இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து விசாரணை செய்யவென பாகிஸ்தானிய புலனாய்வு குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் மூன்றாம் திகதி இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது லாகூரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இலங்கை சக்திகளுக்கும் தொடர்புகள் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் குழுவினர் அது பற்றி ஆராய இலங்கை வருவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலிக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிய குழு இரு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள போதிலும், அது மேலும் நீடிக்கலாமென்றும் மலிக் தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் பின்னணியில் செயற்பட்டவர்களைப் பகிரங்கப்படுத்துவதென பாகிஸ்தான் குழு தீர்மானித்துள்ளதுடன், துரித விசாரணைகளுக்காக இலங்கையுடனான ஒத்துழைப்பு தொடருமென்றும் அவர் கூறியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான தகவல் பரிமாற்றங்களின் மூலம் விசாரணையை வலுப்படுத்த முடியுமென்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.