உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“இனியும் ராஜபக்ஷக்களிடத்தில் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது .” – இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு !

“இனியும் ராஜபக்ஷக்களிடத்தில் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது .” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக சாடியுள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வினை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பிலும்ரூபவ் அடுத்து வரும் காலத்தில் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் குறித்தும் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையினால் தான் போர் இடம்பெற்றது என்பதை ஜனாதிபதி மறந்து விடக்கூடாது. போரின் காரணமாகவும் அக்காலத்தில் இடம்பெற்ற ஆயுதக் கொள்வனவுகளில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் காரணமாகவுமே நாடு மீள முடியாத பொருளாதார வீழ்க்குள் சென்றுள்ளது.

செல்வநாயகம் போன்ற தலைவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனக் குழுமத்தினரும் சமத்துவமாகவே விரும்பினார்கள். அதற்கான ஒப்பந்தத்தையும் செய்தார். ஆனால் அவர் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டு தென்னிலங்கை பெரும்பான்மைத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டார்கள்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு பதிலாக அதனை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கினார்கள்.

இதன், விளைவாக இளைஞர்கள் ஆயுதங்களை கையிலெடுத்து தனிநாடு கோரி போராடினார்கள். இந்த ஆயுதப்போராட்டம் 2009ஆம் ஆண்டு வரையில் நீடித்தது. அந்த ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு தற்போது 12ஆண்டுகள் கடந்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக் கோரிக்கையை நாம் அழுத்தமாக முன்வைத்து வருகின்றோம்.

இவற்றையெல்லாம் மறந்து விட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டில் இனப்பிரச்சினை இல்லாதது போல் கருத்துக்களை வெளியிடுகின்றார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் கருதுவது அவருடைய உரையில் மிகத் தெளிவாக உள்ளது.

அவ்விதமாக அவர் கருவாராக இருந்தால் அது அவர் காணும் பகற்கனவாகும். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாது வேறு எந்த விடயங்களிலும் நிரந்தரமான தீர்வினை அடைய முடியாது. இது ஜனாதிபதிக்கு புரியவில்லை. அவர், தான் பெரும்பான்மை மக்களினதும்,  கடும்போக்கு பௌத்த தலைவர்களினதும் ஆதரவோடு ஆட்சிப் பீடம் ஏறியவர் என்பதால் அவர்களை மட்டும் திருப்திப் படுத்தினால் போதும் என்று கருதுகின்றார். அவர் அதனை பல இடங்களில் வெளிப்படுத்தியும் உள்ளார்.

ஆனால் அவர் ஒரு விடயத்தினை நினைவில் கொள்ள வேண்டும். அவர்(கோட்டாபய) உட்பட அவருடைய சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா, பிரேமதாஸ, என்று அனைத்து தலைவர்களும் தேசிய இனப்பிரச்சினை காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

அதனால், அவர்கள் உள்ளுரிலும் சர்வதேச அரங்குகளிலும் சர்வதேச நாடுகளிலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள். அவ்வாறிருக்கையில் ஜனாதிபதியாக இருக்கும் கோட்டாபய திடீரென்று விழித்தெழுந்தவர் போன்று எவ்வாறு இனப்பிரச்சினையே இல்லை என்று கூற முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ராஜபக்ஷக்கள் மீண்டும் பதவிக்கு வந்ததன் பின்னர் அவர்களின் போக்கு நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. இனியும் இவர்களிடத்தில் நீதி, நியாயம் ஆகியவற்றை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கப்போவதுமில்லை.

ஆகவே, தமிழ் மக்களின் ஆணைபெற்றவர்கள் என்ற அடிப்படையில் உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டினை நாம் கோருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டோம். சர்வதேச நாடுகள், அமைப்புக்கள், அனைத்தினதும் கவனத்திற்கு இந்த விடயத்தினை நகர்த்தவுள்ளோம்.

தற்போதைய நிலையில் நாடு பொருளாதார நிலையில் மீளமுடியாத நிலையில் உள்ளது. இதற்கு காரணம் போர். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கியிருந்தால் இந்த போரே மூண்டிருக்காது. இந்தப் போரினால் பல்வேறு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுக்கான பரிகாரங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை.

இதேநேரம், இந்தப் போருக்காக அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவழித்துள்ளது. இதானால் பொருளாதாரம் மெல்லமெல்ல சரிந்து தற்போது மோசமடைந்துள்ளது. குறிப்பாக போர்க்காலத்தின்போது வரையறைகளின்றி ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அச்சமயத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தினை வெகுவாக தாக்கியுள்ளது.

ஆகவே தேசியப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காது நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. தென்னிலங்கை பெரும்பான்மை மக்களையும்ரூபவ் பௌத்த தேரர்களையும் மையப்படுத்தி தமது விரும்பத்திற்கேற்றவாறாக ஆட்சியை முன் கொண்டு செல்வதானது எதிர்காலத்திற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ஆனால் இதுவரையில் நிறைவேற்றப்பட்ட 46.1 தீர்மானத்தில் எதனையுமே நடைமுறைப்படுத்தாது உள்ளது. இதனை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

“ஆட்சிக்காலத்தை நீட்டித்தால் வீதிக்கு இறங்குவோம்.” – எச்சரிக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி !

“பொதுமக்களின் ஆணையின்றி அரசாங்கம் ஆட்சிக்காலத்தை நீடிக்க முயன்றால் வீதிக்கு இறங்குவோம்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து அதிகாரங்களை பறிப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது எனவும்
பொதுமக்கள் அரசமைப்பின் ஏற்பாடுகள் மூலமாக தங்கள் ஆணையை வழங்குவார்கள் மக்கள்  பிரதிநிதிகள் அதனை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று அல்லது வேறு பொருளாதார சர்வதேச காரணங்களிற்காக ஜனாதிபதியோ – பிரதமரோ ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பில் இல்லை.  சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மாத்திரமே பதவிக்காலத்தை நீடிக்க முடியும். பொதுமக்களிற்கு சேவையற்றுவதற்கு ஏதாவது தரப்பிற்கு விருப்பமிருந்தால் அவர்கள் அடுத்த மூன்று வருடங்கள் அதில் ஈடுபட்ட பின்னர் பொதுமக்களின் புதிய ஆணையைகோரமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் எதிர்க்கட்சிகளின் கருத்து தொடர்பில் அமைச்சர் நாமல்ராஜபக்ச ,

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்சிக்காலத்தை நீடிக்கவேண்டிய அவசியமில்லை. தேர்தலை நடத்தாமல் ஆட்சிக்காலத்தை நீடிக்கும்எண்ணம் எதுவும் ஆளும்கட்சிக்கு இல்லை.  அவ்வாறான திட்டம் எதுவுமில்லை,நாங்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவினதும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினதும் அரசியல் வாழ்க்கையில் தேர்தல்களை ஒத்திவைப்பது அல்லது நீடிப்பது குறித்து நாங்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வருடங்களிற்கும் பொதுமக்களிற்கு நீதியாக நடந்துகொள்ள அரசாங்கம் என்ற முறையில் முயற்சிகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

“எங்கள் காலத்தில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை.” – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலானது குடும்பம்,பங்காளிகளை பாதுகாக்கும் அரசியலன்றி நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் அரசியலாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் இயங்கும் ஐக்கிய இளைஞர் சக்தியின் கேகாலை மாவட்ட மாநாடு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இளைஞர்களை கல்வி,அரசியல்,பொருளாதார,சுகாதார,கலாச்சார, மற்றும் மார்க்க ரீதியாக ஊக்குவிப்பதே ஐக்கிய இளைஞர் சக்தியினுடைய கொள்கையின் நோக்கமாகும். என்னுடைய ஆட்சியின் கீழ் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஆலோசனை சபையை இளைஞர்களை மையமாக கொண்டு ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எவராயினும் நாட்டு மக்களின் பணத்தையோ அல்லது அரச உடைமைகளையோ மோசடி செய்திருப்பின் அவர்களை நிபந்தனைகள் எதுவுமின்றி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கொள்கையாகும். குறித்த பணங்களை பெற்று உடனடியாக மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும்.

தமது வயிற்றையும் பொக்கெட்டுகளையும் நிரப்புவதற்காக அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அது எதிர்கால அரசாங்கத்தின் நிலையான கொள்கை.

அன்று ஜே.ஆர்,பிரேமதாச,லலித், காமினி உள்ளிட்ட அரசியல் செயற்திறன் மிக்க ஞானிகள் அதற்கு முன்பு இருந்த தூர நோக்கற்ற ஏழாண்டு கால ஆட்சியின் ஊடாக படு மோசமாக சீரழிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்புவதற்காக பாரிய புரட்சியை முன்னெடுத்தனர்.  அந்த யாதார்த்தபூர்வமான வேலைத்திட்டத்தை மனதில் நினைத்து, வெறும் வார்த்தைகள்,பொய் வாக்குறுதிகளுக்கு பதிலாக யதார்த்த வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை கட்டியெழுப்பும் எதிர்கால வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கும்.

இந்நாட்டின் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்துகிறேன். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இளைஞர்களுக்காக விசேட கொள்கை பிரகடனம் வெளியிட்டு எதிர்கால இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டத்தை சான்றுப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“புலிகள் இன்னும் உயிர்ப்புடனேயே உள்ளனர். அவர்களின் ஈழக்கொள்கை மாறவில்லை.” – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

“விடுதலைப்புலிகள் இன்னும் உயிர்ப்புடனேயே உள்ளதாகவும் அவர்களுடைய ஈழக்கொள்கை மாறவில்லை” எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றின் போதேயே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பேட்டியில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டம் குறித்த அறிக்கை எவ்வாறானதாக காணப்படும் என்பது குறித்த உங்கள் எதிர்பார்ப்பு என்ன..?  என வினா எழுப்பப்பட்ட போது பதிலளித்த அவர்,

நாங்கள் மனித உரிமைகளை மதிக்கின்றோம் மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்ட போதிலும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. எப்பிஐ 2008 இல் அறிவித்தபடி இலங்கை உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத இயக்கத்தை எதிர்த்துப்போராடியது.

மீறல்கள் – பிரச்சினைகள் இருந்தால் இலங்கை உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் இலங்கை அதற்கு தீர்வை காண்கின்றது. விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர்.

அவர்களது ஆயுதங்கள் தற்போது தற்கொலை குண்டுகளும் ஆட்டிலறிகளும் இல்லை மாறாக பரப்புரை நீதிமன்ற நடவடிகைகள் -பிரச்சாரமே தற்போது அவர்களின் ஆயுதங்கள் . ஆனால் அவர்களின் கொள்கை மாறவில்லை- தமிழீழம் என்ற தனிநாடு.  குறிப்பிடத்தக்க அளவு புலம்பெயர்தமிழர்கள் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை முன்னெடுப்பதால் – வாக்குகளை பெறுவதற்காக அவர்களிற்கு ஆதரவளிக்கும்- தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ளவர்களின் ஆதரவை அவர்களால் பெறமுடிகின்றது. மனித உரிமைகளை சில குழுக்களும் நாடுகளும் துஸ்பிரயோகம் செய்கின்றன என நாங்கள் கருதுகின்றோம் நாங்கள் கொள்கைகளை ஐநாவின் பிரகடனத்தை ஐநாவை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் இலங்கையர்களை விசாரணை செய்வற்கான வெளிநாட்டு பொறிமுறைகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. என தெரிவித்தார்

மேலும் மனித உரிமை ஆணையாளர் தன்னிடம் 120,000 ஆதாரங்கள் உள்ளன என தெரிவிக்கின்றார்.
அந்த ஆதாரங்கள் என்ன? என கேள்வி எழுப்பப்பட்ட போது ,  பதிலளித்த அவர்,

ஆதாரங்கள் என்னவென தெரிவிக்காமல் குற்றம்சாட்டுவது நீதியா? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் 16 உறுப்பினர்களிற்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களை விடுதலை செய்வது குறித்து ஆராய்வதற்கான குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். அதன்பின்னர் பயங்கரவாத தடைச்சட்ட்த்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணாடித் துண்டால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட காதலன் – 19 வயது காதலி கைது !

கடவத்தையில் இளைஞன் ஒருவர் கண்ணாடித் துண்டால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடவத்தை என்ட்ரூஸ் லேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடவத்தையிலுள்ள வாடகை வீடொன்றில் நேற்று (22) காலை ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 20 வயதுடைய கோனஹேன பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. 19 வயதுடைய சந்தேகநபர் கடவத்தை பகுதியில் வைத்து கண்ணாடித் துண்டுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி குறித்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த அறையில் சிறுமியும் அவரது முன்னாள் காதலனும் ஒன்றாக இருந்ததை கண்ணுற்ற தற்போதைய காதலன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் கடவத்தை கோனஹேன பகுதியைச் சேர்ந்த ராஜு மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றிரவு கடவத்தையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் தனது முதல் காதலனைப் பார்த்து மீண்டும் குறித்த பெண் உறவை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இருவரும் அவள் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இதுபற்றி கேள்விப்பட்டதும் கொலை செய்த இளைஞன் அதிகாலை 3 மணியளவில் சிறுமி தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்ததை அடுத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

சிறுமி சிறுவர் புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பி வந்து வாடகை அறையில் தங்கியிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் கொலை இடம்பெற்ற விதம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்த வளி மாசடைதல் !

இலங்கையில்  பலத்த காற்று வீசுவதால் எதிர்பாராத அளவுக்கு வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணம், கொழும்பு,புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி  தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மின்னுற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், மின்பிறப்பாக்கிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாலும் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனால் முகமூடிகள் அணிந்து செல்வது பாதுகாப்பானது என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதேவேளை சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகளும், பிள்ளைகளும் இதுதொடர்பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

“ராஜபக்ஷ அரசு முழுமையாக இலஞ்சத்தால் நிறைந்துள்ளது.” – சஜித் பிரேமதாச

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி இயற்கை உரங்களை பயன்படுத்தி அறுவடை செய்யப்பட்டதா..? என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நிர்ணயித்த விலைக்கு இலங்கையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாது. தொற்றுநோயின் போது பொதுமக்கள் எவ்வாறு சிரமப்பட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கம் பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது.  அரிசி மீதான விலைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது.

தற்போதைய நிர்வாகம் கப்பம் மற்றும் இலஞ்சம் நிறைந்தது. ஆட்சியில் இருக்கும்போது உர மானியம் வழங்குவதாக உறுதியளித்த நிலையில் , அரசாங்கத்தின் தவறான முடிவுகளால் விவசாயிகள் சுமைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

13 ஐ அழிக்க அணிதிரளுங்கள் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டுப்பிரசுரம் !

13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணி திரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டுப்பிரசுரம் விநியோகித்துள்ளது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ம் திருத்தத்திற்குள் முடக்கம் சதி முயற்சியை முடியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்றையதினம் இவ்வாறு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் பணவீக்கம் !

நவம்பரில் 11.1%ஆக இருந்த பணவீக்கமானது டிசம்பரில் 14% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உணவு மற்றும் உணவு அல்லாத வகை பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை உணவுப் பணவீக்கமானது நவம்பரில் 16.9% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 21.5% ஆக அதிகரித்துள்ளது.

மேலும் உணவு அல்லாத பண வீக்கமானது நவம்பரில் 6.2% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 7.6% ஆக அதிகரித்துள்ளது.

உணவு வகைகளில், காய்கறிகள், அரிசி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் மதுபானங்கள், புகையிலை ஆகியவற்றில் இந்த மாதத்தில் காணப்பட்ட விலை அதிகரிப்பு காரணமாக, உணவு அல்லாத வகை பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

“இந்தியா பேச வேண்டியது தமிழர்களிடமே அன்றி சிங்களவர்களிடம் அல்ல.” – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம்

தமிழர் தாயகத்தில் இந்தியாவுக்கு ஏதாவது தேவையென்றால், இந்தியா பேச வேண்டியது தமிழர்களிடமே அன்றி சிங்களவர்களிடம் அல்ல என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்றுடன்(சனிக்கிழமை) 1800 வது நாளை கடந்துள்ளது.

இதனையடுத்து அவர்களால் இன்று ஆர்பாட்டபேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே  இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

“இந்தியா தலைமைப் பாத்திரம் ஏற்று,  ஐ.நா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தினால், தமிழர் தாயகத்தில் கச்சத்தீவு, திருகோணமலை துறைமுகம் மற்றும் பிற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இந்தியாவுக்கு  வழங்குவதற்கு தமிழர்கள் தயாராக உள்ளனர்.

தமிழர் தாயகத்தில் இந்தியாவுக்கு ஏதாவது தேவையென்றால், இந்தியா பேச வேண்டியது தமிழர்களிடமே அன்றி சிங்களவர்களிடம் அல்ல. இந்தியா இலங்கையுடன் பேசினால், இந்தியா இலங்கையுடன் செய்து கொண்ட சொந்த ஒப்பந்தத்தை அது மீறும்.

இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு என்பதையும், ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான அந்தஸ்து நிலுவையில் இருப்பதையும் நாம் அறிவோம். இந்தியாவின் தலைமைத்துவத்தை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அது தனது ஒப்பந்தத்தை இலங்கையில் மீறியது என்பது குறிப்பிடத்தக்கது.

1987 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்த போது, வடகிழக்கு தமிழர்கள் பூர்வீக குடிகள் என்றும், வடகிழக்கு  தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்டு அது தமிழர்களுக்கு சொந்தமானது என்றும் இந்தியாவால்ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வடக்கு கிழக்கில் உள்ள காணிகள்  தமிழர்களுக்கு உரிமையானது, அவர்களது நிலத்தின் மீது அதிகாரம் உள்ளது. உட்பட பல விஷயங்கள் இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியா வாங்கியது. இது இந்தியாவின் உடன்படிக்கையின் தூய்மையான மீறலாகும், வடகிழக்கு பகுதி தமிழர்களுக்கே உரியது என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும்.

இலங்கையுடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடும் முன் இந்தியா தமிழர்களிடம் கேட்டிருக்க வேண்டும். சீனத் தொடர்புகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை புவிசார் அரசியலை விளையாட விரும்புகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தமிழர்களின் அனுமதியின்றி வடக்கு கிழக்கில் எவராலும் காணிகளையோ எண்ணெய் தாங்கிகளையோ கொள்வனவு செய்ய முடியாது.எனத் தெரிவித்துள்ளனர்.