வவுனியா நிவாரணக் கிராமங்களில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் முகாம் கல்வி இணைப்பாளர்களிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நிவாரணக் கிராமங்கள், சரணடைந்தவர்களது புனர்வாழ்வு முகாம்கள் என்பவற்றிலிருந்து இம்முறை சுமார் 6,300 பேரளவில் க.பொ.த. சா/த பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் அல்லாத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பப் படிவங்களுடன் பரீட்சைக்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. இவர்களுக்கு கட்டணம் அறவிடப்படாமலேயே பரீட்சைக்குத் தோற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பப் படிவங்கள் நான்கு விதமாக வழங்கப்பட்டுள்ளன.
1. புதிய பாடத் திட்டத்தின் கீழான பாடசாலை மாணவர்களுக்குரிய விண்ணப்பப்படிவம்.
2. பழைய பாடத் திட்டத்தின் கீழான பாடசாலை மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவம்.
3. பழைய பாடத்திட்டத்தின் கீழான தனிப்பட்ட பரீட்சார்த்திக்கான விண்ணப்பப்படிவம்.
4. புதிய பாடத் திட்டத்தின் கீழான தனிப்பட்ட பரீட்சார்த்திக்கான விண்ணப் பப்படிவம் என்பனவாகும்.
அத்துடன் இன்று வரை நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியேறி வவுனியா மாவட்டத்தில் உறவினர்களுடன் தங்கியிருக்கும் மாணவர்களும் தாம் இணைகின்ற பாடசாலையின் ஊடாக க.பொ.த. சா/த பரீட்சைக்கு தோற்ற முடியும் எனவும் வவுனியா வலய கல்வி பணிப்பாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.
வவுனியா காமினி வித்தியாலயம், பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம், பம்பை மடு புனர்வாழ்வு முகாம், வைரவ புளியங் குளம் முகாம் உட்பட அனைத்து நிவாரணக் கிராமங்களிலிருந்தும் சுமார் 6,300 பேரளவில் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.