செய்திகள்

செய்திகள்

செய்திகள்

‘ருவன்டி-20’ உலக லெவன் அணியில் டில்சான், மென்டிஸ் – ஐ.சி.சி. அறிவிப்பு

_dilshan_.jpgஇருபது ஓவர்களைக்கொண்ட ‘ருவன்டி-20’ கிரிக்கெட் போட்டிகளுக்கான ‘உலக லெவன்’ அணியில் இலங்கை வீரர்களான திலகரத்ன டில்ஷான் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த ‘ருவன்டி-20’ உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சிறந்த வீரர்களைத் தெரிவு செய்து ‘உலக லெவன்’ கனவு அணியை அறிவித்துள்ளது.

இரண்டாவது தடவையாக நடைபெற்ற இத்தொடரில் சம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்,  2ஆவது இடம்பெற்ற இலங்கை,  அரை இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவான தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகளின் வீரர்கள் இந்த ‘உலக லெவன்’அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை,  கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ‘ருவன்டி-20’ தொடரில் சம்பியனான இந்திய அணி வீரர்கள் எவரும் இம்முறை ‘உலக லெவன்’ அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஐ.சி.சி. ~ருவன்டி-20’ உலக லெவன் அணி வீரர்கள் விபரம் வருமாறு:-
யூனிஸ்கான் (கப்டன்),  கம்ரன் அக்மல்,  ஷஹீத் அப்ரிடி,  உமர்குல் (பாகிஸ்தான்),  ஜெக் கலீஸ்,  டிவிலியர்ஸ்,  வெய்ன்ர்லொஸ், (தென்னாபிரிக்கா) திலகரத்ன டில்ஷான்,  அஜந்த மெண்டிஸ் (இலங்கை), கிறிஸ் கெயில், பிராவோ (மே.இ.தீவுகள்). 
 

இந்தியா சென்றுள்ள பசில் தலைமையிலான குழு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை!

basil.jpgஇந்தியா விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு இந்திய உயரதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயண், வெளிவிவகார செயலாளர் ஷிவ்சங்கர் மேனன். பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோருடன் இலங்கைப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர

சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் காலமானார்

சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அப்துல் மஜீத் மொஹமட் மர்லின் யெமனில் காலமானார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இவர் சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி நிமிக்கப்பட்டார் 71 வயதான இவர் யெமனில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அங்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையிலேயே அங்கு மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஸாஹிராக் கல்லூரியன் பழைய மாணவரான இவர் 1966 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்தார். இஸ்லாமிய அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஆகியோர் தூதுவரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நல்லடக்கம் செய்வதற்காக அவரது ஜனாஸாவை இங்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் இன்று அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் இறுதித் தினம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமானது. இதேவேளை,  ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதுளை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ஜே.வி.பி., ஐக்கிய சோசலிஷக் கட்சி,  மலையக மக்கள் முன்னணி,  ஜனசக்தி முன்னணி மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னணி ஆகிய கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

மொனராகலை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ஜே.வி.பி.,  ஐக்கிய சோசலிஷக் கட்சி, சிங்களே மஹா சம்பத பூமிபுத்ர கட்சி, எக்சத் லங்கா மஹா சபாவ,  தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணி,  இலங்கை முற்போக்கு முன்னணி மற்றும் ஜனசக்தி முன்னணி ஆகிய கட்சிகளும் 5 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தானியர்களில் மூன்றில் ஒருவரிடம் போலி விசாக்கள்

பாகிஸ் தானில் இருந்து ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் மாணவர் விசாவிலும் ஆயிரக்கணக்கானவர்கள் சுற்றுலா விசாவிலும் பிசினெஸ் விசாவிலும் இங்கிலாந்து செல்கின்றனர். அவர்களில் 3ல் ஒருவர் போலி விசா வைத்து இருக்கிறார்கள் என்று இங்கிலாந்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானியர்களின் விசா விண்ணப்பங்களில் பெரும்பாலானவை நம்பகத்தன்மை இல்லாதவை என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அனுப்பப்பட்ட அறிக்கை அலட்சியப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இதை தடுப்பதற்காக அதிக அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஊழல் காரணமாக தான் இப்படி மோசடி நடக்கிறது. இதில் ஈடுபடும் அதிகாரிகளை அடையாளம் கண்டு இருக்கிறோம். அவர்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என் றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை அமெரிக்க அரசாங்கம் நீடித்துள்ளது.

lttelogo.jpgதமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக பட்டியல் படுத்துவதாக இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அமைதி வழிப் போராட்டங்களின் மூலம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்வதாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள கருத்து பாராட்டுக்குரியதென இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி கிரேஜ் சுவில்லியன் தெரிவித்துள்ளார்.
 
எனினும், பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரவேசத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், புலிகளுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்குவதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.சீ.சீ. ருவன்டி-20 தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது!

_dilshan_.jpgஐ.சீ.சீ.  ருவன்டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்துக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் நாடு திரும்பினர்.

கட்டுநாயக்க, விமானநிலையத்தில் வந்திறங்கிய குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர். ருவன்டி-20தொடரின் இறுதிப் போட்டியில் கடந்த 21ஆம் தகதி பாகிஸ்தானை எதிர்த்தாடிய இலங்கை அணி சம்பியனாகும் வாய்ப்பை இழந்து ரண்ணர்அப் எனும் 2ஆவது ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முழுமைபெறாத அரசியலமைப்பு சபைக்கு “அரசியல் யாப்பில் ஒருபோதும் இடம்கிடையாது

06arliament.jpgமுழுமை பெறாத அரசியலமைப்புச் சபைக்கு அரசியல் யாப்பில் ஒருபோதும் இடம் கிடையாது.அரசியலமைப்பின்படி 17வது திருத்தத்திற்கு அமைய, அரசியலமைப்புக்குப் பத்துப் பேரைத் தெரிவு செய்ய வேண்டும். இதில் ஒருவரின் பெயர் பிரச்சினை யாக உள்ளதால் சபையை ஸ்தாபிக்க முடியாது என்று அரசாங்கத்தின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 இற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது. வழமையான நிகழ்வுக்குப் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் சற்று சூடுபிடித்தே காணப்பட்டது. பொலிஸ் மாஅதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரின் நியமனம் தொடர்பாக பிரேமசிறி மானகே எம். பி. கேள்வி எழுப்பினார்.  இந்தக் கேள்விக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன பதிலளிக்கையில்:- அரசியலமைப்புச் சபையை ஸ்தாபிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை விளக்கினார். இதன் போது, சபாநாயகர் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

அப்போது, இல்லாத ஒரு சபைக்குத்தான் நான் தலைவர். இல்லாத அதிகாரத்தை நான் சிருஷ்டித்துச் செயற்படுத்தவா என்று சபாநாயகர் திருப்பிக்கேட்டார். இதன்போது, ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சூடான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.
இந்த கருத்துப் பரிமாற்றத்தின் போது பார்வையாளர்கள் வரிசையில் பாடசாலை மாணவர்கள் நிரம்பியிருந்தனர். அவர்களுக்காவது அமைதியைப் பேணுங்கள் என்று சபாநாயகர் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

பின்னர், தேர்தல் ஆணையாளர் தொடர்பாகவும் மேற்கண்டவாறான ஒரு கேள்வியை பிரேமசிறி மானகே எம். பி. தொடுத்திருந்தார். அதற்கும் விளக்கமளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்வரை ஆணையாளர் ஓய்வு பெற முடியாது என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதாக சுட்டினார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்ததும், முற்பகல் 11 மணிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, ஜே. வி. பி. உறுப்பினர் சுனில் ஹந்துந்நெத்தி சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றினார்.

‘தேர்தல் நடத்தாது ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் கிடையாது’ – ஐ. தே. க. பொய் பிரசாரமென அரசாங்கம் குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தல் நடத்தாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் நீடிக்க வைக்கும் திட்டமெதுவும் அரசாங்கத்திற்கோ ஜனாதிபதிக்கோ கிடையாது என அமைச்சர் டளஸ் அலஹபெரும கூறினார். இது தொடர்பாக ஐ. தே. க. தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளில் எதுவித உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (23) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

தேர்தல் நடத்தாது சர்வாதிகார ஆட்சி நடத்த அரசாங்கம் தயாராவதாக ஐ. தே. க. கடந்த சில தினங்களாக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது. அத்தகைய திட்டமெதுவும் அரசுக்குக் கிடையாது.

பிரதேச சபைத் தலைவர்களின் சம்மேளனக் கூட்டமொன்றில் ஐ. தே. க. நகர சபைத் தலைவர் ஒருவரே போட்டியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்ய வேண்டுமென பிரேரணை கொண்டு வந்துள்ளார். அது அவர்களின் ஜனநாயக உரிமையாகும் என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. கூறியதாவது,

தோல்வி என்பது ஐ. தே. க. வுக்கு மட்டுமே உரித்தான ஒன்றாக மாறியுள்ளது. அதனால் தேர்தல்களில் தமக்கு ஏற்படும் தோல்வியை மட்டுப்படுத்தவே அந்தக் கட்சி தற்பொழுது முயன்று வருகிறது.இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையை பயன்படுத்தி அரசியல் லாபம் பெற ஐ. தே. க. முயன்று வருகிறது. நிவாரணக் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரி புலிகளுடன் தொடர்புடைய ஐ. தே. க. எம்.பி.க்கள் சிலர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களிடையே வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் இருந்தால் அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. ஆனால் இடம்பெயர்ந்த மக்களை அரசியல் துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற ஐ. தே. க. முயல் கிறது. 1987 – 1989 களில் இடம்பெற்ற வன்செயல்களின் போது பெருமளவு இளைஞர்களை ஐ. தே.க. அரசு தடுத்து வைத்திருந்தது. ஆனால் அந்த இளைஞர்களை பார்வையிட ஐ. தே. க. அனுமதி வழங்கவில்லை என்றார்.

வவுனியா, வேப்பங்குளத்தில் 46 கிலோ சி.4 வெடிமருந்து கிளேமோர் குண்டுகள் மீட்பு

வவுனியா, வேப்பங்குளம் பிரதேசத்திலிருந்து 46 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த சி-4 ரக வெடிமருந்துகள் சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூன்று புலிச் சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதல்களின் போதே பொலிஸார் இந்த பெருந்தொகையான வெடிமருந்துகளையும் வெடிபொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும், வவுனியா பொலிஸாரும் இணைந்தே இந்த பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அதிசக்திவாய்ந்த சி-4 ரக வெடிமருந்துகள் 46 கிலோ, 10 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கி-01, 3 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கிகள்-03, 14 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டு-02, அதனை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் கருவிகள், வெள்ளை மற்றும் சிவப்பு நிற வயர்கள், காஸ் சிலின்டர்-01, 2.7 கிலோ எடையுள்ள குண்டுகள்-02, பிளாஸ்டிக் பரல்கள் மற்றும் பெருந்தொகையான வெடிக்கவைக்கும் கருவிகளையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும், வவுனியா பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.