உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“வடக்கு – கிழக்கை இணைக்க வேண்டும் என கூறி முஸ்லீம்களிடையே விசமத்தனமான கருத்துக்கள் விதைக்கப்படுகிறது.” – ரவூப் ஹக்கீம்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாடுகளில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொள்ள ஜனாதிபதி ரணில் நடவடிக்கை எடுப்பது அவசியம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் எம்பி,

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சிகளுடனும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

சகல தரப்புகளும் இணங்கும் சிறந்த தீர்வை மிக விரைவில் பெற்றுத்தருவதற்கான முயற்சியை ஜனாதிபதி ரணில் உளப்பூர்வமாக எடுப்பாரானால் அதில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

எனினும் அது சம்பந்தமாக விசமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரிய விடயமாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து, தமிழ் மக்களின் அபிலாசைகள் என்பது சில சமயங்களில் முஸ்லிம்களின் அபிலாசைகளுடன் முரண்பட்டதாக காணப்படுகின்றன.

அந்த வகையில் தேவையற்ற சந்தேகங்களை கிளப்பி ஒட்டுமொத்த இனப்பிரச்சினை தீர்வுக்கான சாத்தியப்பாட்டையும் குழப்ப முயற்சிக்கும் விடயமாக இதை உணர முடிகிறது. அதனடிப்பையில் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு பிரதேசத்தையும் ஒரு அரசியல் அலகாக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பில் நீண்டகாலமாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும்; அதில் முஸ்லிம் தரப்பு சற்று மாற்றமான கருத்தை கொண்டிருக்கின்றது என்பதை குறிப்பிட வேண்டும் என தெரிவித்தார்.

“நாட்டை சீரழித்த அரசியல்வாதிகளை புனர்வாழ்வு நிலையங்களில் அடைத்து விடுங்கள்.” நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா

“புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். ஏனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள்.” என ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறும் எதிர்பார்த்தேன்,இருப்பினும் ஒருசில காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்படுகிறது.

கந்தகாடு புனர்வாரழ்வு மத்திய நிலையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் முன்பு 2 வருட காலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, இறுதி ஆண்டில் தொழிற்துறை தொடர்பான பயிற்சி வழங்கப்படும் ஆனால் தற்போது 06 மாதங்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கும் தரப்பினர் ஹெரோய்ன் போதைப்பொருள்பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க பயிற்றுவிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் தற்போது ஐஸ்போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டியுள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 350 பேரை பராமரிக்க 90 இராணுவத்தினர் மாத்திரம் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே கந்நகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கு அவதானம் செலுத்துவதை விடுத்து போதைப்பொருள் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரானுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இவ்விடயத்தின் தேசிய புலனாய்வு பிரிவின் செயற்திறனை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோர் மூன்று வேளை உணவை இருவேளையாக குறைத்துக் கொண்டுள்ளார்கள்.

பாடசாலை பாதனிக்கு பதிலாக சாதாரண செருப்பை அணிந்துக் கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தர கல்வி அமைச்சு அனுமதி தர வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கும் நிலைக்கு நாடு அவலத்தை எதிர்கொண்டுள்ளது.

புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு தான் புனர்வாழ்வு வழங்க வேண்டும்,எனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்தார்கள்.

போராட்டத்திற்கு ஊழல் அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளார்கள்.ஆகவே நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்க வேண்டும்.போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும் என்றார்.

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வலியுறுத்தி எட்டு மாவட்டங்களில் கவனயீர்ப்பு போராட்டம் !

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.

இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தீர்வு குறித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான மூன்றாவது சந்திப்பின் முடிவு என்ன..?

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடையில் தற்போது காணப்படும் அதிகாரங்களை செயற்படுத்துவற்கு செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து இன்றைய ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பரிசீலித்து எதிர்வரும் 10 ஆம் திகதி முடிவை அறிவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக, சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்த நிலையில், அதிபருடன் தமிழ்க் கட்சிகள் கலந்தரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.

இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது தடவையாக இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இன்றைய சந்திப்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டுள்ளதுடன், கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

அடுத்த சந்திப்பு ஏனைய தமிழ்க் கட்சிகளையும் உள்ளடக்கி எதிர்வரும் 10 அம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமது இறுதி நிலைப்பாடு குறித்து எதிர்வரும் 10 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

சீனாவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் கொவிட்-19 வகைகள் இலங்கையிலும் !

தற்போது சீனாவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் கொவிட்-19 வகைகள் இலங்கையிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் பல மாதங்களாக காணப்படுவதாக சுகாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து வெளியிடப்பட்ட வரிசைமுறை தரவுகளின் அடிப்படையில் இது உறுதிப்படுத்தப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவரும் பேராசிரியருமான நீலிகா மாளவிகே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

“உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களையும், இளைஞர்களையும் முன் நிறுத்துவோம்.” – எம்.ஏ.சுமந்திரன்

“உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும் முன் நிறுத்துவோம்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் ஊடகங்களுக்கு நேற்று (04) கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி தேர்தல் வேட்புமனுதாக்களுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எமது கட்சியின் சார்பிலே தேர்தல்கள் பிற்போடகூடாது , அது ஜனநாயகத்தினை மீறுகின்ற செயல் என தொடர்ச்சியாக கூறி வந்திருக்கிறோம்.

அரசாங்கம் இந்த தேர்தலினை பிற்போடுவதற்கு எடுத்த முயற்சிகள் எங்களுக்கு தெரியும். எதுவும் கைகூடாத நிலைமையில் தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியாக அறிவித்துள்ளது. இந்த வேளையில் இதனை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்க கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நாங்கள் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம்.

சில வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாண சபை தேர்தலும் உடனடியாக நடத்தப்பட வேண்டும். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது என்பது மிகவும் பாரிய பின்னடைவு. இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில், எங்களின் மூலக்கிளையில், இருந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பதாரிகளை முன் வருமாறு கோரியிருக்கிறோம்.

இந்த தடவை சரியானவர்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும் இந்த தேர்தலில் முன் நிறுத்துவோம். மக்களின் ஆதரவினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது..? – 17 ஆம் திகதி பதில் தருவதாக இராணுவம் அறிவிப்பு!

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்று எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் பதில் அளிப்போம் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கே இராணுவம் இவ்வாறு பதிலளித்துள்ளது.

சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்று பத்திரிகையாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.

1111/2022 என்ற இலக்கத்தை கொண்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மேல்முறையீடு, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேவர்த்தன தலைமையில் நேற்றைய தினம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது பொறுப்பு வாய்ந்த இராணுவம் என்கின்ற வகையில் முழுமையான சரியான தகவல்களை 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக இராணுவம் கூறியுள்ளது.

“யாரையும் நம்பாதீர்கள் அனைவரும் போலித்தமிழ் தேசியவாதிகள். எங்களை நம்புங்கள்.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி, ஸ்ரீலங்கா போன்ற அரசாங்கத்தின் கூலிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.” என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமகாலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது. தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால் சர்வதேசம் தவறாக கருதும் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலை அறிவித்து பின்னர் வழக்குகளை தாக்கல் செய்து தேர்தலை இழுத்தடிக்க முற்படலாம்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதாக இருந்தால் நிலையான அரசாங்கம் அமையவேண்டுமென சர்வதேச நிதி நிறுவனங்கள் விரும்புகின்றன.

நாடாளுமன்ற தேர்தலை நடத்தாமல் உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவது நெருக்கடியை அதிகரிக்கும். ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும்.

ஒற்றையாட்சிக்குள் ஏக்கியராஜ்ஜியவை ஏற்றவர்கள் 13ஆம் திருத்ததை ஏற்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினவர்கள் வாக்குபெறுவதற்காக தற்போது தாயகம் ,தேசியம்,சுயநிர்ணயம் என்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி, ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கூலிகள் போலித் தமிழ் தேசிய வாதிகள் ஆகியோரை இனங்கண்டு அவர்களை புறக்கணித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

பொருளாதார மறுசீரமைப்பை அமுல்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உத்தேச மின்சாரக் கட்டண உயர்வு என்பது சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட நிபந்தனை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சில நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் IMF தவணை தொடர்பில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இணங்கத் தவறினால் நாடு சர்வதேச ஆதரவையும் இழக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் விலையேற்றத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவாக இல்லை எனவும் அதற்கு பதிலாக பல சலுகைகளை வழங்க விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சலுகைகள் தன்னிச்சையாக வழங்கப்பட்டால் சர்வதேச உதவிகள் பெறப்படாது என்றும் கடன் மறுசீரமைப்பும் நடைபெறாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண மக்களின் சிறுநீரக நோயை கட்டுப்படுத்த 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் !

வடமாகாண மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும்.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட உள்ளன.

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற அரசின் கருத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு, சமூக நீர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நாள் ஒன்றுக்கு 2000 லீற்றர் தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்யும் திறனைக் கொண்டுள்ளது என்று மீள்குடியேற்றப் பிரிவு தெரிவிக்கிறது.

நனோ தொழில்நுட்பம் மூலம் நீரைச் சுத்திகரிக்கும் போது அதிக உப்புகளை நீக்குகிறது. நனோ சுத்திகரிப்பு மூலம் நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் ஏனைய சேதன இரசாயன உலோகங்கள் அகற்றப்பட்டு நீரின் சுவையும் துர்நாற்றமும் நீக்கப்படும்.

2021 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 209 மில்லியன் ரூபாவாகும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பின் அமைச்சின் கீழ் செயற்படும் மீள்குடியேற்றப் பிரிவின் இந்தத் திட்டத்தின் சுமார் 60% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் காரணமாக நனோ நீர் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் நிறைவு காலதாமதமானது என்றும் அந்தப் பிரிவு குறிப்பிடுகிறது. விரைவில் இந்தத் திட்டத்தை நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்தது.