யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாகியுள்ளன.
குறித்த தாக்குதல் சம்பவம் அதிகாலை 12.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நாகர் கோவில் பகுதியில் மயானம் ஒன்றுக்கு சுற்றுமதில் அமைக்கும் முயற்சியின் தொடராக ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து கடந்த திங்கட்கிழமை இரவு பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இதன் போது துப்பாக்கிப் பிரயோகமும் தடியடியும் பொலிஸார் மேற்கொண்டதாக மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பகல் இரண்டு தரப்புகளும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் சமரசத்தில் ஈடுபட்ட நிலையில் மயானத்துக்கான மதில் அமைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் இன்றைய தினம் அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.