செய்திகள்

செய்திகள்

செய்திகள்

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) – புன்னியாமீன்

sri-lanka-hotels.jpgஉலக சுற்றுலா நாள்  (World Tourism Day)  உலக சுற்றுலா நிறுவனத்தின்  (WTO) ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.  சுற்றுலாத்துறையில் ஈடுபாடு கொண்ட உலகின் 51 நாடுகள் சுற்றுலா அமைப்புக்களின் சர்வதேச சம்மேளனத்தின் (IUOTO) 1925 இல் இணைந்து கொண்டன. பின்னர் இந்த அமைப்பு, ஐ.நா.வின் கீழ் இயங்கும் ஓர் அதிகாரபூர்வமான அமைப்பாக உலகச் சுற்றுலா நிறுவனத்தை (WTO) தாபித்துக் கொண்டது. இத்தாபனத்தை அமைப்பதற்கான யாப்பு 1970 செப்டெம்பர் 27ஆம் திகதி மெக்ஸிக்கோ நகரில் கூடிய (IUOTO) நிருவாகக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக,  கலாசார,  அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகின் பல்வேறு இடங்களில்,  பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக சுற்றுலா நாளின் பிரதான கருப்பொருள் சுற்றுலா மூலம் பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச புரிந்துணர்வு, சமாதானம், சுபீட்சம் என்பவற்றை அடைதலும்,  எவ்வித பாகுபாடுமின்றி சகலரும் மனித உரிமைகளையும்,  அடிப்படைச் சுதந்திரங்களையும் அனுபவிக்கவும்,  மதிக்கவும் உதவுதலும் இவற்றினூடாக சுற்றாடலைப் பாதுகாத்தலும், தொழில்வாய்ப்பை உருவாக்குதலும் ஆகும்.

அக்டோபர்,  1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல் பீக்கிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: இதற்கமைய 2006 இல் ஐரோப்பாவிலும், 2007இல் இலங்கையிலும், 2008இல் அமெரிக்காவிலும் கொண்டாடப்பட்டன. 2009இல் ஆபிரிக்காவில் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: “சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன” (Tourism opens doors for women). என்பதாகும்.

சுற்றுலா என்பதைத் வரைவிலக்கணப்படி நோக்கின் தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டுகளிக்க பயணிப்பதே என்று பொருள் கொள்ளலாம். போக்குவரத்தும் தொடர்புத்துறையும் மேம்பட்டுவரும் இக்காலத்தில் சுற்றுலா துறையும் மேற்குறிப்பிட்ட துறைகளுடன் இணைந்த வகையில் வளர்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக வசதிபடைத்த மேற்குநாட்டினரும்,  ஜப்பானியரும் அதிகமாக சுற்றுலா செல்கின்றனர் என்றும்  சிறந்த சுற்றுலா இடங்கள் நல்ல வருவாயை ஈட்டித்தருகின்றன என்றும் புள்ளி விபரத்தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றது.

வரலாற்று ரீதியாக இத்துறை பற்றி ஆராயும் போது போக்குவரத்து,  தொலைதொடர்பு.  விருந்தோம்பல் துறைகள் போன்றன பழங்காலத்தில் விரிவு பெற்று இருக்கவில்லை. இதனால் பெரும்பான்மையானோர் தாம் பிறந்த கிராமங்களிலேயே தமது வாழ்க்கையைக் கழித்தனர். குடியேற்றவாதக் கொள்கை தலை தூக்கியதும் படைவீரர்கள்,  வணிகர்கள்,  சமய நோக்குடையோரும் தம்மிடத்தை விட்டு பிற இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை பெற்றனர்.

வணிக விருந்தோம்பல் விரிவு பெற முன்னர் உணவுக்காவும்,  உறையுளுக்கும் சென்ற இடம் குடியாளர்களையே பயணிகள் தங்கி இருந்தார்கள். வீடுகளில் திண்ணைகள் இருந்தன. வீடுகளுக்கு வரும் பயணிகளுக்கு உணவளித்து இடமளிப்பது பண்பாக இருந்தது. குறிப்பாக சமயப் பெரியார்களுக்கு உணவளிப்பது சிறந்த பேறாக கருதப்பட்டது. செல்வந்தர்கள் மடங்களை கட்டி,  அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவும் தற்காலிக தங்குமிடமும் தந்துதவினர். இந்த மடங்கள் பலவற்றில் சாதி அமைப்பு பேணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நவீன காலத்தில் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. அதே நேரம் நாடு கடந்து வரும் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக வேண்டி பல்வேறு ஹோட்டல் தங்குமிட வசதிகள் உணவு,  பாண வகைகள் இத்தியாதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுகின்றன. இயற்கை வனப்பு,  காடுகள்,  வனாந்திரம்,  வன ஜீவராசிகள்,  பறவைகள்,  கடற்கரைகள்,  சுண்ணக்கற்பாறைகள் (Corals), பளிங்குப் பாறைகள்  (Crystala) மலைத்தொடர்,  நீர்வீழ்ச்சி,  மாணிக்கம்,  தோட்டங்கள்,  பூஞ்சோலைகள்,  அழிபாடுகள் (Ruins) என்பன பிரதான சுற்றுலாச் சொத்துக்கள் ஆகும்.

சுற்றுலாவுக்கு,  இரண்டு அம்சங்கள் முக்கியமானவை: ஒன்று நேரம் மற்றையது பணம் என்று பசுபிக் ஏசிய பிரயாண சங்கத்தின் தலைமைப் பதவியிலிருந்து தீவிர சேவையின் பின்னர் இளைப்பாறிய லக்ஷ்மன் ரத்தனபால ஐ.பி.எஸ்.ஸிடம் கூறினார். நேரம் உள்ளவர்களிடம் பணம் இல்லை. பணம் உள்ளவர்களிடம் நேரம் இல்லை என்று அவர் விளக்கி கூறினார். மிகச் சிலரிடமே இரண்டும் உண்டு. ஆனால்,  உயர்மட்ட செல்வத்தை அடையும் அநேகமான நாடுகளிலேயே இந்த இரண்டும் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உலக சுற்றுலா பயணிகளின் தொகை 2010 ஆம் ஆண்டளவில் ஒரு பில்லியனுக்கு மேலாகவும் 2020 ஆம் ஆண்டளவில் 1.56 பில்லியனாகவும் அதிகரிக்குமென மட்றிட்டில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ஐக்கியநாடுகள் உலக சுற்றுலா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த மீட்சி குறிப்பாக,  உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலா பிராந்தியமென வர்ணிக்கப்படும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சாத்தியமாகுமென நம்பப்படுகிறது. பிராந்திய சுற்றுலாத்துறையும் புதியதொரு நடுத்தர வகுப்பின் எழுச்சியும் இந்தத்துறையை ஊக்குவிக்கின்றன.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அநேகமானோர் வறுமையிலிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கத்தில் இணைந்து கொள்கிறார்கள். இந்த புதிய செல்வந்தர்கள் இயல்பாகவே விடுமுறையில் வெளிநாடு செல்வோருடன் இணைந்து கொள்கிறார்கள். இவ்வாறாக பிரயாணம் ஒரு விரிவடையும் அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் ஒரு பழக்கமாகத் தோன்றி பின்னர் நடுத்தர வர்க்கத்தினரின் ஒரு வாழ்க்கைப் பாணியாக வளர்ச்சி அடைகிறது.

கடந்தவருட உலகளாவிய பொருளாதார நெருக்கடி சுற்றுலாத் துறையை பாதிக்கிறது என்று சியோல் சுற்றுலா நிறுவனம் ஜூன் மாத ஆரம்பத்தில் தென் கொரியாவில் நடத்திய மூன்று நாள் சர்வதேச சுற்றுலா மகாநாட்டில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 2010 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இரண்டு புதிய ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா களிப்பிடங்கள்,  புதிய இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துதல் ஆகியவற்றுடன் மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக சிங்கப்பூர் சுற்றுலா சபையின் உதவிப் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். மலேசியா,  சுற்றுலா என்ற பெயரில் தான் தங்கியுள்ளது என்று அந்நாட்டு சுற்றுலாத் துறையின் சர்வதேச சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் சோங் யோக் ஹார் தெரிவித்திருந்தார்.
வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்கு சீன, ஜப்பான் சுற்றுலாப் பயணிகள் உலக பிரயாணத்துறையை மாற்றியமைத்து விட்டனர். கடந்த 15 வருட காலத்தில்,  எங்குமே புதிய மத்திய வகுப்பினர் தோன்றி உலக பிரயாண முறைமையை மாற்றியமைத்துவிட்டார்கள்.

நவீன இந்தியாவில் மத்திய வகுப்பினர் தொகை 300 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த சனத்தொகையிலும் பார்க்க இது அதிகமானது. ஆனால்,  சீனாவின் மத்திய வகுப்பினர் தொகை இதிலும் அதிகமானது.

ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் அதிக வளங்களைப் பெறுவதால் பிராந்தியத்திற்குள்ளான பிரயாணங்கள் தொடர்ந்தும் விருத்தியடையும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக உலக நாடுகளின் சுற்றுலாத்துறையின் ஆசியாவுக்குள் பிரயாணங்கள் அதிகரிக்கலாம் என்பதும் பொதுவான எதிர்பார்க்கையாகும்.

மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் நோக்கப்பட்டாலும்  பல கேடுகளையும் செலவுகளையும் கொண்டுள்ளதையும் அவதானித்தல் வேண்டும். எனவே சுற்றுலாத்துறை வருமானத்தை ஈட்டித்தரும் அதேவேளை சுற்றாடலுக்கு அது அச்சுறுத்தலாகவும் அமைகிறது. சுற்றுலாவுக்கு அடிப்படையானது சுற்றாடலாகும். திட்டமில்லாத,  கட்டுப்பாடில்லாத சுற்றுலா, சுற்றாடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குநாட்டினரை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஈர்ப்பதற்காக அவர்களுக்கு தேவையான உயர் வசதி படைத்த வலயங்களை மூன்றாம் உலக நாட்டு அதிகார வணிக வர்க்கத்தினர் பெரும் செலவில் கட்டுகின்றனர். இவ்வாறன கட்டடங்கள்  அத்தியவசிய கட்டமைப்பு மற்றும் சேவைகளை புறம் தள்ளியும் கட்டப்படுகின்றன. இத்தகைய வலயங்கள் நாட்டுக்குள்ளே இருக்கும் ஏற்றதாழ்வை பெரிதாக்குகின்றன. சுற்றுலாத்துறையால் கிடைக்கும் வருவாயும் பொது மேம்பாட்டிற்கு செல்லாமல் அதிகார வட்டத்திற்கே போய்சேருவதாகவும் விமர்சகர்கள் சாடுகின்றனர்.

ஹோட்டல் கழிவுகள்,  நீர்மாசமடைதல்,  சட்டவிரோத குடிசைகளும்,  விடுதிகளும், சுண்ணக்கற்பாறை அகழ்வு போன்றன சுற்றாடலைப் பாதிக்கின்றன. இதைவிட மறைமுகமாக சுற்றுலாத்துறையுடன் சங்கமித்துள்ள பாலியல் சுற்றுலா,  கடற்கரைச் சிறுவர்கள்,  போதைவஸ்து பாவனையும் கடத்தலும்,  அந்நியரின் அரைநிர்வாணப்பவனி,  கசினோ சூதாட்டம் என்பன பௌதீகச் சுற்றாடலை மட்டுமன்றி பண்பாட்டுச் சூழலையும் சீரழிக்கின்றன. இலங்கை,  தாய்லாந்து,  பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பாலியல் சுரண்டலில் ஈடுபடவதற்காவும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றார்கள். ஏழைச் சிறுவர்கள்,  பெண்கள் என பலர் இவ்வாறு இழிவான முறையில் சுரண்டப்படுகின்றார்கள். மேற்குநாடுகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. இவை குறித்து அரச கட்டுப்பாடுகளும், சமூக விழிப்புணர்வும் அவசியமாகும். 

இக்கால கட்டத்தில் மனிதன் நிலவுக்கே சுற்றுலா செல்ல துணிந்து விட்டான். ஆகாய விமானங்களை அண்ணாந்து பார்த்து நாம் வியந்த  காலம் இன்று மாறி விட்டது. அதே  வானத்தில் விமானத்துக்குப் பதிலாகப் பயணிகளை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்களைக் காணும் காலம் வந்து விட்டது. இது வரை ஆராய்ச்சியாளர்களை மட்டுமே விண்ணுக்குச் சுமந்து சென்ற ராக்கெட்டுகள் சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து செல்லத் தயாராகி வருகின்றது. தற்போது விமான நிலையங்கள் சாதாரணமாகி விட்டாற் போல் அடுத்த தலைமுறையில் விண்ணுலா நிலையங்களும் சாதாரணமாகி விடக்கூடும்.  இந்த திட்டத்தினை ஸ்பேஸ் போர்ட் அமெரிக்கா என்று பெயரிட்டுள்ளனர். முதலில் இந்த திட்டத்தைப் பற்றிக் கேள்விப்படுபவர்களுக்கு ஏதோ விண்வெளித் திரைப்படக் கதை கேட்டாற் போல் தான் இருக்கும். ஆனால் இந்தத் திட்டம் நடைமுறைக்கு  வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அமெரிக்காவின் (federal) பெடரல் ஏவியேஷன் அத்தாரிட்டி (ஏப்.ஏ.ஏ) இந்த ஸ்பெஸ்போர்ட் அமெரிக்காவுக்கு நீயூ மெக்சிகோவில் அனுமதி உலகின் முதல் பயணிகள் விண்வெளி ஓடம் நிறுத்தப்பட்டிருக்கும். விண்வெளிப் பயணம் செல்ல ஒரு பயணிக்குத் தேவைப்படும் நூறு மில்லியன் டொலர்களை முன்கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். கனவுப் பயணம் செல்ல விரும்பும் பயணிகளிடம் இப்போதே முன் பதிவு செய்து முன்தொகை வாங்கத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.  உலகில் மனித வரலாற்றில் இதுவரை மிகச் சிலரே சென்றுள்ள சாதாரண மனிதர்களின் கற்பனைக்கும் எட்டாத இந்த புதிய அனுபவம் தரும் பயணத்துக்கு மனிதலில் சென்று வரக்கடும் போட்டி நிலவுகிறது. எதிர் காலத்தில் விண்வெளிக்கான சுற்றுலா தினம் என்றொரு தினம் கொண்டாடப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை.

1980 ஆம் ஆண்டிலிருந்து உலக சுற்றுலா தினம் பின்வரும் கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

1980: Tourism’s contribution to the preservation of cultural heritage and to peace and mutual understanding
1981: Tourism and the quality of life
1982: Pride in travel: good guests and good hosts
1983: Travel and holidays are a right but also a responsibility for all
1984: Tourism for international understanding, peace and cooperation
1985: Youth Tourism: cultural and historical heritage for peace and friendship
1986: Tourism: a vital force for world peace
1987: Tourism for development
1988: Tourism: education for all
1989: The free movement of tourists creates one world
1990: Tourism: an unrecognized industry, a service to be released (“The Hague Declaration on Tourism”)
1991: Communication, information and education: powerlines of tourism development
1992: Tourism: a factor of growing social and economic solidarity and of encounter between people
1993: Tourism development and environmental protection: towards a lasting harmony
1994: Quality staff, quality tourism
1995: WTO: serving world tourism for twenty years
1996: Tourism: a factor of tolerance and peace
1997: Tourism: a leading activity of the twenty-first century for job creation and environmental protection
1998: Public-private sector partnership: the key to tourism development and promotion
1999: Tourism: preserving world heritage for the new millennium (Host: Chile)
2000: Technology and nature: two challenges for tourism at the dawn of the twenty-first century (Host: Germany)
2001: Tourism: a toll for peace and dialogue among civilizations (Host: Iran)
2002: Ecotourism, the key to sustainable development (Host: Costa Rica)
2003: Tourism: a driving force for poverty alleviation, job creation and social harmony (Host: Algeria)
2004: Sport and tourism: two living forces for mutual understanding, culture and the development of societies (Host: Malaysia)
2005: Travel and transport: from the imaginary of Jules Verne to the reality of the 21st century (Host: Qatar)
2006: Tourism Enriches (Host: Portugal)
2007: Tourism opens doors for women (Host: Sri Lanka)
2008: Tourism Responding to the Challenge of Climate Change and global warming (Host: India)
2009: Tourism – Celebrating Diversity (Host: Africa.)

மீள்குடியேற்றத்திற்கு சவாலாக இருப்பது நிலக்கண்ணிகளும் மிதிவெடிகளுமே : தெரிந்து கொண்டே மரணப்பிடிக்குள் மக்களை தள்ளிவிட முடியாது – பிரதமர்

1509sri-lankan-prime-minister.jpg“இடம் பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக இருப்பது நிலக்கண்ணி வெடிகளும், மிதிவெடிகளுமே. தெரிந்து கொண்டே மக்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளிவிட எம்மால் முடியாது. படிப்படியாக மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் நடத்தியும் வருகிறது” என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கா தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 64வது பொதுச்சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா, அங்கு நடைபெற்ற ஆசிய சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அவர் சிங்களத்தில் உரையாற்றினார். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்று கையில் கூறியதாவது, எனது தாய்நாடு மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதப் பிரச்சினையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அதனை எவ்வாறு எமது நாட்டிலிருந்து துடைத் தெறிந்தது என்பதையும் உலகுக்கு காட்டிவிட்டோம்.

அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் கூட புலிகள் இயக்கம் உலகிலேயே பலம்வாய்ந்த பயங்கர அமைப்பு என கூறியிருந்தது. புலிகளை எவராலும் தோற்கடிக்கச் செய்ய முடியாது என்ற எண்ணங்கள் உருவாக்கப்பட்டு சிலர் புலிகளை உயரிய ஸ்தானத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான ஒரு இயக்கத்தை தவிடுபொடியாக்கி தோற்கடித்தோம். இதற்கென சமாதானத்தை விரும்புகின்ற மக்களும், உலகத் தலைவர்களும், அங்கு வாழுகின்ற மக்களும் எமக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை செய்தார்கள்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதமாக செய்து வருகிறோம். வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை பகுதியிலுள்ள மக்களை மீளக்குடியமர்த்திவிட்டோம். குறுகிய நாட்களுக்குள் இவர்களை மீளக்குடியமர்த்தியது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். என்றாலும், இதற்கு தடையாக இருப்பது பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலக் கண்ணிவெடிகளும், மிதிவெடிகளுமே. மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விளை நிலங்களில் மிதி வெடிகள் மரணத்தின் சாயலில் புதைந்து கிடக்கின்றன. தெரிந்து கொண்டே அப்பாவி மக்களை மரணத்தின் பிடிக்குள் எங்களால் தள்ளிவிட முடியாது.

வடக்கில் நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் அரசசார்பற்ற நிறுவனங்களும் செயற்படுகின்றன. இராணுவம் பெருந்தொகையான மிதிவெடிகளை அகற்றியுள்ளன. நிலக் கண்ணிவெடி, மிதிவெடிகள் அகற்றுவதற்காக நவீன ரக இயந்திரங்களையும் அரசாங்கம் கொண்டுவந்துள்ளன.

உலக ரீதியாக எங்களுக்கு இரண்டு பிரதான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. சுற்றாடல் மாசடைவது ஒரு சவாலாகவும், பயங்கவாதம் இன்னுமொரு சவாலாகவும் இருக்கிறது.

ஒற்றுமை, ஒத்துழைப்பு, செயற்படுதல் என்பதன் ஊடாக இந்த சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதை இந்த இடத்தில் கூற விரும்புகிறேன். இதற்கென ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் சிறந்த உலகத்தை காண்பதற்கு இவை உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இன்று நிக்கவரெட்டியில் சோமா குமாரியின் இறுதிக் கிரியை

250909somakumari.jpgவடமேல் மாகாணசபை உறுப்பினர் சோமா குமாரி தென்னக்கோனின் இறுதிக் கிரியை இன்று நிக்கவரெட்டிய பொலிஸ் மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இவரது பூதவுடல் நிக்கவரெட்டியவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் அம்பாந்தோட்டையில், தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட இதயவலி காரணமாக மரணமடைந்தார்.

இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் அமைப்பில் திறமைமிக்க உறுப்பினராகச் செயல்பட்டவராவார். அத்துடன் குருநாகல் மாவட்டத்தின் மகளிர் அணியின் வெளிக்களத் தலைவராகவும் கடமையாற்றியவர். வடமேல் மாகாண சபையின் உறுப்பினராக அரசியலில் காலடி எடுத்து வைத்த சோமா குமாரி, நாடாளுமன்ற மட்டத்தில் சேவையற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பர்மா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க ஆங் சான் சூச்சி யோசனை

270909suukyi.jpgபர்மா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை எவ்வாறு நீக்குவது என்பது தொடர்பில் பர்மீய இராணுவ தலைவர்களுக்கு தான் கடிதம் எழுதியிருப்பதாக ஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவர் ஆங் சாங் சூச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு சீரமைப்புகளை கொண்டு வரும் முகமாக அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடைகளை விதிப்பதற்கு ஆதரவாக செயற்பட்டார் ஆங் சான் சூச்சி.

முன்னதாக இந்த வாரத்தின் முற்பகுதியில் பர்மா தொடர்பான தன்னுடைய கொள்கையில் மாற்றம் இருப்பதாக அமெரிக்கா கூறியது.

தாங்கள் விதித்துள்ள தடைகள் போதுமானதாக இல்லை என குறிபிட்ட ஒபாமா அரசு, பர்மிய இராணுவத்துடன் நேரிடையாக பேசப்போவதாக கூறியது.

பெளத்த மத குருக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பர்மிய இராணுவத்தால் அடக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 19வது இடம்

26-corruption.jpgஊழல் கரை படிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கும் இடம் கிடைத்துள்ளது. வாழ்க்கையின் ஒருங்கிணைந்த ஒரு விஷயமாக இன்று ஊழலும், லஞ்சமும் சேர்ந்து போய் விட்டது. எத்தனை டன் சோப்புப் போட்டாலும் இந்த கரை போகாது என்ற அவல நிலை.

இந்த நிலையில் எந்தெந்த நாடுகளில் ஊழில் மலிந்துள்ளது என்பது குறித்த பட்டியல் ஒன்றை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 19வது இடம் கிடைத்துள்ளது. 10 புள்ளிகளில் இந்தியா 6.8 புள்ளிகளுடன் 19வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகங்களில்தான் பெருமளவில் லஞ்சம் கை மாறுகிறதாம்.  ரஷ்யா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுடன் வர்த்தகம்  மேற்கொள்ளும் போதுதான் பெருமளவில் லஞ்சம் வாங்குகிறார்களாம். மேலும் வேலையை வேகமாக முடிப்பதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளதாக 30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் மிக மிகக் குறைவாக புழங்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பவை பெல்ஜியம், கனடா நாடுகள் தான். இந்த நாடுகளில் மிகக் குறைந்த அளவில் லஞ்சம் வாங்குகிறார்களாம். இந்த இரு நாடுகளும் லஞ்சம் குறித்த இன்டெக்ஸில் 8.8 புள்ளிகளுடன் உள்ளனர். இந்த இரு நாடுகளையும் சேர்ந்த நிறுவனங்கள் பொதுவாக லஞ்சம் தருவதில்லையாம்.

இந்த இரு நாடுகளுக்கும் அடுத்து நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வருகின்றன. இவை 8.7 புள்ளிகளுடன் உள்ளன. இவற்றுக்கு அடுத்த இடங்களில் உள்ள நாடுகள் – ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , அமெரிக்கா , பிரான்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை.உள்ளன

இராணுவத்தினரின் சம்பளத்தில் 1800 ரூபா வெட்டப்படுவது ஏன்? : ஜே.வி.பி. கேள்வி

26parliament.jpgஇலங்கை இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக இராணுவத்தினர் ஒவ்வொருவரினதும் மாதாந்த சம்பளத்திலிருந்து 1800 ரூபா வெட்டப்படுவது ஏன் என ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திஸாநாயக்க சபையில்  கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். முன்னதாக எழுந்த அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. இராணுவத்திற்கான விழாவை கொண்டாடுவதற்கு இராணுவத்தினரின் சம்பளத்திலிருந்தே பணம் அறவிடுவது ஏன்? அரசாங்கம் எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்.

இலங்கை போக்குவரத்து சபை, ‘அபிவெனுவென் அபி’ போன்றவற்றின் மூலமாக நிதி திரட்டப்பட்டது. எனினும் இந்த நிதியின் மூலமாக படையினருக்கு எவ்விதமான சேவைகளும் செய்யப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே இராணுவத்தினரிடமிருந்து தலா 1800 ரூபா சம்பளத்தில் கழிக்கப்படுகின்றது.  தேர்தல் காலங்களில் படையினர் தொடர்பில் பிரசார மேடைகளில் கூறுவதனை தவிர அரசாங்கம் வேறொன்றும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டினார்

இந்தியாவில் பிறந்த பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமை பத்திரம் – வவுனியா, மன்னாரில் 28ம், 29ம் திகதிகளில் நடமாடும் சேவை

இந்தியாவில் பிறந்த பிள்ளைகளுக்கான பிரஜா உரிமைப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரஜா உரிமைக் கிளையின் உதவியுடன் இடம்பெறவுள்ளது. வவுனியா, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 28ம், 29ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் கீழ் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் அறிவித்துள்ளது.

28ம் திகதி வவுனியா மாவட்டத்திலும் 29ம் திகதி மன்னார் மாவட்டத்திலும் இடம்பெற உள்ள இந்நடமாடும் சேவையில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் பல வருடங்களாக வசித்து மீண்டும் இலங்கை திரும்பியவர்களின் இந்தியாவில் பிறந்த பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கான இலங்கைப் பிரஜா உரிமைப் பத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.

உரிய தினங்களில் நடமாடும் சேவையில் கலந்து பயன் பெறுமாறு நீதிநியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் வடபிராந்திய இணைப்பாளர், சட்டத்தரணி எம். எச். எம். ஸியாத் கேட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்ட காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட நீர் விநியோகத்திற்கு ஜப்பான் நிதி உதவி

260909japanflag.jpgயுத்த நடவடிக்கைகளால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு ஜப்பான் அரசாங்கம் 8.6 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கியுள்ளது.

குறிப்பிட்ட பிரதேசத்துக்கான குடிநீர் விநியோகத்திட்டத்தின் நிர்மானப்பணிகள் 2002 ஆம் ஆண்டு முதல் தடைப்பட்டுள்ளன.
ஜப்பான் நிதியுதவி மூலம் தடைப்பட்டுள்ள நிர்மானப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தின் தமன பிரதேச செயலகப்பிரிவைச் சார்ந்த 600 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வவுனியா முகாமிலிருப்பவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல்

இலங்கையின் வடக்கே வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இன்று அங்குள்ளவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் இடம் பெற்றுள்ளன.

அங்குள்ள இராமநாதன் முகாமிலிருந்து சிலர் அடுத்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்ல முயன்றவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்த போது, முகாமிலிருந்தவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறிந்ததாகவும், அதையடுத்து தற்பாதுகாப்புக்காக படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.

இந்த மாதம் 17 ஆம் தேதி முதல் இலங்கை அரசு அங்குள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதை நிறுத்திவிட்டததால், உலக உணவுத் திட்டத்தால் வழங்கபடும் உலர் உணவுகளை சமைக்க தேவைப்படும் விறகுகளை எடுத்து வருவதற்காகவே மக்கள் ஒரு முகாமிலிருந்து மற்ற முகாம்களுக்கு செல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிக்கிறார்.

இந்த மோதலின் காரணமாக இரு முகாம்வாசிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.

கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புத் திட்டம் – வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தகவல்

260909house_new.jpgகிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டமொன்று அமைக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஏ.ஐ. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்  திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக மூன்று கோடியே 80 இலட்சம் ரூபா செலவு செய்யப்படவுள்ளன. நாடு பூராகவும் ஐயாயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் குடியிருப்பு வசதிகள் இல்லாதுள்ளனர். இவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.