செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஸ்வைன்: மேலும் 9 பேர் பலி-இந்தியாவில் 125 பேர் மரணம்

swine.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மட்டும் சுமார் 9 பேர் இறந்துள்ளனர். இவர்களில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் 6 பேர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து கர்நாடக மாநில சுகாதார துறை அதிகாரியும், பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்க பிரிவின் தலைவர் வாசுதேவ் மூர்த்தி கூறுகையில்,கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 6 பேர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் பன்றி காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக இறந்த பெண்ணுக்கு 38 வயது என்றார். இதையடுத்து இந்தியா முழுவதும் சாவு எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 59, கர்நாடகாவில் 41 பேர் இறந்துள்ளனர். அதாவது, இந்த இரு மாநிலங்களில் மட்டும் 100 பேர் இறந்துள்ளனர்.

இந்திய – இலங்கை கடலுக்கடியிலான மின்சார இணைப்பு – இம்மாதம் ஒப்பந்தம் கைச்சாத்து

under_seaelectricity.jpgஇந்திய – இலங்கைக்கு இடையில்  கடலுக்கடியிலான  மின்சார  பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்த மாதத்திற்குள்  கைச்சாத்திடப்படுமென மின்சக்தி எரி சக்தி  அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம் தென்னிந்தியாவில் இருந்து தலைமன்னார் வரையான கடலுக்கடியிலான மின்சார பரிமாற்றப்  பணிகளுக்கான ஆயத்தங்கள் தயாரகவிருப்பதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளுக்கு யுஎஸ் எயிட் நிறுவனம் ஒத்துழைப்பினை வழங்கவுள்ளது.

காதலுக்காக கண்களில் தீ வைத்துக் கொண்ட காதலி

06-eye.jpgகாதலனை பார்க்காத முடியாத கண்கள் தேவையில்லை என்று கூறி காதலி ஒருவர் கண்களில் தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம், காந்திஜி நகரைச் சேர்ந்தவர் மேனகா (18). இவரும், இதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகமும் (20) கடந்த ஓரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், காதலன் ஆறுமுகத்தை பார்க்க மேனகாவுக்கு அவரது பெற்றோர்கள் தடை போட்டனர்.

இதனால், மனமுடைந்த மேனகா காதலனை சந்திக்க முடியாத தனது கண்கள் தனக்கு தேவையில்லை என்று கூறி தனது கண்ணில் தீ வைத்துக் கொண்டார்.

இதையடுத்து தீ, முகம், கைகள், மார்பு என பரவி படுகாயம் அடைந்தார் மேனகா. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள 50 தமிழர்கள் நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

britain.jpgஇலங்கையில் இருந்து வெளியேறி அகதிகளாக வந்து இங்கிலாந்தில் தங்கியுள்ள தமிழர்களை இலங்கைக்குத் திரும்ப அனுப்ப அந்நாடு முயற்சிக்கிறது என்று அங்கு வாழும் தமிழர்கள் கூறியுள்ளனர்.
 
இலங்கையில் போர் முடிந்துவிட்டது, அங்கு உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என்று கூறும் இங்கிலாந்து அரசு அதிகாரிகள், தங்களை வெளியேற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அகதிகளாக அங்கு வாழும் தமிழர்கள் பிபிசி தொலைக்காட்சியின் சிங்கள மொழிச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளனர்.

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கருத்து ஒற்றுமையுடன் கூட்டமைப்பின் உத்தேச அரசியல் தீர்வு யோசனை மாவை சேனாதிராஜா தகவல்

mavai0000.jpgதமிழ் மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு ஒன்றைக் காணக்கூடிய வகையில் தாம் முன்வைக்கவுள்ள யோசனைகள் தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.
இந்திய அரசின் ஆலோசனையுடன் ஈழத் தமிழருக்குரிய அரசியல் தீர்வு யோசனை ஒன்றைத் தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தயாரித்து வருகின்றது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் உத்தேச யோசனைகள் குறித்து தமிழ்க் கட்சிகளுடனும் முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுக்கள் நடத்தி கருத்தொற்றுமையுடன் ஒட்டுமொத்தமாக ஒரேயோசனையாக முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் .

தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் அந்த யோசனை அமையும். அந்த மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளுடன் ஆராய்ந்தே யோசனை முன்வைக்கப்படும்  என்றும் அவர் விவரித்துள்ளார் .
தமிழ் பேசும் சகல தரப்பினரும் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிரந்தர தீர்வை காணக்கூடிய வகையில் உத்தேசயோசனை அமையவேண்டும் என்பதே எமது எண்ணம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பிரதமர் ஜப்பான் விமான நிலையத்தில் விசாரணை

ஜப்பானிய அனைத்துலக வானூர்தி நிலையத்தில் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் விரல் ரேகை நேற்று சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டதுடன், அவர் 30 நிமிடங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

மிக முக்கிய நபர்களுக்கு (விஐபி) வழங்கப்படும் மதிப்பு பிரதமருக்கு ஜப்பானின் நரிட்டா வானூர்தி நிலையத்தில் வழங்கப்படவில்லை என்றும் சாதாரண பயணிகள் பின்பற்றும் நடைமுறையைப் பின்பற்றுமாறு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார் எனவும் அவருடன் வானூர்தியில் பயணம் செய்த பயணி ஒருவர் தெரிவித்தார்.
 
 ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் சென்றுள்ளார். கோபேயில் இருந்த ஜப்பானிய ஆலயம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டி இருந்தபோதும் அவர் விரைவாக வானூர்தி நிலையத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
 
 இது தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் கேட்டபோது, வானூர்தி நிலையத்தில் நடைமுறைத் தாமதம் ஏற்பட்டதாலேயே பிரதமருக்கு மிக முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு தவிர்க்கப்பட்டதாகக் கூறினர்.
 
 இந்தச் சம்பவம் குறித்து ஜப்பானில் உள்ள சிறிலங்கா தூதரகத்திடம் இருந்து அறிக்கை ஒன்றை அமைச்சர் ரோகித போகல்லாகம் கேட்டுள்ளார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

அடையாளம் காணப்பட்ட 35 கிராமங்களில் அடுத்த மாதம் முதல் மீள் குடியேற்றங்கள்

badi000000.jpgவவுனியா மாவட்டத்தில் 35 கிராமங்கள் மீள்குடியேற்றத்துக்காக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். இம்மீள் குடியேற்றங்கள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

‘வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 35 கிராமங்களிலும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் கூறினார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமமான சாலம்பைக்குளத்திலும் 400 முஸ்லிம் குடும்பங்கள் இத் திட்டத்தின் கீழ் மீள்குடியமர்த்தப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார்.

புலிப் பயங்கரவாதிகளால் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இக் கிராமங்களிலுள்ளவர்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன் இவர்கள் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெயர்ந்தவர்களாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். சாலம்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 முஸ்லிம் குடும்பங்கள் இடம் பெயர்ந்து அனுராதபுர மாவட்டம் ரம்பாவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்தோரின் விருப்பின் பேரில் அடுத்த மாதமளவில் இவர்கள் மீண்டும் சாலம்பைக்குளத்தில் மீளக்குடியமர்த்தப்படுவர். மீளக்குடியமர்த்தலை துரிதப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் இணைந்து வவுனியா மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 35 கிராமங்களிலும் கிராமிய கட்டமைப்புக்கான அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றன. தற்போது இக் கிராமங்களில் கூட்டுறவுச் சங்கங்கள், பாடசாலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கிராமங்களுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறினார்.

மீளக் குடியமர்த்தப்படவுள்ள கிராம வாசிகளின் பிரதான ஜிவனோபாய தொழில் விவசாயமாக இருப்பதனால் “பெரும்போக” செய்கை ஆரம்பிப்பதற்கு முன்னமாகவே இவர்களை தமது இடங்களில் குடியமர்த்தி தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜஸ்வந்த்சிங் புத்தகத்திற்கு மாநில அரசு விதித்த தடை குஜராத் மேல் மன்றால் நீக்கம்

ஜஸ்வந்த் சிங் புத்தகத்திற்கு குஜராத் முதல்வர் மோடி அரசு விதித்த தடையை அம்மாநில மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. தடை விதிக்கப்பட்டதில் சட்ட விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

பா. ஜ. மூத்த தலைவராக இருந்த ஜஸ்வந்த் சிங் சமீபத்தில், “ஜின்னா – இந்தியா, பிரிவினை, சுதந்திரம்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது புத்தகத்திற்கு, குஜராத் முதல்வர் மோடி தலைமையிலான அரசு தடை விதித்தது.

இந்தத் தடையை எதிர்த்து, மணீஷி ஜானி, பிரகாஷ் ஷா ஆகியோர் குஜராத் மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை, தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது.

குஜராத் அரசு விதித்த தடையை நீக்கிய நீதிபதிகள், தங்கள் உத்தரவில் கூறியதாவது:- ஜஸ்வந்த் சிங் புத்தகத்திற்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டதில், உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. புத்தகத்தில் உள்ள விவரங்கள் தேசிய நலனுக்கு எதிரானவை மற்றும் மக்களை திசை திருப்புபவை எனக் கூறி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 95 ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை மூலம், ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில், புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிக்கையில் குறிப்பிடவில்லை. மேலும் புத்தகத்தை படிப்பதன் மூலம், எந்த வகையில் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படும் என்பதையும் தெரிவிக்கவில்லை.

அதே நேரத்தில், புதிதாக ஒரு அறிக்கையை வெளியிட குஜராத் மாநில அரசு தீர்மானித்தால், அதற்கு தடையில்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். தன் புத்தகத்திற்கு மோடி அரசு விதித்த தடையை குஜராத் மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளதை ஜஸ்வந்த் சிங் வரவேற்றுள்ளார். தீர்ப்பு, தனக்கு எழுச்சியை உண்டாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியிலுள்ள ஏனைய மாநிலங்களில் இந்தப் புத்தகத்திற்குத் தடைவிதிக்கப்படவில்லை.

சம்பள அதிகரிப்பு வழங்க மறுத்தால் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு

pluckers.jpgதோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்தன.

இதேவேளை, நாளை திங்கட்கிழமை கொழும்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையை முன்வைத்து தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்திய போதும், சம்மேளனம் அதற்கு இணங்காமையினால் பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இழுபறியிலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில், தமது கோரிக்கைக்கு முடிவு காணப்பட வேண்டுமெனக் கோரி, கூட்டு கமிட்டியின் ஆதரவுடன் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடையாள தொழிற்சங்கப் போராட்டமாக ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நாளைய பேச்சுவார்த்தையும் சாதகமாக முடியாத பட்சத்தில் ஒத்துழையாமை போராட்டம் தொடர்ந்தும் கடுமையாக முன்னெடுக்கப்படுமெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மு. சிவலிங்கம் கூறினார்.

தோட்டத் தொழிலாளிகளின் அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தக் கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியனவே முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்தி வருகின்றன.

அராலியில் மூலிகை தோட்டம்: அச்சு வேலியில் மருந்து உற். பிரிவு

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று 6ம் திகதி யாழ். குடாவில் பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப் படவுள்ளன.

இந்நிகழ்வுகளில் சுதேச மருத்துவ துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த கலந்துகொள்ளவுள்ளார். யாழ். குடாவின் அச்சுவேலி பகுதியில் மருந்து உற்பத்தி பிரிவையும் அராலியில் மூலிகைத் தோட்டத்தினையும் அமைச்சர் இன்று திறந்து வைப்பார்.

இந் நிகழ்வுகளில் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த சமூக நலத்துறை அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா, மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ், சுகாதார சுதேச வைத்திய துறை மாகாண செயலாளர் இ. ரவீந்திரன் ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் திருமதி ரமணி குணவர்தன, மாகாண பணிப்பாளர் திருமதி துரைரட்ணம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை, இலங்கை ஆயுர்வேத வைத்திய சபை ‘வடக்கின் வைத்திய வர்ண’ என்ற பெயரில் நடமாடும் சேவையை வெள்ளிமுதல் இன்றுவரை நடத்தி வருகிறது.