லிற்றில் எய்ட்

லிற்றில் எய்ட்

லிற்றில் நூலகத் திறப்பும் நூலகர்களுக்கான பாராட்டும்!!!

யாழ் பொதுசனநூலகத்தின் ஓய்வு பெற்ற பிரதம நூலகர் ச தனபாலசிங்கம் அவர்களினதும் சுன்னாகம் பொதுநூலகப் பிரதம நூலகர் ஜெயலட்சுமி சுதர்சன் அவர்களினதும் நூலக சேவையை கௌரவிக்கும் நிகழ்வு லிற்றில் நூலகத் திறப்பு நிகழ்வு இற்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று மார்ச் 13ம் திகதி கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள் என 200 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

லிற்றில் நூலகம் திருநகரைச் சுற்றியுள்ள பத்துவரையான கிராம மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்டும் நோக்கோடு ஆரம்பிக்கப்படுவதாக லிற்றில் எய்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களோடு பொதுநூலகமாக ஆரம்பிக்கப்படுகின்ற இந்நூலகம் காலக் கிராமத்தில் வர்த்தகம், கணணி மற்றும் தையல் கலைக்கான நூலகமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நீண்டகாலத் திட்டம் எனவும் த ஜெயபாலன் தெரிவித்தார்.

தமிழ் பிரதேசங்களின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக இருப்பது வாசிப்பை எம்மவர்கள் கைவிட்டது எனத் தெரிவித்த லிற்றில் எய்ட் இன் இயக்குநர் – இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி வாசிப்பு பழக்கத்தை தூண்டுவதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்ட முடியும் என்றும் அதனால் சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தில் தாங்கள் கூடுதல் கவனம் எடுக்க உள்ளதாகவும் அதற்காகா மாதாந்த வாசிப்பு வட்டம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். லிற்றில் நூலகத்திற்கான பயிற்சி நூலகராக கே இவாஞ்சலி பொறுப்பேற்றுள்ளார்.

லிற்றில் நூலகத்திற்கான திட்டம் நீண்டகாலமாக இருந்த போதும் அதற்கு செயல்வடிவம் கொடுத்தது அமரர் இராசமணி பாக்கியநாதனின் பிள்ளைகளே. உலகின் வெவ்வேறு பாகங்களில் அவர்கள் வாழ்ந்த போதும் தாயக மக்களின் எதிர்கால வாழ்வில் அக்கறைகொண்டு இந்நூலகத் திட்டத்திற்காக எட்டு இலட்சம் ரூபாய்கள் வரை வழங்கி உள்ளனர். நூலக அறையை வடிவமைப்பதுஇ அதற்கான தளபாடங்களை பெற்றுக்கொள்வதுஇ நூல்களைப் பெற்றுக்கொள்வது என்பனவற்றோடு பத்திரிகை வாசிப்புக்கான குடில் ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது. பத்திரிகை வாசிக்க வருபவர்கள் நூலகத்திச் செயற்பாடுகளை பாதிக்காமல் இருப்பதற்காகவும் இடவசதிக்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லிற்றில் நூலகத்தை அமரர் இராசமணி பாக்கியநாதனின் முத்த புதல்வர் ஸ்ரீகுமார் பாக்கியநாதன் திறந்து வைத்தார். தற்போது மலேசியாவில் வாழ்கின்ற தொழிலதிபரான இவரோடு இவரது சகோதர சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். லண்டனில் இருந்து லிற்றில் எய்ட் இன் தலைவர் கதிரமலை நந்தகுமார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார். லிற்றில் எய்ட் தலைவர் க நந்தகுமார் லிற்றில் எய்ட் இன் செயற்திட்டங்களை பார்வையிடுவதுடன் லிற்றில் எய்ட்இன் மேற்பார்வையில் இயங்கும் முல்லைத்தீவில் உள்ள கற்சிலைமடுவின் குழந்தைகள் அமைப்பின் செயற்திட்டங்களையும் பார்வையிடுவார்.

இந்நூலகத் திறப்பு விழா நிகழ்வு ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சி இதயராசா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அ கேதீஸ்வரன் கலந்துகொண்டார். எழுத்தாளர் கருணாகரன் “ஏன் புத்தகங்கள்? எதற்காக வாசிப்பு?” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் லிற்றில் எய்ட் மாணவர்களின் தயாரிப்பில் ஒரு குறும் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
2009 மார்ச் 19இல் லண்டனில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் அமைப்பு அதற்கு முன்பிருந்தே தனது உதவிப் பணிகளை கடந்த 13 ஆண்டுகளுக்கு மோலாக மேற்கொண்டு வருகின்றது.

லிற்றில் எய்ட் இன் இந்த லிற்றில் நூலகத் திட்டத்தை மிகவும் வரவேற்ற நூலகவியலாளர் என் செல்வராஜா இந்நூலகம் கிளிநொச்சி – வன்னி மண்ணின் ஒரு சிறப்பு நூலகமாக வளரவேண்டும் என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் நூலகப் பயிற்சிகளையும் ஆலோசணைகளையும் தொடர்ச்சியாக வழங்கிவருவதோடு நூல்களைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளுக்கும் உதவி வருகின்றார்.

ஸ்கொட்லாதில் உள்ள ‘புக் அப்ரோட்’ அமைப்போடு இணைந்து பல லட்ச்சக்கணக்கான குறிப்பாக சிறார்களுக்கான ஆங்கில நூல்களை குறிப்பாக தமிழ் பிரதேசங்களுக்கு கொண்டுவர முயற்சி எடுத்தவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. அப்பணியில் அவரோடு லிற்றில் எய்ட் இணைந்து பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது சுகவீனமாக உள்ள அவர் பூரண சுகமடைந்து தனது நூலக சேவையைத் தொடர இயற்கை அன்னையை வேண்டுகின்றோம் என லிற்றில் எய்ட் சார்பில் அதன் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி தெரிவித்தார்.

சிறுவர், பதின்ம வயதினருக்கான லிற்றில் எய்ட் இன் ஆக்க இலக்கியப் போட்டி! முதற் பரிசு 5,000 ரூபாய்!!!

லிட்டில் எயிட் திறன்விருத்தி மையம் நாடாத்தும் ஆக்க இலக்கியப் போட்டி மார்ச் மாதம் முதலாம் திகதி நிறைவடைகிறது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் ஆக்கங்கள் படைப்புகளை மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். இப்போட்டிகளில் உலகின் எப்பாகத்தில் இருந்தும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். கவிதை, கட்டுரை, சிறுகதை, நகைச்சுவை, நேர்காணல்கள், ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் கீழ்வரும் கருப்பொருளில் அமைய வேண்டும்.

கருப்பொருள்:
1. தொழிநுட்பம்
2. கல்வி
3. பொருளாதாரம்
4. சமூகம்
5. வாழ்வியல்

மேற்குறிப்பிட்ட கருப்பொருளுக்கமைவாக 250-300 சொற்களுக்கு மேற்படாமல் ஆக்கம் இருத்தல் வேண்டும். மேலும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு போட்டியில் மாத்திரமே பங்கு பெற்றலாம். வயதெல்லை 18 வயதிற்கு உட்பட்டோராக இருத்தல் வேண்டும். ஆக்கங்கள் தெளிவான எழுத்துக்களில் கையெழுத்து பிரதியாகவோ கணினிப்படுத்தியோ ஆக்கங்கள் 01.03.2022 ற்கு முன்னதாக எமக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்ப வேண்டும். ஆக்கங்களோடு ஆக்கத்தை அனுப்பியவரின் முழுப்பெயர் வயது அவருடைய படம் ஒன்றையும் இணைக்கவும்.

போட்டிகளில் தரமானதாக தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள் லிற்றில் பேர்ட்ஸ் – சின்னப் பறவைகள் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும். நடுவர்களின் தீர்பே இறுதியானதாகக் கொள்ளப்படும். வெற்றிபெறும் முதல் மூன்று ஆக்கங்களுக்கு சான்றிதழ்களும் பரிசுத் தொகையும் அனுப்பி வைக்கப்படும். பரிசு பெற்றவர்கள் சஞ்சிகை வெளியீட்டுவிழாவில் பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு லிற்றில் பேர்ட்ஸ் சஞ்சிகை இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

முதலாம் பரிசு:     5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு:   1000 ரூபாய்

ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆசிரியர் குழு,
லிற்றில் பேர்ட்ஸ்,
லிற்றில் எட்ய்,
கனகராசா வீதி,
திருநகர்,

Editorial Team,
Little Birds,
Little Aid,
Kanagarasa Veethy,
Thirunagar,
Killinochie.

அல்லது

littleaidsl@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

கைபேசி இலக்கம்: 0094 7773 78556

தகவல்: லிற்றில் எய்ட்

இளைஞர்களின் கூலிப்படைக் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் – லிற்றில் எய்ட் ஒளிவிழாவில் வண பிதா எஸ் கே டானியல் சிறப்புரை

தமிழ் இளைஞர்களின் கூலிப்படைக் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என லிற்றில் எய்ட் அமைப்பில் நத்தார் தினத்தையொட்டி நடந்த ஒளிவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வண பிதா எஸ் கே டானியல் தெரிவித்தார். இன்றைய இளைஞர்கள் பணத்துக்கு அடிமையாகி கூலி அடிமைகளாக மாறும் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்த வண பிதா டானியல் எல்லா சமயங்களும் அன்பையே போதிக்கின்றன, யேசுபிரான் அன்பின் அவதாரமாகவே பிறந்து இந்த உலகத்தை காக்கின்றார் என்றும் அன்பையும் காருண்யத்தையும் உடையவர்கள் யேசுவின் சகோதரர்கள் ஆவீர்கள் என்றும் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் மாணவிகளாலும் மாணவர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். லண்டனில் இருந்து தாயகம் செய்னிறருந்த லிற்றில் எய்ட் அமைப்பின் உறுப்பினர் டொக்டர் பொன் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்து மாணவ மாணவியருக்கு பரிஸில்களை வழங்கினார்.

மேலும் லிற்றில் எய்ட் கிளிநொச்சி உறுப்பினர் குகனும் லிற்றில் எய்ட் ஆசிரியை அனுஷியாவும் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினர். லிற்றில் எய்ட் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி, கணணி தொழில்நுட்ப ஆசிரியர்கள் பவதாரனி, கோபி ஆகியோர் நிகழ்வை மேற்பார்வை செய்து மாணவ மாணவிகளுக்கு அணுசரனையாகச் செயற்பட்டனர்.

மாணவிகளின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வில் செல்வி அ அன்பரசி வருகைதந்தோரை வரவேற்றுக்கொள்ள வண பிதா போல் அனக்கிளிற் ஆசியுரை வழங்கினார். மாணவன் ச தர்சன் தலைமையுரை நிகழ்த்தி விழாவை ஆரம்பித்து வைக்க மாணவர்கள் கி ஐதுஷிஹன், அ கடல்வேந்தன் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வு முற்றிலும் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களினாலேயே நிகழ்த்தப்பட்டமையும் இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வி விருத்தியுடன் மட்டும் நின்று விடாமல் அவர்களின் ஆளுமை விருத்தியையும் மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளிலும் லிற்றில் எய்ட் கடந்த சில ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகின்றது. காலம்சென்ற வயித்தீஸ்வரன் சிவஜோதி லிற்றில் எய்ட் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் கிளிநொச்சியின் சமூக மையத்தளமாக லிற்றில் எய்ட் வளர்க்கப்பட வேண்டும் என்ற கனவுக்கு அவர் உரமளித்திருந்தார்.

மாணவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய வண பிதா போல் அனக்கிளிற் நாங்கள் அனைவரும் அன்பினால் இணைக்கப்பட்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். கிளிநொச்சியில் லிற்றில் எய்ட் இன் பங்களிப்பையும் விதந்துரைத்தார்.

இளைஞர்களின் வன்முறைக்கு எதிராக காட்டமாக தனது கருத்துக்களை முன்வைத்த வண பிதா டானியல் அண்மையில் கிளிநொச்சி சாந்தபுரத்தில் வாள்வெட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலையைச் சுட்டிக்காட்டி இவ்வாறான வழிகளில் இளைஞர்கள் செல்வதை தடுப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டுபவர்கள் சரியானவர்களாக நடக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். வ சிவஜோதியின் வழிகாட்டலில் வளர்ந்த இந்த மாணவர்கள் அப்படிச் செல்லமாட்டார்கள் என்றும் அவ்வாறு சென்றால் அது சிவஜோதியின் கனவுகளை மிதிக்கின்ற அவருடைய ஆத்மாவை அவமதிக்கின்ற செயல் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த இளைஞர்களை வழிப்படுத்துவதில் வழிநடத்துவதில் லிற்றில் எய்ட் இன் பங்களிப்பு மிகக் காத்திரமானது எனத் தெரிவித்த வண பிதா டானியல், இவர்களின் இந்த சேவை இந்தப் பகுதிக்கு மிக அவசியமானது என்பதை வலியுறுத்தினார்.

நிகழ்வின் இறுதியில் லிற்றில் எய்ட் இணைப்பாளர் மற்றும் ஆசிரியர்களோடு உரையாடிய லண்டனில் இருந்து வந்திருந்த லிற்றில் எய்ட் உறுப்பினர் டொக்டர் பொன் சிவகுமார் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டியும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டியும் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக தனது சேவைகளை கிளிநொச்சி மண்ணில் வழங்கி வரும் லிற்றில் எய்ட் கணணிக் கற்கை நெறிகளோடு சுயதொழில் வேலை வாய்ப்பிற்கான தையல் மற்றும் வடிவமைப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்றது. ஆங்கில மொழிக் கல்வி லிற்றில் எய்ட் இல் வழங்கப்படுவதுடன் கிளி விவேகானத்தா பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கில மொழி வகுப்புகளை நடத்துகின்றனர். மேலும் கல்வியூட்டலுக்கு அப்பால் மாணவர்களின் ஏனைய துறைகளை வளர்ப்பதற்காக விளையாட்டு – செஸ் கிளப் நடத்தப்படுகின்றது. லண்டனில் இருந்து சேனன் இதனை நடத்துகின்றார். மாணவர்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கான சிரமதானம், கலைநிகழ்வுகள், விழ்ப்புணர்வு நிகழ்வுகள் என்பனவற்றையும் மாணவர்கள் தம் பொறுப்பில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விதி, வீதிகளில் விளையாடுகின்றது! – ஒரு மாணவியும் அவளின் கனவுகளும் வாகனத்தின் சக்கரத்தில் நசுங்கி ஒரு மாதம்!!!

இன்றைக்கு டிசம்பர் 15 காலை வீதிப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஏ9 வீதியில் லிற்றில் எய்ட் அமைப்பினால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டது. லிற்றில் எய்டில் கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட வெளி மாணவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வீதிப் போக்குவரத்தில் பாதுகாப்பை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டது. மாணவர்கள் வீதிப் பாதுகாப்பை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கி அமைதியான முறையில் இந்நிகழ்வை நிகழ்த்தினர்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாக நவம்பர் 15 காலை 8:15 மணிக்கு கல்லூரிக் கனவுகளோடு மஞ்சள் கடவையில் பாடசாலையை நோக்கி கடந்த மாணவி மதுசாளினி திருவாசகம் (17) பாதசாரிகள் கடக்கின்ற கடவையிலேயே வாகன விபத்தில் கொல்லப்பட்டாள். அப்பதின்ம வயது மாணவியின் நினைவாக விபத்து நடந்த அந்த இடத்தில் லிற்றில் எய்ட் மாணவர்கள் இந்த விழிப்புணவு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சியில் ஊற்றுப்புலம் கிராமப் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கற்று சிறந்த பேறுபேறுகளைப் பெற்ற மூன்று மாணவிகள் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு உயர்தரம் கற்க அனுமதிபெற வந்த போதே இந்த மோசமான விபத்து நிகழ்ந்தது. தனது மகளை விறகுவெட்டி விற்ற பணத்தில் படிக்க வைத்த தந்தையின் தலையில் பேரிடி.

இலங்கையின் வீதிகள் மரண வீதிகளாகிக் கொண்டிருக்கின்றது என உலக சுகாதார நிறுவன புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் வீதிகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 10 மரணங்கள் வரை சம்பவிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. 2020ம் ஆண்டில் இல்கையின் வீதிகளில் 3590 பேர் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். தெற்காசியாவிலேயே இலங்கையின் வீதிகளே ஆபத்தானவையாக உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது. இலங்கையில் ஒரு லட்சம் பேருக்கு 17 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை ஈட்டக் கூடிய வயதுடையோராகவும் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடியையும் சந்திக்கின்றனர்.

காண்டீபன் ஜெகநாதன் (44) விபத்தினால் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஓகஸ்ட் 8இல் மரணமடைந்தார். இளம் குடும்பத்தவரான ஒரு குழந்தையின் தந்தையான காண்டிபன் வாகரை டிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர். ஓகஸ்ட் 2 இல் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது மட்டக்களப்பு மாங்கேணி பகுதியில் விபத்துக்கு உள்ளானார்.

காண்டீபனின் மறைவு அக்குடும்பத்தின் எதிர்காலத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் ஜயமில்லை. வீபத்துக்களினால் உயிரிழந்த வறுமைப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி கண்டுள்ளதுடன் அவர்களில் மூன்றில் இரு பங்கினர் கடன்வாங்கி வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

2019யைக் காட்டிலும் 2020இல் இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2019இல் 2840 ஆக இருந்து விபத்து மரணங்கள் 2020இல் 3590 ஆகா 26வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் பாதிக்கப்படுபவர்களில் 70 வீதமானவர்கள் பொருளாதார ரீதியாக சிக்கனமான போக்குவரத்தை பயன்படுத்துபவர்களாகவே உள்ளனர். விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் 50 வீதமானவர்கள் இருசக்கர அல்லது முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள். வீதி விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் பாதசாரிகள் மூன்றில் ஒரு பங்கினர் பாதசாரிகள். மேலும் 25,000 பேர்வரை விபத்துக்களில் காயமுறுகின்றனர். இலங்கையில் யுத்தத்திற்குப் பின் உடல் ஊனத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக வீதி விபத்துக்கள் உள்ளன.

லண்டன் சரேயில் வசிக்கின்ற முருகையா சங்கரப்பிள்ளை 2014 இல் தாயகத்திற்குச் சென்றிருந்த போது வீதியோரமாக நடந்த சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்தர் மோதியதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டுமூன்று இடத்தில் என்பு முறிவு ஏற்ப்பட்டது. அவர் யாழ் நொதேர்ன் மருத்துவமனையில் பத்து நாட்கள் இருந்து பலத்த கஸடங்களுக்கு மத்தியில் பிரித்தானியா திரும்பினார். டீப் வெயின் துரொம்போசிஸ் என்ற இதய – குருதி அழுத்த நோயுடன் இரத்தம் கசிய கசியவே லண்டன் திரும்பி உடன் லண்டன் கிஹ்ஸ்ரன் மருத்துவமனையிலும் பின் கிஹ் ஜோர்ஜ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் சிகிச்சையளிக்கப்பட்டு அடுத்த 12 மாதங்கள் வீட்டில் வைத்து மருத்துவ தாதி ஒருவர் சென்று பார்த்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் முற்றாக குணமடைய மூன்று ஆண்டுகள் எடுத்தது. இச்சம்பவம் ஊரில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்டு இருந்தால் அவர் மூன்று மாதங்களுக்குள் உயிரிழந்து இருப்பார் என்றார் முருகையா. அதிஸ்ரவசமாக உயிர் தப்பி இருந்தால் உடல் ஊனமடைந்திருக்க வேண்டி வந்திருப்பதுடன் பொருளாதார ரீதியிலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்.

தெருக்களில் வாகனங்களின் அதிகரிப்பு (கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்து இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.)இ பராமரிப்பற்ற அல்லது பாராமரிப்பு குறைந்த வீதிகள்இ வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்படுத்தல்களில் காட்டப்படும் அசிரத்தைஇ வீதிக் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படாமைஇ பொதுப் போக்குவரத்து வளர்த்தெடுக்கப்படாமை என்பன வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிடும் இவ்விபத்துக்கள் பல்லாயிரம் குடும்பங்களை உருக்குலைய வைக்கின்றது. அவர்களுடைய கனவுகளை வண்டிச் சக்கரத்தில் நசித்துவிடுகின்றது. வேகம் ஒரு போதும் விவேகமானதல்ல. உயிரினும் மேலானது எதுவுமில்லை. இன்னொரு உயிரைப் பறிக்கின்ற, எம்முயிரை பறிக்கின்ற வேகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். வேகமாகச் சென்று நாம் எதனையும் சாதித்துவிடுவதில்லை. ஆகையால் விவேகத்துடன் நிதானத்துடன் வாகனத்தை ஓட்டுவோம்.

சமூகப்போராளி வ.சிவஜோதியின் நினைவாக “சிவஜோதி எனும் ஆளுமை” – என்னும் நினைவேடு வெளியீடு! 

சமூகப்போராளி வ.சிவஜோதியின் நினைவாக “சிவஜோதி எனும் ஆளுமை” – என்னும் நினைவேடு வெளியீடு!

சமூகப் போராளி வயிதீஸ்வரன் சிவஜோதியின் நினைவு நிகழ்வு இன்று [ஞாயிறு மார்ச் 7ம் திகதி] இடம்பெற்றது.

கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘மக்கள் சிந்தனைக் கழகமும் லிற்றில் எய்ட் அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

அமரர் சிவஜோதி மக்கள் சிந்தனைக் கழகத்தின் உருவாக்கத்தில் சிவஜோதி முக்கிய பங்கெடுத்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவஜோதி 2017 முதல் லிற்றில் எய்ட் அமைப்பின் இணைப்பாளராகப் பணியாற்றி அதன் முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்தவர். இன்று எல்லோர் மனங்களிலும் சமூகப்போராளியாக ஒரு முன்ணுதாரணமாக வாழ்கின்றார்.

இந்நிகழ்வில் ‘சிவஜோதி எனும் ஆளுமை…’ என்ற தலைப்பிலான சிவஜோதியின் வாழ்க்கை மற்றும் சமூகப் போராட்டத்தை பற்றிய நினைவுகளைத் தாங்கிய நூல்  வெளியிடப்பட்டது. இந்த நினைவு நூலினை சமூகப்போராளி சிவஜோதியின் மனைவியான ஹம்சாகௌரி சிவஜோதி அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது

இந்நூலுக்கான பதிப்பு அனுசரணையை யா. விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் பொறுப்பேற்றிருந்ததுடன் இந்நூலை லிற்றில் எய்ட் நிறுவனம் சார்பாக சமூகப்போராளி சிவஜோதியின் மனைவியான ஹம்சாகௌரி சிவஜோதி அவர்கள் வெெளியிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் சமூகசெயற்பாட்டாளர்கள், பாடசாலை அதிபர்கள், கலை-இலக்கிய செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் லிட்டில் எய்ட் நிறுவனத்தின் உறுப்பினர்கள், அமரர் சிவஜோதியின் பாடசாலை நண்பர்கள்,  அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

சிவஜோதி எனும் ஆளுமை… நூலின் இணைப்பு:

ஆளுமை பற்றி…

‘சிவஜோதி எனும் ஆளுமை…’ ஒரு ஆளுமையாக எண்ணப்படுவதற்கு முதற்காரணம் அவ்வாளுமை தான் சார்ந்த சமூகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கமே. இன்றைய காலகட்டத்தில் உலகத் தலைவர்களே கோமாளிகளாக, பொறுப்பற்றவர்களாக, வினைத்திறனற்றவர்களாக, ஏன், மோசடியாளர்களாகவும், பாதகம் செய்பவர்களாகவும் இருப்பதால் ஆளுமைகளை வரலாற்றில் தான் தேட வேண்டியுள்ளது. கீழைத்தேச நாகரிகத்தின் – இந்தியாவின் மோடியில் இருந்து, மேலைத்தேச நாகரீகத்தின் – அமெரிக்காவின் ட்ரம் வரை, இவர்களிடம் இருந்து எதைத்தான் நாளைய தலைவர்கள் கற்றுக் கொள்வது? இம்மண்ணில் பிறக்காத உயிரின் (pசழ டகைந) உரிமைக்காகப் போராடும் அமெரிக்கர்கள் பள்ளிகளில், கல்லூரிகளில் கொல்லப்படும் மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற, துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்துவதற்கு கூடத் தயாரில்லை. பொறுப்பற்ற இந்த பொதுப்புத்தி மனிதர்களை நாம் ஆளுமைகளாகக் கொள்ள முடியாது.
உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள் பட்டினியில் வாடுகிறார்கள். பள்ளிச் சிறுமிகள் மாதவிடாய் அங்கிகளை வாங்குவதற்கு வசதியில்லாததால் பாடசாலைக்குச் செல்வதில்லை. ஆனால் பிரித்தானிய அரசு ஆயதத் தளபாடங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து உள்ளது.

இன்று வல்லரசுகள் வைத்துள்ள அதிநவீன ஆயுதங்களால் ஒரு கொரோனா வைரஸைக் கூட சுட்டு வீழ்த்திவிட முடியாது. ஆனால் இந்த நவீன அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவும் பாதுகாக்கவும் இந்த வல்லரசுகள் பல பில்லியன் டொலர்களைச் செலவிட வேண்டியுள்ளது. ஆனால் மருத்துவர்களையும் தாதிகளையும் உருவாக்குவதற்கு, அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகளை வழங்குவதற்கும் கூட இந்த உலகத் தலைவர்கள் தயாரில்லை.

இந்தக் கொரோனா தாக்கத்தினால் 270 மில்லியன் மக்களின் ஒரு நேர உணவே கேள்விக்குறியாகி இருக்க, 2200 பில்லியனெர்கள் 2020 ஏப்ரல் முதல் 2020 ஜூலை வரையான நான்கு மாதங்களில் 2.7 ரில்லியன் டொலர்களைச் சம்பாதித்து உள்ளனர். இந்த சம்பாத்தியத்தில் வெறும் 20 பில்லியன் டொலர்களை வழங்கினால் அந்த 270 மில்லியன் மக்களின் வறுமையைப் போக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள்.
அரசுகளும் அரசுத் தலைவர்களும் செய்ய முடியாத, செய்ய விரும்பாத விடயங்களை தனிநபர்கள் தங்கள் தோள்களில் சுமக்கின்றனர். சமூகம் என்ற கட்டமைப்பு ஒன்றில்லை, அவரவர் தங்கள் தங்கள் நன்மைகருதிச் செயற்பட வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் தன்னலம்சார்ந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பு; தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. சமூகம் என்பதன் அவசியம் இன்று உலகெங்கும் உணரப்படுகின்றது. இந்த சமூகத்தில் சராசரி மனிதர்கள் ஆற்றுகின்ற பங்கின் முக்கியத்துவம் உணர வைக்கப்பட்டுள்ளது.

பள்ளியில், கல்லூரியில், பல்கலையில் உயர்புள்ளி பெற்றவர்கள் எல்லாம் சமூகத்தைவிட்டு ஒதுங்க, சராசரியானவர்களே சமூகத்தின் சுமைகளைத் தங்கள் தோள்களில் சுமந்தனர். அவ்வாறு சுமந்ததனாலும் அந்த சமூகத்திற்கு வழிகாட்டியதனாலுமே நாங்கள் இத்தன்னலமற்ற மனிதர்களை ஆளுமைகளாக கணிக்கின்றோம். அவ்வாறான ஆளுமைகளே மக்களோடு மக்களாக நின்று அவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்கின்றனர். அவ்வாறான ஒரு ஆளுமையே இந்த ‘சிவஜோதி எனும் ஆளுமை…’

சிவஜோதி தனது 49 ஆண்டுகால குறுகிய வாழ்க்கைக் காலத்தில் தனது பன்முக ஆளுமையை பல கோணங்களில் வெளிப்படுத்தி உள்ளார். கலை, இலக்கியம், நாடகம், கல்வி, சமூக செயற்பாடுகள் என சிவஜோதி பதித்த தடங்கள் குறிப்பிடத்தக்கன. இத்தடங்களைப் பதிப்பதற்கு சாதி, மத, இன எல்லைகள் எதுவும் தடையாக இருக்கவில்லை. இந்த எல்லைகளைத் தாண்டி மக்களின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் சிவஜோதி பயணித்தது குறிப்பிடத்தக்கது.

சிவஜோதி என்னும் ஒரு சமூகப்போராளி !

லிற்றில் எய்ட் இன் ஒரு தூணாக இருந்து சமூக முன்னேற்றத்திற்காகப் போராடி வந்த சிவஜோதியின் இழப்பு எமது அமைப்பிற்கும் எமது சமூகத்திற்கும் பெரும் இழப்பு! அவருடைய சமூக போராட்டத்தையும் சமூகப் பணிகளையும் முன்னெடுப்பதே நாங்கள் அவருக்குச் செய்யக்கூடிய மிகச் சிறந்த அஞ்சலி.
ஒரு மிகச் சிறந்த தோழனை இழந்து தவிக்கின்றோம். சாதி மத பேதம் கடந்து மனிதத்தை நேசித்த ஒரு மனிதன். மனிதருள் மாணிக்கம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்புத் தமிழ்ச்சங்கம், கிளிநொச்சி கலை இலக்கிய நண்பர் வட்டம், மக்கள் சிந்தனைக்களம் – கிளிநொச்சி, நூலகம், இலக்கியச் சந்திப்புகள் ஆகியவற்றோடு இணைந்து
பங்காற்றிய சிவஜோதி, நல்லதொரு நாடகக் கலைஞர். யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் பல நாடகங்களில் நடித்தவர். தினகரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர்.
இறுதியாக கிளிநொச்சியில் உள்ள Little Aid பொது
அமைப்பின் இலவசக் கணினிக் கல்வி மையத்தின் நிர்வாக இயக்குநராகச் செயற்பட்டார்.
சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவஜோதியின் இறுதி வணக்க நிகழ்வுகள் சுழிபுரத்தில் இன்று (31.12.2020) வியாழக்கிழமை நடைபெறுகிறது.
Image may contain: 1 person, text that says "சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வாழ்ந்து காட்டிய சமூகப் போராளி வி.சிவஜோதி அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் அமரர் வைத்தீஸ்வரன் சிவஜோதி தோற்றம் 1971.11.18 மறைவு 2020.12.30 அவரது பிரிவால் வாடும் துணைவி யார், உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். லிற்றில் எய்ட் கிளிநொச்சி"

வடக்கு – கிழக்கு எதிர்காலக் கல்விக்கு 22 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50000 வரையான நூல்கள் – லிற்றில் எய்ட்!

மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கல்வியில் வீழ்ச்சியடைந்த தமிழ் சமூகத்தை மீண்டும் மேன்நிலைப்படுத்த; லிற்றில் எய்ட் பல்வேறு கல்வி நடவடிக்கைகளிலும் மாணவர்களின் ஆளுமை விருத்தியிலும் மிகக் கவனம் எடுத்து வருகின்றது. அதன் ஒரு முக்கிய நகர்வாக இன்று அதிகாலை 11,000 கிலோ கிராம் நிறை கொண்ட 50,000 வரையான சிறுவர்களுக்கான ஆங்கில நூல்கள் லிற்றில் எய்ட் நிறுவனத்தைச் சென்றடைந்தது. இந்நூல்களின் இலங்கைச் சந்தைப் பெறுமதி 22 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடபடுகின்றது. ஸ்கொட்லாந்தில் உள்ள புக் அப்ரோட் என்ற சர்வதேச நிறுவனத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாகச் செயற்பட்டு வரும் லிற்றில் எயட், காலத்திற்குக் காலம் தமிழ் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் நூலகங்களுக்கு சிறுவர்களுக்கானபல்வேறு துறைசார்ந்த ஆங்கில நூல்களை அனுப்பி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இன்று கிளிநொச்சியயை வந்தடைந்த நூல்கள் தமிழ் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட பாடசாலை மற்றும் நூலகங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

எம் வி ரக்னா என்ற கப்பலில் டிசம்பர் 22இல் இலங்கை வந்தடைந்த நூல்கள் இன்று கிளிநொச்சியில் உள்ள லிற்றில் எய்ட் நிறுவனத்தில் இறக்கப்பட்டது (படங்கள்). 22 ‘பலட்களில்’ கொண்டுவரப்பட்ட நூல்கள் தறகாலிகமாக லிற்றில் எய்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் துளசிகன் மேற்பார்வையில் இறக்கப்பட்டது, வடக்கில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்துவரும் சிறகுகள் அமைப்பினர் லிற்றில் எய்ட் நிறுவனத்தோடு கரம்கோர்த்து இந்தப் பணிகளில் ஈடுபட்டனர். நடுநிசியில் மழையயையும் பொருட்படுத்தாமல் நூல்கள் பத்திரமாக லிற்றில் எய்ட் நிறுவன மண்டபத்தில் இறக்கப்பட்டது.

இப்பணிகளில் லிற்றில் எய்ட் அறங்காவல் சபை உறுப்பினர்கள் குகன், தயாளன் ஆகியோரும் ஈடுபட்டு இருந்தனர். தமிழ் பகுதிகளில் நூல்களும் நூலகங்களும் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் ஈடுபாடு இல்லாமல் இல்லை. 2012இல் நூலகவியலாளர் என் செல்வராஜா லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் ஆகியோர் இஸ்கொட்லாந்திற்கு நேரடியாகச் சென்று அவ்வமைப்பினருடன் இறுக்கமான உறவை ஏற்படுத்தி இருந்தோம். அதன் பயனாகவே இவை சாத்தியமாகி வருகின்றது. இந்நூல்களை சேகரித்து கொழும்புத்துறைமுகம் வரை அனுப்பி வைப்பதற்கு ஏற்பட்ட பத்து இலட்சம் ரூபாய்கள் வரையான செலவை புக் அப்ரோட்டே பொறுப்பேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு சுங்கத் திணைக்களத்தில் ‘கிளியரன்ஸ்’ அனுமதி பெற்று லிற்றில் எய்ட் நிறுவனத்திற்கு இவ்வளவு தொகையான நூல்களைக் கொண்டு சேர்ப்பது லிற்றில் எய்ட் பொறுப்பாக இருந்தது, அதற்கான நிதியயை சேகரிப்பதில் லிற்றில் எய்ட் தலைவர் என் கதிர் செயலாளர் என் சுகேந்திரன் ஆகியோருடைய உழைப்பு குறிப்பிடத்தக்கது.

நல்ல நூல்கள், நல்ல நண்பர்கள்!
வாசிப்பதால், மனிதன் பூரணமடைகின்றான்!!
ஆகவே வாசிப்பை நேசிப்போம்!!!

லிற்றில் எய்ட்.