உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலைக்கு முயற்சி !

வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சி மேற்கொள்ள முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நேற்றிரவு தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றுமொருவரின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த 306 இலங்கையர்கள் உரிய விஸா நடைமுறைகளின் பிரகாரம் மியன்மார் சென்று அங்கிருந்து கப்பல் ஒன்றின் மூலம் சட்டவிரோதமான முறையில் அகதிகளாக கனடா நோக்கி செல்ல முயற்சித்திருந்தனர்.

இதேவேளை தங்களை இலங்கைக்கு மீள அனுப்பும்  முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தாம் அங்கு செல்ல தயார் இல்லை என தெரிவித்தே தற்கொலை முயற்சியை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.

பாலியல் தொழிலுக்காக இலங்கை பெண்களை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் கைது !

ஓமான் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்கேதநபர் இன்று காலை இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

44 வயதுடைய குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இது போன்ற பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் பாலியல் தொழிலுக்காக இலங்கை பெண்களை விற்று வருவதாக தெரியவந்துள்ளது.

குழந்தைக்கு ஐஸ் போதைப்பொருள் – யாழ்ப்பாணத்தில் ஆபத்தான நிலையில் 2வயது குழந்தை !

ஐஸ் போதைப்பொருள் பாவித்தமைக்கான அறிகுறியுடன் 2 வயதான குழந்தை யாழ். போதனா வைத்திய சாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியை சேர்ந்த இரண்டு வயதான குழந்தை திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் குழந்தையின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, குழந்தை ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டு இருந்தமைக்கான அறிகுறிகள் உள்ளதன வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குழந்தையின் தாயாரிடம் விசாரணை செய்த போது குழந்தையின் தந்தை முன்னர் போதைப்பொருள் பாவித்தார் எனவும் ,ஆனால் தற்போது அவர் பாவிப்பதனை கைவிட்டு விட்டார் எனவும் , குழந்தை எவ்வாறு போதைப்பொருளை உட்கொண்டது என தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் ஆரம்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

ஜனாதிபதி ரணில் வவுனியாவுக்கு வருகை – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியாவிற்கான இன்றைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதியின் வவுனியா விஜயம் : எதிர்ப்பு தெரிவித்து உறவுகள் போராட்டம்

அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளில் வெடிகுண்டு தகர்ப்பு பாதுகாப்பு பிரிவினர் , விசேட அதிரடிப்படையினர் , இராணுவம், பொலிஸார் என பலதரப்பினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டங்களை தடுக்கும் முகமாக கலகம் தடுக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஓமானில் விற்பனை செய்யப்படும் இலங்கை பெண்கள் – இலங்கைக்கான ஓமானிய தூதரக உயரதிகாரி பணி நீக்கம் !

சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனைச் செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலங்கைக்கான ஓமானிய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை உயரதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுற்றுலா வீசாவை பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள பெண்களில் சுமார் 12 பேர் நேற்று முன்தினம் அங்கிருந்து பலாத்காரமாக ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த மனிதக்கடத்தல் சம்பவத்தில் இலங்கையின் விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டுள்ளதாகவும், ஓமானில் பணியாற்றும் தூதரக அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதன் அடிப்படையிலேயே ஓமானில் பணியாற்றும் இலங்கை தூதரக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மலையக மக்களின் பிரச்சினைகளை அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் ..,

மலையக மக்களின் பிரச்சினைகளை அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் உள்வாங்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஹட்டனில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

வடக்கு, கிழக்கை போல மலையக மக்களுக்கும் அடிப்படை பிரச்சினைகள் அதிகமாகவே காணப்படுகின்றன என தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மலையக மக்கள் மிகவும் சிக்கலான பிரச்சினைகளை எதிர்நோக்குவதால் அவர்கள் தொடர்பில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என ஜ.நா பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளோம்.

 

இம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த தினங்களில் ஐ.நா பிரதிநிதிகளை நானும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமாரும் சந்தித்து கலந்துரையாடியதில் மக்கள் நலன்சார்ந்த விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். எனவே இவர்களையும் கருத்திற் கொண்டு இவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர்களிடம் வலியுறுத்தினோம்.

இதற்கு பதிலளித்த அவர்கள் எதிர்வரும் ஆண்டு ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உள்வாங்கப்படவுள்ளதாக உறுதியளித்தனர். அத்தோடு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் புதிதாக குறிப்பிடுவதற்கு எதுவும் கிடையாது. மக்கள் நலன் சார்ந்த எந்த விடயங்களும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை.

மாறாக மக்களுக்கு சுமை ஏற்றுகின்ற வரவு செலவு திட்டமே இது. மக்கள் எதிர்பார்த்த எந்த விடயங்களையும் ரணில் உள்வாங்கவில்லை. அத்தோடு, மலையகத்தை பற்றி ஒரு வார்த்தை கூட இந்த வரவு செலவு திட்டத்தில் கூறவில்லை. பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் பிறகு, உணவு தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற விடயங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டது மலையக மக்களே.

எனவே, இதனை கருத்திற் கொண்டு மலையக மக்களுக்கு தேவையானவற்றை அறிந்து புதிய திட்டங்களை எதுவும் அவர் முன்வைத்திருக்கலாம்” என இராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்

“வனபாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தான் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகிறது.” – இரா. சாணக்கியன்

“வனபாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தான் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகிறது.” என  பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

அத்துடன் அதனை பார்வையிட்டு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

சட்டவிரோத மண் அகழ்வு. வனபாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் இவ்வாறான மண் அகழ்வுகள் இடம்பெறுகின்றது. இது பாரிய அளவில் சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது. பின்னணியில் யார் உள்ளார். மாவட்டத்தில் இரண்டு அரச சார் அமைச்சர்கள் என்ன செய்கின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுச் சூழலுக்கான அமைச்சர் உள்ளார்.

பல தலைமுறைகளாக மக்கள் விவசாயம் செய்து வந்த காணிகள் அரச காணிகள் வனத்துறைக்கு சொந்தமான காணிகள் என கையகப்படுதிவிட்டு. சட்ட விரோத மண் அகழ்வு மற்றும் வள சுரண்டல்களுக்கு இடமளிக்கின்றார்கள். ஆனால் அங்குள்ள மக்கள் காட்டுக்குள் விறகு வெட்டுவதற்காக செல்லும் வேளை வன பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அதற்கான தண்டனை உட்பட இருபதாயிரம் மட்டில் அபராதமும் செலுத்தியுள்ளார்கள்.

இவை இப்படி இருக்க மிகவும் வெளிப்படையான முறையில் மண் அகழ்வானது இடம்பெறுகின்றது. வனத்துறையினருக்கு சொந்தமான காணியில் மண் சேமிக்கப்பட்டு கடத்தப்படுகின்றது. இதன் பின்னணியில் வனத்துறையும் உள்ளதா? மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் இதுதான்.

இவ்வாறான விடயங்கள் வெளியில் வரும் என்னும் பயமே காரணம். மண் அகழ்வுக்கு எமது மாவட்ட இரு அமைச்சர்களும் பின்னால் உள்ளார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்புக்கு என கட்டப்படுள்ள வரம்பை உடைத்து அதன் மூலம் கடத்துகின்றனர். அடுத்ததாக இங்குள்ள அரசியல் வாதிகள் தமது அரசியல் சுயலாபம் மற்றும் சுயநலம் கருதி தமிழ் முஸ்லீம் என பாகுபாடு காட்டி மக்களை பிரித்துவிட்டு இவ்வாறான சட்டவிரோத செயல்பாடுகளில் ஒன்றாக செயல்படுகின்றார்கள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பக்கமாக பிரித்து மக்களுக்கு சொந்தமான வளங்கள் சூறையாடப்படுகின்றது.

இவ் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் அல்லாதுவிடில் எமது மக்களும் எதிர்கால சந்ததியும் நிர்க்கதியாகுவது வெகு விரைவில் நடைபெறும். என்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

தமிழக முகாமில் இலங்கை பெண் தூக்கிட்டு தற்கொலை !

இந்தியாவின் தமிழகத்தில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கரூர் தாந்தோன்றிமலை அருகே, இலங்கை தமிழர் முகாமில் வசித்து வரும் தர்மராஜேஸ்வரன் யோகலதா வயது 36 என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தர்மராஜேஸ்வரன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் கணவன், மனைவி இடையே குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குறித்த பெண் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து கிடைக்கப்பபெற்ற முறைப்பாட்டின் பேரில் தாந்தோன்றிமலை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை.” – இரா. சாணக்கியன்

“பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை.” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மட்டக்களப்பு மாவடிவெம்பு சிவானந்தா விளையாட்டு கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை என சொல்லப்பட்டது. இதனாலேயே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்து போராட்டத்தினை மேற்கொண்டதற்கு காரணம் இலங்கை முழவதிலும் உள்ள பிரதேசங்களில் இந்த சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு உள்ளது என்று காட்டுவதற்காகவே என்றார்.

தற்போது வடக்கு கிழக்கிலே மாவீரர் தினம் நடப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் நடந்துள்ளன. மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் இடம்பெறுகிறது. இறந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு எந்த தடையும் இல்லை என அரசாங்கம் சொல்லும்போது அது தொடர்பான ஒரு பதாதையைக் கூட காட்சிப்படுத்த முடியாத நிலை இன்று மட்டக்களப்பில் காணப்படுகிறது.

கிரானில் அது தொடர்பாக கட்டப்பட்ட பதாதையை கிழித்திருக்கிறார்கள். விஷமிகளோ, இராணுவத்தினரோ, பொலிஸார் செய்தார்களா, யார் செய்தார்கள் என்று யாருக்கும் தெரியாது.

எமது மண்ணுக்காக உயிரை தியாகம் செய்த அந்த மாவீரர்கள் குறித்து நினைவு தினம் தொடர்பான பதாதையைக் கிரானில் கிழித்திருக்கிறார்கள்.தரவையில் இது தொடர்பான முன்னெடுப்புக்கள் எடுக்கும்போது பல எதிர்ப்புகள் வருவதாக அந்த சமூகம் சொல்லுகிறார்கள். இது ஒரு அரசியல் நிகழ்ச்சி இல்லை.என்றார்.

இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான க.சேயோன், நல்லரெட்ணம், சி.வவானந்தன் ஆகியோர்கள் அதிதியாக கலந்து கொண்டனர்.

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது !

கடந்த சில நாட்களாக ஆசிரியர்களினால் மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இது போன்ற மற்றொரு சம்பவம் பாதுக்க பகுதியில் பதிவாகியுள்ளது.

பாதுக்கவில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவன் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி பாடசாலையில் பௌத்தம் கற்பிக்கும் ஆசிரியர் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் மாணவரை ஹோமாகம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கும் மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது, தாக்குதலில் மாணவனின் இடது காது பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று (18) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.