உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதனை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.”- முன்னணியினர் இந்தியாவிடம் வேண்டுகோள் !

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதனை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய வெளிவிவகாரச் செயலர் ஊடாக இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் கடிதம் கிட்டுப்பூங்கா பிரகடனமும் இணைத்து இந்திய வெளிவிவாகார அமைச்சருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கடிதம் ஒன்று இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக அக்கடிதம் அனுப்பப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
28-03-2022
உயர்திரு.சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
கௌரவ வெளிவிவகார அமைச்சர்,
இந்தியா
ஊடாக,
கௌரவ துணைத்தூதுவர்,
இந்திய துணைத் தூதரகம்,
யாழ்ப்பாணம்.
அவர்களுக்கு,
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாக
1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13 ஆம் திருத்தமானது, நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து அது தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் ஆரம்பத்திலிருந்தே அதனை நிராகரித்து வந்துள்ளனர்.

சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் 13ஆம் திருத்தச் சட்ட வரைபு சமர்ப்க்கப்பட்டிருந்த பொழுது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த தரப்புக்கள், அந்த வரைபை சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்றுகோரி இந்திய பிரதமருக்கு எழுத்து மூலமாக தெரிவித்திருந்ததும் வரலாற்று நிகழ்வாகும்.
13ஆம் திருத்தமானது சட்ட மூலமாக நிறைவேற்றப்படுவதனை தடுத்து நிறுத்துமாறு கோரப்பட்டதனுடைய நோக்கமே, 13 ஆம் திருத்தமானது, தமிழ் மக்களின் தீர்வு என்னும் விடயத்தில் ஆரம்பப் புள்ளியாகக் கூட கருதப்பட முடியாது என்பதனாலேயாகும்.

எனினும் தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், குறித்த 13ஆம் திருத்தச் சட்டமும் மாகாணசபைகள் சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு அமைப்பு மட்டும் 1988ல் அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வடகிழக்கு மாகாண சபையிலிருந்த நிர்வாகத்தைக் கைப்பற்றியிருந்தது.
இருந்த போதிலும் இதனூடாக எதனையுமே சாதிக்க முடியாது என்ற உண்மையை அனுபவ ரீதியாக உணர்ந்த போது, மாகாண சபையை பொறுப்பேற்றிருந்த அந்தத் தரப்புக்கூட, தாம் வகித்துவந்த மாகாண சபை அங்கத்துவத்தினை இராஜினாமா செய்து 13 ஆம் திருத்தத்தினை முற்று முழுதாக நிராகரித்திருந்தனர்.

இந்த நடவடிக்கையானது, தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில், 13 ஐ முன்னிறுத்தி நகர முடியாது என்பதை நிரூபிப்பதாகவும், 13 ஆம் திருத்தமானது தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஆரம்பப்புள்ளியாக கூட கருதமுடியாது என்ற யாதார்த்தத்தை மீண்டும் நிலைநாட்டுவதாகவும் அமைந்துள்ளது.
34 வருடங்களுக்கு மேலாக இந்த 13ஆம் திருத்தமும் மகாகாண சபைகளும், இலங்கை அரசியலமைப்பில் இருந்தும் கூட, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் ஒற்றையாட்சியை முற்று முழுதாக நிராகரித்தே தமது ஏகோபித்த ஆணையை வழங்கிவருகின்றனர். தமிழ்த் தேசம் அங்ககீகரிக்கப்படுகின்ற – தமிழ்த் தேசம் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய – இணைந்த வடக்கு கிழக்கு தாயகம் பாதுகாக்கப்படுகின்ற சமஸ்டித் தீர்வையே கோரி வருகின்றார்கள்.

13ஆம் திருத்தமும் மகாகாண சபைகளும் கடந்த 34 வருடங்களாக நடைமுறையில் இருக்கக் கூடியதாகவே, தமிழ் மக்களின் ஆணைகளைப் பெற்றவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் 13 ஆம் திருத்தம் ஒரு பேச்சுப் பொருளாகக் கூட பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அந்தவகையில், கணக்கிலெடுக்கப்படாத – நிராகரிக்கப்பட்ட ஒரு விடயமாகவே தமிழ்த் தேசிய அரங்கில் 13ஆம் திருத்தம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்தும் அவ்வாறே இருக்கிறது.
ஈழத் தமிழ்த் தேச மக்களின் நிலைப்பாட்டிலே, 13ஆம் திருத்தமும் மாகாண சபைகளும், தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்குரிய தீர்வு அல்ல என்பதுடன், அது தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட அமையாது என்ற உண்மையை தொடர்ந்தும் நிரூபிக்கின்ற வகையிலேயே, கடந்த 2022 ஜனவரி 30ம் திகதி யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலும், 2022 மார்ச் மாதம் 13ஆம் திகதி வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு திடலிலும், மக்கள் எழுச்சிப் பேரணிகள் நடைபெற்றிருந்தன.

அதில், தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் அணிதிரண்டு, 13ஆம் திருத்தம் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியுமல்ல, இறுதித் தீர்வுமல்ல என்பதனை ஆணித்தரமாக வெளிப்படுத்தியும், ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் வேலைத் திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அதேவேளை – தமிழ்த் தேசம் அங்ககீகரிக்கப்படுகின்ற – இணைந்த வடக்கு கிழக்கு தாயகத்தில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியுள்ளதுடன், அத்தகைய தீர்வை அடைந்துகொள்ள இந்திய அரசும் எனைய நட்பு நாடுகளும் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் மேற்படி பேரணிகள் ஊடாக வலியுறுத்தியுள்ளார்கள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களது உரிமைக்காக போராடி வந்த காலப்பகுதியில், அவர்கள் நாட்டைப்பிரிக்காத, ஓர் சமஸ்டித் தீர்வுக்குத் தயாராக இருக்கவில்லை என்றும், தனிநாட்டிற்காக மட்டுமே பிடிவாதமாக செயற்படுகின்றார்கள் என்றும் அப்பட்டமான பொய்யைக் கூறியே, ஓர் இனவழிப்புப் போருக்கு இலங்கை அரசு சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று இனவழிப்பின் மூலமாக உரிமைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்திருந்தார்கள். போர் முடிந்த பின்னர், ஒற்றையாட்சியை நிராகரித்து, சிறீலங்காவின் சட்டத்தின் பிரகாரம் நாட்டைப்பிரிக்காமல் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஓர் சமஸ்டித்தீர்வையே வலியுறுத்தி, தமிழ்மக்கள் அனைத்துத் தேர்தல்களிலும் தமது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். இலங்கைக்கு நான்காவது புதிய அரசியல் யாப்பு ஒன்றினை கொண்டுவருவதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள, சிறீலங்கா அரசு, அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து புதிய அரசியல் அமைப்பை சமஸ்டி அரசியல் யாப்பாக கொண்டுவராமல்;, மாறாக ஒற்றையாட்சியாக கொண்டு வருவதற்கே நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு ஈழதமிழ்த் தேசம் உறுதியாக செயற்பட்டு வரும் நிலையில், ஈழத் தமிழ்த் தேசமக்களின் நலன்களை பேணும் வகையில், இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகித்து, ஒற்றையாட்சி அரசியல் யாப்பை கொண்டுவருதனை தடுத்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதனை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.

அந்த வகையில், ‘கிட்டுப்பூங்கா’ பிரகடனமானது தமிழ் மக்களின் அசைக்க முடியாத அரசியல் வேணவாவை மீண்டும் வெளிப்படுத்தும் ஆவணம் என்னும் வகையிலும், இந்த விடயங்களை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்த சமயத்திலே, நாம் அவரை நேரில் சந்தித்து வெளிப்படுத்த காத்திருந்த நிலையில் எமக்கு அத்தகைய சந்தர்ப்பம் கிடைத்திருக்காத நிலையில், தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளை இக்டிகதம் ஊடாக கௌரவ வெளிவிவகார அமைச்சர் ஊடாக இந்திய அரசின் மேலான கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர்

தலைவர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

செல்வராசா கஜேந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர்

பொதுச் செயலாளர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

“ரணிலை பிரதமராக்க நாங்கள் பைத்தியம் இல்லை.”- ஆளுந்தரப்பு அறிவிப்பு !

ரணில்விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் நோக்கம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவினை சேர்ந்த  அமைச்சர் ரோகித அபயகுணரட்ண தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நபர் ஒருவரை பிரதமராக நியமிக்கும் அளவிற்கு பொதுஜனபெரமுனவில் எவரும் பைத்தியக்காரர்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பழைய அரசியல் கட்சியை சேர்ந்தவர் அந்த கட்சி நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை கூட கைப்பற்றமுடியாத கட்சி என பெயர்வாங்கியுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மிகவும் பொருத்தமான ஒருவர் பிரதமர் பதவியில் உள்ள நிலையில் புதிய பிரதமரை நியமிக்கவேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அவசர உணவு உதவியாக 2,000 தொன் அரிசியை வழங்கும் சீன அரசாங்கம் !

2022 ஆம் ஆண்டு சீனா-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவையும், இரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70 வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.

இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி செய்யும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்கின்றன. அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கைக்கு அவசர உணவு உதவியாக 2,000 தொன் அரிசியை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் மொத்த மதிப்பு சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

தொடரும் கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் வியத்தகு முறையில் மாறிவரும் சர்வதேச சூழ்நிலை ஆகியவை உலகளாவிய உணவுப் பற்றாக்குறை மற்றும் கப்பல் திறனை மேலும் மோசமாக்கியுள்ளன. இந்தப் பின்னணியில், இரு நாடுகளின் தொழில்நுட்பக் குழுக்களும் இணைந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஏற்பாடுகளை இறுதி செய்வதற்கும், உதவிகளை இலங்கைக்கு விரைவில் வழங்குவதற்கும் நெருக்கமாகச் செயற்படும்.

இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா எப்போதும் ஆதரவளிக்கும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவினாலேயே இலங்கையை மீட்டெடுக்க முடியும் – ஐக்கிய தேசிய கட்சி !

முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க விரைவில் முக்கிய பங்களிப்பொன்றை வழங்கவுள்ளார் என ஐக்கியதேசிய கட்சியின் வஜிர அபயவர்த்தன செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும்,

விரைவில் தேசிய கருத்தொருமைப்பாடு ஏற்படும் இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபடும் இதில் ரணில்விக்கிரமசிங்க முக்கிய பங்களிப்பை வழங்குவார். கட்சி அரசியலை மறந்துவிட்டு தேசிய கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதே தற்போதைய தேவை.

நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்கக்கூடிய திறமையான நபரிடம் நாட்டை கையளிக்கவேண்டும்.
பொருளாதாரத்தை கையாள்வதற்கு மிகவும் பொருத்தமான நபர் ரணில்விக்கிரமசிங்கவே.

முன்னாள் பிரதமரே தேசத்தின் பாதுகாவலனாக வருவார் என கருதுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் இலங்கைக்கு 1999இல் ரஸ்யா மேற்கொண்டஅரசியல் சீர்திருத்தம் போன்றதொன்றே அவசியம் என குறிப்பிட்டுள்ளார். அவ்வேளை ரஸ்யாவில் ஜனாதிபதி பொறிஸ்யெல்ட்சின் பிரதமராக விளாடிமிர் புட்டினை நியமித்தார்,புட்டின் பின்னர் வெற்றிகரமாக நாட்டின் தலைவரானார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில அரசியல் தலைவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களிடம் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் நாங்கள் செய்துகாட்டுவோம் என்கின்றனர் ஆனால் முதலில் அவர்கள் தங்களை நிரூபிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு எப்போது முடிவுக்கு வரும்..? – எரிசக்தி அமைச்சர் வழங்கியுள்ள பதில் !

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக் காலத்தின் பின்னர் நீங்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அந்தக் காலம் முடிவடையும் போது நாட்டில் எண்ணெய் வரிசைகள் முடிவுக்கு வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குள் நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தேவையான மசகு எண்ணெய் கிடைத்து விடும் என்று கூறிய அவர், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பிரச்சினை இருக்காது என்றும் கூறினார்.

 

எனினும், நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட எரிபொருள் நிரப்பப்பட்ட பௌசர்கள் திரும்பி வருவதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

“புலிகள் பெயரை சொல்லி இனிமேலும் அரசியல் செய்யாதீர்கள்.”- நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச

“சர்வகட்சி மாநாட்டிலும், ஜனாதிபதியுடனான பேச்சிலும் கூட்டமைப்பினர் பங்கேற்றமையை வரவேற்கின்றேன்.” என  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் அரசின் அதிருப்திக் குழு கட்சிகளின் தலைவர்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கம்மன்பில, “விடுதலைப் புலிகள் ஆயுதத்தால் பெற முடியாததை கூட்டமைப்பு டொலரை முன்னிறுத்தி பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. அதனால்தான் சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது” என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்கள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த நிதியமைச்சர், “கம்மன்பில, விமல் வீரவங்ச ஆகியோர் இனவாதத்தை முன்வைத்துத்தான் தமது அரசியலை நடத்தி வருகின்றார்கள்.

அரசுக்குள்ளிருந்தும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டார்கள். இதனால் அரசு பெரும் அவப்பெயரைச் சந்தித்தது. தற்போது அரசுக்கு வெளியில் சென்றும் இனவாதக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். இவர்களின் இந்தக் கருத்துக்கள் அரச தலைவர் ஆரம்பித்துள்ள கூட்டமைப்புடனான பேச்சுக்கு எந்த விதத்திலும் தடங்கலை ஏற்படுத்தாது. அதேவேளை, தமிழ் – சிங்கள உறவிலும் பாதிப்பு ஏற்படுத்தாது.

அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை முன்வைத்து கம்மன்பில முன்வைத்து எத்தனை நாளைக்குத்தான் அரசியலை முன்னெடுக்கப்போகின்றார்கள்? சர்வகட்சி மாநாட்டிலும், ஜனாதிபதியுடனான பேச்சிலும் கூட்டமைப்பினர் பங்கேற்றமையை வரவேற்கின்றேன்.

அரச தலைவர் தலைமையிலான அரசு கூட்டமைப்புடனான பேச்சுக்களை தொடர்ந்து முன்னெடுத்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது ஆளும் கட்சி !

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை ஆளும் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க இன்று காலை விடுத்த அறிக்கையில், சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அடுத்த பாராளுமன்ற அமர்வில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

“அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் தோல்வியடைந்து விட்டன.” – ஹர்சா டிசில்வா

இலங்கை அரசாங்கம் தனது பொருளாதார கொள்கைகள் தோல்வியடைந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் விதத்தில் சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கைகள் காணப்படுகின்றன என ஹர்சா டிசில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதார கொள்கை காரணமாக நாட்டின் 22 மில்லியன் மக்கள் தற்போது இலங்கையில் என்றும் காணப்படாத மிகவும் துயரமான- மிகவும் மோசமான பொருளாதார சமூக நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாடாளுமன்ற பொறிமுறை ஊடாக நாங்கள் இந்த தீவிரமான சீர்திருத்தங்களை அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நிதிக்குழு அல்லது விசேட குழு மூலம் இதனை முன்னெடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை இதற்கான ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள ஹர்ச டிசில்வா மத்திய வங்கி ஆளுநர் தான் ஒருபோதும் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடப்போவதில்லை- அதன் ஆலோசனையும் தேவையில்லை என தொடர்ச்சியாக தெரிவித்து வந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பின்பற்றிய பொருளாதார கொள்கைகள் முற்றாக தோல்வியடைந்துவிட்டன என சர்வதேச நாணயநிதியம் தற்போது தெரிவித்துள்ளது மத்திய வங்கியின் திட்டமும் தோல்வியை என்பதை நிருபித்துள்ளது என குறிப்பிட்டுள்ள ஹர்சா டி சில்வா சர்வதேச நாணயநிதியத்தின் பரிந்துரைகளை ஏற்கவேண்டுமா இல்லையா என்பது அரசியல் தீர்மானம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி !

பொதுஜனபெரமுனவின் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் தன்னை தாக்கியதாக சட்டம் பயிலும் மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
குளியாப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றின் முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்கப்பட்ட மாணவர் குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் எனது நண்பனை தாக்கினார் பின்னர் என்னை தாக்கினார் அவரது பாதுகாப்புபிரிவை சேர்ந்தவர்களும் என்னை தாக்கினார்கள் என தாக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.
நாரம்மல கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றது அதன்போது அந்த பகுதி மக்களிற்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது,அங்கு காணப்பட்ட நபர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது கல்தாக்குதலை மேற்கொண்டுள்ளார் –அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் தாக்கியதாக தங்களிற்கு வேறு சிலரும் முறைப்பாடு செய்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்கப்பட்ட ஐவர் குளியாப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தன்னையும் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் சிலர் கற்களால் தாக்கினார்கள் என தெரிவித்துள்ளார்.

“அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார்.” – அமைச்சர் நாமல் ராஜபக்ஸ

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்ற விதத்தில் அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள் முன்னுதாரணமாக செயற்படுவார்களாயின், தான் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை குறைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதனால், தமது அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு முன்னுதாரணமாக செயற்பட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு முடியும் என நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அவ்வாறு செய்யும் பட்சத்தில் தானும் பதவி விலக தயார் என அவர் கூறுகின்றார்.ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னுதாரணமாக செயற்படுமானால், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தான் முன்னுதாரணமாக பதவி விலகுவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்