செய்திகள்

செய்திகள்

செய்திகள்

‘சர்வதேச நாணய நிதியம் சாதகமான நிலைப்பாடு’

ranjith_siyambalapitiya.jpgசர்வதேச நாணய நிதியம், இலங்கை கோரியுள்ள கடனைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தற்போது சாதமாக செயற்பட்டு வருவதாக அரச வருவாய்த் துறை அமைச்சரும், நிதி திட்டமிடல் பிரதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போது இதனைத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய, பயங்கரவாதப் பிரச்சினை முற்றுப்பெற்றிருக்கும் நிலையில், இலங்கைக்குக் கடன் வழங்குவதில் சர்வதேச நாணய நிதியத்திற்குப் பிரச்சினை இருக்காதென்றும் தெரிவித்தார். ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார இருப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், சர்வதேச நாணய நிதிய த்தின் கடன் கிடைத்ததும், மேலும் நிதி நிலைமை வலுவடையுமெனத் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியினர் தற்போது பாராளுமன்றத்தில் எழுப்புவதற்குப் பிரச்சினைகள் எதுவும் இல்லாததால், நிர்க்கதியான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய மேலும் சுட்டிக்காட்டினார்.

வணங்கா மண் நிவாரணப் பொருட்களை ஐ.சி.ஆர்.சி. மூலம் கையேற்க இலங்கை இணக்கம்

ships000.jpgவணங்கா மண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் இன்னும் சில தினங்களில் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் எடுத்துச்செல்லப்படும் என இன்று டில்லியில் இலங்கை இந்திய அதிகாரிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியால் 884 மெற்றிக்தொன் எடை கொண்ட உணவுப்பொருட்கள், உயிர்காக்கும் மருந்துப் பொருட்களுடன் கொழும்பு நோக்கி வந்த மேற்படி கப்பல் திருப்பியனுப்பப்பட்டது.

பின்னர் இக்கப்பல் சென்னை கடல் பிரதேசத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிற்கு கடிதம் மூலம் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்க ஆவன செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இக்கடிதத்தை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எடுத்துசென்று, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணாவைச் சந்தித்துக் கையளித்தார். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சரும் சாதகமான பதில் கிடைக்க ஆவன செய்வதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இந்திய கடற்படை அதிகாரிகள், வணங்கா மண் கப்பல் சந்தேகத்திற்குரியது என சென்னை துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்திருந்தனர். இதன் காரணமாக, துறைமுக அதிகாரிகள் கப்பலை சில கடல் மைல் தூரம் நகர்த்தி வைக்குமாறு கட்டளை பிறப்பித்தனர். கப்பலில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. அத்தோடு, பணியாளர் சிலருக்கு உடல்நலக் குறைவும் ஏற்பட்டது. உடனடியாக சென்னை துறைமுகக் கூட்டுத்தாபனம் குடிதண்ணீர் வழங்கியது.

இதைத் தொடர்ந்து, நேற்று டில்லி வந்த இலங்கை உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வணங்கா மண் கப்பல் பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, இலங்கை அதிகாரிகள் குழு சம்மதம் தெரிவித்ததாக தெரியவருகிறது.

இந்தியாவிலிருந்து இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பொருட்களை எடுத்துச் செல்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் சென்னையிலோ அல்லது தூத்துக்குடித் துறைமுகத்திலோ இறக்கப்பட்டு, இலங்கைக்கு எடுத்துச்செல்லப்படும். இதேவேளை, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வணங்கா மண் நிவாரணக் கப்பலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுமதிப்பதற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

வடக்கு தொண்டராசிரியர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் நியமனம் – கல்வி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் உறுதி

11edu-min.jpgஇதுவரை நியமனம் வழங்கப்படாமலுள்ள வட பகுதி தொண்டராசிரியர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் அல்லது அதற்கு முன்பாக நியமனம் வழங்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். பணி மனைக்கு திரண்டு வந்த தொண்டராசிரியர்கள் முன்பாக நேரடியாக உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமது நிரந்தர நியமனம் தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொண்டராசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தொண்டராசிரியர் நிரந்தர நியமனம் பெற்றுத் தரப்படும் என அச்சமயம் உறுதியளித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உங்களுக்கு அறிவிப்பார் என தெரிவித்திருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.

மற்றொருபுறம் இன்றைய தினம் வேலையற்ற பட்டதாரிகளும் தமது நியமனம் தொடர்பாக திரண்டுவந்த நிலையில் அவர்களது கோரிக்கை தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டு பட்டதாரி நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 மாவட்டங்களில் தீவிரம்; 146 பலி; 11,589 பாதிப்பு

dengu_1.gifநாட்டின் 13 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப ட்டு வருவதுடன் புதிதாக டெஙகு உற்பத்தியாகும் இடங்கள் இனங்காணப்பட்டு சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதேவேளை, டெங்குக் காய்ச்சலினால் பலியானோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 11,589 பேர் பாதி க்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு உயரதிகாரியொருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

நாடளாவிய 13 மாவட்டங்களின் கீழுள்ள 68 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளூராட்சிச் சபைகளின் பங்களிப்புடன் பிரதேசங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தொடர்ச்சியாக டெங்கு நுளம்பு உற்பத்தி இடங்களை இனங்கண்டு அழித்து வருகின்றன. இதற்கென அப்பகுதிகளின் பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டு இந்நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்புத் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் சகல மட்டங்களிலும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்திய அகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களை மீள் அழைக்க பா.ம. தெரிவுக்குழு பரிந்துரை

parliament-of-sri-lanka.jpgஇந்திய அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்களைத் திருப்பி அழைத்து, அவர்களை மூன்று மாத காலத்திற்குள் மீளக் குடியமர்த்த வேண்டுமென- அந்த விடயம் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழு பரிந்துரைத்துள்ளது. திருப்பி அழைக்கப்படுவோரை விரைவாக அவர்களின் சொந்த வாழ் விடங்களில் மீளக்குடியமர்த்தும் வரையில் தற்காலிகமாகத் தங்கவைக்கவென இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்படவேண்டு மென்றும் இந்தக் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அகதி முகாம்களில் உள்ள அகதிகளைத் திருப்பி அழைப்பதற்கும், அவர்களுள் பிரஜாவுரிமை அற்றவர்களுக்கு அதனை வழங்குவதற்குமாக ஆராய்வதற்காக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு அதன் இடைக்கால அறிக்கையை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. குழுவின் தலைவர் சந்திரசேகர் எம்.பி. அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

2008 ஜனவரி மாதம் 8 ஆந் திகதி பாராளுமன்றத்தில் இரண்டு சட்டமூலங்களை நிறைவேற்றியதன் மூலம், அகதி மக்களை மீள அழைத்துக்கொள்வதிலுள்ள சட்டச் சிக்கல் நீங்கியுள்ளதாகவும், முகாம்களிலுள்ள 95 ஆயிரம் பேரில் பிரஜாவுரிமையற்றிருக்கும் 28,500 பேருக்குப் பிரஜாவுரிமை வழங்குவதற்கும் வழியேற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதுபற்றி பாராளுமன்ற கட்டடத்தில் செய்தியாளர் மாநாடு நடத்தி விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்படி, திரும்பி வருவோருக்குச் சொந்தமாக நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுப்பது, தற்காலிகமாகத் தங்குவதற்கு இடைத்தங்கல் முகாம்களை அமைத்தல், கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பு, தொழில் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுத்தல், வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்பாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலிருந்து வருவோருக்குச் சிக்கல் ஏற்படாதவாறு, குடிவரவு, குடியகல்வு சட்டங்களைத் தளர்த்தல், இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு உரிய தொழில் வாய்ப்புகளை அளித்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கையில் பல்வேறு அரச துறைகளையும் சார்ந்த 20 அதிகாரிகளும், இந்தியாவின் 30 அதிகாரிகளும் இணை ந்து அகதிகளின் முகாம்களுக்குச் சென்று நேரடியாகத் தகவல்களைத் திரட்டவேண்டு மென்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் 25 மாவட்டங்களில், 117 அகதி முகாம்களில் 95, 219 இலங்கையர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் 28, 500 பேர் நாடற்றவர்களாக உள்ளனர். மேலும் ஓர் இலட்சம் இலங்கையர்கள் உறவினர்களின் இல்லங்களில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்குவதற்காக பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், குழுவின் ஏனைய உறுப்பினர்களான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, பாராளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ஜயலத் ஜயவர்தன, பிமல் ரட்னாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஜூன்:26, உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் (World Anti – Drugs Day) – புன்னியாமீன்

world-anti-drugs-day.jpgஉலக ளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனை,  போதைப்பொருள் கடத்தல்,  போதைப்பொருள் விற்பனை செய்தல் என்பன ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருளைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப் பொருள் கடத்தலுக்காக சில அரசுகள் மரண தண்டனையைக் கூட சட்டமாகப் பிரயோகித்து வருகின்றது. எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும்கூட,  போதைப்பொருளை முற்றாக ஒழித்துவிட முடியவில்லை. போதைப்பொருட் பாவனையால் ஏற்படும் தீமைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்ட தினமாகவே ( ஜூன் – 26) உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் (World Anti – Drugs Day) காணப்படுகின்றது. 

போதைப் பொருட்களை பாவிப்பதனால் பாவிப்பவர்கள் பல்வேறு கஸ்டங்களுக்குட்படுவதோடு பிறருக்கும் தீங்குகளை விளைவிப்பவர்களாகவும் மாறுகின்றனர். இன்று வர்த்தக ரீதியில் உலகெங்கும் போதைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அநேகமாக சட்டவிரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது. சில நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளின் போது ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் போதைப் பொருட்கடத்தல் மேற்கொள்ளப்படுகின்றன. மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதனாலும்,  இதற்கு உடந்தையாக வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிலர் இருப்பதினாலும் இதனை இல்லாதொழிப்பது ஒரு கடினமான செயற்பாடாகவே மாறிவருகின்றது. போதைப் பொருட்பாவனையால் ஏற்படும் தீங்குகளும், பாதிப்புகளும்,  அழிவுகளும் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜுன் 26ம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக நோக்குமிடத்து போதைப் பொருட்பாவனை பண்டையகாலம் தொட்டே இருந்து வந்துள்ளதை அறியமுடிகின்றது. அபின்,  கஞ்சா,  கள்ளு,  சாராயம், கசிப்பு, பீடி,  சிகரட்,  சுருட்டு என்பன மக்களால் பாவிக்கப்பட்டு வந்ததை நாம் தெரிந்து வைத்துள்ளோம். சில சந்தர்ப்பங்களில் போதைப் பொருட்கள் ஒளடதமாகவும் பாவிக்கப்பட்டது. பொதுவாக களியாட்ட காலங்களில் மக்கள் போதை தரும் பானவகைகளையும்,  புகையிலை வஸ்துக்களையும் பாவித்தனர்.

world-anti-drugs-day.jpgஆனால், விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அவை நவீன உருவிலும், இலகுவான தன்மையிலும் தயாரிக்கப்பட்டன. மிகச் சிறிய அளவு பாவிப்பதன் மூலம் அதிகளவு போதை தரக்கூடியதாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும்,  இவை இலகுவாகக் கடத்தவும் பரிவர்த்தனை செய்யவும் வாய்ப்பாக அமைந்தன. மேலைநாடுகளில தயாரிக்கப்பட்ட ஹெரோயின்,  கொகேய்ன்,  மர்ஜுவானா,  ஹஸீஸ் போன்ற நவீன போதைப்பொருட்களும் மற்றும் குளிசை வடிவத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எஸ்.டி. தூக்க மாத்திரை போன்ற வஸ்துக்களும் அதிமிகு போதையைத் தரும் மதுபானங்களும், சர்வதேச ரீதியில் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன. இதற்கான சர்வதேச கடத்தல் பாதைகளும் உள்ளன. சில நாடுகளின் பொருளாதாரம் போதைப்பொருள் வியாபாரத்திலேயே தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஊசி மூலம் போதைப்பொருளை உடலிற் செலுத்திக் கொள்ளும் பழக்கம்,  தீவிர பாவனையாளரிடையே உள்ளது. இதனால் இப்படிப்பட்டவர்களிடத்தில் எய்ட்ஸ் வைரசும் தொற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.

இவைகள் பற்றி விளக்கம் வழங்கத்தக்க வகையில் 1988இல் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருளுக்கெதிரான உலக மகாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

world-anti-drugs-day.jpgஇலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை,  உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகள் நவீன போதைப் பொருட்கள் நாட்டினுள் பிரவேசிக்க வழிவகுத்தன. இலங்கையில் போதை பொருட்கள் 1980களில் பரவ ஆரம்பித்தது. இலங்கையில் ஹெரோயின் விற்பனையாளர் முதன் முதலில் 1981 மே 26 இல் 70கிராம் ஹெரோயினுடன் பேருவளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் 2015ஆம் ஆண்டை போதைப்பொருள்கள் அற்ற ஆண்டாக மாற்றியமைக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை சுங்கத் திணைக்களம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை,  குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு உட்பட பல அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேற்படி வேலைத் திட்டம் தொடர்பாக அண்மையில் விளக்கமளிக்கப்பட்டது.

போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு போதைக்கு முற்றுப்புள்ளி திட்டம் மட்டுமே போதுமானதல்ல,  சகலரும் பூரண ஒத்துழைப்பின் மூலமே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் .போதைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்டெடுப்பது,  புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சந்ததியினரைப் பாதுகாப்பது என்ற இலக்கிலேயே அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதே நேரம்  இன்று இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இந்நடவடிக்கைக்கு அவை போதியதாக இல்லை. உதாரணமாக ஒரு ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் 10 ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் அதற்கான தண்டனை ஒரே விதமாகவே தற்போதுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஹெரோயின் ஒரு கிலோ மூன்று மில்லியன் ரூபா பெறுமதியானது. ஹெரோயினைப் பொறுத்தவரை 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

2009 மே மாதத்தில் மாத்திரம் இலங்கையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 555 சுற்றி வளைப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது 1, 202 கிலோ கஞ்சாவை குற்றத் தடுப்புப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

world-anti-drugs-day.jpg1984இல் தாபிக்கப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அக்கறையுடன் செயல்படுகிறது. நாட்டைக் குட்டிச் சுவராக்கி,  குடும்ப வாழ்வைச் சீரழித்து நாட்டுக்குழைக்கக்கூடிய நல்லவர்களை நடைப்பிணமாக்கியுள்ள போதைப்பொருட்பாவனையை வேரோடு களைய வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பும் விழிப்புணர்வுமே இப்பாவனையை இல்லாதொழிக்கும்.  

போதைப் பொருளுக்குப் பதிலாக போதைக் குறைந்த சில பொருட்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளும் சிலநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கை பலத்த விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளன. போதைப்பொருள் பயன்பாட்டை போதைப்பொருளை வைத்தே தடுக்க முயற்சிப்பது இயலாதது என்று திருப்பீடம் சர்வதேச சமுதாயத்தை எச்சரித்துள்ளது.

வியன்னாவில் கடந்த (2009) மார்ச் மாதம் நிறைவு பெற்ற போதைப் பொருள் தடுப்புக்கான ஐ.நா.அவையில் உரையாற்றிய மேய்ப்புப்பணி உதவிகளுக்கான திருப்பீட அவையின் செயலர் ஆயர் ஹோசே லூயிஸ் ரெத்ராதோ மர்க்கித்தே,  இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் உலகளாவிய கத்தோலிக்க நலப்பணி நிறுவனங்களின் அனுபவங்களின் அடிப்படையில் பேசும் போது இதனைத் தெரிவித்தார் . வீரியம் குறைந்த போதைப்பொருள்களை விநியோகிப்பதை அடிப்படையாகக் கொண்டு மிகவும் வீரியமான போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்குப் பல நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆயர் மர்க்கித்தே தெரிவித்தார் .

போதைப்பொருட் பாவனையானது பொதுவாக சிறுவர் பராயத்தில் ஏற்பட்டுவிடுவதாக சில அறிக்கைகள் கூறுகின்றன. பொதுவாக பாடசாலைப் பருவத்தில் தீய நண்பர்களின் சகவாசம் காரணமாக இது ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் புகைப்பிடித்தலுடன் ஆரம்பமாகும் இப்பழக்கம் படிப்படியாக போதைப் பொருட் பாவனை வரை வளர்வதாக கூறப்படுகின்றது.

world-anti-drugs-day.jpgபெற்றோர்களுக்கு பொதுவாக தங்கள் பிள்ளைகள் மது அருந்துதல், புகை பிடித்தல் அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிடப் போகிறார்களோ என்ற ஐயம் இக்காலத்தில் தோன்றுவதற்கு இதுவே மூலகாரணமாகின்றது. இப்பழக்கத்துக்கு மேலைத்தியம், கீழைத்தேயம் என்று வித்தியாசமிருப்பதில்லை. 2005 இல் அமெரிக்காவில் போதைப்பொருட்கள் உபயோகிப்பதைப் பற்றிக் கண்காணிக்கும் கல்விக்கழகம் (National institute of drug abuse monitoring future), மாணவர்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் மூலம் 1990 இல் மிகவும் அதிகமான மாணவர்கள் போதைப்பழக்கத்தில் இருந்ததாகவும் அரசாங்கமும் பாடசாலைகளும்,  சமூகநல அமைப்புகளும் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கையினால் புகைபிடிக்கும் பழக்கம்,  மற்றும் மது அருந்தும் பழக்கமும் கணிசமான அளவில் குறைந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவொரு நேர்மறை விளைவைக் காட்டிநின்றாலும்கூட, போதைப்பொருட் பாவனை இன்று புதிய வடிவத்தில் மாணவர்கள் மத்தியில் பரவிவருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது,  சில மருந்துவகைகளை மாணவர்கள் போதைக்காகப் பயன்படுத்தி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களால் பரிந்திரை செய்யப்படும் ஆக்சிகோடின் (OxyContin), விகோடின் (Vicodin) போன்ற மருந்துகளின் உபயோகம் கணிசமான அளவில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. 2005 வருட முடிவில் விகோடின் என்ற மருந்தை உபயோகிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 12.5% சதவிகிதம் அதிகரித்திருந்ததாகவும் சில வகை தூக்கமருந்துகளின் உபயோகம் 25 % மாணவர்களிடையே அதிகரித்திருந்ததாகவும் ஆஸ்த்மாவிற்காகப் பரிந்துரைக்கப்படும் அட்வேர் போன்ற மருந்து பாவனை (இவை மூச்சிழுக்கப்படும்) அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்து.

 போதைப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதைவிட மருந்துவகைகளைப் பெற்றுக் கொள்வது எளிதானதே. தங்கள் பிள்ளைகள் மருந்துவகைகள் அதிகமாகப் பயன்படுத்துகின்றார்களா என்பதையும் பெற்றோர்கள் அவதானிக்க வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களுக்குப் பதிலாக மருந்துப்பாவனை மேற்கத்திய நாடுகளில் அதிகரித்துக் காணப்பட்டபோதிலும்கூட, கீழைத்தேய நாடுகளிலும் இப்பாவனை உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

world-anti-drugs-day.jpgசில அறிக்கைகளின்படி தமது பிள்ளைகளிடத்தில் தன்னம்பிக்கை குறைதல், படிப்பு மற்றும் விளையாட்டுக்களில் ஆர்வம் குறைதல்,  சோம்பல் மற்றும் சற்றே ஆர்வம் குறைந்த தோற்றம்,  பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் அதிக வாக்குவாதங்கள் செய்வது போன்றவை தன்மைகள் காணப்படின் கூடிய விழிப்புணர்வுடன் பெற்றோர்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட நிலையில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளேயாயினும் அளவுக்கு மீறி எடுத்துக்கொள்வது ஆபத்தில் முடியும் என்பதை பிள்ளைகளுக்கு விளக்க வேண்டும்.   உங்கள் குழந்தைகள் மருந்துப் பொருட்களை அதிகமாகப் பயன் படுத்துவது தெரிந்தால் உடனே மருத்துவமனை,  போதைப்பொருட்கள் அடிமைத்தனத்தைப் போக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிப்பதற்கு மறக்காதீர்கள்.

நிவாரணக் கிராமங்களுக்கு ஐ.ஓ.எம். உதவி

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவ புலம் பெயர்தலுக்கான சர்வ தேச நிறுவனம் (IOM)  முன்வந்துள்ளது. இதற் காக இந்நிறுவனம் ஐந்து (5) தண்ணீர் பெளசர்களை யும் ஐந்து (5) மலசலம் அகற்றும் பவுசர்களையும் வழங்கியுள்ளது.

இவற்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து 26 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும். கொழும்பிலுள்ள ஐ. ஓ. எம். நிறுவனத்தில் இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (23) நடைபெற்றது. இந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மொஹமட் அப்திகார் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் இவற்றை கையளித்தார்.

சர்வதேச கடற்பரப்பில் கப்டன் அலி கப்பல்

ships000.jpgமோதல் களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களுடன் வந்த கப்டன் அலி (வணங்கா மண்) கப்பல் இந்திய கடற்பரப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த கப்டன் அலி கப்பலை இலங்கை கடற்படையினர், நிவாரணப் பொருட்களை இறக்காமலேயே திருப்பி அனுப்பியமை குறிப்பிடத்தக்கது. 

‘ருவன்டி-20’ உலக லெவன் அணியில் டில்சான், மென்டிஸ் – ஐ.சி.சி. அறிவிப்பு

_dilshan_.jpgஇருபது ஓவர்களைக்கொண்ட ‘ருவன்டி-20’ கிரிக்கெட் போட்டிகளுக்கான ‘உலக லெவன்’ அணியில் இலங்கை வீரர்களான திலகரத்ன டில்ஷான் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த ‘ருவன்டி-20’ உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சிறந்த வீரர்களைத் தெரிவு செய்து ‘உலக லெவன்’ கனவு அணியை அறிவித்துள்ளது.

இரண்டாவது தடவையாக நடைபெற்ற இத்தொடரில் சம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்,  2ஆவது இடம்பெற்ற இலங்கை,  அரை இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவான தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகளின் வீரர்கள் இந்த ‘உலக லெவன்’அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை,  கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ‘ருவன்டி-20’ தொடரில் சம்பியனான இந்திய அணி வீரர்கள் எவரும் இம்முறை ‘உலக லெவன்’ அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஐ.சி.சி. ~ருவன்டி-20’ உலக லெவன் அணி வீரர்கள் விபரம் வருமாறு:-
யூனிஸ்கான் (கப்டன்),  கம்ரன் அக்மல்,  ஷஹீத் அப்ரிடி,  உமர்குல் (பாகிஸ்தான்),  ஜெக் கலீஸ்,  டிவிலியர்ஸ்,  வெய்ன்ர்லொஸ், (தென்னாபிரிக்கா) திலகரத்ன டில்ஷான்,  அஜந்த மெண்டிஸ் (இலங்கை), கிறிஸ் கெயில், பிராவோ (மே.இ.தீவுகள்). 
 

இந்தியா சென்றுள்ள பசில் தலைமையிலான குழு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை!

basil.jpgஇந்தியா விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு இந்திய உயரதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயண், வெளிவிவகார செயலாளர் ஷிவ்சங்கர் மேனன். பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோருடன் இலங்கைப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர