ஏழாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது. அந்த வகையில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் பேரம் பேசுவதற்கான சக்தியாகவும் மக்கள் மாற்றியமைத்து ஆணை வழங்கியுள்ளனர் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கான நிரந்தரமானதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அரசில் தீர்வு எனும் விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடு இன்றியமையாதது என்பதை வலியுறுத்துகின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சொன்னார். கூட்டமைப்பின் எதிர்கால நோக்கு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அதன் குரல் தமிழ் மக்களுக்காகவே ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. இதனை ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எந்தவொரு அரசாங்கத்தினாலும் நிறைவேற்றப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்ற நிலையில் தொடர்ந்தும் அதே போக்கு கடைப்பிடிக்கப்படுமானால் அது நாட்டின் ஆரோக்கியமான தன்மைக்கு ஏற்றதாக அமையாது.
தற்போது வடக்கின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். மீள்குடியேற்றம் என்பதும் அபிவிருத்தி என்பதும் உண்மைத் தன்மையானதாக அமைய வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கின்றது.
அடுத்ததாக போரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஊனமுற்றவர்களின்பால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தல், போரினால் கணவரை இழந்து தவிக்கும் விதவைகள் மற்றும் அநாதரவாக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையுணர்ந்து ஏற்ற வகையிலான தீர்வுகளை எட்டுதல் மற்றும் தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி இளைஞர் யுவதிகள், அரசியல் கைதிகள் ஆகியோரின் விடுதலை உள்ளிட்ட முதற் கட்டத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம்..
இதற்காக நாம் அரசாங்கத்தை வற்புறுத்தவிருக்கின்றோம். இதற்கு அடுத்த கட்டமாக இருப்பதுதான் எமது உரிமையான அரசியல் தீர்வாகும். தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் அது தொடர்பிலான தமது நிலைப்பாடுகளை தேர்தல்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நிரந்தர அரசியல் தீர்வொன்று அவசியம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் வலியுறுத்தி வந்துள்ளது. அது மட்டுமல்லாது எமது சமூகத்தின் தேவை குறித்து சர்வதேசத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இதனை சர்வதேசமும் உணர்ந்துள்ளது.
எனவே, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேசத்தின் பங்கு முக்கியமானதாகும். வடக்கு கிழக்கு மக்களின் தீர்ப்பின் பிரகாரம் அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது. அதற்காகவே மக்களும் ஆணை வழங்கியுள்ளனர். அது மட்டுமல்லாது நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் நாம் இருக்கின்றோம்.
எனவே அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் தமது பொறுப்பினை தட்டிக் கழிக்க முடியாது.
பிளவுகளே காரணம்
அதேவேளை, கடந்த பாராளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை ஆசனங்கள் குறைவடைந்துள்ளன. இதற்கு எம்மிடையே ஏற்பட்ட பிளவுகளே காரணமாக அமைத்துள்ளன. இது மட்டுமல்லாது மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழ் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதமும் குறைவடைந்து விட்டது. எது எப்படி இருப்பினும் வடக்கு கிழக்கின் தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறைவடைந்தமைக்கு கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களே காரணமாகி விட்டனர்.
இனிவரும் காலங்களில் தவறுகள் உணரப்பட்டு ஓரணியாக ஒரே தலைமைத்துவத்தின்கீழ் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்” என்றார்.
வீரகேசரி நாளேடு 4/12/2010