செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இங்கிலாந்து நாவாலசிரியை ஹிலாரி மேன்டலுக்கு புக்கர் பரிசு

booker.jpgபுக்கர் பரிசை இங்கிலாந்தை சேர்ந்த நாவலாசிரியை ஹிலாரி மேன்டல் பெற்றுக்கொண்டார்.57 வயதான இவருக்கு 16வது நூற்றாண்டைச் சேர்ந்த கதையான உல்ப் ஹால் நூலுக்காக இந்த பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது. 1520களில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட நாவல் உல்ப் ஹால் நூல் ஆகும்.லண்டனில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பவுண்டு மதிப்பிலான புக்கர் பரிசை அவர் பெற்றுக் கொண்டார்.

புக்கர் பரிசை இந்தியாவைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி, அனிதா தேசாய், அரவிந்த் அடிகா, அருந்ததி ராய் ஆகியோர் முன்பு பெற்றுள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

இலங்கை முகாம்களில் உள்ள அகதிகளை உடனடியாக மீள்குடியமர்த்த முடியாது – இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா கூறுகிறார்

krushnak.jpgஇலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியேறச் செய்யமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடை பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார் இலங்கைத் தமிழர்கள் இரண்டரை இலட்சம் பேர் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மறு வாழ்வு வழங்கும் படி இலங்கை அரசை வலியுறுத்தி கேட்டுள்ளோம். இலங்கையும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதனை உடனடியாக செயற்படுத்த முடியாது..

இலங்கைத்தமிழர் வாழும் பகுதிகளில் பருவ மழை பெய்து வருகின்றது.மேலும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளும் நடை பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் மீண்டும் குடி யேறலாம் என்று திருப்தி தெரிவிக்கும் பட்சத்திலேயே அவர்களின் குடியேற்றம் சாத்தியமாகும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கை – அமைச்சரவை தீர்மானம்

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத் திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

எம்பிலிப்பிட்டியவில் நேற்றுக் கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். முதல் மூன்று மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையாகவே இது இருக்குமெனவும் அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப் படவிருந்தது ஆயினும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முற்பகுதியில் முடிவடைவதால் மேற்படி தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது. 

தவறான போராட்ட வழிமுறைகள் தமிழ்பேசும் மக்களுக்கு அழிவையே தந்தது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து

duglas.jpgகடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான போராட்ட வழிமுறைகள் தமிழ்பேசும் மக்களுக்கு அழிவைத் தான் பெற்றுத் தந்துள்ளது என்பதனை இன்று அனைவரும் உணரக்கூடியதாக உள்ளது. ஆகவே மக்களின் விமோசனத்திற்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் சேவையாற்றும் அரசியல் தலைமைகளை இனங்கண்டு அவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலமே தமிழ்பேசும் மக்களின் எதிர்காலம் நிரந்தரமானதாகவும் நிம்மதியானதாகவும் அமையும் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்

யாழ்.மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியத்தின் 11 ஆவது ஆண்டு விழா யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியத்தின் செயலாளர் திரு.செல்வராஜா தலைமையில் இன்று (06) நண்பகல் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

முன்பள்ளி ஆசிரியர்களின்  பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மூன்று முதல் ஆறு மாத காலத்திற்குள் மேற்கொள்வேன். முன்பள்ளி ஆசிரியர்கள் இந்த ஒன்றியத்தின் மீது நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும்

மாகாண சபைக்கு ஊடாகவும் மாகாணக் கல்வியமைச்சின் மூலமாகவும் வடமாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் ஊடாகவும் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

அடுத்து வரும் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக இருப்பதினால் உங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான திறவுகோல் உங்கள் கைகளிலேயே இருக்கின்றது. சரியான ஜனநாயகத் தலைமைக்கு வாக்களிப்பதன் மூலமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

வரப்போகும் காலங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் அதனால் எதிர்காலம் நிரந்தரமானதாகவும் நிம்மதியானதாகவும் அமையும் என்றார்

முன்பள்ளி ஆசிரியர்களில் சேவை மூப்பு அடிப்படையில் யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட  முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசில்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்

க.பொ.த. சா/த பரீட்சை: நிவாரண கிராமம்: 20ஆம் திகதிக்கு முன் விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு வேண்டுகோள்

021009-dep-of-edu.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் முகாம் கல்வி இணைப்பாளர்களிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிவாரணக் கிராமங்கள், சரணடைந்தவர்களது புனர்வாழ்வு முகாம்கள் என்பவற்றிலிருந்து இம்முறை சுமார் 6,300 பேரளவில் க.பொ.த. சா/த பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் அல்லாத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பப் படிவங்களுடன் பரீட்சைக்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. இவர்களுக்கு கட்டணம் அறவிடப்படாமலேயே பரீட்சைக்குத் தோற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவங்கள் நான்கு விதமாக வழங்கப்பட்டுள்ளன.

1. புதிய பாடத் திட்டத்தின் கீழான பாடசாலை மாணவர்களுக்குரிய விண்ணப்பப்படிவம்.

2. பழைய பாடத் திட்டத்தின் கீழான பாடசாலை மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவம்.

3. பழைய பாடத்திட்டத்தின் கீழான தனிப்பட்ட பரீட்சார்த்திக்கான விண்ணப்பப்படிவம்.

4. புதிய பாடத் திட்டத்தின் கீழான தனிப்பட்ட பரீட்சார்த்திக்கான விண்ணப் பப்படிவம் என்பனவாகும்.

அத்துடன் இன்று வரை நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியேறி வவுனியா மாவட்டத்தில் உறவினர்களுடன் தங்கியிருக்கும் மாணவர்களும் தாம் இணைகின்ற பாடசாலையின் ஊடாக க.பொ.த. சா/த பரீட்சைக்கு தோற்ற முடியும் எனவும் வவுனியா வலய கல்வி பணிப்பாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

வவுனியா காமினி வித்தியாலயம், பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம், பம்பை மடு புனர்வாழ்வு முகாம், வைரவ புளியங் குளம் முகாம் உட்பட அனைத்து நிவாரணக் கிராமங்களிலிருந்தும் சுமார் 6,300 பேரளவில் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய மாநாடு கொழும்பில் ஆரம்பம்

‘மனநல மேம்பாடு’ தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென் கிழக்கு ஆசியப் பிராந்திய நான்கு நாள் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பமானது.

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலுள்ள பதினொரு நாடுகளிலிருந்து சுமார் 150 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்குபற்றியுள்ளனர்.

ஆன்மீகவாதிகள், சமூகவியலாளர்கள், கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பொது சுகாதார மருத்துவர்கள், உளவள ஆலோசகர்கள், உளவள மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் என சகல மட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றும் இம்மாநாட்டை உலக சுகாதார ஸ்தாபனம் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இம்மாநாட்டை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இலங்கை – இந்திய கடற்படை கப்பல்கள் நேற்றுமுதல் கூட்டுப் பயிற்சி

07indo-lanka.jpgஇந்திய மற்றும் இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் நேற்று (06) இலங்கை கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக கடற்படை பதில் பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்தார். இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்படை கப்பலான ஐ. என். எஸ். சாதுல் மற்றும் இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் படைக் கப்பலான ‘வருண’ என்பன நேற்று முன்தினம் (5) இலங்கையை வந்தடைந் ததாகவும் இவற்றுடன் 250 கடற்படை வீரர்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய கடற்படை படகுகளுடன் இல ங்கை கடற்படை கப்பல்களான ‘சயுர’ மற்றும் ‘சாகர’ என்பனவும் அதிவேக தாக்குதல் கப்பல்களும் விசேட படகுகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இவை நேற்று (6) முதல் 72 மணி நேர கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்திய கப்பல்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டே இங்கு வந்துள்ளதோடு இலங்கை கடற்படையின் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு சிறந்த பயிற்சியையும் அனுபவத்தையும் வழங்கும் வகையிலேயே கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். சுமார் 100 பயிற்சிபெறும் கடற்படை வீரர்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

ஆசிரிய உதவியாளர் சம்பளத்தை அதிகரிப்பது பற்றி அரசு ஆலோசனை – ரூ. 3000 – ரூ. 6000 வரை பரிசீலனை

தொண்டர் ஆசிரியர்களாக இருந்து ஆசிரியர் உதவியாளர்களாக சேர்த்துக்கொள்ள ப்பட்டவர்களின் மாதாந்த கொடுப்பனவை 3000 ரூபாவிலிருந்து 6000 ரூபாவாக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆலோசித்து வருவதாக கல்வி அமைச்சின் செயலர் நிமல் பண்டார தெரிவித்தார்.

ஆசிரிய உதவியாளர்களாக இருக்கும் இவர்கள் தொடர்ந்தும் 5 வருடங்களுக்குள் ஆசிரியர் பயிற்சியை பெற்றுக்கொண்டோ, அதற்குரிய பட்டப் படிப்பை பூர்த்தி செய்வது என்ற நிபந்தனையின் பேரிலேயே தொண்டர் ஆசிரியர்களாக இருந்த இவர்களை ஆசிரிய உதவியாளர்களாக கல்வி அமைச்சு இணைத்துக்கொண்டது.

அதனால் இவர்கள் கட்டாயமாக இந்த நிபந்தைனயை நிறைவேற்ற வேண் டும் என கல்வி அமைச்சின் செயலர் நிமல் பண்டார தெரிவித்தார்.

தென் மாகாண தேர்தல் பிரசார பணிகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தென்பகுதி பாடசாலைகள் வெள்ளி பூட்டு

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் இன்று (7) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

தேர்தல் ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதோடு தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்கள் நாளை பிற்பகல் முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்க உள்ளனர். பொலிஸார் நாளை மறுதினம் (9) முதல் கடமையை பொறுப்பேற்க உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

தேர்தலுக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் ஐ. ம. சு. முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதேவேளை ஐ. தே. க., ஜே.வி. என்பனவும் பல கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

தென் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 17 இலட்சத்து 61,859 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

670 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளதோடு 161 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

தபால் மூல வாக்குகள் எண்ணும் 13 நிலையங்களும் இதில் அடங்கும்.

இதேவேளை தென் மாகாண சபைத் தேர்தலையொட்டி தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.  தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்கள் வெள்ளிக்கிழமை காலைக்கு முன் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு தேர்தல் திணைக்களம் வேண்டியுள்ளது.

இதேவேளை இம்முறை தேர்தல் கடமைகளில் 16 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மனித அபிவிருத்தியில் இலங்கை முன்னிலையில்!

ஐ.நா மனித அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் நேற்று வெளியிடப்பட்ட மனித அபிவிருத்தி சுட்டெண்ணின் அடிப்படையில் தெற்காசியப் பிராந்திய அயல் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது.

மனித அபிவிருத்தியில் உலக நாடுகளில் இலங்கை 102 ஆவது இடத்தில் உள்ளது. அதேசமயம் இந்தியா 134 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 141 ஆவது இடத்திலும் நேபாளம் 144 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 146 ஆவது இடத்திலும் உள்ளன.

நாடுகளின் செல்வம், கல்வி மட்டம், ஆயுள்காலம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு 182 நாடுகளை ஐ.நா. அபிவிருத்தித்திட்டம் பட்டியலிட்டுள்ளது. இது 2007 இல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களைக் அடிப்படையாகக் கொண்டதாகும்.

இப்பட்டியலில் முதலாவது இடத்தில் நோர்வேயும்,  இரண்டாம் இடத்தில் அவுஸ்திரேலியாவும் மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்தும் நான்காவது இடத்தில் கனடாவும் பிரான்ஸ் 8 ஆவது இடத்திலும் ஜப்பான் 10 ஆவது இடத்திலும் அமெரிக்கா 13ஆவது இடத்திலும் உள்ளன.