செய்திகள்

செய்திகள்

செய்திகள்

துருக்கியில் வெள்ளத்தால் பலியானோர் தொகை 31

110909turky.jpgதுருக்கி யில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் தொகை 31ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினமிரவு துருக்கியில் பாரிய மழை பெய்தமையால் அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாகினர். பலர் வெள்ளத்தில் சிக்கி உயிருக்காகப் போராடியுள்ளனர். ஐம்பது வருடங்களின் பின்னர் துருக்கியில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் இதுவென அறிவிக்கப்பட்டது. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மக்கள் கூரைகளிலும் வாகனங்களிலும் ஏறி காப்பாற்றும்படி அவலக்குரல் எழுப்பினர். சிலர் உயர்ந்த வாகனங்களுக்கு மேல் ஏறி நின்றனர். ஆனால் காட்டு வெள்ளம் போல் பாய்ந்து வந்த வெள்ளம் வாகனங்களையும் அடித்துச் சென்றது. தொள்ளாயிரம் தீயணைப்புப் படையினர் ஆறு இராணுவ ஹெலிகொப்டர்கள், முப்பது பாரம் தூக்கி இயந்திரங்கள் என்பன மீட்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

ஆரம்பத்தில் 18 பேரின் சடலங்களை மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்தனர். கட்டட இடிபாடுகளுக்குள்ளிருந்து 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதில் பல பெண்களும் இறந்து கிடந்தனர். உள்துறை அமைச்சர் மக்களை அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் மேலும் மழை பெய்யலாமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

துருக்கிய பிரதமர் தையிப் எடார்கன் தலைநகர் ஸ்தான்புலுக்கு விரைந்து நிலைமைகளை பார்வையிட்டார். இதுவரை ஆயிரம் பேர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு உதவ கிரேக்கம் முன்வந்துள்ளது.

கூடாரங்கள், உணவுப் பொருட்கள், உடுதுணிகள் ஆகியவற்றை எகிப்தின் செம் பிறைச் சங்கம் வழங்கி வருகின்றது. வெள்ளம் காரணமாக உள்ளூரில் இடம்பெயர்ந்தோரின் புள்ளி விபரங்களை மதிப்பீடு செய்ய துருக்கி உள்நாட்டமைச்சு உத்தரவிட்டுள்ளது. 150 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் வெள்ளத்தில் நஷ்டமடைந்துள்ளன.

வாகனங்களைத் திருடி உதிரிப்பாகங்களை விற்று வந்த இருவர் கைது

nimal_madiwaka.jpgவாகனங் களை கொள்ளை யிட்டுச் சென்று அதன் உதிரிப்பாகங்களை விற்பனை செய்துவந்த இருவரை வவுனியா, இறம்பைக்குளம் பிரதேசத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் கொள்ளையிட்டு வைத்திருந்த முச்சக்கர வண்டி ஒன்றையும் மோட்டார் சைக்கிள் நான்கையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

வவுனியா விஷேட பொலிஸ் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இறம்பைக்குளம் பிரதேசத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்த அதேசமயம் அவர்களிடமிருந்து வாகனங்களையும் மீட்டெடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் இருவர் மேற்கொண்ட கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகவும், வாகன உரிமையாளர்கள் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு மறைய கல்வி ஒன்றே ஆயுதமாக இருக்க முடியும் – ராகுல்காந்தி

100909-rahul.jpgதமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கலையரங்கின் நுழைவுவாயிலில் மாணவி ஷிரீன் பாத்திமா பொன்னாடை போர்த்தி ராகுல் காந்தியை வரவேற்றார். அரங்கின் உள்ளே சென்றதும் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் பொன்னாடை போர்த்தினார். பின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. முதலில் ராகுல்காந்தி மாணவ-மாணவிகளிடம் பல கேள்விகளை கேட்டார். அதற்கு அவர்கள் பதில் அளித்தனர்.

பின்னர் மாணவ-மாணவிகளும் ராகுல்காந்தியிடம் கேள்வி கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

மாணவ, மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி  பேசுகையில், இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக இளைஞர்கள்தான் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் 48 சதவீதம் உள்ளனர். உலகின் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்று அதிக இளைஞர்களை காண முடியாது.

இவர்களில் 7 சதவீதம் பேர் தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கடினமாக உழைக்கும் திறன், புதியவற்றை கண்டுபிடிக்கும் திறமை, எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் உள்ளனர். ஏழைகளும் இருக்கிறார்கள். கல்வி கற்பதன் மூலமே வறுமையை ஒழிக்க முடியும். வளமாகவும் வாழ முடியும்.

உயர்கல்வி படிக்கும் 7 சதவீதம் பேர்களை ஒரு இந்தியாவாகவும், உயர்கல்வி படிக்காத மீதமுள்ள 93 சதவீதம் பேர்களை மற்றொரு இந்தியாவாகவும் பார்க்கிறேன். உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன. கிராமத்து மக்களுக்கு போதுமான சாலை வசதி, பஸ் வசதி, மின்சார வசதி, தகவல் தொடர்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன.

இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான பாதையில்தான் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு கிராமப்புறங்களில் பல கட்டமைப்பு வசதி இன்னும் குறைவாக உள்ளதால் விவசாய பொருட்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவு அதிகமாக உள்ளது. எனவே, அவர்களுக்கும் உற்பத்தி செலவை குறைக்க இந்த கட்டமைப்பு வசதிகள் உதவும். விவசாயத்தை எல்லோரும் ஊக்கப்படுத்த வேண்டும்.

நன்கு படித்தவர்கள் படிக்காத மற்றவர்கள் படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதோடு படிப்புக்கு உதவியும் செய்ய வேண்டும். ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு மறைய கல்வி ஒன்றே ஆயுதமாக இருக்க முடியும் என்பதுதான் உண்மை.

எனவே, இரு வேறு இந்தியாவாக இல்லாமல் 100 சதவீதம் பேரும் உயர்கல்வி கற்கும் நிலையை இந்தியா அடைய வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவை.

நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த எழுத்தறிவு மற்றும் கல்வி தரத்தை விட இப்போது அதிகம் உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, மாணவர்களே, உங்கள், தாத்தா-பாட்டி காலத்தில் இல்லாத வசதி வாய்ப்புகளை உங்கள் தாய், தந்தையர் பெற்றிருப்பார்கள்.

உங்கள் தாய், தந்தையர் பெற்றிருக்காத வசதியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதுவும், சிறப்பு வாய்ந்த இந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் நீங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  உண்மையிலேயே நாட்டில் நடக்கும் ஊழலுக்கு அரசியல் வாதிகள் மட்டுமே காரணம் என்பதை ஏற்க முடியாது

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐ.தே.க. பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முயன்று வருகிறது.

rajitha_senarathna00jpg.jpgதெற்கில் தேர்தல் நடைபெறுகிறபோதும் குருணாகலையில் அகிலா விராஜ் காரியவசத்தை காப்பாற்றும் போட்டியிலே ஐ.தே.க. தலைவர் இறங்கியுள்ளார். ஐந்து சதம் கூட பெறுமதியில்லாத மங்கள சமர வீரவை இணைத்துக் கொண்டதால் ஐ.தே.க. தலைவருக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

தெற்குத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐ.தே.க. வுக்கு இரு ஆசனங்கள் வீதம்தான் கிடைக்கும் ஜே.வி.பி.க்கு முழு மாகாணத்தில் இருந்தும் ஒரு ஆசனம் கிடைப்பது கூட கஷ்டமான காரியமாகும்.மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்  மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித மேலும் கூறியதாவது

இது வரை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி ஐ.தே.க. வின் வாக்குகள் 19 இலட்சத்தினால் குறைந்துள்ளன. இந்தத்தொகை தென் மாகாண தேர்தலின் பின்னர் 23 இலட்சமாக அதிகரிக்கும். ஐ.தே.க. வில் இருந்த பெரும்பாலான மக்கள் இன்று ஐ.ம.சு.மு. உடனே கைகோர்த்துள்ளனர். அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐ.தே.க. பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முயன்று வருகிறது. ஆனால் எவரையும் பிடிக்க முடியாது ஐ.தே.க. திண்டாடுகிறது.

அரச சாகித்திய விருதுகள்

இவ்வாண்டுக்கான இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் தங்க விருது பேராசிரியர் க. குணராசாவுக்கு (செங்கை ஆழியனுக்கு) வழங்கப்பட்டுள்ளது. சிங்களப் பிரிவில் கலாநிதி திஸ்ஸ காரியவசம் மற்றும் ஆங்கில பிரிவில் கலாநிதி ஆஷ்லி கல்பே ஆகிய இருவருக்கும் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத் துறையில் அவர்கள் ஆற்றிய சேவையை கெளரவிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. பரிசுத் தொகையாக ரூ. 75,000/- இவர்களுக்கு வழங்கப்படும்.

நேற்று கலாசார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இத்தகவல் வெளியிடப்பட்டதோடு இவ்வாண்டு சாகித்திய பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில், எட்டுப் பிரிவுகளில் தமிழ் நூல்களும் அவற்றின் படைப்பாளர்களின் பெயர்களும் அடங்கும். ஒவ்வொரு துறையிலும் இருவரின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

14ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் வைபவத்துக்கு இவர்கள் அழைக்கப்படுவர். அங்கேயே பரிசு எவருக்கு என்பது தெரிவு செய்யப்பட்டு ஒருவருக்கு விருதும் மற்றவருக்கு சான்றிதழும் வழங்கப்படும் என இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நாவல் இலக்கியம்: விதி வரைந்த பாதையில் – வவுனியர் இரா உதயன்

வயலான் குருவி – அkஸ் எம். பாயிஸ், அக்கரைப்பற்று

சிறுகதை இலக்கியம் : ஆத்ம விசாரம் – அ. ச. பாய்வா, மட்டக்களப்பு

உடைந்த கண்ணாடி மறைந்த குருவி – ஓட்டமாவடி அரபாத்

கவிதை : என்னைத் தீயில் எறிந்தவள் – அஷ்ரப் சிகாப்தீன்

வேறுடன் பிடுங்கிய நாளிருந்து – நீ. பி. அருளானந்தம், கல்கிசை

நாடக இலக்கியம் : ஒரு கலைஞனின் கதை – கலைஞர் கலைச்செல்வன்

வீர வில்லாளி – எஸ். முத்துக்குமாரன் – மட்டக்களப்பு

சிறுவர் இலக்கியம் : பூனைக்கு மணி கட்டிய எலி- சி. எம். எம். ஏ. அமீன்

குட்டி முயலும் சுட்டிப் பயலும் ஓ. கே. குணநாதன், மட்டக்களப்பு

நானவித இலக்கியங்கள் : கர்மயோகி பவுல் – வண. கலாநிதி எஸ். ஐ. மத்தியு, கல்முனை

மட்டக்களப்பு கோவில்களும் தமிழர் பண்பாடும் – எஸ். தில்லைநாதன், மட்டக்களப்பு

மொழிபெயர்ப்பு இலக்கியம் : நெடும் பயணம் – மடுளுகிரியே விஜயரத்ன

குருதட்சனை – திக்குவளை கமால்

சிறுவர் இலக்கிய மொழிபெயர்ப்பு : சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு – சரோஜனி அருணாசலம்

உலகிலேயே மிகவும் சிறிய கிளி இனம் பபுவா நியுகினியாவில் கண்டுபிடிப்பு

parrot999.jpgஉலகி லேயே மிகவும் சிறிய கிளி இனம் பபுவா நியுகினியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பபுவா நியுகினியாவிலுள்ள வடக்கு தாழ் நில பகுதியில் வாழும் இந்தக் கிளிகள், 9 சென்ரிமீற்றருக்கு குறைவான உயரத்தையும் 11.5 கிராமுக்கு குறைவான நிறையையும் கொண்டுள்ளன.

அமெரிக்க கலிபோர்னிய விஞ்ஞான கல்விக்கூடத்தைச் சேர்ந்த கலாநிதி ஜக் டம்பச்சர் என்பவர் தலைமையிலான குழுவினரே இந்த அரிய பறவையை எதுவித பாதிப்புமின்றி பிடித்துள்ளனர்.

அகதிகளின் நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டால் நிதியுதவி கிடையாது என்று ஐ.நா எச்சரிக்கை

இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களின் தங்கியுள்ளவர்களுக்கான நடமாடும் சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுக்கும் பட்சத்தில், அந்த முகாம்களுக்கான நிதியுதவியை தொடர்ந்து வழங்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

அங்கு தங்கியுள்ள தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு விரைவாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஐ. நா கூறியுள்ளது.

வன்னி மோதல்களால் இடம்பெயர்ந்த சுமார் மூன்று லட்சம் மக்கள் இந்த வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அங்குள்ளவர்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் இயக்க சந்தேக நபர்கள் இருப்பதாக கூறும் இலங்கை அரசாங்கம், அவர்களை சோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டியிருப்பதாக கூறுகிறது.

ஆனால், இந்த முகாம்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்ற ஐ. நா அமைப்பு இவ்வாறு பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து பொறுமையிழந்து வருவதாக தென்படுகிறது.

ஐ.நாவின் இலங்கை அலுவலக தலைமை பொறுப்பாளரான நீல் பூன் அவர்கள், இவ்வாறு அகதிகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த முகாம்களுக்கு தொடர்ந்து நிதி வழங்குவது முடியாது போகலாம் என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து இதுவரை 19360 பேரை விடுவித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. அதேவேளை அடுத்தகட்டமாக மேலும் பத்தாயிரம் பேரை விடுவிக்கும் நடவடிக்கையும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

கட்டட அமைப்பு சட்ட மூலம் பாராளுமன்றத்தில்

rajitha_senarathna00jpg.jpgகட்டட அமைப்பு அபிவிருத்தி சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரனையை கட்டட பொறியியலாளர் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்வைத்திருந்தார். கட்டட நிர்மான பயிற்சி நிலையம் ஒன்றை அமைக்கும் நோக்கில் இந்தச் சட்டமூலம் 1995 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இப்போது கட்டட நிர்மானத்துறையில் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கௌ;ள வசதியாக இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிககப்படவுள்ளது.

புளொட் நகரசபை உறுப்பினர்கள் பதவி சத்தியப்பிரமாணம்!

vavuniya-plote_MCMs ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)சார்பில் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் இன்று (10.09.2009) காலை நகரசபை உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் தந்தை செல்வா நற்பணி மன்ற தலைவரும் சமாதான நீதவானும் பிரபல சமூக சேவையாளருமாகிய வை.தேவராஜா முன்னிலையில் திரு.ஜி.ரி.லிங்கநாதன், திரு.சு.குமாரசாமி, திரு.க.பார்த்தீபன் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் புளொட் அமைப்பின் வன்னி மாவட்ட பொறுப்பாளர் திரு.பவன், வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.நிசாந்தன், வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு.சிவம் ஆகியோருடன் நகரசபை வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பெரியோர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் நகரசபை உறுப்பினர்களும், கட்சி முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் கோவிற்குளத்தில் அமைந்துள்ள உமாமகேசுவரனின் நினைவு இல்லத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினர்.

விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு

09-airways-99.jpg3  நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மும்பாய் செல்வதற்கு விமானக் கட்டணம் ரூ.4,000/- மட்டுமே. இது அதிகபட்சக் கட்டணம். ரூ.3,500க்கு கூட செல்லும் வசதி இருந்தது. இன்று விமானத்தில் சென்னையில் இருந்து மும்பாய் செல்ல குறைந்த பட்ச கட்டணம் ரூ.17,000

சென்னையில் இருந்து ஒவ்வொரு நாளும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு அதிக சேவைகளை இயக்கிவந்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, அதன் விமானிகளின் வேலை நிறுத்தத்தால் முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. ஜெட்-ஏர்வேஸ் சார்பில் சென்னையில் இருந்து மட்டும் தினமும் 17 விமானங்கள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது விமானிகள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த 17 விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

ஜெட் விமானிகள் வேலை நிறுத்ததால் நாடு முழுவதும் ஜெட்-ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஸ்பைஸ்ஜெட், ஏர்-இந்தியா, கிங்-ஃபிஷர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் விமான சேவைக் கட்டணத்தை ஒரே நாளில் பல மடங்கு வரை உயர்த்தியுள்ளன.