”கல்முனை தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலகத்தை முழு நிறைவான அதிகாரங்களையுடைய பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் பணிகள் யாவும் பூர்த்தியடைந்து விட்டன. இப்பிரதேச செயலகப் பிரிவுக்கான எல்லைகளை வரையறை செய்யும் பணி பூர்த்தியடைந்ததும் கல்முனை தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலகம் சகல அதிகாரங்களையும் கொண்ட பிரதேச செயலகமாக வெகு விரைவில் தொழிற்படவுள்ளது.” இவ்வாறு தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரிய கல்லாறு கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நேற்று முன்தினம் பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் பொ. சதாகரன் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. முரளிதரன் தொடர்ந்து பேசுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் எல்லையில் உள்ள பெரியகல்லாறு, துறைநீலாவணை, கோட்டைக் கல்லாறு, ஒந்தாச்சிமடம், மகிளுர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையில் புதிய பிரதேச செயலகம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இக் கோரிக்கையினை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் ஜனாதிபதிக்கும் எடுத்துக் கூறி நிறைவேற்றித்தர முயற்சி செய்யவுள்ளேன்.
கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த போர்ச் சூழல் காரணமாக தமிழ் மக்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்து இன்னல் படுகின்றமை வரலாறாகும். இந்நிலையில் யுத்தத்தினால் அழிவுற்ற எமது பிரதேசத்தை சடுதியாக கட்டி எழுப்புவதென்பது கடினமான காரியம். படிப்படியாக எம்மால் முடிந்தவரை எமது மண்ணை அரச நிதியில் இயங்கும். நெக்டெப், நிக்கோட் திட்டத்தின் மூலமாக அபிவிருத்தி செய்து வருகின்றோம்.
இன்று உலக நாடுகள் கடன் வழங்கும் வீதத்தை குறைத்துள்ளன. மறுபுறம் பாரிய அழிவுகளைச் சந்தித்த எமது சகோதரர்கள், வாழும் வட மாகாணத்தை கட்டி எழுப்பும் பணியிலும் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
நாம் கடந்த காலத்தை அசைபோடுவதாலும், இரை மீட்பதாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே, எதிர்காலம் பற்றி சிந்தித்து எமது மக்கள் நிம்மதியாகவும், சுபீட்சம் நிறைந்தவர்களாகவும் வாழும் வழிவகைகளைக் காண வேண்டும். கால மாற்றத்திற்கேற்ப அரசியல் நகர்வுகளை திட்டமிட்டு மேற்கொண்டு மக்களின் நல்வாழ்வுக்காக உழைப்பதே எனது நோக்கமாகும்.
தேசியம் பேசிப் பேசி தமிழில் ‘தேசியம்’ என்ற சொல் தேய்வடைந்துவிட்டது. நாம் போராடிய வேளையில் அரசியல் காய் நகர்த்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சமூகம் சகல துறைகளிலும் முன்னேறிவிட்டதை மறந்துவிட முடியாது.
இந்நாட்டில் சிறு சிறு கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களால் தான் சார்ந்த சமூகத்திற்கு எதையும் பெரிதாக பண்ணிப்படைக்க முடியாமல் உள்ளதை புரிந்துகொள்ள வேண்டும். இதனை கருத்திற்கொண்டு ஆளும் கட்சியில் இணைந்து எமக்குரிய பங்கை நேரடியாக கேட்டுப் பெற இணைந்துள்ளேன். இதற்கு ஜனாதிபதி எனக்கு பக்கபலமாக இருக்கின்றார்.
இலங்கையின் வரலாற்றில் தேசிய கட்சி ஒன்றின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழன் நானாகவே இருக்க முடியும்.
அஃதே ஐக்கிய நாடுகள் சபையில் தமிழில் பேசிய ஒரேயொரு தலைவர் எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. எதிர்வரும் ஜனவரி மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரலாறு காணாத வெற்றியை காணவுள்ளார்.
இதனை தொடர்ந்து பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் விவேகத்துடன் நடந்து நான்கு தமிழ் பிரதிநிதிகளை ஆளும் கட்சியின் சார்பில் பெற்றால் நாம் முக்கியமான அமைச்சுக்களைப் பெற்று எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும். அஃதே அம்பாறை மாவட்டத்தில் இரண்டு தமிழ் பிரதிநிதித்துவத்தையும் பெற முடியும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிக்களை பாராளுமன்றம் அனுப்ப பெரும் பங்காற்றியவன் நான். இதனை கூட்டமைப்பு எம்.பியான கனகசபை அண்ணண் என்றும் நினைவு கூர்ந்து கதைப்பார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒவ்வாத விடயங்களைப் பேசி மக்களை ஏமாற்றாமல் உண்மையை உணர்ந்த பணியாற்ற வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் கல்முனை மாநகர சபையினர் கட்டடம் ஒன்றை அத்துமீறி நிறுத்தியுள்ளதாக கூறப்பட்டது. இக் கூட்டடம் முடிவுற்று செல்லும்போது அதனை அகற்றிவிட்டு செல்வேன்.
இன்று 1100 பேர் எமது மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளாக உள்ளனர். இவர்களுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்த உல்லாச பயண பயிற்சி பாடசாலையையும், இன்னும் பல வசதிகளையும் ஏற்படுத்தவுள்ளேன். ஜனாதிபதியின் கரத்தினை பலப்படுத்தி, எமது மண்ணை அபிவிருத்தி செய்ய யாவரும் உறுதிபூண வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது என்றார்.