செய்திகள்

செய்திகள்

செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்னம் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் புலனாய்வு பிரிவு பொலிசாரினால் வெள்ளிக்கிழமையன்று முதற்தடவையாக வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இவர் மீதான விசாரணைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, நீதவான் இவரை வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் வன்னிப் பிரதேசத்தில் சண்டைகள் தீவிரமடைந்தது முதல் கனகரட்ணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தைப் படையினர் கைப்பற்றிய போது, பொதுமக்களோடு, இவரும் தனது குடும்பத்தினருடன் இராணுவத்தினரிடம் சரணடைந்தவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் படையினர் இவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தார்கள். கடந்த ஆறுமாத காலமாக விசாரணை செய்ததன் பின்னர், புலனாய்வுப் பிரிவினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A9 பொதுமக்கள் யாழ் சென்றுவர பாதுகாப்பு அனுமதி தேவையில்லை – அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி லைசன்ஸ் இருந்தால் போதும்

road-a9.jpgஏ-9 வீதியூடாக யாழ். நகர் சென்று வருவதற்கு பயணிகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இலங்கைப் பிரஜையாகவுள்ள அனைவரும் ஏ-9 வீதியூடாக சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகள், மற்றும் விசேட பஸ் வண்டிகளூடாக சென்று வரலாம். பயணிகள் அனைவரும், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றில் ஒன்றை காண்பித்து செல்லமுடியும்.

பயணிகள் அனைவரும் வவுனியா சோதனைச் சாவடியில் சாதாரண சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய ஏ-9 வீதி மக்களின் போக்குவரத்துக்காக 13 ஆம் திகதி திறக்கப்பட்டது. முதற் தடவையாக நேற்று 10 பஸ் வண்டிகளில் பயணிகள் யாழ். நோக்கி வவுனியா ஊடாக சென்றனர். வவுனியா இரட்டைப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வழமையான பாதுகாப்பு சோதனைகளின் பின்னர் பயணிகள் பஸ் வண்டி புறப்பட்டன.

பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஏ-9 வீதியை திறப்பது தொடர்பாகவும் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது பாதுகாப்பு செயலாளர் வீதியை திறப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தார். யாழ். குடாநாட்டிலிருந்து பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லவும், வெளிமாவட்டங்களிலிருந்து குடாநாட்டுக்குள் கொண்டு செல்லவும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென பயன்படுத்தப்படும் லொறிகள், பார ஊர்திகள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரிடம் பதிவு செய்யப்படல் வேண்டும். எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்தப் பதிவுகளை செய்துகொள்ள முடியும்.

ஏ-9 வீதியூடாக வவுனியா வரை வரும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி நடவடிக்கை எடுத்திருந்தார். கடந்த ஜுலை மாதம் 27ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தார்.

இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை வருகிறார்

1411prafp.jpgஇந்திய நிதியமைச்சரான பிரணாப் முஹர்ஜி அவர்கள்  இன்று இலங்கைக்கு  வரவுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ள அவர், இலங்கையில் மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களைத் தரக்கூடிய அதிகாரப் பகிர்வு, தமிழ் மக்களை தேசிய நீரோட்ட அரசிலுக்குள் இணைப்பதற்கான முயற்சிகள், அவர்களுக்கான நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள், இந்தியாவின் நிதியுதவிகளை அதிகரித்தல் ஆகிய விடயங்கள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் தற்போது நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்திய குழுக்களுக்கு உதவும் முகமாக மேலதிகமாக அங்கு பணியாளர்களை உதவிக்கு அனுப்புவது குறித்தும் அவர் இலங்கையில் கலந்துரையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

யாழ். எழுதுமட்டுவாள், கரம்பகம் பிரதேசங்களில் மீள்குடியேற்றம்

யாழ். தென்மராட்சி கிழக்குப் பிரதேசமான எழுதுமட்டுவாள், கரம்பகம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மீளக் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் பாவனைக்கு விடப்படாதிருந்த மேற்படி பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி மக்களை அப்பகுதியில் மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

தென்மராட்சிப் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதன் கிழக்கு பகுதியான எழுதுமட்டுவாள் ஜே-334 கிராம சேவகர் பிரிவிலுள்ள பகுதிகளையும் கரம்பகம் ஜே-330 கிராம சேவகர் பிரிவிலுள்ள பகுதிகளையும் அப்பகுதிப் பொதுமக்களின் மீள்குடியேற்றத் திற்கான ஏற்பாடுகளை பாதுகாப்புப் படையினரின் இணக்கப்பாட்டுடன் மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் தென்மராட்சிப் பிரதேச செயலாளர் சி.ஸ்ரீனிவாசன், 523வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ஹேமந்த பண்டார, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் சாள்ஸ் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டனர். கடந்த 10 வருட காலமாக பொதுமக்கள் பாவனைக்கு விடுவிக்கப்படாமலிருந்த கரம்பகம், எழுதுமட்டுவாள் ஆகிய பகுதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடும்பிரயத்தனத்தின் மத்தியில் மீள்குடியேற்றத்திற்கு விடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மீளக்குடியேறத் தயாராக இருந்த மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது ஏற்பட்டுள்ள புதிய ஜனநாயக சூழ்நிலையில் நாம் கடந்த காலத்தில் இழந்தவற்றை ஈடுசெய்யும் பொருட்டு தொடர்ந்து பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மியன்மார் உயர்தலைவரின் இலங்கை விஜயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

myanmar_president.jpgமியன்மார் இராணுவ உயர்தலைவரின், இலங்கை விஜயத்தை கண்டித்து இன்று இலங்கையின் தலைநகர்  கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம், நடத்தப்பட்டது. இடதுசாரி கட்சிகள் உட்பட்ட சமூக அமைப்புகள் இதனை ஏற்பாடு செய்திருந்தன. மியன்மாரில் ஜனநாயக உரிமைகளை பேணுமாறு கோரி, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோசங்களை எழுப்பினர்.

தமிழ் இளைஞர் கடலில் அடித்துக் கொலை: சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் சேவையில் இடைநிறுத்தம்

Bambalappitty_Police_Brutalityபம்பலப்பிட்டி கடற்கரையில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸ் திணைக்களம் உச்ச சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.

மன்னார்- கருங்கண்டல் பிரதேசத்தில் நேற்று ஏர்பூட்டு விழா – அமைச்சர் ரிஷாத், ஆளுநர் சந்திரசிறி அதிதிகள்

வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மன்னார் மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கருங்கண்டல் பிரதேசத்தில் ஏர்பூட்டு விழா நேற்று இடம்பெற்றது. மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஏர்பூட்டு விழாவை உத்தி யோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்தில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாந்தைப் பிரதேசத்தில் மீளவும் குடியேறிய மக்கள் விவசாய நடவடி க்கைகளை மேற்கொள்வதற்கு இங்குள்ள 4 ஆயிரம் விவசாய நிலங்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருப் பதுடன், மானிய விலையில் உரம் மற்றும் விதை நெல் என்பனவற்றை அரசாங்கம் வழங்கவிருப்பதாகவும் இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மாந்தை பிரதேசத்தில் 2600 குடும்பங்கள் வாழ்ந்த போதிலும் தற்போது 1600 குடும்பங்கள் மாத்திரமே அரசாங்கம் மீள்குடியமர்த்தியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தற்போது கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை துரிதப்படுத்த ப்பட்டுள்ளன. எனவே, அவை முடி வடைந்ததும் எஞ்சியுள்ள குடும்பங்களை மீள்குடியேற்ற இருக்கிறோம்.

இங்கு ஆரம்பிக்கப்படும் விவசாய நடவடிக்கைகளுக்காக கட்டுக்கரைக் குளம் பிரதேசத்திலிருந்து நீரைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்

Oceanic_Viking_Refugeesஅவுஸ் திரேலியாவின் சுங்கத் திணைக்கள ஓசானியா வைக்கிங்கில் இருந்து 22 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தோனேசியாவில் தரையிறங்கச் சம்மதித்து உள்ளனர். ஓசானிய வைக்கிங்கில் உள்ள 78 அகதிகளையும் இந்தோனேசியாவில் தரையிறங்குமாறும் அவர்களது அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை உடனடியாகப் பரிசீலிப்பதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் எழுத்து மூலம் கேட்டுக்கொண்டதற்கு கப்பலில் இருந்தவர்களில் ஒரு பிரிவினர் சாதகமாக முடிவெடுத்துள்ளனர். அவர்களது தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நான்கு வாரங்களில் அவர்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்படவார்கள் என்றும் அவ்வதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். இக்கப்பலில் உள்ள ஏனையவர்களும் இதே முடிவையே எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அரசு வழங்கி உள்ள உறுதிமொழியின் அடிப்படையில் சிலரது தஞ்ச விண்ணப்பங்களை ஏற்று அவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் ஏனையவர்கள் திருப்பி அனுப்பப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. சிலரைத் திருப்பி அனுப்புவதன் மூலம் அவுஸ்திரேலிய அரசு தாங்கள் அகதிகள் விடயத்தில் கடும்போக்கு உடையவர்கள் என்பதை நிரூபிக்க முயற்சிக்கும் என்றே அவதானிகள் கருதுகின்றனர்.

 ஓசானியா வைக்கிங்கில் உள்ள அகதிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் உடன்பாட்டுக்கு வருமாறு நெருக்குகின்றனர்:

அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களக் கப்பலா ஓசானிய வைக்கிங்கில் உள்ள 78 அகதிகளையும் இந்தோனேசியாவில் தரையிறங்குமாறும் அவர்களது அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை உடனடியாகப் பரிசீலிப்பதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஓசானியா வைக்கிங்கில் உள்ள அகதிகளை எழுத்து மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களது தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நான்கு வாரங்களில் அவர்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்படவார்கள் என்றும் அவ்வதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

ஒக்ரோபர் 18ல் இந்தோனேசிய அவுஸ்திரேலிய சர்வதேசக் கடலில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் அவுஸ்திரேலியாவின் ஓசானிக் வைக்கிங் கப்பலால் காப்பாற்றப்பட்டு இந்தோனேசியாவின் யாவா தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்பகுதி மாகாண ஆளுநர் இந்தோனேசியா தஞ்சம் கோருவோரைக் கொட்டும் இடமல்ல என அவர்களைத் தரையிறக்க மறுத்துவிட்டார். பின்னர் காப்பாற்றப்பட்டவர்கள் பின்ரன் தீவுக்கு கொண்டுவரப்பட்டனர். தற்போது அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுத்து வருகின்றனர். அவர்கள் தங்களை அவுஸ்திரெலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லும்படி கோருகின்றனர். ஆனால் தஞ்சம் கோருபவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாது என அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டமைச்சர் கருத்து வெளியிட்டு இருந்தார்.

தற்போது இந்த அகதிகளின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அவுஸ்திரேலிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

நான்காவது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் விவகாரம் பிரதமர் கெவின் ருட் மீதான அவுஸ்திரேலிய மக்களின் கருத்துக்களை மிகவும் பாதித்து இருப்பது அண்மையில் வெளியாகி உள்ள கருத்துக் கணிப்புகளில் வெளிப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்தே படகு அகதிகளின் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர அவுஸ்திரேலிய அரசு மிகுந்த கவனம் எடுக்கின்றது.

பிரதமர் கெவின் ருட் தனது முகத்தைக் காப்பாற்றவே இவ்வாறான ஒரு உடன்பாட்டுக்குச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மல்கம் ரேன்புல் குற்றம்சாட்டி உள்ளார். இந்த உடன்பாடு அவுஸ்திரேலியாவை நோக்கி அகதிகளை வரத் தூண்டும் என்றும் கெவின் ருட் அவர்களை எப்படியோ காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் எதிர்க் கட்சித்தலைவர் குறறம்சாட்டி உள்ளார்.

ஐநா வுக்கான இலங்கைப் பிரதிநிதி பலித கோகன்ன படகு அகதிகளை பொருளாதார அகதிகள் என்று நவம்பர் 11ல் அவுஸ்திரேலிய ஏபிசி ஊடகத்தில் குற்றம்சாட்டி உள்ளார். அவர்கள் அருகில் உள்ள இந்தியாவிற்குச் செல்லாமல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தது பொருளாதார நோக்கங்களுக்காகவே என்றும் அவர்களைத் திருப்பி அனுப்புவதன் மூலமே மேற்கொண்டு அகதிகள் வருவதைத் தடுக்க முடியும் என்றும் பலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதியான டெஸ் பிரவுணியும் இவ்வகதிகளை திருப்பி அனுப்புமாறு ஆலோசணை வழங்கி இருந்தார்.

இலங்கை அரசு மனித உரிமைகளை மீறுவதாகவும் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவதாகவும் குற்றம்சாட்டும் சர்வதேச நாடுகள் அதன் காரணமாக வெளியேறும் அகதிகளுக்கு தஞ்சம் அளிப்பதற்கு மறுப்பதுடன் இலங்கையில் தமிழ் மக்கள் திரும்பிச் சென்று பாதுகாப்பாக வாழ முடியும் என்று தாங்கள் கருதுவதாகவும் தெரிவிக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை வருகை

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சிவ்மார்ஷல் ராவ் ஒமார் சுயெல்மான் இலங்கைக்கு வியாழக்கிழமை வருகை தந்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,  விமானப்படைத்தளபதி எயார் சிவ்மார்ஷல் ரொஷான் குணதிலக மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளை அவர் சந்திக்கவிருக்கிறார். தமது விஜயத்தின்போது கட்டுநாயக்க விமானப் படைத்தளத்திற்கும் அவர் செல்வார் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐ.தே.மு கொள்கை விளக்கக் கோவை கையளிப்பு ஊர்வலம் ஆரம்பம்

ranil.jpgஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை விளக்கக் கோவையினை கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்கர்களுக்குக் கையளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலம் சுமார் 250 வாகனங்களுடன் இன்று முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியது. ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர உள்ளிட்ட முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர்.நாளை விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டபின்னர் மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளனர்

நன்றி ; புகைப்படம் www.dailymirror.lk