செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வன்னி மக்களின் அவலத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது அல்ஜசீரா. – இலங்கைக்கு மற்றுமொரு தலையிடி

aljasira.jpgவன்னி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் அவல நிலை குறித்து “அல்ஜசீரா” தொலைக் காட்சிச் சேவை சுயாதீன விசாரணை அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது. இம்முகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் இம்முகாம்களில் மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டிருக்கும் மனிதாபிமானப் பணியாளர்கள் ஆகியோரை “அல்ஜீரா” பேட்டி கண்டுள்ளது.

தமிழ்ப் பிரஜைகளுக்கு எதிராகப் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், கற்பழிப்புகள், கடத்தல்கள், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற கொடூர நடத்தைகள், கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள் உட்பட வன்முறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் சர்வதேச சமூகம் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் “அல்ஜசீரா தொலைக்காட்சி” சேவை வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் மீது இலங்கை அரசினால் “அரச பயங்கரவாதம்” கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று தனது சொந்த ஆய்வு மூலம் வந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் பிரபல தொலைக் காட்சி சேவைகளில் ஒன்றான “அல்ஜசீரா தொலைக் காட்சி” சேவை இலங்கை அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக மாறலாம் என்றும் சர்வதேச அரசியல் அவதானிகள் நம்புகின்றனர்.  ஏற்கனவே “சனல்04” தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகளால் இலங்கை அரசு பலத்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமை தெரிந்ததே.

சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் ஆராய்வு

pree-7-9-9.jpgஇலங் கைக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் போலி வீடியோ காட்சியை வெளியிட்ட செனல் – 4 தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்றுக்காலை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இறைமையுள்ள நாடு என்ற வகையில் எமது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் முகமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதை இலகுவில் விடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டிற்கும் படையினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சிலர் அரசியல் ரீதியில் முன்னெடுத்த சதியாக இது இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சில வெளிநாட்டு ஊடகங்கள் இவ்வாறான செயற்பாடுகளை இலங்கைக்கு எதிராக முன்னெடுத்து பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வந்துள்ளமை எம்மை பொறுத்தமட்டில் முதற் தடவையல்ல என்று தெரிவித்த அமைச்சர் இதுபோன்ற பல அனுபவங்கள் உண்டு என்றும் குறிப்பிட்டார். எதிர்காலத்திலும் இதுபோன்ற செயற்பாடுகளை செய்ய வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை கோருவதாகவும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

அரசின் நிகழ்ச்சி நிரலில் மக்களின் பாதுகாப்புக்கே முதலிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

pr-tna.jpgநாட்டி னதும் மக்களினதும் நலனுக்காக ஒன்றாக இணைந்து செயலாற்றுவோம். விசேடமாக நாட்டில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தாங்கள் தயாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அலரிமாளிகையில் நேற்று மாலை இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இதில் கலந்து கொண்டார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 03 மணித்தியாலங்களாக இடம்பெற்றன. பயங்கரவாதத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக அரசு முன்னுரிமை அளித்து செயற்படுவதாகவும் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசின் நிகழ்ச்சிநிரலில் முதலில் இருப்பது மக்களின் பாதுகாப்பும் நலன்புரியும் என்றும் இங்கு கூறினார்.

அரசு முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்துக்கமைய கூடிய விரைவில் மீளக்குடியமர்த்தலை நிறைவு செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரமாக ஜனநாயகமாக சேவையாற்ற கிடைக்குமென்றும் இங்கு நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, மீண்டும் எல்.ரீ.ரீ.ஈ.க்கோ அல்லது பயங்கரவாத அமைப்புக்கோ மக்களை பலியெடுப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தையினை முதலாவது படியாக கருதி எதிர்காலத்தில் படிப்படியாக நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டு செயலாற்றுவதற்காக இவ்வாறான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்கு சுட்டிக்காட்டியது.

இதில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, ரிசாட் பதியுதீன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், எம்.பியுமான பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் உட்பட தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தா, கே. தங்கேஸ்வரி, சிவசக்தி ஆனந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், ஆர். எம். இமாம் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தி சென்னை வருகை நகரில் 3,000 போலீஸ் பாதுகாப்பு

‘‘காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி சென்னை வருவதை முன்னிட்டு 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்’’ என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார். ராகுல் காந்தி 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். நாளை சென்னை வருகிறார். இதுகுறித்து கமிஷனர் ராஜேந்திரன் நேற்று கூறியதாவது:

சென்னையில் 4 விழாக்களில் கலந்து கொள்ள ராகுல் காந்தி நாளை வருகிறார். 9ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம், சத்தியமூர்த்தி பவன், காமராஜர் அரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு, ஓட்டலில் தங்குகிறார். அடுத்த நாள், ஒரு ஓட்டலில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு, சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடக்கும் இடங்களில் 3,000 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். அடையாள அட்டை இல்லாதவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது.

நகரில் லாட்ஜ்கள், திருமண மண்டபங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஒத்திகைகளை ஏற்கனவே முடித்து விட்டோம். அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. உயரதிகாரிகள் நேரடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரில் ஏற்கனவே வாகன சோதனை, இரவு ரோந்து, பகல் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

அண்ணா பல்கலை. மாணவர்களுடன் கலந்துரை யாடல்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் நாளை ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார். இதற்காக பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா கலையரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரம் மாணவ, மாணவிகள் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேவையில்லாத கேள்விகள் கேட்டு, நேரத்தை வீணடிக்க கூடாது என்று மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேள்விகள் எந்த துறையை சேர்ந்ததாக இருக்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து நேற்று கூட்டம் நடத்தி முடிவு எடுத்துள்ளனர்.

பிரிட்டிஷ் முஸ்லிம்களுக்கு எதிராக விமான தாக்குதல் வழக்கில் தீர்ப்பு

080909uk.jpg2006 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவுக்கு பயணித்த ஒரு விமானத்தை வெடி வைத்து தகர்த்து அதிலிருந்தவர்களைக் கொல்ல சதி வேலையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி 3 பிரிட்டிஷ் முஸ்லிம் பிரஜைகளுக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

நீர்ம வெடிப்பொருட்களை குறைந்தது ஏழு விமானங்களுக்குள் அவர்கள் கடத்திக்கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சதித் திட்டம் அம்பலமாகியபோது விமானப் போக்குவரத்தில் பெரும் குழப்பம் எழுந்தது. இச்சம்பவத்தின் விளைவாக பயணிகள் தம்முடன் விமானத்திற்குள் கொண்டுசெல்லும் பொருட்கள் தொடர்பில் இன்றளவும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.

இந்தச் சதி நடந்திருந்தால் அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக இது இருந்திருக்கும் என்று விசாரணையாளர்கள் கூறுகின்றனர். இந்தச் சதியில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை எனத் தீர்ப்பளித்து பிரதிவாதிகள் வேறு நான்கு பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. மேலுமொருவர் மீது கொல்லச் சதி செய்தார் என்ற பொதுவான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தோட்டத்தொழிலாளர் சம்பள அதிகரிப்பு பேச்சு இணைக்கப்பாடின்றி முடிவு ஒத்துழையாமை போராட்டம் தொடரும் – தொழிற்சங்கம்

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் கூறினார். இராஜகிரியிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தில் நேற்று சுமார் இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் காணப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆகக்கூடியது 500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் நேற்றுடன் ஆறு தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன.

நாட் சம்பளத்தை ஆகக்கூடியது 500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக இதற்கு முன்னர் 05 தடவைகள் இருதரப்புக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிற்சங்கங்களினால் ஒத்துழையாமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆறு நாட்களாக தொழிற்சங்கப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று ஆறாவது தடவையாக முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஆகக்கூடியது 360 ரூபாவாக அதிகரிப்பதாக முதலாளிமார் சம்மேளனம் இப்பேச்சுவார்த்தையின் போது தீர்மானத்துக்கு வந்துள்ளது. இருப்பினும் தோட்டத் தொழிற்சங்கங்கள் இதனை நிராகரித்துள்ளன. அதனையடுத்து பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவுக்கு வந்ததாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேச்சாளர் கூறினார்.

தாம் முன்வைத்திருக்கும் கோரிக்கைக்கு சாதகமான முடிவு கிட்டும் வரை ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் தொடருமெனவும் தேவையேற்படின் வேறு விதமான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க தயாரெனவும் தோட்டத் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன், முன்னாள் எம். பி. யோகராஜன் மற்றும் ஹரிஸ் சந்திரசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

லங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சார்பாக கே. வேலாயுதம், மொஹிதீன் மற்றும் பெருந்தோட்டக் கூட்டு கமிட்டி சார்பாகவ எஸ். இராமநாதன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

களனி கங்கைக்கு அருகில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

070909.jpgமெளசாகலை நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்திருப்பதால் பாதுகாப்பு கருதி மூன்று வான் கதவுகள் திறந்து விடப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர சேவைகள் செயற்பாட்டுப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் கேர்ணல் கீர்த்தி ஏக்கநாயக்கா நேற்றுத் தெரிவித்தார்.

இந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதால் களனி கங்கையின் இரு மருங்கிலும் வாழுகின்ற மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடந்த சில தினங்களாக நீரேந்து பிரதேசங்களில் மழை பெய்து வருகின்றது.

இதனால் நேற்று காலை 5.30 மணியாகும் போது மெளசாகலை நீர்தேக்கம் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்தது. இதன் காரணத்தினால் பாதுகாப்பு கருதி இந்நீர்த் தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வான் கதவும் நான்கு அங்குலத்திற்குத் திறக்கப்பட்ருக்கின்றது.

இந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதால் களணி கங்கையின் நீர்மட்டம் உயிரும். அதனால் களனி கங்கைக்கு இரு மருங்கிலும், கித்துல்கல, தெரணியாகல, யட்டியந்தோட்டை, கேகாலை, தெகியோவிட்ட, அவிசாவளை ஆகிய பிரதேசங்களிலும் வசிப்பவர்களை விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

2008 ஆம் ஆண்டில் அதிக ஆயுத விற்பனை செய்த நாடு அமெரிக்கா

us-army.jpgகடந்த 2008 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக ஆயுத விற்பனை செய்த நாடாக அமெரிக்காதான் என்று அமெரிக்க நாடாளுமன்ற குழு தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” வளரும் நாடுகளுக்கான மரபு ஆயுத பரிமாற்றங்கள் ” என்ற தலைப்பின் கீழ் அமெரிக்கா கடந்த 2008 ஆம் ஆண்டு மேற்கொண்ட் ஆயுத விற்பனை குறித்து ஆய்வு செய்து, அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் மேற்கண்ட விவரம் இடம்பெற்றுள்ளதாகவும், உலகில் விற்பனையான மூன்றில் இரண்டு பங்கு ஆயுதங்களை அமெரிக்காவே விற்பனை செய்துள்ளதாகவும், ஏறக்குறைய 55.2 பில்லியன் டாலருக்கு இந்த் ஆயுத விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இதுவரை ஆயுத விற்பனை செய்து வந்த ரஷ்யாவின் மார்க்கெட்டையும் அமெரிக்கா தற்போது பிடித்து விட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘றுகுணு குமாரி’ கடுகதி ரயில் சேவை நேற்று அஹங்கமையில் தடம்புரள்வு – நண்பகலுடன் சேவை வழமை நிலையில்

rail-070909.jpgமாத்தறை யிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற றுகுணுகுமாரி கடுகதி ரயில் அஹங்கமையில் நேற்றுக் காலை 6.00 மணியளவில் தடம்புரண்டது. இதனால் கரையோர ரயில்கள் அஹங்கமை வரை மட்டுப்படுத்தப்பட்டி ருந்ததாகவும், நண்பகலுடன் சேவைகள் வழமைக்குத் திரும்பியதாகவும் ரயில்வே திணைக்கள முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

ரயில் தடம்புரண்டதையடுத்து பயணிகளை காலி வரை பஸ் வண்டியில் அழைத்துச் சென்று காலியிலிருந்து வேறொரு ரயில் மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்ல ஒழுங்குகள் மேற்கொண்ட தாகவும் ரயில்வே திணைக்கள முகாமையாளர் தெரிவித்தார். ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நேற்று நண்பகலுடன் பூர்த்தியானதும் ரயில் சேவையும் வழமைக்கு திரும்பியுள்ளது.

தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர்- பிரகாஷ் ராஜ்; சிறந்த படம் – காஞ்சிவரம்

pracas-raj.jpgதிரைப் படத்துறையில், கடந்த 2007ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ‘காஞ்சிவரம்’ சிறந்தப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நடித்த பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டின் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், இயக்குனர் ப்ரியதர்ஷன் இயகிய ‘காஞசிவரம்’ சிறந்த படத்துக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இப்படத்தில், கதாநாயகனாக நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ், சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார். கடந்த 1998ம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘இருவர்’ படத்திற்காக, சிறந்த துணை நடிகருக்கான விருதையும் ஏற்கனவே பெற்றவர் பிரகாஷ் ராஜ். இவர் கடந்த 2003ம் ஆண்டில் சிறப்பு ஜூரி விருதும் பெற்றவர்.

சிறந்த நடிகைக்கான விருதுக்கு, ‘குலாபி டாக்கிஸ்’ என்ற கன்னட படத்தில் நடித்த நடிகை உமாஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாலு பெண்கள் என்ற படத்தை இயக்கிய அடூர் கோபால கிருஷ்ணன், சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஷாரூக்கான் நடித்த ‘சக்தே இந்தியா’ சிறந்த பொழுதுபோக்கு படமாக தேர்வாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ என்ற திரைப்படம், சிறந்த குடும்பநல திரைப்படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.

2007ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கான போட்டியில், ஷாரூக்கானின் ‘சக்தே இந்தியா’வும், அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ம் முதல் இடத்தில் இருந்தன. இந்த இரு படங்களும் மிகப்பெரிய நடிகர்கள் நடித்த படம் என்பது மட்டுமின்றி, சமூக நலன் மற்றும் தேச நலன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தன.

இதனால், இந்த இரு படங்களில் ஏதாவது ஒன்று, சிறந்த படத்துக்கான விருதை பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, பிரகாஷ் ராஜின் யதார்த்த நடிப்பில், இயல்பான கதையை சொன்ன தமிழ் படமான ‘காஞ்சிவரம்’ சிறந்தப் படத்துக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. இப்படம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், பட்டு நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை மிக இயல்பாக சித்தரித்திருந்தது.

‘தாரே ஜமீன் பர்’ படத்தில் பாடிய ஷங்கர் மகாதேவன் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘தார்ம்’ படத்துக்கு, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படத்துக்கான விருது கிடைக்கவுள்ளது.

‘காந்தி மை ஃபாதர்’ படம் சிறந்த படத்துக்கான சிறப்பு ஜூரி விருதை பெற்றுள்ளது. அதோடு, சிறந்த திரைக்கதை (பெரோஷ் அப்பாஸ்) மற்றும் சிறந்த துணை நடிகர் ( தர்ஷன் ஷாரிவாலா) ஆகிய விருதுகளையும் இப்படம் பெற்றுள்ளது.

‘திங்க்யா’ என்ற மராத்திப் படத்தில் நடித்த சிறுவன் சரத் கோயங்கருக்கு, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படவுள்ளது. விருதுப் பெறுவோர் பட்டியல் கடந்த வாரமே தயாராகி விட்டது. எனினும், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் திடீர் மரணம் காரணமாக, இதுபற்றிய அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.