திரைப் படத்துறையில், கடந்த 2007ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ‘காஞ்சிவரம்’ சிறந்தப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நடித்த பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டின் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், இயக்குனர் ப்ரியதர்ஷன் இயகிய ‘காஞசிவரம்’ சிறந்த படத்துக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில், கதாநாயகனாக நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ், சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார். கடந்த 1998ம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘இருவர்’ படத்திற்காக, சிறந்த துணை நடிகருக்கான விருதையும் ஏற்கனவே பெற்றவர் பிரகாஷ் ராஜ். இவர் கடந்த 2003ம் ஆண்டில் சிறப்பு ஜூரி விருதும் பெற்றவர்.
சிறந்த நடிகைக்கான விருதுக்கு, ‘குலாபி டாக்கிஸ்’ என்ற கன்னட படத்தில் நடித்த நடிகை உமாஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாலு பெண்கள் என்ற படத்தை இயக்கிய அடூர் கோபால கிருஷ்ணன், சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஷாரூக்கான் நடித்த ‘சக்தே இந்தியா’ சிறந்த பொழுதுபோக்கு படமாக தேர்வாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ என்ற திரைப்படம், சிறந்த குடும்பநல திரைப்படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.
2007ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கான போட்டியில், ஷாரூக்கானின் ‘சக்தே இந்தியா’வும், அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ம் முதல் இடத்தில் இருந்தன. இந்த இரு படங்களும் மிகப்பெரிய நடிகர்கள் நடித்த படம் என்பது மட்டுமின்றி, சமூக நலன் மற்றும் தேச நலன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தன.
இதனால், இந்த இரு படங்களில் ஏதாவது ஒன்று, சிறந்த படத்துக்கான விருதை பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, பிரகாஷ் ராஜின் யதார்த்த நடிப்பில், இயல்பான கதையை சொன்ன தமிழ் படமான ‘காஞ்சிவரம்’ சிறந்தப் படத்துக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. இப்படம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், பட்டு நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை மிக இயல்பாக சித்தரித்திருந்தது.
‘தாரே ஜமீன் பர்’ படத்தில் பாடிய ஷங்கர் மகாதேவன் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘தார்ம்’ படத்துக்கு, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படத்துக்கான விருது கிடைக்கவுள்ளது.
‘காந்தி மை ஃபாதர்’ படம் சிறந்த படத்துக்கான சிறப்பு ஜூரி விருதை பெற்றுள்ளது. அதோடு, சிறந்த திரைக்கதை (பெரோஷ் அப்பாஸ்) மற்றும் சிறந்த துணை நடிகர் ( தர்ஷன் ஷாரிவாலா) ஆகிய விருதுகளையும் இப்படம் பெற்றுள்ளது.
‘திங்க்யா’ என்ற மராத்திப் படத்தில் நடித்த சிறுவன் சரத் கோயங்கருக்கு, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படவுள்ளது. விருதுப் பெறுவோர் பட்டியல் கடந்த வாரமே தயாராகி விட்டது. எனினும், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் திடீர் மரணம் காரணமாக, இதுபற்றிய அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.