உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

1996 – இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் இன்று !

யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.

1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்குட்படுத்தி கழுத்தை நெறித்துபடுகொலை செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

அவரைத் தேடிச் சென்ற, தாயார், சகோதரன் மற்றும் உறவினர் ஒருவரும் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் அதிகரிக்கும் சிறுவர் மற்றும் கர்ப்பிணி தாய்மாரின் மரணம் வீதம் !

“நுவரெலியா மாவட்டத்தில்  சிறுவர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் மரணம் அதிகரித்துச்செல்வது பாரிய அச்சுறுத்தலாகும்.” என எதிர்க்கட்சி உறுப்பினர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (7) இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

இலங்கையில் மந்தபாேசணையால் சிறுவர்கள் மற்றும் தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நுவரேலியா மாவட்டமாகும். ஏனைய மாவட்டங்களில் மந்தபோசணையால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றபோதும்  நுரவரெலியா மாவட்டத்திலேயே சிறுவர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் மரணம் அதிகரித்துச்செல்வது பாரிய அச்சறுத்தலாகும். குறிப்பாக 2020இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் பெருந்தோட்ட பிரதேசத்திலே 5வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களில் 34வீதமானவர்கள் வளர்ச்சி குன்றியதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று இறுதியாக இடம்பெற்ற சனத்தொகை மற்றும் சுகாதார கணிப்பீட்டின் பிரகாரம் 5வயதுக்கு உட்பட்ட  நான்கில் ஒரு சிறுவர் குறை நிரையுடனும் 10இல் ஒரு சிறுவன் குறை ஊட்டச்சத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டியப்பட்டுள்ளது. அத்துடன் 72ஆயிரம் குழந்தைகள் ஓரளவு அல்லது நீண்டகால ஊட்டச்சத்து குறைபாடாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மலையகத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் கரடுமுரடான பாதைகளில் தேயிலை ஏற்றும் லாெரிகளிலுமே தங்களின் பிரசவத்துக்காக வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நிலைமையே இன்றும் காணப்படுகின்றது.இவ்வாறான நிலையில் அவர்களுக்கு சுகப்பிரவசம் மிகவும் குறைவாகும். இந்த நிலை மாற்றப்படவேண்டும். தோட்ட வைத்தியசாலைகள் அரசுடமையாக்கப்பட்டு, அங்கு பிரசவ அறைகள் ஏற்படுத்தப்படவேண்டும். மலையத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களின் பிரசவத்துக்காக பல கிலோமீட்டர் செல்லவேண்டிய அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

அத்துடன் உலக சுகாதார நிறுவனத்தின் உலக போசணை இலக்கு 2028,ன்ஊடாக 5வயதுக்கு குறைவான சிறுவர்களின் குன்றிய வளர்ச்சியை 40சதவீதத்தால் குறைப்பதற்கும் உடல் தேய்வை 5சதவீதத்தால் குறைப்பதற்கும் அதிக உடல் நிலையை முற்றாக கட்டுப்படுத்துவதற்கும் அதேபோன்று பிறப்பு நிரை குறைவை 30சதவீதத்தால் கட்டுப்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களை மந்தபோசணை நிலைமையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

எனவே மலையகம் உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் மந்தபாேசணை நிலைமைக்கு பொருளாதார நெருக்கடியே காரணமாகும். அதேபாேன்று பொருட்களின் விலை அதிகரிப்பு, போஷாக்கு உணவுக்கு இருந்துவரும் தட்டுப்பாடே காரணமாகும். பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 1000ரூபா பெற்றுக்கொண்டு பாேஷாக்கான உணவு பெற்றுக்கொள்வது பாரிய பிரச்சினையாகும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

“பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபகேடு.” – சாணக்கியன் காட்டம் !

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சாபகேடாக சந்திரகாந்தன் உள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் 07 ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மார்கள் மந்தபோசணை தொடர்பான சபை ஒத்திவைப்பு இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த நாட்களில் வெளிநாட்டிற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு அந்நாடுகளின் அரசியல் தரப்பினர், இலங்கையர்களுடன் சந்திப்பில் ஈடுப்பட்டேன். முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் அதிகாரத்தை பகிர்ந்தளித்துள்ளன. புலம் பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதிகார பகிர்வு அவசியமானது.

கடந்த நாட்களில் வெளிநாடுகளில் முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன். எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளில் அரசியலில் தொடர்புமில்லாமல் உள்ள இரண்டாம் தரப்பினருடன் ஒன்றிணைந்து இலங்கைக்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காணி விவகாரத்திற்கு பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை,அதிகார பகிர்வு ஆகியவற்றுக்கு தீர்வு அவசியமாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபகேடு. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. பாடசாலைகளும் இராணுவம் வசமுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. இவ்வாற நிலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் கட்சி மாநாட்டிற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை மட்டக்களப்புக்கு வரவேற்றுள்ளார்.

தனது சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் நாமல் ராஜபக்ஷ உள்ளார். அவ்வாறிருக்கையில் நாமல் ராஜபக்ஷவை மேடைக்கேற்றி மட்டக்களப்பு மாவட்ட மக்களை தரம் குறைத்துள்ள சந்திரகாந்தனை சபையில் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமலிருந்திருந்தால் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் கூட கிடைத்திருக்காது. கல்முனை பிரதேச செயலக பிரிவு குறித்து விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுப்போம் என்றார்.

அரசாங்க வேலை பெற்றுத் தருவதாக கூறி பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கோரிய இலங்கை ஐக்கிய முன்னணியின்  யாழ். மாவட்ட அமைப்பாளர் !

அரச தொழில் பெற்றுத் தருவதாக கூறி பெண் ஒருவரிடம்  பாலியல் இலஞ்சமும், 50 ஆயிரம் ரூபா பணமும் பெற்றுக்கொள்ள முனைந்ததாக கூறி  இலங்கை ஐக்கிய முன்னணியின்  யாழ். மாவட்ட அமைப்பாளரும் அவரது செயலாளர் எனக் கூறப்படும் நபரும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்கஹவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை புறக்கோட்டை – மிதக்கும் சந்தை பகுதியில்   உணவகம் ஒன்றுக்குள் வைத்து கைது செய்ததாக  இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினர் நீதிமன்றுக்கு இன்று ( 7) அறிவித்தனர்.

அதன்படி குறித்த இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன  கெக்குனவல உத்தரவிட்டார்.

கல்முனை பகுதியைச் சேர்ந்த,  ஸ்ரீ லங்கா ஐக்கிய முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என கூறப்படும்  நபரும் மற்றும்  அவரது செயலர் என கூறப்படும் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த  ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

 

முறைப்பாட்டாளரான பெண்ணிடம், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும், பாலியல் இலஞ்சமும் சந்தேக நபர்களால் கோரப்பட்டுள்ளதாகவும், அதில் 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முனைந்த போது அவர்களைக் கைது செய்ததாகவும்  இலஞ்ச ஊழல் ஆணைக் குழு சார்பில் மன்றில் ஆஜராகிய உப பொலிஸ் பரிசோதகர்  சந்ரசிறி, உப பொலிஸ் பரிசோதகர்  ஹர்ஷ,  பொலிஸ் சார்ஜன் சமிந்த,  மற்றும் விஜேசிங்க ஆகியோர் அடங்கிய குழுவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

“அடுத்த 25 வருடங்களில் கடனற்ற சக்திவாய்ந்த இலங்கை.”- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கவும் புதிதாக சட்டம் தயாரிக்க எதிர்பார்த்துள்ளேன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இந்தப் பணியில் அனைத்து தரப்பினரையும் பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, சக்தி வாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் தேவை, தனது சொந்த நலனுக்கு அன்றி, அடுத்த தலைமுறைக்காகவே கட்டியெழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  இதனைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, அடுத்த 25 வருடங்களில் கடனற்ற சக்திவாய்ந்த இலங்கையை உருவாக்குவதற்கு வலுவான கொள்கை கட்டமைப்பின் ஊடாக செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்த வேலைத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறாத பலமான கொள்கை கட்டமைப்பாக செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அத்துடன், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை வெறுக்கின்றனர். நாட்டின் எதிரணி விமர்சனங்களுக்கு மாத்திரம் மட்டுப்பட்டுள்ளது. அதே வேளை இளைஞர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

சில தவறுகளினால் பெரும் நன்மை இழக்கப்பட்டது. 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பில் மேலும் திருத்தம் செய்யப்பட வேண்டும். தேசிய சபையொன்றையும் உருவாக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் இந்த சபை அமைய வேண்டும். இந்த வார இறுதிக்குள் தேசிய சபையை அமைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்ட   வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கவும் புதிதாக சட்டம் தயாரிக்க எதிர்பார்த்துள்ளேன் என்றம் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை என்ற நாடு தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது. நாம் ஒவ்வொரு நாளும் பிச்சையெடுத்துக் கொண்டும், கடன் எடுத்துக் கொண்டும் இருக்க முடியாது.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று யாராக இருந்தாலும் யாரும் வங்குரோத்து அடைய விரும்புவதில்லை. எனவே, கடன் பெறாத பொருளாதாரம் ஒன்றை உருவாக்க ஒன்றுபடுவோம்.

இளைஞர்கள் மாற்றத்தைக் கோரி முதலாவது போராட்டத்தை ஆரம்பித்தனர். அந்தப் போராட்டம் முடிந்துவிட்ட நிலையில், நாட்டைக் கட்டியெழுப்பும் இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம்.” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

‘ஒன்றாக நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப் பொருளில் இவ்வருட மாநாட்டை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தியது.28 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி, அரச தலைமைத்துவத்துடன் தனது ஆண்டு நிறைவு விழாவை நடத்தியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நடத்தப்படும், கட்சியின் முதலாவது விழா இது என்பதும் விசேட அம்சமாகும்.

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும், மற்றும் வகிக்காத அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர்.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் தீர்மானங்கள் இலங்கை அரசியலமைப்பிற்குப் புறம்பானதாக இருப்பின் ஏற்க தயாரில்லை – அரசாங்கம் அறிவிப்பு !

“ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் தீர்மானங்கள் இலங்கை அரசியலமைப்பிற்குப் புறம்பானதாக இருப்பின் ஏற்க தயாரில்லை.” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இதுகுறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் திங்கட்கிழமை (5) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தினார்.

அதன்போது அவர் கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின்போது சர்வதேச நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பல்தரப்புத்தொடர்புகளைப் பேணுவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம்.

அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு எம்மால் எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்கமுடியாது என்பதுடன் அதற்கான அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களைத் திரட்டுவதற்கான வெளியகப்பொறிமுறை குறித்து நாம் ஏற்கனவே எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன் எமது அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கின்றது.

அந்தவகையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகளால் புதிய தீர்மானமொன்று சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அதில் எமது அரசியலமைப்பிற்குப் புறம்பான விடயங்கள் காணப்படுமாயின் அதனை நாம் முழுமையாக எதிர்ப்பதுடன் அதற்கு ஏனைய சர்வதேச நாடுகளின் ஆதரவை நாடுவோம்.

கடந்த காலத்தில் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதை முன்னிறுத்தி காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியன ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன் அவற்றின் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் அடையப்பட்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் நீண்டகாலமாகத் தொடரும் இப்பிரச்சினைக்கு உரியவாறு தீர்வுகாணும் நோக்கில் உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியிருக்கின்றார். போரின் விளைவாக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே இந்த உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறை என்பது அனைத்துத்தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதும் உரியவாறான தீர்வைப்பெற்றுத்தரக்கூடியதுமான பொறிமுறையாக அமையவேண்டும். அதேபோன்று இது ஒரு முடிவைக் கண்டடைவதை நோக்காகக்கொண்டதே தவிர, யார்மீதும் பழிசுமத்துவதை நோக்காகக்கொண்டதல்ல.

ஆகவே சுமார் 13 வருடகாலமாகத் தீர்வின்றித் தொடரும் பிரச்சினைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக அனைத்துத்தரப்பினரும் ஏற்கக்கூடிய உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையை உருவாக்கி, அதனைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று தெரிவித்தார்.

டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு சிறப்பு சலுகை – இலங்கை அரசாங்கம் அறிவிப்பு !

டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு 10 வீதம் சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு மற்றொரு தீர்வாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களான பொரளை ஓவல் வியூ வீடமைப்புத் திட்டத்தில் 608 வீடுகளும் அங்கொட லேக் ரெஸ்ட் திட்டத்தில் 500 வீடுகளும் உள்ளன.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு டொலர்களை பயன்படுத்தி இந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்சவுக்கு மனச்சாட்சி இருந்தால் சலுகைகளை பெறமாட்டார் – லக்ஷ்மன் கிரியெல்ல

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பதவி விலகிய நிலையில் சிறப்புரிமை பெற்று வாழ்வது தார்மீக ரீதியாக சரியானதா என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சரியான முறையில் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறாமல் ஓடிவிட்டார்.எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் அதிபருக்கான சிறப்புரிமைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய நிலையில் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகள் அனைத்தும் அரசாங்கம் வழங்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ரணிலின் காரும் ஒரு இறாத்தல் பாணும்.”- அனுரகுமார திஸாநாயக்க சாடல் !

ஜனாதிபதி ரணிலின் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் பத்தொன்பது மில்லியன் என்றால் அந்த வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு 205 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 14 மில்லியன் ரூபா வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் எனவும் எஞ்சிய 191 மில்லியன் ரூபா வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜே.வி.பி தலைவர் 191 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் என்றால் வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என கேள்வி எழுப்பியுள்ளார்.

“இன்று நாட்டு மக்கள் ஒருஇறாத்தல் பாணை முன்னூறு ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட நாட்டில் ஜனாதிபதியின் காரின் மதிப்பு எவ்வளவு? இப்படியான ஆட்சியாளர்கள் எப்படி மக்களின் துயர் உணர்வார்கள் என அனுர கேள்வி எழுப்புகின்றார் .

“வேலை செய்யாத அரச ஊழியர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று ரணில் கூறுகிறார். ஆனால் ரணிலின் ஊடகப் பிரிவின் எத்தனை இயக்குனர்கள்? டைரக்டர் மீடியா ஆலோசகர், மீடியா டைரக்டர் ஜெனரல், டெபுடி டைரக்டர்கள், மீடியா டைரக்டர்கள், வீடியோ எடிட்டிங் டைரக்டர்கள், எலக்ட்ரோரனிக் மீடியா டைரக்டர்கள், கிரியேட்டிவ் போட்டோகிராபி இயக்குனர்கள் இப்படி எத்தனை பேர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்? இவர்களுக்கு சம்பளம் ஒரு இலட்சத்து எண்பதாயிரத்திற்கு மேல் . அதுதவிர அவர்களுக்கு வாகனங்களும் வழங்கப்படுகின்ற்றன.

இவர்களின் கடமைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க அறிக்கை வெளியிட வேண்டும். ஒரு ஜனாதிபதிக்கு இவ்வளவு தேவையா? என அனுர கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை திருப்பியழைக்க ஜனாதிபதி ரணில் நடவடிக்கை !

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.