உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை திருப்பியழைக்க ஜனாதிபதி ரணில் நடவடிக்கை !

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

“ராஜபக்சவினரை பாதுகாக்கும் பொறுப்பை ரணில் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.”- சஜித் பிரேமதாஸ

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ராஜபக்சவினரை அரசியலுக்கு வரவழைப்பதற்காக தரை விரிப்பு விரிக்கப்படுவதாகவும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நிராகரித்த ராஜபக்சவினரை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடு இழந்த நில உரிமையையும் பணத்தையும் ராஜபக்ச அரச குடும்பம் மீளப் பெற்றுத் தர வேண்டும் என மக்கள் கோருவதாகவும், மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்து ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மக்களின் பொதுச் சொத்துக்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதாகவும், மோசடிகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

ராஜபக்சவினர் ஆட்சியில் இல்லாவிட்டாலும், தற்போதைய அரசாங்கம் ரத்துபஸ்வல கொலைக் கலாசாரத்தை மீண்டும் உருவாக்க முயல்வதாகவும், ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்நாட்டு இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி மிலேச்சத்தனமான முறையில் நசுக்கப்படுவதாகவும் இளைஞர்கள் மீதான அடக்குமுறையை எதிர்க்கட்சி என்ற வகையில் முழுமையாக எதிர்ப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

“சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் 22ஆவது திருத்தத்தில்.” – அமைச்சர் அலி சப்ரி

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று (திங்கட்கிழமை) பேசிய அவர், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நிறைவேற்றப்படும்போது மீண்டும் திரும்பும் என்று கூறினார்.

முன்னர் திட்டமிடப்பட்ட இடைக்கால ஏற்பாட்டை தக்கவைக்க தற்போதைய ஜனாதிபதி விரும்பவில்லை என்றும் 19 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவே அவர் விரும்புவதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக தேசிய பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்தை சமநிலைப்படுத்துவதற்கும், சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை தயாரிப்பதற்கும் இலங்கை தயாராகி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

” உலகம் முழுவதும் கையேந்துவதே அரசாங்கத்தின் கொள்கைக் திட்டமாக உள்ளது.” – உதய கம்மன்பில

” உலகம் முழுவதும் கையேந்துவதே அரசாங்கத்தின் கொள்கைக் திட்டமாக உள்ளது.” என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

” உலகம் முழுவதும் கையேந்துவதே கொள்கைக் திட்டமாக உள்ளது. நாட்டை மீட்பதற்கான திட்டம் ஆளும் கட்சியிடமோ அல்லது எதிர்க்கட்சியிடமோ இல்லை. அதனால் தான் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.

அழுத்தக் குழுவாக நாம் செயற்படுவோம். பிரச்சினைகளை பற்றி பேசுவதில் பயன் இல்லை, தீர்வுகளை பற்றி கதைக்கவே இந்தக் கூட்டணி.

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர், சக்கரைப் பழக்கத்தை கைவிடாமல், அதனை தொடர்ச்சியாக சாப்பிட்டால் என்ன நடக்கும்? அதுபோலவே கடன் பொறிக்குள் இருந்து மீள்வதற்காக மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் நடவடிக்கையையே ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

எமது நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. அந்தத் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, எமது புதிய அரசியல் கூட்டணியில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.” என்றார்.

“சிறிலங்கா சுதந்திர கட்சி ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளது.” – சந்திரிக்கா குமாரதுங்க

சிறிலங்கா சுதந்திர கட்சி ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளது என இலங்கையின்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் புதிய நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்சிக்கு களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமை தாங்குகின்றார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் மிகவும் ஜனநாயக கட்சியாக இருந்த சுதந்திரக் கட்சி தற்போது ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், கட்சியின் கொள்கை அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி கட்சியின் கொள்கைகளையும், கட்சியையும் பாதுகாத்த மக்களுக்காக தொடர்ந்தும் பாடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது எந்தக் கொள்கைகளோ, ஆட்களோ இல்லை என்றும் பெயர் பலகை மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

“55 லட்சம் மக்களை உணவுக்காக போராட வைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” சம்பிக்க ரணவக்க

“நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி 55 இலட்ச மக்களை உணவிற்காக போராட வைத்துள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் சட்டத்தின் முன்னிலைப்படத்தி தண்டிக்கப்பட வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல பகுதியில் இன்று திங்கட்கிழமை (5) இடம்பெற்ற புதிய சிறிலங்கா சுதந்திர கட்சி காரியாலய திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பெற்றுக்கொண்ட அரச முறை கடன்களை மீள செலுத்த முடியாது என இலங்கை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்திய பஷில் ராஜபக்ஷவின் தரப்பினர் குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் உண்மையை குறிப்பிடாமல் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொய்யுரைத்தமை பொருளாதார நெருக்கடிக்கு தீவிரமடைவதற்கு பிறிதொரு காரணியாக உள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பொதுஜன பெரமுன தனது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்டது.

நாட்டின் நிதி நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை,மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் செயற்பட்டதால் இன்று 55 இலட்ச மக்கள் உணவுக்காக போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜபக்ஷர்களின் முறையற்ற அபிவிருத்தி,வரையறையற்ற வெளிநாட்டு அரசமுறை கடன்களினால் நாடு நிச்சயம் வங்குரோத்து நிலைமை அடையும் என்பதை குறிப்பிட்டதால் 2013 ஆண்டு அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். 2015ஆம் ஆண்டு பாரிய போராட்டத்தின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம் முழுமைப்படுத்தபடவில்லை. இருப்பினும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லவில்லை.நாட்டு மக்களுக்கு பல்வேறு வழிமுறைகளில் நிவாரணம் வழங்கப்பட்டது.

நாடு வங்குரோத்து நிலையடைவதற்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பொறுப்பு கூற வேண்டும்.நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தையும்,நாட்டையும் தவறாக வழி நடத்தி முழு நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை இலக்கு  வைத்து கைதுகள் இடம்பெறுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை வேண்டுமென்றே நெருக்கடிக்குள்ளாக்கி 55 இலட்ச மக்களையும் உணவுக்காக போராட வைத்துள்ள அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் சட்டத்தின் முன்னிலைப்படுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு முன்னுரிமை !

புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பெண்ணொருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போதே பிரதமர் தினேஸ் குணவர்தன இந்த தகவல்களை தெரித்துள்ளார்.
இதேவேளை பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகள் குறித்து நடைமுறை புரிதல் இல்லாத ஆண்களுக்கு இந்த அமைச்சை ஒதுக்குவது அர்த்தமற்ற செயல் என சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்களின் பிரதிநிதித்துவத்தை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

“முன்பு டயஸ்போரா என்ற பதம் புலி ஆதரவு சொல். இன்று அப்படியில்லை.”- ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர்

நீதியமைச்சின் ஆதரவுடன் வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு இலங்கை ஒருங்கிணைப்பு செயலகமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது பூர்த்தியாகிவிட்டதன் பின்னர் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை  இந்த அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கும் என நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், புலம்பெயர் தமிழர்களுக்காக தனி அலுவலகம் அமைக்கப்படவுள்ளது ஆனால் அதை டயஸ்போரா அலுவலகம் என நாம் அழைப்பதில்லை. புலம்பெயர் இலங்கையர் (Overseas Srilankan) என்பது அதன் பெயர் என ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

டயஸ்போரா என்ற ஆங்கில வார்த்தை ஒரு நாட்டு குடிமக்கள் மற்றொரு நாட்டில் வாழ்வதைக் குறிக்கிறது எனவும் அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் புலம்பெயர் அமைப்புகள் மேற்குலகில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டன. அவர்களைக் குறிக்கும் வகையில் டயஸ்போரா என்ற பதம் உபயோகிக்கப்பட்டதால் அது ‘கெட்ட’ வார்த்தையானது. அதனால் தான் அப்பதத்தை நீக்கினோம்.

நாம் இப்போது புலம்பெயர் அமைப்புகளுடன் பேசி வருகிறோம். எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை இப்போது சொல்வதற்கில்லை. எதிர்காலத்தில் அது பற்றி வெளிப்படையாக பேசக்கூடியதாக இருக்கும் என நம்புகிறேன் என்று சாகல ரத்நாயக்க மேலும் கூறினார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்காக நாங்கள் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருடனும் விக்னேஸ்வரனுடனும் பேசி வருகிறோம்.

எமது கதவு அனைவருக்கும் திறந்திருக்கிறது. ஏனெனில் இது நாட்டை முன்நிறுத்தி யோசிக்க வேண்டிய காலம். தமிழ்க்கட்சிகள் எம்முடன் இணைந்து பணியாற்றுவதில் எம் தரப்பில் எந்தத் தடையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

“22 இலட்சம் மக்களை வீதி யோரங்களில் நிறுத்தியதற்காக கோட்டாபாயவை கைது செய்யுங்கள்.”- எஸ்.எம்.மரிக்கார்

மக்களை உணவுக்காக போராடும் நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தூர நோக்கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மூலமே நாடு பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால்நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இன்று நாட்டிற்கு வருகை தந்தவுடன் அரசின் சலுகைகள் உட்பட விசேட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் காரணமாக மூன்று வேளை உணவு உட்கொண்டவர்கள் இன்று இரண்டு வேளை மாத்திரமே உணவு உட்கொள்கிறார்கள். இரசாயன உரத்தை தடை செய்து நாட்டு மக்கள் உணவுக்காக போராடுகிறார்கள். பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

மேலும் எரிபொருள்  மற்றும் எரிவாயு வரிசைகள், இரசாயன உரத்தினை பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள் உட்பட ஒருவேளை உணவை க் கூட உண்பதற்கு உணவின்றி மக்கள் உயிரிழப்பதற்கான முழுமையான பொறுப்பினை கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும்.

இதன் காரணமாக உடனடியாக கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட வேண்டும். அவரைக்  கைது செய்வதன் மூலம் 22 இலட்சம் மக்களை வீதி யோரங்களில் நிறுத்தி நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளி நாட்டை வங்குரோத்து நிலைக்கு  கொண்டு வந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

தொடரும் மருந்துத்தட்டுப்பாடு – திணறும் வைத்தியசாலைகள் !

இலங்கையில் மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் tabzumab தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், தொடர் சிகிச்சை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், கராப்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைகள் மற்றும் மஹரகம வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் tabzumab தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் இல்லை என சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1000 மார்பக புற்றுநோய் தடுப்பூசிகளை பெறுவதற்கு கொள்வனவு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சுமார் 500 தடுப்பூசிகள் பெறப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

புற்று நோயாளர்களுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்க வேண்டியுள்ள போதிலும், இந்த மருந்துகள் இல்லாததால் நோயாளர் பராமரிப்பு சேவைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹரகம வைத்தியசாலையில் வருடாந்தம் சுமார் 3,000 புற்று நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாகவும், நாளாந்தம் சுமார் 1,000 நோயாளர்கள் உள்நோயாளிகளாகவும் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.