உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

Breaking news:- போராட்டடக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஜனாதிபதி மாளிகை !

கொழும்பு முழுமையான பகுதிகளிலும் கோட்டாபாய அரசாங்கத்தை எதிர்த்து இன்றைய தினம் மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் மாளிகையை சுற்றி முற்றுகையிட்டிருந்த மக்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதியின் மாளிகையை முழுமையாக கைப்பற்றகயுள்ளதாக அறிய முடிகின்றது.

 

கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வின் மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

இதே நேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புத் தேடி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊரடங்கு என்ற விடயம் சட்டத்தில் எங்குமேயில்லை – எம்.ஏ. சுமந்திரன்

பொலிஸ் ஊரடங்கு” என சட்டத்திலே எதுவும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது நாளை நடைபெற இருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள சட்ட விரோத அறிவிப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கே பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

இலவசமாக படிக்க மட்டுமே இலங்கை தேவை – குறுகிய கால இடைவெளியில் 1500 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேற்றம் !

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து சுமார் 1500 மருத்துவர்கள் வெளியேறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

இந்த புள்ளிவிபரங்கள் மிகச்சரியானவை என்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற முற்படும் போது பெறப்படும் இலங்கை மருத்துவ கவுன்சிலின் (SLMC) “சான்றிதலுக்கான ” விண்ணப்பங்களில் இருந்து இந்த புள்ளிவிபரங்கள் பெறப்பட்டன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எம்.பி.யின் கூற்றுப்படி,

புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:

ஜன: 138
பிப்: 172
மார்ச்: 198
ஏப்: 214
மே: 315
ஜூன்: 449

தெரிவித்துள்ளார்.

………..

 

இங்கு தனித்து வைத்தியர்களுக்கு மட்டுமல்ல. முழு நாட்டுக்கும் பொருளாதார நெருக்கடி தான். எல்லோருமே நாட்டை விட்டு தப்பித்து ஓட முடிவெடுத்தால் நாட்டை முன்னோக்கி நகர்த்துவது எப்படி ..?

இவர்கள் இலவசமாக இலங்கையின் பல்கலைக்கழகங்களில் கற்று  மருத்துவர்கள் ஆனவர்கள் தான். படிக்கும் காலத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டிருந்தால் நாட்டை விட்டு போயிருப்பார்களா..? என்ற கேள்வியும் கேட்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

இலங்கையின் சாதாரண மக்களை விட இந்த வைத்தியர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுக்கொண்டே உள்ளன. எரிபொருள் வரிசைகளில் கூட சாதாரண மக்கள் பல நாட்கள் காத்திருக்க இவர்களுக்கு இலகுவாக பெட்ரோல் கிடைக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியான நேரத்தில் இதனை விட வேறு என்னதான் செய்ய முடியும்..?

 

உண்மையிலேயே ஏனையவர்களை விட இலங்கையில் இலவசக் கல்வி மூலமாக கல்வி கற்று வைத்தியரான இவர்கள் இன்னும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியவர்கள். வைத்தியர்கள் மட்டுமல்ல. உயர்கல்வி கற்று வெளிநாடுகளுக்கு தப்பியோட நினைக்கும் ஒவ்வொரு கல்விமான்களுமே சுயநலவாதிகள் தான். சந்தர்ப்பவாதிகள் தான்.

 

அண்மையில் யாழ். பல்கலைக்கழககத்தில் மருத்துவ துறையில் கற்கும் இறுதிவருட மாணவன் ஒருவரை யாழ்ப்பாண வைத்தியசாலையின் முன்புள்ள உணவகம் ஒன்றில் சந்தித்த போது நடைமுறை பிரச்சினைகள் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது ” இது என் நாடு. வாழ்வோ சாவோ இங்கேயே வாழ்ந்து விடுவது என்பதே தீர்வு.” என கூறினார் அந்த மாணவர்.

இப்படியான மனிதர்கள் இருப்பதாலேயே இன்னமும் நமது நாட்டின் இலவச சேவைகளின் தரம் குறையாது உள்ளது.

போராட்டத்துக்கு நாடே தயாராக உள்ள நிலையில் – 12 திகதி முதல் நாடு வழமைக்கு திரும்பும் என்கிறார் ஜனாதிபதி கோட்டாபய !

நாளையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் – ஆளுந்தரப்புக்கும் எதிரான மிகப்பெரிய போராட்டம் ஒன்று நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் பல நிறுவனங்களும் மூடப்பட்டு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் “வெற்றிகரமான தீர்வுகள் கிடைத்துள்ள இவ்வேளையில் எதிர்க்கட்சிகளின் அரசியல் குழுக்கள் மக்களை தவறாக வழிநடத்துவது மிகவும் வருந்தத்தக்கது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எரிபொருள், எரிவாயு மற்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் ஜூலை 12 முதல் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறவுள்ளதாக என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன்படி, நீண்டகால மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முயற்சியின் பின்னர் நாடு தற்போது அதற்கான பலன்களை பெற்று வருவதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்வேறு அரச தலைவர்கள் ஊடாக தொலைபேசி மூலமாகவும் சில நாடுகளின் தூதுவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய மருந்துகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் 44 ஆயிரம் மெட்ரிக் தொன் உரம் நாளைய தினம் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்..

நாட்டில் பல்வேறு விவசாய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உணவுப் பற்றாக்குறையொன்று ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிகரமான தீர்வுகள் கிடைத்துள்ள இவ்வேளையில் எதிர்க்கட்சிகளின் அரசியல் குழுக்கள் மக்களை தவறாக வழிநடத்துவது மிகவும் வருந்தத்தக்கது என ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக நாடு மீண்டும் பின்னோக்கி செல்லும் என ஜனாதிபதி கருத்தாகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக கோரிய நாளைய போராட்டத்துக்கு ரணில் ஆதரவு !

நாளைய தினம் நடத்தப்படவுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாளை கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்ப்பதையும் உறுதிசெய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
போராட்டங்களின் போது பொலிஸ் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஜக்கிய தேசிய கட்சி குறித்த அறிக்கையில் கூறியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க இந்தியாவில் வீதிக்கண்காட்சி நடத்த திட்டமிடும் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் !

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டி எழுப்பவும், வெளிநாட்டு அந்நிய செலாவணிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும், இந்தியாவிலுள்ள முக்கிய ஐந்து நகரங்களில் வீதி கண்காட்சிகளை இலங்கை நடத்த உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அழகிய கடற்கரைகள், குன்றுகள், அழகான கடலோர நகரங்களுக்கு பெயர் பெற்ற இலங்கை கடந்த ஏழு தசாப்தங்களிலும் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது எனவும், பொருளாதார சிக்கல்கள், கொவிட்-19 தொற்று நோய் என்பன காரணமாக சுற்றுலாத்துறை மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

22 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய தேவையான வெளிநாட்டு கையிருப்பு இல்லாமல் மருந்து உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

இருப்பினும் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு 61 ஆயிரத்து 951 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும், மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவேற்பதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர வேண்டுமானால் இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாக வருமானம் அதிகரிக்க வேண்டும் எனவும் அது மிகவும் இன்றியமையாத ஒரு வருமானமாக காணப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா உட்பட சில நாடுகள் இலங்கைக்கு அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்ட போதிலும், கடந்த ஆண்டு 2 இலட்சத்துக்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்ததாகவும் இந்த ஆண்டில் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு தனது கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) சமர்ப்பிக்க உள்ளதாகவும், இது பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் திட்டத்தில் ஒரு முக்கியமான படியாக காணப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எரிபொருள்நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட வன்முறை – ஒருவர் பலி !

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி – மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (07) இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த மோதலில் ஹபராதுவ – ஸ்வாலுவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனையவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

நேற்றிரவு எரிபொருளுக்காக நின்ற வரிசையில் நபர் ஒருவர் தனது நண்பரின் கடைக்கு முன்னால் உள்ள இடத்தில் தனது வாகனத்தை நுழைக்க முற்பட்ட போது, ​​வரிசையில் பின்னால் இருந்த சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது அவருடன் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அவ்வழியாக வந்த சிலர் தாக்கத் தொடங்கினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் வரிசையில் நின்ற மூவரும் தாக்க வந்த குழுவில் ஒருவரும் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போதே பலத்த காயங்களுக்கு உள்ளன நபர் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நெருக்கடி – வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை !

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் காணப்படும் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வைத்தியர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன்காரணமாக மருத்துவமனைகளின் செயற்பாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு எதராக போராட்டத்தல் குதித்தது பௌத்தமகாசங்கம் !

கொழும்பு – புறக்கோட்டையில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு இதன்போது பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் இன்று சைக்கிள் அணிவகுப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வகட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த சைக்கிள் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

நுகேகொட மேம்பாலத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட சைக்கிள் அணிவகுப்பு கொழும்பில் உள்ள பொது நூலகத்திற்கு அருகில் நிறைவடைந்தது. அதன் பின்னர் பொது ஒன்றுகூடல் நடைபெற்றது.

எரிபொருள் லீற்றர் ஒன்றை 200 ரூபாவிற்கு வழங்க முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

எரிபொருள் லீற்றர் ஒன்றை 200 ரூபாவிற்கும் குறைந்த விலையில் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.
பெற்றோலியக் கூட்டுதாபனம், இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்கும் போது பிரச்சினை ஒன்று உள்ளமை தெரியவந்ததது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது, குறித்த அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள சூத்திரமானது, எந்தவித அடிப்படை தன்மையும் இல்லாமல் உள்ளதோடு அதற்கமைய விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, கடந்த இரண்டு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கான கட்டணம் மற்றும் அதற்கான வரி என்பன தொடர்பில் நாம் ஆராய்ந்துள்ளோம்.
அவற்றுக்கு இடையில் 150 ரூபா முதல் 200 ரூபா வரையான வித்தியாசம் காணப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.