உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

போதைப்பொருள் பாவனை தொடர்பில் அறிவிக்குமாறு மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்!

யுக்திய நடவடிக்கையை மேலும் வெற்றிகரமாக செயற்படுத்தும் வகையில், போதைப்பொருள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும்போது அழைப்பாளரின் அடையாளத்தை அடையாளம் காண முடியாத வகையில் இந்த இலக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் எம்மைப் பிரித்து ஆட்சிசெய்து அவர்களின் பரம்பரைகளுக்காக அனைத்தையும் செய்துகொண்டார்கள் – ஜே.வி.பி குற்றச்சாட்டு!

இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் எம்மைப் பிரித்து ஆட்சிசெய்து அவர்களின் பரம்பரைகளுக்காக அனைத்தையும் செய்துகொண்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

 

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மகளிர் மாநாடு ஹோமாகமையில் அண்மையில் இடம்பெற்றது.

 

இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,

 

இற்றைவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ள சமூக, பொருளாதார, அரசியல் சீரழிவு காரணமாக நாங்கள் அனைவரும் கண்டுகொண்டிருந்த கனவு கலைக்கப்பட்டுள்ளது.

 

நாங்கள் இதுவரை சிறைப்பட்டிருந்த அரசியல் கட்சிகளை மறந்து எமது பிள்ளைகளுக்காக சுதந்திரமாக மூச்செடுக்கக்கூடிய ஒரு நாட்டை சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்காகவும் உருவாக்கிட திடசங்கற்பத்துடன் அணிதிரண்டுள்ளோம்.

 

உலகின் ஏனைய நாடுகள் பெற்றுள்ள கலாசார மற்றும் சமூக சுதந்திரத்தை நிலவுகின்ற ஊழல்மிக்க அரசியல் முறைமையே இழக்கச்செய்துள்ளது.

இந்த கொள்ளைக்கார பொருளாதாரத்தையும் ஊழல்மிக்க அரசியலையும் முடிவுக்கு கொண்டுவந்து முன்நோக்கி நகர நாமனைவரும் யதார்த்தத்தில் அணிதிரண்டிருக்கிறோம்.

 

எனினும் இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் எம்மைப் பிரித்து ஆட்சிசெய்து அவர்களின் பரம்பரைகளுக்காக அனைத்தையும் செய்துகொண்டார்கள்.

 

சம்பிரதாயபூர்வமாக மூதாதையர்களின் மரபுரிமையால் அரசியலில் ஈடுபடுவதற்குப் பதிலாக பெண்களுக்கு உண்மையான வெற்றியை பெற்றுக்கொடுக்கக்கூடிய பெண்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன் தேசிய மக்கள் சக்தியைச்சுற்றி அணிதிரண்டு வருகிறோம்.

 

ஒட்டுமொத்த பெண்கள் தலைமுறையினருக்கும் முன்னணிக்குவர ஊக்கமளித்த, பலம்சேர்த்த, வழிகாட்டிய மற்றும் தலைமைத்துவம் வழங்கிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்பதை நாங்கள் மிகவும் வலியுறுத்திக் கூறுகிறோம்.

 

இதற்கு அப்பால் நாங்கள் எத்தகைய நாட்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும்? அமைதிநிறைந்த, சகவாழ்வுகொண்ட, சுதந்திரமான கலாசாரத்தை உருவாக்குகின்ற ஆட்சியொன்று எமக்கு அவசியமாகி உள்ளது.

 

அதற்குள்ளே பெண்களாகிய எங்களை அநீதிக்கு, அநியாயத்திற்கு, சமத்துவமின்மைக்கும் இழுத்துப்போடுகின்ற அனைத்து நிபந்தனைகளையும் அகற்றி பொருளாதார நியாயத்தைக்கொண்ட கலாசார சுதந்திரத்தை உருவாக்கிகொள்ள வேண்டும்.

 

அத்தகைய ஆட்சியை உருவாக்கிக் கொள்வதற்காக நாங்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறோம்.

 

தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அந்த ஆட்சியை உருவாக்க முடியும். இதுவரை நாங்கள் பயணித்த பாதையில் விரிக்கப்பட்டிருந்த சவால்களை சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன் ஒன்றிணைந்தால் மாத்திரமே வெற்றிகொள்ளமுடியும்.

 

எமது பிள்ளைகளுக்காக தடைகளின்றி முன்னேறிச்செல்லக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குகின்ற பொறுப்பு எமது தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றுசேராத அனைவரையும் எம்மோடு இணையுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்று மேலும் தெரிவித்தார்.

மரதன் ஓட்டப் போட்டியின் போது மாணவர் உயிரிழந்த சம்பவம் – விசாரணைகளை ஆரம்பித்தது கல்வி அமைச்சு !

பாடசாலை மரதன் ஓட்டப் போட்டியின் போது மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

நேற்று (11) திருக்கோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 16 வயதுடைய மாணவன் திடீர் நோய் நிலைமை காரணமாக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.

 

மாணவனின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனை அம்பாறை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

 

எவ்வாறாயினும், வெப்பமான வானிலை காரணமாக வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு கல்வி அமைச்சு அண்மையில் அனைத்து பாடசாலை அதிகாரிகளுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

 

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்தார்.

 

இதேவேளை, மரதன் போன்ற நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு முன்னர் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டுமென விசேட வைத்தியர் சன்ன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 

“இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவேளை, துரதிர்ஷ்டவசமாக, நீரிழப்பு காரணமாகவும் இந்த நிலை ஏற்படலாம். தொலைதூரப் போட்டிகளில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற்று உடல்நிலையை உறுதி செய்து, இல்ல விளையாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்ப வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு இதுபோன்ற நிலை இருந்தால், பெற்றோர்கள் அதைப் பற்றி கருத்திற் கொள்ள வேண்டும். இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு நீரிழப்பு ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே தயார்படுத்த வேண்டும்.”

யாழ்ப்பாணத்தில் 4 லீட்டர் கசிப்புடன் சிறுவன் கைது !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உபட்ட சரசாலை பகுதியில் 4 லீற்றர் 500 மில்லிலீட்டர் கசிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 

குறித்த சிறுவன் கசிப்பை எடுத்து சென்றபோது சாவகச்சேரி பொலிஸால் கைது செய்யப்பட்டார் .

 

மேலதிக விசாரணைகளின் பின்னர் சிறுவன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர் .

33 வருடமாக இராணுவத்தின் பிடியில் காணப்பட்ட காணிகள் மக்களிடம் கையளிப்பு!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நேற்று ஞாயிற்றுக்கிழமை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.

 

அவற்றுள் காங்கேசன்துறை தெற்கு மற்றும் மயிலிட்டி தெற்கு ஆகிய இரு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள காணிகளுக்குள் செல்ல இராணுவத்தினர் இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளனர்.

 

காங்கேசன்துறை தெற்கு 235 கிராம சேவையாளர் பிரிவில் 20.3 ஏக்கர் காணிகளும் , மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) 240 கிராம சேவையாளர் பிரிவில் 24 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

 

அதேவேளை நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட காணிகளில் பெரும்பாலான காணிகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேறாத நிலையில் இன்னமும் ஓரிரு நாட்களில் காணிகளில் இருந்து தாம் வெளியேறிய பின்னர் உங்கள் காணிகளுக்குள் நீங்கள் வர முடியும் என தம்மை இராணுவத்தினர் திருப்பி அனுப்பியதாக சில காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் !

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (11) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

 

இன்று காலை மாவட்ட செயலகத்துக்குச் சென்ற கேப்பாப்பிலவு மக்கள் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி, அரசாங்க அதிபருக்கான மகஜரை கையளித்துள்ளனர்.

 

பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

 

கேப்பாப்பிலவு மக்களின் ஒரு பகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, வைத்தியசாலை, தேவாலயம் உள்ளிட்ட முக்கிய மக்களின் குடியிருப்புக்கள் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு – நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது இன்று திங்கட்கிழமை (11) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடவியல் பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ அவர்கள் அடுத்த தவணையில் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகும் படி கட்டளை ஆக்கப்பட்டிருந்தது.

 

குறித்த வழக்கு தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் வாதிடும் சட்டத்தரணி V.S.நிரஞ்சன் தெரிவிக்கையில்,

 

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

ஏற்கனவே நீதிமன்றத்தினால் கோரப்பட்ட அறிக்கை கடந்த தவணை சட்டவைத்திய அதிகாரி ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்க பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கையில் முழுமையாக எல்லா விடயங்களும் அடங்காத படியால் அது சம்பந்தமாக இன்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வந்திருந்தோம்.

 

அதாவது எடுக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்து அதற்கான வயது, அதன் பால் நிலை ,இறப்புக்கான காரணம் ,தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருப்பதோடு பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 

அதே நேரம் தடவியல் நிபுணத்துவ (SOCO) பொலிஸார் போன்றவர்களாலும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஒட்டு மொத்தமாக எல்லாருடைய அறிக்கைகளும் பெறப்பட்ட பிறகு தான் குறித்த வழக்கு தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

 

இதனை அடுத்து நீதிமன்றமானது சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஷ அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகும் அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதுடன் குறித்த வழக்கு விசாரணை யை மீண்டும் மே மாதம் 13 திகதி அழைப்பதற்காக திகதிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸ் அராஜகத்தை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டம் !

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற பொலிஸ் அராஜகத்தை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பின் பேரில் நல்லை ஆதீனம் முன்பாக இன்று (11) மாலை 4 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இந்த போராட்டத்தில் மதகுருமார், சமயத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

மகா சிவராத்திரி பூஜையின்போது வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வழிபடச் சென்றவர்கள் மீதான பொலிஸாரின் அட்டூழியங்களை கண்டித்தும் கைது செய்தோரை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் இடம்பெற்றது.

பொலிசாரும் , தொல்லியல் திணைக்களமுமே இலங்கையில் இனவாத பிரச்சினைகளை தூண்டுகிறார்கள் -மு. சந்திரகுமார்

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் இனங்களுக்கிடையே இன நல்லிணக்கம் பற்றி சர்வதேச தரப்புக்கள் உட்பட உள்நாட்டிலும் அதிகம் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் துரதிஸ்டவசமாக நாட்டின் தொல்லியல் மற்றும் பொலீஸ் திணை்களங்கள் அவற்றுக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டுவருகின்றமை கவலைக்குரியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். சமத்துவக் கட்சியின் பொது செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

சிவராத்தி தினத்தில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் பொலீஸார் மேற்கொண்டு அடாவடித்தனமான செயற்பாடுகளை கண்டிக்கும் வகையில் அவர் வெளியிட்ட  அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

சிவராத்திரி நிகழ்வு  சைவ மக்களின் மிக  முக்கிய நிகழ்வாகும், இந்த நாளில் மிகவும் பக்தி பூர்வமாக சிவ வழிபாட்டினை மேற்கொள்வதற்காக தங்களது பூர்வீக ஆலயத்திற்கு சென்ற தமிழ் மக்கள் மீதும் அங்கு பூசை வழிபாடுகளி்ல் ஈடுப்பட்டவர்கள் மீதும் பொலீஸார் காட்டுமிராண்டித்தனமாக

நடந்துகொண்டுள்ளனர். பொலீஸாரின்  செயற்பாடுகள் பௌத்த சிங்கள மேலாதிக மனநிலையின் வெளிப்பாடாகவே இருந்தது. புனித தலம் ஒன்றில் சப்பாத்து கால்களுடன் வெறுக்கத்தக்க வகையில் பொலீஸாரின் நடவடிக்கைகள் காணப்பட்டன.

நாட்டு மக்களிடையே  இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சட்டத்தின் வழி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடப்பாடுடைய பொலீஸ் திணைக்களம்  தமிழ் மக்கள் விடயத்தில் அதற்கு மாறாக செயற்படுகிறது. இலங்கையை பொறுத்தவரை பொலீஸ் மற்றும் தொல்லியல் திணைக்களங்கள் இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றன.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும். வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் நடந்து சம்பவங்கள் போன்று இனியொரு சம்பவம் இடம்பெறாத  நிலை உருவாக்கப்படல் வேண்டும்.அரச நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் சந்திரகுமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றியதில் சதித்திட்டம் எதுவுமில்லை – அரகலய செயற்பாட்டாளர் வசந்த முதலிகே

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றியதில் சதித்திட்டம் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள அரகலய என்ற காலிமுகத்திடல் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, பொதுமக்களே அவரை வீட்டுக்கு அனுப்பினர் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு மக்களுக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, “என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

குறித்த நூலில் தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான அரசியல் காரணங்களை விளக்கியுள்ளார். அதில் “2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்றதில் இருந்து வெளிநாட்டுத் தலையீடுகள் இலங்கையின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

2019 நவம்பரில் நான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து, சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் இருந்துள்ளன.

மேலும், இந்த நாடு சுதந்திரமடைந்த முதல் அறுபது வருடங்களில் ஒருபோதும் அனுபவித்திராத வகையில் வெளிநாட்டுத் தலையீடும், உள்ளக அரசியலின் சூழ்ச்சியும் இன்று இலங்கையின் வாழ்க்கையில் கலந்துள்ளது“ என்று கோட்டாபய தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளை தமிழர்களும் – முஸ்லீம்களும் தனக்கு எதிரான சதியை செய்ததாக கோட்டாபாய ராஜபக்ச தனது நூலில் குறிப்பிட்டுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் ‘அரகலய’ போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் மாறாக சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் மக்கள் பேரவையின் செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.