செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையால் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் நிலையேற்பட்டுள்ளது – சம்பிக்க ரணவக்க

அரசாங்கத்தின் யுக்திய நடவடிக்கையால் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் நிலையேற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கையின் போது தாயும் தந்தையும் கைதுசெய்யப்படுகின்றனர் இதனால் வீடுகளில் தனித்திருக்கும் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் பெண்கள் பாலியல் ஈடுபடும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பிள்ளைகள் தனித்துவிடப்பட்டுள்ளனர் உணவையோ பாதுகாப்பையோ பெற முடியாத நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க இந்த பிள்ளைகளிடம் தங்கள் பெற்றோருக்காக வாதாட சட்டத்தரணிகளை அமர்த்தும் வலுவோ பணமோ இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பெரும்முதலைகள் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடற்கரையோரங்களில் உள்ள ஹோட்டல்களை பொலிஸார் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்ததை நாங்கள் பார்த்துள்ளோம் கடற்கரையோரத்தில் உள்ள அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் அதிகாரம் கரையோரா பாதுகாப்பு திணைக்கத்திற்குள்ளது பொலிஸார் இவ்வாறான கட்டிடங்களில் தலையிட்டு அது போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் கட்டப்பட்டது என தெரிவிப்பது சட்டத்திற்கு விரோதமானது எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஏழு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் – பின்னணியில் மதபோதகரின் போதனைகள்..?

கடந்த சில நாட்களில் பதிவாகிய ஏழு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் போதனைகளுக்கு ஆளான நபர்கள் தங்கள் வீடுகளில் இருந்தால் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குணரத்ன அண்மையில் ஹோமாகமவில் விஷம் அருந்தி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார்.

தத்துவ போதகரான ருவானுடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் இருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.

21 வயதான யுவதி ஒருவரும் 34 வயதுடைய ஆண் ஒருவரும் விஷம் அருந்தி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதியின் சடலம் யக்கல பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரின் சடலம் மஹரகமவில் உள்ள விடுதி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதம் தொடர்பான விரிவுரைகளை ஆற்றி வருபவர் என அறியப்பட்ட ருவன் பிரசன்ன குணரத்ன அண்மையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். பின்னர், அவரது மனைவியும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் இதேபோன்று இறந்து கிடந்தார்.

உயிரிழந்த பெண்ணும், ஆணும் ருவான் மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட போதகரின் பிரசங்கங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வாழ்க்கையை பரிதாபமாக முடித்துக்கொண்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ கூறினார்.

‘அடுத்த ஆன்மாவை நோக்கிய விரைவான மாற்றத்திற்கான ஒரு வழிமுறையே தற்கொலை” என இந்த பிரசங்கங்களில், குணரத்ன உயிரை மாய்ப்பதை ‘நியாயப்படுத்தியதாக’ கூறப்படுகிறது .

உயிரிழந்த போதகர், கொட்டாவ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மாதம் ரூ. 150,000 செலுத்தி வாடகைக்கு எடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிஸாரால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் வகையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் நிலையில் 109 எனும் துரித இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Online மூலமாகவும் இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்ய முடியும் – இறைவரித் திணைக்களம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி இலக்கம் பெறுதல் போன்றவற்றை ஒன்லைனிலும், திணைக்களத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி இலக்கத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து அதன் நகலை அச்சிடலாம்.

 

எனவே, விண்ணப்பத்தைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதுடன் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

 

வரி இலக்கத்திற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் www.ird.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.

 

கோரிக்கையை பரிசீலித்த பிறகு, வரி செலுத்துவோரின் அடையாள எண் மற்றும் ஒரு முறை கடவுச்சொல் ஆகியவற்றைக் குறிப்பிடும் சான்றிதழ் சம்பந்தப்பட்ட நபர் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் சென்று வரி இலக்கத்தை பெறும்போது, அதற்கான பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள முதன்மைப் பதிவுப் பிரிவில் அல்லது அருகில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

 

வரி இலக்கத்தை ஒன்லைனில் பெறுவதற்கு அதாவது இ-சேவை மூலம் பெறுவதற்கு தேசிய அடையாள அட்டையின் இருபுறமும் ஸ்கேன் செய்து PDF நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 

தேசிய அடையாள அட்டையில் உள்ள முகவரிக்கும் தற்போதைய வசிப்பிட முகவரிக்கும் வித்தியாசம் இருப்பின் அதனை நிரூபிக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

 

2024 ஜனவரி 01ஆம் முதல், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் வரி இலக்கத்தை பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

 

இந்த இலக்கத்தை எடுத்துக் கொண்டால், ஒருவர் வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் மாத்திரமே வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியிடம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நடவடிக்கை !

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நல்லை ஆதீனத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

 

குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்துப் பிரதிகளை வடக்கிற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதிக்கு நேரில் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் காதல் ஜோடி கைது – வவுனியாவில் சம்பவம் !

போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் காதல் ஜோடி ஒன்று வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்த காதல் ஜோடியானது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டதாகவும் சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை இடப்பட்டது.

இதன்போது அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த காதல் ஜோடி இன்றைய தினம் (03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் காவல்துறையினர் நீதிமன்றத்தின் அனுமதிய பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Virtual reality Metaverse game இல் சிறுமி மீது இணையவழியில் கூட்டுப்பாலியல் வன்புணர்வு !

பிரித்தானியாவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியொருவர் Virtual reality எனப்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டின் மூலம் உள ரீதியாக கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“Metaverse game” எனப்படும் விளையாட்டின் மூலமே குறித்த சிறுமி உடல் ரீதியாக அல்லாமல் உளரீதியாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (Artificial Intelligence) மூலம் பல இடங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

Metaverse game எனப்படுவது செயற்கை நுண்அறிவு விளையாட்டாகும், இதில் பயனர்கள் தத்தமது கதாபாத்திரங்களை (Avatar) தமக்கு ஏற்றவகையில் வடிவமைத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபடும்போது பயனர்களும் இனந்தெரியாத நபர்களினால் பயனர்களின் கதாபாத்திரங்களை துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரிட்டன் உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர் இது பற்றி தெரிவித்த போது இந்த விளையாட்டு மூலமான பாலியல் தொல்லைகள்ட அதிகரித்து வருவதாகவும் இதனை சாதாரணமான பிரச்சினையாக கடந்து செல்ல முடியாது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறைக்கு வந்த புதிய வரிகள் – எகிறும் பொதுக் கழிப்பறை கட்டணங்கள் !

புதிய வரித் திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நீர் கட்டணம் அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு பொதுக் கழிப்பறைக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணம் பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 ரூபாயாக இருந்த கழிவறை கட்டணம் புதிய திருத்தத்தின் கீழ் 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

போதைபொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தேகம் !

யாழ். மாவட்டத்தில் போதைபொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸாரின் நடவடிக்கைகள் சந்தேகத்தினை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காணொளி ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல இரத்நாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்விடயத்தினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போதைப் பொருள்பாவனைக்கு எதிராக யாழ் மாவட்டத்தில் பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் அதிருப்தியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துகின்றது.

சில சந்தர்ப்பங்களில் போதைப் பொருள் வியாபாரிகள் தப்பித்துக் கொள்வதற்கான காலஅவகாசத்தினை பொலிஸார் வழங்கியதான சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

அதேபோன்று, வற் அதிகரிப்பு உட்பட்ட பொருளாதார நெருக்கடிகள் எதிர்கொண்டுள்ள வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு, இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகள் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதால், அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் காத்திரமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டிய அவசியமாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தை மீறி எங்களால் செயற்படமுடியாது – அரசாங்கம் திட்டவட்டம் !

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும் எந்த ஜனாதிபதி நாட்டை ஆண்டாலும் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு விடும். தடம் புரண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடத்தில் மீள நிவர்த்தி செய்துள்ளது. பிறந்துள்ள புதிய வருடம் தீர்க்கமான ஒரு வருடமாகும்.

 

தற்போது நிலவும் பொருளாதார சவால் 2027 ஆம் ஆண்டு வரை தொடரும். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டம் 2027 ஆம் ஆண்டு நிறைவு பெறும் வரை சட்டப்படி செயற்பட்டாலே நெருக்கடியை நிவர்த்தி செய்ய முடியும்.

சர்வதேச இணக்கப்பாட்டுடனான சட்டங்கள் மற்றும் நிதி முறைமைக்கு இணங்க நாடு என்ற ரீதியில் நாம் நிதி சந்தைக்கு சென்று பிணைமுறியை விநியோகித்து கடனைக் கோரினாலும் 2027 ஆம் ஆண்டு எமக்கு 1500 மில்லியன் டொலர்களை மட்டுமே கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

2027 ஆம் ஆண்டு வரை மூன்று, நான்கு வருடங்களுக்கு இந்த சவால்கள் தொடரும்.

பெருமளவு இறக்குமதியிலேயே தங்கியுள்ள பொருளாதாரத்தை கொண்டுள்ள எமது நாடு எரிபொருள், உரம், மருந்து, இரசாயன பொருட்கள், அரிசி, மா, சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, மிளகாய் உள்ளிட்ட நுகர்வு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றையும் இறக்குமதி செய்தே ஆக வேண்டும்.

அவற்றை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கத்தின் கையிருப்பின் அடிப்படையில் கடன் பத்திரத்தை விநியோகிப்பது அவசியம். இந்த பொருட்களைக் கொள்வனவு செய்யாமல் இரண்டு வாரங்களையும் எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியாது.” என்றார்.