உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஒமிக்ரோன் கொவிட் வைரஸின்அறிகுறிகள் என்ன..?

ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் மாறுபாடு தற்போது உலகின் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதில், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.

வைரஸில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸ் மற்றும் கடுமையான சுகாதார நடைமுறைகளை கடைபிடிப்பது முக்கியம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில்,ஒமிக்ரோன்  கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்ட நபரிடம் காணக்கூடிய முக்கிய எட்டு நோய் அறிகுறிகள் குறித்து வௌிப்படுத்தப்பட்டுள்ளது.

தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், சோர்வு, தும்மல், கீழ் முதுகு வலி, தலைவலி, இரவில் வியர்த்தல் மற்றும் தசைவலி ஆகியவை இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்களே அவதானம் – இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை !

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், குறித்த விடயம் சம்பந்தாக மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய நாணயத்தாள் கிடைத்தால், பாதுகாப்பு அடையாளத்தை ஆராய்ந்து, அதனை தம்வசம் வைத்துக்கொள்ளுமாறும், இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் போது குறித்த நாணயத்தாளை கொண்டு வந்த நபர், அவரது வெளித் தோற்றம், வாகனத்தில் வந்திருந் தால், அது பற்றிய விபரங்கள், நாணயத்தாளின் பெறுமதி, அதன் தொடர் இலக்கம் ஆகியவற்றைக் குறித்து வைத்துக்கொண்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையத் திற்கோ அல்லது குற்றவியல் விசாரணை திணைக்களத் தின் போலி நாணயம் தொடர்பான பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0112422176 மற்றும் 0112326670 இலக்கங் களுடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை, பயன் படுத்துதல் அல்லது அச்சடித்தல் போன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணயத்தாள்களை அச்சடித்து விநியோகிப்பது தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

“தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டூ.” – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரங்கல் !

பேராயர் டெஸ்மண்ட் டுட்டூ அவர்களின் மறைவு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து ‘எல்டர்ஸ்’ குழு வெளியிட்ட அறிக்கைகளை நாம் நன்றியோடு நினைவு கூருகிறோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராயர் டெஸ்மண்ட் டுட்டூ தென்னாபிரிக்காவில் இனவாதத்திற்கு எதிராகவும் உலகில் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் போராடியவர் மட்டுமல்லாது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமாகவும் அயராது உழைத்தவர்.

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றிய அவர் நீதியும் கருணையும் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல: பிரிக்க முடியாத முழுமையின் இரு அங்கங்கள் என்பதைக் காண்பித்தார். இயேசுவின் பிறப்பை உலகம் நினைவு கூரும் இவ்வேளையில் நிகழ்ந்த இவரது மரணம் இதனை திரும்பவும் எமக்கு ஞாபகப்படுத்துகிறது.

இலங்கை தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து ‘எல்டர்ஸ்’ குழு வெளியிட்ட அறிக்கைகளை நாம் நன்றியோடு நினைவு கூருகிறோம். தனது ஒரு புத்தகத்தின் தலைப்பான ‘மன்னிப்பு இன்றி எதிர்காலம் இல்லை’ என்பதை பேராயர் டுடூ வாழ்ந்து காண்பித்தார்.

எமது அனுதாபங்களை தென்னாபிரிக்க மக்களுக்கும் சமாதானத்தையும் சுதந்திரத்தையும் நேசிக்கும் உலக மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையை மீட்க ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மாத்திரமே முடியும்.” – ருவன் விஜேவர்தன

நைஜீரியாவிலிருந்து பெற்ற கடனை மீள செலுத்த முடி யாத நிலைமை ஏற்பட்டால் நாட்டிலுள்ள முக்கிய பகுதி களை நைஜீரியாவிற்கு விற்க வேண்டியேற்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

நைஜீரியாவிலிருந்து கடன் அடிப்படையில் மசகு எண் ணெய்யை இறக்குமதி செய்யவுள்ளதாக ராஜபக்ஷ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நைஜீரியாவிலிருந்து பெற்ற கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் நாட்டிலுள்ள முக்கிய பகுதிகளை நைஜீரியாவிற்கு விற்க வேண்டியேற் படும் என கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

அத்துடன் இந்த நிலைமை தொடர்ந்தால் கடன் பெற்றுக் கொண்ட அனைத்து நாடுகளுக்கும் இலங்கையின் வளங்களைக் கொடுக்க வேண்டிய நிலையே ஏற்படும் என சிறிகொத்தாவில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டில் தற்போது காணப்படும் டொலர் நெருக் கடிக்குத் தீர்வு காண, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மாத்திரமே முடியும் என ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

“திருமணம் என்ற பெயரில் இலங்கைக்குள் ஊடுறுவும் தீவிரவாதிகள்.” – அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வாழ்க்கைத் துணை விசாவில் இங்கு வசிப்பதற்கான அறிக்கைகள் அதிகரித்து வருவதாலேயே வெளிநாட்டுப் பிரஜையை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் என அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது.

இலங்கைப் பிரஜைகள் வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி ஏன் கோரப்பட்டது என சமூக ஊடகங்களில் பெருகிய விமர்சனங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கீதாநாத் காசிலிங்கம், வெளிநாட்டுப் பிரஜைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த சட்டவிரோதச் செயல்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகளும் உள்ளடங்குவதாக பாதுகாப்பு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் ஏழைப் பெண்களே இத்தகைய திருமணங்களுக்கு இலக்காகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுவின் அறிக்கையில்கூட, தீவிரவாதிகள் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க வெளிநாட்டவர்கள் உள்ளூர் மக்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, உள்ளூர்வாசி ஒரு வெளிநாட்டவரைத் திருமணம் செய்ய விரும்பினால், ஒரு பாதுகாப்பு ஆவணத்தை பதிவாளர் ஜெனரல் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் பூஜ்ஜிய குற்றப் பதிவுக்கான அனுமதியைப் பெற பாதுகாப்பிற்கு ஒப்படைப்பார் என்பதோடு, சுகாதாரச் சான்றிதழையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அனுமதி கிடைத்ததும் பதிவாளர் உள்ளூர் தரப்பினருக்குத் தெரிவிப்பார் என்றும் அதன் பின்னர் திருமணம் நடக்கலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நடைமுறை பல நாடுகளில் பின்பற்றப்படுவதோடு, இது தேசிய பாதுகாப்பையும் உள்ளூர் குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும் எனவும் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் தனது ருவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து மீண்டும் ஒரு பெரிய கடன்தொகை இலங்கைக்கு !

சீன மத்திய வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் குறித்த டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த வாரத்துக்குள் குறித்த நிதி இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல கூறியுள்ளார்.

“முஸ்லீம் பெண்களின் நீதிக்காக காதி நீதிமன்றங்களை ஒழியுங்கள்.” – மொஹமட் சுபைர் கோரிக்கை !

காதி நீதிமன்றங்களை ஒழிப்பதற்கு பரிந்துரைக்குமாறு ‘ஒரு நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிடம் முன்னாள் மேல்நீதிமன்ற பதிவாளர் மொஹமட் சுபைர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம் பெண்களுக்கு நீண்டகாலமாக இழைக்கப்படும் அநீதியைக் கருத்திற்கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு – ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணி நேற்று (26) கண்டி மாவட்ட செயலகத்தில் பொதுமக்களின் ஆலோசனைக்காக கூடியது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மேல்நீதிமன்ற முன்னாள் பதிவாளர், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், பலதார திருமணம் மற்றும் மத பிரிவுகளாக பிரிந்து அமைப்புகளை உருவாக்குதல் என்பவற்றை தடை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு.” – மைத்திரிபால சிறிசேன

அரசாங்கம் பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டுமென இலங்கை எதிர்பார்த்தால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவை இலங்கை நாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் மோசமான பொருளாதார தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது.

தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த அவர், தனது பதவிக் காலம் முழுவதும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டுக்கு சாதகமாக அமைய கலந்துரையாடலை முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களுக்கு காரணமான அனைவரையும் தண்டிப்பேன்.” – சஜித் பிரேமதாச சூளுரை !

எதிர்வரும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் , சர்ச்சைக்குரிய எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களுக்கு காரணமான அனைவரையும் தண்டிப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மாறாக பொருளாதார மந்தநிலையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த குற்றங்களுக்கு காரணமானவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் சலுகை விலையில் பொருட்களை வழங்குவதாக பல அரசாங்கம் உறுதியளித்த போதிலும், பெரும்பாலான விற்பனை நிலையங்களில் போதிய கையிருப்பு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சலுகைகளை வழங்குவதற்குப் பதிலாக, பிரச்சினைகளைப் பெருக்கும் அரசாங்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் விஞ்ஞான முறைகள் மூலம் நடைமுறை தீர்வுகள் தேடப்படும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

“அரசாங்கத்தின் வீட்டிலேயே இறப்பது எப்படி என்பதை மக்களுக்கு கற்பிக்க வேண்டி வரும்.” – ராஜித சேனாரத்ன காட்டம் !

உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் போது வீட்டுத்தோட்டத்தில் கவனம் செலுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கமோ அல்லது வர்த்தக அமைச்சரோ ஒரு நாட்டுக்கு தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தமது வீட்டு முற்றத்தில் சொந்தமாக காய்கறிகளை பயிரிடுவதில் கவனம் செலுத்துமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பொது மக்களிடம் விடுத்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிராமப்புற மக்களுக்கு வீடுகளில் காய்கறிகளை வளர்க்கும் திறன் இருந்தாலும், நகர்ப்புற மக்களுக்கு அவ்வாறான வசதிகள் இல்லை. அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமானால், அரசாங்கத்தின் அமைச்சர்கள் வீட்டிலேயே இறப்பது எப்படி என்பதை மக்களுக்கு கற்பிக்க வேண்டியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.