இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் சூழ்நிலையில் இந்தியாவில் அந்நாட்டு தூதரகம் இருக்க கூடாது. அடுத்த மாதத்துக்குள் இலங்கை தூதரகத்தை மூட வேண்டும். இல்லையென்றால் படும் போராட்டம் வெடிக்கும் என்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தேமுதிக கட்சி பிரமுகர் தட்சிணா மூர்த்தியின் மகளின் திருமணம் இன்று ராமநாதபுரத்தில் நடந்தது. அதில் கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் இலவச கணினி பயிற்சி மையத்தையும் துவக்கி வைத்தார். பின்னர் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில்,
ஈழத்தமிழர்களுக்காக பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது நடிகர்கள் உண்ணாவிரதத்தை நடத்தினேன். நான் 1983 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கை தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.
கருணாநிதி இன்று அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்கிறார். ஈழத்தமிழர்களுக்காக எம்ஜிஆர் கருப்புச் சட்டை அணிய சொன்னபோது, கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்தாரா? அப்போது அவர் ஏன் அந்த ஒற்றுமையை காட்டவில்லை. இலங்கையில் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது மத்திய அரசும், சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
இலங்கை அரசு கத்தி வைத்துள்ளது. புலிகளிடம் கேடயம் தான் உள்ளது. அதை வைத்து இலங்கையின் போரை புலிகள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் கேடயத்தை போடு என்று சொன்னால் கத்தி வைத்திருப்பவன் சும்மா இருப்பானா?
இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒட்டு மொத்த உணர்வையும் காட்ட மிகப் பெரிய போராட்டம் தேவை. இதில் ஐநாவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தலையிட வேண்டும். அவர்களுக்கு தமிழர்கள் அனைவரும் தந்திகளும், எஸ்எம்எஸ்சும் அனுப்ப வேண்டும். இரண்டு நாளில் நான் அதற்கான முகவரியை தருவேன்.
வரும் 21ம் தேதி இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒபாமா தலையிட வேண்டும் என்று கோரி அமெரிக்க தூதரகத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். அப்போது இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கும்போது இங்கே இலங்கை தூதரகம் எதற்கு? இருநாடுகளுக்கிடையே சுமுக உறவு வேண்டும் என்பதற்காக தான் தூதரகம் வேண்டும். தமிழினம் அழியும் போது இங்கு சிங்களவன் ஏசி அறையில் சொகுசாக இருப்பது தேவையா? என்று எண்ணி பார்க்க வேண்டும். மார்ச் மாதத்திற்குள் இலங்கை தூதரகத்தை மூடா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்.
பதவியை துறந்தால் தனி ஈழம் கிடைக்குமா என்று முதலமைச்சர் கேட்கிறார். இதிலிருந்தே தனிஈழம் கிடைக்காது என்று அவர் எண்ணுகிறார் என்பது தெரிகிறது. 2 மாதத்தில் முடிய போகின்ற மத்திய அரசிலில் இருந்து நாங்கள் பதவி விலகினால் என்ன ஆகப்போகிறது என்று கேட்கிறார்கள்.
இலங்கை பிரச்சனையில் பிரதிபலன் எதிர்பாராமல் அன்றிலிருந்து பாடுபடுபவர் நெடுமாறன் ஒருவர் தான். அவரை நான் பாராட்டுகிறேன். மதிக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்ற இலங்கை பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்கள்.
கருணாநிதி நான் உழைக்கவே பிறந்தவன் என்கிறார். ஜெயலலிதாவோ முற்றும் துறந்த துறவி என்கிறார். முற்றும் துறந்தவருக்கு முதல்வர் பதவி எதற்கு?