செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இந்தியா-பன்றி காய்ச்சல் பலி 200ஐ தாண்டியது

16-swine-flu.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு காரணமாக 8 பேர் இறந்ததை அடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. அதேநேரத்தில் நேற்று மட்டும் மேலும் 229 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,588 ஆக உயர்ந்துள்ளது.

மெக்சிகோவை முந்திவிடும்…

இந்தியாவில் பலி எண்ணிக்கை இதே வேகத்தில் தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் இந்தியா, இந்த பன்றி காய்ச்சல் தோன்றிய மெக்சிகோவை முந்திவிடும் என கூறப்படுகிறது.

நேற்று வரை மெக்சிகோவில் 23 ஆயிரத்து 245 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுத்தி, அதில் 215 பேர் பலியாகியுள்ளனர். அதாவது இந்தியாவை விட சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை இரு நாடுகளிலும் ஒரே போல் தான் உள்ளது.

உலக அளவில் இந்த நோய் பிரேசிலில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு இதுவரை 884 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 641 பேரும், அர்ஜென்டினாவில் 514 பேரும் இறந்துள்ளனர்.

நாட்டுக்கு எதிரான தலைவராகவே ரணில் விக்கிரமசிங்க செயற்படுகிறார் – அலரி மாளிகை நிகழ்வில் ஜனாதிபதி

slpr080909.jpgபாராளு மன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக அல்லாமல் நாட்டிற்கு எதிரான தலைவராகவே ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவரும் நாட்டை ஆதரிக்கும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டைக் காட்டிக் கொடுத்து நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதில் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படும் இதுபோன்ற ஒரு எதிர்க்கட்சித் தலைவரா இந்நாட்டுக்குத் தேவை? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; தென் மாகாணத் தேர்தலை முழு நாடும் அவதானித்துக்கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி சர்வதேசமும் இத்தேர்தலை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருகின்றது. குறிப்பாக அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்நாட்டிற்கு ஜனாதிபதி ஒருவரை உருவாக்கித் தந்தமை தொடர்பிலேயே இம்மாவட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இம்மாவட்டத்தில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்ட வாக்குகள் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தன.

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் நடாத்தப்படும் இரண்டாவது தேர்தல் இது. முதலாவது ஊவா மாகாண சபைத் தேர்தலும் இரண்டாவதாக தற்போது தென் மாகாண சபைத் தேர்தலும் இடம்பெறப்போகிறது. முப்பது வருடகால பயங்கரவாதம் முழு மையாக ஒழிக்கப்பட்டு அபிவிருத்தியில் நாடு கட்டியெழுப்பப்படும் இன்றைய சூழலில் சர்வதேச நாடுகளில் எமது நாட்டை விற்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

எமது எதிர்க் கட்சித் தலைவர் பாராளுமன்றத்துக்கு எதிர்க் கட்சித் தலைவராக இல்லாமல் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு நாட்டுக்கு எதிர்க் கட்சித் தலைவராகச் செயற்படுகிறார். இப்படியொரு எதிர்க் கட்சித் தலைவர் இந்நாட்டுக்குத் தேவையா? நாட்டைக் காட்டிக்கொடுக்கும் அவருக்கு மக்கள் சிறந்த பதில் கொடுக்கும் யுகம் தற் போது உருவாகியுள்ளது.

தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கன்றி இரண்டாவது இடத்தையாவது தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சி செய்கிறது.

முப்பது வருடகால பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் நாம் இல்லாதொழித்துள்ளோம். புலிகள் ஸ்ரீமாபோதி மீதும், தலதா மாளிகை மீதும் தாக்குதல் நடத்தியதை நாம் சாதாரணமாக நினைக்க முடியாது. இது முழு இனத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றே நாம் கருதவேண்டும். எமது அடையாளத்தையே அவர்கள் அழிக்கத் துணிந்தார்கள்.

அப்பாவித் தாய்மார், குழந்தைகள், மதத் துறவிகள் என சகலரையும் கொன்றுகுவித்த அவர்கள் கொழும்பில் மட்டுமன்றி தென் மாகாணத்தில் அக்குறஸ்ஸவிற்கும் வந்து குண்டுத் தாக்குதலை நடத்தும் அளவுக்கு முன்னேறிச் சென்றனர். அத்தகைய பயங்கர வாதம் ஒன்றையே நாம் ஒழித்துள்ளோம்.

பாரிய அபிவிருத்திப் பயணமொன்றை முன்னெடுக்கும் இவ்வேளையில் மக்களின் பூரண ஆதரவு எமக்குத் தேவை. அம்பாந் தோட்டை மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்த்துவைப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் பிரேரணையொன்றை பாராளுமன்றத்திற்கு முன்வைத்து அதனை நிறைவேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எமது எதிர்கால சந்ததியினர் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற் கான பொறுப்பும் எமக்குள்ளது. இவற்றிற் கெல்லாம் சிறந்த தலைமைத்துவம் அவசியம். அதற்கு அம்பாந்தோட்டை மக்களின் பூரண ஆதரவு அவசியம். தென் மாகாணத்தில் வன்முறை இல்லாத தேர்தல் இடம்பெறவேண்டும்.
எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

இலங்கை அணி இன்று தென்னாபிரிக்கா பயணம்

120909sanath-jayasuriya.jpgஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ண  கிரிக்கெட் சுற்றுத் தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று அதிகாலை தென்னாபிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற சமயக் கிரியைகளையடுத்து குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக தென்னாபிரிக்காவுக்குப் பயணமாகினர்.

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் சம்பியன்ஸ் கிண்ண சுற்றுத் தொடர் அடுத்த மாதம் 22ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது.

14 நாட்களுக்குத் தொடராக நடைபெறவுள்ள இச்சுற்றுப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி ஆட்டத்துடன் முடிவடையவுள்ளது.

மினி உலகக் கிண்ணம்  எனக் கருதப்படும் இத்தொடரில் 8 நாடுகளின் அணிகள் பங்குபற்றவுள்ளதோடு அவை ஏ மற்றும் பி  என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தங்கத்தை விற்று நிதி தேடும் அவசியம் அரசுக்கு கிடையாது – ரணிலுக்கு அமைச்சர் யாப்பா பதில்

anura_priyadarshana_yapa.jpg
எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதைப் போல், மத்திய வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று நிதி தேட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்குக் கிடையாதென்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அரசியல் லாபம் கருதி, நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் முயற்சிப்பது கவலைக்குரியதாகுமெனத் தெரிவித்துள்ள அமைச்சர் யாப்பா, அவர் வகிக்கும் பொறுப்பான பதவிக்கும் பொருத்தமில்லாத செயலாகுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று நிதியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் செயற்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கூற்றுக்குப் பதில் அளித்து, விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-

மத்திய வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று நிதி தேடவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்குக் கிடையாது. அவ்வாறான தீர்மானமொன்றை அரசாங்கமோ, மத்திய வங்கியோ மேற்கொள்ளவில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் முற்றிலும் பொய்யானதாகும். இது வரை அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ள நிதியின் பெறுமதி நான்காயிரம் அமெரிக்க டொலர்களையும் தாண்டியுள்ளது.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத் தித் திட்டங்களுக்கும் எந்தக் குறைபாடும் இல்லாமல் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கும் பயன்படுத்து வதற்குத் தேவையான நிதி அரசாங்கத்திடம் உண்டு.

பெற்ற கடனை உரிய காலத்தில் செலுத்தும் நாடு என்ற பெருமையை இல ங்கை தக்க வைத்துக்கொண்டுள்ளது- உண்மையிலேயே நாட்டின் தங்கக் கையிருப்பை விற்றுப் பணம் தேடியது எப்போதென்றால் ஓர் அபிவிருத்தியைக் கூட மேற்கொள்ளப் படாத, ஒருவருக்குக் கூட தொழில் வழங் காத 2003 – 2004 ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் என்பதை அவருக்கு ஞாபகமூட்ட விரும்புகின்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஓசோன் தினம் (International ozone day ) – புன்னியாமீன்

ozone-day-2009.jpgஉலகில் உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. எமது கண்ணுக்குப் புலப்படாத அந்த ஓசோன் படலத்திற்கு மானசீகமான  நன்றிகளைத் தெரிவிக்கவும், இன்று எம்மை அறியாமல் எமது நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ஏனையவர்களுக்கும் உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் உலக நாடுகள் செப்டம்பர் 16ம் திகதியை ஓசோன் தினமாக நினைவு கூருகின்றன.

1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் திகதி கனடா நாட்டின் தலைநகரில் ஓசோன் படையை அழிக்கும்  இரசாயனங்களுக்கு எதிரான ‘மொன்றியல்” உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்தத் தினமே 1995ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூமியை அழித்து  வரும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒருமுகப்படுத்தும் தினமாக இதனை அனுசரிக்க உலக நாடுகள் தீர்மானித்தன.

ஓசோன் (Ozone)  என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் காணப்படுகின்றது. இது ஒட்சிசனின் பிறிதொரு மாற்றுரு (allotrope) வாகும். இது ஈரணு ஒட்சிசன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்து விடும் தன்மை கொண்டது.
1840 இல் சி. எப். ஸ்கோன்பின் (Christian Friedrich Schönbein)  என்பவர் ஓசோனைக் கண்டுபிடித்தார். அது ஒருவகையான மணம் தருவது என்ற அடிப்படையில்  கிரேக்க மொழியில் மணத்தைக் குறிக்கும் (ozein,  “மணத்தல்”) ஓசோன் என்று பெயர் சூட்டினார். ஆனால் மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்த விஞ்ஞானப் பெயரின் பொருள் ஓசோன்  என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, 1865 இல் ஜாக்ஸ் லூயிஸ் சோரெட் (Jacques-Louis Soret) என்பார் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை. இது பின்னர் சி. எப். ஸ்கோன்பின் அவர்களால் 1867 இல் உறுதி செய்யப்பட்டது. ஒரு இரசாயனப் பொருளின் மாற்றுரு (allootrope)  வாக அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும்.

புவிக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழலில் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் மனிதர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் சுவாச செயற்பாட்டிற்கு கேடு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்..

ஆனால் புவியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது. சூரிய ஒளிக் கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளன. இத்தகைய ஒளிக் கதிர்களை செங்கீழ்க் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். செங்கீழ்க் கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக ஓசோன் படலம் செயற்படுகின்றது.

ஓசோன் படைமண்டலத்தில் உற்பத்தியானாலும் இதன் 90 வீதம் படைமண்டலத்தின் தாழ் பகுதியில் உள்ளது. படை மண்டலத்தின் தாழ்பகுதியில் ஒட்சிசன், உயர் ஆற்றல் வாய்ந்த சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீசலின் மூலமும் ஓசோன்  உற்பத்தியாகின்றது. இப்பகுதி புவியின் வளிமண்டலத்தின் அதிகளவான பகுதியை (90%) உள்ளடக்கி உள்ளது. இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 10-25 மைல் (15-40 கிமீ) உயரத்தில் அமைந்துள்ளது.

வளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி ‘டாப்சன்” அலகினால் அளவிடப்படுகிறது. ஓசோன் அடர்த்தி கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் உள்ளன. அவற்றில் சில டாப்சன் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ப்ருவர் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ஜோடு மீட்டர், பில்டர் ஓசோன் மீட்டர் எம். 83, பில்டர் ஓசோன் மீட்டர் எம். 124, மாஸ்ட், ஒக்ஸ்போர்டு, சர்பேஸ் ஓசோன் பப்ளர், எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோன்ட் போன்றனவாகும்.

அண்டார்டிகா பனிக் கண்டத்தில் ஓசோன் அளவு பருவநிலைக்கேற்ப சிறிய அளவிலான மாறுதலுடன் சராசரியாக நிலவுகிறது. ஆனால் வசந்த காலத்தில் (ஆகஸ்ட், நவம்பர்) ஓசோன் அளவு சராசரி அளவில் 50 முதல் 60 வீதம் வரை குறைந்து காணப்படுகின்றது. இந்த ஓசோன் குறைவே ‘ஓசோன் துவாரம்” (Ozone hole)  என்று அழைக்கப்படுகிறது. பிரித்தானிய விஞ்ஞானி ஜே. போர்மன் தலைமையிலான ஆய்வுக் குழு அண்டார்டிகாவின் ‘ஹாலேபே” என்ற நிலையத்தில் 1970 ம் வருட மத்தியில் ஓசோன் அளவு குறைந்து காணப்பட்டதை முதன் முதலாகக் கண்டறிந்தது.

துருவப் பிரதேசத்தில் ஓசோன் அடர்த்தி குறைவதற்கு காரணமாக விளங்குவது துருவப் படை மேகங்களாகும். இந்த மேகங்கள் மீது நிகழும் பல்வேறு வகையான இரசாயனச் செயல்பாடுகளின் போது குளோரின் வெளிப்படுகின்றது. இந்த குளோரின் அணு ஓசோனுடன் தாக்கம் புரிந்து குளோரின் ஒட்சைட்டை வெளிப்படுத்துவதால் ஓசோன் செறிவு குறைகின்றது.

அண்டார்டிக் பகுதி ஒசோன் படுகையில் உள்ள ஓட்டை கடந்த 2007 இல் இருந்ததை விட இந்த ஆண்டு பெரிதாகியுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் 2006 இல் இருந்ததை விட ஓசோன் துவாரத்தின் அளவு குறைவாக உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து உலக வானிலை ஆய்வு மையம் 2008ம் ஆண்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டார்டிக் பகுதியில் உள்ள ஓசோன் படுகையில் 27 மில்லியன் சதுர கி.மீ. அளவு துவாரம் உள்ளது. இது கடந்த 2007ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 25 மில்லியன் சதுர கி.மீ. ஆகவும் 2000ம் ஆண்டில் 28.3 மில்லியன் ச. கி. மீ. ஆகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓசோன் படையினை கண்டுபிடித்த காலத்தில் இருந்து விஞ்ஞானிகள் அதன் இயற்கை அமைப்பு மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 1974 இல் இரசாயனவியலாளர்கள் சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பொருட்களினால் ஓசோன் படைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்தனர். இதனால் பல்வேறுபட்ட எதிர்விளைவுகள் ஏற்படுவதுடன் அதனை தடுப்பதற்கான சட்டதிட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை ஓசோன் படை தேய்விற்கு காரணமான பொருட்களை வெளியிடாமல் இருப்பதற்கான பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கடமை மக்களையே சார்ந்துள்ளது. 1995-ம் ஆண்டு ஓசோன் ஆய்விற்காக குரூட்சன் மற்றும் நிகோலஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அறிஞர்களின் விருப்பமெல்லாம் ‘இந்த பூவுலகை காக்கும் ஓசோன் படலத்தை காக்க உலகத்திலுள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும்” என்பதுதான்.

ஓசோன் துவாரத்திற்குக் காரணம் ஓசோனை தேய்வடைய செய்யக்கூடிய பொருட்களை வெளியிடுதலே (Ozone Depleting Substances) எனக் கூறப்படுகிறது. இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே உள்ளதுடன் இதற்கு காரணமாக குறிப்பிட்டு காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ் ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரோ காபன் (CFC, Chloro Floro Carban),  கார்பன் நாற்குளோரைட் (Carban Thetrachlorite), ஐதரோ குளோரோ புளோரோ கார்பன் (HCFC) மற்றும் மெதைல் புரோமைட் (Methil Bromite) போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்கு காரணமாக அமைகின்றன.

இவ்வூறு விளைவிக்கும் பதார்த்தங்கள் மேல் வளிமண்டலத்தினை அண்மித்தவுடன் அவற்றின் அணுக்களினை பகுதி பகுதியாக பிரித்துவிடுகின்றது. அப்பதார்த்தங்களை உருவாக்கியுள்ள அணுக்கள் அனைத்தும் விடுவிக்கப்படுகின்றன. உதாரணமாக குளோரீன் மற்றும் புரோமின் அணுக்களை குறிப்பிடலாம். இவ்வாறு விடுவிக்கப்பட்ட அணுக்கள் தமக்கு சேதம் விளைவிக்காது பிற பொருட்களை சேதமடைய செய்யும் செயற்பாட்டினூடாக ஓசோன் படை தேய்வினை துரிதப்படுத்துகின்றது. ஒவ்வொரு அணுவும் வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பதாக ஆயிரக்கணக்கான ஓசோன் மூலகங்களை அழிக்கக்கூடிய திறன்வாய்ந்தனவாக காணப்படும்.
ஓசோன் படைத் தேய்வினால் மனித சுகாதாரம் மற்றும் சூழல் மீது பாரிய தாக்கங்கள் ஏற்படுகின்றன.

புற ஊதாக்கதிர்வீசலின் UV அளவு அதிகரிப்பதினால் மனித சுகாதாரம் மற்றும் சூழலுக்கு தீங்கு தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றது.  பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழலின் சம நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. பூமியின் சராசரி வெப்பநிலை உயரும் போது பனிப்பிரதேசங்களில் மிகவும் அதிகமான பனி உருகி கடல் மட்டம் உயர்கிறது. கடல்மட்ட உயர்வின் விளைவால் கடலருகே உள்ள பூமியின் பெரும்பான்மையான நிலப்பகுதி நீரால் சூழப்பெற்று உயிரினங்கள் வாழும் நிலப்பகுதி வெகுவாக குறைந்து விடும் அபாயம் பூதாகாரமானதாக தெரிகின்றது. 

ஆய்வுகளின் படி UV கதிர்வீசலுக்கும் தோல் புற்றுநோய்க்கும் இடையில் திடமானதொரு உறவு நிகழ்வதாக கூறப்படுகின்றது. உலக சுகாதாரக் கழகத்தின் கண்டுபிடிப்புகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 லட்சம் பேர் தோல் புற்று நோய்க்கு ஆளாவதாகவும், இதில் 20 வீதத்தினர் புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளால் விளைந்தவையே என்றும் தெரிவித்துள்ளது. UV கதிர்வீசலினால் கண் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறானது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது. UV  தரை மேற்பரப்பை அடைவதுடன் அதனை உட்சுவாசிக்கும் போது நச்சுவாக மாறி சுவாசத்தொகுதி பிரச்சினைகளையும் உருவாக்குகின்றது. உயர் புறஊதாக்கதிர் மட்டமானது சில உயிர் வாழ் நுண்ணுயிர்களின் வாழ்வை பாதிக்கின்றது. உதாரணமாக Cyanobacteria நுண்ணுயிர்களானது பல தாவரங்களின் நைதரசன் நிலைநாட்டுகை செயற்பாட்டில் பிரதான பங்கினை வகிக்கின்றன. தாவரங்கள் UV கதிர்வீசலுக்கு இலகுவில் பாதிப்படைகின்றன.

இதன் காரணமாக பிளான்தன்களும் பாதிப்படைகின்றன. அதேவேளை பிளான்தன்கள் உணவு வலையின் முதல்நிலை உற்பத்தியாக்கிகளின் ஜீவாதாரமானவையாகும். சமுத்திரத்தின் பிளான்தன்களின் அளவு குறைவடைதலானது  (சமுத்திர உயிர் சூழலியல் செயற்பாட்டின் உணவு சங்கிலி முறைமையினுடாக) மீன்களின் அளவு குறைவடைவதற்கு வழிவகுக்கின்றது.

ஓசோன் படை தேய்வினை தடுப்பதும் ஓசோன் படையை பாதுகாப்பதும் பூமியின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிலைநாட்டுவதற்கு எடுக்கவேண்டிய முக்கிய விடயமாகும். எனவே ஓசோன் படை தேய்வினை தடுப்பதற்காக பூகோள ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள் போன்றவற்றின் பாவனையானது குளோரோ புளோரோ காபன், ஐதரோ குளோரோ புளோரோ காபன் போன்றவற்றினை வெளியிடுவதுடன் புவியின் நிலையான வாழ்க்கைக்கு பொறுப்பான சூழலுக்கு அபாயத்தினையும் விளைவிக்கின்றது. எனவே இச்சாதனங்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுச் சாதனங்களை கண்டுபிடிக்கவேண்டும். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் ஆகியவற்றில் குளோரோ புளோரோ கார்பனுக்கு ஈடான சுற்றுச்சூழலை மாசு அடைய செய்யாத வேறு பொருள்களை பயன்படுத்தவேண்டும்.

ஓசோன் படை தேய்வினை நோக்கிய சர்வதேச பிரயத்தனமாக
விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின் பின்பு உலகின் அனைத்து சமூகங்களும் இணைந்து 1985 இல் ஓசோன் படையினை பாதுகாப்பதற்காக ‘வியன்னா மகாநாட்டி”னை உருவாக்கின. இச்சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அதாவது 1987 இல் ‘மொன்றியல் சாசனம்” ஓசோன் தேய்வுப்பொருட்களை வெளியிடுவதனை தடுப்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டது. CFC, HCFC  மற்றும் ஏனைய தேய்விற்கு பொறுப்பான பொருட்களை வெளியிடாது சூழல்-நட்பான ஓசோனுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத மாற்றுப்பொருட்களை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.

‘மொன்றியல் சாசனப்” பிரகாரம் ODS  பொருட்களை உற்பத்தி செய்தல் நுகர்தல்  ஆகியவற்றினை கட்டுப்படுத்துதல், ODS  இன் சர்வதேச வர்த்தகத்தினை கட்டுப்படுத்தல், ODS இன் வருடாந்த உற்பத்தி தரவுகளைப் பேணுதல் போன்ற நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டன. அபிவிருத்தியடைந்த நாடுகள் பல்பக்க நிதியுதவியினை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கி மாற்று தொழினுட்பங்களை ODS  வெளியேற்றத்திற்கு பயன்படுத்தக் கோரியதில் சிறந்த பலன்கள் ஏற்பட்டுள்ளன. 192 நாடுகள் இதில் கையெழுத்திட்டு கொள்கை உருவாக்கியுள்ளதுடன் அதற்கான நிதிசம்பந்தமான விடயங்களுக்கு வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 7 அங்கத்தவர்கள் (அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இருந்து) பொறுப்பு வகிக்கக்கூடிய வகையில் இச்சட்டம் உருவாக்கப்பட்டது.

1992 இல் லண்டன் சட்டம் அதிகப்படியாக ஓசோனை சேதப்படுத்தும் பொருட்களை வெளியிடும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தொடர்பானதாக இருந்தது. 1996 இல் இச்சட்டம் விரைவுபடுத்தப்பட்டது.

ஓசோன் படை தேய்வினை குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவதானிக்குமிடத்து மானிடகாரணிகள் (Anthropogenic)  மூலம் வெளிவிடப்படும் பொருட்கள் ஓசோனின் உற்பத்தியை விட அழிவை துரிதப்படுத்துவதனால் இயற்கை சமநிலை குலைகின்றது. இந்த குளோபல் வார்மிங். [global warming], ஓசோன் ஓட்டை..[ozone depletion], பசுமை இல்ல விளைவு [green house effect], ஆகிய மூன்றுக்கும் அதிகப்படியான வாகன, தொழிற்சாலை, அணுமின் நிலையம், மின் உற்பத்தி இவைகளால் ஏற்படும் புகையே காரணமெனப்படுகிறது. மொன்றியல் சாசனத்தின் மூலம் ஓசோனின் மீள் உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் தொழிற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. ODS இரசாயனங்களை கட்டுப்படுத்தும் 296 திட்டங்களுக்கு நிதி உதவிகளும் அளிக்கப்படுகின்றன. கைத்தொழில் குழுக்கள்  (CFC மற்றும் ODS பாவனையாளர்கள்) சூழல்-நட்பு முறையிலான பாதுகாக்கப்பட்ட மாற்று முறைமைகளை கையாள முனைந்து வருகின்றன. தொழில்நுட்பத்தினூடாக மாற்று திட்டங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அமுல்படுத்துவதனை ஊக்குவித்து வருகின்றன .மொன்றியல் சாசனமானது வழக்கத்தை மாற்றி புதுமையை புகுத்தும் விடயங்களையும் தொழில்நுட்பத்தினூடாக அவற்றின் வியாபித்தலினையும் சட்ட ரீதியான மற்றும் நிறுவனரீதியான தடைகளை அகற்றுதலையும் செய்து வருகின்றது.

உலகரீதியாக நகரும் குளிரூட்டிகள்  (Mobile Airconditioner) சூழல்-நட்பு தொடர்பான நுட்பங்களுக்கு மாற்றப்பட்டு ஓசோன் படையினை பாதுகாப்பதுடன் அதேவேளை ODS,  பொருட்களினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களும் குறைக்கப்படுகின்றது. (ODS, Ozone Depliting Substances) 1970 காலகட்டங்களில் காணப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஓசோன் முறைமையினை மொன்றியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக இன்னும் 5-6 தசாப்தங்களில் எதிர்பார்க்கலாம் என வளிமண்டல கணினி மாதிரிகள் காட்டிநிற்கின்றன. அதாவது ஓசோன் படுகையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தினால், வரும் 2075ஆம் ஆண்டில் முற்றிலும் சீரடைந்த ஓசோன் படுகையை (அதாவது 1980ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போன்ற சூழலை) ஏற்படுத்த முடியும் என உலக வானிலை ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி கெய்ர் பிராத்தென் கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0916-international-ozone-day1.html

எந்தவொரு நாட்டுக்கும் தலைவணங்காத நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும் – அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

maithripalasirisena.jpgஉலகில் வேறு எந்த நாட்டுக்கும் தலைவணங்காத கெளரவமிக்க நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஓரிரு வருடங்களில் இது சாத்தியமாகுமென தெரிவித்த அமைச்சர், புதிய அரசியல் பரிமாணமொன்றைக் கட்டியெழுப்பி வருவதாகவும் தெரிவித்தார். தென்மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.பி.பி.யினர் வெற்றியை எதிர்பார்க்க மாட்டார்கள். தாம் வெற்றிபெறப் போவதில்லை என்பதை அவர்களே புரிந்து கொண்டுள்ளார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தென் மாகாண சபையில் போட்டியிடும் அபேட்சகர்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-

தென்மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை 80 வீத மேலதிக வாக்குகளால் வெற்றிபெறச் செய்வது அம்பாந்தோட்டை மாவட்ட மக்களின் பொறுப்பாகும். அம்பாந்தோட்டை மாவட்டம் பல வரலாற்று வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ள மாவட்டமாகும். இம்மாவட்டம் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த யுகமொன்றும் வரலாற்றில் இருந்துள்ளது. சர்வதேச ரீதியிலும் பல நாடுகள் சிதைந்துபோன வரலாறுகள் உள்ளன. இதற்குக் காரணம் சிறந்த தலைமைத்துவம் இல்லாமையே ஆகும்.

பயங்கரவாதத்தினால் எமது நாடு ஒரு துன்ப வரலாற்றை சந்திக்க நேர்ந்தது. அது நாடு துண்டாடப்பட்டதொரு யுகம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அத்தகையதொரு யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கு தெற்கு மக்களின் பூரண பங்களிப்பும் முக்கிய காரணமாகும். புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு தெற்கு மக்களின் பூரண பங்களிப்பு அவசியம்.  இதன் மூலமே சர்வதேச எதிரிகளுக்கும் எம்மால் பதில்கொடுக்க முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்நிகழ்வில் உரையாற்றுகையில், அமெரிக்க ஜனாதிபதிகளினால் செய்ய முடியாத பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி கொண்டதால் உலக நாடுகள் அனைத்தும் அவரைப் புகழ்கின்றன.

தென் மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி.யினரின் விமர்சனங்கள் வெறும் புஸ்வானமே. அவர்களால் எதையும் சாதிக்க முடியாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மர்ஹும் அஷ்ரப் 9 வது ஞாபகார்த்த தினம் இன்று

mhmasraf.jpgமு. கா. வின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரபின் 9 வது ஞாபகார்த்த தினம் இன்றாகும்.

இதனையொட்டி நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நேற்று புத்தளம் நகர சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

150909puttalam-wab.jpgபுத்தளம் நகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  ஆசிய பவுண்டேசனின் அனுசரணையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் புத்தளம் நகர சபையின் உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.எம்.முஹ்ஸி தலைமையில் புத்தளம் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

புத்தளம் நகர சபையின் பணிகள் குறித்து மக்களுக்கும், உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கவனத்திற்கும் கொண்டு வருவதே இதன் முக்கிய நோக்கம்.

‘puttalamucp@yahoo.com’ என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு புத்தளம் நகர சபையின் விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் டெனிஸ் சாம்பியன் பட்டம்; ஆர்ஜென்டினா வீரர் வசம்

160909.jpgஅமெரிக்க  கிராண்ட்ஸ்லாம் பகிரங்க டெனிஸ் சாம்பியன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்து முன்னிலை வீரர் ரொஜர் ஃபெடரரை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து சாம்பியன் பட்டத்தை ஆர்ஜென்டினா வீரரான ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ கைப்பற்றினார்.
 
நியூயார்க்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டெல் போட்ரோ 3-6, 7-6 (5), 4-6, 7-6 (4), 6-2 என்ற செட் கணக்கில் ஃபெடரரை வீழ்த்தினார். ஃபெடரர் இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தால் தொடர்ந்து 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் புரிந்திருப்பார்.

இதற்கு முன்னர் யு.எஸ். ஓபனில் தான் பங்கேற்ற 40 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்திருந்தார் ஃபெடரர். ஆனால் 41-வது ஆட்டத்தில் அவர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். மேலும் இதற்கு முன்னர் ஃபெடரர் – டெல் போட்ரோ மோதிய 6 ஆட்டங்களில் ஃபெடரரே வெற்றி பெற்றிருந்தார்.

அனுபவமிக்க வீரராக இருந்தும் டெல் போட்ரோவின் அற்புதமான ஆட்டத்தின் முன் ஃபெடரர் தோல்வி கண்டார்.

முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று ஆட்டத்துக்கு முன்னேறி வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளார் இந்த ஆர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோ.

மஹிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளையை சந்தித்துள்ளார்

150909navifora.jpgமனிதவு ரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதன் பிள்ளையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
 
இதன்போது, இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கையாளும் முறைகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
 
அதேவேளை, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முனைப்புகள் குறித்து அவர் இதன்போது, நவனீதம்பிள்ளைக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில், சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகள் நடத்தியது குறித்து அதை தாம் வரவேற்பதாக நவனீதம்பிள்ளை வெளியிட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.