உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் உகாண்டாவில்…? – உறவினர்கள் சந்தேகம்.!

உகண்டாவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் 11 தொழிற்சாலைகளிலும் எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா? என்பதை உலகவாழ் உறவுகள் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சஙக தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , 13 வருடங்களாக எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்பதை சொல்லாத இந்த அரசினை நாங்கள்நம்பமாட்டோம்.

இந்த ஆட்சி மாற்றம் எங்களிற்கு பெரிதாக ஒன்றும் செய்யப்போவதில்லை. நாங்கள் சர்வதேசத்தின் ஊடாக நீதியை கேட்டு நிற்கின்றோம். இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

சர்வதேசம் இலங்கை தொடர்பில் அவதானித்து தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினையும், எமக்கான நீதியையும் பெற்றுத்தர வேண்டும் என கேட்டு நிக்கின்றோம். இதேவேளை உலகலாவிய ரீதியில் வாழ்கின்ற தமிழர்கள், ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்து எமது போராட்டத்திற்கும், அரசியல் தீர்வுக்கும் முன்னின்று உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை அரசில் குடும்ப ஆட்சியும் இனவழிப்பும் நடந்து அவர்கள் கலைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் எங்களிற்கான தீர்வு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.

தற்பொழுது உள்ள ஜனாதிபதி பதவியை இழந்து நிற்கும்போது, எங்களுடைய மண்ணில் வந்து எங்களை சந்தித்தார். உங்களது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவும், தற்பொழுது நான் பதவியில் இல்லை. மகிந்தவின் மனைவியின் பிள்ளை காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்கள் தேடுவார்கள். அவர்களிற்கான சட்டத்தை பயன்படுத்துவார்கள். நான் இந்த பதவிக்கு வந்தால், நிச்சயமாக பிள்ளைகளை மீட்டுத்தருவேன் என்று கூறியிருந்தார்.

அவரோ அல்லது அவர் சார்ந்த எவருமோ எமக்கு எதுவும் செய்யப்போவதில்லை. இன்று ராஜபக்ச குடும்பத்தினர், நாடுகடத்தப்பட்டு அனாதைகளாக தெருத்தெருவாக திரிகின்ற இந்த வேளையில், உண்மையாக அந்த இனவழிப்பை செய்தவர்களை கைது செய்வதற்கு சர்வதேசம் முன்வரவேண்டும். அவ்வாறு கைது செய்து எமக்கான நீதியை பெற்றுத்தருவார்கள் என்று நம்புகின்றோம்.

உகண்டா எனும் நாட்டிலே, ராஜபக்ச குடும்பத்தினர்11 தொழிற்சாலைகளை அமைத்து அங்கு எமது பிள்ளைகளை சம்பளமில்லாத கூலித்தொழிலாளிகளாக வேலைக்கு வைத்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகின்றோம். எமது கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்று கூற முடியாதவர்கள், எங்களுடைய பிள்ளைகளை கூலித்தொழிலாளர்களாக வைத்திருக்கலாம் என்று நம்புகின்றோம்.

அந்த தொழிற்சாலைகளை நிர்வகிக்கின்றவர் வேலுப்பிள்ளை கனநாதன் என்ற ஒரு தமிழர். அவருடன் உலக நாடுகளில் உள்ள எமது உறவுகள் தொடர்புகொண்டு, எவ்வாறு அந்த தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்பதையு்ம, அங்கு எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா என்பதை அறிவதற்கும் முன்வரவேண்டும்.

நிச்சயமாக எமது பிள்ளைகள் கொள்ளப்படவில்லை. அவர்கள் அனைவரும் இந்த குடும்பத்தின் கொத்தடிமைகளாக வாழவைத்துக்கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது” என அவர் தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்டது ரணில் தலைமையிலான இடைக்கால அரசின் புதிய அமைச்சரவை – அதே கிண்ணத்தில் அதே வைன் – பெரிதாக மாற்றம் இல்லை !

இவற்றுள் குறிப்பிடத்தக்களவான அமைச்சுக்களும் – அமைச்சர்களும் இறுதியான அமைச்சரவையிலும் அங்கத்தவர்களாக இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த கால அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றிருந்த பல  அமைச்சர்களின் வினைத்திறனற்ற நகர்வுகளாலேயே கடந்த காலங்களில் இலங்கை மிகப்பெரிய நெருக்கடியினுள் சிக்கி வங்குரோத்து நிலைக்குள் தள்ளப்பட்டது. இந்த நிலையிலேயே மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் செய்து கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது இந்த  நெருக்கடி நிலையை இல்லாது செய்யவே.

எனினும் மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ அரசில் அமைச்சு பதவியை ஏற்றோருக்கும் – ரணில் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியோருக்கும் மட்டுமே அமைச்சு பதவிகளை வழங்கியுள்ளார் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

இதன் மூலம் இலங்கையில் இனிமேலும் பெரிதாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க தேவையில்லை என்பதை மறைமுகமாக இந்த அமைச்சு பதவிகள் தெரிவிக்கின்றன.

“கோட்டாபாயவை விரட்டியதால் தான் ரணில் ஜனாதிபதி.” – மனோகணேசன் ட்வீட் !

“கோட்டாபாயவை விரட்டியதால் தான் ரணில் ஜனாதிபதி.” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் ட்விட் செய்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளார்கள்.கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையிலேயே மனோகணேசன்  தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

“போராட்டம் நடத்த விஹாரமகாதேவி பூங்காவை போராளிகளுக்கு தருவதாக காலையில் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி சொன்னார். அந்த யோசனையை போராளிகளுக்கு கூறி, அமைதியாக இடமாற்றம் செய்ய, ஏன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கவில்லை? என்ன இருந்தாலும், அவர்கள் கோட்டாவை விரட்டியதால்தான் இன்று, ரணில் ஜனாதிபதி..! என தனது டுவிட்டர் பக்கத்தில் மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

 

கூட்டமைப்பின் முடிவு இப்போதாவது சரியென புரிகிறதா..? – சுமந்திரன் ட்வீட் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா என எம்.ஏ சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளார்கள்.கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையிலேயே எம்.ஏ சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

‘மொட்டு கட்சியின் நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் விக்ரமசிங்க வருவதை தடுப்பதற்கென்று த. தே. கூ. ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா?“ என அவர் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன!

இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன, இன்று சுபநேரத்தில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

1883 ஆம் ஆண்டு முதல் முதலாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட தினேஸ் குணவர்த்தன, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புக்களில் பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவோடு இரவாக அடித்து விரட்டப்பட்ட கோ கோம் கோட்டா போராட்டக்காரர்கள் !

கடந்த 100 நாட்களுக்கு மேலாக கொழும்பு காலிமுகத்திடல் இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட முப்படையினர் கோட்டா கோ கம போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

இவ்வாறு அங்கிருந்த போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதி முற்றுமுழுதாக முப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ளதகவும் இதன்போது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போராட்ட களத்திற்குள் அத்துமீறிய இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டியுள்ளதோடு அவர்களின் கூடாரங்கள், வாகனங்கள், பாதாகைகள் என அனைத்தும் இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது.

இதன் போது பல போராட்டக்கராக்கள் பலத்த காயங்களுக்கு உள்ளானதாவும், அவர்களை மருத்துவமனை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

படையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து செய்தியறிக்கையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் பலர் தாக்கப்பட்டுள்ள அதேவேளை கைதுசெய்யப்பட்ட இரு பத்திரிகையாளர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

“இலங்கைக்குள் ரத்த ஆறு ஓடும் : ஐ.நாவின் அமைதிப்படை வரவழைக்கப்படும்.” எச்சரிக்கிறார் விமல் வீரவங்ச!

நாட்டில் எதிர்க்காலத்தில் வன்முறைகள் வெடிக்குமானால், ஐ.நா.வின் அமைதிப்படை இலங்கைக்குள் வருகைத் தரும் ஆபத்து உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தேர்தலில் தோல்;வியுற்று ஒன்றரை வருடங்கள் கழித்து நாடாளுமன்றுக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று தாமரை மொட்டுக் கட்சியினரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ளார்.

அதாவது தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றி, தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.

மே 9 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று, ஜுலை 9 ஆம் திகதி பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இன்று நேரடியாக ஜனாதிபதி ஆசனத்தில் அவர் அமர்ந்துள்ளார். 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

டளஸ் அழகப்பெரும ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தால், அவர் பக்கத்தில் பல கட்சிகள் உள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதனுடன் இணைந்த ஏனையக் கட்சிகள் என நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் இணைந்து செயற்பட்டிருக்கும்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளமையினால், அந்த நிலைமை இல்லாமல் போயுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கமொன்று இதன் ஊடாக ஒருபோதும் அமையாது. இதனால் மக்கள் மீண்டும் மீண்டும் துன்பப்படும் நிலைமையே காணப்படுகிறது.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவத்தின் பிரதிபலனாகவே இன்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரணில் ஜனாதிபதியாக வந்தால் மட்டுமே இவ்வாறான செயற்பாடுகள் இனிமேல் ஏற்படாது என்று கருதியே 134 பேர் அவருக்கு வாக்களித்துள்ளார்கள்.

இவர்களுக்கு நாடு குறித்து அக்கறையில்லை. தங்களின் பாதுகாப்பு மட்டுமே முக்கியமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

சர்வக்கட்சி அரசாங்கமொன்று அமைந்தால் மட்டுமே இது இரண்டையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் இந்த நிலைமை இன்னமும் மோசமடையலாம். நாட்டில் இரத்த ஆறு ஒட வேண்டும் என்றுதான் சர்வதேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அப்படி நடந்தால், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை இலங்கைக்குள் நுழையும் ஆபத்து உள்ளது. அல்லாவிட்டால் இந்தியாவின் அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்படும்.

இறுதியில் போராட்டக்காரர்கள், போராட்டத்தை எதிர்ப்பவர்கள், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவுக்கு வாக்களித்தவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

இதனுடன் இலங்கை இராஜ்ஜியத்தின் பயணமும் முடிவுறும். இந்த அச்சத்தினால்தான் நாம் சர்வக்கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிக்குமாறு கோரினோம்.- என்றார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து 5 வாக்குகள் – பகிரங்கப்படுத்தினார் ஹரின் பெர்ணான்டோ!

முழுப் பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதற்காக பிரதான எதிர்க்கட்சிக்கு புதிய ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார். அதனால் எதிர்க்கட்சி தலைவர் நாடு தொடர்பில் தீர்மானிப்பாரா..? அல்லது எதிர்கால தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பாரா..? என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரசிங்கவின் தைரியத்தில் எழுதப்பட்டதே தற்போது இடம்பெற்றிருக்கின்றது. என்றாலும் இந்த விடயம் பெரும் சவாலுக்கு உரியதாகும். இலங்கை மக்களுக்கு இதன்மூலம் பெரிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று நினைக்கின்றோம். முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக முன்னெடுத்துச் செல்லவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன்போது எங்களுக்கு பதவிகள் அவசியமில்லை. சரியாக இதனை செய்வார்கள் என்று நினைக்கின்றோம்.

இதற்கு சஜித் பிரேமதாச உள்ளிட்டோரை இணைத்துக்கொண்டு பயணிக்கலாம். தற்போது அனுபவம் உள்ள தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார். அவர் ஊடாக தேவையானவற்றை செய்யலாம் என்று நம்புகின்றோம். சர்வகட்சி அரசாங்க அமைப்பதே ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம். அதற்காகவே அவர் பிரதான எதிர்க்கட்சி உட்டபட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுததார்.

அதனால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது நாடு தொடர்பில் சிந்தித்து செயற்பாடுவாரா அல்லது எதிர்காலத்தில் வரக்கூடிய தேர்தல் தொடர்பில் செயற்படுவாரா என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அத்துடன் இந்த தேரதலில் ஐக்கிய மக்கள் சக்தி 14உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்துள்ளனர். அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் 4அல்லது5 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இந்த வெற்றியை நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தோம் என தெரிவித்தார்.

…….

கடந்த காலங்களிலும் 21 ஆம் திருத்தம் தொடர்பான பிரேரணை, கொழும்பு ஃபோர்ட் சிட்டி தொடர்பான பிரேரணைகள் கொண்டு வரப்பட்ட போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கட்சி தலைமையின் முடிவை எதிர்த்து ராஜபக்ஷ அரசின் முடிவுகளுக்கு ஏற்றாற் போல வாக்களித்தனர். அதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இம்முறையும் மாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது தான்.

ஆனால் தமிழர் உரிமை , கோரிக்கை , ஜனநாயகம் என்றெல்லாம் இரவோடு இரவாக டலஸ் அழகப்பெரும குழுவினருடன் பேசிமுடித்துவிட்டு டலசுக்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பு ஒரு முடிவை அறிவித்தது. இந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து 5 பேர் வரை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்திருப்பதாக ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளதானது தமிழர் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டலஸ் அழகப்பெருமவுக்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பதில் எம்.ஏ. சுமந்திரனுடைய பங்களிப்பு அதிகமாக காணப்பட்ட நிலையில் கட்சிக்குள் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இழுபறி காணப்பட்டதை நேற்றைய தினம் எம்.ஏ.சுமந்திரனின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த பதிவுகள் தெளிவாக காட்டின. “நான் முதுகெலும்பு உள்ளவன். ஒரு முடிவை சரியாக எடுப்பேன் . உறுதியான நிற்பேன்” என்பது போல அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற கேள்வியை விட ஆக கவலையான உண்மையை இந்த ஜனாதிபதி தெரிவு க்கான தேர்தல் தெரியப்படுத்தியுள்ளது.

அதாவது;

இந்த தமிழ்தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரிடமும் இம்மியளவும் ஒற்றுமை இல்லை. கூட்டாக இணைந்து ஒரு முடிவை கூட இவர்களால் எடுக்க முடியவில்லை.

இங்கு பரிதாபத்துக்குறியவர்கள் தமிழ் மக்களே.

போலித்தேசியம் பேசி – கிடைக்காத தனிநாடு பற்றி பேசிக்கொண்டிருக்கும் – தங்குளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத  இந்த தமிழ்தேசிய அரசியல்வாதிகளினை இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் இந்த மக்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குள்ளானவர்கள் தான்.

“இன்று அனைத்துத் திருடர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியாக ஒரு திருடனை நியமித்துள்ளார்கள்.” – ரஞ்சித் மத்துமபண்டார காட்டம் !

புதிய ஜனாதிபதிக்கான நேற்றைய வாக்கெடுப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தோ அல்லது எதிர்க்கட்சிகளில் இருந்தோ ஒரு உறுப்பினர்கூட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று மக்களின் நிலைப்பாடு தானா வெளிப்பட்டது என கேட்க விரும்புகிறேன்? 2019 மற்றும் 2020 இல் இருந்த நிலைப்பாட்டிலிருந்து மக்கள் முற்றாக மாறிவிட்டார்கள். 2020 இல் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, குறித்த உறுப்பினர்களினாலேயே புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருடர்களை வெளியே விரட்ட வேண்டும் என கோரியே மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், இன்று அனைத்துத் திருடர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியாக ஒருவரை நியமித்துள்ளார்கள். இவர்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கவே முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதிய ஜனாதிபதி தெரிவின்போது, எமது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என கூறப்படுகிறது.
ஆனால், அப்படி ஒரு உறுப்பினர்கூட அவருக்கு வாக்களிக்கவில்லை என்பதை நான் இவ்வேளையில் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். மேலும், எதிர்க்கட்சியிலுள்ள எந்தவொரு கட்சியினரும் அவருக்கு வாக்களிக்கவில்லை.
நேற்றைய வாக்கெடுப்பின் ஊடாக எமது பலம் மேலும் அதிகரித்துள்ளது என்றே கூறவேண்டும். 64 ஆக இருந்த எமது பலம் இன்று 82 ஆக உயர்வடைந்துள்ளது. 20 ஆவது திருத்தத்திற்கு ஆளும் தரப்பில் 156 வாக்குகள் வழங்கப்பட்டன. ஆனால், நேற்றைய வாக்கெடுப்பின்போது 134 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதிலிருந்து அவர்களின் வீழ்ச்சியும், எமக்கான ஆதரவும் அதிகரித்துள்ளமையை புரிந்துக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
எவ்வாறாயினும், வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை மீட்டெடுக்க நாம் எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் செய்யத் தயாராகவே உள்ளோம். சர்வக்கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால், அது எவ்வாறு பயணிக்கப்போகிறது என்பதையே நாம் பார்க்க வேண்டும். எந்தத் தீர்மானமாக இருந்தாலும் கட்சியின் மத்தியக்குழுக் கூடியே முடிவுகளை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பை அடுத்து ஐ.நா தொடங்கி பிரிட்டன் வரை இலங்கைக்கு உதவ முன்வருவதாக அறிவிப்பு !

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானதை தொடர்ந்து அடுத்தடுத்து பல மேற்கத்திய நாடுகளில் இருந்து ஆதரவும் வாழ்த்துக்களும் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் இலங்கையின் புதிய ஜனாதிபதிபதியுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது என அறிவித்தார்.

 

இந்த நிலையில் அடுத்த அறிவிப்பாக ஐ.நா ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை பிரித்தானியாவும் தன்னுடைய ஆதரவை வெளியிட்டுள்ளது. புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹில்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அத்துடன் புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பிரித்தானிய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

…….

சில தினங்களுக்கு முன்பு பிரித்தானியாவின் முன்னாள் இராஜதந்திரி பீட்டர் ஹீப் ” 150 வருடங்கள் அடிமைப்படுத்திவிட்டு இன்று ஆபத்தில் உள்ள இலங்கைக்கு பிரித்தானியா உதவாமல் உள்ளது.”  என தெரிவித்திருந்தார். கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்த போது அமைதிகாத்த பிரித்தானியா ரணில் பதவியேற்றதும் தன்னுடைய மௌனத்தை கலைத்துள்ளது.

https://www.facebook.com/102306228271669/posts/pfbid0a1DdwpZcgeB4juBF5XAivdx1tct6RhvkYXSmvVeQQVy3BQc6gQKhqS93izmuPfFPl/?app=fbl

முன்னதாக நேற்றைய தினம் சர்வதேச நாணய நிதியமும் இலங்கைக்கான கடன் திட்டங்கள் குறித்து பேச தயார் என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.