உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

கிளிநொச்சியில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 91 குடும்பங்கள் பாதிப்பு !

கிளிநொச்சியில் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளை ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 91 குடும்பங்களைச் சேர்ந்த 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மதியம் 12 மணிக்கு பெறப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளிலே குறித்த அனர்த்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி கிளிநொச்சியில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் கிளிநொச்சி மகாவித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட மரங்கள் முறிந்து சரிந்துள்ளதுடன், பாடசாலை தற்காலிக கொட்டகைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன. குறித்த பாடசாலைக்கு முன்னால் இருந்த முதிர்ச்சியடைந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து வீதியில் விழுந்துள்ளது.

கிளிநொச்சி நகர் மற்றும் பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள நெல் களஞ்சிய சாலைகள் சேதமடைந்துள்ளன. கடைத்தொகுதி ஒன்றின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கண்டாவளை பகுதியில் வாழைத் தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த அனர்த்த பாதிப்புக்களின் மதிப்பீடுகள் தேசிய அனர்த்த சேவைகள் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நாவலர் கலாசார மண்டபத்தை வடமாகாண ஆளுநர் அரசுக்கு கையளித்த விவகாரம் – மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் !

நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குறித்த வழக்கை இன்றையதினம் (03) தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்தார்.

குறித்த விடயத்தை கைவிடக்கோரி யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 28 பேரின் கையொப்பத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜரொன்றும் யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபனால் கையளிக்கப்பட்டநிலையில் தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுக்கும் அரச பேருந்துகள் – வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விசனம் !

வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு வலயப் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை அரச பேருந்துகள் தொடர்ச்சியாக ஏற்றாது செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு வலயத்திற்கு ஏற்பட்ட ஏ9 வீதியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை  இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் ஏற்றாது செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாணவர்களின் கற்பதற்கான உரிமையை பறிப்பதற்கோ அல்லது தடைகளை ஏற்படுத்துவதற்கோ துணை நிற்பதை அனுமதிக்க முடியாது.

ஏ9 வீதியில் பயணிக்கும் அரச பேருந்துகள் மாணவர்களை ஏற்கனவே செல்வது தொடர்பில்  எனக்கு முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் உரிய தரப்பினர்களை நடவடிக்கை எடுக்கப் பணித்துள்ளேன்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்தி அலுவலகமும் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்வதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வடமாகாண  பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியன தமது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆகவே மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்காமல் இருப்பதற்கு உரிய தரப்பினர் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயல்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைகழக மாணவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டம் !

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று திங்கட்கிழமை கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினைக் கலைப்பதற்காக பொலிஸாரினால் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் காணப்படும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சந்த முதலிகே குறிப்பிடுகையில்,

பல்கலைக்கழகங்களுக்குள் தற்போது அடக்குமுறைககள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்கலை மாணவர்கள் சிலர் போலியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எவ்வித காரணமும் இன்றி களனி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் எவ்வித அடிப்படை காரணமும் இன்றி கால வரையறையின்றி மூடப்பட்டிருந்ததோடு , சுமார் 30 பேரின் மாணவர் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பேராதனை மற்றும் ருஹூணு பல்கலைக்கழகங்களிலும் இவ்வாறான அடக்குமுறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு தீர்வினைக் கோரியே இன்று ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தோம் என்றார்.

யாழ்ப்பாணத்தில் சிறுவர் இல்லத்தில் இருந்து 13 சிறுமிகள் மீட்பு – வெளிவந்துள்ள பின்னணி !

யாழ்ப்பாணம் இருபாலையில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு மீட்கப்பட்ட 13 சிறுமிகளும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமிகளுக்கு தேவையின்றி விற்றமின் சி மற்றும் டி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய சபை என்ற கிறிஸ்தவ சபையினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் காவல்துறையினர் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலகர்கள் இன்று முற்பகல் அங்கு சென்றனர்.

அதன்போது 13 சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் உரியவகையில் உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் சேர்க்கப்பட்டவர்களே இந்த 13 சிறுமிகளும். அவர்கள் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாய்களுடன் விளையாட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விற்றமின் சி மற்றும் டி மாத்திரைகள் தேவையின்றி வழங்கப்பட்டுள்ளது. சிறுமிகள் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தம்மை வேறு சிறுவர் இல்லங்களில் சேர்க்குமாறு சிறுமிகள் 13 பேரும் கோரியுள்ளனர்” என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

சிறுமிகள் 13 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இந்த சிறுவர் இல்லம் “மாணவர் விடுதி” என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளம் தொடர்பான தீர்மானங்கள் விவசாயிகளிடம் கலந்துரையாடமல் எடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ்

கிளிநொச்சி – இரணைமடு குளத்தை அடிப்படையாக கொண்டு இடம்பெறும் சிறுபோகச் செய்கை தொடர்பிலான தீர்மானங்கள், பெரும்பாலான விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாமல் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதில் சிறுபோக நெற்செய்கை மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாமல் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை வளாகத்தினுள் கறுப்புக் கொடி,  பதாதைகள் காட்சிப்படுத்தப்படுவதற்கு தடை !

வைத்தியசாலை வளாகத்தினுள் கறுப்புக் கொடி,  பதாதைகள் காட்சிப்படுத்தப்படுவதற்கு தடை விதித்து  சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

உயிருக்கு போராடும் நிலையிலுள்ள நோயாளிகள் கறுப்புக் கொடியை பார்ப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை  ஏற்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தனது சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நோயாளர்களை காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார ஊழியர்களின் பணிக்கு இதனூடாக இடையூறு ஏற்படும் எனவும்  சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதார அமைப்புகளின் வளாகத்தினுள் கறுப்புக் கொடி ஏற்றுவதையும் பதாதைகளை காட்சிப்படுத்துவதையும் தவிர்க்குமாறு குறிப்பிட்டு சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சுற்றுநிருபத்தினூடாக  தமது எதிர்ப்பு நடவடிக்கையை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிறைவேற்று சபைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இதனிடையே, தங்களது கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு அளித்தால், கறுப்புக் கொடிகளை காட்சிப்படுத்த மாட்டோம் என அரச மற்றும் அரச தனியார் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வோருக்கு NVQ சான்றிதழ் கட்டாயம் – இன்று முதல் புதிய நடைமுறை!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் இன்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

28 நாள் வதிவிடப் பயிற்சியும் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.

28 நாள் வதிவிடப் பயிற்சியின் பின்னர் வீட்டுப் பணிகளுக்காக வௌிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு NVQ மூன்றாம் நிலை சான்றிதழ் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நிபுணத்துவத்துடனான ஊழியர்களை பணிக்கு அனுப்புவதே இதன் நோக்கமாகும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.

சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சிறிய அளவிலும் பொருட்களை தயாரிக்கும் தொழில் முயற்சியாளர்கள் எவ்வித கட்டணமும் இன்றி இன்று (01) முதல் வீதியோரங்களில் இருந்து பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்காலிகமாக இந்த அனுமதி வழங்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஏப்ரல் 12ம் திகதி வரை வீதியோரங்களில் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் அந்தந்த பகுதியின் பிரதேச செயலாளரின் ஒப்புதலுடனும் மேற்பார்வையுடனும் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.

மஹரகம நகரம் உட்பட பல இடங்களில் இவ்வாறான விசேட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதே போன்று நாடளாவிய ரீதியில் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பண்டிகைக் காலம் முடியும் வரை உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு தற்காலிகமாக விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் பாடப்புத்தகம் !

பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களைத் தயாரிப்பதற்கும், இவ்விடயம் குறித்து பல்வேறு தரப்பினரை விளிப்புணர்வூட்டுவதற்கும் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பில் விசேட குழுவொன்றை அமைக்குமாறு பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் தலைவர் ரோஹினீ குமாரி விஜேரத்ன அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அதன் தலைவர் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரையும் உள்ளடக்கியதாக இந்தக் குழுவை அமைக்குமாறும், இதனை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய பொறுப்பை கல்வி அமைச்சை ஏற்றுக்கொள்ளுமாறும் குழுவின் தலைவர் பணிப்புரை வழங்கினார்.

இந்தக் குழுவின் செயற்பாடுகள் மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும், இதற்கமைய கால அட்டவணையை அடுத்த கூட்டத்தில் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பதினாறு வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் விளிப்புணர்வூட்டும் நோக்கில் பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இருந்தபோதும், பிள்ளைகளின் மனதுக்கு ஏற்ற வகையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் விளிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இதற்கான பாடப்புத்தகத்தைத் தயாரிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

இத்திட்டத்தில் முதற்கட்டமாக புத்தகங்கள் அச்சிடப்படாவிட்டாலும் ஆரம்பத்தில் ஒன்லைன் மூலம் கலந்தாய்வுகளை நடத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.