செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பிரிட்டன் மேலும் ஒரு மில்லியன் பவுண் மனிதாபிமான உதவி

மனிதாபிமான உதவியாக மேலும் ஒரு மில்லியன் பவுண் நிதியை இலங்கைக்கு வழங்குவதாக பிரிட்டன் நேற்று அறிவித்தது. ஏற்கனவே கடந்த 18 மாத காலத்தில் பிரிட்டன் மொத்தம் 12.5 மில்லியன் பவுண் நிதியை மோதலினால் இடம்பெயர்ந்த மக்களின் ஆதரவுக்காக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வன்னியில் நிலக்கண்ணி அகழ்வு நடவடிக்கைகளுக்கும் பிரிட்டன் உதவியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மேலதிக ஒரு மில்லியன் பவுண் நிதி நலிவடைந்த குடும்பங்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மீளப் பெறுவதற்கான தொழில் நுட்ப நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹெய்ன்ஸ் தெரிவித்தார்.

மிலிபான்டின் அறிக்கைக்கு அரசு விரைவில் பதிலளிக்கும் – அமைச்சர் கெஹெலிய அறிவிப்பு

keheliya-rambukwella.jpgநாடாளு மன்ற பொதுத் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் இவ்வேளையில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இலங்கை பற்றி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதால் பிரிட்டனின் செயற்பாடு குறித்து இலங்கைக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் அமைச்சர் நேற்று முன்தினம் வெளியிட்ட இந்த விசேட வீடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நிராகரித்த அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கை அரசாங்கம் புலிகளைத் தோற்கடித்து ஈட்டிக்கொண்ட வெற்றியை பிரிட்டன் புறக்கணிக்க முயற்சி செய்வதாக தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் ரம்புக்வெல்ல இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:

பிரிட்டன் பாரபட்சம் காண்பிக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட காலநேரம் பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது. பிரிட்டன் மிக நீண்ட காலமாக இலங்கையின் மனித உரிமை பேணல் பற்றி மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் வெற்றியை ஒடுக்குவதற்காகவே அவர்கள் இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அமைச்சர் மிலிபான்டின் அறிக்கைக்கு விசேட அரசாங்க தூதுக்குழு ஒன்று விரைவில் பதிலளிக்கும் இவ்வாறு அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

துரையப்பா விளையாட்டரங்கில் திரளான மக்கள்

president.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.

யாழ். வடமராட்சி, தென்மராட்சி மற்றும் வலிகாமம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 437வீடுகள் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்த வீடுகளை உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வைப்பார். வீடுகள் கையளிக்கும் நிகழ்வு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

மீளக் குடியேற்றப்பட்டவர்களுள் மிகவும் வறுமை நிலையிலுள்ளவர்களுக்காகவே விசேடமாக இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் இந்த வீடுகளை தென்பகுதி வர்த்தகர்களின் உதவியுடன் நிர்மாணித்துள்ளனர். வீடுகள் அவரவர் சொந்தக் காணிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வடக்கின் மீள் கட்டுமானப் பணிகள்: 4 இலட்சம் சீமெந்து மூடைகள் இந்தியாவினால் கையளிப்பு

ind.jpgவடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்விடங்களின் மீள் கட்டுமானப் பணிகளுக்கென இந்திய அரசு 200 மில் லியன் ரூபா பெறுமதியான 4 இலட்சம் சீமெந்து மூடைகளை நேற்று கையளித்தது.

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த், தேச நிர்மான, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செய லாளர் டபிள்யூ. கே.கே. குமாரசிறியிடம் சீமெந்து மூடைகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கொழும்பு பேலியாகொடையிலுள்ள அல்ரா டெக் சிமென்ட் லங்கா நிறுவனத்தில் இக் கையளிப்பு நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது. யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வீடு வாசல்களை இழந்தவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

மீளக் குடியமர்த்தப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 சீமெந்து மூடை கள் வீதம் வழங்க தேச நிர்மான அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்திய அரசு ஏற்கனவே 2600 மெற்றிக் தொன் கூரைத் தகடுகளை வழங்கியிருந்தது. அதற்கு மேலதிகமாகவே 20,000 மெற்றிக் தொன் கொண்ட நான்கு இலட்சம் சீமெந்து மூடைகளை வழங்க முன் வந்துள்ளது.

மீளக் குடியமர்த்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு அந்தந்த பகுதி யிலுள்ள பிரதேச செயலாளரின் சிபாரி சுகளுக்கு அமைய சீமெந்து மூடைகள் வழங் கப்படும். இந்திய அரசு இடம் பெயர்ந்த மக்களுக்கு உணவு, உடை மற்றும் சமைய லறை பாத்திரங்கள் என இலங்கை நாணயப்படி 610 மில்லியன் ரூபா பெறுமதி யான பொருட்களையும் முன்பே கையளித் திருந்தது.

மீளக் குடியமர்த்தவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்தியா தொடர்ந்தும் உதவிகளை செய்யும் என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் தெரிவித்தார்.

யாழ் – பூநகரி படகுச் சேவை அடுத்த மாதம் ஆரம்பம்!

poonary.jpgஅரச ஊழியர்கள் பெரும் சிரமமின்றி யாழ் சென்றுவர யாழ்ப்பாணத்துக்கும் பூநகரிக்குமிடையில் படகுச் சேவையொன்று அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து தரை மார்க்கமாக பூநகரிக்கு வந்து சேர குறைந்தது இரண்டரை மணி நேரம் செல்கின்றது. இப்பயணத்தில் ஆனையிரவு பரந்தன், ஜயபுரம், ஆகிய இடங்களைத் தாண்டிவரவே இவ்வளவு நேரம் செல்கின்றது.

எனினும் யாழ். பூநகரி படகுச் சேவை மூலம் நேரத்தை மீதப்படுத்த முடிவதோடு வீண் சிரமங்களையும் குறைக்க முடியும் எனவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்

ஆசிரியர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் மாகாண சபை அதிகாரிகள், போன்றோர் இந்த படகுச் சேவை மூலம் நன்மையடையவுள்ளனர்.

யாழ் மற்றும் பூநகரி மீனவர் சங்கங்களின் ஒத்துழைப்புடன் படகுகள் இச்சேவையிலீடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சிறுவர் போராளிகள், அங்கவீனர்கள்; 1300 பேர் இன்று உறவினரிடம் ஒப்படைப்பு

புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அங்கவீனர் களடங்கிய சுமார் 1300 பேர் இன்று முதலாம் திகதி விடுவிக் கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்படவிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நடைபெறவிருக்கும் இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார். பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி சிறுவர் பேராளிகள் விடுவிக்கப்பட்டு பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே மேலும் ஒரு பகுதி சிறுவர் போராளிகள் இன்று விடுவிக்கப்படுவர்.

வடக்கு மக்களின் நீர்தட்டுப்பாட்டை நீக்க தெற்கிலிருந்து நதி திசை திருப்பும் திட்டம் – ஜனாதிபதி

president.jpgவட பகுதி மக்கள் முகம் கொடுத்துள்ள தண்ணீரிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் நதி திசை திருப்பும் திட்டம் முன்னெடுக்கப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முல்கிரிகலவில் தெரிவித்தார். அதேநேரம் அடுத்த வருடம் முதல் பாடசாலை பாடத்திட்டத்தில் இலங்கையின் வரலாறு உள்ளடக்கப்பட்டு, பாடசாலைகள் தோறும் போதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

‘வேர்ல்ட் விஷன்’ நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் ‘முத்துகா’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முல்கிரிகல, பாலங்கட வெவயில் நிர்மாணித்துள்ள பொது நூலகத்தைத் திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை யாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமக்கு 2500 வருட கால கெளரவமான வரலாறு உள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக துண்டாடப்பட்டிருந்த நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்தியுள்ளோம். இவ்வாறு சிறப்புமிக்க வரலாற்றை இந்நாடு கொண்டிருக்கின்றது.  இருந்தும் அதனைப் பாடசாலைகளில் போதிப்பது ஏற்கனவே சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அடுத்த வருடம் முதல் இலங்கை வரலாறு பாடசாலைப் பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு போதிக்கப்படும்.

நில்வள கங்கை ஹம்பாந்தோட்டைக்குத் திசை திருப்பப்பட்டு இங்கு வாழும் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். அதே நேரம் வட பகுதியிலுள்ள நீர் நிலைகளைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் வரையும் புதிதாக கங்கை யொன்று அமைக்கப்படும்.

சரத் பொன்சேகா தொடர்பான விசாரணைகளுக்கு புதிய குழு நியமனம்

sarath_fonseka-02.jpgஇராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ள புதிதாக மூன்று நீதிபதிகள் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் குழுவின் தலைவராக பணியாற்றுவார் எனவும் தென்பிராந்திய பாதுகாப்பு தலைமையாளர் மேஜர் ஜெனரல் லலித் தோலகல மற்றும் யாழ்ப்பாண படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள் எனவும் தெரிவக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டு வழக்குகளுக்கும் ஒரு குழு நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு விரோதமானது எனச் சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்தே இந்த புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கண்ணிகள் அகற்றும் பணியில் வடக்கில் இராணுவம் தீவிரம் – 1100 இராணுவ பொறியியலாளர், 7 அரச சார்பற்ற நிறுவனங்கள் முழுமையாக ஈடுபாடு

வடக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளை இராணுவத்தினர் துரிதமாக மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை தமது சொந்த இடங்களில் வெகுவிரைவில் மீளக் குடியமர்த்தும் நோக்குடனேயே கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை இராணுவத்தினர் துரிதப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கென கண்ணிவெடிகளை அகற்றும் துறையில் நிபுணத்துவம் பெற்ற 1100 இராணுவ பொறியியலாளர்களும், 7 அரச சார்பற்ற நிறுவனங்களும் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் ஏ-32 வீதியின் இரண்டு பக்கமும் காரைநகர் ஜெட்டி வரையும், ஏ-9 வீதியின் இரண்டு பக்கமும் சுன்னதீவு முதல் ஆனையிறவு வரையான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சியில் ஆனையிறவு முதல் ஓமந்தை வரையான ஏ-9 வீதியின் இருபக்கமும் ஏ-35 வீதியின் இரு பக்கமும், பி- 69 வீதியின் இருபக்கமும் அகற்றப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள 25 கிராமங்கள் கண்ணிவெடி அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது முல்லைத்தீவின் ஒன்பது கிராமசேவகர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் மாந்தை மேற்கின் 15 கிராம சேவகர் பிரிவுகள், மாந்தை கிழக்கின் 13 கிராம சேவகர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியிலுள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளில் அகற்றும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் சேமமடு கிராம சேவகர் பிரிவில் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சுமார் 80 ஆயிரத்துக்கு உட்பட்ட எண்ணிக்கையிலானவர்களே மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் நோக்குடன் படைவீரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இடியுடன் கூடிய மழை சில தினங்களுக்கு நீடிக்கும்

lightning.jpgநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாலைவேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் இந்தக் காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அவதான நிலையம் பொது மக்களை கேட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் மின்னல் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டதோடு 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இடி மின்னல் வேளைகளில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

இடி, மின்னல் வேளையில் கையடக்கத் தொலைபேசியுடன் தேயிலைத் தோட்டத்தில் இருந்த நபர் ஒருவரை மின்னல் தாக்கியதில் நால்வர் மாத்தளை பகுதியில் காயமடைந்தனர். மின்னல் தாக்கியதில் நேற்று முன்தினம் புசல்லாவ பகுதியில் ஒருவர் இறந்ததோடு மற்றொருவர் காயமடைந்தார்.