குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும், குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதியின்மை ஏற்படாத வகையில் காவல்தறையினர் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும் முல்லைதீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற குறித்த வழக்கு இன்று நீதிமன்றில் முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும், இவர்கள் சார்பில் சட்டத்தரணி வி. எஸ். எஸ். தனஞ்சயன் மற்றும் சட்டத்தரணி கெங்காதரனும் முன்னிலையாகியதோடு, எதிர்தரப்பிலே காவல்துறையினர் மன்றில் முன்னிலையாகினர்.
இதன்போது முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழக்கினுடைய தீர்ப்பை இன்றைய தினம் வழங்கினார்.