செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சவூதியில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்: சவூதி அரேபிய அரசுடன் பேச்சு நடாத்த பைலா தலைமையிலான குழு இன்று பயணம்

சவூதி அரேபியாபில் நிராதரவான நிலையில் இருக்கும் இலங்கையர்களை விரைவில் நாட்டுக்கு திருப்பியழைப்பது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவென பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று சவூதி பயணமாகின்றது.

ஜித்தாவிலுள்ள பாலமொன்றின் கீழ் தமது தொழில் வாய்ப்புக்கள் பறிபோன நிலையில் இலங்கையர்கள் பலர் நிராதரவான நிலையிலிருப்பதாக அண்மையில் வெளிவந்த செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இப்பிரச்சினைக்கு தீர்வுக் காணும் பொருட்டு விசேட குழுவொன்றை நியமித்ததாக பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் ஹரிஸ்சந்திர பட்டகொட, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஜான் ரட்நாயக்க, பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய உள்ளிட்ட குழுவினரே இன்று திங்கட்கிழமை சவூதி அரேபியா புறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழில் வாய்ப்புக்கள் பறிபோன நிலையில் ஜித்தா பாலத்தின் கீழ் கடந்த காலங்களில் நிராதரவான நிலையிலிருந்த 2040 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களை சவூதி அரேபிய அரசாங்கம் 156 மில்லியன் ரூபா செலவில் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இருப்பினும் தற்போது அந்நாட்டு சட்ட விதிமுறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக தொழிலற்ற நிலையில் பாலத்தின் கீழ் இருப்போரை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜித்தாவிலுள்ள பாலத்தின் கீழ் தற்போது சுமார் மூவாயிரம் பேர் வரையிலானோர் தொழில் வாய்ப்பற்ற நிலையில் தங்கியுள்ளனர். இவர்களுள் 250 பேர் இலங்கையர்களாவர். அந்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கமைய விரைவில் இலங்கையர்களை திருப்பியழைப்பது தொடர்பான பேச்சுக்களை இக்குழு மேற்கொள்ளுமெனவும் பணியகத்தின் தலைவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

திருடர்கள் தாக்கியதில் தமிழக வாலிபர் லண்டனில் மரணம்

Mudhu_Kumar_Funeralலண்டன் குரொய்டனில் வாழ்ந்து வந்த சரவணகுமார் செல்லப்பன் (25) என்ற இளைஞர் ஒக்ரோபர் 19ல் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட உடற்காயம் காரணமாக மரணமடைந்தார். இவர் தமிழ்நாடு நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் தனது கல்வியைத் தொடர்வதற்காக லண்டன் வந்திருந்தார். தீபாவளி தினமான ஒக்ரோபர் 17ல் மாலை ஏழு மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் இருந்த வீதியில் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த சரவணகுமார் செல்லப்பன் இனம்தெரியாத சில இளைஞர்களால் தாக்கப்பட்டதாக அதே ஊரைச் சேர்ந்த சரவணகுமாரின் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

தாக்கப்பட்டு வீதியில் வீழ்ந்த சரவணகுமார் செல்லப்பனிடம் இருந்த தொலைபேசி மற்றும் கிறடிட்காட் போன்ற உடமைகள் பறிக்கப்பட்டது என்றும் திருடிச் சென்றவர்கள் வீதியில் நீண்ட நேரமாகக் கதைத்துக் கொண்டிருந்த சரவணகுமார் செல்லப்பனின் பிடரியில் இரும்புக் குற்றியினால் தாக்கிவிட்டு அவரது உடைமைகளைப் பறித்துச் சென்றதாகவும் சரவணகுமாரின் நண்பர் கூறினார்.

வீதியில் வீழ்ந்த சரவணகுமார் செல்லப்பன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு எழுந்து தனது வீட்டுக்குச் சென்று அங்கு நடந்ததை தான் தங்கியிருந்த வீட்டுக்காரர் ராஜனுக்கு தெரிவித்ததாக ராஜனின் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தான் தன்னுடைய நண்பர்களுடன் மேடே மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாகக் கூறிவிட்டு அவருடைய நண்பர்களிடம் சென்றுள்ளார்.

நண்பர்களிடம் நடந்ததைக் கூறி விட்டு தனக்கு பிடரியில் வலி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் மேடே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சரவணகுமார் செல்லப்பனைக் காண்பித்துள்ளனர். சரவணகுமார் செல்லப்பனைப் பார்வையிட்ட மருத்துவர் தாக்குதலினால் ஏற்பட்ட வலியே அது என்று கூறி வலிநிவாரணியை வழங்கியாதாகத் தெரியவருகிறது.

அன்றைய தினம் இரவு சரவணகுமார் தான் தங்கியிருந்த வீட்டில் தங்கவில்லை. தன்னுடைய நண்பர்கள் வீட்டிலேயே தங்கியதாகவும் சரவணகுமார் தங்கியிருந்த வீட்டுக்காரரர் ராஜனின் நண்பர் கூறுகிறார். இரவு படுக்கைக்குச் சென்ற போதும் சரவணகுமார் செல்லப்பனின் வலி குறைந்திருக்கவில்லை என்றும் நண்பர்கள் அடிபட்ட இடத்தில் சுடுநீர் ஒத்தடம் கொடுத்தனர் என்றும் சரவணகுமாரின் நண்பர் தெரிவிக்கின்றார்.

வலியுடன் படுக்கைகுச் சென்ற சரவணகுமார் செல்லப்பன் மறுநாள் 18 ஒக்ரோபர் காலையில் எழுந்திருக்கவில்லை. காலை எழுந்து வேலைக்கு புறம்பட்ட நண்பன் வலியுடன் படுக்கைக்குச் சென்றவன் எப்படி உள்ளான் என்று பார்க்கச் சென்ற போதும் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வடிந்தபடி சரவணகுமார் செல்லப்பன் படுத்திருந்தார். உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்து ரூற்றிங் சென் ஜோர்ஜ் மருத்துவமனைக்கு சரவணகுமார் செல்லப்பன் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு மறுநாள் மதியம் ஒரு மணியளவில் சரவணகுமார் மரணமடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சரவணகுமார் செல்லப்பன் தனது இளம் வயதில் தன்னுயிரை இழந்ததையிட்டு உலகத் தமிழர் இயக்கம் (யுகே) தனது ஆழந்த மனவருத்தத்தை தெரிவித்துள்ளதுடன் இறந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் அவரது மரணச் செய்தியை அறிவித்துள்ளனர். தமிழ்பேசும் நாங்கள் சரவணகுமாரது உடலை பொறுப்பேற்காவிட்டால் கவுன்சில் அனாதையாக கருதி உடலை அடக்கம் செய்வவே வழமை. ஆதலால் சரவணகுமாரின் உடலைப் பொறுப்பேற்று அவரது உறுவினர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சியை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் உலகத் தமிழர் இயக்கம் சார்பில் ஜேக்கப் ரவிபாலன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே விபத்தில் மரணமடைந்த மருத்துவத்தாதி செல்வி மஞ்சுளாவின் உடலையும் உலகத் தமிழர் இயக்கம் அவருடைய பெற்றோருக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனவரி 6ல் விபத்தில் மரணமான தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞரின் உடல் இங்கு உறவினர்கள் இல்லாத நிலையில் ரவர்ஹம்லற் கவுன்சிலால் அனாதையாக் கருதப்பட்டு அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. செப்ரம்பர் 9ல் முத்துக்குமாரின் உடலை கவுன்சிலர் போல் சத்தியநேசன் பொறுப்பேற்று லண்டன் சைவமுன்னேற்றச் சங்க ஐயரின் உதவியுடன் இறுதிக்கிரியைகளை மேற்கொண்டு அஸ்தியை முத்துக்குமாரின் பெற்றோருக்கு அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெறுவதற்கான காரணங்களை விளக்கி ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம்

031109sarathfonseka.jpg12. நவம்பர்.2009.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு,

இலங்கை இராணுவத்தின் படையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான கோரிக்கை.

1.கூட்டுப் படைகளின் தலைமையதிகாரியாக தற்போது பணிபுரியும் ஜெனரல் ஜி.எஸ்.சி.பொன்சேகா ஆகிய நான் 1970 பெப்ரவரி 5 இல் இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்டு 1971 ஜூன் 1 இல் உறுப்பினராக உள்ளீர்க்கப்பட்டேன். 2005 டிசம்பர் 6 இல் மேன்மை தங்கிய ஜனாதிபதியாகிய தாங்கள் என்மீது வைத்த நம்பிக்கையின் பிரகாரம் லெப்டினன்ட் ஜெனரலாக தரம் உயர்த்தப்பட்டு இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டேன். பயங்கரவாதத்தின் அழிவில் நாடு சிக்கியிருந்த வேளையில், அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு வழியாகவோ 25 வருடங்களுக்கு மேலாக வெற்றியை ஈட்டியிருக்காத, ஸ்தம்பித நிலையான காலகட்டத்தில் நான் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டேன்.

2. எனது தலைமைத்துவத்தின் கீழான 3 வருடங்கள் 7 மாதங்களான காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தால் பயங்கரவாத இயக்கத்தை அழிக்க முடிந்தது. அத்துடன், நம்பமுடியாத அளவு தொகையான ஆயுதங்கள், தளபாடங்கள் என்பவற்றையும் கைப்பற்றி விடுதலைப் புலிகளையும் அதன் கொலைகாரத் தலைமைத்துவத்தையும் அழிக்க முடிந்தது. இதனை மேன்மைதங்கிய ஜனாதிபதியான தாங்கள் அறிவீர்கள். இந்த வரலாற்று ரீதியான வெற்றிக்கு இராணுவத்திற்கு தலைமைதாங்குவதற்கு நான் கருவியாக இருந்தேன் என்பதை மிகைப்படுத்திக் கூறவில்லை. நிச்சயமாக மேன்மைதங்கிய ஜனாதிபதியாகிய தங்களின் ஆதரவும் இந்த நடவடிக்கையை நிறைவேற்ற உதவியது. அத்துடன், களத்தில் உள்ள தளபதிகள், இராணுவத்தின் சகல உறுப்பினர்களும் இந்தப் பொதுவான இலக்கை வென்றெடுக்க பணிபுரிந்தனர். எனது தொலைநோக்கு, தலைமைத்துவம் என்பவற்றுடன் இந்த உன்னதமான இலக்கில் வெற்றிகொள்ளப்பட்டது.

3. நாடும் மேன்மைதங்கிய ஜனாதிபதியாகிய தாங்களும் எனது சேவைகளை அடையாளங்கண்டுகொண்ட உண்மையை நான் மெச்சுகிறேன். இதன்மூலம் நான்கு நட்சத்திர ஜெனரலாக இராணுவத்திற்குத் தலைமை தாங்குவதற்கு நான் பதவியுயர்த்தப்பட்டேன். ஆயினும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அதிகளவுக்கு எனக்கு அழுத்தத்தை ஏற்படுத்தின. அவற்றை நான் கீழே இணைத்திருக்கிறேன்.

4. இணைப்பில் குறிப்பிடப்பட்ட விபரங்கள் மற்றும் அதிகமான விடயங்களின் அடிப்படையில் ஜனாதிபதியாகிய தாங்களும் அரசாங்கமும் என்மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக நம்புவதற்கான நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை தாங்கள் நன்கு அறிந்துள்ளீர்கள். 40 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய மிகவும் சிரேஷ்ட அதிகாரியாக நான் உள்ளேன். அத்தகைய நிலையில் தற்போதைய நிலைமையானது எனது கடமைகளை மேலும் தொடர்வதற்கு இடமளிக்கின்றதாக இல்லை. ஆதலால் எனது சேவையை முடிவிற்குக் கொண்டுவந்து 2009 டிசம்பர் 1 முதல் இராணுவத்திலிருந்து ஓய்வுபெறுவதற்கு எனக்கு அனுமதி வழங்கப்படவேண்டுமெனக் கோருகிறேன்.

5. மேலும், ஓய்வுபெற்ற காலத்தில் போதியளவு பாதுகாப்பை எனக்கு வழங்கவேண்டுமெனக் கோருகிறேன். பயிற்சி பெற்ற படைவீரர்கள், போதியளவு பாதுகாப்புடனான (புல்லட் புரூவ்) பொருத்தமான வாகனம், பாதுகாப்பு வாகனங்கள் என்பனவற்றை எனக்கு வழங்குமாறும் கோருகிறேன். விடுதலைப் புலிகளின் இலக்குகளில் அதிக முன்னிலைப்படுத்தப்படுபவர்களில் ஒருவராக நான் இருக்கிறேன். அவர்கள் அதனை நிறைவேற்றுவதற்கு இப்போதும் ஆற்றலுடையவர்களாக உள்ளார்கள் என்ற காரணத்தினால் எனக்குப் போதியளவு பாதுகாப்பை வழங்கவேண்டுமெனக் கோருகிறேன். அத்துடன், முன்னாள் கடற்படைத் தளபதியான டபிள்யு.கே.ஜே.கருணாகொட விற்கு நூற்றுக்கணக்கான ஆட்களும் 6 பாதுகாப்பு வாகனங்களும் ஒரு புல்லட் புரூவ் வாகனமும் வழங்கப்பட்டிருப்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். அத்தகைய ஏற்பாடுகள் எனக்கும் மேற்கொள்ளப்படுமென நான் அனுமானிக்கின்றேன். நான் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் தொடர்பாக தாங்கள் நன்கு அறிவீர்கள். எனவே இதனை பரிசீலனைக்கு எடுத்து இவற்றை வழங்குமாறு கோருகிறேன்.

6. இந்தியாவின் முன்னாள் இராணுவத் தலைமையதிகாரி ஜெனரல் ஏ.எஸ்.வைத்தியாவிற்கு இடம்பெற்ற விடயத்தை இங்கு நான் உதாரணமாக மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ஏ.எஸ்.வைத்தியா 1984 இல் அமிர்தசரஸில் பொற்கோவிலில் சீக்கியர்களுக்கு எதிராக புளூஸ்ரார் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு தலைமைதாங்கியிருந்தார். 1986 இல் ஓய்வுபெற்ற வேளை அவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் ஈட்டிய வெற்றிகளுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டது. அந்தமாதிரியான சம்பவமொன்று எனக்கு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. புலிகளின் தற்கொலைப் படையாளியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது நான் ஏற்கனவே பாரதூரமான காயங்களுக்கு இலக்காகியிருந்தேன். ஆதலால் எனது பாதுகாப்புத் தொடர்பாக தங்கள் மீது நம்பிக்கை வைத்து கோரிக்கைவிடும் நிலைமைக்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்.

7. இராணுவத் தளபதியாக நான் பதவி வகித்த காலத்தில் என்னால் விடுக்கப்பட்ட அறிக்கையை நான் அழுத்தி உரைக்க விரும்புகிறேன். எப்போதுமே நான் தலைமைதாங்க விரும்பவில்லை என்றும் யுத்தத்தில் சண்டையிடும் சுமையை எனக்குப் பின் பதவி வகிப்பவருக்கு விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றும் நான் குறிப்பிட்டிருந்தேன். அதனை நான் நிறைவேற்றியுள்ளேன். பதவியிலிருந்து ஓய்வுபெற வேண்டிய காலத்திற்கும் மேலதிகமாக ஏற்கனவே நான் 4 வருடங்கள் பணியாற்றியிருக்கிறேன். ஆதலால் மேலும் தாமதமின்றி இளைப்பாறுவதற்கு நான் விரும்புகிறேன்.

8. மேன்மைதங்கிய தங்களின் அன்பான பரிசீலனைக்காக இதனை சமர்ப்பிக்கிறேன்.

இணைப்பு ஏ

இராணுவத்திலிருந்து நான் ஓய்வுபெறுவதற்கு பாதிப்பை ஏற்படுத்திய காரணிகள்;

1. விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டதையடுத்து உடனடியாகவே சதிப்புரட்சி ஏற்படும் சாத்தியம் தொடர்பாக பல்வேறு முகவரமைப்புகள் தங்களை தவறாக வழிநடத்திச் சென்றமை இராணுவத் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்ததை விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது. இராணுவம் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வரைக்கும் தலைமைப் பதவியில் இருப்பதற்கு நான் கோரிக்கை விடுத்திருந்தேன். சதிப்புரட்சி தொடர்பான இந்தப் பீதி குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் நன்கு அறிந்துள்ளன.

2. ஒழுக்காற்று விசாரணை நிலுவையிலுள்ள அதிகாரியொருவர் எனக்குப் பின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை நியமிக்குமாறு நான் மேற்கொண்ட சிபார்சுகள் பொருட்படுத்தப்பட்டிருக்கவில்லை. மேஜர் ஜெனரல் சந்திரசிறி தலைமையதிகாரியாகவும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக 3 வருடங்களும் பணியாற்றி உன்னதமான சேவையை ஆற்றியிருந்தவர். இராணுவத்தில் நான் அறிமுகப்படுத்தியிருந்த உயர்மட்டப் பெறுமானங்களை தளம்பலடைய வைப்பதாக இது அமைந்திருந்தது. இந்த விடயம் எனக்கு கசப்பான ஏமாற்றத்தை அளித்தது.

3. கூட்டுப்படைகளின் தலைமையதிகாரியாக என்னை நியமித்தீர்கள். அது சிரேஷ்ட நியமனமாக இருந்தாலும் அடிப்படையில் அதிகாரமற்றதாகும். வெறுமனே பொறுப்புகளை ஒருங்கிணைத்து செயற்படுத்துவதாக அது அமைந்ததுடன், பொதுமக்கள் மத்தியிலும் ஆயுதப்படைகளின் அநேகமான உறுப்பினர்கள் மத்தியிலும் இது தவறான எண்ணத்தை ஏற்படுத்தியது. யுத்தத்தில் வெற்றிபெற்று இரு வாரங்கள் கழிந்த நிலையிலேயே இராணுவத் தளபதி பதவியிலிருந்து வெளியேறுமாறு பாதுகாப்புச் செயலாளர் என்னைத் தூண்டினார். தாங்களும் இரண்டு மாதங்களுக்கிடையில் எனது பொறுப்புகளைக் கையளிக்குமாறு வலியுறுத்தினீர்கள். யுத்தத்தில் தீர்க்கமாகப் போராடியவர்களுக்குத் திறமையான நிர்வாகத்தை வழங்குதல் மற்றும் அவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை சீர்படுத்துதல் போன்ற எனது தார்மீகக்கடப்பாடுகள் என்னிடமிருந்து பறிக்கப்பட்டன.

4. மேலும், எனது நியமனத்திற்கு முன்பாகவே கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிக்கு வழங்கப்படும் அதிகாரம் தொடர்பாக நான் தவறாக வழிநடத்தப்பட்டேன். முன்னரிலும் பார்க்க எனக்கு அதிகளவு பொறுப்புகளும் அதிகாரமும் கிடைக்குமென விளக்கமளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு செயலாளருக்கான தந்திரோபாய விவகாரங்களுக்கான ஆலோசகரால் வழங்கப்பட்ட எனது நியமனக்கடிதத்தில் எனது நியமனமானது வெறுமனே படை சேவைத்துறையுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. முழுமையான கட்டளை அதிகாரம் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அந்தக் கடிதத்தை தங்களுடைய தகவலுக்காக இதில் இணைத்திருக்கிறேன். தலைமைதாங்கும் பொறுப்புகளை எனக்கு வழங்குவதற்கு தாங்களும் அரசாங்கமும் விருப்பமற்றிருக்கும் நிலைமையையே இத்தகைய நடவடிக்கைகள் தெளிவாக வரையறைப்படுத்துகின்றன. அத்துடன், இவை என்மீதான வலுவான அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. யுத்தத்தில் வெற்றிபெற்ற பின் எனக்கு மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விடயமாக இது உள்ளது.

5. படைத்தளபதிகளின் சந்திப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்ட விடயமானது தார்மீகமற்றதாகக் காணப்பட்டது. “முப்படைகளின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிக்கு வழங்கப்பட்டால் அது மிகவும் அபாயகரமானதாக அமையும்%27 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது அடுத்த தரத்தில் உள்ள தளபதிகளின் முன்னிலையில் எனக்கு உண்மையில் மிகவும் அவமதிப்பான விடயமாக அமைந்திருந்தது.

6. 2009 மே 18 இற்குப் பின் இடம்பெற்ற முதலாவது பாதுகாப்பு சபையில் தாங்களும் ஒரு அறிக்கையை விடுத்திருந்தீர்கள். யுத்தம் முடிவடைந்தது எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பின் இடம்பெற்ற பாதுகாப்புச் சபை அமர்வாக அது அமைந்திருந்தது. “மேலும் ஆட்சேர்ப்பு அவசியமற்றது., பலமான இராணுவம் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் அபிப்பிராயம் உள்ளது%27 என்று தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். யுத்த வெற்றியின் பின்னர் திரும்பத் திரும்ப தங்களிடமிருந்து இத்தகைய கருத்தைக் கேட்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உங்களுக்கு சொந்தமான, விசுவாசமான இராணுவத்தின் மீது நீங்கள் அவநம்பிக்கை கொள்கிறீர்களா என நான் தனிப்பட்ட முறையில் கருதினேன். ஒரு வாரத்திற்கு முன்னர்தான் பாரிய, கற்பனை செய்து பார்க்கமுடியாத வெற்றியை இராணுவம் ஈட்டியிருந்தது. நான் இராணுவத் தலைமை பதவியை கையளித்தும் கூட மீண்டும் அந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தீர்கள். இவற்றால் நான் வெறுப்புணர்வடைந்தேன். அவர்கள் மேற்கொண்டிருந்த உன்னதமான தியாகத்தை இத்தகைய கருத்துகள் அவமதிப்பதாக நான் கருதி வெறுப்படைந்திருந்தேன்.

7. தற்போதைய இராணுவத் தளபதி, பதவியை ஏற்றுக்கொண்ட உடனடியாகவே சிரேஷ்ட அதிகாரிகளை இடமாற்ற ஆரம்பித்தார். அவர்கள் யுத்த முயற்சிக்கு எனது தலைமைத்துவத்தின் கீழ் அளப்பரிய பங்களிப்பை மேற்கொண்டவர்கள். அத்துடன், இராணுவத்தின் சேவாவனிதா பிரிவில் எனது மனைவியுடன் இணைந்து பணியாற்றிய கனிஷ்ட அதிகாரிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இது அதிகாரிகளின் விசுவாசத்திற்கு சவாலானது என்பது தெளிவானது. அத்துடன், இராணுவத்தின் அதிகாரிகள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விடயமாகும்.

8. நாட்டுக்கு வெற்றியை ஈட்டித்தந்த இராணுவமானது சதிப்புரட்சியை மேற்கொள்வதாக சந்தேகப்பட்டது மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தும் விடயமாகும். 2009 அக்டோபர் 15 இல் மீண்டும் இந்திய அரசாங்கத்திற்கு விழிப்பூட்டப்பட்டது. தேவையற்ற விதத்தில் அதிகளவு இந்தியப் படையினர் உசார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நடவடிக்கையானது இலங்கை இராணுவம் ஈட்டிய புகழுக்கும் பிரதிமைக்கும் சேறு பூசுவதான நடவடிக்கையாகும். உலகின் பார்வையில் மலாயா அவசரகாலநிலைக்குப் பின்னர் பயங்கரவாதக் குழுவொன்றை தோற்கடித்த ஆற்றல் கொண்ட, தொழில்சார் திறமையுடைய அமைப்பான இலங்கை இராணுவத்தின் புகழை மழுங்கடிப்பதாக இந்த நடவடிக்கை அமைந்திருந்தது. இராணுவத்தின் வரலாற்று வெற்றியை வழிநடத்திச் சென்ற அதன் முன்னாள் தளபதியான என்மீது இலங்கை இராணுவத்தின் விசுவாசம் தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இது அமைந்தது.

9. நாட்டில் நான் இல்லாத 23 அக்டோபர் 2009 தொடக்கம் 05 நவம்பர் 2009 வரை இராணுவத் தலைமையகத்தில் பாரிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் ஏ.எஸ்.கீயூவின் பிரதான நுழைவாயிலினுள்ளும் பாதுகாப்பு அமைச்சுக்கும் நகர்த்தப்பட்டனர். சிங்க ரெஜிமென்ட் படைகளை வாபஸ்பெறுவதற்கான வலியுறுத்தல் விடுக்கப்பட்டது. அவர்கள் என்னுடன் இணைக்கப்பட்டவர்களாக இருந்தனர். அதுவே எனது தாய்ப் படையணி என்பதை நீங்கள் அறிவீர்கள். சிங்க ரெஜிமென்ட் பாதுகாப்பு அமைச்சுக்கு 4 வருடங்களாக பாதுகாப்பை வழங்கிவந்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அபிப்பிராயத்தின் அடிப்படையில் அந்தப் படையினரின் யுத்தத் திறமையானது எவ்வாறு ஒரே இரவில் கைவிடப்பட்டது என்பது ஆச்சரியமான விடயமாகும். ஏ.எஸ். கியூவின் பிரதான நுழைவாசலில் சிங்க ரெஜிமென்டைச் சேர்ந்த போரிடாத நால்வர் வாகன சோதனைக் கடமைக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். 14 ஆயுதம் தரித்த அதிகாரிகளுக்குப் பதிலாக இவர்கள் அங்கு நியமிக்கப்பட்டிருந்தனர். அத்துடன், சிங்க ரெஜிமென்டைச் சேர்ந்த இந்த நால்வரும் கடமையைச் செய்வதைத் தடுப்பதற்காக மேலும் இரு படையணிகள் தருவிக்கப்பட்டிருந்தன. இது சில வெளிநாட்டுத் தூதரகங்கள் உட்பட பொதுமக்கள் மத்தியில் பரிகாசமான நிலையை ஏற்படுத்தியது. எனது ரெஜிமென்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்காக 4 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய படையினரின் விசுவாசத்தை கேள்விக்குறியாக்கும் விடயமாக இது உள்ளது. அத்துடன், மறைமுகமாக என்மீதான அவநம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் இது காணப்பட்டது. அல்லது எனது நடமாட்டங்கள், என்னிடம் வரும் விருந்தாளிகளை கண்காணிப்பதற்காக கரிசனையுள்ளவர்கள் விரும்புகின்றார்களா என்பதாகவும் இது அமைந்திருப்பதுடன் என்மீதான சந்தேகத்தின் வெளிப்பாடாகவும் காணப்பட்டது.

10. பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத் தொகுதிக்கு கஜபா ரெஜிமென்டைச் சேர்ந்த படையினர் பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் தருவிக்கப்பட்டிருந்தனர். இது இராணுவத்தின் மத்தியிலான விசுவாசத்தை பிளவு படுத்துவதாக உள்ளது. அத்துடன், இராணுவம் தற்போது அரசியல் மயமாக்கப்பட்டிருக்கின்றதா என்று நம்புவதற்கான காரணங்களையும் கொண்டதாகக் காணப்படுகிறது.

11. எமது நாட்டின் வரலாற்றை மாற்றியமைப்பதற்கு அரசாங்கத்திற்கு தனிப்பட்ட முறையில் நான் பங்களிப்பை மேற்கொண்டிருந்தபோதிலும் என்னைத் துரோகியாக அடையாளப்படுத்துவதற்கு இட்டுச் செல்லும் வகையில் அரசாங்கத்தின் பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் உட்பட ஆர்வம்கொண்ட தரப்பினரால் வதந்திகளும் செய்திகளும் தரக்குறைவானவிதத்தில் வெளியிடப்பட்டன.

12. நாட்டில் நான் இல்லாத சமயம் பதில் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. இது கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி நியமனமானது அரசாங்கத்திற்கும் தேசிய பாதுகாப்பு சபைக்கும் முக்கியமற்றதாக இருப்பதைப் புலப்படுத்துகிறது. இந்தப் பதவி முக்கியமானதாக இருந்திருந்தால் பதிலுக்கு அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இதன் மூலம் முக்கியமற்ற ஒரு நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது என்ற அபிப்பிராயம் எனக்கு ஏற்பட்டிருந்தது. சாதாரண இராணுவத்தை நான் அதிகபட்ச தொழில்சார் நிபுணத்துவம் கொண்டதாக மாற்றியிருந்தேன். கடந்த இரண்டு மாதங்களில் ஆட்திரட்டல்களிலும் பார்க்க விட்டுவிலகிய உறுப்பினர்களின் தொகை அதிகமாகும்.

13. இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை எனக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தும் விடயமாகும். விடுதலைப் புலிகளின் குரூரத்தனத்திலிருந்து இந்த துரதிர்ஷ்டமான பொதுமக்களை விடுவிப்பதற்கு ஆயிரக்கணக்கான படைவீரர்கள் தங்கள் பெறுமதியான உயிர்களை தியாகம் செய்திருந்தனர். சுதந்திரம், ஜனநாயகமான சூழலில் அந்த மக்கள் வசிப்பதற்காக அவர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர். இன்றுவரை அவர்கள் தொடர்ந்தும் துன்பமான நிலைமையிலேயே வாழ்கின்றனர். அரசாங்கத் தரப்பில் பொருத்தமான திட்டம் இல்லாமையால் இந்த நிலைமையில் அவர்கள் உள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு நாட்டில் எல்லாப் பகுதியிலும் நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். அவர்களுடன் சென்று வாழ்வதற்கான தெரிவை அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டியது அவசியமாகும். அவர்களின் பகுதிகளிலுள்ள கண்ணிவெடிகளை அகற்றுதல் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் வரை அவர்கள் உறவினர்கள், நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

14. எனது தலைமைத்துவத்தின் கீழ் இராணுவம் யுத்தத்தில் வெற்றிபெற்றிருக்கின்றது என்பது நிதர்சனமாகும். ஆனால், தங்களின் அரசாங்கம் இன்னமும் சமாதானத்தை வென்றெடுக்கவில்லை. தமிழ் மக்களின் மனதை வென்றெடுப்பதற்கான தெளிவான கொள்கையில்லை. இது நிச்சயம் வெற்றியை அழித்துவிடும். எதிர்காலத்தில் மற்றொரு புரட்சி ஏற்படுவதற்கு இது வழிசமைத்துவிடும்.

15. யுத்தம் முடிவடைந்து விட்டதால் சமாதானம் முழு நாட்டிற்கும் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. அதேசமயம், ஊழலும் விரயமும் அபரிமிதமான அளவைத் தாண்டியுள்ளன. ஊடக சுதந்திரமும் ஏனைய ஜனநாயக உரிமைகளும் தொடர்ந்து தடுக்கப்பட்டுள்ளன. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இராணுவம் செய்த பல தியாகங்கள் பயனற்றுப் போய்விடக்கூடாது. எமது தாய்நாட்டுக்கு சமாதானத்தையும் சுபீட்சத்தையும் நாம் கொண்டுவந்து புதிய சகாப்தத்தை ஏற்படுத்த வேண்டுமானால் இராணுவம் செய்த தியாகம் வீணாகிப் போகக் கூடாது.

இராணுவ சதிப்புரட்சி அச்சத்தால் தவறாக வழிநடத்தப்பட்ட ஜனாதிபதி – பதவி விலகல் கடிதத்தில் ஜெனரல் பொன்சேகா

இராணுவ சதிப்புரட்சியை ஆரம்பித்து விடக்கூடுமென்ற அச்சத்தினாலேயே தான் ஓரங்கட்டப்பட்டதாக பதவிவிலகல் கடிதத்தில் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தேர்தலில் மோதுவார் என எதிர்பார்க்கப்படும் ஜெனரல் சரத்பொன்சேகா தான் ஓய்வுபெறுவதாக அறிவித்து எழுதிய கடிதம் ஏ.எவ்.பி.செய்திச் சேவை மற்றும் இணையத்தளங்களில் நேற்று வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டிருந்தது.  யுத்தத்தில் வெற்றிபெற்ற பின்னரும் சமாதானத்தை வென்றெடுக்கும் ஆற்றலின்றி அரசாங்கம் இருக்கின்றதென்ற குற்றச்சாட்டுடன் ஊழல் மோசடி, வீண்விரயங்கள் உட்பட பல்வேறு பின்னடைவுகள் தொடர்பாக ஜெனரல் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்திருக்கிறார்.
 
ஜெனரல் பொன்சேகாவின் கடிதமானது யுத்தம் முடிவடைந்த பின்னரான பல உள்பக்க நிகழ்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அத்துடன், ஜெனரல் பொன்சேகாவிற்கும் அவருடைய மேலதிகாரிகளுக்குமிடையிலான நம்பிக்கை முழுமையாக இல்லாமல் போயிருப்பதை இந்தக் கடிதம் வெளிப்படுத்துவதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.  யுத்தத்தில் இராணுவம் ஈட்டிய வெற்றியில் ஜெனரல் பொன்சேகாவின் பங்களிப்பினால் அவர் யுத்த கதாநாயகனாக உள்நாட்டில் கருதப்பட்டார். ஆனால், அக்டோபர் 15 இல் இங்கு (இலங்கையில்) இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டால் படையினரை நகர்த்துவதற்கு ஆயத்தமாக இருக்குமாறு அயல்நாடான இந்தியாவிடம் அரசாங்கம் கேட்டிருந்ததாக பொன்சேகா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

“பயங்கரவாதக் குழுவொன்றை தோற்கடிக்கும் ஆற்றலுள்ள தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த திறமையான அமைப்பு என்று இலங்கை இராணுவம் ஈட்டியிருந்த புகழையும் பிரதிமையையும் மழுங்கடிப்பதாக இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக ஜெனரல் பொன்சேகா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.  கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி பதவியிலிருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளியேறியிருக்கும் பொன்சேகா அடுத்து வரும் தேசிய தேர்தல்களில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு சவாலாக இருப்பார் என பரந்தளவில் பேசப்படுகிறது. ஓய்வுபெற்றதற்கான அவருடைய திட்டங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளித்திருக்காத போதிலும் எதிரணி வேட்பாளராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அவர் நிறுத்தப்படுவாரென எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“நிச்சயமாக அவர் அரசியலில் பிரவேசிப்பார், இப்போது இது தவிர்க்க முடியாத நடவடிக்கையாக அமையும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறை பேராசிரியர் சுமனசிறி லியனகே ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார். “குறுகிய கால அடிப்படையில் இது மிகவும் நல்லது. ஏனென்றால், பிரதான எதிரணியை ஒன்று திரட்டுவதற்கு அவர் உதவுகிறார். வலுவான எதிர்க்கட்சியானது ஜனநாயகத்திற்கு சிறப்பானது என்று லியனகே கூறியுள்ளார். பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்தவரும் தேசியவாதியென அறியப்பட்டவருமான பொன்சேகா சிறுபான்மைத் தமிழருடன் சமாதானத்தை ஏற்படுத்தும் விடயத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ தவறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.

எனது தலைமைத்துவத்தில் கீழ் யுத்தத்தில் இராணுவம் வெற்றியடைந்திருக்கின்ற போதும் தங்களின் அரசாங்கம் இன்னரும் சமாதானத்தை வென்றெடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அத்துடன், தமிழ் மக்களின் மனதை வென்றெடுக்க தெளிவான கொள்கை கிடையாதென்றும் இது நிச்சயமாக ஈட்டிய வெற்றியை அழித்துவிடுமென்றும் எதிர்காலத்தில் மற்றொரு கிளர்ச்சி ஏற்பட வழிசமைத்துவிடுமென்று ஜெனரல் பொன்சேகா விமர்சித்திருக்கிறார்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது உயிர்தப்பி முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை முகாம்களில் தொடர்ந்து வைத்திருப்பதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.  யுத்தம் முடிவடைந்த பின்னர் தனது அதிகாரம் தொடர்பாக அரசாங்கம் அச்சமடைந்திருப்பதாக தனது இராஜிநாமாக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதுடன், இதனாலேயே தமக்கு வெறும் வைபவரீதியான பதவி வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். அதிகாரத்துடனான தலைமைப் பொறுப்பை அரசு எனக்கு வழங்குவதற்கு விருப்பமின்றி இருந்தது அதுவே, என்மீது அவநம்பிக்கை கொண்டிருக்கின்றது என்பதை நான் நம்புவதற்கு வழி சமைத்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு வைபவம் வரை தான் இராணுவத் தளபதி பதவியிலிருக்க நான் விரும்பியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.  சதிப்புரட்சி தொடர்பான பயப்பிராந்தியானது பாதுகாப்பு வட்டாரங்கள் மத்தியில் நன்கு தெரிந்த விடயமாக இருந்ததாகவும் அவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். இலங்கையானது இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்ற வரலாற்றைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், 1960 முற்பகுதிகளில் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு முறியடிக்கப்பட்டது.

மீள் குடியேற்றத்துக்கு தயாராக 10 இடங்கள்

வவுனியா மாவட்டத்தில் 10 இடங்கள் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளுக்காக தயார் நிலையிலிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா வடக்கே நெடுங்கேணி உட்பட்ட ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளும் வவுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கன்னிக்குளம், சேமமடு, பால மடு, பன்றிக்கெய்தகுளம், இரணைக் குளம், ஆறுமுகத்தான் புதுக்குளம், மாளிகை உள்ளிட்ட பத்து இடங்களே மீள்குடியேற்றத்துக்கு தயாராகயிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மீளக் குடியர்த்தப்படுவோருக்கு வாழ்வாதார தொழிலை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் பெரும்போக பயிர்ச் செய்கையில் அவர்களை ஈடுபடுத்தும் வகையிலும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு விவசாயத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் வவுனியா அரச அதிபர் சுட்டிக் காட்டினார்.

நிவாரணக் கிராமங்களில் 2 இலட்சத்து 85 ஆயிரம் பேர் இருந்த இடத்தில் தற்போது ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேரே இருக்கின்றனர். மீள்குடியேற்றம் மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தல் என நாள்தோறும் மூவாயிரம் தொடக்கம் நான்காயிரம் வரையான மக்கள் நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியில் செல்கின்றனர் என்றார்.

சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபட ஒருபோதும் நினைக்கவில்லை: அனோமா பொன்சேகா

mrs-sarathfonseka.jpgதமது கணவரான ஜெனரல் சரத் பொன்சேகா ஒருபோதும் அரசியலில் ஈடுபட எதிர்பார்க்கவில்லை என அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். பௌத்தர் என்ற ரீதியில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் களனி விஹாரைக்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் யாருக்கும் எவ்விதமான தீங்கும் இழைத்ததில்லை என அவர் திவயின பத்திரிகைக்கு அளித்துள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். பௌத்த மதத்தையே தாங்கள் முழுமையாக நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொங்கலுக்கு கேப்டன் டிவி

images-tv.jpgநடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் புதிய தொலைக்காட்சி சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளார். கேப்டன் டிவி என்ற இந்த தொலைக்காட்சி எதிர்வரும் பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பை ஆரம்பிக்கவுள்ளது.

இந்தத் தொலைக்காட்சிக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என பெரிய விளம்பரமெல்லாம் கொடுத்திருக்கிறார் விஜய்காந்த்.

இந்த தொலைக்காட்சி மட்டுமல்லாமல், புதிய பத்திரிகையும் ஆரம்பிக்கவுள்ளாராம். இது வாரப் பத்திரிகையாக முதலில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாளிதழாக மாறும் என்கிறது தேமுதிக வட்டாரம். ஏற்கெனவே மூன்று இணையதளங்களைத் ஆரம்பித்துள்ளார் விஜய்காந்த்.

வன்னி செல்ல தமிழ்க் கூட்டமைப்புக்கு முதல் தடவையாக அரசாங்கம் அனுமதி

vau-camp-srilanka.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னார், கிளிநொச்சி, துணுக்காய் உட்பட நிவாரணக் கிராமங்களுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது-

கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களும் நாளை திங்கட்கிழமை காலை புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

நாளை காலை 7.00 மணிக்கு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானம் மூலம் வவுனியா புறப்பட்டுச் செல்லும் இவர்கள் வவுனியா விமானப்படை தளத்திலிருந்து ஹெலிக்கொப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

முதலில் மன்னார் பகுதிக்கு விஜயம் செய்யும் இவர்கள் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன் துணுக்காய் பகுதிக்கும் விஜயம் செய்வர். கிளிநொச்சி பகுதிக்கும் செல்லும் இவர்கள் வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் செல்லவுள்ளனர்.

திங்கட்கிழமை காலை முதல் மாலைவரை இப்பகுதிக்கு விஜயம் செய்யும் கூட்டமைப்பினர் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுடனும் உரையாடுவர். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட அனுமதி தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்து வந்ததும்தெரிந்ததே.

தமிழ்ப் பகுதிகளை கட்டியெழுப்பும் பணியில் புலம்பெயர்ந்தோர் யாழ். பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல்

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்களை புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் முன்னெடுக்கவுள்ளனர். இது தொடர்பாக புலம்பெயர்ந்த புத்திஜீவிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடவிருக்கின்றனர்.

விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் கட்டிடக்கலைஞர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளனரென அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி நடுப்பகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெறும்.

அவுஸ்திரேலியாவில் மிக நீண்டகாலம் வாழும் டொக்டர் நடேசன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, இதற்கான அழைப்பை அமைச்சர் விடுத்துள்ளார். இந்தக் கலந்துரையாடல்களுக்கு வருகைதரும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தங்குமிடவசதி செய்து கொடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கு தொடர்பாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் வதியும் டொக்டர் நடேசன் தலைமையிலான ஒரு தூதுக்குழு கடந்த காலங்களில் இலங்கை வந்து ஜனாதிபதியின் ஆலோசகர், அமைச்சர்கள், எம்.பிக்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இராணுவத்தினர் மீதான புகார்களை பிரிட்டன் மறுத்துள்ளது

britishtroops.jpgஇராக்கிலே பிரிட்டிஷ் இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் புதிய புகார்கள் பெரும் எண்ணிக்கையில் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுவதை பிரிட்டிஷ் ஆயுதப் படைகளுக்கான அமைச்சக அதிகாரி பில் ரம்மெல் மறுத்துள்ளார். புதிதாக முப்பது புகார்கள் வெளிவந்துள்ளதாக முன்னதாக வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர். அமெரிக்க துருப்பினர் கைகொண்டதாக வெளிவந்திருந்த பாலியல் துன்புறுத்தல் வழிவகைகள் போன்றவையும் புதிய புகார்களிலே பலவற்றில் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்தப் புகார்களில் பல புதியவையே அல்ல என்று கூறியுள்ள அதிகாரி ரம்மெல், புகார்களில் தெரிவிக்கப்பட்டிருப்பவைதான் நடந்த விஷயங்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார். பிரிட்டிஷ் துருப்புகளைப் பொறுத்தவரை அவர்கள் பரவலாகவே துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது; ஆனால் புகார்கள் ஒழுங்காக விசாரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இன்று சுதந்திரக்கட்சி மாநாடு தேர்தல் அறிவிப்பு வெளிவரும்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் தொடர்பாக கட்சியின் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து அறிவிப்பு வெளிவரலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஏப்ரலுடன் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடத்தப்படும் என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

இரு தேர்தல்களும் அடுத்த வருட முற்பகுதியில் இடம்பெறும் என்றும் ஜனாதிபதித் தேர்தல் முதலில் இடம்பெறும் என்றும் அமைச்சர்கள் அண்மைக்காலமாக சூசகமாகக் கூறிவருகின்றனர். தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில் இரு வருடங்களை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமை ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதேவேளை பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான கருத்துகளும் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அது நடைமுறைச் சாத்தியமற்றது என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.