உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது !

மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு இயந்திரப் படகு ஒன்றில் சட்டவிரோமாக சென்ற 54 பேரை கிழக்கு கடல் பகுதியில் வைத்து நேற்று (26) இரவு கடற்படையின் கைது செய்து திருகோணமலை கடற்படை முகாமிற்கு இன்று (27) மாலை 3 மணிக்கு அழைத்துவரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று இரவு மட்டக்களப்பு கிழக்கு கடல் பகுதியில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு பாலமீன்முடு கடற்கரையில் இருந்து சிறிய படகுகள் மூலம் கிழக்கு கடலில் தரித்து நின்ற இயந்திர படகிற்கு சட்டவிரோத குடியேற்றகாரர்கள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு புறப்பட்டு பிரயாணித்து கொண்டிருந்த இயந்திர படகை கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இடைமறித்து சோதனையிட்ட போது அதில் சட்டவிரோமாக அவுஸ்ரோலியாவுக்கு சென்று கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 54 பேரை கைது செய்தனர்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை, திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் பயணித்த படகை கடற்படையினர் இழுத்து கொண்டு திருகோணமலை கடற்படை முகாமிற்கு இன்று மாலை 3 மணிக்கு வந்தடைந்ததுடன் அவர்களிடம் விசாரணைகளை மேற்கோண்ட பின்னர் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஓப்படைத்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் தெரிவித்தனர்.

யாழில் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கை !

போதைப்பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வகையில் பேரூந்துகளில் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

யாழில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு !

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட தன்னார்வ அமைப்புக்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகே உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் தன்னார்வ அமைப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவளதுணை, சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட 1927 என்கிற உடனடி இலவச தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தும் பதாகை திறந்து வைக்கப்பட்டது.

எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்களை மோதித்தள்ளிய பேரூந்து – சாரதி தப்பியோட்டம் !

மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்கள் மீது தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.

இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊறணி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திற்கு முன்னால் இன்று காலை வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது வீதியில் பயணித்த தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் காயமடைந்த ஐந்து பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாரதி தப்பியோட்டம் விபத்தையடுத்து பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிரியர்களுக்கு பெற்றோல் கிடைத்தால் போதும் – ஏனையோருக்கு பெற்றோல் தேவையில்லை..? – ஆசிரியர்களின் மனோநிலை தான் என்ன..?

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோல் வழங்கக் கோரி இன்று திங்கட்கிழமை ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியில் போராட்டம் மேற்கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக இருபக்கமும் வீதியினை மறித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வழியாக வருகை தந்து ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று நான்கு பக்கமும் உள்ள வீதியினை மறித்து வீதியில் அமர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம் போராட்டம் மேற்கொண்டனர்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையிலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை வழமை போன்று இயங்குமாறு மாகாணப் பணிப்பாளர் அறிவித்த நிலையில் பாடசாலைக்கு செல்வதற்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் இன்மையால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டு வருகின்றது.
ஓட்டமாவடி கோட்டத்தில் 27 பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் கஷ்டப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் தூர இடங்களில் உள்ள நிலையில் இங்கிருந்து செல்லும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போக்குவரத்து பிரச்சனை காரணமாக பாடசாலை வருகை குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் தங்களுக்கு உரிய எரிபொருளிளை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது எழுத்தறிவித்தவன் நடுத்தெருவில் அவமானம், வேண்டும் வேண்டும் எரிபொருள் வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும், கல்வியை சீரழிக்காதே எரிபொருள் வழங்கு, ஆசிரியர் சமூகத்தினை சீரழிக்காதே, பாடசாலை செல்ல அதிபர், ஆசிரியருக்கு பெற்றோல் வழங்கு என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
………………………………………………………………
எழுத்தறிவித்தவர்களுக்கு பெற்றோல் கொடுக்க வேண்டும் – அரச சேவைக்கு பெற்றோல் கொடுக்க வேண்டும் என எண்ணுவதெல்லாம் ஒரு பக்க சார்பான மனோநிலை மட்டுமே. இந்த போராட்டங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை.
நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்ற வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர்(படம்)
அண்மை நாட்கள் வரை வைத்தியர்களுக்கு பெற்றோல் அவசியமானது பேசிக்கொண்டிருந்தார்கள். வைத்தியர்களிலும் பலர் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெரு இடையிலேயே வைத்து பெற்றோல் வாங்கிச்சென்ற சோகங்களும் பதிவாகியிருந்தன். இந்த நிலையில் நேற்றையதினம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்.ஏ.கேதீஸ்வரன் நீண்ட எரிபொருள் வரிசையில் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் பெற்றுக் கொண்டிருந்தததை நேற்றைய செய்திகளில் அதிகம் கண்டிருந்தோம். ஆரோக்கியமான முன்மாதிரியாக அவர் செயற்பட்டிருந்தார்.
இங்கு அரசு வேலைகள் செய்வோருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற வாத – விவாதங்கள் ஏற்க முடியாதவை. மாணவர்களின் எதிர்காலத்துக்கு உதவ பெற்றோல் தாருங்கள் – சுயநலம் பார்க்காது நாம் வேலை செய்கிறோம்.” என பெற்றோலுக்காக பேராடும் இதே ஆசரியர்கள் தான் சம்பளம் கேட்டு பாடசாலைகளுக்கே போகாது இருந்தார்கள். அப்போது மாணவர்களினுடைய எதிர்காலம் நாசமாகவில்லையா..?
அடுத்த முக்கியமான விடயம் இவர்கள் என்ன அடிப்படையில் தொழில்களை வகைப்படுத்துகிறார்கள்..? எது அத்தியவசியமானது..? எதற்கு பெற்றோல் வழங்க வேண்டும் என்கிறார்கள்… எல்லாம் முழுமை முரணானது.
நாளாந்தம் கூலி வேலைக்கு செல்பவனின் வீட்டில் அடுப்பு எரிய வேண்டும் என்றால் அவன் தினமும் வேலைக்கு போக வேண்டும். அவன் வேலைக்கு போக வாகனம் தேவை. அதற்கு பெட்ரோல் ல் தேவை. அவன் கூலிக்கு செல்லாமல் தான் 5 நாட்களுக்கும் மேலாக தெருவிலேயே காத்துக்கிடக்கிறான்.   அவன் குடும்பமும் முழுப்பட்டினி தான். அப்படியானால் அவர்கள் அரசாங்க ஊழியர்கள் இல்லை என்பதால் எக்கேடு கெட்டால் என்ன..? என்ற மனோநிலையை கொண்டுள்ளாமா என்ற பக்கமும் உள்ளது.
எல்லாமும் எல்லோர்க்கும் சமனாக கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை எல்லா தளத்திலும் உருவாகும் வரை – எல்லோர் மனதிலும் உருவாகும் வரை – உருவா்கப்படும் வரை சுயநலம் மட்டுமே மேலோங்கி இருக்கும். இந்த வரிரசகளும் இன்னமும் நீளும் !

காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் உருவாக்கிய ராஜபக்சக்கள் !

காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் உருவாக்கிய ராஜபக்சக்களும் கும்பலும் இப்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனவும், இந்நாட்டு மக்களுக்காக சிறந்த எதிர்காலத்தை வேண்டி போராடிய மக்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்ட வண்ணமுள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது வரையிலான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள பேராட்டத்துடன் தொடர்புடைய இளைஞர்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று (26) சென்றிருந்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

போராட்டத்தின் நோக்கங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவும்,ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன அந்த நோக்கங்களுடன் மாற்றமின்றி பயணிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

காட்டுமிராண்டித்தனமான ராஜபக்ஸவாதம், மற்றும் அரச பயங்கரவாதம் என்ற இரண்டையும் நிராகரிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்ஸக்களின் பங்கேற்புள்ள எந்தவொரு அரசாங்கத்திலும் தாங்கள் அங்கம் வகிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேல்மாகாணத்துக்கு மட்டுமே விநியோகிக்கப்படும் உணவுப்பொருட்கள் – ஏனைய மாகாணங்களில் பாரிய உணவுப்பற்றாக்குறை !

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான எரிபொருள் பற்றாக்குறையால், தற்போது மேல் மாகாணத்திற்கு மட்டுமே விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை துறைமுக கொள்கலன் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

எனவே நாட்டின் ஏனைய பகுதிகளில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக அதன் தலைவர் சனத் மஞ்சுள சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து துறைமுகத்தில் உள்ள கொள்கலன் போர்ட்டர்கள் அடுத்த வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை காரணமாக எதிர்வரும் சில நாட்களில் நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி – அகதியாக சென்ற வயோதிப தம்பதி மயங்கிய நிலையில் மீட்பு !

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகதிற்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில் திருகோணமலையில் இருந்து படகு மூலம் வயதான தம்பதியர் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.

இவர்கள் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் விழுந்து இருந்த நிலையில் அங்கு வந்த கடலோர பொலிஸார், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை இடமபெற்றுவரும் நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரிபொருள் நெருக்கடியின் விளைவு – வீடு தீப்பிடித்து கணவன் – மனைவி பலி !

கொழும்பு, ஹோமாகம பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாகம்மன பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றின் அடித்தளத்தில் தீ பரவியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதுடன் அவர்களது இரு மகள்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி இரவு குறித்த அறையில் கணவன், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டு நால்வர் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறு வயது மகள் பொரளை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏனைய மூவரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க செல்லும் போது 47 வயதான கணவர் லசந்த புத்திக ரணசிங்க உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் மனைவி நளிகாதேவி 35 வயது நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். இவர்களின் 19 வயதான மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்களின் உயிரிழப்புக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டில் கொள்கலன் ஒன்றில் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினால் தீ விபத்து ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள் – சஜித் பிரேமதாச சவால் !

தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய கொள்கைகளின் கீழ் நாட்டைப் பொறுப்பேற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“இந்த நாட்டை அழிக்கும் அரசாங்கத்தை ஜனநாயக ரீதியில் அகற்றுவதற்கான தேசிய பிரசாரத்தை நாங்கள் செயற்படுத்தி வருகிறோம்.

சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அனுமதிக்குமாறு உங்கள் அனைவருக்கும் நாங்கள் சவால் விடுகிறோம். வாக்கெடுப்புக்கு உடனடியாக வாய்ப்பு கொடுங்கள்.

அப்போது நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கும் சிறந்த அணி எது என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள். புதிய ஆணையில் நாட்டை ஆளுமாறு மக்களைக் கேட்பதே எங்களின் பணி. நாட்டை பொறுப்பேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

யாழில் தொடரும் பாலியல்வன்புணர்வு சார்ந்த பிரச்சினைகள் – யாழ்.கற்ற சமூகம் என்ன செய்கிறது..?

யாழ்.இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்றைய தினம் ஆறு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இளவாலை பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றின் போதே உறவினர் ஒருவரால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

…………………………….

மக்கள் மத்தியில் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் வாட்டிக்கொண்டிருந்தாலும் கூட மறுபக்கமாக உளவியல் நெருக்கடிகளும் அதிகரித்து்கொண்டு தான் இருக்கின்றன என்பதையே இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் வெளிப்படுத்துகின்றன. இதே யாழப்ப்பாண பகுதியில் தான் சில தினங்களுக்கு முன்பு 78 வயது மூதாட்டி ஒருவரும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணத்தை பொருத்தவரை  தமிழரின் ஏனைய பகுதிகளை விட கற்ற சமூதாயம் ஒன்று அதிகமாக இருக்கிறது என்பதை ஏற்றாகத்தான் வேண்டும். அந்த பகுதியிலேயே பாலியல்துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பது ஆபத்தான ஒரு கட்டத்தில் நமது சமூக ஒழுக்க நிலை உள்ளது என்பதையே விளங்கிக்கொள்ள முடிகின்றது.

அங்குள்ள கற்ற சமூகம் தன்னுடைய சுயநல மனப்பாங்கை கைவிட்டுவிட்டு சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு சமூக மாற்றத்துக்காக இயங்க வேண்டியுள்ளது. பாலியல் சாரந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள், மாணவர்கள் மத்தியில் பாலியல் புரிதல் தொடர்பான கல்வியை கொண்டு செல்ல முற்படல், சமூக ஏற்றத்தாழ்வுகளில்உள்ள சிக்கலான கட்டமைப்பை மாற்ற முயற்சித்து அனைவருக்கும் கற்கக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்ததுததல், போதைப்பொருள் – ஆயுத கலாச்சாரத்துக்கு எதிரான ஓர் அமைப்பை முன்னெடுத்தல் என இயங்குவதற்கு ஆயிரம் வழிமுறைகள் உள்ளன.

யாழில் உள்ள கற்ற சமூகம் தான் வாழ்ந்த சமூகம் பற்றி சிந்தித்து செயற்பட முன்வராதவரை சமூக சீர்கேடுகள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கப்போகிறது.