செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இலங்கை சமாதான செயலகப் பணிகள் நேற்றுடன் நிறைவு

profrajiwawijesinha.jpgஇலங்கை சமாதான செயலகத்தின் பணிகள் நேற்று 31 ஆந் திகதியுடன் நிறைவு பெற்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரையின் பேரில் சமாதான செயலகம் தனது பணிகளை நிறைவு செய்து கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெற்றுக் கொள்ளப்பட்ட இராணுவ வெற்றியைத் தொடர்ந்து சமாதான செயலகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக செயலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆலோசனைகளின் பின்னர் சமாதான செயலகத்தை மூடும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது கடந்த 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி சமாதான செயலகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பேர்னாட் குணதிலக்க, ஜயந்த தனபால, பாலித கொஹணே உள்ளிட்டோர் சமாதான செயலகத்தின் பணிப்பாளர்களாகக் கடந்த காலங்களில் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமாதான செயலகப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய நபர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

3வது போட்டியிலும் பங்களாதேசம் வெற்றி

shakib-al-hassan.jpgமேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியிலும் பங்களாதேசம் வெற்றி பெற்று 3 போட்டிகளையும் வென்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு பட்டை நாமம் போட்டுள்ளது.

சகலதுறை ஆட்டக்காரர் முகமதுல்லா 51 ஓட்டங்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த பங்களாதேச அணி முதலில் 2 டெஸ்ட் போட்டிகளி்ல் ஆடியது. இதில் இரண்டிலும் வென்று தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

பின்னர் ஒரு நாள் போட்டிகள் தொடங்கின. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றி மேலும் ஒரு சாதனையைப் படைத்தது. இந்த நிலையில் பாசதீரேவில் நடந்த 3வது போட்டியிலும் வென்று பெரும் சாதனை படைத்து விட்டது. ஒரே நேரத்தில் பங்களாதேச அணி இப்படி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை அமோகமாக கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

இப்போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேசம்  வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு பட்டை நாமம் போட்டு விட்டது. சகலதுறை ஆட்டக்காரர்  முகமதுல்லா ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்கள் எடுத்தும், 2 விக்கெட்களை வீழ்த்தியும் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆட்ட நாயகனாக முகமதுல்லாவும், தொடர் நாயகனாக பங்களாதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் தேர்வு செய்யப்பட்டனர்.

உலக சாரணர் தினம் – புன்னியாமீன்

baden-powell.jpgஉலக சாரணர் தினம் ஆகஸ்ட் 01ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூரும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக ஆகஸ்ட் முதலாம் திகதி என சில நாடுகளில் இத்தினம் சிறப்புத்தன்மை பெற்றாலும்கூட, ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும். 1907ம் ஆண்டு ஜுலை மாதம் 28ஆம் திகதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும், தன்னலமற்ற மனித நேயமிக்க சேவையுணர்வை உலகில் விதைத்திட்ட ‘சேர். றொபர்ட் ஸ்டீவன் ஸ்மித் பேடன் பவல்” என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும், சாரணியப் பாசறையும், ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் ஆறாம் திகதி வரை நிகழ்ந்தது. எனவே, முதலாவது சாரணிய இயக்கப் பாசறை நடைபெற்ற தினத்தை அடிப்படையாகக் கொண்டே உலக சாரணியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

சமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சிக்களமாகக் கல்விச்சாலைகளில் மாணவ, மாணவியர்களுக்கான சாரணர் இயக்கம் உலகளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதி, மத வேற்றுமை கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது. வயது வந்தோர்க்கான கல்வி, சாலை விதிமுறைகளை மேற்கொள்ளுதல், விழா நடைபெறும் காலங்களில் கூட்டத்தினைக் கட்டுப்படுத்துதல், மரங்களை நடுதல் போன்ற பணியினைச் சாரணர் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

வாய்மை, நேர்மை, நம்பகத்தன்மை, தேசப்பற்று, நேசம் ஜீவகாருண்யம், மரியாதை, தைரியம் போன்ற இன்னோரன்ன ஆளுமை விருத்தியம்சங்களைக் கொண்டு மனித நேயப்பண்புகளுடன் சேவைகள் மூலம் சமூகத்துடன் ஒன்றிணைந்த அமைப்பாக மிளிரும், ‘எதற்கும் தயாராக இரு! ” எனும் தொனிப் பொருளைக் கொண்ட சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பிதாவாகக் கருதப்படும் பேடன் பவல், 1857 பெப்ரவரி 22ம் திகதி பிறந்தார். ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.

புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். இளம் வயதில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பேடன் பவல் இந்தியா, கனடா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரிந்தார். 1910 இல் ஓய்வு பெற்றார். தென்னாபிரிக்காவில் பணியாற்றிய வேளையில், 1907ம் ஆண்டில் 22 இளைஞர்களுடன் சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தார். லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும் சாரணியப் பாசறையும், இவரால் நிகழ்த்தப்பட்டது. சிறுவர்களுக்கான சாரணீயம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆபிரிக்காவிற்குத் திரும்பிய பேடல் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார்.

1910ல் சாரணியம் உலகெங்கும் பரவத் தொடங்கியது. தற்போது உலகில் சாரணர் சங்கங்கள் 216 நாடுகளில் செயல்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடுதலான நாடுகளில் செயல்படும் தொண்டு நிறுவனமாக சாரணர் அமைப்பு விளங்குகின்றது. உலகம் முழுவதிலும் 38 மில்லியன் சாரணர்கள் உள்ளனர். ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் 18 மில்லியன் சாரணர்கள் உள்ளனர் எனபுள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன..

1912ல் உலக சகோதரத்துவத்தை வளர்க்கும் தூரநோக்கில் உலகப் பயணத்தை பேடன் பவல் மேற்கொண்டார். இதேவேளை அவரது பாரியார் சீமாட்டி ‘ஒபேவா பேடன் பவல்” 1910ல் பெண்கள் சாரணியத்தை ஆரம்பித்து உலகெங்கும் வியாபிக்க வழிகோலினார். 1916ல், குருளைச் சாரணர் இயக்கமும், 1918ல் ரோவர்ஸ் சாரணர் இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இன்று சாரணியர் இயக்கமும், பெண்கள் சாரணிய இயக்கமும் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றன. இவை எதிர்காலச் சமூகத்திற்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. உலக சகோதரத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட சாரணியத்தின் மூலமாக உலக நாடுகளில் சமாதானத்தையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்புதல் வேண்டும், என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகும். பேடன்பவல் தனது இறுதிக்காலத்தில் துணைவியாரோடு ஆபிரிக்காவில் வசித்தார். 1941-01-08ம் நாள் காலமானார்.

1920ல் உலக சாரணர்களை ஒன்றிணைத்து, சாரணர் ஜம்போரி ஒன்றை தனது தலைமையில் இங்கிலாந்தில் கொண்டாடினார். இந்நிகழ்வு 1920-08-06ம் திகதி இடம்பெற்றது. அந்நாளில் பேடன்பவல் உலகின் பிரதம சாரணர் எனப் பிரகடனப்படுத்தப்பட்டார். இவரை இங்கிலாந்தின் 5ம் ஜோர்ஜ் மன்னர், ‘கில்வெல் பிரபு” எனப் பெயர்சூட்டி, பாராட்டிக் கெளரவித்தார். அன்று முதல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை சாரணர் ஜம்போரி உலக நாடுகளில் நிகழ்கின்றது.

இன்று உலகில் பெருமளவு நாடுகளில் பலகோடி சாரணர் இயக்கங்கள் உருவாகி, பேடன் பவல் பிரபுவின் தூரநோக்கை நிறைவேற்றி வருகின்றமை, நிறைவளிக்கின்றது. சாரணியர் அமைப்பு உலகமயப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். சாரணர் இயக்கத்தில் ஜம்போரிப் பாசறைகள் முக்கியத்துவம் பெற்றவை. சாரணர் உலக ஜம்போரிகளில், உலகளாவிய ரீதியில் சாரணர்கள் ஒன்றிணைக்கப்பட்டு பயிற்சிக்கும், செயற்பாட்டிற்கும், கடமையுணர்வு, நற்புணர்வு ஆகியவற்றிக்கு ஏற்ற வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். ஆரம்பகாலங்களில் ஜம்போரிகளில் உலகளாவிய சாரணர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். தற்போதைய நாடுகளில் அளவிலும் பிரதேச, பிராந்திய ரீதியிலும் தலைமைத்துவம் ஏற்றுள்ள சாரணியத்தில் சாதனை படைத்துள்ள சாரணர்களே ஜம்போரியில் வரையருக்கப்படுகின்றனர்.

முதலாவது சாராணியர் உலக ஜம்போரி (உலக சாரணியர்களை ஒன்றிணைக்கும் பாசறை) 1920ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஒலிம்பியா எனுமிடத்தில் நடைபெற்றது. முதலாவது உலக ஜம்போரியில் 34 நாடுகளைச் சேர்ந்த சுமார் 8, 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது உலக ஜம்போரி, 1924ஆம் ஆண்டு டென்மார்;கில் நடைபெற்றது. இதில் சுமார் 5, 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர்.

1929ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவது உலக ஜம்போரில் 69 நாடுகளைச் சேர்ந்த சுமார் 50, 000 சாரணியர்கள் கலந்துகொண்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. தொடர்ந்து நான்காவது உலக ஜம்போரி 1933ஆம் ஆண்டு ஹங்கேரியிலும் (25, 792 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஐந்தாவது உலக ஜம்போரி 1939ஆம் ஆண்டில் ஹொலன்டிலும் (28, 750 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஆறாவது உலக ஜம்போரி 1947ஆம் ஆண்டு பிரான்சிலும் ( 24, 152 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஏழாவது உலக ஜம்போரி 1951ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலும் ( 12, 884 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), எட்டாவது உலக ஜம்போரி 1955ஆம் ஆண்டு கனடாவிலும் (11, 139 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), 80 நாடுகளிலிருந்து சுமார் 30, 000 பேர் கலந்துகொண்ட ஒன்பதாவது உலக ஜம்போரி 1957ஆம் ஆண்டு இங்கிலாந்திலும் 44 நாடுகளிலிருந்து 12 ,203 பேர் கலந்துகொண்ட பத்தாவது உலக ஜம்போரி 1959ஆம் ஆண்டு பிலிப்பைன்சிலும் 14, 000 சாரணியர்கள் கலந்துகொண்ட, பதினொறாவது உலக ஜம்போரி 1963ஆம் ஆண்டு கிரேக்கத்திலும், பன்னிரெண்டாவது உலக ஜம்போரி 1967ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற்றன. ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஜம்போரியில் 105 நாடுகளைச் சேர்ந்த 12, 011 சாரணியர்கள் பங்கேற்றுள்ளனர்.

பதின்மூன்றாவது உலக ஜம்போரி 1971ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்றது. இந்த ஜம்போரியில் 87 நாடுகளைச் சேர்ந்த 23, 758 சாரணியர்களும், 1975ஆம் ஆண்டு நோர்வேயில் நடைபெற்ற 14வது உலக ஜம்போரியில் 91 நாடுகளைச் சேர்ந்த 17, 259 சாரணியர்களும், பங்கேற்றுள்ளனர். 15வது உலக ஜம்போரி ஈரானில் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும், ஈரானில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகள் காரணமாக அந்த ஜம்போரி நடைபெறவில்லை. இதனால் 15வது உலக ஜம்போரி 1983ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்றது. இதில் 14, 752 சாரணியர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 1987-1988 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 16வது உலக ஜம்போரியில் 84 நாடுகளைச் சேர்ந்த 14, 434 சாரணியர்களும், 1991 இல் கொரியாவில் நடைபெற்ற 17வது உலக ஜம்போரியில் 135 நாடுகளைச் சேர்ந்த சுமார் 20.000 சராணியர்களும், 1995 இல் நெதர்லாந்தில் நடைபெற்ற 18வது உலக ஜம்போரியில் 166 நாடுகளைச் சேர்ந்த 28, 960 சாரணியர்களும், 1998-1999 20ஆம் நூற்றாண்டில் கடைசியாக சிலி நாட்டில் நடைபெற்ற 19வது உலக ஜம்போரியில் 157 நாடுகளைச் சேர்ந்த சுமார் 31, 000 சராணியர்களும், 21ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற முதலாவது ஜம்போரி 2002-2003 இல் தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த 20வது உலக ஜம்போரியில் 147 நாடுகளைச் சேர்ந்த சுமார் 24. 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர். சாரணியம் உருவாக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் நேரத்தில் 21வது உலக சாரணிய ஜம்போரி இங்கிலாந்தில் 2007ஆம் ஆண்டு நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த ஜம்போரியில் 147 நாடுகளைச் சேர்ந்த சுமார் 24, 000 சாரணியர்கள் பங்கேற்றனர்.

22வது உலக ஜம்போரி 2001இல் சுவீடன் நாட்டிலும்ää 23வது உலக ஜம்போரி 2015ஆம் ஆண்டு ஜப்பானிலும், 24வது உலக ஜம்போரி 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்;பட்டுள்ளன.

சாரணிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட பலர, ; இன்று உலகில் பலதுறைகளிலும் பெயர் பதித்திருப்பதைக் காணலாம். உதாரணமாக, முதன்முதலாக சந்திரனில் காலடியெடுத்து வைத்த நீல்ஆம்ஸ்ரோங் ஒர் சாரணியரே இவர் அமெரிக்காவின் Eagle Scout விருது பெற்றவர். நிலவில் இதுவரை காலடி பதித்து நடந்த 12 பேரில் 11 பேர் சாரணர்கள் .(ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற ஆல்டிரின் உட்பட). 1959 லிருந்து இதுவரை 214 பேர் விண்வெளி விஞ்ஞானிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் 125 பேர் சாரணர்கள். ஜெமினி 7, ஜெமினி 12, அப்பல்லோ 8, அப்பல்லோ 13, ஆகிய விண்கலன்களில் சென்று வந்தவர், NASA வின் தலைவராக இருந்தவர் ஜேம்ஸ் லோவல் ஒரு சாரணர். உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜான் F கென்னடி ஒரு Cub Scout ஆக இருந்தவர். அமெரிக்க ஜனாதிபதிகள் வரிசையில் பில் கிலிண்ட்டன், ஜார்ஜ் புஷ் போன்றோர்களும் சாரணர்களே. உலகப் புகழ் பெற்ற Microsoft Computer நிருவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் பில் கேட்ஸ் ஒரு சாரணர். இவ்வாறான பல சாரணியர்கள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

இலங்கை சாரணர் சங்கம் 2012ம் ஆண்டில் நூற்றாண்டு நிறைவைக் காணவிருக்கின்றது. ஆனால், உலக சாரணர் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதற்கு எமது சங்கத்தில் ஒரு இலட்சம் சாரணர்கள் உறுப்புரிமை பெறவேண்டும். இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினரே தற்போது இலங்கை சாரணர் சங்கம் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

2012 ஆம் ஆண்டிற்குள் இலங்கை சாரணர் சங்கத்தின் உறுப்பினர்களை ஒரு இலட்சமாக்குவதற்கான திட்டம் ஒன்று கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1907 இல் உலகில் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கம் இலங்கையில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1912 இல் கிறீன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

1912ல் இலங்கையில் சாரணர் இயக்கம் மாத்தளை கிறிஸ்து அரச கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. 1917 மார்ச் 21ல் கண்டி பெண்கள் உயர் பாடசாலையில் பெண்கள் சாரணியம் உருவாக்கப்பட்டது. உலக சாரணியப் பொது அமைப்பின் ஒரு பகுதியாக ஆசிய பசுபிக் பிராந்தியமுள்ளது. உலகில் இது பரந்துபட்ட பிராந்தியமாகும். இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பெருமளவு சனத்தொகையும் கொண்டுள்ளதுடன் அரசியல் பொருளாதார கல்வி சமூக கலாசாரம் என்பவற்றிலும் முன்னேறி வரும் நாடுகளாகும். இந்நாடுகளிலுள்ள தேசிய சாரணர் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆசிய-பசுபிக் பிராந்திய அமைப்பினை உருவாக்கியுள்ளன. இலங்கையும் இவ்வமைப்பில் இணைந்து தனது பங்களிப்பினைப் புரிந்து வருகின்றது. 1921ம் 1934ம் ஆண்டுகளில்,தனது மனைவியோடு பேடன்பவல் இலங்கைக்கு விஜயம் செய்து பல சாரணிய நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான ஐ.தே.க.வின் குற்றச்சாட்டை அரசு நிராகரிப்பு

anura.jpgசர்வதேச நாணய நிதியத் திடமிருந்து அரசாங்கம் பெற் றுக் கொண்டுள்ள கடன் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்கம் எவ்வித நிபந்தனைகளுமற்ற இணக்கப்பாட்டுடனான கடனையே பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் இவ்வவிணக்கப்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே செயற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த கடனைப் பெறும் விடயத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாதகமாகவுள்ள எந்தவொரு நிபந்தனைக்கும் அரசாங்கம் உடன்பாடு தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தில் 1950 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து மாறிமாறி வந்த அரசாங்கங்கள் அங்கத்துவம் வகித்ததுடன் கடன்களையும் பெற்று வந்துள்ளன. 1976, 1977, 1980, 1982 என தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு விடயங்களுக்காக கடன்களைப் பெற்று வந்துள்ளன.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் போன்று நாம் எந்தவித வாக்குறுதியோ அல்லது நிபந்தனைகளின் பேரிலேயோ இம்முறை கடன் எடுக்கவில்லை. அரச வளங்களைத் தனியாருக்குக் கையளிப்பது, அரச ஊழியர்களின் தொகையைக் கட்டுப்படுத்துவது, சம்பளம், ஓய்வூதியங்களைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஐ. தே. க. பல நிபந்தனைகளுக்கு உடன்பட்டே கடனைப் பெற்றது. இத்தகைய கடன்கள் நாட்டின் வர்த்தக நிலுவையை சமன் செய்வதற்கே உபயோகப்படுத்தப்படுவது வழக்கம்.

இலங்கை இம்முறை சர்வதேச நாணய நிதியத்திடம் 2.6 பில்லியன் ரூபாவைக் கடனாகப் பெறுகிறது. மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தை முழுமையாகப் செயற்படுத்துவது, வறுமை ஒழிப்பு போன்ற அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்கள் இதன் மூலம் நிறைவேற்றப்படவுள்ளன. அத்துடன் தேச நிர்மாணத்துக்கான வரிகளிலும் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

அரசாங்கம் காத்திரமானதொரு கொள்கையடிப்படையிலேயே இக்கடனைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி போலன்றி யுத்தத்தின் பின்னரான இலங்கையை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதற்கே இந்நிதி பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நீதிமன்றத்தில் முஷாரப் மீது வழக்கு

musharap.jpgலண்டனில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் பர்வேஸ் முஷாரஃப் மீது வழக்குத் தொடரலாம் என பாகிஸ்தான் வம்சாவளி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய போது முஷாரஃப் குறித்து நசீர் அகமதிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்தது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதி மன்றத்தில் நடந்து வரும் வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரஃப் ஆஜராக மறுத்தால் அவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றார்.

சர்வதேச சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது லண்டனில் உள்ள முஷாரஃப் பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்தியது தொடர்பான வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

தாண்டிக்குளம் – ஓமந்தை ரயில் பாதை புனரமைப்பு பணி டிசம்பருக்குள் பூர்த்தி

dallus_allahapperuma.jpgவடக்கு வசந்தம் 180 நாள் திட்டத்தின் கீழ் தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதை அமைக்கும் பணி டிசம்பர் மாதத்திற்கு முன் பூர்த்தி செய்யப்படுமெனவும் இதுவரை 5 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்தார். வவுனியா ரயில் நிலைய த்தில் வைத்து கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது.

தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோ மீட்டர் பாதை துரிதமாக மீளமைக்கப்பட்டு வருகிறது. இரு ரயில் நிலையங்களுக்குமிடையில் 5 பாலங்கள் உள்ளதோடு இவற்றில் இரு பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான பாதை அமைக்க 500 மில்லியன் ரூபா செலவாகும் என முன்னர் மதிப்பிடப்பட்ட போதும் ரயில் பாதை நிர்மாணிக்கும் பணிக்கு இராணுவம் பெருமளவு பங்களிப்பு செய்துள்ளதால் 300 மில்லியன் ரூபாவே செலவாகும் என்றார்.

டிசம்பர் மாதம் முதல் யாழ் தேவி அடங்கலான ரயி ல்கள் ஓமந்தை வரை பயணமாகும் என்றும் குறிப் பிட்டார்.

யாழ். குடாவில் போலி விண்ணப்பப் படிவங்கள் – மக்கள் ஏமாற வேண்டாமென அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்

‘தடுப்பு முகாம்களில் உள்ள உறவினர்களை விடுவிப்பதற்கான விண்ணப்பம்’ என்ற பெயரில் விண்ணப்பமொன்று நூறு ரூபாய் விலையில் யாழ். குடாநாட்டில் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் பற்றி கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் தற்காலிகமாக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரே அன்றி அம்மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட வில்லை. எனவே, தடுப்பு முகாம்களில் அம்மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி சட்டத்திற்கு புறம்பான முறையில் ஒரு சாரார் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகக் கூறினார். இவ்வாறான நபர்களிடம் அகப்பட்டு பொதுமக்கள் தங்க ளது பணத்தையும் நேரத்தையும் வீணாகச் செலவிடக் கூடாதென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

போலி விண்ணப்பமானது குடாநாட்டில் தற்போது பல்வேறு முக்கிய இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் இவ்விண்ணப்பங்களை விலை கொடுத்து வாங்கி பெரும் ஏமாற்றங்களைச் சந்தித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளின் பயனாக யாழ் மாவட்ட நலன்புரி நிலையங்களில் இருந்து யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தற்போது கட்டம் கட்டமாக தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான சட்ட விரோதமான விண்ணப்பங்களை விநியோகிப்போர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தனிநபர்கள் ஆயுதம் வைத்திருக்கத் தடை:எடிசன் குணத்திலக்க

dig-edison.jpg“மட்டக் களப்பு மாவட்டத்தில் முதலாம் திகதி முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.” என கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணத்திலக்க தெரிவித்தார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றில் உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி.,புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ரி.எம்.வி.பி. ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“வர்த்தகர்கள் தொடர்ந்து கப்பம் கொடுப்பதையும், மதுபான முகவர்களும், வியாபாரிகளும் தமது கமிஷன்களை கொடுப்பதற்காக அதிக விலைக்கு மதுபான வகைகளை விற்பனை செய்வதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும்”என்றும் குறிப்பிட்டார்.

“மட்டக்களப்பு நகர பிரதேசத்திலும் அண்மித்த பிரதேசங்களிலும் அண்மைக் காலங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய குழுவை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் ஒரு வார காலத்திற்குள் கைது செய்து மக்கள் முன் நிறுத்தவார்கள்.

இக் கொள்ளையர்கள் கொழும்பிலிருந்து வரவில்லை. இந்தப் பிரதேசத்தில் தான் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தேவையேற்படும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கான அதிகாரமும் பொலிஸாருக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனையாளர்களும், முகவர்களும் தாங்கள் விரும்பிய விலைக்கு இனிமேல் விற்க முடியாது மதுபான போத்தல்களில் குறிப்பிட்டுள்ள விலைக்கே விற்க வேண்டும். இதனை மீறி நடந்தால் மதுபான லைசன்ஸ் ரத்து செய்யப்படும்” என்று மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும், இராணுவ மற்றும் விசேட அதிரடிப் படை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மீண்டும் பயங்கரவாதம் உருவாகி விடக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது:அமைச்சர் மகிந்த சமரசிங்க

“மீண்டும் ஒரு பயங்கரவாதம் உருவெடுத்துவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. இதன் காரணமாக, போராளிகளை சமூக வாழ்வில் ஒருங்கிணைப்பதற்கான தேசியத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றது” என்று மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். பல்லின மக்களைக் கொண்ட இந்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தையும் தேசிய அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். இதற்கு நிதியுதவி பெரிதும் அவசியமானது என்றும் அவர் கூறினார்.

முன்னாள் போராளிகளை சமூக வாழ்வில் ஒருங்கிணைத்தல் என்ற தேசிய செயற்றிட்டம் தொடர்பிலான கருத்தரங்கை, கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் மனித உரிமைகள் அமைச்சு மற்றும் சர்வதேச தொழில் ஸ்தாபனம் ஆகியன இணைந்து வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தன.இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் தனது தலைமையுரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டைன் ஸ்டெயர் மோஸ், சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன, நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த உள்ளூர் வெளியூர்ப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்,

“30 வருட காலமாக நாட்டில் புரையோடிப் போயிருந்த பயங்கரவாதம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகளின் பயனாக இலட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டனர். தற்போது வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் போராளிகள் என இனம்காணப்பட்டுள்ளனர்.

இனங்காணப்படாத இன்னும் பலரும் அங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இதுவரை காலம் போராளிகளாக இருந்தவர்களுக்கு சமூக அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பதற்காகவே எமது அமைச்சு, போராளிகளுக்கு புனர்வாழ்வு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

எமது இத்திட்டத்திற்கு பல தரப்பு யோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விரிவான கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையிலேயே போராளிகளை சமூக வாழ்வில் ஒருங்கிணைப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

மோதல் காரணங்களால் நாம் பல்வேறு அசௌகரியங்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்துள்ளோம். பொருளாதாரம், அரசியல் ஸ்திரத்தன்மை, சுற்றுலாத்துறையில் மந்தநிலை என சகல துறைகளும் வீழ்ச்சி கண்டன. எனினும், தற்போது அவ்வாறான நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு. இதில் நாம் கூடிய கவனம் செலுத்தி வருகிறோம்.

கடந்த காலக் கசப்புணர்வுகள் மறக்கப்பட வேண்டும் என்பதுடன், மன்னிப்பு அளிப்பதும் அவசியமானது. அப்போது தான் நல்லதொரு சமுதாயத்தையும் சமாதானத்தையும் இங்கு காணமுடியும். இதன் மூலமே நம்பிக்கையையும் கட்டியெழுப்பக் கூடியதாக அமையும். முன்னாள் போராளிகளை சமூகத்தில் அந்தஸ்துள்ளவர்களாக மாற்றியமைக்க வேண்டும். அதற்கு அவர்களின் கல்வி அறிவு மேம்படுத்தப்படுதல் வேண்டும். அத்துடன், அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களையும் உறுதிசெய்வது இன்றியமையாதது.

இவ்வாறு பல திட்டங்களை அரசு கொண்டிருப்பதன் காரணம், மீண்டும் ஒரு முறை துப்பாக்கி ஏந்திய ஆயுதக் கலாசாரமும் பயங்கரவாதமும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதற்காகவே ஆகும். இதன் பிரகாரமே, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார். 

கொழும்பில் தமிழ்க் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்

_jail_.jpgகொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் தடுப்புக் காவல் உத்தரவில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தம்மை விடுதலை செய்ய வேண்டும், அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும், வழக்கு தொடரப்பட்டால் தத்தமது பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்றப்படவேண்டும் அல்லது தமக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரபடுத்த வேண்டும் என  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகள் தெரிவித்துள்ளனர்.