செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஐக்கிய இலங்கைக்காக முதலில் உயிர்த்தியாகம் செய்தது தமிழ் பொலிஸ் அதிகாரிகளே! களுத்துறையில் ஜனாதிபதி தெரிவிப்பு

290909mahinda.jpgநாட்டைப் பாதுகாத்து,  ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் முதலில் உயிர்த்தியாகம் செய்தது தமிழ் பொலிஸ் அதிகாரிகளே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிவில் நிர்வாகத்தைச் சீர்குழைக்க பயங்கரவாதிகள் முனைந்த போது அதற்கெதிராகப் போராடிய தமிழ் பொலிஸ் அதிகாரியான திருநாவுக்கரசு போன்றவர்கள் பொலிஸ் வரலாற்றில் மறக்க முடியாதவர்கள். அவர்கள் நாட்டின் ஐக்கியத்துக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பயிற்சியை முடித்துக் கொண்டு சேவைக்குத் திரும்பும் 370 புதிய பொலிஸ் அதிகாரிகளைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

பயங்கரவாதத்திற்கும் பாதாள உலகத்திற்கும் அரசாங்கங்கள் அடிபணிந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டில் சட்டம், ஒழுங்கை எம்மால் நிலைநாட்ட முடிந்துள்ளது.

வடக்கு,  கிழக்கில் பொலிஸார் பயங்கரவாதிகளுக்கு அடிபணிந்து செயற்பட்டதுடன், தெற்கில் பொலிஸார் பாதாள உலகக் குழுக்களுக்கு அடிபணிந்து செயற்பட்ட காலம் ஒன்றிருந்தது. எமது அரசாங்கம் அந்நிலையை மாற்றியுள்ளது.

பொலிஸ் சேவை இன்று சிறப்பானதாக உள்ளது. இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பிருந்தது போலன்றி அத்துறை பாரிய முன்னேற்றமடைந்துள்ளது. பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளிலும் மக்கள் சேவையிலும் பொலிஸார் திருப்தியுறாத பிரச்சினைகள் நிறைந்த காலங்கள் இருந்துள்ளன. சகல பிரச்சினைகளும் தற்போது தீர்க்கப்பட்டு,  பதவி உயர்வு உட்பட சகல சலுகைகளும் பொலிஸாருக்கு உரிமை யாகியுள்ளன.

30 வருடங்களுக்கு முன் பொலிஸ் துறை சிறப்பாக இயங்கியது. வடக்கு, கிழக்கிலும், தெற்கிலும் சகல இன, மத பொலிஸாரும் இணைந்து சேவை செய்தனர். இந்த ஐக்கியத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பயங்கரவாதிகள் முதலில் பொலிஸாரின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதில் ஈடுபட்டனர்.

புலிகள் முதலில் யாழ்ப்பாணத்தைத் தாக்கினர். அதனையடுத்து யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலுமுள்ள 16 பொலிஸ் நிலையங்களைத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து மூன்று தசாப்தங்கள் பொலிஸார் அதிகாரம் அடக்கப்பட்டவர்களாகவே இயங்கினர்.
மீண்டும் இப்போது நாட்டின் சகல பகுதிகளிலும் பொலிஸார் அதிகாரத்துடனும் சுயாதீனமாக செயற்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவைக்காக இணைக்கப்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் அவர்கள் ஐக்கிய இலங்கையைப் பாதுகாக்கும் பொலிஸாராகத் திகழ்வர்.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான தொடர்புகள் குறித்த சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய யுகம் தற்போது உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் வரி வசுலிக்கும் பணியிலேயே பொலிஸார் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர் மக்களுக்காக பொலிஸ் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பொலிஸாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடளாவிய பயங்கரவாத வலையமைப்பை எமது பொலிஸாரால் ஒழிக்க முடிந்தது. அதனால்தான் கொழும்பு உட்பட முக்கிய நகரங்களை எம்மால் பாதுகாக்க முடிந்தது.

இதற்கு பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தவறுக்கு தண்டனை அழிப்பதைவிட தவறுக்கான வாய்ப்புகளை இல்லாமற் செய்வதே பொலிஸாரின் பணியாக வேண்டும். தாய் நாட்டை நேசிப்போராக பொலிஸார் திகழ வேண்டும். மக்கள் பாதுகாப்பு மட்டுமன்றி நாட்டின் முக்கிய தலைவர்கள், பிரபுக்களின் பாதுகாப்பும் பொலிஸாரின் கைகளிலேயே உள்ளது.

சில பொலிஸ் அதிகாரிகளினால் பொலிஸ் துறைக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. தாய்நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டப் புதிய பொலிஸார் பாடுபட வேண்டும்.

இதுவரை நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் நாட்டின் நல்லொழுக்கத்தைக் கணக்கிலெடுக்கவில்லை. அதனால் பயங்கரவாதம்,  பாதாள உலகம் என மக்கள் பெரும் துன்பங்களையே அனுபவிக்க நேர்ந்தது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் உழைத்தது போல் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பொலிஸார் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் மக்கள் கௌரவம் எனும் வெற்றியை பொலிஸார் பெற முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க,  ரோஹித அபேகுணவர்தன,  நிர்மல கொத்தலாவல, நந்தன குணதிலக்க உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பொலிஸ் மாஅதிபர் மற்றும் பொலிஸ்துறை உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மடு பாசாலைகளில் மீண்டும் கல்வி நடவடிக்கைகள்!

இரு வருட காலமாக மூடப்பட்டிருந்த  மன்னார் மடு கல்வி வலயத்திலுள்ள 11 பாசாலைகளில் இன்று முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மடு கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரதேசத்தில் கடந்த 22ஆம் திகதி மக்கள் மீள்குடியேற்றப்பட்பதையடுத்தே மேற்படி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. மீள்குடியேற்றப்பட்ட மக்களிடையே உள்ள மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்கள் ஆகியோர் அடையாளங் காணப்பட்டு முதற்கட்டமாக 59 ஆசிரியர்களின் பங்களிப்புடன் 11 பாசாலைகளிலும்; கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகிறது. மோதல் காரணமாக மடு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் 2007 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வசிம் அக்ரமின் மனைவி காலமானார்.

இதயம் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வசிம் அக்ரமின் மனைவி ஹ_மா அக்ரம் (42), சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9.30 மணியளவில் காலமானார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் மனைவி ஹ_மா அக்ரம். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஹ_மா அக்ரமிற்கு சிங்கப்பூர் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 20 ம் தேதி ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் ஹ_மா அக்ரம், வாசிம் அக்ரம் மற்றும் குடும்பத்தினர் சிங்கப்பூர் புறப்பட்டனர்.

இவர்கள் வந்த விமானம் சென்னை வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது, ஹ_மா அக்ரமிற்கு உடல்நிலை மோசமடைந்தது. உடனே அவருக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் ஆபத்து என்ற நிலையில், விமானத்தின் பைலட், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, சிகிச்சைக்காக அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.

அனுமதி கிடைக்கவே, வாசிம் அக்ரம் மற்றும் ஹ_மா அக்ரமிற்கு தற்காலிக, “விசா’ வழங்கப்பட்டு, அவர்கள் பயணம் செய்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அவர்,  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, “வென்டிலேட்டர்’ கருவி பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர் அபாய கட்டத்தை தாண்ட 72 மணி நேர கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்;. 

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை

261009serje.jpgரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரோ இன்று (26) திங்கட்கிழமை இலங்கை வருகிறார். குறுகிய கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுடன் இரு தரப்பு சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளிடையே சட்டவிரோத ஆட்கடத்தல் போதைவஸ்து துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு அமைச்சர்களான போகொல்லாகம, லெவ்ரோ ஆகியோரிடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதேவேளை இயற்கை அனர்த்தத்திலிருந்து பாதுகாத்தல், அவ்வாறான சூழ்நிலையின்போது அதனை ஆற்றுப்படுத்தல் என்பன தொடர்பாக இரு நாடுகளுக்கு மிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பெற்றோலிய ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவு

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் நேற்று தீர்மானித்தது. எரிபொருள் விநியோகத்தை சீரமைப் பதற்காகவே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதேவேளை, சம்பள உயர்வு வழங்குமாறு கோரி பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஒன்றியம் முன்னெடுத்த சட்டப்படி வேலைப் போராட்டம் நேற்றுடன் கைவிடப்பட்டுள்ளது. பெற்றோலிய ஊழியர்கள் இன்று முதல் வழமைபோல கடமைக்குத் திரும்புவர் என மேற்படி தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஓரிரு பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற் சங்கங்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளபோதும் நாடு பூராவும் தடையின்றி எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக பெற்றோல் மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ. எச். எம். பெளசி நேற்று தெரிவித்தார்.

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அடங்கலாக சகல துறைகளையும் சார்ந்த தொழிற் சங்கங்களையும் ஜனாதிபதி இன்று சந்திக்க உள்ளதாகவும் இதன்போது பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்தும் ஆராயப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஏனைய அரச ஊழியர்களை விட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர்.

அவர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒரு தடவை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் யுத்தம் முடிவடைந்து ஒரு சில மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில் இவ்வாறு சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்துவது அநீதி எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை நாடுபூராவும் உள்ள 32 பிராந்திய எண்ணெய்க் களஞ்சி யங்களினூடாகவும் தடையின்றி எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த சனியன்று மாத்திம் 10 இலட்சம் லீட்டர் எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறியது.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி பிரச்சினை – கல்வியமைச்சால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் அமைச்சில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கலாநிதி ஏ. ஜி. ஹ¤சைன் இஸ்மாயில், எஸ். எச். எம். ஜமீல், தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் ஆகிய கல்வியியலாளர்களைக் கொண்ட குழுவை கல்வி அமைச்சு நியமித்திருந்தது.

இதன் செயலாளராக கலாநிதி ஹஜர் ஜான் மன்சூர் நியமிக்கப்பட்டிருந்தார். 2007ம் ஆண்டு இக்குழு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை : பேராசிரியர் சிவத்தம்பி

24prof-karthgesu.jpgதமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர் அரசியல் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது குறித்து,  இலங்கை பலத்த விமர்சனம் இருப்பதாக கூறுகின்ற சிவத்தம்பி அவர்கள்,  இந்த நிலையில் தான் உலக தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வது சிரமமான விடயமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தனது நிலைப்பாடு தொடர்பாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளரான இராஜேந்திரன் அவர்களுக்கு தான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி அவர்கள், இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பயனுள்ளது என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாத போதிலும், அதில் அனைவரும் கலந்துகொள்வதற்கான சூழ்நிலையும் அவசியம் என்றும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறுகிறார்.  ஆனால், தமிழ் ஆய்வு மாநாட்டை அரசியலாக பார்க்கக் கூடாது என்று கூறுகிற தமிழக திட்டக்குழுவின் துணைத் தலைவரான நாகநாதன் அவர்கள், சிவத்தம்பியின் கருத்துடன் முரண்படுகிறார்.

இதேவேளை இந்த மகாநாட்டைப் புறக்கணிப்பது ஒரு தமிழ் அறிஞருக்கு அல்லது பேராசிரியருக்கு ஏற்புடையது அல்ல என கவிஞர் மு. மேத்தா தெரிவித்துள்ளார். எனினும் பேராசிரியரின் முடிவை ஆதரித்துள்ள கவிஞர் இன்குலாப் அவரது செய்தி மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

நன்றி: வீரகேசரி 25.10.2009

நிவாரண கிராமங்களிலிருந்த 23,388 பேர் யாழ்ப்பாண குடாநாட்டில் மீள் குடியேற்றம். 3000 பேர் இன்றும் யாழ். வருவர் – அரச அதிபர் கணேஷ்

வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து 23 ஆயிரத்து 388 பேர் (23,388) யாழ்ப்பாணக் குடாநாட்டில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் கணேஷ் தெரிவித்தார். 7,414 குடும்பங்களைச் சேர்ந்த 23,388 பேர் நேற்று வரை நிவாரணக் கிராமங்களிலிருந்து வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மேலும் 20 ஆயிரம் பேர் யாழ்ப்பாணம் வர இருக்கிறார்களென்றும் கூறினார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த 44,000 பேரை அனுப்புவதாக ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய 50 வீதமானவர்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ளோர் தினமும் கட்டம் கட்டமாக பஸ்களில் அனுப்பப்பட்டு வருகின்றனர். இதற்கமைய இன்றும் 3000 பேர் யாழ். வந்து சேர்வார்களென அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து விசேட பஸ்கள் மூலம் யாழ்ப்பாணம் வரும் இந்த மக்களுக்கு உடனடியாக ஐயாயிரம் ரூபா வழங்கப்படுகிறது. 20 ஆயிரம் ரூபா அவர்களது கணக்கில் வங்கிகளில் வைப்பிலிடப்படுகிறது. இதைவிடவும் யு. என். எச். சீ. ஆர். வழங்கும் நிவாரணப்பொதிகள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு சொந்த இடங்களும் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

நிவாரணக் கிராமங்களில் இருந்துவரும் மக்களை பொறுப்பேற்று சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கையில் எவ்வித சிரமங்களும் ஏற்படவில்லையெனத் தெரிவித்த அவர், அரசாங்க உயர்மட்டத்தில் ஒத்துழைப்புக் கிடைக்கிறதெனச் சுட்டிக்காட்டினார்.

உடனடியாக சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படாதோர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆறு வார காலத்தினுள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர். இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதென அரச அதிபர் கணேஷ் தெரிவித்தார்

இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு முற்றாகத் தடை – பெயரை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்

இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி அரசியல் நடத்த முனைவோருக்கும் அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவோருக்கும் எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசியலில் ஈடுபடும் நோக்கமுள்ள சில தனி நபர்கள் அச்சு ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும் அடிப்படையற்ற செய்திகளில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றமை அவதானிக்க ப்பட்டுள்ளதாக வும், அவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படு மென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் அரசியல் இலாபத்திற்காக இராணுவ அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் – உலகவங்கி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இனமுரண்பாட்டுக்கு தீர்வு காணாதவரை நீண்டகால உறுதித்தன்மையை தக்க வைக்கவோ மூலதனத்தை கவரவோ முடியாது என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கின்றது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதே ஏற்புடைய செயன்முறையாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அரிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும் உலக வங்கி அறிக்கை இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் குற்றச்சாட்டுக்களை திருப்திப்படுத்துகின்ற தீர்வை முன் வைக்க வேண்டும் என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

குறுகிய காலத்திலிருந்து இடைக்கால கட்ட பொருளாதார வளர்ச்சி சாதகமானதாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள உலகவங்கி அறிக்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலகு வெளியேவருவது அதற்கு உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உல்லாசப் பயணத்துறையிலும் குறிப்பிடத்தக்க உயர்ச்சியையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

போருக்குப் பின்னான இலங்கைப் பொருளாதாரம் வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் இனமுரண்பாடுகள் தலைதுக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் உலக வங்கி அறிக்கை எச்சரித்துள்ளது.

மாநிலங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசணையையும் உலக வங்கி தனது அறிக்கையில் வழங்கி உள்ளது. அடுத்த தேர்தலுக்கு பின்னரேயே அதிகாரப் பரவலாக்கம் பற்றி அரசு சிந்திக்கும் என அரச தரப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.