செய்திகள்

செய்திகள்

செய்திகள்

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்கள் மூன்று மாத காலத்துக்குள் மீள்குடியேற்றம்

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சகல மக்களையும் எதிர்வரும் மூன்று மாத காலத்தில் மீள்குடியேற் றுவதுடன் மீள் குடியேற்ற பிரதேசங்களின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை துரிதமாக மேற்கொள்வதாகவும் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

துரித மீள்குடியேற்றம் தொடர்பான விசேட உயர்மட்ட மாநாடு நேற்று வவுனியாவில் நடைபெற்றது. அமைச்சர்கள் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ள இம் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் அதற்குரிய நடவடிக் கைகளைத் துரிதப்படுத்துமாறும் சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மீள் குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று நேற்று வன்னிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தது. இக் குழு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான தேவைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன் இவற்றை முறையாகச் செயற்படுத்தும் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு ஒன்றையும் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடத்தியுள்ளது.

இம்மாநாட்டில் அமைச்சர்கள் மில்றோய் பெர்னாண்டோ, ரிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வன்னி மாவட்ட எம். பி. நூர்தீன் மசூர், வவுனியா கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள், வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர், திணைக்களத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வன்னி மாவட்ட மக்களை துரிதமாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது சம்பந்தமாக இம் மாநாட்டில் முக்கிய கவனமெடுக்கப்பட்டுள்ளது.

மீள் குடியேற்றம் இடம்பெறும் பிரதேசங்களின் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை மூன்று மாத காலத்திற்குள் மீள்குடியேற்றுவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் பணிப்புரைகளை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ மூன்று மாத காலத்தில் சகல மக்களையும் மீளக் குடியமர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அதற்கான நிதியினை அரசு ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுதுதல், மீள் குடியேற்றம் தொடர்பில் 2010ம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்தும் இம் மாநாட்டின் போது ஆராயப் பட்டுள்ளதுடன் மீள் குடியேற்றப்படும் மக்களுக்கான ஆரம்ப கொடுப்பனவுகள், வீடுகளை அமைப்பதற்கு வழங்க வேண்டிய உதவிகள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் பணிப்புரைகளை விடுத்துள்ளனர். செட்டிக்குளம் பிரதேச மக்களின் சுகாதார, பாதுகாப்பு சம்பந்தமாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன் சகல குறைபாடுகளையும் துரிதமாக நிவர்த்திக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மில்ரோய் உறுதியளித்தார்.

இம் மாநாட்டின் பின் அமைச்சர்கள் மடுத் திருத்தலதிற்கும் விஜயம் செய்ததுடன் அதனை அண்டிய பிரதேசங்களின் நிலைமைகளையும் நேரில் பார்வை யிட்டுள்ளனர்.

ஈழத்துத் தமிழ்நூல்களின் கண்காட்சியும் விற்பனையும் : என்.செல்வராஜா (நூலகவியலாளர்)

scan0004.jpgநூல்தேட்டம் வாயிலாக ஈழத்துத் தமிழ் நூல்களை பதிவுசெய்யும் எனது தொடர் பணியின் ஓரங்கமாக அண்மையில் இலங்கைக்கு விஜயம்செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பிற நூலகங்களிலும் ஏழாவது தொகுதிக்கான நூல்களை தேடிப்பதிவுசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அவ்வேளையில் ஈழத்துத் தமிழ்ப் பதிப்பகங்கள் சிலவற்றுடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தேன். அவர்களின் வேண்டுகோளின்பேரில் ஒரு கலந்துரையாடலும் ஒழுங்குசெய்யப்பட்டது.
 
அதில் ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் தமது வெளியீடுகள் புகலிடத்தைச் சென்றடையும் வாய்ப்பு இல்லாமை பற்றி குறிப்பிட்டார்கள். ஈழத்தின் போர்ச்சூழலால் எமது மக்களிடையே வாசிப்புக் கலாச்சாரம் அதள பாதாளத்தை நோக்கிச் சென்றுவிட்ட நிலையை அவர்கள் புள்ளிவிபரங்களுடன் குறிப்பிட்டார்கள். தாயகத்தில் மாத்திரம் நிலைபெற்ற விடயம் அல்ல இது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒட்டுமொத்த ஈழத்துத் தமிழ் இனத்தையும் பாதிக்கும் விடயம்.
 
தரமான புத்தக விற்பனையாளர்கள் இல்லாத நிலையில் தனி மனித முயற்சியாகவாவது ஈழத்துத் தமிழ் நூல்களை புலம்பெயர்ந்த வாசகர்களிடம் எடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பொன்றையும் பரீட்சார்த்தமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.
 
இதன் முதற்கட்டமாக லண்டனில் தேர்ந்தெடுத்த ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி அவர்களின் உதவியுடன் இலங்கைத் தமிழ் நூல்களையும் புகலிடத்து வாசகர் விரும்பும் நூல்களையும் லண்டனுக்கு வரவழைத்து விநியோகிக்கும் நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு வருகின்றேன்.
 
அவ்வப்போது சிறிய புத்தக விற்பனை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதன்மூலம் ஈழத்து நூல்களை ஆர்வமுள்ள வாசகர்களிடம் சேர்ப்பிப்பது மற்றொரு முயற்சியாகும்.
 
இவ்வகையில் எதிர்வரும் ஜுன் 5ம் திகதி ஊடகவியலாளர் அ.மயூரனின் இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை என்ற நூல் வெளியீட்டு நிகழ்வின்போது ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் (London) சிறியதொரு நூல் கண்காட்சியும் விற்பனையும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
 
பிற்பகல் 3.00மணியிலிருந்து நூல்வெளியீட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகும்வரை இவ்விற்பனை இடம்பெறும். இந்நிகழ்வுக்காக கொழும்பிலிருந்து சேமமடு பொத்தகசாலையினரும் குமரன் புத்தக இல்லமும் தத்தமது அண்மைக்கால படைப்புக்களை அனுப்பிவைத்திருக்கிறார்கள். பல்துறைசார் நூல்கள் கொண்ட இத்தொகுதியில்  இருந்து நீங்களும் சில நூல்களைத் தேர்வுசெய்து கொள்வனவு செய்வீர்கள் என்று மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றேன்.
 
இது எவ்வித லாபநோக்கமும் இன்றி இடம்பெறும் ஒரு நிகழ்வு. நூலில் குறிப்பிடப்பட்ட இலங்கை விலையுடன் அதற்கான Air Fright செலவையும் சேர்த்த ஒரு தொகையே புத்தகத்தின் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
ஈழத்தின் அருகிவரும் புத்தக வெளியீட்டை புத்துயிர்பெறச் செய்யும் நோக்கிலும் புகலிடத்தில் ஒரு வாசிப்புக் கலாச்சாரம் உருவாகவும் இங்குள்ள வாசகர் வட்டங்களும் இலக்கிய வட்ட ஆர்வலர்களும் தமிழ்ப் பள்ளிகளும் தயவுசெய்து முன்வாருங்கள். உங்கள் வட்டத்தினருக்கும் புதிய நூல்களை அறிமுகப்படுத்த முயற்சிசெய்யுங்கள்
 
ஜுன் 5ம் திகதி ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் மாலை மூன்று மணியிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரமாவது அங்கு காட்சிக்கு வைக்கப்படும் புதிய நூல்களை பார்வையிட்டு பெற்று குடும்ப நூலகங்களை உருவாக்க உதவுங்கள்.
 
அன்புடன்
என்.செல்வராஜா
24.05.2010

இந்திய அரசுடன் பேச்சுநடத்த தீர்மானம்

இந்திய மீனவர்கள் இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்காக இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்த கடற்றொழில் மீன்பிடி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்திய கடல் எல்லைக்குச் செல்லும் மீன்வர்கள் இந்திய படையினரால் கைதாவது அடிக்கடி இடம்பெறுவதால் இது தொடர்பில் நிரந்தர தீர்வு காண உள்ளதாக மீன்பிடி அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இது தவிர இந்திய இலங்கை கடல் எல்லையை அறியக்கூடிய தன்னியக்க சமிக்ஞை முறையொன்றை அறிமுகப்படுத்தவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சட்ட விரோதமாக இந்திய கடல் எல்லைக்கு செல்வதை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை உயர்மட்டக் குழுவொன்று விரைவில் இந்தியா செல்ல உள்ளதாகவும் அவர் கூறினார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் நூறு (100) பேருக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

ஆடை இயந்திர தொழிற்பாட்டாளர்கள் என்ற அடிப்படையில் இந்த நூறு பேரும் எதிர்வரும் 31ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இரத்மலானையிலுள்ள ட்ரைஸ்டார் அபரல்ஸ் நிறுவனத்துடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்களிலிருந்து ஆடை இயந்திர துறையில் பயிற்சி பெற்ற நூறு பேர் இதற்காக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருபவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய பின்னர் தனியார் துறையில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். தற்போது வழங்கப்பட வுள்ள தொழில் வாய்ப்பு தொடர்பாக குறித்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரே தொழில் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 ஆயிரம் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்படவுள்ளனர். – புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க

கைது செய்யப்பட்டுள்ள 11 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களில் சுமார் 8 ஆயிரம் பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இவர்களுக்கு தொழில் பயிற்சிகள், தகவல் தொழிலநுட்பக் கல்வி, ஆங்கில மொழி அறிவு, ஆகியவற்றைப் போதித்து கொடுத்துள்ளதாகவும், யுத்தத்தின் இறுதி நாட்களில் இப் பதினோராயிரம் புலி உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மூவாயிரம் பேர் வரையிலானோர் தீவிரமான புலிகள் எனவும், எனையோர் விரைவில் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் 20 ‘சோடிகளுக்கு’ எதிர்வரும் யூன் மாதம் திருமணம் செய்து வைக்கப்படவுள்ளதாகவும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அவர்களுடைய உறவுகள் யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே ஏற்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கிடையே வாய்மொழி உறுதிப்பாடு மட்டும் இருந்ததாகவும், சட்டபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் அவர்களில் அநேகமானோர் திருமணம் செய்து கொள்ள விரும்பவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக அமுல் நடத்துமாறு யாழ். அரச அதிபர் பொலிஸாரிடம் கேட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக அமுல் நடத்துவதுடன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக செயற்படுமாறு பொலிஸாரிடம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே.கணேஸ் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ். சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி டி சில்வா, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மதேவ ஆகியோரை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்து கலந்துரையாடிய போது யாழ்.அரச அதிபர் பொலிஸாருக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் சகலரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல்,தலைக் கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்துவது, வயது குறைந்தவர்கள் வாகனம் செலுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போக்குவரத்து விதிகளை சகல சாரதிகளும் ஒரே மாதிரியாக பின்பற்றும் வகையில் பொலிஸார் நடந்து கொள்ள வேண்டும். யாழ்.நகர வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளை யாழ்.மாநகரசபையுடன் கலந்துரையாடி அமுல் படுத்தப்படவேண்டும். யாழ மாவட்டத்திலுள்ள சட்டவிரோத மது பாவனையைத் தடுத்து, அதற்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு எட்டு மணி வரையாவது வீதிப் போக்கு வரத்துக் கடமைகளில் பொலிஸார் ஈடுபட வேண்டும். – இவ்வாறு சிரேஸ்ட பொலிஸ் மாஅதிபரிடம் யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, தற்போது யாழ்.மாவட்டத்தில் வீதிப்போக்குவரத்து நடவடிக்கைகளில் அதிகளவான பொலிஸார் ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது.  கடந்த சில காலமாக யாழ்.குடாநாட்டில் நடைபெற்று வந்த கடத்தல் மற்றும், குற்றச் செயல்களும் அண்மைய சில தினங்களாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மீளக்குடியமர்த்தப்பட்டோரை தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இன்று சந்திப்பர் – வன்னிப் பயணம் குறித்து நாளை விரிவான அறிக்கை

sa.jpgகிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப் பட்டிருக்கும் பகுதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று திங்கட்கிழமை சென்று பார்வையிடவுள்ளது.12 எம்.பி.க்கள் கொண்ட குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மல்லாவி, புதுவெட்டுவான், ஐயன்குளம், துணுக்காய் ஆகிய இடங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்தனர்.

அங்கு மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் துன்ப, துயரங்களையும் தேவைகள், குறைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக யாழ்.மாவட்ட எம்.பி.மாவைசேனாதிராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தார்.

முறையாக முன் அனுமதி பெறாததனாலேயே கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு – பிரசாத் சமரசிங்க

prasad.jpgசெட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களுக்குள் செல்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறையாக முன்அனுமதி பெறாததன் காரணமாகவே அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

“நிவாரணக் கிராமங்களுக்குள் செல் வதற்கென ஒரு நடைமுறையிருக்கிறது. அதன்படி, பாதுகாப்புத் தரப்பில் அனுமதி பெற்றால் எவ்வித சிரமமுமின்றி முகாமுக்குள் உட்செல்லமுடியும்” எனவும் இராணுவ பேச்சாளர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பாதுகாப்பு அமைச்சிடம் உரிய முறையில் முன்அனுமதியை பெற்றுக்கொள்வார்களாயின் அவர்கள் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான அனுமதியை வழங்குவதில் வேறு எவ்வித பிரச்சினைகளும் இல்லையெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

‘அவர்கள் மீண்டும் உரிய முறையில் விண்ணப்பித்தால் நிவாரணக் கிராமங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என்கிறார் இராணுவப் பேச்சாளர். கூட்டமைப்பைச் சேர்ந்த 12 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் செய்த இந்தக் குழுவினர் அங்கிருந்து ஒட்டுசுட்டான், தண்ணீர் ஊற்று, முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கும் சென்றனர். வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குச் சென்றிருந்த இவர்கள், அங்கே மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் குறை, நிறைகளை கேட்டறிந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களை பார்வையிடு வதற்காக சென்றிருந்தபோது நிவாரணக் கிராமத்துக்குள் செல்வதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அது தொடர்பாக இராணுவப் பேச்சாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாதுகாப்பு அமைச்சிடம் உரிய முறையில் முன் அனுமதி பெறாமை மாத்திரமே இவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான காரணமென குறிப்பிட்ட இராணுவப் பேச் சாளர், இவர்களது வருகை குறித்து ஏற்கனவே அமைச்சுக்கு அறிவித்திருப்பார்களாயின் இதில் எவ்வித சிக் கல்களும் எழுந்திருக்காது எனவும் தெரிவித்தார்.

இடி, மழையுடன் கூடிய காலநிலை தொடரும் – 60 கி. மீ. வேகத்தில் காற்றும் வீசும்

lightning.jpgநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வ துடன் இடியுடன் கடும் காற்றும் வீசக் கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

குறிப்பாக மேல் மாகாணம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக் கிடை மழை பெய்யுமெனவும் மாலையில் மத்திய, ஊவா மாகாணங்களில் கடும் மழை பெய்யுமெனவும் மேற்படி நிலையத் தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் கடும் காற்று வீசுவதுடன் சிலவேளைகளில் 60 கிலோ மீற்றர் கடல் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் தெரிவித்த அவர், கடற்றொழிலில் ஈடுபடுவோர் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியமெனவும் தெரிவித்தார். எவ்வாறெனினும் சூறாவளி இடம்பெற வாய்ப்புகளில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

மீள்குடியேற்ற கிராமங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம் – 1000 மாணவருக்கு துவிச்சக்கர வண்டிகள்

வவுனியாவில் மீள்குடியேற்றம் செய்யப் பட்டிருக்கும் கல்மடு மற்றும் கனகராயன் குளம் பகுதிகளிலுள்ள 570 வீடுகளுக்கு சூரிய சக்தி மூலமான மின்சாரத்தை பெற் றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலேயே இம்மின் வசதி பெற்றுக்கொடுக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். அதன்படி, கல்மடுவிலுள்ள 320 வீடுகளுக்கும் கனகராயன் குளத்திலுள்ள 250 வீடுகளுக்கும் இலவசமாக சூரிய சக்தி மூலமான மின்சாரத்தை வழங்க சீட் நிறு வனம் முன்வந்துள்ளது.

இதேவேளை, மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு வவுனியா விலுள்ள ஆயிரம் பாடசாலை மாணவர்களு க்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டிருப் பதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டினார். அடுத்த வாரமளவில் பாலமோட்டை பகுதியில் 500 குடும்பங்களை மீளக்குடியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.