள்வி எழுப்பினார். “அவரை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும் அல்லது நினைக்கும் போதும் என்னுடைய உணர்வுகள் காட்டுத்தனமாகப் அலைமோதும்” என்றவர் “எனக்கு 17 வயதிருக்கும் போது அவர்கள் என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். அடிக்கும் போது பயத்தில் கதைக்கவே வராது. கதைத்தால் அதற்கும் அடிவிழும் என்ற பயம். ஒரு கனப்பொழுதில் ஒரு தைரியம் வந்து அவரை நிறுத்தச் சொன்னேன். அவருக்கு என்னில் கை வைக்க உரிமையில்லை என்றேன். எனது அம்மாவின் முகத்தில் அதிர்ச்சியைப் பார்த்தேன். அம்மாவுக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. நான் சொன்னால் அதிலிருந்து எதிர்பாராத ஆபத்துக்கள் வந்துவிடும் என்று பயம். என்னுடைய சகோதரன் என்னை இன்னுமொரு அறைக்கு அழைத்துச் சென்றான். அவனிடம் சொன்னேன். எனக்கு நடந்ததை விபரிக்க தமிழில் எனக்கு வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. என்னுடைய சகோதரனின் கண்ணில் கண்ணீர். அது அவனுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது” என்றார் ஜென்னி.

“நான் படுக்கையில் கிடந்தேன் துவாயையும் கடந்து இரத்தம் வடிந்தோடியது. அம்மா வந்தார். அவரால் நம்ப முடியவில்லை. சிரித்தார். கண்ணீர் எனது முகத்தை நனைத்தது. இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும். இரவு அம்மா அவரோடு முரண்பட்டார். என்னை தங்கள் படுக்கையறைக்கு அழைத்தார். என்னை வைத்துக்கொண்டு அம்மா கேட்டார். எல்லாவற்றையும் அவர் மறுத்தார். நாட்கள் ஓடியது. ஏன் தனக்கு முதலிலேயே சொல்லவில்லை என்று அம்மா அடிக்கடி கேட்பார். சொல்லி இருந்தால் தன்னால் காப்பாற்றியிருக்க முடியும் என்றார். இதனை நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை. நான் ஒரு குழந்தை என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை.

ஆண்டுகள் ஓடி இரண்டு ஆண்டுகளில் எதுவுமே நடக்காதது போல் அவர்கள் நடந்துகொண்டனர். அவர் இப்போதெல்லாம் முன்னர் எனக்குக் காட்டிய கொடுமைக்காரன் அல்ல. எங்களின் அப்பா, அம்மாவின் கணவர், எங்களின் குடும்பத்தில் ஒருவர். ஓற்றுமையான குடும்பத்தைத்தானே நானும் எதிர்பார்த்தேன். ஆனால் இல்லை. எனது இதயத்தில் கத்தியைச் செருகி திருப்பியது போல் இருக்கும். 19 வயதில் வீட்டைவிட்டு வெளியேறினான்” என்று தனக்கு 13 ஆண்டுகள் இழைக்கப்பட்ட வார்த்தைகளால் விபரிக்க முடியாத பாலியல் கொடுமையை பகிர்ந்துகொண்டார் ஜென்னி ஸ்ரேக். பின் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர் தன் குடும்பப் பெயரை நீக்கிவிட்டு ‘ஸ்ரேக்’ என்ற ஜேர்மன் பெயரை சுவீகரித்துக்கொண்டார். உளவியல் துறையில் பட்டப்படிப்பை முடித்து தற்போது சமூகசேவகியாக பணியாற்றுகின்றார்.

ஜென்னி போன்ற பிரேமகுமாரினால் பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட்டவர்களின் கொடூர அனுபவங்கள் இப்படியிருக்க இந்த நவீன சிதைகளையும் அவர்கள் பெற்ற பெண் குழந்தைகளையும் தீக்குளிக்கும் படி கேட்கின்றது தமிழ் சமூகம். குற்றவாளிக்காக நற்சான்றிதழ் கையெழுத்து வேட்டையை முன்னின்று நடாத்திய இந்தக் கலாநித்திகளும் கல்லாநித்திகளும் தமிழ் சமூகத்தின் சாபக்கேடு என்கிறார் லண்டனில் வாழும் சமூக அரசியல் ஆர்வலரும் ஊடகவியலாளருமான பா நடேசன்.

குற்றவாளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்ட விடயம் தொடர்பாக பிரேமகுமாருக்கு தண்டனை வழங்கப்பட்டு சில மணிநேரங்களில் தேசம்நெற் நித்தியோடு தொடர்புகொள்ள முயற்சித்தது முடியவில்லை. மறுநாள் அவரோடு தொடர்பு கொண்டு “நீங்கள் பாலியல் குற்றவாளியான பிரோமகுமாருக்கு கரக்ரர் சேட்டிபிகற் (நற்சான்றிதழ்) கொடுத்தனீங்களா?” என்று கேட்ட போது, “ஓம் நான் கொடுத்தனான் தான்” என்றார். “ஒரு பாலியல் குற்றவாளிக்கு நீங்கள் எந்த அடிப்படையில் கரக்டர் சேட்டிபிக்கற் கொடுதீங்கள்?” என்று தேசம்நெற் கேள்வி எழுப்பியது. “அதையெல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அது பிரைவேட் மற்றர் (தனிப்பட்ட விடயம்)” என்றார் நித்தி. “14 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் துஸ்பிரயோம் செய்த குற்றவாளிக்கு கரக்டர் சேற்றிபிக்கற் குடுப்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ப்ரைவேட் மர்ரராக இருக்கலாம் ஆனால் இதுவொரு சமூகப் பிரச்சினை. நீங்கள் சமூகத்திற்கு பதிலளிக்க வேண்டும்” என்று தேசம்நெற் வலியுறுத்திக் கேட்ட போதும் “ இது பிரைவேட் மற்றர்” என்று சர்வசாதாரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமிமீது எவ்வித கரிசனையும் இல்லாமல் பதிலளித்தார் நித்தி. “நீங்கள் இந்த கரக்டர் சேர்டிபிக்கற்றை, பிரேமகுமாரது பாலியல் தண்டணை நிரூபிக்கப்பட முதல் கொடுத்தீங்களா அல்லது பிரேமகுமார் பாலியல் குற்றவாளி என்று தெரிந்துகொண்டும் கொடுத்தீங்களா?” என்று தேசம்நெற் வினவியபோது, அதுவும் “ப்ரைவேட் மர்ரர்” என்று கூறி பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி நித்தியின் பேத்தியின் வயதையொத்தவர். நித்திக்கும் ஒரு பெண்பிள்ளை இருக்கின்றார். அத்தோடு பாதிக்கப்பட்ட சிறுமி டொக்டர் நித்தியின் தமிழ் பள்ளியில் தமிழ் படித்தவர். தன்னையொரு சிறந்த நிர்வாகியாக தக்க வைத்த நித்தி “நெஞ்சினில் ஈரமும் இதயமுமற்ற மனிதாபிமானமற்ற ஆணவம்பிடித்தவொருவர்” என்கிறார் ஈரோஸ் அமைப்பின் ஆதரவாளர். நித்தி ஈரோஸ் (Eelam Revolutionary Organization of Students) உடன் தொடர்புடையவர் என்று சொல்வதே எமக்கு அவமானம் என அவர் தெரிவித்தார்.

பரிஸில் வாழும் பெண்ணியச் செயற்பாட்டாளரான ஜெயந்தி தளையசிங்கம் பூரணி, சூரியா ஆகிய பெண்கள் அமைப்புகளில் பணியாற்றியவர், இது தொடர்பாக தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “ஒரு சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் மனநிலையை என்னவென்று சொல்வது?” என்று கேள்வி எழுப்பியதோடு “இந்தக் கீழான மனநிலைகொண்ட மனிதர்களை சமூகம் ஓரம்கட்டி ஒதுக்கி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“மோரலி பாங்கிரப்ற் (morally bankrupt) ஆன நித்தி ஒரு பக்கத்தில் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு துணைபோய்க்கொண்டு மறுபக்கத்தில் தந்தையின் பெயரில் ரட்ணம் பவுண்டேஸனை வைத்துக்கொண்டு சிறார்களுக்கு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்ட் (smart board) கொடுத்து சமூகத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றார்” என்கிறார் எட்ச்வெயரைச் சேர்ந்த நித்தியின் நண்பர்.

“என்னுடைய சாமத்திய வீட்டுக்கு புகைப்படக்காரராக வந்தவர் மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்னை தன்னுடைய ஆதிக்கத்தைப்பயன்படுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்தார். இப்போது இந்த விசாரணைகள் நடந்துகொண்டிருப்பதால் இதற்குமேல் இது பற்றி கதைக்க முடியாது” என்கிறார் குழந்தைப் பருவத்தில் பாதிக்கப்பட்ட தர்சிகா இளம்கீரன். அவர் மேலும் குறிப்பிடுகையில் இளம்வயதில் நடந்த இந்த பாலியல் துஸ்பிரயோகம் என் அடையாளத்தை கேள்விக்கு உட்படுத்திவிட்டது. நிகழ்காலம் உறைந்துவிட்டது. எதையும் எல்லாவற்றையும் எல்லோரையும் கேள்விக்கு உட்படுத்த ஆரம்பித்தேன். வலி, தடுமாற்றம், நிலையின்மை, குழப்பம், வெட்கம், கோபம் இந்த உணர்வுகளே என்னை உலுப்பியது. இதைச் சொல்வதற்கான மொழி எனக்குத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக நான் இதை யாருக்கும் சொல்லவில்லை. பகலில் எதுவுமே நடக்காதது மாதிரி நடந்துகொள்வேன். இரவில் எல்லோரும் தூங்கும்போது அழுவேன்” என்று தன்மீது நடத்தப்பட்ட அநீதியை விபரித்தார் தர்சிகா இளங்கீரன். தற்போது தர்சிகா இளன்கீரன் உளவியல் நலன்பேணுபவராக பணிபுரிகின்றார்.

ஜென்னி ஸ்ரேக் உம் தர்சிகா இளன்கீரனும் தங்களுக்கு நிகழ்ந்ததையிட்டு துவண்டுவிடவில்லை. அவர்கள் இருவரும் இணைந்து தங்களைப் போன்ற இளம்வயதில் பாலியல் துஸ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலொசனைகளும் ஆறதலும் வழங்கி வருகின்றனர். அன்பு – Abuse Never Becomes Us – ANBU என்ற இந்த அமைப்பு பாலியல் துஸ்பிரயோகங்களில் இருந்து மீண்டெழுந்த இவ்விரு பெண்களாலும் உருவாக்கப்பட்டு 2016 முதல் கனடாவிலும் தற்போது பிரித்தானியாவிலும் இயங்கி வருகின்றது.

இவ்வாறு எல்லோராலும் மீண்டெழுந்துவர முடிவதில்லை. அவர்களும் மீண்டெழுந்துவர சமூகத்தில் மாற்றம் வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு துணைபோகின்ற, பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி போடுகின்ற கலாநித்திகளும் கல்லாநித்திகளும் சமூகத்தில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டும். பெண்களை இழிவு செய்யும் மடமையை கொழுத்த வேண்டும்.

லண்டனில் தன் இளம் வயதில் தன் வீட்டில் இலங்கையில் இருந்து வந்து தங்கியிருந்த தூரத்து உறவினரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானவர் தர்ஷனா நவேந்திரன். சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான மற்றைய சிறுமிகளைப் போலவே இவரும் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை வெளியே தன் பெற்றோருக்கும் வெளிப்படுத்தவில்லை. அதே சமயம் அந்த வலி அவரை மன உளைச்சலின் எல்லைக்கே இட்டுச்சென்றது. தன் வலியை தனிக்க அவர் கலையையும் ஆக்கப்படைப்பையும் நாடினார். தர்ஷனா தன் வலியோடு பிரசவித்தது தான் Bags of Pain என்ற அவருடைய கவிதை நூல். தன்னுடைய வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்தில் புனைந்த அக்கவிதைகளை பாலியல் கொடுமைகளில் இருந்து மீண்டெழுந்த வெவ்வேறு நிலைகளில் இருந்த இருவர் உரையாடும் பாணியில் அக்கவித்தைகள் தொகுக்கப்பட்டு உள்ளது. தன்னுடைய சினேகிதி பற்றி குறிப்பிடும் மயுரி திரவியநாதன், தன்னுடைய வாழ்க்கையில் மோசமான நிலைகளைக் கடந்துவந்த தர்ஷனா மிகவும் அறிவுபூர்வமான பெண் என்றும் பாலியல் குற்றங்களில் இருந்து மீண்டெழுந்து வருபவர்களுக்கு உதவுவதையே அவர் தன்னுடைய இலக்காகக் கொண்டிருப்பதும் மிகவும் முக்கியமானதொரு அம்சம் எனத் தெரிவிக்கின்றார். தர்ஷனா தனது சமூகவலைத்தளங்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து மீண்டெழுந்து வருபவர்களுக்கு குரல்கொடுக்க பயன்படுத்துகின்றார்.

லண்டன் தமிழ் நிலையத்தினால் நடத்தப்படும் தமிழ் பள்ளியின் அதிபராக பணியாற்றும் திருமதி மாதவி சிவலீலன் தேசம்நெற்கு அனுப்பிவ வைத்த குறிப்பில் , “இது போன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பல நடைபெற்ற போதும் இதற்கு நியாயம் கேட்டுப் பெற்றோரோ பிள்ளைகளோ வெளியில் வருவதில்லை. எம் சமூகம் அவர்களையே குற்றவாளிகளென முத்திரை குற்றிவிடுகின்றது. இத்தகைய சமூகத்தில் இருந்து பெண்குழந்தைகளாயினும் ஆண்குழந்தைகளாயினும் இவர்களை எவ்வாறு காப்பாற்றி வளர்த்தெடுப்பதென்பது வேதனைக்கும் ஆபத்துக்குரியதாக இருக்கின்றது.

எங்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் போன்போர் கருத்தரங்குகள், விவாதங்கள், பயிற்சிப்பட்டறைகள், ஆலோசனைகள் வழங்கியும் சிறு மாற்றத்தியேனும் ஏற்படுத்த முடியவில்லையெனும் போது, கவலையாக இருக்கின்றது” எனத் தெரிவித்து இருந்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் “நீண்டகாலமாகச் சமூகம் சார்ந்து கருத்துச் சொல்லும் நான் ஒரு பாடசாலை தலைமையாசிரியராக, பெண்ணியச் செயற்பாட்டளாராக இத்தகைய இழி செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பெற்றோர் மட்டுமல்ல, நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும். ’மனதுக்கண் மாசிலன் ஆதல்’. எனத் திருக்குறளில் ஒரு வரி வரும். உன் மனச்சாட்சிக்கு குற்றமில்லாமல் இரு அதுவே அறம் ஆகுமென்று. இது ஒவ்வொருவரும் தான் செய்யும் தவறை உணர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் தருவதுடன் திருந்தி வாழவும் உதவக் கூடும்.

இத்தகைய ஈனச்செயலை அந்நியர்கள் வீட்டிற்குள்ளோ பொது இடங்களிலோ செய்வதில்லை. குடும்பத்துடன் நெருங்கிப் பழகும் உறவுகளாலேயே பெரும்பாலும் நடைபெறுகின்றது. அந்தவகையில் பெற்றோர் மிக மிக அவதானமாகப் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அது பிழையென்று தெரிந்தும் அதனை எதிர்க்கும் வல்லமையற்றவர்களாகப் பெற்றோருக்குச் சொல்லப் பயந்தவர்களாக இருந்து விடுகின்றனர். பின்னர் விபரம் அறிந்த வயதில் அவர்கள் இது பற்றிக் கூற முற்படுகையில் இந்தச் சமூகம் அதனை ஜீரணிக்க முடியாமல் அவர்கள் மீதே அவப் பெயரைச் சுமத்துகின்றது.

உங்கள் குடும்ப உறுப்பினர் மீது இத்தகைய அநியாயம் நடைபெற்றால் உங்கள் எதிர்வினை எவ்வாறு அமையும்? சிந்தித்துப் பாருங்கள். ஒரு தாயின் தந்தையின் மனவலியை, ஒரு பாதிக்கப்பட்ட பிள்ளையின் வாழ்நாட் மன உழைச்சலைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் துணிந்து, தன்னைப் போல் பிற பிள்ளைகளும் பாதிக்கப்படக் கூடாதென நீதிமன்றம் ஏறி நியாயம் கேட்டுப் போராடிய அந்தப் பிள்ளையையும் அந்தப் பெற்றோரையும் போற்றி வணங்குகின்றேன்” என்று குறிப்பிட்ட மாதவி சிவலீலன், “ஒருவர் குற்றவாளியென நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னர் அவரைக் காப்பாற்றத் துணைபோகும் அனைவரையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். எங்கள் குழந்தைகளுக்கு அச்சமற்ற வாழ்க்கையைக் கையளியுங்கள்” என்ற கோரிக்கையையும் மாதவி சிவலீலன் இங்கு பதிவு செய்துள்ளார்.

அன்று சிறுமியாக பிரேமகுமாரினால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனது கல்வி பயிற்சிக்காலத்தை முடித்துக்கொண்டு மருத்துவராக பணியாற்ற ஆரம்பித்து விட்டார். இந்த உணர்வுரீதியான அலைகள் ஓய்ந்ததும் தன்னைப்போல் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளானவர்களை வெளியே கொண்டுவந்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்பளிக்கும் செயற்பாடுகளை தான் முன்னெடுக்க விரும்புவதாக பாதிக்கப்பட்ட அன்றைய சிறுமி இன்று மருத்துவராகக் கடமையாற்றுபவர் தன்னுடைய சினேகிதிக்கு தெரிவித்தள்ளார். ஜென்னி ஸ்ரேக், தர்சிகா இளன்கீரன், தர்ஷனா நவேந்திரன் ஆகியோரின் வழியில் இவ்விளம் பெண்ணும் பாலியல் கொடுமைகளில் இருந்து மீண்டெழும் பெண்களுக்கு நம்பிக்கையழிக்க முன்வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

பல்கலைக்கழக மாணவியை சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆனந்தம் கிரியேசன் ஆனந்தராஜவுக்கு 30 மாதங்கள் சிறை!!!

பெப்ரவரி 2இல் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசாமிக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறியாப் பருவத்தில் பெண் பிள்ளையை தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தமிழ் வர்த்தகப் பிரமுகரான பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கே 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பிரேமகுமார் ஆனந்தராஜா ( Anandarajah Bremakumar ) வுக்கு எதிரான பாலியல் இம்சைக் குற்றச்சாட்டு டிசம்பர் முற்பகுதியில் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு இருந்தது முதற் தடவையாக தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் நடந்த பிரேமகுமார் ஆனந்தராஜாவின் வழக்கின் முடிவில் இன்று பெப்ரவரி 02இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 30 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவருடைய பெயர் பாலியல் துஸ்பிரயோகம் செய்வோர் பட்டியலிலும் சேர்க்கப்படும் எனவும் அதனால் இவர் சிறுமிகள் சிறுவர்கள் உள்ள பொது இடங்களில் நடமாடவும் தடை செய்யப்படும் எனவும் தெரியவருகின்றது.

அறுபத்தியொரு வயதான பிரேமகுமார் ஆனந்தராஜா சம்பந்தப்பட்ட சிறுமியைவிடவும் ஏனைய சிலருடனும் தவறாக நடந்துகொண்டவர் என்றும் அனால் மற்றையவர்கள் நீதிமன்று வரை செல்லவில்லை எனவும் தெரியவருகின்றது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு டயபிற்ரீஸ் மற்றும் நோய்க் காரணங்களைச் சுட்டிக்காட்டி அவருக்கு வழங்கப்பட்ட தண்டணை மனிதாபிமான அடிப்படையில் 30 மாதங்களுக்குக் குறைக்கப்பட்டது. தண்டனை வழங்கும் போது தனது குற்றத்தை பிரேமகுமார் ஆனந்தராஜா ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றவாளியின் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தாயின் நன்நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்துகொண்டதையும் நீதிபதி வன்மையாகக் கண்டித்திருந்தார்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும் ஆச்சுவே ஆலயம் சார்ந்தவர்கள் அவருடைய மோசமான பாலியல் துஸ்பிரயோகத்தை அறிந்திருந்தும் அவருக்கு சாதகமாகச் செயற்பட்டனர். இவருடைய தங்கைகளில் ஒருத்தி அண்ணனுக்கு கொஞ்சக்காலம் தான் தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது என்று அதற்குள் பெருமையடித்துள்ளார். பிரேமகுமார் ஆனந்தராஜா இவ்வாறான மோசமான பாலியல் துஸ்பிரயோகம் செய்த போதும்: அவருடைய பண வசதி, சமூகத்தில் ஆனந்தம் கிரியேசன் என்ற அமைப்பினூடாக பரதநாட்டியம், அரங்கேற்றம் போன்ற நிகழ்வுகளை நடாத்தி பெற்றுவந்த செல்வாக்கு, ஆலயங்களுக்கு மேளம் நாதஸ்வரம் போன்ற இசைக் கலைஞர்களை வரவழைத்துக் கொடுப்பது என்று பிரேமகுமார் ஆனந்தராஜா சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தார். அதனைப் பயன்படுத்தியே இவர் இந்தப் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தார்.

2022 டிசம்பர் முற்பகுதியில் இவ்வழக்கில் பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளியாகக் காணப்பட்டு 2023 பெப்ரவரி 2இல் அவருக்கு தண்டணை வழங்க்பட்ட போதும் இவ்வழக்கின் வரலாறு 13 ஆண்டுகள் நீண்டது. 2010இல் அப்போது 13 வயதேயான குழந்தையான சிறுமிiயையே பிரேமகுமார் ஆனந்தராஜா அவளே அறியாத பருவத்தில் துஸ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவியும் மிக நெருங்கிய நண்பிகள். பாதிக்கப்பட்ட சிறுமியின் பூப்புனித நீராட்டுவிழாவில் கூட அக்குழந்தையின் தாய்மாமனாகவும் மாமியாகவும் ஆனந்தராஜா தம்பதிகளே அழைக்கப்பட்டுடிருந்தானர். அவ்வளவு நம்பிக்கையோடு பழகியவர்களின் வீட்டுச் சிறுமியையே பிரேமகுமார் ஆனந்தராஜா அனுபவிக்க முற்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் சிநேகிதி தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். 2010இல் சிறுமிக்கு 13 வயதாக இருக்கும் போதே இத்துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றது. ஆனாலும் அது வேறு யாருக்குமே தெரியாது.

சிறுமி தனது 21வது பிறந்த தினத்தன்று தாயாருக்கு தனக்கு ஏற்பட்ட அக்கொடிய அனுபவங்களை சொல்லியுள்ளார். அதனைக் கேட்டு கதிகலங்கிய தாயார் தன்னுடைய நெருக்கமான தோழியான ஆனந்தராஜாவின் மனைவிக்கு இதனைத் தெரிவித்து நியாயம் கோரியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் கெஞ்சி மன்றாடிய ஆனந்தராஜாவின் மனைவி தன்னுடை பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அதற்கு அப்பால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் தடுத்தார்.

அதன் பின் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், ஒரு விரிவுரையின் போது பெண் பிள்ளைகள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதை எவ்வாறு அறிந்துகொள்வது என்பது பற்றிய விரிவுரை நடந்தது என்றும் அதன் போது சம்பந்தப்பட்ட பெண் அழ ஆரம்பிக்கவே பல்கலைக்கழகம் அப்பெண்ணின் நிலையை உடனேயே அறிந்து கொண்டனர். பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அன்று சந்தேக நபரான பிரேமகுமார் ஆனந்தராஜாவை விசாரணைக்கு வருமாறு கோரியும் இருந்தனர். அப்போது மருத்துவத்துறையில் பயின்று கொண்டிருந்த அப்பெண் தன் கல்வி முன்னேற்த்தை எதுவும் தடைப்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கவில்லை. தன்னுடைய இறுதித்தேர்வின் இறுதிப் பரிட்சையையும் முடித்துக்கொண்ட பின் நேரடியாக் பொலிஸாரிடம் சென்று பிரேமகுமார் ஆனந்தராஜா மீதான குற்றச்சாட்டை மீள்புதுப்பிக்கும்படி கோரி; பொலிஸாருக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

அதனைத் தொடர்தே பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கி சந்தேக நபரைக் கைது செய்து அவர் குற்றவாளி என்பதையும் நிரூபித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணோடு கூடப் படித்தவர் இது பற்றித் தெரிவிக்கையில் “அவர்கள் அனுபவித்த துயரை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது” எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாதிப்பு வலியுடன் இருக்கின்ற போது பிரேமகுமார் ஆனந்தராஜாவை காப்பாற்றும் சில முயற்சிகளிலும் சில சமூகப்பெரும் புள்ளிகள் ஈடுபட்டுள்ளனர். அது பற்றி பாதிக்கப்பட்டவர் “இவங்களுக்குள்ளையா நாங்கள் வளர்ந்தனாங்கள்” என்று மனம் வெதும்பியதாக அப்பெண்ணின் சிநேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த பதிவில்.

அன்பே சிவம் எல்லாம் குடுமி மயம்: பாரிஸில் சிவன் கோவில் வருமானத்தில், நல்லூரில் ‘காம’ விடுதி, யாழ் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் – பின்னுகிறார் சாதிமான் குடுமி ஜெயா!

இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது. ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெற்றிவேலு ஜயந்திரனை யாழ் மாவட்ட அமைப்பாளராக நியமித்து சஜித் பிரேமதாஸ, அயோக்கியர் ஒருவரை தங்கள் மாவட்டத்திற்கு பிரதிநிதியாக நியமித்தால் எவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை வெற்றி பெறமுடியும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

ஆள்மாறாட்ட மோசடி:
கொழும்பில் அரச உத்தியோகஸ்தர்கள் வெற்றிவேலு ஜெயந்திஜரன் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உடந்தையாக இருந்து அவருக்கு போலிப்பெயரில் அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். ஜெயந்திரன் வெற்றிவேலு என்பதே இவருடைய இயற்பெயர். இவர் பிறந்தது 1958 .07. 29. பிறந்த இடம் யாழ்ப்பாணம். அவருடைய முதல் அடையாள அட்டையில் இவ்விபரங்களைக் காணலாம். இவரது கடவுச் சீட்டிலும் இதே விபரங்களே உள்ளது.

ஆனால் பிரான்ஸில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு களவாக தப்பி 2003இல் இலங்கைக்குச் சென்ற வெற்றிவேலு ஜெயந்திரன் அதன்பின்; ஆள்மாறாட்டம் செய்து தன் பிறந்த திகதியை பத்து ஆண்டுகள் குறைத்துள்ளார். எழுத்துக்களை மாற்றி பெயரையும் மாற்றி அமைத்துள்ளார். கொழும்பில் பெற்ற புதிய அடையாள அட்டையில் பிறந்தது 1969 .07. 29 என்றும் பிறந்த இடம் நல்லூர் என்றும் பெயர் ‘வெற்றிவேலு யஜந்திரன்’ என்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தேசம்நெற் இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் இவர் தன்னுடைய சொந்தப் பெயரில் ஐரோப்பிய நாட்டு விமானநிலையங்களுடாக பயணிக்க முடியாது என்பதாலும் இளம்பெண்களைக் கவர்ந்திழுப்பதற்காகவும் பத்துவயதைக் குறைத்து களவாக தனக்கு இன்னுமொரு அடையாளத்தை உருவாக்கி உள்ளார் எனத் தெரியவருகின்றது.

அன்பே சிவம் எல்லாம் குடுமி மயம்:
எண்பதுக்களின் நடுப்பகுதியில் பாரிஸின் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு ஜெயந்திரன் அங்கு அலுவலகத் துப்பரவு (பியூரோ க்ளீனிங் கொன்ராக்) ஒப்பந்தம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். அந்நிறுவனத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனையும் அனுபவித்தார்.

இதற்கிடையே லாகுர்னே யில் சிவன் கோவில் ஒன்றை அமைத்தார். தமிழர்கள் ஜரோப்பிய நாடுகள் எங்கும் தாங்கள் வாழ்கின்ற பகுதிகளில் கடைகள் அமைத்துக்கொள்வார்கள். கோயில்கள் பெரும்பாலும் பொதுக் கோயில்களாகவோ தனியார் கோயில்களாகவோ இருக்கும். ஜெயந்திரன் கோயிலை கடை நடத்துவது போல் தனியார் கோயிலாகவே நடத்தி வருகின்றார். அதன் வருமானத்தை அவரே பெற்றுக்கொள்கின்றார். இதனை தற்போது ஆலயத்தின் பரிபாலனத்தை மேற்கொள்ளும் ஒருவர் ஜனவரி 26 அன்று தேசம்நெற்க்கு உறுதிப்படுத்தினார். ஆலயத்தின் தொலைபேசி இலக்கத்தோடு தேசம்நெற் தொடர்புகொண்ட போது ‘குடுமி ஜெயா’வுக்கே ஆலயத்தின் வருமானம் அனுப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பிரான்ஸில் ரவுடிக் கும்பலை வைத்திருந்த ஜெயந்திரனை, ‘குடுமி ஜெயா’ என்றாலேயே ஆட்களுக்கு தெரியும் என்கிறார், தனது குடும்பத்தினருக்காக அவ்வாலயத்திற்குச் சென்று வரும் குமார் என்று அழைக்கப்படும் நவரத்தினம் தவக்குமார்.

இந்தக் கோயிலின் வருமானத்தில் இருந்தே நல்லூர் ‘காம’ விடுதி லக்ஸ் ஹொட்டவாங்கப்பட்டு கட்டப்பட்டது. இதன் உரிமையாளர் என்ற பந்தாவிலேயே இவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளராக நியமிக்க்பட்டார். இவ்வாறான சமூகவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக கனடாவில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் முத்து பொன்னம்பலம் இது பற்றி தேசம்நெற்குக்குத் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக மக்களை ஏமாற்றி உழைக்கும் பணம் தாயகத்தில் இது போன்ற சீரழிவை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது எனத் தெரிவித்தார். பணத்தை வைத்து யாரையும் வாங்லாம் எதனையும் செய்யலாம் என்ற மனநிலை பணத்தை எந்தவழியிலும் பிரட்டலாம் என்று நம்பும் மோசடியாளர்களிடம் மிக அதிகமாகவே காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

முத்து பொன்னம்பலம் குறிப்பிட்டது போல் ‘அன்பே சிவம்’ என்பதை ‘எல்லாம் குடுமி மயம்’ ஆக்கிவிட்டார் குடுமி ஜெயா. பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வரை அடியாட்களை வைத்திருக்கும் குடுமி ஜெயா சிவன் கோவில் வருமானத்தில் போதைவஸ்து, மது, மாது என்று தன் கூலிப்படைக்கு இறைத்துக்கொண்டுள்ளார்.

யார் இந்தக் குடுமி ஜெயா:
பிரபல சட்டத்தரணி பொன்னையா வெற்றிவேலுவின் முதல் மனைவியுடைய மூன்றாவது மகன் தான் வெற்றிவேலு ஜெயந்திரன். காலம்சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மதிப்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன் ஜெயந்திரனுக்கு ஒருவகையில் மாமா முறையானவர். ஜெயந்திரனின் தாயார் விவாகரத்துப் பெற்றதைத் தொடர்ந்து பொன்னையா வெற்றிவேலுவுக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு அவரது சந்தேகம் காரணமாக அப்பெண் தன்னை எரித்துக்கொண்டு உயிரிழந்தார். அதன் பின்னர் பொன்னையா வெற்றிவேலு இன்னுமொரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தார்.

இப்பொன்னையா வெற்றிவேலுவே ஈபிடிபியின் அற்புதன் கொலை வழக்கில் ஈபிடிபிக்காக வாதிட்டு வழக்கை வென்றவர். ஆனாலும் சாதிமானான ஜெயந்திரன், ஈபிடிபியோடு இணையவில்லை. அதற்கு காரணம் ஈபிடிபி என்பது ‘கீழ்ச்சாதி’ கட்சி என்ற ஜெயந்திரனின் எண்ணத்தினால் தான்.

அண்மையில் ஒரு விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜெயந்திரன் தனது தந்தையின் அந்தக்கால கழியாட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பெருமைப்பட்டுக்கொண்டார். அந்தக் காலத்தில் தங்களிடம் வேலைக்கு வரும் ‘கீழ்சாதி’யைச் சேர்ந்த முத்தையா, கந்தன் எல்லாரையும் அங்க போய் காணியை துப்பரவாக்குங்கோ என்று அவர்களை கிளிநொச்சிக்கு அனுப்பிவிட்டு, அவர்களின் வீடுகளுக்கு சென்று, அங்குள்ள பெண்களை அனுபவித்துவிட்டு வருவது தன் தந்தையின் பொழுதுபோக்கு என்று ஜெயந்திரன் அங்கு பெருமைபடக் கூறியுள்ளார்.

அப்போது அருகில் இருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “எழும்பி அறைந்துவிட வேண்டும் என்ற கொதி வந்தது. ஆனாலும் எதுவும் செய்ய முடியவில்லை” என்று தன் இயலாமையையிட்டு மனம் வருந்தினார். இவ்வாறான இழிசெயல்களை பெருமையாகக் கூறவும் அதனைக் கேட்டு ரசிக்கவும் எம் சமூகம் தயாராக இருப்பது என்பது மிகவும் அருவருப்பாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இளம்பெண்களுக்கு வலைவிரிக்கும் குடுமி ஜெயா:
‘தன் தந்தைக்கு தப்பாமல் பிறந்த தனயன்’ என்பது போல் ஜெயந்திரன் பல விளிம்புநிலையில் உள்ள இளம்பெண்களை தன் பணத்தைக்காட்டி போதையூட்டி அவர்களது வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றார். தற்போது தனது எழுபதாவது வயதையெட்டும் ஜெயந்திரன் தன்னுடைய பேரப்பிள்ளையின் வயதையொத்த இன்னும் சில தினங்களில் 23 வயதையெட்டும் இளம்பெண்ணை வசீகரித்து வைத்துள்ளார். 2021 இல் தந்தையை விபத்தில் இழந்து வறுமையில் வாடிய குடும்பத்தை அரவணைக்கும் பாணியில் அக்குடும்பத்தில் நுழைந்த ஜெயந்திரன். ஒரு வகையில் இறந்தவருக்கு தமையன். ‘பெரியப்பா’ என்ற பெயரில் நுழைந்து, அந்த இளம்பெண்ணை தன்பக்கம் வசீகரித்துக்கொண்டார்.

அதற்கு முன் அவர் அப்பெண்ணின் தாயையும் முயற்சித்துள்ளார். அதன் ஓடியோ பதிவு தேசம்நெற்றிடம் சிக்கியுள்ளது. “நான் உங்களை அன்பாக வைத்திருப்பேன். நீங்கள் சின்ன வயதில் வாழ்க்கையை இழந்துவிட்டீங்கள். நீங்கள் வாழவேண்டும். நான் காசுகளையெல்லாம் மாத்திவிடுகிறன்” என்று குழைந்துள்ளார். அதன் பின் அத்தாய் ஜெயந்திரனின் தொடர்புகளைத் துண்டிக்க ஜெயந்திரன் தாயில் கரிசனை கொள்வது போல் பாசாங்கு பண்ணி மகளை சுவீகரித்துக்கொண்டார். தன் மகளை விடுவிக்க தாயார் ஜெயந்திரனோடு தொடர்பு கொண்டால் “நீர் ஒருக்கால் ஹொட்டலுக்கு வந்துவிட்டு போம். எல்லாம் சரியாகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குடும்பத்தார் தங்கள் பிள்ளையை மறைத்து வைத்திருக்கும் வீட்டை திருமணமாகாமல் அவரோடு பத்து வருடமாக வாழும் குடும்பத்தாரோடு சென்று வீட்டை உடைத்தனர். அப்பெண் தங்கியிருந்த வீடு முழவதும் 8 சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. பெருமளவு வாசணைக் குப்பிகள் (சென்ற்), மதுபானப் போத்தல்கள், ஆணுறைகள் என்பன காணப்பட்டது. அவ்வீட்டில் இருந்த பொருட்களை படத்தில் பார்க்கலாம்.

அதனைத் தொடர்ந்து இப்பிரச்சினை பொலீஸ்வரை சென்றது. ஆனால் சட்டப்படி அப்பெண் மேஜர் என்பதாலும் அப்பெண்ணே தான் ஜெயந்திரனோடு செல்ல முடிவெடுத்ததாலும் சட்டத்தால் இது விடயத்தில் அப்பெண்ணின் பெற்றோருக்கு எதுவும் செய்ய முடியவில்லை. சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இரண்டு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட அடியாட்களோடு ஜெயந்திரன் அப்பெண்ணை அழைத்து வந்து மீண்டும் கூட்டிச் சென்றார். இச்சம்பவம் சில தினங்களுக்கு முன் ஜனவரி 22இல் நடந்தது. தற்போது கவர்ந்து சென்ற பெண்ணுக்கு பதினாறு வயதில் ஒரு தங்கையுண்டு. அதுபற்றி ஜெயந்திரன் குறிப்பிடுகையில், ‘அந்தக் குட்டியும் நல்லாத்தான் இருக்கிறாள்’ என்று அக்குழந்தையின் தாய்க்கு ஜெயந்திரன் நளினமாகத் தெரிவித்து இருக்கின்றார். தன்னுடைய மற்றைய பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றுவது என்று கணவனை விபத்தில் பலிகொடுத்த அத்தாய் பரிதவிக்கின்றார்.

குடுமி ஜெயாவின் அந்தப்புரம்: மூன்று குடும்பம் நான்கு குழந்தை எண்ணற்ற உறவுகள்
பிரான்ஸில் ஒரு மொரிஸியஸ் பெண்ணை திருமணம் செய்திருந்த ஜெயந்திரன் அவரை விவாகரத்துச் செய்திருந்தார். அப்பெண்ணுக்கு ஜெயந்தின் மூலமாக ஒரு குழந்தையுண்டு. அதன் பின் இருபது வயதுடைய ஒரு இளம்பெண்ணைத் திருமணம் செய்து அவருக்கு இரு குழந்தைகள் உள்ளது.

அப்பண்ணுடைய விவாகரத்து வழக்கு வரும் மார்ச் மாதம் யாழ் மாவட்ட நீதிமன்றுக்கு வருகின்றது. அவ்வழக்கில் அப்பெண் சார்பில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் வாதிடுகிறார்.

இந்த விவாகரத்து விடயங்களுக்கு முன்னதாகவே கடந்த பத்து வருடங்களுக்கு மோலாக தனது இருபதுக்களில் இருந்த ஒரு இளம் பெண்ணோடு ஜெயந்திரன் வாழ்ந்து வருகின்றார். இப்போது முப்பதுக்களின் நடுப்பகுதியில் உள்ள அப்பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. ஆனால் ஜெயந்திரன் அவரை சட்டப்படி திருமணம் செய்யவில்லை. மற்றைய பெண்ணின் விவாகரத்து முடிந்ததும் இவரைத் திருமணம் செய்வதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்குள் தன் பெறாமகளான பேர்த்தியின் வயதுடைய பெண்ணை கவர்ந்துகொண்டு அது பொலிஸ்நிலையம் வரை வந்துள்ளது.

இந்த நான்கு பெண்கள், நான்கு குழந்தைகள் மட்டுமல்ல இதைவிடவும் இன்னும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடுவில் தேவலயத்தோடு நெருக்கமாக இருந்த இளம் பெண்ணொருவரையும் ஜெயந்திரன் நம்ப வைத்து துரோகம் இழைத்திருந்தார். அவர் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்கின்றார். இப்பெண்ணுடைய இளைய சகோதரியோடும் ஜெயந்திரன் உறவுகொள்ள முற்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஜெயந்திரனின் சகோதரி (வெற்றிவேலுவின் இரண்டாவது மனைவியின் மகள்) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அந்நேரம் ஆதரவாகச் செயற்ப்பட்டவர், தன்னுடைய சகோதரனின் காம லீலைகள் பற்றி புலிகளிடம் முறையிட்டுள்ளார். ஜெயந்திரனை அழைத்து விசாரித்த புலிகள், ஜெயந்திரன் புலிகளுக்கு நிதிப்பங்களிப்புச் செய்ய உடன்பட்டதை அடுத்து அவரை விட்டுவிட்டனர். அன்று ஜெயந்திரனை அழைத்து விசாரித்த புலிகளின் உறுப்பினர் தென்னவன் தற்போது பாரிஸில் வாழ்கின்றார். தாங்கள் ஜெயந்திரனை விசாரித்து தண்டனை வழங்காமல் விட்டது உண்மைதான் ஆனால் இயக்கம் அவரிடம் பணம் வாங்கவில்லை எனத் தெரிவித்தார்.

மேற்குறிப்பிடப்பட்ட பெண்கள் எல்லோரிடமுமே ஜெயந்திரன் ஒரே விதமான கதை சொல்லியே அவர்களை வசீகரித்துள்ளார். “தன்னிடம் பணம் இருந்க்கின்றது. ஆனால் அன்பு காட்ட யாரும் இல்லை. வருபவர்கள் பணத்துக்காகவே வருகின்றார்கள். நான் அன்புக்காக ஏங்குகிறேன்” எற்றெல்லாம் கதைசொல்லியே இவ்விளம் பெண்களை ஜெயந்திரன் கவர்ந்துள்ளார். பின் நாட்கள் கடந்து செல்ல குடித்துவிட்டு தன் சுயரூபத்தை காட்டியுள்ளார். அப்பெண்களை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். அவர்களது முகத்திலும் உடலிலும் காயங்களை ஏற்படுத்தியதுடன் உள்ளத்திலும் என்றும் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி உள்ளார். தற்போது ஜெயந்திரனின் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இன்னொமொரு பெண்ணும் இணைந்துள்ளார்.

இப்பெண்கள் பெரும்பாலும் அனைவருமே, ஜெயந்திரனின் மொழியில் ‘கீழ்சாதி’யைச் சேர்ந்தவர்கள். சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்ததால் ஓரங்கட்டப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது ஜெயந்திரனின் தந்தையான பொன்னையா வெற்றிவேலு போன்ற சாதிமான்களால் தாய்மையடைந்தவர்களின் பெண் பிள்ளைகள். அக்குடும்பங்களில் உறுதியான ஆண் ஆளுமைகள் இல்லை. இந்தக் குடும்பங்களின் விழிம்புநிலை, அவர்களின் வறுமை, தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற தைரியம் இவற்றை முதலீடாக்கி தன் காமப் பசிக்கு இளம் பெண்களை சூறையாடி வருகின்றார். இது தமிழ் சமூகத்தின் மிகப்பெரும் அவலம்.

குடுமி ஜெயா பற்றிய ஆதாரங்கள்:


ஜெயந்திரனினால் பாதிக்கப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட பெண்களின் படங்கள் மற்றும் ஆவணங்களை தேசம்நெற் பல்வேறு மூலங்களில் இருந்தும் பெற்றுக்கொண்டது. ஆனால் அப்பெண்களுடைய படங்களையோ ஜெயந்திரனின் பிள்ளைகளின் படங்களையோ வெளியிடப்போவதில்லை. ஜெயந்திரனின் தாய் இருசகோதரிகள் கனடாவில் வாழ்கின்றனர். ஒரு சகோதரன் பிரான்ஸில் வாழ்கின்றார். அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்தது மற்றும் உதவிகளையும் ஜெயந்திரன் மேற்கொண்டதால் அவர்கள் ஜெயந்திரனுக்கு விசுவாசமாகவும் ஜெயந்திரனுடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் இருப்பதாக தெரியவருகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. அவர்களுடைய படங்களையும் வெளியிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

குடுமி ஜெயாவின் அரசியல் பிரவேசம்

“ஆம், தமிழ் ஒரு பொது உடமை, உலகத்தில் முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ்” என்ற வாக்கியத்தோடு முகநூலில் வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் உள்ளார். ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டு வந்ததில் இவருக்குள்ள பங்கை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தான் ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டுவரவில்லை என்றும் ஆனால் ஜெயந்திரனுடைய உறவுகள் பற்றித் தனக்குத் தெரியும் என்றும் அவருடைய சினேகிதிக்குத் தெரிவித்துள்ளார். ஜெயந்திரனுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு அரசியல் வேறு அதனால் தான் அவருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க தான் முன்வந்தாக இவர் தன்னுடைய சினேகிதிக்கு விளக்கமளித்துள்ளார். தன்னை பெண்ணியவாதியாகவும் காட்டிக்கொள்ளும் உமாசந்திர பிரகாஷ் ஜெயந்திரனின் தாய்வழி உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உமாசந்திர பிரகாஷ் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மூன்று பெண்களின்: ஜெயந்திரனின் கொடுமை தாங்காமல் விவாகரத்துக்குக் கோரி நிற்கும் இரு பிள்ளைகளின் தாய், திருமணமாகாமலேயே குழந்தையுடன் தற்போது ஜெயந்திரனின் கீழ் அடி உதை வாங்கி வாழும் ஒரு பெண் குழந்தையின் தாய், குழந்தை முகம் கலையாத தற்போது வசீகரிக்கப்பட்ட பெண் – என அனைவரின் அவலத்தையும் நன்கு அறிந்தவர். ஆனாலும் ஜெயந்திரனின் பணத்துக்காக லக்ஸ் ஹொட்டலுக்காக இவற்றை சகித்துக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகம் லக்ஸ் ஹொட்டலிலியே இயங்குகிறது.

ஆன்மீகம் – அரசியல் – அதிகாரம்
ஜெயந்திரன் ஒரு பொறுக்கியாகவோ ரவுடியாகவோ மட்டும் இருந்திருந்தால் அது இவ்வளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. ஆனால் ஜெயந்திரன் ஒரு சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தா, ஒரு தேசியக் கட்சியின் பிரதான மாவட்ட அமைப்பாளர். இந்த லட்சணத்தில் தான் ஆலயங்களும் அரசியல் கட்சிகளும் மக்களை வழிநடத்துகின்றன? எதிர்கால சந்ததிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்றன?

அன்று புலிகளில் இருந்து இன்று சிங்கங்கள் வரை ஜெயந்திரன் போன்றவர்களின் அயோக்கியத்தனத்தை யாரும் கண்டுகொள்வில்லை. இதனால் இவ்வாறான இளம்பெண்கள் ஜெயந்திரன் போன்ற பணமும் செல்வாக்கும் கொண்ட ஆசாமிகளின் முன் விட்டில் பூச்சிகளாக மடிந்து வீழ்கின்றனர். பாரிஸில் இளைத்த குற்றங்களுக்காக சிறைசென்ற ‘செம்மல்’ ‘கம்பிகள் ஊடாக’ என்று தன்னுடைய திருகு தாளங்களை எழுதி வெளியிட்டார். அதில் தன்னுடைய அழகையும் கவர்ச்சியையும் கண்டு இளம்பெண்கள் வீழ்வதாகவும் தன்னுடைய நண்பர்களின் மனைவியருக்கே தன்னில் நட்புப்பொங்கியதாகவும் அந்நூலில் அளந்துள்ளார் ஜெயந்திரன். இனி ‘அந்தப்புரக் கம்பிகள் ஊடாக’ என்று ஒரு புத்தகம் எழுதினாலும் ஆச்சரியம் இல்லை.

மீற்றர் வட்டி கட்டாத அப்பாவிகளை அடித்து அதை விடியோ எடுத்து போடும் துணிவு யாழில் உள்ள பொறுக்கிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் வந்திருக்கின்றது. அதைக் தட்டிக் கேட்க அதிகாரம் உள்ளவர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் தயாரில்லை. இன்னும் பல பத்து ஜெயந்திரன்கள், இந்த விளிம்புநிலை தமிழ் பெண்குழந்தைகளை வேட்டையாட தொடர்ந்தும் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

இதில் பெண்ணியம் பேசும் பெண்ணிய புலிகள் சிங்கங்கள் தங்களுக்கு தாங்களே முதுகுசொறிவதோடு நிறுத்திக்கொண்டு விடுகின்றன. இல்லாவிட்டால் தங்களோடு ஒத்தூதா ஒருவரை முகநூலில் இழுத்து கையெழுத்துவேட்டை நடத்துவதோடு சரி.

பணம் அரசியல் செய்வதற்கு அவசியமாகிறது. அதனால் ஜெயந்திரன் போன்ற அயோக்கியர்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்படுகின்றனர். ஜெயந்திரன் போன்றவர்களுக்கு அரசியல் அந்தஸ்தும் கிடைத்த பின் அவர்கள் தங்களிடம் உள்ள பணம், அரசியல், அதிகாரத்தை பயன்படுத்தி இன்னும் இன்னும் அவற்றைப் பெருக்கிக் கொண்டு அதிகார மையங்களாக மாறுகின்றனர். இவர்கள் முன் விட்டில் பூச்சிகளாக வீழும்; இளம்பெண்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பிரான்ஸ் லாகுர்னே சிவன் கோவிலில் உண்டியலுக்குள்ளும் அரிச்சினை என்ற பெயரிலும் விழும் ஈரோக்கள் நிறுத்தப்பட வேண்டும், மக்கள் லக்ஸ் ஹொட்டலைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அயோக்கியர்களை பொறுப்பான பதவிகளுக்கு பணத்துக்காக மதுவுக்காக மாதுவுக்காக நியமிப்பதை நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சிகளில் இருக்கும் அயோக்கியர்களைக் களை எடுக்க வேண்டும். இதற்கு இவர்கள் தயாரா?

காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரனை மிரட்டிய யாழ் பல்கலை சிற்றின்பப் பேராசிரியர் எஸ் சந்திரசேகரத்தின் ரவுடித்தனம் ஓடியோவில் பதிவு!

டிசம்பர் 24 நத்தார் தினத்துக்கு முதல்நாள் பேராசிரியர் செல்வரத்தினம் சந்திரசேகரம் காலைக்கதிர் ஆசிரியரை மிகக் கீழ்த்தரமான முறையில் பேசிய ஒளிப்பதிவு தேசம்நெற் இணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தன்னைப் பற்றிய செய்தி வெளிவந்துள்ளதாக காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரனை வினவிய பேராசிரியர் சந்திரசேகரனைக் குறுக்கிட்ட வித்தியாதரன் உங்கள் பெயர் அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லையே என விளக்கி இருந்தார். மேலும் உங்களுக்கு அச்செய்தியில் தவறு இருப்பதாகத் தெரிந்தால் மின் அஞ்சல் மூலமாக அதனைத் தெரியப்படுத்துங்கள் அதற்கு பதிலளிக்கப்படும் என பல தடவை கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் நிதானமாக உரையாடிய பேராசிரியர் எஸ் சந்திரசேகரன் சிறிது நேரத்திற்குள் ஒரு தெருப்பொறுக்கியின் நிலைக்கு கீழிறங்கி தகாத முறையில் சண்டையிடவும் மிரட்டவும் ஆரம்பித்தார்.

அவ்வளவு சூடான நிலையிலும் வித்தியாதரன் நிதானமாக வார்த்தைகளை விடாமல் ஒரு ஆசிரியராக பண்பாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட போதும் பேராசிரியர் எஸ் சந்திரசேகரம் அதட்டியும் மிரட்டியும் மிருகத்தனமாக நடந்துகொண்டதாக வித்தியாதரனினதும் சந்திரசேகரத்தினதும் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். பேராசிரியர் சந்திரசேகரம் பொருளியல்துறையின் தலைவரும் கூட. இவர்களே இவ்வாறு நடந்துகொண்டால் இவர்கள் வழிகாட்டும் மாணவர்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பிய அந்நண்பர் இவர்களிடம் கற்று வடக்கு கிழக்கிலும் அதற்கு அப்பாலும் பணியாற்றுபவர்கள் மக்களுடன் எவ்வாறு நடந்துகொள்வார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதுபற்றி தேசம்நெற்க்கு தெரியவருவதாவது, டிசம்பர் 24 காலைக்கதிர் பத்திரிகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரை சீனாவுக்கு கற்கை நெறிகளுக்கு அனுப்புவது பற்றிய செய்தி வெளிவந்திருந்தது. இந்த ஏற்பாட்டை சினாவில் கற்ற பொருளியல் பேராசிரியர் பீடாதிபதி மேற்கொண்டதாக அச்செய்தி குறிப்பிட்டு இருந்தது. அச்செய்தித் தகவல் பேராசிரியர் சந்திரசேகரம் பற்றியதாக இருந்தாலும் அச்செய்தியில் வித்தியாதரனின் அரசியல் குதர்க்கம் இருந்தது. சந்திரசேகரத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதில் சிற்றின்பப் பேராசிரியர் தனது மாணவிகளை மிரட்டி தன் இச்சைக்கு பணிய வைக்கும் பாணியில் ஒரு ஊடக ஆசிரியரை மிரட்டி இருக்கின்றார். தனது நிலையை உணரும் அளவுக்கு நிதானம் இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டிருக்கிறார்.

காலைக்கதிர் மட்டுமல்ல யாழ் பத்திரிகைகள் அனைத்துமே இந்திய முகவர்களாக செயற்படுபவை. இந்திய நலன்கள் மீறப்படுமானால் இப்பத்திரிகை ஆசிரியர்கள் அதற்கேற்றாற் போல் செய்தியை தாலித்து வதக்கி காரம் மசாலா போட்டு இந்தியாவிடம் நல்ல பெயர் வாங்கும் வகையில் வெளியிடுவார்கள். இந்த அடிப்படை கூடத் தெரியாமல் பொருளியல்துறைக்கு பீடாதிபதியாக எப்படி பேரசிரியர் எஸ் சந்திரசேகரம் நியமிக்கப்பட்டார். தன் புலன்களை ஆங்காங்கு சிதறவிடாமல் கொஞ்சம் அரசியல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் அவருக்கு நல்லது என்கிறார் அவரிடம் கற்ற முன்னாள் மாணவி.

யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ் சந்திரசேகரத்தின் பெயர் ஊடகங்களில் அடிபடுவது இது முதற்தடவையல்ல. சில மாதங்களுக்கு முன் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய விதவையான ஒரு முன்னாள் போராளியின் மனைவியுடன் தகாதமுறையில் நடந்துகொண்டமை பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இவர் சிற்றின்பப் பேராசிரியரானார். மேலும் இவரது பொருளியல் பீடத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் இளம்குமரன் தன்னுடைய காமுகத்தனத்திற்காக கரும்புடையன் என்ற பட்டம் பெற்றவர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை அந்தப்புரமாக்கி வரும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்களின் தொல்லை யாழ் சமூகத்தின் விழுமியங்களுக்கு பெரும் தொல்லையாகி வருகின்றது. இவர்களது காமக்குத்துக்கள் தற்போது மேலும் அதிகரித்து வருவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தேசம்நெற்றைத் தொடர்புகொண்டுள்ளனர். தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள், அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain Barre’ Syndrome’ (‘Guillain-Barre’ Syndrome’) பற்றிய வேலியே பயிரை மேய்கின்ற துரதிஸ்ட்டம் பற்றி த ஜெயபாலன் “தமிழ் கல்விச் சமூகம் ஒரு பார்வை” என்ற நூலை 2010இல் வெளியிட்டு இருந்தார். இந்நூலில் யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பேராசிரியர்கள் விரிவுரையாளர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நூல் வெளிவந்ததால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக முன்னாள் பேராசிரியர் சண்முகலிங்கன் ஒரு பதவிக்காலத்துடனேயே பதவி இறக்கப்பட்டு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அது போல் கலைத்துறைக்கு பீடாதிபதியாக பெண் பேராசிரியரை நியமிப்பதே கலைத்துறைசார்ந்த மாணவிகளுக்கு ஓரளவு பாதுகாப்பை ஏற்படுத்தும்.

காமுகர்களாக மாறியுள்ள பேராசிரியர்கள் ஒரு பலம் மிக்க அனுபவம்மிக்க ஊடக ஆசிரியரோடு இவ்வளவு மோசமாக நடந்துகொண்டால் இவர்கள் பற்றி முறையிடும் இருபதுக்களின் தொடக்கத்தில் உள்ள மாணவிகளின் நிலை என்ன? மேலும் இம்மாணவிகள் தங்கள் பட்டத்தைப் பெற்று வெளியேற இந்தக் காமுகர்கள் அனுமதி வேண்டும். இதனைப் பயன்படுத்தி இந்த இளம் பெண்களை வேட்டையாட இந்த கல்வியையும் தேசியத்தையும் போர்த்துக்கொண்டு இந்த ஓ(ஆண்)நாய்கள் அலைகின்றன.