வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

லண்டனில் எனது இன்றைய அனுபவம்!!!

இன்று காலை எனக்கு தொலைபேசியில் ஒரு குறும் தகவல் Hey dad this is my new number you can delete my old number. இரண்டாவது மகன் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் இப்ப விடுமுறையில் வந்துவிட்டான். இதற்கு முன்னரும் இவன் இப்படி போன் நம்பரை மாற்றி இருக்கிறான். நான் பஞ்சிப்பட்டு மாற்றாமல் குழம்பி சத்தம் போட்டும் இருக்கிறேன். அந்த போன் நம்பருக்கு போன் செய்தேன் போன் கரகரத்தது. இப்படி அனுபவங்கள் முன்னரும் நடந்தது. மீண்டும் ஒரு மசேஜ். தன்னுடைய போன் உடைந்துவிட்டதாகவும் கதைக்க முடியாது என்றும் மசேஜ் வந்தது. சரி போன் வாங்கி இப்ப ஒரு ஆறு மாதம் தான் வொறன்ரியில் மாற்றுவோம் என்றன். முன்னம் விட்ட தவறை திரும்பவும் விடக்கூடாது. அப்பனுக்கு மகன் அட்வைஸ பண்ண விடக்கூடாது என்று என்பதுக்காக உடனேயே நம்பரை மாற்றி புதிய நம்பரை சேவ் பண்ணிக்கொண்டேன்.

பிறகு இன்னுமொரு மசேஜ் தனது பாங்க் எக்கவுண்டை ப்றீஸ் பண்ணி வச்சிருக்கிறதாகவும் தனக்கு பில்லைக் கட்டிவிடவும் கேட்டான். சரி என்ன பல்கலைக்கழகத்தில் படிப்பவனுக்கு ஒரு ஐம்பது நூறு பவுண் தானே பெத்ததுக்கு அதுவும் செய்யாவிட்டால் மரியாதையில்லை தானே. ‘நோ புரம்பளம்’ என்றும் தகவல் அனுப்பிவிட்டு எவ்வளவு கட்ட வேண்டும் என்றேன். £1800 பவுண் என்று தகவல் வந்தது. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. நான் ஒரு பிச்சைக்கார வாத்தி என்றது நம்மட கொன்ஸ் தோழரின் புண்ணியத்தில உலகத்துக்கே தெரியும். என்ர பாங்கில எந்தக் காலத்தில £1800 பவுண் இருந்தது. நாங்கள் எல்லாம் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன் மாதிரி £50 பவுண் தாளையே கண்டிராத ஆட்கள்.

ஆனால் பாவம் மகனுக்கு பல்கலைக்கழகத்தில் ரூம் வாடகை குவாட்டருக்கு (இது அந்தக் கூவாட்டர் இல்ல. காலாண்டு) அவ்வளவு வரும் அது தான். அதுவா கட்ட வேணும் என்று மசேஜ் அனுப்பிவிட்டு இன்னுமொரு மசேஜ்ம் போட்டேன். எனக்கு சம்பளம் இன்னும் வரவில்லை. அண்ணாவிடம் வாங்கிக் கட்டு அண்ணாவுக்கு நான் பிறகு குடுக்கிறேன் என்று. என்னிடம் காசு இல்லாமல் அண்ணாவிட்ட கேள் என்று சொன்னது கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும் வேறு வழியில்லை. அவனுக்கு ஏற்கனவே ஒரு £1000 குடுக்கக்கிடக்கு. (இந்தத் தகவல் தோழர் கொன்ஸ்க்கு அல்வா கொடுக்க.) திரும்பி மசேஜ் வந்தது நீங்கள் அண்ணாவிடம் சொல்லுங்கள் என்று. இப்ப எனக்கு உதைக்கத் துவங்கியது. எற்கனவே டாட் என்று அழைத்ததே எனக்கு இடித்தது.

என்னுடைய பிள்ளைகள் யாரும் என்னை ஒரு போதும் டாட் என்றோ டாடி என்றோ அழைப்பதில்லை. அப்பா என்றே அழைப்பார்கள். ஆங்கிலத்தில் மசேஜ் வந்தாலும் Appa என்றே எழுதுவார்கள். கொஞ்சம் அன்பு கூடினால் டோய் அப்பா அப்பா லூசா என நான் அவர்களை அழைப்பது போலே அழைப்பார்கள். டாட் டாடி எல்லாம் கொஞ்சம் ரூமச் மாதிரித்தான் தெரிந்தது. ஆனால் யூனிவர் சிற்றியில குவாட்டர் இறங்கிச்சுதோ தெரியேல்ல. அத்தோடு அண்ணாவிட்ட கேள் என்றால் அவன் நேர அண்ணனின் கழுத்தைப் பிடித்து காசை மாற்றியிருப்பான். அண்ணன் தான் அலறி அடித்து எனக்கு அடித்திருப்பான். சரி என்று மூத்தவனுக்கு அடித்தேன். அவன் போனைத் தூக்வில்லை. அண்ணவோடு கதைத்துவிட்டு சொல்கிறேன் என்றுஒரு மசேஜ் போட்டுவிட்டு இருக்க மூத்தவன் அடித்தான்.

‘தம்பி நிக்கிறானா?’. ‘ஓம்’ என்றான். கொடுத்தான். ‘ஏன் ரூம் ரென்ற் கட்டவில்லையா’ என்றேன். ‘ஏன் காசு கேட்ட நீ’ என்றேன். அப்பதான் நித்திரையால் எழும்பியவன், ‘உங்களுக்கு என்ன லூசா?’ என்றான். அப்ப தான் ஓடி வெளித்தது. பிச்சைக்காரனாய் இருந்தால் எங்களிட்ட இருந்து காசு பிடுங்குவது கொஞ்சம் கஸ்டம் என்று.

உடனே நான் மசேஜ் போட்டேன் ‘நீ தந்த எக்கவுண்டுக்கு 1500 பவுண் போட்டிருக்கிறேன்’ என்று அதுக்குப் பிறகு அவரை இழுத்தடித்து சம்பாசணையில் இருந்து கொண்டே அக்சன் புரொடில் போய் கொம்பிளெயின் பண்ணிவிட்டு அவன் தந்த எக்கவுண்டுக்கு 1.50 மாற்றிவிட்டு வங்கிக்கு போன் பண்ணிச் சொல்லி உள்ளேன்.

பெரும்பாலும் நாங்கள் ஊகங்களின் அடிப்படையிலேயே செயற்படுகிறோம். அதனால் தவறான முடிவுகளுக்கு தள்ளப்பட்டு பொருளாதார நஸ்டத்தையும் சந்திக்கின்றோம். இன்று எனது வங்கியில் பணம் இருந்திருந்தால் சில வேளை நான் அந்தத்தொகையை இழந்திருப்பேன். ஏதோ எனக்குத் தட்டிய சிறுபொறி என்னைக் காப்பாற்றியது. மிகக் கவனம். சிறிய கவனக் குறைவுகள் பெரும் இழப்புகளுக்கு எம்மைக் கொண்டு செல்லும். பொருளாதார இழப்புகள் மட்டுமல்ல அதனிலும் மோசமான உறவு முறிவுகள்இ உயிரிழப்புகள் என அவை பாரதூரமானவையாகவும் அமைந்துவிடும்.

முன்கூட்டிய முடிவுகளை வைத்துக்கொண்டு தான் நாம் பலவற்றைச் செய்கின்றோம். முதல் குறும் தகவலில் நான் ‘நீ யார்? என்று கேட்காமல் அந்தச் தகவல் என்னுடைய பிள்ளைகளிடம் இருந்துதான் வந்தது என்று முடிவுக்கு வந்துவிட்டேன். அவன் காசு கேட்ட போது நானாக அது வாடகைக் காசாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த முன் கூட்டிய முடிவுகள் என்னை தவறான முடிவுகளை எடுக்க வைத்தது. அதனால் எதனையும் தீர ஆராய்ந்து இயலுமான தகவல்களை திரட்டிய பின்னரேயே முடிவெடுக்க வேண்டும்.

இன்னும் சில நாட்களில் £250,000 பவுண்களை பறிகொடுத்த லண்டன் தமிழர்களின் கதை தேசம்நெற்றில். பறிகொடுத்தவர்களும் தமிழர்கள் பறித்தவர்களும் தமிழர்கள்.

தொலைக்காட்சித் தொகுப்பாளருக்குப் பின்னால் துப்பாக்கியுடன் தலிபான்கள் – பெருகும் எதிர்ப்பலைகள் !

தொலைக்காட்சித் தொகுப்பாளருக்குப் பின்னால் துப்பாக்கியுடன் தலிபான்கள் நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில், ஆப்கனில் இன்னமும் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

அந்த வகையில், தலிபான் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவரைக் கடந்த 17-ம் திகதி நேர்காணல் செய்த டோலோ சேனலின் பெண் பத்திரிகையாளர் பேஹஸ்டா அர்கான்ட் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் செய்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளருக்குப் பின்புறத்தில் கையில் துப்பாக்கியுடன் தலிபான்கள் இருக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

அவ்வீடியோவில் ஆப்கன் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஒருவர், தலிபான் தலைவர் ஒருவரை நேர்காணல் செய்கிறார். அப்போது அந்தத் தொகுப்பாளருக்குப் பின்னால் துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் வரிசையாக அவருக்குப் பின்னால் நிற்கின்றனர்.

இந்த வீடியோவைக் குறிப்பிட்டு ஈரான் பத்திரிகையாளர் மசிஹ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதனை நிஜம் என்று நம்ப முடியவில்லை. தொகுப்பாளருக்குப் பின்னால் தலிபான்கள் நின்று கொண்டு ஆப்கன் மக்கள் பயம் கொள்ள வேண்டாம் என்று கூற வைக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்களின் பயத்திற்கு தலிபான்களே காரணம். இதுவே அதற்கான சான்றாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

என்னதான் நடக்கின்றது ஆப்கானிஸ்தானில் … : சிவா முருகுப்பிள்ளை (பகுதி 1)

உலகின் ஒரு மூலையில் மனித குலம் எதிர்பாராத நிகழ்வுகள் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அப்படியான ஒரு வரலாற்று திருப்பு முனையாக 20 வருடம் ஆப்கானிதானில் நிலை கொண்டிருந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் திடீர் வெளியேற்றமும தொடரந்தாற் போல் ஒரு கிழமையிற்குள்…? அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட அரசு பதவியை இழந்ததும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வும் நடைபெற்று இருக்கின்றது தற்போது.

எதிர்பாராத நிகழ்வு என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தாலும் உண்மையில் இவை எல்லாம் ஒரு வரலாற்றுப் போக்கில் நடைபெற்ற ஒரு வேக நிகழ்வுதான்.

இன்றைய ஆப்கானிஸ்தான் பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு நாம் ஆப்கானிஸ்தானின் வரலாற்றை குறைந்தது ஐம்பது வருடங்களாவது பின் சென்று பார்த்தாக வேண்டும். அந்த வகையில் உலகின் வல்லரசுகளா ஒரு காலத்தில் இருந்த சோவியத் யூனியன் அமெரிக்கா என்று இரு முகாங்கள் வலுவாக உலகில் கோலோச்சிய காலத்தில் இருந்து நாம் வரலாற்றைப் பார்த்தாக வேண்டும்
அதிகம் மலைப் பிரதேசங்களையும் தட்டையற்ற நிலப்பரப்பையும் மலைகளில் அதிக கனிம வளங்களையும் கொண்டிருப்பதுதான் ஆப்கானிஸ்தான். பல்வேறு சிற்றரசுகளாக அவற்றிற்கிடையே அதிக தொடர்புகள் குறைவாக வெவ்வேறு ஆளுமையிற்குள் காலத்திற்கு காலம் இருந்து வந்திருக்கின்றது ஆப்கான். இன்று கூட நிலமை அவ்வாறுதான் உள்ளது.

ஆப்கானிஸ்தான் ஒரு பல்லின மற்றும் பெரும்பாலும் பழங்குடி சமூகங்களைக் கொண்ட நாடு. பஷ்தூன்;, தாஜிக், ஹசாரா, உஸ்பெக், ஐமக், துர்க்மேன், பலோச், பாஷாய், நூரிஸ்தானி, குஜ்ஜார், அரபு, பிராகுய், கிசில்பாஷ், பமிரி, கிர்கிஸ், சாதத் என்ற இனங்களையும் மேலும் சில மிகச் சிறிய அளவிலான இனங்களையும் தன்னகத்தே கொண்டது. ஆப்கான் அரசியலமைப்பு, தேசிய கீதம் போன்றவற்றில் பதினான்கு இனங்கள் பற்றி குறிப்புக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது தலிபான் முழு ஆப்கானிஸ்தானையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். வடக்கு கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் பஷ்தூன்; இனம் தவிர்ந்த ஏனைய சிறுபான்மை இனங்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை அமைப்பும் இங்கு பலமான ஒரு நிலையில் உள்ளது சில பிரதேசங்களில். குறிப்பாக பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியைக் குறிப்பிடலாம்.

வரலாற்றில் சற்று பின் நோக்கிச் செல்வோம்….

இஸ்லாமிய மக்களை அதிகம் கொண்டுள்ள உலக நாடுகளில் பல நாடுகள் முன்னேற்றகரமான சமூக அமைப்பை, ஆண் பெண் சமத்துவத்தை தமது மத நம்பிக்கை மார்க்கத்தையும் தொடர்ந்த வண்ணம் உள்ளதை உதாரணத்திற்கு காட்ட முடியும். உலகின் பொதுப் பார்வையில் இஸ்லாமிய மார்க்கம் மத அடிப்படைவாத செயற்பாட்டை தமக்குள் வகுத்துக் கொண்டு செயற்படுபவர்கள் என்ற பார்வை அதிகம் மேலோங்கி உள்ளது. ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை.

மத அடிப்படை வாதத்திற்கு அப்பால் மனித குல மேம்பாடு என்ற தளத்தில் இவற்றின் அடிப்படைக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு பயணிக்க முற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களும் அங்கு உருவான அரசுகளும் கடந்த காலங்களிலும் இருந்து வந்தன என்பதை வரலாறு கூறி நிற்கின்றது.
மன்னர் ஆட்சிக் கோலோட்சிய 1960 களில்….

மன்னராட்சிக் காலத்தில் மன்னரின் மைத்துனரும் பஷ்தூன் தேசியவாதியான முகமது தாவூத் கான் பஷ்துனிஸ்தான் என்ற நாட்டை ஆப்கானிஸ்தானில் உருவாக்க முயன்றார் இதனால் அயல்நாடான பாகிஸ்தானுடன் முறுகல் நிலை ஏற்படட்டது. 1963 வரை பதவியில் இருந்த பத்து ஆண்டுகளில், தாவூத் கான் சமூக நவீனமயமாக்கல் சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்தார் மற்றும் சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவையையும் பேணி வந்தார். இதன் தொடர்ச்சியாக 1964 ஆப்கானிஸ்தானுக்கான புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் சர்தார் தௌவுத் கானின் மன்னராட்சிக்கு எதிராக ஆப்கானிய கம்யூனிஸ்ட்களின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஏப்ரல் 1978 இல் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. இவர்கள் கிளர்ச்சிக்கு ஆதரவாக அன்றைய ஆப்கானிய அரச இராணுவம் செயற்பட்டது.

இந்தப் புரட்சியை தலைமை தாங்கிய நூர் முஹம்மது தராக்கி சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் ஆட்சியமைத்தார். அவர் பழமைவாதம் நிறைந்த ஆப்கானிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை நவீனப்படுத்தும் திட்டங்களையும் முக்கியமாக நிலப் பிரபுகளுக்கு எதிரான நில சீர்த்திருத்தத்தையும் செயற்படுத்தினார்.

இது ஆப்கானிய நிலப் பிரபுக்களை ஆப்கானிய கம்யூனிச அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை செய்வதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அன்றைய ஆப்கானிஸ்தான் அரசில் அங்கம் வகித்த ஆப்கானிய கம்யூனிஸ்ட் தலைவர் நூர் மற்றும் நிலப்பிரபுகளுக்கு ஆதரவான ஹபிசுல்லா அமினுக்கு இடையே மோதல் முற்ற, இராணுவத் தளபதி அமின் இன் உத்தரவின் பேரில் நூர் படுகொலை செய்யபடுகிறார்.

அதனைத் தொடர்ந்து அமின் சோவியத் நாட்டை தவிர்த்து அமெரிக்காவின் பக்கம் சாய்கின்றார் என்பதன் அடிப்படையில் சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி தளபதி அமினை படுகொலை செய்து விட்டு சோவியத் ஆதரவாளரான பாப்ரக் கர்மலை நாட்டின் தலைவராக நியமித்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய ஆசியாவின் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானிஸ்தானில் கம்யூனிசம் காலூன்றுகின்றது என்ற வெறுப்பு மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளைப் பற்றிக் கொண்டது. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இதற்கு எதிராக செயற்படத் தொடங்கினர். சோவியத் இராணுவம் உடனடியாக ஆப்கானை விட்டு வெளியேற வேண்டும் என்று தீர்மானங்களை அவை நிறைவேற்றின. சோவியத் ஆப்கானை விட்டு வெளியேற மறுக்கின்றது.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் சோவியத் படைகளை வெற்றி கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், சவூதிஅரேபியா, சீனா போன்ற நாடுகள் ‘முஜாஹிதீன்” என்ற இஸ்லாமிய சித்தாந்த ரீதியிலான மத அடிப்படைவாதப் போராளிகளை உருவாக்குகிறார்கள்.

அதன் தலைவர் முல்லா உமர் தலமையில் சோவியத் படைகளுக்கு எதிராகவும் அவரின் ஆதரவு ஆப்கானிஸ்தான் கம்யூனிச அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அன்றைய காலகட்டத்தில் சோவியத் சீனா இடையிலான முரண்பாடுகள் காரணமாக சீனாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் அமெரிக்கா இருந்தது.

உண்மையில் மேற்கத்திய நாடுகளின் சோவியத்திற்கு எதிரான பனிப்போரை முஜாஹிதீன்கள் நடத்தினார்கள். இவர்களின் தளபதிகள் பெரும்பாலும் நிலப்பிரபுக்களாக இருந்து போராளிகளாக உருமாறியவர்கள். பெரும்பாலும் இவர்கள் பழங்குடியினர் மத்தியில் இருந்து வந்த பஷ்தூன்; இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதற்கிடையில் பாப்ரக் கர்மலின் ஆட்சியின் மீது மக்களின் அதிருப்தி அதிகரிக்க, சோவியத் யூனியன் புதிய அதிபராக முஹம்மது நஜிபுல்லாவை நியமித்தது.

முஜாஹிதீன் களின் கெரில்லா யுத்தம் சோவியத் நாட்டுக்கு பெரும் இழப்பையும் பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தியதன் விளைவாக பத்து வருடங்கள் ஆப்கானில் நிலை கொண்டிருந்த சோவியத் இராணுவம் பெப்ரவரி 1989 ஆப்கானை விட்டு வெளியேறுகிறது.

ஆனாலும் தொடர்ந்து பொருளாதார இராணுவ உதவிகளை நஜிபுல்லா அரசிற்கு வழங்கி வந்தது. 1991 இல் சோவியத்தின் வலிந்த உடைவும் அதனைத் தொடர்ந்த சோவியத் ஆதரவு அற்ற ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா அரசும் அதிக காலம் தாக்கு பிடிக்க முடியவில்லை. முஜாஹிதீன் இற்கு பாகிஸ்தான் ஊடாக அமெரிக்க கூட்டமைப்புகள் ஆயுத பொருளாதார ஆதரவுகளை வழங்கி வந்த நிலையில் ஆப்கான் அரசு 1992 இல் வீழ்சியடைகின்றது.

முஹம்மது நஜிபுல்லா பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்குத் தப்பியோட முயற்சித்தார். அது தோல்வியில் முடிய – ஆப்கானில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் தலைமை குடியிருப்பில் தங்கியிருந்த முஹம்மது நஜிபுல்லாவை முஜாஹிதீன் துக்கிலிட்டு படுகொலை செய்து அதன் பின்பு வாகனம் ஒன்றில் பின்புறமாக கட்டி தெருத் தெருவாக இழுத்துச் சென்றனர்.

முஜாஹிதீன்களின் ஆட்சி ஆப்கானிஸ்தானில் துவங்கியது இவ்வாறுதான்.

கம்யூனிசத்திற்கு மாற்றாக இஸ்லாமிய நாடுகளில் மத அடிப்படைவாதத்தை பரப்பிய ‘பெருமை’ மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளையே சேரும். சவூதிரேபியாவின் எண்ணெய் வளம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, அமெரிக்காவின் நேட்டோ கூட்டணி என்பது இந்த மத அடிப்படைவாதத்தின் அச்சாணி.
இதனைத் தொடர்ந்து பல்வேறு முஜாஹிதீன் பிரிவுகளின் கூட்டணியினர் அரசாங்கத்தை சலாவுதீன் ரப்பானி தலமையில் உருவாக்கினர். ஆனால் மற்றொரு உள்நாட்டுப் போர் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 1996 வரை தொடர்ந்த உள்ள நாட்டுப் போரின் இறுதியில்தான் தலிபான்களின் முதல் தவணை ஆட்சி ஆப்கானில் உருவானது…

மிகுதி அடுத்த பதிவில்…

(நன்றி: சிவா முருகுப்பிள்ளை – அவருடைய முகநூலில் இருந்து)

“நாட்டை விட்டு வெளியேறும் போது ஒரு ஜோடி ஆடைகளும், உள்ளாடைகளும், ஒரு செருப்பும் மட்டுமே எடுத்துச் சென்றேன்.” – அஷ்ரப்கனி விளக்கம் !

தலிபான்களுக்கு அஞ்சி பெட்டி, பெட்டியாக பணத்துடன் நான் தஜிகிஸ்தானுக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுவை அனைத்தும் பொய்யான தகவல் என்று பதவி விலகிய ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப்கனி விளக்கம் அளி்த்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்து வெளிேயறத் தொடங்கியபின், மிகவிரைவாக ஆப்கானை தங்கள் வசம் தலிபான்கள்  கொண்டுவந்துள்ளனர்.

காபூல் நகருக்குள் தலிபான்கள்வந்துவிட்டதை உறுதி செய்த ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளிேயறி தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமல்லாமல் அவர் வெளியேறும் போது 4 கார்கள் நிறைய பணத்தை எடுத்துச் சென்றதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தளம் தெரிவித்தது.

அதன்பின் அஷ்ரப் கானி தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ஆயுதங்கள் ஏந்திய தலிபான்கள் அல்லது 20 ஆண்டுகாலம் என் உயிரைக் காப்பாற்றிய அன்புக்குரிய தேசத்தை விட்டுச் செல்வதா என்ற ஊசலாட்டம் இருந்தது.

ஆனால், தலிபான் தீவிரவாதிகள் கத்தியின், துப்பாக்கி முனையில் நாட்டை வைத்துள்ளார்கள். அவர்களால் நாட்டு மக்களின் மனதை வெல்ல முடியாது. நான் வெளியேறாவிட்டால், ஏராளமான மக்கள் கொல்லப்படுவார்கள், காபூல் நகரம் சின்னபின்னாகும், மிகப்பெரிய மனிதப்பேரழிவு நிகழும், 60 லட்சம் மக்கள் வாழும் நகரம் ரத்தக்களறியாகும். காபூல் நகரை ரத்தக்களரியாக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி ஹெலிகாப்டரில் தப்பித்து தஜிகிஸ்தான் செல்லவி்ல்லை ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். இதை ஐக்கிய அரபு அமீரகம் அரசே தகவல் தெரிவித்து, மனித நேயஅடிப்படையில் அஷ்ரப் கனி தங்கவைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்முறையாக அதிபர் அஷ்ரப் கனி பேஸ்புக்கில் வீடியோவில் தன்னுடைய நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நான் 4 சூட்கேஸ் நிறைய டாலர்கள் அதாவது அரசின் 16.90 கோடி அமெரிக்க டாலர்களுடன் நான் ஹெலிகாப்டரில் தப்பித்துவிட்டதாகக் குற்றச்சாட்டு வெளியானது. அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. நான் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்லும்போது என்னுடன் ஒரு ஜோடி ஆடைகளும், உள்ளாடைகளும், ஒரு செருப்பும் மட்டுமே எடுத்துச் சென்றேன். எனக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவதும் முற்றிலும் பொய்யான தகவல்

நான் தஜிகிஸ்தானில் இல்லை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன்.என்னுடைய அரசியல் வாழ்க்கையையும், என்னுடைய குணத்தையும் அழிப்பதற்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வருவது தொடர்பாக பேச்சு நடத்திவருகிறேன் விரைவில் நாடு திரும்புவேன். ஆப்கான் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அமைதிப் பேச்சு தோல்வியில் முடிந்ததால்தான்,  தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் நான் தொடர்ந்து தங்கியிருந்தால், காபூல் நகரம் சிரியா, ஏமன் போன்று மாறியிருக்கும். நான் தொடர்ந்து அதிபராக இருந்திருந்தால், அப்பாவி மக்கள் என் கண்முன்னே தலிபான்களால் தூக்கில் தொங்கவிடப்பட்டிருப்பார்கள். இது நம்முடைய வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக இருக்கும்.

இதுபோன்று இறப்பதற்கு நான் அஞ்சவில்லை, ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு அவமதிப்பு வருவதை நான் ஏற்கமாட்டேன். ஆப்கானிஸ்தான்  ரத்தக்களரியாக மாறுவதைத் தவிர்க்கவே நான் நாட்டைவிட்டு வெளியேறினேன்.

நாட்டின் அரசியல் நிலையை சீர் செய்ய முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், தலிபான்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவாக இருக்கிறேன்.

இவ்வாறுஅஷ்ரப் கனி  தெரிவித்தார்

“தலிபான்கள் என்னை கொலை செய்ய வருவார்கள்.” – ஆப்கான் முதல் பெண் மேயர் கவலை

தலிபான்கள் என்னை கொலை செய்ய வருவார்கள் என்று ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன்காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள்ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

ஆப்கனில் இனி சண்டை நடக்காது, அமைதி நிலவும். இஸ்லாம் விதிகள்படி பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.

இந்த நிலையில் தலிபான்கள் உயிருக்கு ஆபத்து என்று ஆப்கனின் முதல் பெண் மேயர்  சரிஃபா கஃபாரி (27) தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சரிஃபா கஃபாரி கூறும்போது, தலிபான்கள் இங்கு வருவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னை கொல்ல வருவார்கள். எனக்கும், எனது குடும்பத்திற்கும் உதவ யாரும் இல்லை. நான் எங்கு செல்வேன்.

கடந்த காலங்களிலும் தலிபான்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். முன்று முறை என்னை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அந்தக் கொலை முயற்சிகளிலிருந்து தப்பிவிட்டேன்” என்றார்.

ஹெய்டியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 227 பேர் வரை பலி !

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹெய்டியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில்  7.2 ஆக பதிவானது. ஹெய்டியின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிச்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
More than 300 dead after 7.2 magnitude earthquake strikes Haiti | Earthquakes News | Al Jazeera
இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை புரட்டிப் போட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு தலா 100 டொலர்கள் பரிசு !

அமெரிக்காவில் புதிதாக கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு தலா 100 டொலர்களை (சுமார் 20,000 இலங்கை ரூபா) வழங்குமாறு அமெரிக்காவின் உள்நாட்டு அரசுகளை ஜனாதிபதி ஜோ பைடன் கோரியுள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

அத்துடன், அமெரிக்க சமஷ்டி அரச ஊழியர்களுக்கு தடுப்பூசி தொடர்பான புதிய அறிவுறுத்தல்களையும் அவர் விடுத்துள்ளார்.

சமஷ்டி அரச ஊழியர்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும் அல்லது கட்டாய சோதனைக்கு உட்படுவதுடன் முகக்கவசம் அணிய வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மக்கள் தொகை சுமார் 33 கோடியாகும். இவர்களில் 16.38 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டின் தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மத்திய நிலையத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா கைதுக்காக கலவரம் – 117 பேர் வரை இறப்பு !

தென்னாபிரிக்காவில் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 117ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிஜேக்கப் ஜுமா, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏழு மாகாணங்களில் குழப்பநிலை நீடித்து வருகின்றது.

ஜேக்கப் ஜூமா: ஓர் அரசியல் கைதியின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் - BBC News  தமிழ்

இதனால் அங்கு வன்முறை மற்றும் கலவரங்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவியாக 20,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. இதுவரை 2,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வன்முறையின் மையமான குவாசுலு-நடால் மாகாணத்தில், நிலைமை நிலையற்றதாகவே உள்ளதாகவும் ஆனால் மிகவும் மேம்பட்ட ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய அமைதியின்மை, முன்னாள் ஜனாதிபதி ஸூமாவை சிறையில் அடைத்ததன் மூலம் தூண்டப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமாவுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம், 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஜேக்கப் ஸூமாவை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், கடந்த வாரம் ஜேக்கப் ஸூமா பொலிஸில் சரணடைந்தார்.

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜேக்கப் ஜுமாவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது கலவரம் மற்றும் வன்முறையாக உருவெடுத்துள்ளது.

“ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது அச்சமூட்டுகிறது.” – ஜோர்ஜ் டபிள்யு புஷ்

2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான்  விவகாரத்தில்  அமெரிக்கா  தலையிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.

தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரைஅமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கான் இராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா  ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வேகமாக வெளியேறிவரும் நிலையில், அந்நாட்டின் 85 சதவீதப் பகுதிகள் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் பல ஆப்கான் வீரர்கள் அச்சம் காரணமாக அயல்நாடுகளிடம் தஞ்சமடைய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறுவது பயத்தை அளிக்கிறது என்று  ஜோர்ஜ் டபிள்யு புஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெர்மனி பத்திரிகை ஒன்றுக்கு ஜோர்ஜ் டபிள்யு புஷ்  அளித்த பேட்டியில் கூறுகையில், “இது ஆபத்தைக் குறிக்கும். ஆப்கனிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தியப் படைகள் வெளியேறுவது அந்நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அவர்கள் அங்குள்ள கொடுங்கோலர்களால் தண்டிக்கப்படலாம். நினைக்க முடியாத ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த முடிவு சோகத்தை அளிக்கிறது” என்றார்.

 

 

பிரித்தானியாவில் பதிவுகள் இல்லாமல் 1.2 மில்லியன் பேர்: இவர்ளைப் பதிவு செய்ய பொதுமருத்துவர்கள் முன்வருகின்றார்கள் இல்லை!!!

பிரித்தானியாவில் குடியுரிமை மற்றும் ஆவணங்கள் ஏதும் இன்றி 1.2 மில்லியன் பேர் இருப்பதாகவும், 80வீதமான பொது மருத்துவர்கள் இவர்களை தங்கள் மருத்துவ மையத்தில் பதிவு செய்ய மறுக்கின்றனர் எனவும் தெரியவருகின்றது. தற்போது மிக வேகமாக பரவி வருகின்ற டெல்டா வெரியன்ரும், இனி வரும் குளிர் காலத்தில் ஏற்படப் போகும் வைரஸ் தொற்றுக்களாலும் இந்த மக்கள் பிரிவினர் கூடுதலாகப் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகின்றது.

தற்போதைய கொன்சவேடிவ் அரசு குடிவருவோருக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்ததால்; வீடுவாடகைக்கு விடுபவர்கள் முதல் பொதுமருத்துவர்கள் வரை உள்துறை அமைச்சின் முகவர்கள் போலவே செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டனர். தற்போது பொது மருத்துவர்களுக்கு அவ்வாறான நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லாத போதும், பொது மருத்துவர்கள் குடிவரவுப் பத்திரங்கள் இல்லாதவர்களை தங்கள் சுகாதார மையங்களில் பதிவு செய்ய மறுக்கின்றனர்.

தற்போது ஜெனரல் மெடிக்கல் கவுன்சில் குடிவரவு பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்களையும் பொது மருத்துவர்கள் தங்கள் மருத்துவ சுகாதார மையங்களில் பதிவுசெய்து; அவர்களுக்கான கோவிட் வக்சினை வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றது. அரசும் பொது மருத்துவர்கள் எவ்வித குடிவரவு மற்றும் ஆவணங்கள் இல்லாமலேயே பொதுமருத்துவர்கள் தங்கள் மையங்களில் யாரையும் பதிவு செய்யலாம் என்பதையும் வலியுறுத்தி உள்ளது. அரசுக்கு எத்தனை பேர் கோவிட் வக்சீன் போட்டுள்ளார்கள் என்று தெரியுமே அல்லாமல் எத்தனை பேர் வக்சீன் போட்டுக் கொள்ளாமல் உள்ளனர் என்ற விபரம் தெரியாது.

மேலும் பொது மருத்துவர்களின் கீழ் பதிவு செய்பவர்களின் விபரங்கள் குடிவரவுத் திணைக்களத்துடன் பரிமாறப்படாது என்ற உறுதியையும் ஜெனரல் மெடிகல் கவுன்சில் வழங்கி உள்ளது. மேலும் ஆவணங்கள் இல்லாதவர்கள் வக்சீன் போடுவதற்கு வசதியாக நடமாடும் வக்சீன் மையங்கள் சிலவற்றையும் அரசு இயக்கிவருகின்றது.