அனைத்துக் கட்சிகளும் ஆதரி்த்தால் கட்சத் தீவை மீட்பது குறித்து சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றத் தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறினார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரியும் கட்சத் தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் கச்சத் தீவில் இலங்கை ராணுவத் தளம் அமைப்பதை தடுக்கக் கோரியும் இன்று சட்டசபையில் எதிர் கட்சிகள் சிறப்பு ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தன.
இந்த விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, அதிக மீனுக்கு ஆசைப்பட்டு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதாக 1992ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இப்போதும் அதே நிலை தான் நீடிக்கிறது. கட்சத் தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததை திமுக ஆதரிக்கவில்லை.
கச்சத் தீவை மீட்கக் கோரி சட்டப் பேரவையில் பலமுறை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டபோதும் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவு இல்லாததால் அதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இப்போது அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் இது தொடர்பாக தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது என்றார்.