நேர்காணல்கள்

நேர்காணல்கள்

குகநாதன் கைது – கடத்தலில் அருள் சகோதரர்களுடன் கைகோர்த்த தமிழ்தேசியம் – டான் ரிவி உரிமையாளர் குகநாதன் கடத்தல் – கைது விவகாரம் : த ஜெயபாலன்

குகநாதன் கைது – கடத்தல் விவகாரம் அரசியல் பின்னணியுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. தமிழகத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளினது செல்வாக்குடன் எஸ் எஸ் குகநாதனை தடுத்து வைத்து அவரிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டு உள்ளது. இக்கைது கடத்தல் நாடகத்தில் வை கோ வினதும் நெடுமாறனினதும் நெருக்கமான சட்டத்தரணிகள் ஈடுபட்டு இருந்துள்ளனர். அருள் சகோதரர்களின் ஊரவரும் நண்பரும் பல்லாயிரம் ஈரோக்கள் காணமல் போய்விட்டது என்று கணக்குக் காட்டியவருமான கஸ்பாரும் இச்சம்பவத்தடன் தொடர்புபட்டிருந்ததாக எஸ் எஸ் குகநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

குகநாதனை விடுவிக்க 20000 பவுண்ட் (15 லட்சம் இந்திய ரூபாய்) வழங்கப்பட்டது. இலங்கையில் இருந்து உண்டியல் செய்யும் ஒரு வர்த்தகர் மூலம் அனுப்பப்பட்ட பெரும்பகுதி பணத்தை கடன்பட்டு இப்போது செலுத்தி வருவதாக குகநாதன் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

எஸ் எஸ் குகநாதன் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளிலும் பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டு இருந்த போதும் ‘அவரின் குடும்பத்தாரிடம் அவருடைய குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றவே நிதி இருந்ததில்லை’ என எஸ் எஸ் குகுகநாதனின் நண்பரும் அவருடைய விவகாரத்தை சுமூகமாக தீர்க்க முற்பட்ட ஒருவர் தெரிவித்து இருந்தார். எஸ் எஸ் குகநாதன் மீது பல்வேறு பணப் பரிமாறல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு பணம் புரட்டுகிறார் எனக் கூறப்பட்ட போதும் அவரிடம் பணப் புழக்கம் இருக்கவில்லையென குகநாதனை விடுவிக்க 500 பவுண்களை தனது பங்காக செலுத்திய நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

குகநாதனை விடுவிக்க செலுத்திய இத்தொகையை கட்டி முடிக்க சில ஆண்டுகள் ஆகலாம் என திருமதி குகநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஏற்கனவே ஏற்பட்ட இழப்புகளால் இருக்கும் கடன்சுமையை இது மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தனது வேதனையைத் தெரிவித்தார்.

குகநாதனை விடுவிப்பது தொடர்பாக புலம்பெயர் குழுவில் சென்ற சிலர் தமிழக முதல்வரின் மகள் கனிமொழி உடன் நெருக்கமானவர்கள் மூலம் முயற்சி செய்ததாகவும் தற்போது தெரியவருகிறது. ஆனால் குகநாதன் விவகாரத்திற்கு பின்னால் இருந்தவர்களின் பலத்தை இவர்களால் மேவ முடியாததால் இம்முயற்சி கைவிடப்பட்டது. அதனால் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுவதே பாதுகாப்பானது என இவர்கள் குகநாதனின் மனைவிக்கு தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் இவ்விவகாரம் இலங்கை அரசின் உயர்மட்டத்திற்கு  தெரியப்படுத்தப்பட்டதையடுத்து இலங்கை அரசு டெல்லியில் உள்ள தனது தூதராலயம் ஊடாக அழுத்தங்களை வழங்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் குகநாதன் தங்களிடம் இல்லையென்றே தமிழக பொலிஸில் இருந்து தகவல் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது. அச்சமயத்தில் குகநாதனின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து இருக்கலாம் அல்லது உயிராபத்து நேரலாம் என்ற அச்சம் டெல்லி – கொழும்பு உயர் மட்டங்களில் இருந்துள்ளது.

2008 மார்ச் இறுதிப் பகுதியில் இலங்கைத் திரைப்பட இயக்குநர் துசார பீரிஸ் தமிழத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு பொலிஸாரின் தலையீட்டின் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தெரிந்ததே.

எஸ் எஸ் குகநாதன் விவகாரத்திலும் ‘இலங்கை அரச ஆதரவாளர் ஒருவரைப் பிடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியிலேயே அவர்கள் இருக்கின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. தனிப்பட்ட விடயத்தையும் அரசியலுடன் இணைத்து அதனை நியாயப்படுத்துவதற்கான காரணங்களையும் அருள் சகோதரர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

அவர்களின் உரையாடல்களில் ‘அரச உளவாளியைக் கைதுசெய்துள்ளோம் என்று ஒரு இணையத்தைத் திறந்து விட்டால் புலம்பெயர்ந்த தமிழர்கள் இதிலும் பார்க்க பல லட்சங்களைத் தருவார்கள்’ என்றெல்லாம் உரையாடப்பட்டு உள்ளதாக எஸ் எஸ் குகநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார். ’20 000 பவுண்களை வெஸ்ற்றன் யூனியன் ஊடாக அனுப்புகிறோம். இவனை விட வேண்டாம் என்றெல்லாம் தொலைபேசிகள் வந்தது’ என்றும் எஸ் எஸ் குகநாதன் தெரிவித்தார்.

‘அவர்களிடம் உள்ள விடியோவை அவர்கள் உண்மையானவர்கள் என்றால் வெட்டிக்கொத்தாமல் வெளியில் விட்டால் உண்மைகள் பெரும்பாலும் தானே வெளிவரும்’ என்று தெரிவித்த குகநாதன் தமிழக கொமிஸ்னர் அலுவலகத்திற்கு முன்னுள்ள ஹொட்டலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூம் எடுத்து தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக திருமதி குகநாதனின் ஒலிப்பதிவு ஒன்றை இனியொரு இணையத்தளம் வெளியிட்டு இருந்தது. இதன் ஊடக நியாயம் பற்றி தேசம்நெற் இல் கேள்வி எழுப்பி இருந்தோம். அதற்கு இனியொரு ஆசிரியர் சபாநாவலன் திருமதி குகநாதனின் அனுமதியுடனேயே அதனை வெளியிட்டதாகக் கூறியிருந்தார்.

ஆனால் அதனை திருமதி குகநாதன் முற்றாக மறுத்துள்ளார். தன்னிடம் இனியொரு ஆசிரியர் அவ்வாறு எந்த அனுமதியையும் பெறவில்லை என்றும் இது பதிவு செய்யப்படுவது தெரிந்திருந்தால் தான் அவருடன் பேசியிருக்கவே மாட்டேன் என்றும் தெரிவித்தார். தன்னை நடுஇரவு தூக்கத்தில் எழுப்பி அதனைப் பதிவு செய்து தனது அனுமதியின்றியே அவர் அதனைப் பிரசுரித்து உள்ளதாகவும் திருமதி குகநாதன் குற்றம்சாட்டினார்.

தான் எந்த விவகாரத்திலும் முன்னிலைக்கு வரவிரும்புவதில்லை எனக் குறிப்பிட்ட அவர் இவ்விவகாரத்தில் தன்னையும் தங்களது நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக வேதனைப்பட்டார்.

இச்சம்பவம் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் புலிகள் மீது விமர்சனம் உடையவர்களை தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுள்ள தமிழ் தேசியவாத சக்திகள் தங்கள் சுயலாபங்களுக்கு பயன்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு ஆதரவானவர்களுக்கு எதிராக செயற்படுகிறோம் என்ற அரசியல் மூலம் தமிழக மார்க்ஸிய அமைப்புகளிடையே செல்வாக்குப் பெறவும் இதனைச் சிலர் பயன்படுத்தலாம் என்ற நிலையும் இப்போது ஏற்பட்டு உள்ளது.

._._._._._.

டான் ரிவி உரிமையாளர் குகநாதன் – அருள்சகோதரர்கள்: கடத்தல் – கைது விவகாரம்: ‘இது ஒரு சட்டபூர்வமான கடத்தல்’ எஸ் எஸ் குகநாதன்

Kuganathan_S_S_Dan_TV‘மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி!’ ஏன்று ஆரம்பித்த இனியொரு இணையம் தற்போது டான் தொலைக்காட்சி ஊடக உரிமையாளரும் வர்த்தகருமான எஸ் எஸ் குகநாதன் கைது செய்யப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா?: என்ற விவாதத்திற்கான வெளியாகி நிற்கின்றது. தான் கைது செய்யப்பட்டதாகவும் சொல்ல முடியாது, கடத்தப்பட்டதாகவும் சொல்லிவிட முடியாது. இது கைது பாதி, கடத்தல் பாதி இரண்டும் சேர்ந்து ‘சட்டப்படி கடத்தப்பட்டேன்’ என்று தெரிவிக்கிறார். மேற்படி கைதை அல்லது கடத்தலை முன்னின்று மேற்கொண்ட அருள் சகோதரர்கள் (அருள்செழியன் – அருள்எழிலன்) இது முற்றிலும் சட்டப்படி மேற்கொண்ட நடவடிக்கை என்றும் எஸ் எஸ் குகநாதன் தங்களால் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு பொலிஸாரினால் சட்டப்படி கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக அருள் சகோதரர்கள் சபாநாவலன் ஆகியோரின் பதிவுகளை முழுமையாகக் காண:

“Fake Encounter ரயாகரன்” – எமது சமூகத்தின் புரையோடிப்போன புண்கள் : சபா நாவலன் inioru.com/?p=16707

குகநாதன் – நடந்தது என்ன..? : குகநாதன் – நடந்தது என்ன..? inioru.com/?p=16752

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள்.  எஸ் எஸ் குகநாதனால் குற்றம்சாட்டப்படும் அருள் சகோதரர்களில் ஒருவரான அருள்எழிலன் மற்றும் சபாநாவலன் ஆகியோர் இனியொரு இணையத்தளதின் முக்கியஸ்தர்கள். முன்னையவர் இனியொரு தளத்தின் முக்கிய கட்டுரையாளர். பின்ணையவர் இனியொருவின் ஆசிரியர். இவர் பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட புதிய திசைகள் அமைப்பினதும் முக்கிய உறுப்பினர். சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் பின்னணி காரணமாகவும் பெரும்தொகை (15 லட்சம் இந்திய ரூபாய்கள்) கைமாறப்பட்டு உள்ளதாலும் இவ்விடயம் அரசியல் முக்கியத்துவம் உடையதாகவும் மாறி உள்ளது. மேலும் அருள் சகோதரர்களில் மற்றையவர் அருள்செழியன் தமிழகத்தின் முன்னணி ஊடகங்களில் பணியாற்றியவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தை நேர்காணுவதற்காக லண்டன் வந்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குகநாதன் தனக்குத் தரவேண்டிய வஞ்சகச் சூழ்ச்சியால் ஏமாற்றிய பலலட்சம் ரூபாய்களை அவரிடம் இருந்து பெறவும் அவருக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கவுமே தான் சட்டப்படி குகநாதனைக் கைது செய்யும் சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாக அருள்செழியன் தெரிவித்திருந்தார். இக்கைது விவகாரத்தின் பிரதான கதாநாயகனும் இவர்தான். ‘’வாழ்வின் ஒட்டு மொத்த சேமிப்புகளையும் குகநாதனிடம் இழந்த ஒருவரான அருள்செழியன் அவரது தனிப்பட்ட திட்டங்களினாலும் சட்ட ரீதியான போராட்டங்களினாலும் மட்டுமே குகநாதனைப் பிடித்தார். இதற்கும் வேறு எவர் ஒருவருக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.’’ என்கிறார் அருள்எழிலன்

தன்மீதான இக்குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள குகநாதன் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் அருள்சகோதரர்களின் அரசியல் செல்வாக்கு அதன் மூலமான அதிகார துஸ்பிரயோகம் ஆகியவற்றினைப்  பயன்படுத்தி அந்நிய மண்ணில் தன்னை சட்டப்படி கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கின்றார். இக்கடத்தல் சம்பவம் பற்றி இனியொரு இணையத்தள ஆசிரியர் சபாநாவலன் எழுதிய பதிவு ‘அப்பட்டமான பொய்’ என்றும் தெரிவிக்கின்றார். ‘’குகநாதன் தான் பெருந்தொகையான பணம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஆனால் அதனைக் கொடுப்பதற்கு தன்னிடம் போதிய வசதிகள் இல்லை என்றும் என்னை அவர்களை சமாதானப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்’’ அதனாலேயே தான் இவ்விவகாரத்தில் தலையிடவேண்டி ஏற்பட்டதாக இனியொரு ஆசிரியர் சபாநாவலன் தனது இணையத்தில் பதிவுசெய்து உள்ளார். எதேச்சையாக அருள்எழிலனுக்கு போன் செய்தபோது அவர் குகநாதனிடம் தொலைபேசியைக் கொடுத்து கதைக்கச் சொன்னபோதே இத்தொடர்பு ஏற்பட்டதாகவும் சபாநாவலன் எழுதியுள்ளார்.

ஆனால் எஸ் எஸ் குகநாதனின் வாக்கு மூலம் அதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. சட்டப்படி கடத்தி வைக்கப்பட்ட தன்னிடம் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு தப்பிக்கொள்ளுங்கள் என சபாநாவலன் கூறியதாக எஸ் எஸ் குகநாதன் தெரிவிக்கின்றார். எஸ் எஸ் குகநாதனின் இந்த சட்டப்படியான கடத்தலுடன் சபாநாவலனும் தொடர்புபட்டதாகவும் சட்டப்படி கடத்தியவர்கள் பணத்தைப் பெறுவதற்கு ஏதுவாக பொறுப்பு நிற்கக் கூடியவர்களை சபாநாவலனே முன்மொழிந்ததாகவும் குகநாதன் குற்றம்சாட்டுகின்றார்.

இவ்விவகாரம் இவ்வாறான வாதப் பிரதிவாதத்தில் நிற்க அருள் சகோதரர்கள் இவ்விடயத்தை நாவலாக வெளியிடப் போவதாக அறிவித்தனர். தற்போதே தங்களுக்கு நாவலின் பிரதிகளுக்கான கட்டளைகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிவதாகவும் அறிவித்துள்ளனர். ‘நாவல் ஒன்றுக்கு நான் கருப்பொருளானதில் மகிழ்ச்சியே’ என்று தெரிவித்துள்ள எஸ் எஸ் குகநாதன் அடுத்த ‘புக்கர் பிரைஸிற்கான’ ஆன நாவலாக இது இருந்தால் மேலும் சந்தோசப்படுவேன் என்ற வகையில் கருத்துத் தெரிவித்தார்.

._._._._._.
குகநாதன் – அருள்சகோதரர்கள் : கடத்தல் – கைது விவகாரத்தை அடுத்து குகநாதன் குறிப்பிட்ட சட்டப்படியான கடத்தலுடன் தொடர்புடைய அருள்சகோதரர்கள் சபாநாவலன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை இனியொரு இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக முதற் தடவையாக எஸ் எஸ் குகநாதன் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.

சட்டப்படி கைது செய்யப்பட்ட அல்லது சட்டப்படி கடத்தப்பட்ட எஸ் எஸ் குகநாதன் உடன் நேர்காணல்:

தேசம்: நீங்கள் தமிழ்நாட்டில் சட்டப்படி கைது செய்யப்பட்டீர்களா அல்லது சட்டவிரோதமாக கடத்தப்பட்டீர்களா?

குகநாதன்: அருட்செழியன் என்பவர் கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறிய பொலிசார், சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரது புகார் பிரதியை எனது சட்டத்தரணி கேட்டபோது கூட காட்டத் தயாராக அவர்கள் இருக்கவில்லை. சட்டப்படி கைது செய்திருந்தால் 24 மணி நேரத்தில் என்னை நீதிமன்று ஒன்றில் ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யப்படவில்லை. அதிலிருந்து  நடந்தது என்ன என்பதை புரிந்துகொள்ளலாம். இது ஒரு சட்டபூர்வமான கடத்தல் என்றும் செல்லலாம்.

தேசம்: இச்சம்பவத்தின் பின்னணி என்ன?

குகநாதன்: ரிஆர்ரி தொடங்கிய (1997) காலத்திலிருந்து அருட்செழியன் எமக்காக சென்னையில் பணியாற்றியவர். நான்   ரிஆர்ரியிலிருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் டான் தொலைக்காட்சியை நடாத்திக் கொண்டிருந்தபோதும் எனக்கு சென்னையில் நிகழ்ச்சிகளைப் பெறுவதற்கு உதவியவர். 2003ம் ஆண்டு நாம் 6 தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பித்தபோது வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவாறு எமக்கும் பணியாற்றினார். அவ்வாறு பணியாற்றிய காலத்தில் எம்மிடமிருந்து அவருக்கு இந்திய ரூபாய் 55 லட்சம் செலுத்தப்பட்டது. அதிலிருந்து அவர் எமக்கான சேவையை செய்து கொண்டிருந்தார். 18 மாதங்களின் பின்னர் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வெளியேற வேண்டியேற்பட்டது. இதனையடுத்து எமக்கு சொந்தமான உபகரணங்களை நான் புதிதாக நியமித்தவரிடம் கொடுக்குமாறு கேட்டபோது அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார். அதனையடுத்து அந்த உபகரணங்களை அவரிடமிருந்து சட்டபூர்வமாகப் பெறுவதற்காக நான் அண்ணா சக்தி என்ற ஒருபத்திரிகையாளருக்கு அட்டோனி பவர் கொடுத்தேன். அவர் பொலிசில் இதுகுறித்து முறைப்பாடு செய்ததன்பேரில் அவர் அனைத்து உபகரணங்களையும் 3 லட்சம் ரூபா பணத்தினையும் அவரிடம் வழங்கியிருந்தார். இவை நடைபெற்றது 2005ம் ஆண்டில். அண்ணா சக்தி என்ற அந்தப் பத்திரிகையாளரைக் கூட எனக்கு அறிமுகம்செய்து வைத்தவர் வேறுயாருமல்ல, அருட்செழியனால் எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட அவரது நெருங்கிய உறவினரான ஒரு சட்டத்தரணிதான்.

இப்போது அவர் வழங்கியதாகக் குறிப்பிடப்படும் புகாரில், நான் அவருக்கு வழங்கிய 55 லட்சம் ரூபாவும் எனக்கு செலவிடப்பட்டதாகவும், அதனுடன் மேலதிகமாக 6 லட்சம் ரூபாவை தான் தனது சொந்தப்பணத்தில் செலவிட்டதாகவும், அதுதவிர தனக்கு 18 மாதம் சம்பளம் தரப்படவில்லை என்றும் தனக்கு மாதம் 50 ஆயிரம் சம்பளமாக நான் தருவதாக கூறியதாகவும் அதன்படி 9 லட்சம் சம்பளம் தரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாக பொலிசார் என்னிடம் தெரிவித்தனர். அண்ணா சக்தி என்பவர் பொலிசாரின் துணையுடன் தன்னை கட்டப்பஞ்சாயத்து நடத்தியே தன்னிடமிருந்து பணத்தையும் உபகரணங்களையும் பெற்றுக்கொண்டதாகவும் அவர் அந்தப் புகாரில் தெரிவித்ததாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.

சில ஆயிரம் ரூபாக்கள் சம்பளத்தில் ஏற்கனவே வேறு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே எனக்கும் பணியாற்றிய அருட்செழியன் என்னிடம் எவ்வாறு 50 ஆயிரம் சம்பளம் கேட்டார் என்பது மற்றுமொரு தனிக்கதை. அவர் லண்டன் வர விரும்பியபோது, அவர் விசா பெறுவதற்காக அவர் எமது நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் அவருக்கு 50 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதனையே அவர் பொலிசாரிடம் கொடுத்து 9 லட்சம் ரூபா சம்பளம் கோரியிருந்தார்.
தனக்கு 15 லட்சம் ரூபா நான் தரவேண்டும் என்பதும் ஆனால் சமாதானமாக பேசுவதென்றால் 25 லட்சம் தரவேண்டும் என்றும் அவர் பேரம்பேசத் தொடங்கினார்.

தேசம்: இச்சம்பவம் எப்போது நடந்தது? எப்படி முடிவுக்கு வந்தது?

குகநாதன்: ஆகஸ்ட் 2ம் திகதி பிற்பகல் 3 மணியளவில் பொலிசார் என்னை அழைத்துச் சென்றனர். 3ம் திகதி இரவு 10 மணியளவில் வீடுசெல்ல அனுமதித்தனர். 5ம் திகதி கொழும்பு திரும்பினேன். அவர் நான் தரவேண்டும் என்று கூறியிருந்த 15 லட்சம் ரூபா வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை (மன்னிக்கவும் கைது அல்ல கடத்தல் விவகாரம்) முடிவுக்கு வந்தது.

தேசம்:அருள்செழியன் நீங்கள் தன்னை வஞ்சகமாக ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டி உள்ளார்? இதன் பின்னணி என்ன?

குகநாதன்: வஞ்சகம் என்பதற்கு தமிழ்நாட்டில் என்ன அர்த்தம் என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதனால் நான் அவரை வஞ்சகமாக ஏமாற்றியதாகவே வைத்துக்கொள்வோம். அப்படி நான் அவரை ஏமாற்றியிருந்தால், அவர் இது தொடர்பாக 2005 முதல் 2006 கடைசிவரை சென்னையில் அசோக் நகரில் அலுவலகத்தை வைத்து நான் அங்கேயே தங்கியிருந்து டான் தொலைக்காட்சியை நடாத்திய காலத்தில் அவர் ஏன் என்மீது இந்தப் புகாரைத் தெரிவிக்கவில்லை. அல்லது தெரிவித்திருந்தால் பொலிசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 5 வருடங்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம். நான் வஞ்சகம் செய்தது 5 வருடங்களின் பின்னர் தான் அவருக்கு தெரியவந்ததா?.

தேசம்: உங்களை சுவாரஸ்யமான நாடகம் ஒன்றை அரங்கேற்றி உங்கள் செலவிலேயே சென்னைக்கு வரவழைத்ததாகக் அருள்செழியன் குறிப்பிடுகின்றார்?

குகநாதன்: சென்னைக்கு நான் சென்றிருந்தது எனது சொந்த விடயமாக. நான் இப்போது மட்டுமல்ல, இந்த வருடத்தில் மாத்திரம் 6 தடவைகள் சென்னை சென்று வந்திருக்கின்றேன். அவர் என்ன நாடகம் நடத்தினார் என்பது எனக்கு தெரியவில்லை. நான் சென்னை செல்வது எனது செலவிலேயே தவிர வேறு யாருடையை செலவிலும் அல்ல.

தேசம்: இச்சம்பவத்தை நாவலாக எழுதவுள்ளதாக அருள்செழியன் தெரிவித்துள்ளார்?

குகநாதன்: நாவல் ஒன்றுக்கு நான் கருப்பொருளானதில் மகிழ்ச்சியே.

தேசம்: ”அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன் என்னிடம் உதவி கேட்பதற்கு எந்தத் தார்மீக நியாயமும் இல்லை” என சபாநாவலன் எழுதியுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கும் சபாநாவலனிற்கும் என்ன சம்பந்தம்?

குகநாதன்: எனக்கு அருட்செழியனைவிட சபா நாவலனின் எழுத்து மீதே வெறுப்பு ஏற்படுகின்றது. அவர் தனது இனியொரு இணையத்தளத்தில் எழுதியிருப்பது அப்பட்டமான பொய். நான் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சில நிமிடங்களில் அருள்செழியனின் சகோதரர் அருள்எழிலன் தனது தொலைபேசியை என்னிடம் கொண்டுவந்து தந்தார். எனக்கு தெரிந்த ஒருவர் பேசவேண்டுமாம் என்றே அவர் தனது கைத் தொலைபேசியை என்னிடம் தந்தார். நான் ஹலோ என்றதும் அவர் தன்னை சபா நாவலன் என்று அறிமுகம் செய்துகொண்டார். (அது சபா நாவலன் தானா அல்லது வேறுயாருமா என்பது கூட எனக்கு தெரியாது. ஏனெனில் அதற்கு முன்னர் அவர் குரலை நான் அறிந்திருக்கவில்லை) அப்போது நான் அவரை அறிந்திருக்கின்றேன் ஆனால் நேரில் கண்டதில்லை என்று ஆரம்பித்ததும், அவர் கூறியது இதுதான்:

‘அரசாங்கத்தின் ஆதரவாளர் ஒருவரை கைதுசெய்துவிட்டோம் என்றுதான் அவரது (செழியனின்) சட்டத்தரணிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகின்றது. நீங்கள் ஏதாவது கொடுத்துவிட்டு தப்பிக்கப் பாருங்கள்”.

எனக்கு முன் பின் தெரியாத ஒருவரிடம் எதுவும் விவாதிக்கவோ அல்லது கருத்துக்கூறவோ அப்போது முடியாததால், ‘நானும் அப்படித்தான் யோசிக்கின்றேன்” என்று அவரிடம் பதிலளித்தேன்.

பின்னர் அவர், ‘பாரிசில் சுபாசிடம் கதைத்தீர்களா?” என்று கேட்டார். எனக்கு சுபாசை தெரிந்திருந்தாலும் அவரிடம் அப்போது கதைக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.

நான் கதைக்கவில்லை. உதயகுமாருடன்  மட்டுமே நான் பேசியதாக நான் கூறியபோது, அவராகவே சுபாஸ் பொறுப்பு நின்றால் நான் அவர்களிடம் சொல்கின்றேன் என்றார். நான் அதற்கு தேவைப்பட்டால் கேட்கின்றேன் என்று கூறிவிட்டு தொலைபேசியை எழிலனிடம் கொடுத்துவிட்டேன்.

இப்படி நடக்கவில்லை என்றால், நான் சொல்வது பொய்யா அல்லது சபா நாவலன் சொல்வது பொய்யா என்பதை அருட்செழியனிடமுள்ள வீடியோ வெளிவருகின்றபோது தெரிந்துகொள்ளலாம்.

குகநாதன் அவரிடம் உதவி கேட்பதற்கு தார்மீக உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குகநாதன் கேட்காமலே உதவுவதற்கு சபா நாவலன் முன்வந்தார் என்பதை நிரூபிக்க சட்டப்படி கடத்தப்பட்ட என்னிடம் எதுவும் இல்லை.

என்னுடன் இவ்வாறு பேசியவர், அப்போது அங்கே இருந்த இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளரும், டான் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியுமான திரு. சல்தான் அவர்களிடமும் பேசியதாக பின்னர் அறிந்துகொண்டேன். அவருக்கு அவர் கூறியது இதுதான்:
‘நீங்கள் தான் மகிந்த அரசு எல்லாம் நல்லாக செய்கிறது என்று கூறுகின்றீர்களே ராஜபக்சவிடம் வாங்கிக் கொடுக்கலாம் தானே.”

அருள்செழியன் கேட்பது நியாயமானதுதானா? என்பதை அறியாமல் அவருக்கு பணத்தைக் கொடுங்கள் என்று சொல்வதற்கு சபா நாவலனுக்கு எந்த அருகதையும் இல்லை. 

தேசம்: ”குகநாதனிடம் அவர் இலங்கை அரசின் ஊதுகுழல் என்பதால் இச் சம்பவத்தில் தலையிட விரும்பவில்லை என்பதைக் கூறியிருந்தேன். இலங்கை அரசின் பாசிசத்திற்கு எதிராக எழுதும் நான் இலங்கை செல்ல முற்பட்டால் குகநாதன் இன் வாக்குமூலங்களோடு இலங்கை அரச படைகள் என்னைக் கைது செய்யலாம்.” என சபாநாவலன் குற்றம்சாட்டுகிறார். இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்டு உள்ள அனைவருமே ஏதோ ஒருவகையில் ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள். அப்படி இருக்கையில் இவ்வாறான ஒரு மோசமான சூழல் தேவையானதா?

குகநாதன்: அருள்செழியனின் என்மீதான புகார் தவறானது என்பதை நான் நிரூபிப்பது பெரிய விடயமல்ல. ஆனால் நான் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வதெனில் பொலிசார் என்னை நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும். அப்படி ஆஜர்படுத்தினால் நீதிமன்றம் எனது பாஸ்போட்டை தன்வசப்படுத்தும், நான் பிணையில் வந்தாலும் அந்த வழக்கு முடியும்வரை இந்தியாவில் நின்றிருக்க வேண்டி வரும். இவற்றைத் தவிர்க்குமாறு எனக்கு வேண்டிய சிலர் ஆலோசனை கூறினார்கள். நான் ஒரு வாரம் இந்தியாவில் நின்றிருந்தாலும் கொழும்பில் எனது நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டுவிடும். அதனால் அவர் கோரிய பணத்தை கொடுத்துவிட்டு பிரச்னையிலிருந்து விடுபடுவது என்று முடிவெடுத்தேன்.

அருள்செழியன் கோரிய 15 லட்சம் ரூபாவையும் ஒரேநாளில் செலுத்துவது சிரமமானதாக இருந்ததால், உடனே 10 லட்சமும் மிகுதி 5 லட்சத்தையும் ஒருமாதத்தில் செலுத்துவதாகவும் முடிவானது. அந்த 5 லட்சத்தை ஒரு மாதத்தில் பெறுவதற்கு யாரேனும் ஒருவரை ஐரோப்பாவில் பொறுப்பு நிற்கச் சொல்லுங்கள் என்று அவர்கள் கேட்டபோது, முதல்நாள் சபா நாவலன் கூறியது எனது ஞாபகத்திற்கு வந்தது. இதனால் மனைவியிடம் கூறி முதலில் சுபாஸ் பொறுப்பு நிற்பாரா என்று கேட்கச் சொன்னேன். (ஏனெனில் என்னுடன் தொலைபேசியில் எனது மனைவி மட்டுமே கதைக்க அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரெஞ்சு பொலிசார் மட்டுமன்றி பிரான்ஸ் லியொன் நகரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இன்ரர்போல் பொலிசார் கூட என்னுடன் கதைக்க சென்னை பொலிசார் அனுமதி வழங்கவில்லை.). தான் பொறுப்பு நின்றால் சபா நாவலன் பொறுப்பு நிற்பார் என்றால் அதற்கு நான் தயார் என்று சுபாஸ் கூறியதும் சபா நாவலனிடம் எனது மனைவி தொடர்புகொண்டார்.

மறுநாள் 10 லட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து மிகுதி பற்றி கதைத்தபோது சபா நாவலன் தான் பொறுப்புநிற்க மறுத்துவிட்டதாகவும், பிரான்சிலிருந்து அசோக் பொறுப்பு நின்றால் தங்களுக்கு சரி என்றும் அவர்கள் கூறினார்கள்.

குகநாதனுக்கு பிரான்சில் எப்படி செல்வாக்கு இருக்கிறது என்று பார்ப்போம். எங்கே அசோக்கிடம் கதைத்து அவரை எமக்கு கதைக்கச் சொல்லுங்கள் என்றார்கள்.

அசோக் இது போன்ற விடயங்களுக்கு பொறுப்புக்கு நிற்கமாட்டார் என்பதை அவர்கள் மட்டுமல்ல, நானும் நன்றாக அறிவேன். இருந்தாலும் கேட்டுப்பார்ப்பதில் தவறில்லை என்பதால் மனைவியிடம் அசோக்கிடம் கதைக்குமாறு கூறினேன்.

ஆச்சரியமாக இருந்தது. கூடவே மகிழ்ச்சியாகவும் இருந்தது. அசோக் தான் உடனே எழிலனுடன் கதைப்பதாக கூறினார்.

அப்போது எழிலன் அங்கிருக்கவில்லை. சில நிமிடங்களில் அருள்செழியனுடன் தொடர்புகொண்ட எழிலன், அசோக்கிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் தன்னை இந்த விடயத்திற்குள் இழுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்து விட்டதாக எழிலன் கூறியதாக செழியன் கூறினார்.

ஆனால் அசோக் எம்மிடம் கூறியது, தான் தொலைபேசி எடுத்ததும் எழிலன் தன்னிடம் கூறினாராம், இந்த விடயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று. எழிலன் பொய் கூறினார் என்றே நான் நிச்சயமாக நம்புகின்றேன்.

தேசம்: இச்சம்பவத்தினுடைய பின்னணியில் அரசியல் செல்வாக்கு அல்லது அதிகார துஸ்பிரயோகம் என்பன பயன்படுத்தப்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா?

குகநாதன்: நிச்சயமாக. அதுகுறித்து நேரம் வரும்போது பேசுவேன்.

தேசம்: நீங்கள் கடத்தப்பட்ட சூழலில் அல்லது கைது செய்யப்பட்ட சூழலில் உளவியல் ரீதியாகவோ உடலியல் ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டீர்களா?

குகநாதன்: உடல்ரீதியாக அல்ல. ஆனால் உள ரீதியாக.

அப்போது எனக்கு ஞாபகம் வந்ததெல்லாம், முதன்முதலில் அருள்செழியனை ஐரோப்பா அழைத்துவந்தபோது காரில் பிரான்சிலிருந்து ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது விரைவு பாதையில் உள்ள தரிப்பிடம் ஒன்றில் தரித்து நின்றபோது அவர், என் முன்னே மண்டியிட்டு ‘’அண்ணே….. இப்படியெல்லாம் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்திருந்தவனல்ல. இவற்றைக் காட்டிய உங்களை……’’ என்று இவர் மனமுருகிய காட்சி தான் எனக்கு ஞாபகம் வந்தது.

நான் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதும் பொலிசார் முதல்முதலில் செய்தது பத்திரிகைக்கு செய்தி எழுதியதுதான். நான் மண்டியிட்டு மன்றாடியதாக அருட்செழியன் ஒரு தளத்தில் எழுதியிருக்கிறார். கூடவே தன்னிடம் வீடியோ பதிவும் இருக்கிறது என்கிறார். அதனை பார்க்க நான் ஆவலாக இருக்கின்றேன். நண்பர்கள் சிலர் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுங்கள் என்று ஆலோசனை கூறியிருக்காவிட்டால் நிச்சயமாக சட்டரீதியாகவே எதிர்கொண்டிருப்பேன். அப்படியிருக்கையில் மன்றாட வேண்டிய தேவை எனக்கு இல்லை.

சம்பவம் நடைபெறுவதற்கு முன்னரும் பின்னரும் யார் யாரெல்லாம் செழியன், எழிலன் ஆகியோரின் கைத் தொலைபேசிகளுக்கு கதைத்தார்கள் என்ற விபரமும் தற்போது என்னிடம் இருக்கின்றது. இதுபற்றி பின்னர் எழுதுவேன்.

._._._._._.

குகநாதன் – அருள்சகோதரர்கள் : கடத்தல் – கைது விவகாரம் தொடர்பில் சில குறிப்புகள்

1. இச்சம்பவம் முற்றிலும் அருள்செழியன் – எஸ் எஸ் குகநாதன் சம்பந்தப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயம். இவர்களில் எவரும் புரட்சிகரமான நிறுவனங்களுக்கு பணிபுரிந்தவர்கள் அல்ல. இருவருமே ஒன்றாக இணைந்து வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர்கள். தற்போது அது தொடர்பான சர்ச்சையில் இறங்கி உள்ளனர். இவர்கள் ஆளுக்கு ஆள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டவரம்பிற்கு உள்ளேயே தீர்க்கப்பட வேண்டும்.

2. ‘மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி!’ என்ற இலக்கு நோக்கிச் செயற்படும் இனியொரு இணையம், புதிய திசைகள் அமைப்பு (அவர்களும் ஒரு இணையத்தை குரல்வெப் என்ற பெயரில் செயற்படுத்துகின்றனர். சன்றைஸில் வானொலி நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துகின்றனர்.) இச்சம்பவத்துடன் எவ்வித தொடர்பும் அற்றதாக இருந்திருந்தால் இவ்விடயத்தை உடனடியாக வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் இச்சம்பவம் இடம்பெற்றது ஓகஸ்ட்  02 2010ல். இச்சம்பவத்தை தமிழ்அரங்கம் வெளிக்கொண்டுவந்தது சரியாக ஒரு மாதத்தின் பின்னர் செப்ரம்பர் 02 2010ல். நிர்ப்பந்தத்தின் பெயரில் இனியொரு ஆசிரியர் சபாநாவலன் பதில் எழுதியது செப்ரம்பர் 08 2010ல். ஒரு வகையில் தமிழ் அரங்கம் இந்நிகழ்வை வெளிக்கொணராது இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றதோ பணப் பரிமாற்றம் இடம்பெற்றதோ வெளியே வந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் தமிழரங்கம் 6000 மைல்களுக்கு அப்பால் நடந்த ஒரு சம்பவத்தை சரியான முறையிலோ அல்லது தவறான முறையிலோ வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்தியப் பொலிஸ்சுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்!

இலங்கையில் இருந்து ஐரோப்பாவரை ஒளிபரப்பாகின்ற ஒரு தொலைக்காட்சியின் உரிமையாளர் தமிழ்நாட்டில் சட்டப்படி கைது செய்யப்பட்டமை மிக முக்கியமான செய்தி. அது இருட்டடிப்புச் செய்யப்பட்டதன் நோக்கம் கேள்விக்குரியது.

3. இச்செய்தியை இருட்டடிப்புச் செய்ததுமல்லாமல் இச்செய்தி வெளியே வந்ததும் அதுவரை மௌனம் காத்த இனியொரு இணையத்தளம் ‘’ அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன்’’ என்றும்  ‘’குகநாதன் போன்ற இலங்கை அரச ஊதுகுழல்’’ என்றும் குற்றம்சாட்டுகிறது. இது ஏதோ ஒருவகையில் அருள்சகோதரர்களின் செயலை நியாயப்படுத்த முயற்சித்து இருப்பதையே காட்டிநிற்கின்றது. வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவருக்கு இடையேயான பிரச்சினையில் அரசியல் தூய்மைவாதம் பேசுகின்ற நாவலன் ஒருபக்கம்சார்ந்து நிற்பது அவர்களுக்கு இருந்த நலன்களின் முரணையே காட்டி நிற்கின்றது. இது நாவலன் இச்சம்பவத்தில் தொடர்பட்டு இருந்தார் என்ற சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றது.

4. பிரித்தானியாவில் இடம்பெற்ற 20க்கும் மேற்பட்ட தமிழர்களிடையேயான படுகொலைகளில் கணிசமானவை பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பானவை. வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிடையே இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களுக்கு எல்லையே இல்லை. இவற்றுக்கு அரசியல் முலாம்பூசி ஒரு தரப்பின் செயற்பாட்டை அரசியல் மூலம் நியாயப்படுத்துவது  நீண்ட அரசியல் செயற்பாடுகளுக்கு ஆரோக்கியமாக அமையாது.

5. இலங்கையில் விடுதலையின் பெயரில் இயங்கிய விடுதலை இயக்கங்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்து மேற்கொண்ட நடிவடிக்கைகள் இன்னமும் எம்மனக் கண் முன்நிற்கின்றது. விசாரணையின்றியே தண்டனை. தண்டனைக்குப் பின் காரணங்களைத் தேடுவதும் தீர்ப்பு வழங்குவதும். எஸ் எஸ் குகநாதன் மீதான காலம் தாழ்த்திய வருகின்ற குற்றச்சாட்டுக்கள் இதனையே காட்டுகின்றன.

6. இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் பொலிஸ்படைகள் பற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஒரு விவாதத்திற்காக ‘இனியொரு ஆசிரியர் சபாநாவலன் அருள்எழிலனுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றால் தமிகத்தின் பிரபல ஊடகங்களில் பிணியாற்றி செல்வாக்குள்ள அருள்எழிலனுக்கு சபாநாவலனை தமிழகம் வரச்செய்து அவரைக் கைது செய்து பணம்தரும்படி மிரட்டுவது ஒன்றும் கடியமான விடயம் அல்லவே.’ இனியொருவின் கூற்றுப்படி இலங்கை அரசின் ஊதுகுழல் ஊடகம் ஒன்றின் உரிமையாளரை அந்த அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் தமிழக அரசின் பொலிஸ்படையைக் கொண்டு சட்டப்படி கைது செய்து நீதிமன்றம் செல்லாமலேயே 15 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் வாங்கிக் கொண்டு விடமுடியும் என்றால் எதுவும் சாத்தியம் அல்லவா?

7. இங்குள்ள ஆபத்து என்னவென்றால் இது இவ்வாறான செயல்களுக்கு ஒரு முன்ணுதாரணமாக அமைந்து உள்ளது. இலங்கைத் தமிழர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தமிழக காவல்துறையை வைத்து மிரட்டி அவர்களிடம் இருந்து பணத்தைப் பெற முடியும் என்பதனை இச்சம்பவம் நடைமுறையில் நிரூபித்து உள்ளது. ஏற்கனவே இவ்வாறான கசப்பான சம்பவங்கள் சில இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அவ்வாறான சம்பவங்களை நானே செய்தியாக வெளியிட்டும் உள்ளேன். இச்சம்பவம் இவ்வாறானவர்கள் தங்கள் செயல்களை நியாயப்படுத்துவதற்கு வழிகோலி உள்ளது.

8. கைது செய்யப்பட்ட நிலையிலோ அல்லது கடத்தப்பட்ட நிலையிலோ மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் வழங்கும் வாக்குமூலத்தையோ அல்லது அவருடைய துணைவி வழங்கும் வாக்குமூலத்தையோ உண்மையானதாக எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது சாதாரணர்களும் அறிந்த விடயம். அதனால் தான் சட்டத்தை அமுல்படுத்துபவர்களிடம் இருந்து நீதித்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. தன்னை விடுவிப்பது அல்லது தனது துணைவரை விடுவிப்பதே அவருடைய அல்லது அவருடைய துணைவருடைய நோக்கமாக இருக்கும். அதனால் கைது செய்யப்பட்ட அல்லது கடத்தப்பட்ட நிலையில் பதிவு செய்யப்பட்ட விடயங்கள் சுயாதீனமான நிலையில் ஏற்றுக்கொள்ளப்படாதவரை அர்த்தமற்றவை. இருந்தாலும் எஸ் எஸ் குகநாதன் அப்பதிவுகளையும் மாற்றம் செய்யாது வெளியிடும்படி சவால்விட்டுள்ளார்.

9. அருள்சகோதரர்கள் குடும்பத்தினர் எஸ் எஸ் குகநாதனிடம் நிதியை இழந்தது உண்மையா இருந்தால் அவர்கள் குறைந்தபட்சம் நீதிமன்றத்தினூடாகவே அதனைப் பெற முயற்சித்து இருக்க வேண்டும். சமூகப் பொறுப்புடையவர்கள் இவ்வாறான வழிகளில் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது பிறழ்வான சமூகப் போக்கிற்கு முன்னுதாரணமாக அமையும்.

10. ஏற்கனவே எழுந்துள்ள அரசியல் நிலையினால் தமிழகத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான உறவு பலவீனமானதாகவே உள்ளது. இவ்வாறான தனிப்பட்ட சம்பவங்கள் இவ்வுறவை மேலும் மோசமாக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

அறிஞர்களற்ற ஜாதியை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் கட்சி த.தே.கூட்டமைப்பு – பா உ பியசேன

Piyasena_M_MP_TNA தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன மனம்துறந்த தமிழ் சிஎன்என் இணையத்திற்கு வழங்கிய பேட்டி மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.

அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கியதன் பின்னர் தமிழ் சிஎன்என் இணையத்திற்கு  கூறுகையில் இலங்கையில் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு கட்சி என்றால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பே எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கே தான் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் 40 வருடங்களுக்கு முன் மலையகத் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களை தற்போது வடக்கு கிழக்கு மக்கள் அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு பொருட்படுத்ததாமல் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனா ஐக்கிய மக்கள சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாலேயே தான் அரசுடன் .இணைந்துள்ளதாக கூறுகின்றார். அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் அவருக்கு மேலதிக பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

பா உ பியசேன வின் இந்நேர்காணல் அருகில் உள்ள இணைப்பில் கேட்கலாம். அவர் எவ்வித அரசியல் மேல்பூச்சும் இன்றி சாதாரண மக்களின் மொழியிலேயே தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார். http://www.youtube.com/watch?v=Q1htJPT8IBM&feature=player_embedded

._._._._._.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூத்துக்களை வெளிப்படுத்துகின்றார் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன. அரசமைப்புத் திருத்தம் மீதான வாக்கெடுப்பின்போது அரசை ஆதரித்த அவர் அரசை ஏன் ஆதரிக்க வேண்டிய நிலை வந்தது? என்பதை விளக்கினார்.

அவர் தமிழ் சி.என்.என் செய்திப் பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இருந்து முக்கிய விடயங்களை வாசகர்களுக்காக தொகுத்து தருகின்றோம்.

”தந்தை செல்வா செய்த மிகப் பெரிய பிழை தமிழ் தேசிய கூட்டமைப்பை ஸ்தாபித்தமைதான். ஏனெனில் அக்கட்சி சரியான தலைமைகளிடம் பின்னர் கையளிக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலம் காலமாக மக்களை ஏமாற்றி வருகின்றது. மக்களை சரியாக வழிநடாத்திச் செல்கின்றமைக்கான தலைமை கூட்டமைப்பில் இல்லை. உலகின் மிகப் பெரிய பயங்கரவாதக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான்.

தமிழினத்தைப் புதை குழியில் தள்ளிய- தள்ளிக் கொண்டிருக்கின்ற கட்சி இதுதான். இளைஞர்களை உசுப்பு ஏற்றி விட்டதைத் தவிர கூட்டமைப்பு எதைத்தான் செய்தது?

கூட்டமைப்பில் முக்கிய ஒரு பொறுப்பில் நான் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற முன்னரேயே ஜனாதிபதியின் காலில் விழுந்தாவது வன்னி மக்களையும், வே. பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் காப்பாற்றியிருப்பேன்.

ஆனால் கூட்டமைப்பினர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அழிய வேண்டும் என்று விரும்பினார்கள். மக்களையும், போராளிகளையும் அநியாயமாக கொன்று விட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிழையாக வழி நடத்தியவர்களும், புலிகளின் அழிவுக்கு காரணமானவர்களும் இக்கூட்டமைப்பினரே.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய என்னை இவர்கள் ஒருமுறை கூட நாடாளுமன்றில் பேச அனுமதித்தமை கிடையாது.இன்று அம்பாறை மாவட்டத்தில் ஏராளமான விதவைகள், வறியவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்து பார்த்தமையே இல்லை. முதிர்கன்னிகள் மலிந்து போய் விட்டார்கள். வேலை வாய்ப்புக்கள் எதுவும் இங்கு இல்லை.

சில வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் மத மாற்றம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க யாருமில்லை. ஆனால் கூட்டமைப்பினரோ அறிக்கைகளை மாத்திரம் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

வெளிநாடுகளில் விழாக்களில் கலந்து கொள்கின்றார்கள். கட்சியின் பெயர்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஆனால் அவர்கள் கூடிப் பேசும் போது ஆங்கிலத்தில்தான் கதைப்பார்கள். கூட்டமைப்பில் அறிஞர்கள், புத்திஜீவிகள் என்று யாராவது இருக்கின்றார்களா?.சம்பந்தன் ஆயினும் சரிஇ மாவை சேனாதிராசா ஆயினும் சரி, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆயினும் சரி, ஏன் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினராயினும் சரி வேறு ஒரு கட்சியில் வெற்றி பெறட்டும் பார்க்கலாம்.

சிந்தித்து வாக்களிக்க கூடிய வாக்காளர்கள் இல்லாமையால் தொடர்ந்தும் பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். கொழும்பிலிருந்து வெளியாகும் சில பத்திரிகைகள்தான் இவர்களை பெரியவர்கள் ஆக்குகின்றன.

அறிக்கைகளை மாத்திரம் விட்டுக் கொண்டிருக்கின்ற இவர்களால் இவர்களால் ஒரு குண்டூசியைக் கூட தமிழ் மக்களுக்கு கொடுக்க முடியாது. சிங்கள தேசம் தமிழர்களுக்கு நன்மைகளைக் கொடுக்க காத்திருக்கின்றது. ஆனால் பெற்றுக் கொள்ள கூட்டமைப்புத்தான் தயாராக இல்லை.

கூட்டமைப்பினர் வன்னி மக்களை அகதி முகாம்களில் சந்திக்க சென்றபோது ஒரு ரொபி பைக்கெற்றைக் கூட கொண்டு சென்றிருக்கவில்லை. வேண்டும் என்றே பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறாமல் சென்றிருந்தார்கள். தெரிந்துகொண்டே அப்படிச் செய்திருந்தார்கள்.அப்போதுதானே பிரச்சினைகள் வெடிக்கும்.

கூட்டமைப்பின் சிறிதரன் எம்.பி யுத்தத்தால் பாதிக்கக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சைக்கிள்களை கொடுத்து விட்டு போட்டோக்களில் பெரிதாக போஸ் கொடுக்கின்றார். பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் போடுகின்றார்.

பசியில் இருக்கின்றவர்களுக்கு சைக்கிள்களைக் கொடுத்து என்ன பயன்? இன்னமும் மக்கள் இவர்களை தலைவர்களாக எண்ணிக் கொண்டிருக்கின்றமை எனக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது. மக்களின் நிலை கண்டு தினமும் தூக்கமில்லாமல் தவிக்கிறேன். அழுகின்றேன்.

மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்கிற நோக்கோடுதான் அரசை ஆதரிக்கின்றேன். நிச்சயமாக அரசின் அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றமையில் தொடர்ந்தும் பாடுபடுவேன்.”

”துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.” வேலும்மயிலும் மனோகரன் (தவிபு இன் சர்வதேசப் பிரிவின் மூத்த உறுப்பினர்)

மே 18க்குப் பின்னான தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பினுள் பலத்த பிளவுகள் ஏற்பட்டு குழுவாத அரசியல் முன்னெடுக்கப்பட்டது. இப்போது இக்குழுக்கள் இரு பிரதான அணிகளில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளன. ஒன்று உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிக்கின்ற அணி. மற்றையது உருத்திரகுமாரனின் தலைமையை அல்லது நாடுகடந்த தமிழீழத்தை எதிர்க்கின்ற அணி.

நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமைக்கான போட்டியில் உருத்திரகுமாரனுடன் பிரித்தானியாவில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற ஜெயானந்தமூர்த்தியும் போட்டியிட இருந்தார். ஆனால் பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகடந்த தமிழீழ பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினரினதும் ஆதரவைத் தக்க வைத்து தன் வெற்றியை உருத்திரகுமார் உறுதிப்படுத்தியதால் ஜெயானந்தமூர்த்தி போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.

ஆயினும் நாடுகடந்த தமிழீழ அரசை ஜெயானந்தமூர்த்தியின் ஊடாகக் கைப்பற்ற திட்டமிட்ட ஐரோப்பிய அணி தற்போது உருத்திரகுமாரனுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் எதிராக இணைய யுத்தம் ஒன்றைத் தொடுத்துள்ளனர். அதன் வெளிப்பாடாகவே இந்நேர்காணல் ‘தாய்நிலம்’ இணையத்தில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. இப்போதைய காலப் பொருத்தம் கருதி தேசம்நெற் வாசகர்களுக்காக இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது. – நன்றி தாய்நிலம்.
._._._._._.

விடுதலைப் புலிகளின் சர்வ தேசக்கட்டமைப்பின் மூத்த உறுப்பினரான வேலும்மயிலும் மனோகரன் அவர்களுடனான இந்தச் செவ்வி, சமகால அரசியல் நிலவரங்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தனக்கு எதிராக நடத்தப்படும் பொய்ப் பிரச்சாரங்கள் என்பனவற்றினைப் பற்றிய பலதரப்பு கேள்விகளுக்கு பதில் தருகின்றது.
 
அறிமுகம்:

1980களின் ஆரம்பத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினை உருவாக்கியவர்களில் முதன்மையானவராக பிரான்சில் செயற்பட ஆரம்பித்த மனோகரன், 1983ன் பிற்பாடு தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநடத்தலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக இயக்கத்தினால் நியமிக்கப்பட்டார்.

1997ல் இயக்கம் இவரை தனது அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளராக நியமித்தது. இந்தக் காலப்பகுதியில் தாயகத்தில் மிகவும் பாரிய இராணுவ நெருக்கடிகளை இயக்கம் சந்தித்தது. ஜெயசுக்குறுய் இராணுவ நடவடிக்கை சர்வதேச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் பலத்தினை களத்தில் அதிகரிப்பதற்கான மிகப்பெரும் செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பினை புலத்து தமிழ்சமூகம் மத்தியில் இவர் வழங்கினார்.

இயக்கத்தின் சார்பில் சர்வதேச தரப்புக்களுடனான பேச்சுக்கள் பலவற்றின் ஆரம்பகட்டங்களை மனோகரன் அவர்களே தலைமையின் வழிகாட்டலில் நடத்தினார்.

புலம்பெயர்ந்த தமிழர் தரப்புக்குள் இவேர் விட்டுள்ள நச்சு சக்திகள் என்பனவற்றின் நெருக்கடிகளை மீறி பிரான்சில் நாடுகடந்த அரசுக்கான சனநாயக பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட செயற்குழுவுக்குத் தலைமை தாங்கி தேர்தலை நடாத்தி முடித்தார்.

._._._._._.

கேள்வி:  இன்றுள்ள தாயக நிலவரங்களை ஒரு மூத்த இயக்க செயற்பாட்டாளனாக எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்: எமது வரலாற்றில் இதுவொரு சிக்கலான காலகட்டம். ஒருபுறம் மனிதாபிமானப் பிரச்சனைகள், மனிதவுரிமைச் சிக்கல்கள் என குறுங்கால பிரச்சனைகள் எங்களது மக்களை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. மறுபுறம், நீண்டகால விவகாரங்களாக எமது அரசியல், பாதுகாப்பு என்பன திகழ்கின்றன. எமது தாயகம் சிதைக்கப்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வு, புலப்பெயர்வு என்பன காரணமாக மக்கள் வலுவில் நாங்கள் பலவீனப்பட்டுப் போயுள்ளோம். இதனால் எமது அடையாளம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. போரில் பெற்ற வெற்றிகள் சிங்கள அரசு என்ற நிறுவனத்தினைப் பலப்படுத்தியிருக்கிறது. இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டு முன்னேறிச் செல்வதற்குத் தேவையான அர்ப்பணிப்பும், துணிச்சலுமுள்ள அரசியல் தலைமைத்துவம் தாயகத்தில் வெளிப்படவில்லை என்கின்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது.
 
கேள்வி: எவ்வாறு இந்தச் சிக்கலை தமிழ்சமூகம் எதிர்கொள்ளலாம் என எண்ணுகின்றீர்கள்?

பதில்: இதுவொரு நீண்டகால வியூகத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய விவகாரமாகும். வெறும் பிரகடனங்களும் வெற்றுத் தந்திரங்களும், உணர்ச்சிவயப்பட்ட பேச்சுக்களும் இன்றைய ஆபத்தான நிலையிலிருந்து எமது அரசியலை, இருப்பை மீட்டெடுக்காது என்றே நான் நம்புகின்றேன். இவ்வாறான நீண்டகால போராட்டத்திற்கு, அல்லது சந்ததி சந்ததியாக நடத்தப்பட வேண்டியும் வரக்கூடிய ஒரு போராட்டத்திற்கு தேவையான அடிப்படைகளை நாங்கள் இப்போது அத்திவாரமாக இடுதல் வேண்டும். இதற்கான மூலமான தரப்பாய் இருப்பவர்கள் தாயகத்தில் வாழும் மக்கள். புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் அந்த மூலத்தினை பலப்படுத்தும் அடுத்த வட்டம் என்றே நான் கணிப்பிடுகின்றேன். இந்த அடிப்படையில்,

முதலாவது, தாயகத்தில் வாழும் மக்களின் உடனடிப்பிரச்சனைகளை புறக்கணிக்காது, அதற்குரிய முக்கியத்துவத்தினை உணர்ந்து நாங்கள் செயற்படல் வேண்டும்.
இரண்டாவது, சிறைப்பட்டுக் கிடக்கும் எமது போராளிகளைப் பாதுகாத்து அவர்களை வெளியில் எடுத்துவிடும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும்.
மூன்றாவது, தாயகத்தில் செயற்படும் அரசியல் சக்திகளிடையே ஒருங்கிணைப்பினையும், பொது வேலைத்திட்டத்தினையும் ஏற்படுத்தி எதிர்காலம் தொடர்பான நீண்டகாலப் பார்வை கொண்ட போராட்டப் பாதையை வகுக்க வேண்டும். நான் அரசியல் போராட்டத்தினைத்தான் முன்வைக்கின்றேன்.

கேள்வி: புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

பதில்: முள்ளிவாய்க்கால் என்கின்ற பேரவலத்தினை தந்த சக்திகள் அதன் அடுத்த கட்டமாக புலத்துத் தமிழர்களை அடுத்த முள்ளிவாய்க்கால் நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள் என்றுதான் நான் மதிப்பிடுகின்றேன். புலத்தில் வாழும் தமிழ்மக்கள் விடுதலைப் போருக்கு தமது பங்களிப்புக்களை நிறைய வழங்கியவர்கள். நிறைந்த கனவுகளைக் கொண்டிருந்தவர்கள். மே18 வரையான இழப்புக்களால் அல்லது தோல்விகளால் துவண்டு, விரக்தியுற்று சோர்ந்து போயுள்ளனர். அவர்களை இன்னமும் துன்பப்படுத்தும் விதத்தில் இணையங்கள், ஊடகங்கள் என்கின்ற பெயரில் மக்கள் விரோத, சக்திகள் நடத்தும் மனோவியற் போரினை இந்த முள்ளிவாய்க்கால் இரண்டிற்கான மூல தந்திரமாக நான் பார்க்கின்றேன்.

கேள்வி: இன்று புலம்பெயர்ந்த நாடுகளின் ஊடகங்களைப் பொறுத்தவரை கே.பி விவகாரமே முக்கியத்துவமான தாக்கப்படுகின்றது. மறுபுறம் இந்த கே.பி விவகாரத்தினை துரோகமாக்கி, நீண்டகால செயற்பாட்டாளர்கள், நீங்கள் எனப் பலதரப்பும் கடும் வசைபாடல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: எம் மீதான இவர்களின் வசைபாடல்களை கெட்ட உள்நோக்கம் கொண்டவையாகத் தான் நான் கருதுகிறேன். தமிழ்த் தேசியம் பற்றிப் பேசும் சிலர் தேசியம் சார்ந்த செயற்பாடுகள் தாம் சார்ந்தோரின் ஏகபோகமாக உரிமையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அனைவரும் தமக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதனால் தமது கட்டமைப்புக்கு வெளியில் தேசியம் சார்ந்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதனை இவர்கள் இப்போது தமது முதன்மைப்பணியாகக் கொண்டுள்ளார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதனை அவர்கள் எதிர்த்தமைக்கும் இதுதான் காரணமாக அமைந்தது. நாம் இவர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு உறுதுணையாக நின்றோம். இப்போதும் இவர்களின் ஏகபோக தேசிய அரசியலுக்கு நாம் உண்மையோடு அச்சுறுத்தலாக உள்ளோம். அதனால் இத்தகைய வசைபாடல்கள் மூலம் எம்மை அரங்கில் இருந்து அகற்றுவதற்கு இவர்கள் முனைகிறார்கள். இப் பின்னணியில் இருந்துதான் இவர்களின் வசைபாடல்களை நாம் நோக்க வேண்டும்.

நாம் தமிழீழம் பற்றிப் பேசிக்கொண்டு தாயகத்தில் தற்போது கால் வைக்க முடியாது. தாயகத்தில் எதுவும் பரந்த சமூக மட்டத்தில் செய்வதானால் சிறிலங்கா அரசினை மீறியும் செய்ய முடியாது. இது இன்று ஈழத் தமிழர் சமூகம், அதுவும் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒரு சவால். தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் தமிழ்மக்களும் இப்போது தமிழீழம் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விட்டார்கள். அப்படி அவர்கள் பேசுவதற்கு எந்த வகையான அரசியல் வெளியும் இப்போது அங்கு இல்லை.

புலத்திலுள்ள நாம் தாயகத்தில் வாழும் மக்களுக்காக அவர்களை நெருங்கிச் சென்று கைகொடுக்க முடியாதுள்ளோம். இதனை நடைமுறைச்சாத்தியமாக்குவது எவ்வாறு? இவற்றினைப் பற்றிப் பேசுவதும்இ இவற்றிற்கான அணுகுமுறைகளைப் பற்றி விவாதிப்பதும்இ இவை பற்றிய கவனத்தினை ஏற்படுத்துவதுமே முதிர்ச்சியான ஊடக அல்லது அரசியல் அணுகுமுறை. இதனை விட்டு விட்டு மக்களின் கவனத்தினை திசைதிருப்புவோரை என்ன வென்று சொல்லது?.

கே.பி இயக்கத்தின் மூத்த போராளி. கைதுக்குப் பிற்பாடு சிங்களத்துடன் ஏதோவொரு தொடர்பாடலைப் பேண வேண்டிய நிலையில் உள்ள ஒரு அரசியல் கைதி. அவரை துரோகி என்பவர்கள் மக்களுக்கும், தியாகத்தினால் கட்டியெழுப்பப்பட்ட எங்கள் தேசத்தின் வரலாற்றிற்கும் பதில் கூறட்டும். அதற்கான பதிலை கே.பி தனது சொல்லாலோ, செயலாலோ வழங்கட்டும். துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.

எங்களுக்கு எமது தேசியத் தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். தனிநபர்களைத் தாக்குவது, பொய்யை உண்மை போன்று சொல்வது, தங்களது நலன்களுக்காக விடுதலைப் போரின் சொத்துக்களை, செயல்களை பாவிப்பது எம்மைப் பொறுத்தவரை பெரும் துரோகம். இதனால் நான் தனிப்பட்டவர்களைப் பற்றிக் கதைப்பதை விரும்புவதில்லை. ஆனால், இந்த பொய்யும், வக்கிரப் பிரச்சாரங்களும் எல்லை கடந்து எங்கள் மக்களைப் பாதிக்கும்போது நான் பேசுவேன். இன்று குறித்த இணையத்தளங்கள் ஊடாகவும், ஒரு பத்திரிகை ஊடாகவும் சிறீலங்கா அரசின் ஏஐண்டுகளாக செயற்பட்டு மக்களைக் குழப்பும் தீயவர்கள் பற்றி தேவைப்பட்டால் நான் எதிர்காலத்தில் பேசுவேன்.

கேள்வி:  உங்களுக்கு எதிரான தாக்குதலை நாடுகடந்த அரசாங்கத்தினை குழப்ப முன்பு முற்பட்ட அதே ஊடகங்களே நடத்துகின்றன. இன்றும் மீண்டும் உங்களுக்கு எதிராகவும், உருத்திரகுமாரனிற்கு எதிராகவும் வசைபாடல் நடத்தப்படுவதால், இது நாடுகடந்த அரசினை குழப்பும் சதி என்று சொல்லலாமா?

பதில்: எனக்கும் அவ்வாறான ஊகம் உள்ளது. நாடுகடந்த அரசாங்கம் ஒரு அரசியல் வேலைத்திட்டம். இன்று ஏற்பட்டுள்ள தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்புபட்ட இடைவெளியினை நிரப்பும் ஒரு திட்டமாகவே இதனை பார்க்கின்றேன். நாடுகடந்த அரசாங்கத்தினை எதிர்ப்பது, கொச்சைப்படுத்துவது, இயங்கவிடாது தடுப்பது, தமது கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்க வேண்டும் என்று கூறுவது எல்லாமே இந்த அரசியல் வேலைத்திட்டத்தினை தோற்கடிக்கும் நடவடிக்கைகளாகும்.

இதனைத் தேசியத்தின் பெயரால் எதிர்க்கும் தரப்புக்களிடம் எதுவித மாற்று வேலைத்திட்டங்களும் கிடையாது. வெறுமனே பொய்யால் புனையப்பட்ட அறிக்கைகளை விடுவதும், ஒரு சாதாரண தமிழ் சங்கம் செய்யக்கூடிய குடிமக்கள் நடவடிக்கைகயை பெரும் அரசியல் நடவடிக்கையாக கூறுவதும் என்னைப் பொறுத்தவரை உச்சபட்ட ஈகத்தினைச் செய்த மாவீரர்களுக்கு செய்யப்படும் துரோகமாக அல்லது எமது இயக்கத்திற்கு செய்யப்படும் துரோகமாகக் கருதுகின்றேன். நானும், உருத்திரகுமாரனும் இயங்குவது தமிழ்மக்கள் மத்தியில் இருக்கும் சிலரை அசெளகரியப்படுத்துகின்றது என்பது எனக்கு விளங்குகின்றது.

தலைவர் முன்பொருமுறை கூறியது போன்று உண்மை வெளிக்கிட்டு புறப்படும் முன்னர் பொய் ஒருமுறை ஊர்வலம் வந்து சேரும், ஆனால் உண்மைகள் வெளிவரும் போது அதுவே நிலைத்து நிற்கும்.

கேள்வி: மக்களின் குழப்பத்தினை தீர்ப்பதற்காக சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும். நீங்கள் கேபி தற்போது முன்னெடுக்கும் பணிகளை ஒருங்கிணைக்கிறீர்களா? கேபிக்கும் உங்களுக்கும், கேபிக்கும் ருத்திரகுமாரனுக்கும் இடையேயான தொடர்பு என்ன?

பதில்: கேபி தற்போது முன்னெடுக்கும் பணிகளை நான் ஒருங்கிணைப்பதாக வெளிவந்த தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. அதே போல கே.பி க்கும் உருத்திரகுமாரனுக்கும் தற்போது தொடர்பிருப்பதாக செல்வதிலும் உண்மை இல்லை. தி ஐலன்ட் பத்திரிகையில் கே.பி அவர்களை செவ்வி கண்டதாகக் கூறி அதனைப் பிரசுரித்த அதன் ஊடகவியலாளர் குறிப்பிட்ட ஒரு தகவலினை கே.பி கூறியதாக திரித்து உள்நோக்கம் கொண்ட குழுவொன்று நடத்தும் கேவலமான அரசியலை ஓரமாக வைத்துவிடுங்கள்.

கே.பி கைதுசெய்யப்பட்டு கொழும்பில் இருக்கையில் எனது தலைமையில் கே.பியுடன் செயற்பட்டவர்கள் செயற்படுவதாக தி ஐலன்டின் செய்தியாளர் எழுதுகின்றார். அது கே.பி சொன்னதாக கூட எழுதப்பட்ட செய்தியல்ல. இந்த ஊடகவியலாளர் எதற்காக இவ்வாறு குறிப்பிட்டார் என்பதனையும் அதற்கு இருக்கக்கூடிய உள்நோக்கங்களையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மக்களை முட்டாள்களாக நடத்தும் இந்த இணையப் புலிகளுக்கு மக்கள் தான் பதில் கூற வேண்டும்.

எனக்கு கே.பியினை அறிமுகப்படுத்தியது எனது தலைவர். 1984ல் ஒரு பட்டியலுடன் தலைவர் அவரை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்தார். 2003 ம் ஆண்டு வரை அவர் இயங்கினார். அவருடன் நாங்கள் இயங்கினோம். சுமார் 18 வருடமாக பொறுப்பில் இருந்த மூத்த உறுப்பினர் அவர். அவருடன் இயக்கத்தின் வெளிநாட்டுக் கட்டமைப்பில் செயற்பட்ட அனைத்து மூத்த செயற்பாட்டாளர்களுக்கும் பல்லாண்டு தொடர்புகள் இருந்துள்ளது. 2003ல் அல்லது 2009 மே19 ற்குப் பிறகு இயக்கத்திற்குள்? புகுந்தவர்களுக்கு அவரைத் தெரியாது.

நான் அனைத்துலக செயலகப் பொறுப்பாளராக தலைவரால் நியமிக்கப்பட்ட பிற்பாடு பணிசார்ந்து கே.பி உடன் நெருங்கிய உறவு நிலையை பேணினேன். பிற்பாடு 2009 சனவரியில் கே.பி மீள தலைவரால் பொறுப்புக்குக் கொண்டுவரப்பட்ட போது அந்த தொடர்பு புதுப்பிக்கப்பட்டது. 2009 மே18 ற்குப் பிற்பாடு அடுத்த கட்டம் பற்றிய கலந்துரையாடல்களில் உலகின் பல மூலைகளிலிருந்தும் போராளிகள், மூத்த செயற்பாட்டாளர்களை கே.பி ஈடுபடுத்திய போது நானும் அந்த நடவடிக்கைகளிற்காக அழைக்கப்பட்டேன். ருத்திரகுமாரனும் அழைக்கப்பட்டார். கே.பியின் கைதுக்குகுப் பிற்பாடு அவரின் விடுதலைக்காக பிரான்சின் மிக முன்னணியான சட்டத்தரணியினை நான் ஏற்பாடு செய்த போதும் சட்டத்தரணிக்கு கொடுக்கப் பணமில்லாமையால் அது கைவிடப்பட்ட துன்பமும் நிகழ்ந்தது.இதுவே எங்களிற்கு இடையேயான தொடர்பு.

கேள்வி: கேபி குழு என்ற ஒன்று குறித்த ஊடகங்களினால் சொல்லப்படுகின்றதே. அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: இது மே18 ற்குப் பிறகு கட்டப்பட்ட கதை. இயக்கத்தினை தெரிந்தவர்களுக்குத் தெரியும் இயக்கத்தினுள் குழுவாதம் அனுமதிக்கப்படுவதில்லை. வேலை சார்ந்த பொறுப்புகளே வழங்கப்படும். கே.பி 20 வருடங்கள் வெளிநாட்டு கட்டமைப்புக்களை கட்டியெழுப்பியவர் என்பதால் பெருந்தொகையான மூத்த உறுப்பினர்களின், அனுபவம் மிக்க உறுப்பினர்களின் தொடர்புகளைக் கொண்டிருந்தவர். மே18 ற்குப் பிறகு புலிகள் இயக்கத்தினை சர்வதேச ரீதியில் பலவீனப்படுத்த முற்படும் சக்திகள் இந்த மூத்த, அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களை ஓரங்கட்டுவதற்காக் கண்டுபிடித்த சொல் தான் கேபி குழு என்று நான் கருதுகின்றேன்.

இவர்கள் தாம் குழுவாக இயங்கும் காரணத்தினால் என்னவோ எல்வோர் மீதும் குழு என்ற முத்திரை குத்த முற்படுகிறார்கள். இயக்கத்தில் நீண்டகாலம் செயற்பட்டவர்கள் தலைவர் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் என்று தம்மை அடையாளப்படுத்தவே விரும்புவார்கள். வேறு ஒரு தனி நபர் பெயரையும் ஏற்றுக் கொள்ளாத மரபு எம்முடையது.

கேள்வி: இயக்கத்தினை சர்வதேச ரீதியாக வழிநடத்தியவரான நீங்கள் இன்றுள்ள செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களிற்கு சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பதில்: என்னைப் பொறுத்தவரை எனக்கு தலைவர் சொல்லித்தந்தது, மக்களுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்பதே முக்கியமானது என்பது. அதனையே உங்களுக்கும் சொல்ல விரும்புகின்றேன்.

இரண்டாவது விழிப்புடன் இருங்கள். எமக்குள் இருக்கும் புல்லுருவிகள் பலரும் மே18ற்குப் பிற்பாடு தீவிரமாகியுள்ளனர். எனவே விழிப்பு முக்கியமானது.

மூன்றாவது, தலைவர் ஒரு உயரிய பண்பாட்டினை தந்துள்ளார். அது மதிப்பது. மக்களை மதிப்பது, சக உறுப்பினர்களை மதிப்பது என அந்த மதிக்கும் பண்பாடு விரிவடைய வேண்டும்.
 
கேள்வி: நாடுகடந்த அரசுவின் தேர்தல் முடிவுகள் இரண்டு தொகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பான சர்ச்சையும் உங்களுடன் தொடர்புபட்டது. அதுபற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்: தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இத் தேர்தல் தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை உத்தியோக பூர்வமாக வெளியிடாது உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள முற்பட்டோம். அதனை ஏற்றுக்கொள்ளாத சிலர் உருத்திரகுமாரனுடன் தொடர்புகொண்டு மனேகரனிடம் நம்பிக்கையில்லை என்று பேசினார்கள். நாம் கலந்து பேசி முடிவில் தமிழர் அல்லாத மாற்றினத்தவர்களைக் கொண்ட சுயாதீனமான குழுவொன்றினால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இதற்கான குழுவும் அமைக்கப்பட்டது. இந்த சுயாதீனக்குழு பிரான்சுக்கார நிபுணர்களைக் கொண்டது. அதன் விசாரணைகளுக்கு அனைவரும் ஒத்தழைப்புக் கொடுத்தனர். குறித்த இருவர், அதாவது நடுநிலைக்குழுவின் விசாரணையைக் கோரிய இருவர் ஒத்துழைக்கவில்லை. விசாரணை அறிக்கைகள் இப்போது தேர்தல் ஆணைக்குழு மற்றும் உருத்திரகுமாரனின் கைகளில் உள்ளது. அதன் முடிவுகள் விரைவில் மக்களின் முன்பாக வைக்கப்படும்.

எங்களுக்கு எமது தேசிய தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். தனிநபர்களைத் தாக்குவது, பொய்யை உண்மை போன்று சொல்வது, தங்களது நலன்களுக்காக விடுதலைப் போரின் சொத்துக்களை, செயல்களை பாவிப்பது எம்மைப் பொறுத்தவரை பெரும் துரோகம். இதனால் நான் தனிப்பட்டவர்களைப் பற்றிக் கதைப்பதை விரும்புவதில்லை. ஆனால், இந்த பொய்யும், வக்கிரப் பிரச்சாரங்களும் எல்லை கடந்து எங்கள் மக்களைப் பாதிக்கும்போது நான் பேசுவேன்.

”ஆயுதக்கொள்வனவில் வெற்றி! தலைமையை இயக்கத்தை காப்பதில் தோல்வி! மக்களின் வாழ்வை மீள் கட்டியெழுப்புவதில் நிச்சயம் வெற்றிபெறுவேன்!” குமரன் பத்மநாதன்

Kumaran_PathmanathanKumaran_PathmanathanKumaran_Pathmanathanபிரபாகரனுக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக அறிவிக்கப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் ‘டெய்லிமிரர்’ ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் நான்காவது பாகம் ஓகஸ்ட் 28 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:

குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்:

(யூன் 14 2009ல் குமரன் பத்மநாதன் வே பிரபாகரனின் மரணம் தொடர்பாக தேசம்நெற் க்கு தெரிவித்த கருத்துக்கள். இப்போது வெளியிட்டு வரும் கருத்துக்களை பெரும்பாலும் 2009 யூனிலும் குமரன் பத்மநாதன் கொண்டிருந்தார். இவை தேசம்நெற் இல் வெளியாகி இருந்தது. தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை , VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் )

”ஹெலிகொப்டர் முயற்சி சாத்தியமற்றுப் போனது. நெடியவன், காஸ்ட்ரோ மீது சினங்கொண்டேன்.” குமரன் பத்மநாதன்

”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

(சென்ற வாரத் தொடர்ச்சி)

கேள்வி:அண்மைக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி விளக்கமாக கூறினீர்கள். நன்றி. இவ்விடயங்கள் தொடர்பாக புதிய விளக்கங்களை நீங்கள் தந்துள்ளீர்கள். ஆனால் இப்போது நான் சமகால நடப்புகள் பற்றி கேட்க விரும்புகிறேன். இந்த அரசாங்கத்துடனான, குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவுடனான உங்கள் தொடர்புகள் பற்றி தொடங்க விரும்புகிறேன். நீங்கள் ஏற்கெனவே உங்களை கைது செய்தமை, பாதுகாப்பு செயலாளருடனான உங்கள் முதல் சந்திப்பு என்பன பற்றி கூறியிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் நல்லதொரு உறவை பேணுகிறீர்கள். ஆனால் இதைப்பற்றி பல குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. பல எதிர்க்கட்சி தலைவர்களும் ஊடகங்களின் ஒரு பகுதியும் உங்களிடையே இரகசியமான சந்தேகத்துகிடமான சில கூட்டுசெயற்பாடுகள் நடைபெறுவதாகக் குற்றஞ் சுமத்துகின்றனர். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

பதில்: நான் கூறுவது உண்மையானது. இது மிகவும் எளிமையான கதை….. எமக்கிடையில் எந்த விதமான உடன்பாடும் இல்லை. எம்மிடையே இருந்தது புரிந்துணர்வு மட்டுமே. நேர்மையான புரிந்துணர்வு. நாம் இருவரும் சில பொது இலக்குகளை கொண்டுள்ளோம். எனவே நாம் அந்த பொது நோக்கங்களுக்காக இணைந்து வேலை செய்கின்றோம். இதுதான் எம்மிடையிலான உடன்பாடு. வேறேதுமில்லை.

கேள்வி:தயவுசெய்து இதை இன்னும் விளக்கமாக கூறமுடியுமா? இந்தக் கருத்துடன்பாடு என்னவென்று குறிப்பிட்டுச் செல்லுங்கள்.

பதில்:தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இப்போது முடிந்துவிட்டது. யுத்தத்தை திட்டமிட்டு ஒருங்கிணைந்து நடத்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இப்போது வேறு பாத்திரமொன்றை ஏற்றுள்ளார். அவருக்கு சமாதானத்தை பேணிப் பாதுகாக்க வேண்டியும் வரக்கூடிய வன்முறைக் கிளர்ச்சிகளை தடுக்க வேண்டியும் உள்ளது. யுத்தத்தால் உருவான பிரச்சினைகளுக்கு இணக்கமான முறையில் தீர்வுக்காண நிறையவே செய்ய வேண்டியுள்ளது என்பதை அவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் உணர்ந்துள்ளனர். முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மீள்குடியமர்த்தப்படும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும். வழமை நிலை திரும்ப வேண்டும். ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை விரும்புகின்றனர்.

அதேசமயம் நானும் இந்த பிரச்சினைகள் பற்றி கரிசனையாக உள்ளேன். இயன்றளவு விரைவாக இளைஞர்களும் யுவதிகளும் விடுவிக்கப்படுவதை நானும் விரும்புகின்றேன். இவர்களுக்கு புதுவாழ்வு வழங்க வேண்டும்.

இடம்பெயர்ந்து மீள்பவர்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன். இதானால்தான் இந்த விடயங்களில் எம்மிடையே உடன்பாடு காணப்படுகின்றது. இந்த விடயங்களில் ஓரளவு ஈடுபடுவதற்கு எனக்கு பாதுகாப்பு செயலாளர் ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கின்றார். இதுதான் எமது கருத்துடன்பாடு அல்லது உடன்பாடு கண்ட விடயம்.

கேள்வி:ஆனால், இந்த விடயங்களில் ஈடுபடுவதற்கு மீளமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ இன் முன்னாள் தலைருக்கு இப்படியான வாய்ப்பு ஏன் வழங்கப்படுகின்றது என்பதே பலருக்கு புதிராக உள்ளது.?
பதில்:பாதுகாப்பு செயலாளர் அல்லது அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் அல்லது ஒரு உத்தியோகத்தரே இதற்கு பதிலளிக்க மிகப்பொருத்தமானவர் என நான் நினைக்கின்றேன். எனது பார்வையில் அல்லது அரசாங்கத்தின் சிந்தனையில் பின்னணியில் என்ன உள்ளது என நான் நினைப்பதை வைத்துக்கொண்டு மட்டும்தான் என்னால் பதிலளிக்க முடியும்.

கேள்வி:சரி. அந்த விதத்திலேயே கூறுங்கள். இந்த வாய்ப்பு உங்களுக்கு ஏன் வழங்கப்பட்டது எண்ணுகின்றீர்கள் என்று எனக்குக் கூறுங்கள்?
பதில்:அவர்கள் ஒரு சிக்கலான, இக்கட்டான நிலைமையில் உள்ளனர் என நான் நினைக்கின்றேன். அவர்கள் இடம் பெயர்ந்தவர்களையும் தடுப்புக்காவலில் உள்ளவர்களையும் இயன்றளவு விரைவாக புனர்வாழ்வு அளிக்க அல்லது விடுவிக்க விரும்புகின்றனர். இது தாமதாமாக ஆக, சர்வதேச விமர்சனமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். அதே சமயம் இன்னொரு பக்கத்தில் அவர்கள் பாதுகாப்பு என்ற பார்வையில் நோக்கும்போது எச்சரிக்கையாகவும் செயற்படுகின்றனர். பிரிவினை வாதம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் வகையில் அல்லது அரசியல் சார்ந்த வன்முறை மீண்டெழும் வகையில் உள்நோக்கம் கொண்ட பகுதியினரால் இந்த மீள்குடியேற்றப்பட்ட விடுவிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தப்படக்கூடாது என அவர்கள் எண்ணுகின்றார்கள். இதனால்தான் அரசாங்க அதிகாரங்கொண்டோர் கவனமாக உள்ளனர். இதனால் விடயங்கள் தாமதமாகின. இந்த மெதுவான நகர்வு அரசாங்கம் மீதான விமர்சனத்துக்கும் வழிவகுத்தது. எனவே, அரசாங்கம் பாதுகாப்பு நலன்களை பேணும் அதேசமயம் இந்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகாண உதவக்கூடிய வழிவகைகளை தேடிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் நான் வருகிறேன் என நான் நினைக்கிறேன்.

இந்த விடயங்களில் ஒரு அறிய பாத்திரத்தை வகிக்க அவர்கள் எனக்கு ஒரு சந்தரப்பத்தை தருகின்றனர். இது இராமாயணத்தில் கடலுக்கு குறுக்காக அணைகட்ட உதவிய அணிலின் பாத்திரம் போன்றதாகும். இது எனது வாழ்க்கையில் அர்த்தமுள்ள ஒன்றை செய்வதற்கு எனக்கு வாய்ப்பை அளிக்கின்றது. எனவே நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.

கேள்வி:ஆனால் உங்களை ஏன்? ஒரு அரசு சாரா நிறுவனம் அல்லது அரசு சாரா நிறுவனங்களின் தொகுதியிடம் அல்லாமல் உங்களிடம் ஏன் வழங்கப்பட்டது? ஏன் அரசாங்கத்துடன் சேர்ந்துள்ள தமிழ் கட்சிகளிடம் இது இல்லை?
பதில்:ஏன் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தமிழ் கட்சிகளுக்கு இப்படியான பாத்திரம் வழங்கவில்லை என்பது பற்றி நீங்கள் கேட்டீர்கள். மீண்டும் சொல்கிறேன், நான் கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு, நான் என்ன நினைக்கின்றேன் என்பதை மட்டும்தான் நான் கூறமுடியும்

கடந்த காலத்தில் பெற்ற விரும்பத்தகாத அனுபவங்கள் காரணமாக அநேகமான அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் நம்பவில்லை என நான் நினைக்கின்றேன். இதனால்தான் பல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கப்படுகிறது என நான் நினைக்கின்றேன். தமிழக்கட்சிகளும் முன்னர் கிடைத்த வாய்ப்புகளை தவறாக பயன்படுத்தினர் அல்லது துஷ்ப்பிரயோகம் செய்தன.

இதனால் அவர்கள் மீதும் நம்பிக்கையற்று உள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்களது பிரச்சினை பாதுகாப்பு மற்றும் அரசியல் என்பவற்றுடன் தொடர்புறுகின்ற, மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய விடயமாக உள்ளது.

விமர்சனங்கள் வருகின்றபோதும் அரசாங்கம் இந்த விடயத்தில் எந்தவித்திலும் ஆபத்துக்கும் முகங்கொடுக்கும் நிலை வருவதை விரும்பவில்லை. பழைய புலி உறுப்பினர்களுடன் கலந்து பழக சகல நிறுவனங்களையும் அதுமதித்து, பாதுகாப்பு சிதைவடையும் ஆபத்துக்கு முகங்கொடுக்கும் நிலைமை ஏற்படுவதுடன் ஒப்பிடப்படுமிடத்துதான் விமர்சனத்துக்கு உள்ளாவதே மேல் என அவர் நினைக்கின்றார். இப்படியான நிலைமையில் எனக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது. புனர்வாழ்வுக்கு தயாராக்கப்படும் முன்னாள் புலிகளுடனும் வேறு பிரயோசனப் படக்கூடிய சிலருடனும் கலந்து பழகுவதற்கு என்னை அனுமதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

அவர்கள் என்னை நம்புகின்றனர். அத்துடன் நான் அவர்களிடம் பிடிப்பட்டுள்ளதால் என்னையிட்டுப் பயப்பட வேண்டியதில்லை. என்னைப் பொறுத்தவரையில் எனது மக்களுக்கு, குறிப்பாக முன்னைநாள் புலி உறுப்பினர்களுக்கு சேவை செய்யக்கிடைத்த இந்த வாய்ப்பை நான் விருப்போடு ஏற்றுக்கொள்கிறேன்.

கேள்வி: இந்தவகையில் உங்களுக்கு உற்சாகம் அளிப்பது என்ன?
பதில்:முன்னாள் புலித் தலைவர்களில் மிக மூத்தவராக நான் இப்போது இருக்கின்றேன் என நினைக்கின்றேன். இன்றைய தமிழ் மக்களின் பரிதாப நிலையை காணும்போது நான் மிகுந்த குற்றவுணர்வுக்கு ஆளாகின்றேன். இந்த இளைஞர் யுவதிகளின் கதியை பார்க்கும்போது எனக்கு மிகுந்த கவலையாகவும் துன்பமாகவும் இருக்கிறது. இந்த பிள்ளைகளில் பலர் தமது விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்டவர்கள் என்பதை என்னால் மறுக்க முடியாது.

வன்னிப்பிரதேச சாதாரண மக்களை (சிவிலியன்) காணும்போது நான் பெரிதும் கழிவிரக்கம் கொள்கின்றேன். அவர்கள் ஒரு காலத்தில் செழிப்போடு வாழ்ந்தவர்கள். இப்போது போரின் காரணமாக துன்பகரமான வறுமையில் உள்ளனர். இதனால் தான் நான் அவர்களுக்கு இயன்றளவு உதவி செய்து சிறிதாவது பிராயச்சித்தம் செய்ய விரும்புகின்றேன்.

இன்னுமொரு காரணம் உள்ளது. நான் சென்ற வருடம் கேள்விப்பட்ட கதை. பிரபாகரனும் வேறு தலைவர்களும் சென்ற மேமாத நடுப்பகுதியில் கூடிப் பேசிய ஒரு சந்தர்ப்பத்தில் “எமது மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் என்ன நடக்கும்?” என ஒருவர் கேட்டார். அதற்கு “கே.பி. இருக்கிறார். அவர் மக்களையும் உறுப்பினர்களையும் கவனித்துக்கொள்வார்” பிரபாகரன் என கூறினாராம்.

சில மாதங்களுக்கு முன் இது உண்மையில் நடந்த சம்பவம்தான் என்றும் பிரபாகரன் இவ்வாறு வெளிப்படையாக என்னைக் குறிப்பிட்டார் எனவும் உறுதி செய்யும் என்று எனக்கு கிடைத்தது. எனக்கு பொறுப்பளிக்கப்பட்ட இறுதிக்கட்டம் இந்த மக்களை கவனித்து கொள்வதுதான், இந்த வகையில் எனது உறுதியை வலுப்படுத்தியுள்ளது.

இதுதான் நான் ஊக்கத்துடன் இருக்கக் காரணம் நான் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தை (NERDO) தோற்றுவித்தேன். இது ஒழுங்கு முறையாக ஜுலை 06, 2010 இல் பதிவு செய்யபட்டது. எமக்கு வடக்கு கிழக்கில் நடமாடவும் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுடனும் புனர்வாழ்வு அளிக்கப்படுவோருடனும் கலந்து பழக பாதுகாப்பு அனுமதி தரப்பட்டுள்ளது.

கேள்வி:NERDO பற்றி பேசமுன் மிகச்சொற்ப காலத்தில் NGO அரச சார்பற்ற நிறுவனம் என்ற அங்கீகாரம் உங்களுக்கு கிடைத்ததாகத் தெரிகிறது. NERDO வுக்கு பாதுகாப்பு அனுமதியும் நடமாட்ட சுதந்திரமும் கிடைத்துள்ளது. இது உயர்மட்டங்களில் ஆதரவு இல்லாது சாத்தியமாகியிருக்காது. பாதுகாப்பு செயலாளரின் ஆசீர்வாதத்துடன் தானே NERDO இந்த அங்கீகாரத்தையும் நடமாட்ட சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்டது?

பதில்:ஆம் நாம் சகல விதிமுறைகள் நடைமுறைகளுக்கூடாகவும் சென்று விண்ணப்பித்தோம். ஆனால் பாதுகாப்புச் செயலாளரின் ஆதரவின்றி இவ்வளவு விரைவான அனுமதி கிடைத்திருக்கும் என நான் நினைக்கவில்லை.

கேள்வி:முன்னைய விடயத்துக்கு மீண்டும் போக அனுமதியுங்கள். கோட்டாபய ராஜபக்ஷவுடனான உங்கள் விசேடமான உறவின் காரணமாக மட்டுமே, நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவராக இருந்த போதும் நீங்கள் சில செயல்களில் சுதந்திரத்தை அனுபவிக்க முடிகின்றது என்பது தெட்டத் தெரிகின்றது. நீங்கள் முன்னர் கூறியதுபோல உங்களுக்கிடையே உடன்பாடு எதுவுமில்லை. சில தொடர்புடைய மக்கள் நேய நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே உங்களிடையேயான கருத்துடன்பாடாக இருந்தது. இப்படியான மிகவும் நல்ல உறவு எப்படியான சூழலில் பரிணமித்தது? தொடர்ந்து வளர்கின்றது என நீங்கள் விளக்குவீர்களா?

பதில்: நல்லது. நான் எப்படி மலேசியாவில் பிடிப்பட்டேன். கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன். எமது முதல் சந்திப்பு எவ்வாறு இருந்தது என்பன பற்றி முன்னரே கூறியிருக்கிறேன். அதன்பின் தொடர்ந்து வந்த சந்திப்பில் மூன்றாவது என்றுதான் நினைக்கின்றேன். கோட்டாபய ராஜபக்ஷ ஒட்டுமொத்தமாக இந்த நிலைமைப்பற்றி நான் என்ன நினைக்கின்றேன். நான் எதிர்காலத்தில் என்ன செய்ய விரும்புகின்றேன் என்பது பற்றி நேரடியான கேள்விகளைக் என்னிடம் கேட்டார்.

அப்போது நான் என்னைப் பொறுத்தவரை யுத்தம் முடிந்துவிட்டது என்றும் ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்குவது இனிமேல் முடியாதது என்பதை பூரணமாக உணர்ந்துவிட்டேன் என்றும் தெளிவாகக் கூறினேன். மக்களின் கதிபற்றி நான் மிகவும் குற்றவுணர்வுடன் உள்ளேன் என்றும் எனக்கு ஒரு வாய்ப்புத் தரப்படுமானால் நான் இந்த மக்களுக்கு சிறு அளவிலாவது குறைந்த பட்சம் பிராயச்சித்தம் என்ற வகையில் உதவி செய்ய விரும்புகிறேன் என்று கூறினேன். அப்போது பாதுகாப்பு செயலாளர் தானும் இடம்பெயர்ந்தோரை விரைவில் விடுவித்து மீள்குடியேற்றம் செய்யவும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் விரும்புவதாகக் கூறினார். இந்த வகையில் காரியங்களை விரைவுப்படுத்த நம்பத்தகுந்த ஆட்கள் தனக்கு தேவைப்படுவதாகவும் கூறினார். இந்த செயன்முறையில் தனக்கு உதவ நான் விரும்புவேனா என என்னிடம் அவர் கேட்டார். நான் ‘ஆம்’ எனக் கூறினேன்.

சில நாட்களின் பின் இராணுவ புலனாய்வு தலைவர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண எனது வேண்டுகோளை தானும் பாதுகாப்பு செயலாளரும் விரிவாக ஆராய்ந்ததாகவும் அப்போது ஒரு சாதகமான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் என்னிடம் தெரிவித்தார். அதன்பின் இந்த தொடர்செயற்பாட்டில் பங்குக் கொள்ளும் வகையில் சுதந்திரமான செயற்பாட்டுக்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கேள்வி:நீங்கள் ஆலோசகராக ஆக்கப்பட்டீர்களா?
பதில்:நீங்கள் கேட்பது போல அது முறைசார்ந்தாகவோ அல்லது உத்தியோக பூர்வமானதாகவோ இருக்கவில்லை. ஆனால், சில தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் என்னுடன் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் தடுப்பு காவலிலிருந்த உறுப்பினர்களுடனும் வடக்கிலிருந்த சிலருடனும் கலந்து பழகவும் நான் அனுமதிக்கப்பட்டேன்.

கேள்வி: நேரில் சென்று பேசவா?
பதில்: இல்லை. நேரடியாக அல்ல. முதலில் தொலைபேசி மூலம் மட்டும்தான். பின்னர் தடுத்துவைக்கப் பட்டிருந்தவர்களின் பெற்றோரின் பிரதிநிதிகளை வடக்கிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரவும் அவர்களை சந்திக்கவும் முடிந்தது. அப்படியான ஒரு சந்திப்பின்போதுதான் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றிக் கூறிக் கவலைப்பட்டனர்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவரிடம் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சாதகமான நடவடிக்கையை எடுக்கும்படி பாதுகாப்பு செயலாளரிடம் அவரால் வேண்டு கோள் விடுக்க முடியுமா எனக்கேட்டேன். இதை அவர் செய்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவர்களை விடுவிக்க கொள்கையளவில் உடனடியாகவே சம்மதம் தெரிவித்தார். பின்னர் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டனர். இப்போது எந்தவொரு பல்கலைக்கழக மாணவர்களும் தடுப்புக்காவலில் இல்லை. அதுபோலவே புனர்வாழ்வு அளிக்கப்படுவோரும் வகைரீதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

கேள்வி: உங்களுக்கு உத்தியோக ரீதியான பதவி எதுவுமில்லை. ஆனால் குறித்து வைக்கப்பட்ட உத்தியோகபூர்வமல்லாத விசேடமான ஒருவகை பாத்திரம் வகிக்கின்றீர்கள் என நான் கருதுகிறேன். இதனால்தான் இந்த விடயங்களில் இணைந்து செயற்படவும் நல்லதொரு பாத்திரத்தை வகிக்கவும் உங்களால் முடிந்தது என நான் கருதுகிறேன்.

பதில்: ஆம். அது நான் NERDO வை உருவாக்கமுன். இப்போது இவ்வாறான விடயங்களில் நான் NERDO வை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.

கேள்வி:அப்படியானால் அரசாங்கமே உண்மையில் பொறுப்பாகவிருந்து கொள்கைகளை தீர்மானித்து, அவற்றை செயற்படுத்தியது. ஆனால், ஆலோசகர் என்ற வகையில் ஒரு மேலதிகமான ஒரு பாத்திரத்தை நீங்கள் வகித்தீர்களா?

பதில்:அப்படியேதான். ஆம், அரசாங்கம்தான் அதை கையாண்டது. உதாரணமாக, முன்பு புலி உறுப்பினராகவிருந்து புனர்வாழ்வு வழங்கப்படுவோர் புனர்வாழ்வு ஆனையாளர் நாயகத்தின் நிறுவகத்தின் கீழ் வந்தனர். இந்த விடயத்தில் மிகப்பொருத்தமான ஒருவரைத்தான் அரசாங்கம் நியமித்துள்ளது என்பதை நான் கூறியாக வேண்டும். இந்த வேலைக்கு மிகப் பொருத்தமானவர்தான் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க. பாதுகாப்பு வதிவிடப் புனர்வாழ்வு மையத்தில் (PARC) தங்கவைக்கப்பட்டிருப்போரின் நலனில் அக்கறையும் அர்ப்பணிப்பும் அவரிடம் நிறையவே உண்டு.

கேள்வி:அப்படியானால் இந்த விடயங்களில் நீங்கள் நீங்கள் செய்தது என்ன அல்லது செய்து கொண்டிருப்பது என்ன?
பதில்: என்னிடம் ஒரு கருத்து அல்லது அபிப்பிராயம் கேட்கப்படும்போது நான் எனது ஆலோசனைகளை சமர்ப்பிப்பேன். சில ஏற்கப்பட்டுள்ளன. வரையப்படும் திட்டங்கள் பற்றி கேட்கப்படும் போது நான் எனது அபிப்பிராயங்களை கூறுவேன். ஒரு பிரச்சினை அல்லது நியாயமான ஒரு வேண்டுகோள் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால் சம்பந்தப்பட்டால் நான் தொடர்புடைய உத்தியோகத்தர்களுடன் நேரடியாக அல்லது வேறுவழியில் தொடர்பு கொண்டு இதை அவர்களுக்கு தெரியப்படுத்துவேன். நானும் சில விடயங்களை முன்னெடுத்து ஆலோசனைகளை சமர்ப்பிப்பேன். இந்த விடயங்களில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உத்தியோகத்தர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே இந்த துரதிஷ்டசாலியான மக்களின் கதியையிட்டு நிறைந்த அனுதாபங்கொண்ட நேர்மையான ஆட்களாக உள்ளனர். இதனால் கருத்துகள் ஆலோசனைகளை அதிஉயர் அளவில் உள்வாங்குபவர்களாக உள்ளனர். இதனால் விடயங்களை செய்துகொள்ளுதல் ஒரு போதும் பெரிய பிரச்சினையாக இல்லை. அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களுக்கு நாமும் உதவி செய்கின்றோம். அதிகமாக இது NERDO ஊடாகவே செய்யப்படுகின்றது.

கேள்வி:ஆனால் ஆட்களை விடுவிப்பதிலும் புனர்வாழ்வு அளிப்பதிலும் மெதுவான முன்னேற்றமே காணப்படுகிறதே? ஏன்?
பதில்: நான் அங்கு அவதானித்ததிலிருந்து இந்த பிரச்சினைகளை வினைத்திறனுடனும் விரைவாகவும் தீர்க்க வேண்டும் என்பதில் அரசாங்கத்தின் பக்கத்தில் நேர்மையான சிந்தனை உள்ளதை காண முடிகிறது. அவர்கள் இரண்டு விசாலாமான வகையினரை இனங்கண்டுள்ளனர். ஒரு வகையினர் ஏதாவது வன்முறையில் ஈடுபட்டவர்கள் எல்.ரீ.ரீ.ஈ இல் பல வருடங்களாக இருந்தவர்கள், கரும்புலி அல்லது தற்கொலைத்தாக்குதல் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் என சந்தேகிக்கப் படுவர்களை உள்ளடக்கிய் பகுதியினர் ஆவர். இந்த வகையில் கிட்டத்தட்ட 1400 பேர் உள்ளனர். இவர்களில் அதிகமானோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.

ஏனையவர்கள் மென்பகுதியினர் என்ற வகையில் அடங்குவர். இவர்கள் எர்.ரீ.ரீ.ஈ உடன் சொற்பகாலம் அனுபவம் கொண்டவர்கள் அல்லது அண்மைக்காலத்தில் கட்டயாமாக சேர்க்கப்பட்டவர்கள் அல்லது வங்கி, பொலிஸ் , போன்ற எல்.ரீ.ரீ.ஈ இன் நிர்வாக தொழிற்பாட்டில் சம்பந்தபட்டவர்கள். இவர்கள் எண்ணிக்கை 11000க்கு மேல் உள்ளது. ஆனால் தற்போது 7000 -8000 என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இது இவர்கள் ஒரு வகை ஒழுங்கில் விடுவிக்கப்பட்டதன் விளைவாகும்.

இவர்கள் ஒவ்வொருவரையும் கவனிப்பதற்கு அரசாங்கம் ஒரு நாளைக்கு தலா 400 ரூபா செலவு செய்கின்றது. அரசாங்கம் நிச்சயமாக இயன்றளவு விரைவில் இவர்களை விடுவித்து, செலவழிக்கப்படும் பணத்தை மீதப்படுத்தவே விரும்பும். ஆனால் நடைமுறைப்பிரச்சினை உள்ளது. நான் முன்னர் கூறியது போன்று உள்நோக்கம் கொண்ட சிலரால் விடுவிக்கப்பட்ட உறுப்பினர்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு மீண்டும் வன்முறையில் ஈடுபட ஊக்குவிக்கப்படலாம் என அரசாங்கம் பயப்படுகின்றது.

இதை தடுப்பதற்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் எவரும் வேலையின்றியோ அல்லது எதுவும் செய்யாமல் சும்மாவோ வேலை இல்லாதிருப்பதை உறுதிப்படுத்துவது ஒரு வழியாகும். இதற்காகவே தொழில் திறன் செயற்றிட்டங்களை வகுத்து, இவர்களை பயிற்றுவித்து வருகின்றனர். இவ்வாறானவர்கள் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் நல்ல வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வர். இதனால்தான் மெதுவான முன்னேற்றம் காணப்படுகிறது.

கேள்வி: இருப்பினும் விடுவிப்பதற்கான ஒரு நாள் குறிக்கப்பட்ட ஒரு கால எல்லையை ஏன் வகுக்க முடியவில்லை?
பதில்: நான் ஏற்கனவே சொன்ன காரணங்களால்தான் இது நடக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு செயலாளர் இந்த மென் பகுதியினர் ஆறு தொடக்கம் ஒன்பது மாதங்களுக்குள் பூரணமாக விடுவிக்கப்படுவர் என தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியிருப்பதை நான் கட்டாயம் சொல்லவேண்டும். இந்த காலக்கெடுவை எதிர்கொள்ளும் வகையில் சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நான் நினைக்கின்றேன்.

ஆனால், இந்த பிரச்சினை பற்றி வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு விடயத்தை கூறவிரும்புகின்றேன். இவர்கள் விமர்சிப்பதை விட்டு விட்டு நிதி ரீதியாக உதவவேண்டும். முதலீடு செய்யவும் வேண்டும். புனர்வாழ்வு அளிக்கப்படுவோருக்கு பயிற்சியும் வேலையும் வழங்க இவர்கள் நிதி உதவி வழங்குவார்களாயின் இவர்களை விரைவில் விடுதலை செய்யலாம். வெறுமனே விமர்சிப்பதற்கு பதிலாக, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் உண்மையில் அக்கறை உடையவர்களாக இருப்பின் நிதி உதவி வழங்குவதன் மூலம் ஏன் விரைவான விடுப்புகளை உறுதி செய்யக்கூடாது. பாதுகாப்பு செயலாளர் இவர்களை இயன்றளவு விரைவில் விடுவிக்கவே விரும்புகிறார்கள் என்பதை எனது அனுபவத்திலிருந்து உறுதியாகக் கூறுகிறேன்.அவரை குறை கூறுவதற்கு பதிலாக ஏன் உதவி செய்து முயன்று பார்க்கக்கூடாது?

கேள்வி: பாதுகாப்புச் செயலரையும் உங்களையும் பற்றி வினவ அனுமதியுங்கள். நீங்கள் அவருடன் எவ்வளவு காலத்துக்கு ஒரு தடவை தொடர்பு கொள்வீர்கள்?
பதில்:அது இப்படித்தான். நான் அவருக்கு ஏதாவது தகவல் வழங்க விரும்பினால், எம் இருவருக்கும் இடையில் இணைப்பாளராக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஊடாகத் தெரிவிப்பேன். அவரும் இதேபோலத்தான் செய்வார். இதைவிட, இடம்பெயர்ந்தோர், புனர்வாழ்வு அளிக்கப்படுவோர் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கு நாம் நேரடியாகவும் சந்தித்துள்ளோம். அண்மைக்காலமாக நாங்கள் NERDO வை ஸ்தாபித்தன்பின் பாதுகாப்பு செயலாளர் அதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றார். ஒவ்வொரு வாரமும் எமது முன்னேற்றத்தைப்பற்றி அறிந்து கொள்வார். தேவையானால் அவரின் கீழ் உள்ள அதிகாரிகளை நான் அணுகுவேன்.

கேள்வி: உங்கள் இதயம் தொட்ட விடயம் பற்றிப் பேசுவோம். NERDO பற்றி சொல்லுங்கள். அது எப்படி உருவானது? NERDO ஊடாக நீங்கள் என்ன செய்ய செய்ய எண்ணியுள்ளீர்கள்?
பதில்: முன்னாள் புலி உறுப்பினர்கள் மற்றும் வன்னியில் உள்ள இடம்பெயர்ந்தோர் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றியும் நாம் பேசிக்கொண்டிருந்த போது இந்த பிரச்சினைகளை கையாள அரசு சார்பற்ற சமூகசேவை நிறுவனம் தேவை என நான் உணர்ந்தேன். இந்த நிறுவனம் அரச கட்டுப்பாடின்றி இயங்க முடியும். ஆனால், இந்த முயற்சிகள் தொடர்பில் அரசின் ஒட்டு மொத்தமான முயற்சிகளுடன் இணைந்து செயற்படலாம். அரசாங்க அதிகாரிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டனர்.

எனவே சில ஆயத்தங்களை செய்யத் தொடங்கினோம். ஆனால் விடயங்கள் பெரிதாக நடக்கத் தொடங்கவில்லை. போதிய பணம் இன்மை ஒரு பிரச்சினையாக காணப்பட்டது. பின்னர் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சிலரின் ஒரு வாரகால சுற்றுப்பயணம் இவ்வருடம் ஜுனில் வந்தது.

கேள்வி: குறுக்கீடு செய்வதற்கு வருந்துகின்றேன். அந்த சுற்றுப்பயணம் எப்படி ஒழுங்குபடுத்தப்பட்டது?
பதில்: சில வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு வந்து பார்த்து நேரடியாகவே உண்மை நிலையை அறிந்துக் கொள்வதே இந்தத் திட்டம். முதலில் நாம் இந்த வருகை மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் யுத்த ஆண்டு நிறைவுடன் பொருந்தி வரவேண்டும் என நினைத்தோம். ஆனால், சில காரணங்களாலும் வெள்ள நிலைமை காரணமாகவும் இதை நாம் ஜு10ன் மாத்திற்கு ஒத்திவைக்க வேண்டியேற்பட்டது. முதலில் நாம் 20 பேருக்கு மேல் கொண்டுவர எண்ணியிருந்தோம். 22 பேரின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்தோம். பயண ஒழுங்குகள் தொடர்பான காரணங்களால் தொகையை குறைப்பது நல்லது என கொழும்பிலிருந்து அதிகாரிகள் கருதினர். இதனால் இது 12 பேராக குறைக்கப்பட்டது. ஆனால், கடைசி நேர பிரச்சினைகள் காரணமாக 9 பேர் மட்டுமே வர முடிந்தது.

கேள்வி: ஆக, அது எப்படி நடந்தது? தயவு செய்து NERDO பற்றி மேலும் கூறுங்கள்?
பதில்: வெளிநாட்டில் வசிப்போரின் வருகை எமது திட்டங்களுக்கு ஊக்குவிப்பாக அமைந்தது. இங்கு வந்தவர்கள் இருந்த நிலைமை பற்றி நேரடி அனுபவம் பெற்றுக்கொண்டனர். ஒருவரைத் தவிர, மற்றைய யாவரும் உண்மை நிலைவரத்தை விளங்கிக் கொண்டனர். அவர்கள் NERDO இன் தேவையை உணர்ந்துக்கொண்டனர். சிலர் நன்கொடை வழங்கினர். பெரிய தொகையாக அது இல்லாதபோதும் அது விடயங்களை நகர்த்த போதுமானதாக இருந்தது. அரசாங்கம் அவர்களின் வருகைபற்றி திருப்தி அடைந்து NERDO வெற்றியாக வருவது சாத்தியம் என்பதை ஒத்துக்கொண்டது.

வடக்கு மீனவர் சங்கத்தின் சங்கங்களின் சமாஜத்தின் தலைவர் எஸ்.தவரத்தினம் உள்ளார். நான் NERDO இன் செயலாளர்.

கேள்வி: NERDO வின் செயற்பாடு அமைப்புப்பற்றி மேலும் கூறமுடியுமா?
பதில்: நல்லது. நாம் இப்போதுதான் தொடங்கியுள்ளோம். இப்போது வளங்கள் மட்டுப்படுத்தப் பட்டவையாகவே உள்ளன. கரிசனை உள்ளவர்களிடமிருந்து நன்கொடை பெற விரும்புகிறோம். சில நிதிகள் இப்போது கசிய ஆரம்பித்துள்ளன. வவுனியாவில் உள்ள எமது அலுவலகம் மிகவும் எளிமையானது. எமக்கு பெரிய கட்டிடங்களேர் அதிகளவு ஊழியர்களோ கட்டுப்படியாகாது. இங்கு இரண்டு உத்தியோகத்தர்கள் உள்ளனர். ஒருவர் யாழ்ப்பாணத்தவர் , மற்றையவர் மலைநாட்டைச் சேர்ந்தவர். ஒருவர் அலுவலக வேலைகளை கவனிக்கின்றார். மற்றவர் கள உத்தியோகத்தர் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு பெண் தொண்டர் என்ற வகையில் தட்டெழுத்தாளராக இருக்கிறார். அவருக்கு சம்பளமாக ஒரு தொகை வழங்கப்படுகிறது.

சம்பளமின்றி பகுதிநேர அடிப்படையில் உதவிசெய்யும் சில தொண்டர்களும் உள்ளனர். இவர்களில் அநேகமானோர் எனக்கு தனிப்பட்ட முறையில் – எமது ஊரான மைலிட்டியை சேர்ந்தவர்கள் அல்லது காங்கேசன்துறை நடேஸ்வராக்கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரி என்பவற்றிலும் பழைய மாணவர்கள் என பலவகையிலும் தெரிந்தவர்கள். சிலர் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் என்னோடு படித்தவர்கள்.

இவர்களில் சிலர் பாடசாலை அதிபர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் , அல்லது வங்கி ஊழியர்களாவர். நான் 1981 இல் வெளிநாடு சென்றபின் இவர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இருக்கவில்லை என்பதை குறிப்பிடவேண்டும. நான் எல்.ரீ.ரீ.ஈ இல் இணைந்து வேலை செய்தபடியாலும் இவர்கள் இலங்கையில் இருந்த காரணத்தாலும் அவர்கள் பாதுகாப்பு கருதி நான் இவர்களுடன் தொடர்பாடலைத் தவிர்த்தேன்.

இப்போது இவர்கள் என்னோடு இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில சேவைகளை செய்ய முயல்கின்றனர். இதில் 25-30 பேர்வரையில் உள்ளனர். எமக்கு வினைத்திறன் மிக்க தொண்டர்கள் தேவை. எனவே இது படிப்படியாக அதிகரிக்கும் என நினைக்கின்றேன்.

கேள்வி: NERDO இது வரை செய்தது என்ன? உங்கள் எதிர்கால திட்டம் என்ன?
பதில்: எமது முதல்மாத முன்னேற்றம் கொஞ்சமானதே. கிளிநொச்சியில் உள்ள இரண்டு பாடசாலைகளில் ஒவ்வொன்றுக்கும் 15,000 ரூபா வீதம் தவணைப் பரீட்சை வினாத்தாள் அச்சிடுவதற்காக வழங்கினோம். மகாவித்தியாலயம், இராமநாதபுரம் மேற்கு தமிழ் கலவன் பாடசாலை என்பனவாகும். இங்கு கே. புவனேஷ்வரன் என்னும் வலுக்குறைந்த இளைஞனுக்கு க.பொ.த.(உ.த) பரீட்சைக்கு சென்றுவர உதவியாக 5,000 ரூபா கொடுத்தோம்.

இதைவிட க.பொ.த (உ.த) பரீட்சைக்கு தயாராகும் புனர்வாழ்வு அளிக்கப்படும் 358 பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் பணிஸும் தேநீரும் வழங்கப்படுகிறது. 28 நாட்களுக்கு இவ்வாறு செய்யப்படும். இதுபோல க.பொ.த (சா.த) பரீட்சை எழுதப்போகும் 119 பிள்ளைகளுக்கும் சில ஆசிரியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் பணிஸும் தேநீரும் வழங்குவதற்கான செலவு 450, 000 ரூபாவினை NERDO முழுமையாக செலுத்திவிட்டது.

கேள்வி: ஆனால் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்படும் சில ஊடக அமைப்புகள் NERDO வை விமர்சிக்கின்றன. இது அரசாங்கம் செய்யவேண்டிய வேலை. இதை நீங்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை என கூறுகின்றன.

பதில்: இவர்கள் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால் இங்கு உண்மைநிலை வேறாக உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களின் இந்த பிரிவினர் போலன்றி நாம் அரசாங்கத்தை தாக்குவதோ அல்லது குறைகளை குத்திக்காட்டிக் கொண்டோ இருப்பதில்லை. புலம்பெயர்ந்து வாழும் தமிழர் போலன்றி இங்கு அடிமட்டத்தில் வேலை செய்யும் நாம் அரசாங்கத்துடன் பங்குதாரர்களாக உள்ளோம்.

இது “நாங்களும் அவர்களும்” என்ற மாதிரி இல்லை. இது “நாங்கள்’” என்னும் நிலைமையாகும். இங்கு அரசாங்கமும் நாமும் ஒற்றுமையாக எமது மக்களுக்கு உதவுவதற்காக எம்மாலானதை அதி சிறப்பாக செய்யவேண்டும். அரசாங்கத்துக்கும் சிலவிடயங்களால் நிதித்தட்டுப்பாடு உள்ளது. அப்படியானால் சும்மா குந்திக்கொண்டிருந்து, அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டு எதுவும் செய்யாமல் இருக்க முடியுமா?

இப்படிக் கதைக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் நினைத்திருந்தால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி புனர்வாழ்வு அளிக்கப்படும் பிள்ளைகளை க.பொ.த( உ.த) பரீட்சைக்கு தோற்றாவிடாமல் தடுத்திருக்கலாம். அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

கஷ்டங்கள் இருந்தப்போதும் சோதனைகளை எழுத ஒழுங்கு செய்தார்கள். உணவு வழங்கினார்கள். போக்குவரத்து ஏற்பாடு செய்தார்கள். ஆட்களையும் வழங்கினார்கள். அவுஸ்திரேலிய அரச சார்பற்ற நிறுவனமொன்று கற்றல் சாதனங்களையும் மேலதிக ஆசிரியருக்கான செலவையும் எழுதுகருவிகளையும் கொடுத்துதவியது. நாம் இதற்கான ஒழுங்குகளை தளத்திலிருந்து மேற்கொண்டோம். பின்பு NERDO விலிருந்து நாம் பணிஸும் தேநீரும் வழங்கி உதவினோம்.

எனவே, இது அரசாங்கம், அவுஸ்திரேலிய NGO, புலம்பெயர்ந்த ஆகிய மூன்று பகுதியினர்களுக்கு உதவ மேற்கொண்ட கூட்டு முயற்சியாகும். இதில் அரசாங்கம் சிரமத்திலும் செலவிலும் பெரும் பங்கை தாங்கிக் கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் இப்படியான மடத்தனமான தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கேள்வி: புலம்பெயர்ந்தவரின் எதிர்கால செயற்றிட்டங்கள் எவை?
பதில்: ஆம்; எம்மிடம் நிறைய திட்டங்கள் உண்டு. அவற்றை செயற்படுத்துவதை நோக்கி வேலை செய்கிறோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களில் மேலும் இரண்டு அலுவலகங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்.

வவுனியா, மன்னார் வீதியில் அன்பு இல்லம் என அழைக்கப்படும் வீடு ஒன்றை அமைப்பது திட்டமிடப்பட்டுகின்ற குறிப்பான ஒரு செயற்றிட்டமாகும். போரினால் அநாதைகளாகிய பிள்ளைகளுக்கும் கை, கால், கண் இழந்தோருக்கும் கவனிக்க யாருமே இல்லாத மிகவும் வயதுபோனவர்களுக்கும் பாதுகாப்பான வதிவிடம் வழங்க விரும்புகிறோம். ஏற்கெனவே கொழும்பிலிருந்து இயங்கும் தமிழ் கத்தோலிக்க கன்னியாஸ்த்திரி ஒருவர் 40 பேரைக் கொண்ட இவ்வாறான இல்லமொன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு உதவி செய்ய சிங்கள கத்தோலிக்க கன்னியாஸ்த்திரிகள் குழுக்களாக வருகின்றனர். நாம் இந்த அருட் சகோதரியுடன் இணைந்து NERDO இன் உதவியுடன் அவரது சேவையை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம்.

புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் சில இடம்பெயர்ந்தோருக்கும் கூட விஞ்ஞான முறையிலான விவசாயத்தை கற்பிக்கவும் கடைப்பிடிக்கவுமாக 200 ஏக்கர் அளவியல் மாதிரிப் பண்ணை ஒன்றை அமைப்பதும் எமது இன்னொரு திட்டமாகும். கை கால் இல்லாதவர்களையும் வறுமையில் வாழும் வயோதிபர் ஆகியோரையும் பெருமளவில் கொண்ட வவுனியா நகரத்திலிருந்து 25 மைல் தூரத்தில் உள்ள கிராமம் ஒன்றையும் நாம் இனங்கண்டுள்ளோம். சமுதாயமைய திட்டமாக இந்த கிராமத்தை வேலை வாய்ப்பும் கவணிப்பும் வழங்கும் மாதிரிக் கிராமமாக உருவாக்க நாம் திட்டமிட்டு வருகின்றோம்.

இன்னொரு திட்டம் அம்புலன்ஸ் சேவை ஒன்றை ஏற்படுத்துவது ஆகும். இலண்டனில் உள்ள ஒரு நலன்விரும்பி ஒரு அம்புலன்ஸ் வாகனம் வழங்க சம்மதித்துள்ளார். இதை நாம் கிளிநொச்சியிலிருந்து இயக்குவோம்.

கேள்வி : இப்படி குறிப்பான செயற்றிட்டங்கள் தவிர விரிந்த அளவில் அனைத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தி பெருந்திட்டங்களை அமுலாக்கும் எண்ணம் உங்களிடம் உண்டா?
பதில்: ஆம் எமக்கு அந்த எண்ணம் உண்டு. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழாரான ஒரு அறிஞர் ஒருவர் எமது மீன்பிடித்துறையை மீட்டெடுக்கவும் கட்டியெழுப்பவும் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டமொன்றை தயாரித்துள்ளார். மீன்பிடித்துறை யுத்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன்.

இந்த திட்டத்தின் அடிப்படையில் கரையோர மீன்பிடித் தொழில் புனருத்தாரண நிகழ்ச்சித்திட்டம் என பெயரிடப்பட்ட ஒரு குறுகியகால செயற்திட்டத்தை Nநுசுனுழு வகுத்துள்ளது. தற்போதுள்ள மீளாய்வு வள்ளங்களை புனரமைப்பு செய்வதும் வலைபோன்ற மீன்பிடி வள்ளங்களை புனரமைப்பு செய்வதும் வலைபோன்ற மீன்பிடி உபகரணங்களை வழங்குவதும் இதனுள் அடங்குகிறது. சரியாக அமுலாக்கப்பட்டால் 3300 குடும்பங்களுக்கு இது முழு வேலைவாய்ப்பை வழங்கும்.

விவசாயம் பால்பண்ணை விலங்கு வளர்ப்பு துறைகளை மீண்டும் வளர்த்தெடுப்பதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஒரு அறிஞர் ஏற்கனவே விவசாயத்துக்கான பெருந்திட்டம் ஒன்றை வகுப்பதிலும் செலவை மதிப்பீடு செய்வதிலும் ஈடுப்பட்டுள்ளனர். பால்பண்ணை, விலங்கு வளர்ப்பு அபிவிருத்தி திட்டமொன்றை உருவாக்க இன்னொரு அறிஞர் விரைவில் வருவார்.

எமது இன்னொரு திட்டம் தொழில்திறன் கல்வி, தொழில்நுட்ப கல்வி ஆகியவற்றை வழங்கும் பயிற்சி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகும். ஆரம்பத்தில் முன்னாள் புலி உறுப்பினராக இருந்து, புனர்வாழ்வு அளிக்கப்படுவோருக்கு குறுகிய பாடநெறிகள் மோட்டார் பொறிமுறை குழாய் பொருத்துதல் இலத்திரனியல் தரைத்தோற்றக்கலை என பல துறைகளையும் நாம் இந்த குறுகிய கால பாடநெறித் தராதரப் பத்திரங்களை பெறுவோருக்கு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ளவும் தேவையெனில் உயர்கல்வியை தொடரவும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எண்ணுகிறோம். இறுதியாக இதை நாம் முழுவசதிகொண்ட தொழில்நுட்பக் கல்லூரியாக விருத்தி செய்ய விரும்புகின்றோம்.

அடுத்த எமது திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலாசார நிகழ்வுகளை தொடராக நடத்துவதாகும். புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னைநாள் புலி உறுப்பினர்களே இதில் பங்குப்பெறுவர்.

பிரபலமான சிங்கள திரைப்பட நடிகை அனோஜா வீரசிங்க 60 புனர்வாழ்வு அளிக்கப்படும் புலி உறுப்பினர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்துகின்றார். அவரது அர்ப்பணிப்பு என்னைக் கவர்ந்தது. எமது பிரபலமான பாடகர்களில் ஒருவாரான சாந்தன் இரண்டு பிள்ளைகளுடன் தடுப்பில் உள்ளார். இவர்கள் உழைப்பை ஒன்று சேர்த்து முன்னாள் புலி உறுப்பினர்கள் பற்றி நல்ல எண்ணத்தை உருவாக்கி சமாதானம் நல்லெண்ணம் பற்றிய செய்தியை பரப்பும் வகையில் கலைவிழாக்களை நடத்தத் திட்டமிடுகின்றோம்.

கேள்வி: இந்த விடயங்களில் அரசாங்கம் எங்கு வருகிறது?
பதில்: நான் முன்பு கூறியது போல நாம் சுயாதீனமாக வேலை செய்வோம். ஆனால் அரசாங்கத்தின் பங்காளராக இருப்போம். அரசின் ஆதரவு அல்லது அனுமதியின்றி வடக்கு கிழக்கில் அல்லது இலங்கையின் எந்த பகுதியிலும் எவரும் தொழிற்முடியாது என்பதுதான் இன்றைய நிலை. வடக்கு கிழக்கில் எமக்கு ஆயுதப்படைகளின் முழு ஆதரவும் தேவை இதுவே யதார்த்தமாக இருக்கும்போது எமது சுயாதீனத்தை தக்கவைத்துக் கொண்டு அரசாங்கத்துடன் ஒத்திசைவாக வேலை செய்ய வேண்டும்.

அரசாங்கம் NERDO வைப் பிரச்சினை அல்லாத ஒன்றாகவே பார்க்கின்றது. அரசாங்கம் இதற்கு உதவி கொடுக்கும். தொடர்பாடலுக்கு அனுமதிக்கும். உதாரணமாக, மாதிரிப்பண்ணை அமைக்க அரசாங்கம் எமக்கு நிலம் தரும். அரசாங்கத்தின் வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் போன்ற திட்டங்களுடன் முடியுமானபோது இணைந்து கொள்ளவும் உதவி பெறவும் NERDO எண்ணுகின்றது.

கேள்வி: உங்கள் திட்டம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், அவற்றை நடைமுறைப் படுத்த உங்களிடம் வளங்கள் உண்டா?
பதில்: இல்லை. இன்னும் இல்லை. ஆனால் நாம் ஆரம்ப விருத்தி நிலையில் உள்ளோம். முதலில் அபிவிருத்தியை பொறுத்தவரையில் எமது மக்கள் பல தசாப்தங்கள் பின்னோக்கிப் போய்விட்டனர் என்பதை அங்கீகரிப்பதற்கு தாமும் யாதார்த்த பூர்வமாக இருக்க வேண்டும். உதாரணமாக, வடக்கில் புகையிரதப்பாதை இல்லை.

எமது சமுதாயம் எமது கல்விப் பாரம்பரியம் பற்றி பெருமைப்பட்டு கொண்டிருந்தது. இன்று எமது பாடசாலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. பிள்ளைகள் மரத்தின் கீழ் குந்தியிருந்து படிக்கின்றனர். பிள்ளைகளில் பலர் வறுமை காரணமாகவும் சீருடை, காலணி, பாடப்புத்தகம் என்பன இல்லாததாலும் பாடசாலை செல்வதில்லை. நாம் இந்த நிலைமை பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளோம்.

எமது திட்டங்கள் செயலாக வரத்தொடங்கி மக்கள் எம்மைப்பற்றி அறியவரும்போது வெளிநாட்டிலுள்ள எமது தமிழ் உறவுகளிடமிருந்து பெருமளவு உதவியையும் அனுசரணையையும் பெறுவோம் என நாம் நம்புகின்றோம். ஏற்கனவே சில தகுதிவாய்ந்த வெளிநாட்டில் வாழ்வோர் இங்கு வந்து தமது கல்விசார்ந்த, வாண்மை சார்ந்த நிபுணத்துவத்தை கொண்டு அடிப்படையில் வழங்கச் சம்மதித்துள்ளனர். சிலர் விசேட செயற்றிட்டங்களுக்கு நிதி வழங்க ஒத்துக் கொண்டுள்ளனர். NERDO எமது மக்களின் உதவியுடன் படிப்படியாக நன்றாக இயங்கும் என நம்பிக்கையோடு உள்ளேன்.

கேள்வி: ஊடகங்களுடன் நிறையத் தொடர்புள்ள வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் தமது கருத்தை அழுத்திப் பேசவல்ல. ஒரு பகுதியினர் உங்களுக்கும் NERDO வுக்கும் எதிராக நச்சுத்தனமான பிரசாரம் ஒன்றை செய்துக்கொண்டிருக்கின்றனர். உங்களை அரசாங்கத்தின் கைக்கூலி என்றும் NERDO என்பது வெளிநாட்டிலிருந்து தமிழ் மக்களின் பணத்தை வரவழைத்து அரசாங்கத்தின் கஜனாவில் சேர்ப்பதற்கான ஒரு தந்திரம் என்றும் குற்றஞ் சாட்டுகின்றனர். இப்படியான பாதகமான நிலைமையில் நீங்கள் வெற்றி பெறலாம் என நம்புவது எப்படி?

பதில்: ஆம். இப்போதுள்ள நிலைமை பற்றி நீங்கள் கூறுவது சரியே. ஆனால். இது ஒரு தற்காலிகமான நிலைமை என்றுதான் நான் நினைக்கின்றேன். இந்த எதிரான பிரசாரத்தை அவிழ்த்துவிட்டுள்ள பகுதியினர் சிறுபான்மையினரரே. ஆனால் நீங்கள் கூறியதுபோல் வெளிநாட்டுகளில் இவர்களுக்கு ஊடகங்கள் மீது கிட்டத்தட்ட தனியாதிக்கம் உண்டு. இதனால் இவர்களின் உண்மைப் பலத்தைவிட கூடுதலாக இவர்களுக்கு செல்வாக்கு உள்ளது. இருந்தாலும் அவர்கள் சிறுபான்மையினரே. இவர்களது பிரசாரம் பொய்களிலும் தவறான வழிகளிலும் தங்கியுள்ளது.

நான் நம்பிக்கை வைத்திருப்பதும் தங்கியிருப்பதும் சத்தியம் மீதுதான். முதலில் எமது வலையமைப்பில் எமது செயற்றிட்டங்கள் பற்றியும் செலவுகளையும் இ கிடைத்தபணமஇ; செலவு செய்த பணம் என்பவற்றின் கணக்கறிக்கைகயையும் விரிவாக அவர்களது நேர்மையான விசாரணைகளுக்கும் பதிலளிப்போம். நாம் இந்த விடயங்களில் திறந்த தன்மையுடன் வெளிப்படையாக உள்ளோம் என மக்கள் மேலும் மேலும் அறியவரும்போது இந்த பொய்ப்பிரசாரம் நிலைத்து நிற்கமுடியாது போகும்.

இரண்டாவதாக, எமது ஆதரவையும் உதவிகளையும் பெற்றக்கொண்டவர்கள் உண்மை நிலைமைப்பற்றி வெளிநாட்டில் வாழும் தமது உறவினரருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிப்பார்கள் என்னும் நம்பிக்கையோடு உள்ளோம். அவர்கள் நேரடியாகவே விடயங்களை அவதானிக்கவும் தமது சொந்த முடிவுக்கு வரவும் உதவ தயாராகவுள்ளோம். எம்மிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. எம்மோடு தொடர்பு கொண்டால் வடக்கு கிழக்குக்கு பயணம் செய்ய விரும்புவோருக்கு உதவி செய்யவும் NERDO தயாராகவுள்ளது. தேவையெனில் NERDO வின் பிரதிநிதி ஒருவகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கலாம் எனவும் யோசிக்கின்றோம்.

ஆகவே, படிப்படியாக உண்மை வெல்லும் NERDO வெற்றியடையும்.

கேள்வி: நீங்கள் எப்போதும் நன்மையே நடக்கும் என எண்ணுபவர் என நான் காண்கிறேன். நீங்கள் சில புனர்வாழ்வு அளிக்கப்படுபவர்களுடனான ஒரு சந்திப்பின்போது நம்பிக்கைதான் வாழ்க்கை என கூறும் காட்சியை வீடியோ துண்டம் ஒன்றில் பார்த்தேன். நான் உங்கள் மனோநிலையை விளங்கிக் கொள்கிறேன். ஆனால் இவ்வளவு பயமுறுத்தும் தடைகளையும் மீறி உங்களால் வெற்றியடைய முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்: பிரபாகரன் என்னிடம் வெளிநாட்டு கொள்வனவு (ஆயுதம் வாங்குதல்) பொறுப்பை 1983 இல் தந்தபோது நான் ஒரு கற்றுக்குட்டியாக இருந்தேன். நான் மிகவும் சாதாரண பின்னணி யிலிருந்து வந்தவன். எனது தந்தை அரசியல்ரீதியாக விளக்கமுடையவராக இருந்தார். ஆனால் அவர் ஒரு சாதாரண மீனவராக இருந்தார். நான் உயர் குழாத்தினர் படிக்கும் பாடசாலைகளில் கல்வி பெறவில்லை. எனது ஆங்கில அறிவு குறைவாக இருந்தது. நான் இலங்கை, இந்தியாவுக்கு வெளியே எங்கும் போயிருக்கவில்லை. எல்.ரீ.ரீ.ஈ ஆயுத வியாபாரத்தில் முக்கியமான எவரையும் அறிந்திருந்த அனுபவமில்லாத இயக்கமாக இருந்தது.

ஆயினும் நான் எனது பகுதியை மெதுவாகவும் நிதானமாகவும் விருத்தி செய்தேன். நாங்கள் ஆயுதங்களை பல்வேறுப்பட்ட மூலங்களிலிருந்து உலகளாவிய ரீதியில் கொள்வனவு செய்து வடக்கு கிழக்கில் கப்பலில் ஒழுங்கு தவறாமல் அனுப்புமளான நிலைமைக்கு எல்.ரீ.ரீ.ஈ இன் சக்தியை வளர்த்தேன். நான் வெளிநாட்டில் ஆயுதங்களை கொள்வனவு செய்யும் வரையில் எல்.ரீ.ரீ.ஈயால் யுத்தத்தை வெற்றிகரமாக நீடிக்க முடிந்தது. என்னால் ஆயுதங்களை தொடர்ச்சியாக வாங்கக் கூடியதாக இருந்ததே இதற்கான காரணம்.

சாவையும் அழிவையும் கொண்டுவந்த ஒரு கடமைப் பொறுப்பில் அப்போது என்னால் வெற்றி பெறக் கூடியதாக இருந்தது என்றால் முன்னர் போலல்லாது மக்களையும் வாழ்க்கையையும் அழிப்பதற்குப் பதிலாக மக்களுக்கு உதவுவதும் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதுமான இலக்கை கொண்ட இந்தப் புதிய கடைமைப் பொறுப்பில் ஏன் என்னால் வெற்றியடைய முடியாது?

கேள்வி: நீங்கள் மனந்தளர்ந்து போகவேண்டுமென இதைக் கூறவில்லை. அத்துடன் உங்கள் ஆற்றலையும் விசேட திறமையையும் நான் மறுத்துரைக்கவும் இல்லை. ஆனால் இங்குள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் நீங்கள் தடுப்புக் காவலில் இருக்கிறீர்கள். சுதந்திர மனிதனாக இல்லை. முன்பு போலன்றி விடயங்களை செய்வதற்கு உங்களால் சுதந்திரமாக நடமாட முடியாது. அதோடு உங்களுக்கு வயது போய்விட்டது. நல்ல ஆரோக்கியத்துடனும் இல்லை. அத்துடன் உங்களுக்கெதிராக அதிதீவிர அமுக்கக் குழு ஒன்று கடுமையாக வேலை செய்கின்றது. இதனால்தான் நான் சந்தேகப்படுகிறேன்.

பதில்: ஒருவிதத்தில் நீங்கள் சொல்வது சரி. ஆனால் நான் வெற்றிப்பெறுவேன் என நினைக்கின்றேன். ஆம், தடுத்து வைத்திருக்கப்பட்டிருப்பதும் காரியங்களை நேரில் போய் செய்வதற்கு பதிலாக தொலைபேசி, ஸ்கைப், இணையம் என்பவற்றை பயன்படுத்த வேண்டியிருப்பதும் விரக்தியடையச் செய்யும்தான். ஆனால் நான் யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும். நான் தடுப்புக்காவலில் இருக்கக்கூடும். ஆனால் குறைந்த்பட்சம் மக்களுக்காக சிலவற்றை செய்யும் வாய்ப்பு எனக்கு இருக்கிறது என நினைப்பதுண்டு.

என் மனதின் ஆழத்திலிருந்து ஒரு விடயத்தை உங்களுக்கு சொல்கிறேன். இது எனக்கு வழங்கப்பட்ட மூன்றாவது பெரிய பொறுப்பும் வாய்ப்பும் ஆகும். முதலாவதுதான் பிரபாகரனால் ஆயுதக்கொள்வனவு செய்ய நியமிக்கப்பட்டது. நான் அதில் வெற்றிப்பெற்றேன். இரண்டாவது பொறுப்பு நான் மீண்டும் இயக்கத்தில் இணைந்தபோது யுத்த நிறுத்தமொன்றை கொண்டு வருவதும் தலைமையையும் இயக்கத்தையும் காப்பாற்றுவதாகவும் இருந்தது. நான் அதில் தோல்வி அடைந்தேன்.

இப்போது இது எனது மூன்றாவது பெரிய கடமைப் பொறுப்பு. இதில் எனது நோக்கமும் தூரநோக்கும் மக்களுக்கு உதவுவதாக உள்ளது. நான் ஒரு இயக்கத்துக்கு ஆயுதம் வழங்கவோ அல்லது அதை காப்பாற்ற முயலவோ இல்லை. இந்த முறை நான் மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அவர்களுக்கு உதவுகின்ற உயர்ந்த பெறுமதிமிக்க பொறுப்பில் இருக்கிறேன். எனவே நான் நிச்சயம் வெற்றிபெறுவேன்.

கேள்வி: மக்களுக்கு உதவும் உங்கள் இலட்சியத்தில் தடையோ கட்டுப்பாடோ இல்லாமல் நீங்கள் ஈடுபடும் வகையில் உங்களை விடுவிக்கும்படி நீங்கள் ஏன் வேண்டுகோள் ஒன்றை விடுக்கக் கூடாது?

பதில்: இரண்டு காரணங்களால் நான் இப்படியான வேண்டுகோளை விடுக்க மாட்டேன். முதலாவதாக ஆயிரக் கணக்கான முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் நான் சுதந்திரமாக இருக்க விரும்பவில்லை. நிலைவரம் முன்னேற்றம் கண்டு முன்னாள் உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் விடுவிக்கப்பட்டு அல்லது நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படும் நிலைமை வரும்போது நானும் சுதந்திரமாக இருப்பது பற்றி யோசிக்க முடியும்.

அடுத்த காரணம், இப்படி செய்வது அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஏற்கனவே அரசாங்கம், குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் என் காரணமாக எதிரக்கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார். இதை மேலும் சிக்கலாக்க நான் விரும்பவில்லை. சரியான நேரத்தில் பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளருடன் ஆலோசித்து எல்.ரீ.ரீ.ஈ பற்றி முழுதான ஒரு கொள்ளைத் தீர்மானத்தை எடுப்பார். எனது கதி என்னவாகும் என்பதை நான் அறியேன். அதுவரை இந்த நிலைமையில் கீழ் எது முடியுமோ அதை நான் செய்வேன்.

ஒரு நன்மையான விடயம் என்னவென்றால் அர்ப்பணிப்பு உள்ள ஒரு அணி NERDO வைச் சுற்றி மெதுவாக உருவாகின்றது. எனவே எனது நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் இந்த அணி உற்சாகமாக வேலை செய்யும். ஆனால் இயலுமாயின் என்னை வவுனியாவில் நிலைப்படுத்தும்படி நான் கேட்டிருக்கிறேன்.

கேள்வி: அரசாங்கம் உங்களை பயன்படுத்திக் கொள்கின்றது உங்களை பின்னர் தட்டிக் கழித்துவிடும் என்றும் சிலர் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: நான் நம்பிக்கையில் விசுவாசத்தில் நல்லெண்ணத்தில் வேலை செய்கின்றேன். நான் அப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால், விவாதத்திற்காக அப்படி நடக்கும் என வைத்துக் கொள்வோம். அப்போதும் கூட குறைந்தப்பட்சம் இப்போது நான் செய்வது போன்று சிலருக்கு உதவி செய்வதில் வெற்றிக் கண்டிருப்பேன். அது எனக்கு போதும்.

கேள்வி: மறுபுறத்தில் நீங்கள் அரசியலுக்கு வருவதுபற்றி பல தமிழ் அரசியல்வாதிகள் கவலையடைந்துள்ளனர். அப்படியான எண்ணம் ஏதும்?
பதில்: இல்லை. இயலுமாக இருந்தாலும்கூட நான் அரசியலுக்கு வரவிரும்பவில்லை. தமிழர்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அரசியலை நடத்தட்டும். நான் செய்ய விரும்புவதெல்லாம், புனர்வாழ்வு வழங்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களினதும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரினதும் நலன்களை கவனிப்பதையே. இப்போது எமது மக்களுக்கு தேவையாயிருப்பது அரசியல்வாதிகள் அல்ல. மாறாக மனித நேயர்களே.

கேள்வி: NERDO வடக்கு கிழக்கில் உள்ள சகல மக்களுக்காகவும் உழைக்குமா?
பதில்: அதுதான் எனது நீண்டகால நோக்காக உள்ளது. ஆனால் இப்போதைக்கு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்தோர் மீது மட்டும் எமது கவனத்தைக் குவிப்போம்.

கேள்வி: நாம் நீண்ட நேரம் பேசிவிட்டோம். இன்னும் பேச வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. இன்னொரு நேரத்தில் பேசக் கூடியதாக இருக்கலாம். ஆனால் நாம் முடிக்கும்முன் நீங்கள் இலங்கையருக்கென பொதுவாகவும் தமிழருக்கெனப் குறிப்பாகவும் சொல்ல விரும்பும் செய்தி உண்டா?

பதில்: தொலைதூரத்திலிருக்கும் கனடாவிலிருந்து தொலைபேசிமூலம் இந்த உரையாடலை நடத்தியதற்கு நன்றி. இதை நாம் விரைவில் மீண்டும் செய்யவேண்டும். அப்போது NERDO எவ்வளவு சாதித்துள்ளது என்பதை உங்களுக்கு சொல்லக் கூடியதாக இருக்கும்.

ஆம். என்னிடம் இரண்டு செய்திகள் உள்ளன. முதலாவது எனது தமிழ் உறவுகளுக்கு நான் சொல்வது இதுதான்: போர் முடிந்துவிட்டது. பிரபாகரன் மாற்றும் சிரேஷ்ட தலைவர்கள் எம்மோடு இல்லை. தமிழ் ஈழம் ஒரு தோற்றுப்போன இலட்சியம். ஆயுதப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்னும் பொறுப்பில்லாதவர்கள் கூற்றை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். தயவு செய்து மோதல் மனப்பாங்கை விட்டொழித்து உடைந்துப்போன எமது மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுங்கள். வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடமும் வீணான அலங்காரப்பேச்சுகளை தவிர்த்து, அதற்கு பதிலாக இலங்கைத் தமிழர்கள் ஏனையோருடன் இணைந்து செழிப்புடனும் ஒத்திசைவுடனும் வாழ உதவுங்கள் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு இணக்கப்பாடும் ஒத்துழைப்பும்தான் தேவை. மோதலும் முரண்பாடும் தேவையில்லை.

இரண்டாவது செய்தி எனது இலங்கை உறவுகளுக்கானது. எல்.ரீ.ரீ.ஈ ஐ சேர்ந்த நாங்களும் வேறு போராட்டக் குழுக்களும் எமது இழந்துப்போன உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க ஆயுதப்போராட்டத்தை தொடங்கினோம். நாம் தமிழ் ஈழம்தான் இதற்கு விடை என நினைத்தோம். அந்த இலட்சியம் எமது வழிமுறைகளை நியாயப்படுத்தும் என நினைத்தோம். எமது ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கை மக்களின் பெரும் துன்பத்துக்கும் கெடுதிக்கும் நாம் காரணமாகினோம். சிலவேளைகளில் நாகரீகமடைந்த நடத்தையில் எல்லா நியமங்களையும் பார்க்கும்போது நடந்தவற்றையிட்டு அதிர்ச்சியடைவேன். எல்.ரீ.ரீ.ஈ யின் ஒரு சிரேஷ்ட தலைவர் அல்லது முன்னாள் தலைவர் என்ற வகையில் இதற்காக இலங்கையர்களை எல்லோரிடமிருந்து மனதார மன்னிப்புக்காக இறைஞ்சுகின்றேன். தயவு செய்து எம்மை மன்னித்து சகல இலங்கையருக்குமாக ஒரு நல்ல எதிர்காலத்தை அமைப்பதில் முன்னிற்க எமக்கு உதவுங்கள்.

கேள்வி: இந்த உரையாடலுக்கு நன்றி. உங்கள் நல்ல நோக்கங்கொண்ட முயற்சிகள் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன். தனிப்பட்ட மீட்சிக்கான உங்கள் பயணமும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். நீங்கள் உங்கள் சேரிடத்தை அடைவீர்கள் என நான் நம்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன்.

பதில்: உங்கள் வாழ்த்துக்களுக்கும் நேர்காணலுக்கும் மீண்டும் நன்றி கூறுகிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை.

டி.பி.எஸ் ஜெயராஜ் கூறுகிறார்:

சென்ற வாரம் வெளியிடப்பட்ட இந்த நேர்காணலின் மூன்றாம் பாகத்தில் இரண்டு தவறுகள் நேர்ந்து விட்டன.

முதலாவது. பிரபாகரனின் குடும்பத்தை காப்பாற்றும் பிழைத்துப்போன திட்டத்தின் செலவு பற்றியது. இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் என தவறுதலாக கூறப்பட்டிருந்தது. அது உண்மையில் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகவிருந்தது.

இரண்டாவது தவறு முன்னால் எல்.ரீ.ரீ.ஈ இன் அரசியல் பிரிவுத் தலைவரான நடேசனுடன் தொடர்பு கொண்டிருந்த மகேந்திரன் என அழைக்கப்படும் தமிழ் நாட்டு அரசியல்வாதியொருவர் பற்றிக் கூறும்போதும் ஏற்பட்டதாகும்.

இங்கு குறிப்பிடப்பட்ட மகேந்திரன் தமிழ்நாடு மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிச் செயலாளர் சி.மகேந்திரன் ஆவார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்ஸிஸ்ட்) இன் அல்லது (CPI-M) இன் தமிழ்நாடு சட்ட சபை உறுப்பினர் கே. மகேந்திரன் என தவறுதலாக கூறப்பட்டிருந்தது. இரண்டு தவறுகளுக்கும் வருந்துகிறோம்.

(தமிழில்: ந. கிருஷ்ணராசா)

”ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்

Linganathan_giving_speechதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே நிர்வாக அலகான வவுனியா நகரசபை தற்போது இயங்க முடியாத நிலையில் உள்ளது பற்றியும் அந்நகரசபையில் இடம்பெற்ற நிதி நிர்வாகச் சீர்கேடுகள் பற்றியும் விரிவான ஒரு அறிக்கை வவுனியா நகரசபையின் சர்வகட்சி உறுப்பினர்களாலும் கையெழுத்திடப்பட்டு வெளியாகி இருந்தது. இவ்வறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான   முன்னாள் வவுனியா மேயரும் தற்போதைய வவுனியா நகரசபையின் புளொட் அமைப்பின் உறுப்பினருமான ஜி ரீ லிங்கநாதன் ஓகஸ்ட் 2ல் ‘தேசம்நெற்’க்கு வழங்கிய நேர்காணல்.

வவுனியா நகரசபை தொடர்பாக ‘தேசம்நெற்’இல் வெளியான முன்னைய பதிவுகள்:

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை

இந்நேர்காணலின் பின் ஜி ரீ லிங்கநாதன் சமாதானத்திற்கும் மீளுறவுக்குமான கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன் வவுனியா மாவட்ட செயலகத்தில் ஓகஸ்ட் 14ல் சாட்சியமளித்தார். அதிலிருந்து சில பகுதிகளை இங்கு பதிவு செய்து கொண்டு நேர்காணலுக்குச் செல்வோம்.

‘’நடந்தவைகளை மறந்து இனிவரும் காலங்களில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறியிருந்தார். உண்மையில் நாமும் அதைத்தான் விரும்புகிறோம். இருந்தாலும்கூட மறைந்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் சில்வா “இந்த நாடு இரு மொழி பேசுவதாக இருந்தால் ஒரு நாடாகவும் ஒரு மொழி பேசுவதாக இருந்தால் இரு நாடாக வரும்” எனக் கூறியிருந்தார். இதை ஏன் நான் கூறுகிறேன் எனில் நடந்தவைகளை மறப்பதென்பது இலகுவான விடயமல்ல. இருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் 30 ஆண்டுகளாக மிக இன்னல்களுக்கு மத்தியில் நாங்கள் இன்றைக்கு நிர்க்கதி அற்ற நிலையில் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை.

இன்று தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒன்று கௌரவமாக எல்லா மக்களும் வாழக்கூடிய அரசியல்த் தீர்வு முன்வைக்கப்பட வேண்டியது அவசியமாக இருக்கின்றது. அடுத்ததாக இந்த யுத்தத்தின் மூலம் இடம்பெயர்ந்து தங்களுடைய அன்றாட வாழ்வைக்கூட வாழமுடியாது இருக்கின்ற மக்களை சிறந்த முறையில் வாழவைக்க வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அடுத்து பல ஆண்டுகளாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர், யுவதிகளை அவர்களது விசாரணைகளை முடித்து விடுதலை செய்ய வேண்டும்.

இறுதியாக சுதந்திரத்திற்கு பின்னிருந்தே வடக்கு – கிழக்கில் ஓர் அத்துமீறிய குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டமையும் அந்த இனப் பிரச்சினைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. இதற்கு அரசாங்கம் பின்ணணியில் செயற்படுவதாக நாம் சந்தேகிக்கின்றோம். இவ்வாறான செயற்பாடு ஜனாதிபதியின் இன ஒற்றுமைக்கும் சுபீட்சமான எதிர்காலத்திற்குமான செயற்பாட்டிற்கான முட்டுக்கட்டையாக அமையும் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்’’
–சமாதானத்திற்கும் மீளுறவுக்குமான கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன் ஜி ரீ லிங்கநாதன்– ஓகஸ்ட் 14, 2010.

ஜி ரீ லிங்கநாதனுடனான நேர்காணல்:

தேசம்: வவுனியா நகரசபை தொடர்பாக நகரசபை உறுப்பினர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இருந்து இந்த நேர்காணலை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். வேறுபட்ட அரசியல் அமைப்பினர் ஒன்றிணைந்து நகரசபையின் அடிப்படை ஜனநாயக நடைமுறைகளை பரீட்சிக்க முயன்றுள்ளீர்கள். இந்த மாதிரியான நடவடிக்கைகள் மிகமுக்கியமானது. ஜனநாயகத்துடன் ஜக்கியப்படல் என்பதன் மூலமே தொடரச்சியாக சமூக சீர்கேடுகளை நாம் திருத்திச் செல்லாம்.
Linganathan_with_Waterpumbலிங்கநாதன்: நாங்கள் இந்த விடயத்தில் சரியாகவே செயற்படுகிறோம். செயற்படுவோம். காரணம் பெரிய பெரிய வசனங்களை பேசி, மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இப்ப நாங்கள் இப்படியான கட்டமைப்புக்களில் மாற்றங்களை உருவாக்க முனைகிறோம். அதன் மூலம் வருங்கால எமது பிள்ளைகளுக்காக இப்படியான விடயங்களை சொல்லிக் கொடுத்துவிட்டு போகலாம்.

நாங்கள் எதிர்வரும் நிர்வாக கூட்டத்தில் எமது 19 கோரிக்கைகளுக்கும் பதில் வரும் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் சரியான ஒரு நிர்வாகம் என்றால் ஒரு விசேட கூட்டத்தை கூடி இது பற்றி கலந்தாலோசித்திருக்கலாம். ஏனென்றால் இந்த கையெழுத்திட்டவர்களில் தமிழ்தேசிய முன்னணி, புளொட், பொதுசன ஜக்கியமுன்னணி இந்த மூன்று அமைப்புக்களையும் சேர்ந்த 8 உறுப்பினர்கள் தானே இதை செய்திருந்தோம். இது ஒரு கட்சி ரீதியாகவோ எதிர்க்கட்சி என்றோ செய்யவில்லை. ஆகவே அவர்கள் ஒரு விசேட கூட்டத்தை கூடியிருக்கலாம். அவர்கள் அப்படி செய்யவில்லை.

தேசம்:இந்த விடயங்களை ஒரு நகராட்சியிடமே கேட்டுள்ளீர்கள். இவ்வளவு காலப்போராட்டத்தின் பின்பும் இப்படியான நிர்வாக சீர்கேடுகளைப் பற்றி அக்கறையில்லாமல் இருப்பது வெட்கக்கேடான செயல் அல்லவா.
லிங்கநாதன்:நாங்கள் பெருமையாக சொல்லவில்லை. 1994ம் ஆண்டு அந்த சபையை பெறுப்பெடுத்து 1999 வரையில் புலிகளின் கெடுபிடிகள் ஆமியின் கெடுபிடிகள் அமைச்சர்களின் கெடுபிடிகள் இவற்றுக்குள்ளும் நாம் மிகத்தரமான நிர்வாகத்தை செய்துள்ளோம். காரணம் இது எங்களுடைய மக்களுடன் சம்பந்தப்பட்ட விடயம் உரிமைப் போராட்டத்தில் பாரிய தவறுகள் நடைபெற்றுவிட்டது. அதனால் குறைந்தது மக்களுக்கு இந்த சாதாரண வாழ்க்கையில்  நிம்மதியான வாழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்பதில் எமக்கு அக்கறை இருந்தது அதற்காக செயல்பட்டோம்.
இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே நாம் பல சிரமதான பணிகளையெல்லாம் செய்துள்ளோம்.

எமது கீழ்மட்டத்தில் நடைபெற்ற சில தவறான நடவடிக்கைகள் காரணமாகவும் அதைவிட தேசியத்தின் பெயரால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். தேசியத்தின் பெயரால் சிந்திக்க தள்ளப்பட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலும் நகராட்சி தேர்தலும். மக்களுக்கு இன்றும் அந்தத் தேசிய உணர்வுள்ளது என்பதனைக் காட்டியுள்ளன. ஆனால் கவலைக்குரிய விடயம் தமிழ் தேசியத்துக்கு தலைமை தாங்கக் கூடியவர்கள் எவரும் சுதந்திரத்திற்கு பின்னர் இல்லை என்பதே உண்மை.

தேசம்:தேசியத் தலைவர்கள் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியானால் தந்தை செல்வா முதல் தம்பி பிரபா வரையான தலைவர்கள்?
லிங்கநாதன்:இவர்கள் பற்றி பல விமர்சனங்கள் உண்டு. அ அமிர்தலிங்கம் போன்றவர்களை தமிழ் மக்கள் பாவித்திருக்கலாம். அவர் உயிருடன் இருந்திருந்தால் எமது நிலைமை வேறு. ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தீர்கள் என்றால் அது தந்தை செல்வா என்றால் என்ன? இன்றுள்ள சிறீரெலோ உதயன் ஆக இருந்தால் என்ன தேசியத்தின் பெயரால் ஏதோ செய்ய வெளிக்கிட்டதே தவிர, வடிவேல் சொன்னமாதிரி உட்கார்ந்து இருந்து யோசிக்கவில்லை.

தேசம்:உங்கள் அறிக்கையில் நீங்கள் சொல்கிறீர்கள் நகரசபைக்கு கட்சி பேதமின்றி நிபந்தனையின்றி ஆதரவளித்தோம் என்று. அதை கொஞ்சம் விபரியுங்கள்?
லிங்கநாதன்:கடந்த தேர்தலில் எமக்கும் தமிழ் தேசிய முன்னணிக்கும் 3 ஆசனங்கள் தான். 143 வாக்குகள்தான் அவர்களுக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம். அதனால் அந்த 2 போனஸ் ஆசனங்கள் தமிழ் தேசிய முன்னணிக்கு கிடைத்தது. ஆனாலும் அவர்களின் பதவியேற்பு வைபவத்தின்போது நாங்கள் அவர்களுக்கு சொல்லியிருந்தோம், ‘தேர்தல் முடிந்து விட்டது. அது ஜனநாயகப்படி நடந்துள்ளது. நீங்கள் சரியானதை செய்யுங்கோ, நாங்கள் ஆதரவளிப்போம்’ என்று. இதை நாங்கள் மேயருக்கும், அவைக் கூட்டத்திலும் சொல்லியுள்ளோம். இன்று வரையில் இவர்களது நடவடிக்கைகளில் எமக்கு திருப்தியில்லை  இன்று தேர்தல் முடிந்து 10வது மாதம் எனக்கும் எமது தோழர்களுக்கும் பொது மக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் ஏதாவது செய்யச் சொல்லி. மக்களிடமிருந்து பல உறுத்தல்கள் வந்த வண்ணமே உள்ளன. எனக்குத்தான் விருப்பு வாக்குகளில் அதிகமான வாக்குகளை மக்கள் அளித்திருந்தனர். நான் முன்பு மேயராக இருந்தவன். ரிஎன்ஏயின் ஆட்கள் கூட என்னிடம் முறைப்படுகிறார்கள். என்ன நடககிறது என்று கேட்கிறார்கள். அவ்வளவு சீர்கேடுகள் நடக்கின்றன. பல பொது மக்களுக்கு இவை நன்றாகவே தெரியக்கூடிய மாதியாக நடக்கிறது.

சிவசக்தி ஆனந்தன் நேரடியாக தலையிட்டு ஆதரவளிக்கும்படி கேட்டார். நான் கேட்டேன் தனிப்பட நாதனுக்கு ஆதரவளிப்பதா? அல்லது ரிஎன்ஏக்கு ஆதரவளிப்பதா? என்று. அவர் சொன்னார் ரிஎன்ஏக்கு தான் ஆதரவளிக்க வேண்டும் என்று. நான் சொன்னேன் நாம் எல்லோரும் பேசுவோம் என்று. அவர்களில் மொத்தம் 5 பேர் கொண்டு வந்த இந்த தெரிவை நாங்களும் சேர்ந்து இந்த புரப்போசலுக்கு ஆதரவளித்தோம்.

தேசம்:நீங்கள் சொல்லுகிறீர்கள் மக்களின் பிரதிநிதிகள், சுகாதார உத்தியோகத்தர்கள் முறைப்பாடு செய்வதாக. அது என்ன?
லிங்கநாதன்:இவர்கள் ஆசனத்திற்க்கு வந்து இத்தனை நாளாக ஒன்றும் செய்யவில்லையே. எல்லாம் அரைகுறை. தனக்கும் தனது உப மேயருக்கும் ஏசி பூட்டியதும், ரோலிங் கதிரை போட்டதும், தமக்கு வாகனங்கள்(கார்) வாங்கியதும் தான்.

Linganathan_Cleaning_a_Wellநாங்கள் ஒரு புரோகிராமை போட்டு அதை மக்களிடம் கையளித்துவிட்டு அன்றே அடுத்த திட்டத்தை போடுவோம். மக்களிடம் கேட்டு அடுத்து என்ன செய்ய வேணும் என்று தானே நடந்து கொண்டுள்ளோம். மக்களிடம் கேட்டு பாருங்களேன் நாங்கள் எப்படி நடந்துள்ளோம் என்று. அதில் இருந்துதானே நாங்களும் இவர்களின் நிர்வாக சீர்கேடு என்பதை ஒத்துக்கொள்கிறோம். இவர்களிடம் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி ஒரு வருடம் முடியும் போது என்ன செய்தீர்கள் என்று கேட்டால் இவர்கள் தங்களுக்கு வாங்கிய பிக்கப் வாகனத்தை கொண்டு வந்து நிற்பாட்டிவிட வேண்டியது தான். வேறு என்ன சொல்ல இருக்கிறது.

தேசம்: கோவில்குளம் பாலர் பாடசாலையின் நிதிபிரச்சினை விடயம் பற்றி அறிகிறோம். அதன் விபரம் என்ன?
லிங்கநாதன்:முன்பு ஆரம்ப கல்விக்கு நாங்கள் எந்த பணமும் செலவு செய்ய முடியாது. இப்ப புதிய சட்டம் வந்துள்ளது. செலவு செய்யலாம். அதற்கு செலவு செய்ய திட்டம் போட்டுள்ளனர். ஆனால் அதுபற்றி எந்த விளக்கமும் தரப்படவில்லை. அவர்கள் விளக்கம் தர வேண்டும்.

தேசம்:எப்படி சபை உறுப்பினர்க்கு தெரியாமல் இவைகள் நடைபெறுகின்றது?
லிங்கநாதன்:அதிகமான விடயங்கள் சபை உறுப்பினர்க்கு தெரியாமலேதான் நடைபெறுகின்றது.

தேசம்:நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் அது ஜனநாயகமாத் தெரியவில்லையே?
லிங்கநாதன்:புலிகளும் தாங்கள் ஒரு ஜனநாயகப்படியேதான் நடந்தோம் என்கிறார்களே.

தேசம்:புலிகள் இருக்கட்டும். இப்படி பெருந்தொகைப் பணத்தை செலவு செய்வதென்றால் சபையின் அங்கீகாரம் பெற வேண்டும் இல்லையா?
லிங்கநாதன்:அதுதான் இவர்கள் மீதுள்ள பெரிய பிரச்சினையேயாகும். மேயர் சாதாரணமாக 10 ஆயிரம் தான் செலவு செய்யலாம். அதை நாங்கள் முதல் கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கு அங்கீகரித்திருந்தோம். பின்பு ரிஎன்ஏ உறுப்பினர்களின் உள் முரண்பாடுகள் காரணமாக இரு ரிஎன்ஏ உறுப்பினர்கள் தான் அத்தொகையை  மீளவும் ஒரு லட்சத்திலிருந்து 10 ஆயிரத்திற்கு குறைத்துக் கொண்டனர்.

Linganathan_Honering_Celebrationகூட்டம் நடக்கும்போது நான் (முன்னாள் மேயர்) இருப்பது இவர்களுக்கு ஒரு சிக்கல். சில கூட்டங்களில் நான் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கூட்டங்களில் இவர்கள் தாங்களே இப்படி முன்மொழிவதும், வழிமொழிவதுமாக எல்லாம் தடல்புடலாக நடந்தேறியும் உள்ளது. இதுபற்றி எல்லா அங்கத்தவர்களுக்கும் ஒரு முறை கூட்டத்தில் சொல்லியிருந்தேன். காரணம் ஒரு நாளைக்கு நாம் எல்லோரும் விசாரணைக்கு உட்படலாம் என எச்சரித்திருந்தேன். நன்றாக என்ன பேப்பரில் உள்ளது என்பதை சரியாக வாசித்துவிட்டே ஆதரியுங்கள் என்றும் பொறுப்புணர்வில்லாமல் ஆதரித்துவிட்டு அரசிடம் சிக்கலில் மாட்டவேண்டாம் எனவும் சொல்லியிருந்தேன். இவைகளும் இவர்களின் உட்பூசல்களுமேதான் இவர்களின் இந்த பிரச்சினையின் விஸ்வரூபமாகும்.

தேசம்:அது என்ன உட்பூசல் என்று சொல்ல முடியுமா?
லிங்கநாதன்:இப்போ உதவி மேயராக உள்ள ரதனே ரிஎன்ஏக்குள்ளே விருப்புவாக்குளில் அதிக வாக்குகளை எடுத்தவராவார். ரதனை மேயராக்காமல் நாதனை தமிழரசுக் கட்சியின் மூத்ததலைவர் என்ற காரணத்தால் மேயராக்கினர். மேயர் பதவியேற்பு வைபவத்தன்றே ரதன் ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். தானே அதிக வாக்கு பெற்றவர் என்றும் தானே மேயராக வர வேண்டும் என்றும். ஆனால் இரண்டு வருடங்களில் தான் மேயராக்கப்படுவேன் என்றும் இந்த நோட்டீஸில் வெளியிடப்பட்டிருந்தது. அன்றிலிருந்து இந்த மேயருக்கும் உதவி மேயருக்கும் இன்று வரையில் பிரச்சினையாகவே உள்ளது. இதன் பின்னர் மற்ற உறுப்பினர்களும் இந்த விடயங்களை திரும்ப திரும்ப பேசி மேயருடன் குழப்பமடைந்துவிட்டனர்.

தேசம்: இந்த நகரசபை நடவடிக்கைகளில் நிதி நிர்வாகச் சீர்கேடுகளுடன் சாதிய வேறுபாடு பற்றிய பிரச்சினையும் எழுந்துள்ளது அல்லவா?
லிங்கநாதன்:அப்படியான சில குற்றச்சாட்டுக்கள் உண்டு. அண்மையில் நடைபெற்ற சுகாதாரப் பகுதியில் ஒரு வேலை நிறுத்தம் நடைபெற்றது அங்கே சாதி வேறுபாடு காட்டி நடந்தாலேயே இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. (அதன் முழுவிபரம் தேசம் வெளியிட்டிருந்தது)

தேசம்:டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதிக்கு இன்னமும் கணக்கு காட்டப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லிங்கநாதன்:இன்னமும் வழங்கப்பட்ட நிதிக்கு என்ன நடக்கிறது? எப்படி செலவு செய்யப்பட்டது? போன்ற விபரங்கள் யாருக்கும் தெரியாது. இன்னமும் கணக்கு காட்டப்படவில்லை.

தேசம்:மேயருக்கு வாங்கப்பட்ட வாகனம் சம்பந்தமாக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
Linganathan_in_a_prize_givingலிங்கநாதன்:சபை அங்கீகாரம் கொடுத்துள்ளது அதற்குபிறகு ரென்டர் கோல் பண்ணப்பட வேண்டும். வாகனம் தெரிவு செய்யப்பட்டால் ஒரு ஓட்டோ மொபைல் பொறியியலாளர் மதிப்பீடு வழங்கப்படல் வேண்டும். இப்படியான ஒழுங்கு முறைகள் அங்கு நடைபெறவில்லை. ஒழுங்கு விதிகளை மீறுவதாகத்தானே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் இவைகளை சிறிய விடயங்களாக விட்டுவிட்டுப் போகலாம். ஆனால் இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. இவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டிய விடயங்களை கவனம் எடுத்து செய்து கொண்டிருந்தால் இப்படியான விடயங்கள் வெளித்தோன்றாது. அபபடி மக்களுக்கான வேலைகளை செய்யாமல் இருந்தால் இது வெளியில் தெரியவரும். இவைகள் தான் கண்ணுக்கு பெரிதாகத் தெரியவரும். நாங்கள் நகராட்சியில் இருக்கும் போது செய்த பல விடயங்களை மக்கள் இன்னமும் நினைவில் கொண்டுள்ளார்கள். அதனால் தான் இவ்வளவு தொகைப் பணத்தை ஏசி போடவும் வாகனத்திற்கும் செலவு செய்த நீங்கள் மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதை மனவருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

தேசம்:இந்த பிரச்சினைகளை விட வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் நடக்கிறதா? இவைபற்றி உங்களுக்கு ஏதாவது தெரியப்படுத்துவார்களா? அவற்றுடன் உங்களுக்கும் தொடர்புகள் உண்டா? அல்லது அரசு தனக்கு நினைத்தமாதிரியே சிங்கள பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி நடத்துகிறார்களா?
லிங்கநாதன்: வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் 4 பிரதேச செயலகங்கள் உள்ளது. இதில் மூன்று தமிழ்ப் பிரிவும் ஒரு சிங்களப் பிரிவுமாக உள்ளது இது நீண்டகாலமாக உள்ள விடயம். ஆனால் வன்னியில் மிகப்பெரிய பயங்கரமான விடயம் உருவாக இருப்பதாக எல்லா தரப்பிலும் சொல்லப்படுகிறது. நிரந்தர முகாம்களை அமைத்து அந்த படைவீரர்களுக்கு நிரந்தர வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் எங்களுக்கு (புளொட்) உள்ள பிரச்சினைகள் என்ன என்றால் நகரசபையிலும் அதிகாரம் இல்லை, பாராளுமன்றத்திலும் அதிகாரம் இல்லை. ஆனபடியால் எங்களால் இந்த விடயங்களில் அடி எடுத்து வைக்கமுடியாமல் உள்ளது.

Linganathan_giving_speechஆனால் இன்று எல்லாவற்றிக்கும் முழு பொறுப்பானவர்கள் ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மந்திரிசபைக்கு கட்டுப்பட்டவர். இதைவிட நாங்கள் மீண்டும் எழுவோம் என்று தேர்தல் காலத்தில் பிரசுரங்கள், பனர்கள் மட்டும் போட்டுவிட்டு இன்று ஏனோ தானோ என்று இருக்கிறவர்கள் தான் மக்களின் பிரச்சினைகளை பார்க்க வேண்டும். முன்பு புலி இருக்கும்போது சொன்னார்கள் அபிவிருத்தி வேண்டாம். உரிமை வேணும் என்றார்கள். இன்று உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லாத நிலையிலேயே தான் நாங்கள் தமிழ் மக்கள் இருக்கிறோம்.

தேசம்:இப்போதுள்ள அகதி முகாம்களின் நிலைப்பாடுகள் என்ன?
லிங்கநாதன்:அகதி முகாமில் 50லிருந்து 60ஆயிரம் மக்கள் வரையில் இருக்கிறார்கள். அதில் புதுக்குடியிருப்பு போன்ற சில இடங்கள் இன்னமும் அரசு முழுமையாக மக்களை போக விடவில்லை. காரணம் கண்ணி வெடி துப்பரவு பண்ணவில்லை என்று சொல்லுகிறார்கள். அதைவிட அங்கு உள்ள ஆயுதங்கள் வேறு என்ன நிலத்திக்கு கீழ் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து முடியவில்லை என்றும் நான் தனிப்பட நினைக்கிறேன். இந்த காரணங்களால் இந்த மக்கள் முகாமில் தடைப்பட்டு இருக்கிறார்கள்.

11000 பேர் சரணடைந்தவர்கள். அதைவிட இன்னும் எத்தனையோ பேர் அகதி முகாமில் இருக்கிறார்கள். இவர்களிடம் டம் பண்ணிவைத்த பொருட்கள் எங்கே என்ன என்பது தெரிந்தவர்கள் இந்த நிலையில் ஆட்களை வெளியே விட்டால் தவறுகள் நடக்க சந்தர்ப்பங்கள் வரக்கூடும் என்பதுதான் அரசின் இராணுவத்தின் நினைப்பு என்று நான் கருதுகிறேன். இதில் நியாயம் இருக்கிறது. இவைகள் துப்பரவு செய்யப்பட்ட பின்பு மக்கள் எல்லோரும் மீள குடியேற்றப்படுவார்கள். அரசாங்கம் எல்லாரையும் திரும்பக் குடியேற்றும். அதை நம்பி இருக்கலாம்.

தேசம்: வவுனியாவில் உள்ள மற்றைய இயக்கங்கள் பற்றி என்ன சொல்ல முடியும். வவுனியாவில் சில  பிரச்சினைகள் கடத்தல்கள் நடப்பதாக அறிகிறோம். சிலர் தனிப்பட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்றும் சிலர் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Linganathan_in_Uma_Memorialலிங்கநாதன்: உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் 1977ம் ஆண்டிலிருந்து காந்தீயமாக உருவெடுத்து மக்களுக்கு உதவி செய்தும் காட்டுக்குள்ளே இருந்த இயக்கமாக, ஜனநாயக சக்தியாக இருந்தவர்கள் நாங்கள் – புளொட். எங்களுக்கு கடந்த தேர்தலில் வந்த பின்னடைவு எங்கட வேலைகளை தடைப் பண்ணியுள்ளது. ஏனைய கட்சிகளை பொறுத்த வரையில் பெரிதாக ஒண்டுமில்லை. ஆனால் இங்கே நடக்கிற கொலைகள், கொள்ளைகள் கடத்தல்களில் ஆரம்பத்தில் நடந்தவைகளுக்கு புலிகளுக்கு முக்கிய பொறுப்பு உண்டு. காட்டுக்குள் இருந்து வந்த புலிகளுக்கு ஒரு உதவியும் கிடைக்காமல் பல களவுகளில் ஈடுபட்டவர்கள் இதில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

தேசம்: இலங்கை அரசின் உளவுப் படையினராக முன்னாள் இயக்க உறுப்பினர்களில் பலர் (முன்னாள் புலிகள் , முன்னாள் ரெலோ, முன்னாள் புளொட் இப்படி எல்லா இயக்கத்தவர்களும்) இருப்பதாக ஜரோப்பாவில் பரவலாக பேசப்படுகிறதே. இது எந்தளவு உண்மை. இவர்களில் பலர் தமக்கு நினைத்த மாதிரி பல வேலைகளை செய்துவிட்டு போய்விடுகிறார்கள் என்றும் பேசப்படுகிறதே?

லிங்கநாதன்:இங்கும் நீங்கள் சொல்வது போன்ற பல கதைகளை அறிகிறோம். எப்படி உண்மையை அறிவது. நான் புளொட் பற்றி சொல்லுவது என்றால், 2009 ஆகஸ்ட் 10ம் திகதியிலிருந்து இன்று வரையில் இயக்க ரீதியாக கொலையோ, யாரிடம் காசு வாங்கியதாகவோ அல்லது மக்கள் விரோதமான எந்த நடவடிக்கைகளுமே நடக்கவில்லை, திருணாவுக்குளத்தில் ஒரு பெண்பிள்ளை சம்பந்தமான சம்பவம் நடைபெற்றது. அதில் சம்பந்தப்பட்டவர் ஒன்றரை வருடத்துக்கு முன்பாகவே இயக்கத்திலிருந்து விலத்தப்பட்டவர். இதில் தவறு என்ன என்றால் இப்படிபட்டவர்களை நாம் இயக்கத்திலிருந்து விலக்கியுள்ளோம் என்பதை மக்களுக்கு தெரிவித்திருந்தால் இப்படியாக குற்றச்சாட்டுக்கள் எம்மீது வந்திருக்காது. அதைவிட வவுனியாவில் பிரதேசங்களில் உள்ள பொது மக்களிடம் எம்மைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கோ. அப்படி ஏதும் தவறுகள் இருந்தால் என்னிடமும் பேசுங்கோ நாங்கள் முடிந்தளவு எமது தரப்பு விளக்கத்தை தருவோம்.

தேசம்:வவனியாவில் தனிமனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஜனநாயக விரோதங்களை கண்டிக்கும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் சுதந்திரம் இவை பற்றி?
லிங்கநாதன்:சுதந்திரம் இருகின்றது. லவ்பிரண்டுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்! பகிரங்கமாக மதுபாவனை செய்ய சுதந்திரம் உள்ளது. சமூகத்தில் செய்யக்கூடிய கீழ்தரமான வேலைகள் செய்வதற்கு சுதந்திரம் உள்ளது. இவற்றை அரசும் ஆதரிக்கிறது. இது ஆயுத போராட்டத்தின் காரணங்களை மழுங்கடிக்கச் செய்யும் என்பதற்காக. மற்றப்படி ஜனநாயகம் என்பது இன்னமும் இங்கே இல்லை.

தேசம்: இன்று உள்ள நிலைமைகளில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் காரணமாக ஒரு கடையடைப்பு, ஒரு பகிரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த முடியுமா?
லிங்கநாதன்:இல்லை. அடுத்த நிமிடம் தனிப்பட அழுத்தங்கள் வரும் தடைகள் வரும்.

தேசம்:அல்லது கொல்லப்படுவீர்கள் என சொல்லுகிறீர்களா?
லிங்கநாதன்:கொலை என்பது இனிமேல் விடயங்களை மேலும் சிக்கலாக்கும். ஆகவே நடக்காது என்பதே எனது கருத்து. முன்பு புலிகளை சாட்டி எல்லோரும் கொலை செய்தார்கள். இனிமேல் அப்படி இல்லாமல் முயற்சி செய்து முடக்கவே முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

தேசம்:தற்போது நாடு கடந்த தமிழீழம் என்று புலம்பெயர் நாடுகளில் அமர்க்களமாக நடைபெறுகின்றது. அவைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
லிங்கநாதன்: நாடுகடந்த தமிழீழத்தை பொறுத்தவரையில் ஊமை கண்ட கனவு கதை கேள்விப்பட்டுள்ளீர்களா? நாங்கள் இங்கே ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லாமல், நிம்மதியாக படுத்து எழும்ப முடியாமல் இருக்கிறோம். இவர்கள் இங்கே உள்ள மக்களின் கருத்துக்களோ, ஆதாரமோ இல்லாமல் அல்லது எமது மக்களின் வேதனை என்ன நிறம் என்றோ தெரியாமல் தாங்கள் தங்களுக்குள்ளே நாடகடந்த தமிழீழம் அது இது என்று என பித்தலாட்டங்கள். நாடு கடந்த தமிழீழம் நிலம் தொடாத வேர் என்று தேசம்நெற்றில் வெளிவந்த கட்டுரையையும் வாசித்துள்ளேன்

புலம்பெயர்ந்து உள்ளவர்களில் பலர் தமது சொந்த பணத்தில் ஒரு தொகையை வடக்கு கிழக்குக்கோ வவுனியாவுக்கோ என்று கொடுத்தால் எங்கட பிரதேசம் 2 வருடத்தில் மீண்டும் பழைய நிலைக்கு எங்கட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திவிடலாம். இதுதான் இப்ப தேவையே தவிர நாடகடந்த தமிழீழம் என்ற பேய்க்காட்டல் அல்ல!

தேசம்: புலிகளின் சொத்துக்கள் பணங்கள் வெளிநாடுகளில் நிறையவே உள்ளது. இதில் பெரும்பான்மையானது தனிப்பட்டவர்களின் கைகளில் முடங்கியுள்ளது. இந்த பணங்களை திரும்ப வட கிழக்கு மக்களிடம் கையளித்தாலே மக்களின் வாழ்வு உயர்ந்து விடும். இந்த பணங்களைப் பற்றி யாருமே முக்கியமாக புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இந்த பணங்கள் பற்றி பேசுகிறார்களே இல்லையே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

லிங்கநாதன்: நீங்கள் சிலர் இதை ஞாபகப்படுத்தினாலும் அவங்களுக்கு தெரியும் மற்ற மக்கள் இது பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காக்ததான் நாடு கடந்த தமிழீழம். 1983ம் ஆண்டு பிறந்தே இருக்காதவரகள், எல்லாம் யூலைக் கலவரத்திற்கு ஒரு வைபவம், வட்டுக்கோட்டை எங்க இருக்கு என்று தெரியாதவர்கள் வட்டுக்கோட்டை தீர்மானம், இப்படியாக சீசன் விழாக்கள் நடாத்துகிறார்கள். புலி இல்லாவிட்டாலும் நாங்கள் பிழைப்பு நடத்திக்கொள்ளுவோம் என்ற பிழைப்பு நடக்கிறது.

இவர்கள் மனச்சாட்சிப்படி சொல்ல முடியாதவர்கள்.  நாங்கள் எவ்வளவு துன்பப்பட்டுள்ளோம், எந்த அளவு சிக்கலில் மாட்டியுள்ளோம், எவ்வளவு ஆபத்துக்களுக்கு மத்தியில் இருக்கிறோம். இது இங்கே இருக்கிற இலங்கை அரசு எங்களை இந்த நாட்டில் மேலும் அழுத்தத்தை பிரயோகிக்கவே சந்தர்ப்பத்தை கொடுக்கிறது என்பதே உண்மை. இதை உங்கே புலம்பெயர்ந்து இருக்கின்ற மக்களுக்கு தெரியப்படுத்துங்கோ.

தேசம்: கடந்த காலங்களில் வன்னியில் இருந்த அரசு சாரா நிறுவனங்கள் பற்றி?
லிங்கநாதன்: இவர்கள் காசு இருந்தால் ஏதோ செய்வார்கள். இல்லாவிட்டால் இல்லை. இவர்களின் கடந்த 5 வருட வரவு செலவுகளைப் பார்த்தால் பல மில்லியன்கள் செலவு செய்யப்பட்டடிருக்கும். என்ன செய்யப்பட்டுள்ளது என்றால் எதுவுமே சொல்வற்கில்லை. இவர்களின் பணத்தில் பெரும்பகுதி புலிகளின் பிரதேசங்களில் புலிகளின் ஊடாகவே செலவு செய்யப்பட்டது. இதில் உதவிகள் யாருக்கு போயிருக்கும் என்பது தெரிந்தது தானே. இவைபற்றி அரசுக்கு இப்போ நன்றாக தெரியும். இதனால்தான் அரசு இப்போ பாதுகாப்பு அமைச்சின் அனுமதியில்லாமல் எந்த அரசு சாரா நிறுவனங்களையும் அனுமதிப்பதில்லை. இந்த விடயத்தில் அரசை நாம் எதிர்க்க முடியாது. காரணம் இவங்களில் பலர் எங்களை சாட்டி தாம் காசு கொள்ளையடித்து விட்டார்கள். புலி இவங்களை வைத்து தனது அலுவல்களை பாவித்து விட்டார்கள். உதாரணத்திற்கு பல பாரிய ஆயுதங்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள். நோர்வே தான் புலிகளுக்கு வாங்கிக் கொடுத்தார்கள். ஆகவே இந்த அரசு சாரா நிறுவனங்களை நம்ப முடியாத நிலையே இருந்தது. இன்றும் இருக்கிறது.

தேசம்:இன்று வவுனியாவில் உள்ள வுவனியா அடையாளங்கள் பற்றி சொல்லுங்கள்
லிங்கநாதன்: ஒருமுறை நான் வவுனியா மேயராக இருக்கும்போது தொலைக்காட்சியில் வவுனியா என்று காட்டும்போது கொப்பேக்கடுவாவின் சிலைகளையே காட்டுகிறார்கள். நாம் அடுத்த நகரசபைக் கூட்டத்தில் முடிவு எடுத்து தமிழ் தலைவர்கள் முக்கிய தமிழ் அறிஞர்களின் சிலைகளை உடனடியாக அவசர வசரமாக நிறுவினோம்.பலர் என்னிடம் தோழர் உமா மகேஸ்வரனுக்கு சிலை வைக்கும்படி கேட்டார்கள். நான் உடன்படவில்லை. நாளைக்கு புலி, ரெலோ இதை உடைத்து அவமானப்படுத்தும். வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் தமிழ் தலைவர்கள் அறிஞர்களின் சிலைகளை யாரும் உடைக்க மாட்டார்கள். உடைத்தாலும் திரும்பக் கட்டிக்கொள்ளலாம்.

தேசம்:எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பற்றி உங்கள் கருத்து என்ன?
லிங்கநாதன்: நாங்கள் மாட்டுப்பட்டுப் போனோம். காரணம் எமக்கு பலம் இருக்கு என்று திரும்ப திரும்ப காட்டி எங்களை அவர்களால் பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை நாங்களே கொடுத்துவிட்டோம். இதில் புலிகளை மட்டும் சொல்ல முடியாது. இதில் புலிகள் விகிதாசாரத்தின்படி கூடவாக இருக்கலாம் அனைத்து ஜனநாயக அமைப்புக்கள், ஆயுதக் குழுக்கள் எல்லோருமே இதற்கு பொறுப்பு. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லுகின்ற அத்தனை பேருக்கும் பொறுப்புண்டு.

கடந்த காலங்களில் தமிழர்களை உடைத்துவிட பல முயற்ச்சிகளில் வெற்றி பெற்ற அரசு, பின்னர் வடக்கையும் கிழக்கையும் உடைத்தது, இப்போ வடக்கில் வன்னியை உடைக்கிறார்கள். காரணம் நாம் தொடர்ச்சியான நிலப்பரப்பை வைத்திருந்தால்தானே ஒரு கோசத்தை வைக்கலாம். ஆகவே இனப்பரம்பலை உருவாக்கி தமிழர் பரம்பலை பலவீனப்படுத்தி நான் கேள்விப்படும் விடயங்களை பார்த்தால் இனிமேல் (தமிழ்) ஈழம் என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். இதற்கு ரிஎன்ஏ யும் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்கிறது. என்ன வென்றால் இவர்களின் வீர வசனம் பத்திரகைகளில் கத்துவார்கள் இரவு போய் அரசாங்கத்திடம் தங்கட அலுவல்கள் கேட்பார்கள் என்று எல்லோருக்கும் தெரியும், ரிஎன்ஏ மக்களை பேய்க்காட்டுகின்றது என்பது, ரிஎன்ஏ தலைமை அரசுக்கு தான் நினைத்ததை செய்ய வசதியான தலைமையே.

தேசம்:இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசு செயற்படுமா? இல்லையா?
லிங்கநாதன்:மகிந்தாவும் சிங்கள தேசியத்தின் உணர்வு பூர்வமானவர். சிங்கள தேசியவாதி. தமிழர்க்கு தமிழீழம் தேசியவாதமாக உள்ளதோ அதேபோல சிங்கள மக்களுக்கும், மகிந்தாவின் கட்சிக்கும். அன்று வட கிழக்கு இணைப்பை உடைக்க கோட்டுக்கு ஜேவிபி போனபோது பலம்பொருந்திய புலிகள் அமைப்பு, ரிஎன்ஏ எம்பிக்கள் 22 பேர், அமைச்சர் டக்ளஸ் இப்படி பலர் இருந்தும் இதை தடுக்க முடியவில்லை. குறைந்தது ஒரு இடைக்காலத் தடையை எடுத்திருக்கலாம். இது இவர்களின் பலவீனமே. அதை இப்ப இருக்கிற ஜனாதிபதி அதை நிரந்தரமாக தேர்தலை கிழக்குக்கு வைத்து கிழக்கை உடைத்து விட்டார். அரச 13வது திருத்தச்சட்டமூலம் தான் தீர்வு, அதுதான் இலங்கை-இந்திய ஒப்பந்தம், இது தான் தீர்வு வேறு இல்லை என்றே சொல்லுவார் என நான் கருதுகிறேன். இதற்க்கு மேல் மகிந்தா தரும் என்று நம்பினால் நாங்கள் தான் முட்டாள்கள்.

தேசம்: தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையேயான குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்காக ஒரு உடன்படிக்கை ஒன்று லண்டனில் தயார் செய்யப்பட்டு உள்ளது. இது குறிப்பாக தமிழ் கட்சிகள் அமைப்புகளிடையே உடன்பாடு எட்டப்படுவது அவசியமானது என்பதனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆவணி 02 புரிந்துணர்வுக்குழு (லண்டன்) என்ற குழுவாக இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான ஒரு முயற்சி பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

லிங்கநாதன்:எனது மனப்பூர்வமான பாராட்டுக்களும் ஒத்துழைப்புக்களும் கிடைக்கும். நிச்சயமாக புளொட் உதவி செய்யும். நான் உதவி செய்வேன்.

இப்போது இங்கே தமிழ் அரங்கம் என்ற முயற்சி நடைபெறுகிறது. இது மாகாண தேர்தலை நோக்கிய நகர்வா அல்லது உண்மையான நகர்வா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எம்முடைய எல்லா ஒத்துழைப்புக்களும் உங்களுடைய புரிந்துணர்வுக் குழுவிற்குக் கிடைக்கும்.

புலிகள் இரண்டு விடயங்களில் திடமாக இருந்துள்ளனர். ஒன்று கொலைக் கலாச்சாரத்தை பரப்பியது. இரண்டாவது தான் எடுத்தது தான் முடிவு என்பது. இந்தியாவைக் கும்பம் வைத்து வரவேற்று பின்னர் அடித்தது. பிரேமதாஸாவுடன் கூடி எஸ்டிஎப் உடன் சேர்ந்து மாற்று இயக்கத்தவர்களை கொலை செய்தது. பின்னர் பிரேமதாஸாவையே கொலை செய்தது. மற்றையது எவன் தனது நட்போ அவன் தியாகி. எவன் தனக்கு எதிர்ப்போ அவன் துரோகி. இதை இந்த உலகத்தில் வேறு யாராலும் செய்ய முடியவில்லையே.

தேசம்: புலம்பெயர் தமிழர்க்கு, இளம் சந்ததியினருக்கு, புலிகளுக்கு, புலிகளின் ஆதவாளர்க்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
Linganathan_visit_to_an_Exhibitionலிங்கநாதன்: புலிகளுக்கு கடந்த 30 வருடமாக எத்தனை விடயங்களை சொன்னாச்சு. அவர்களுக்கு சொல்லியும் பிரயோசனம் இல்லை. இனிமேலும் பிரயோசனம் வராது. அவர்கள் தங்கட பிழைப்பை பார்த்துக் கொள்கிறார்கள் அதைவிட்டுவிடுவோம்.

நான் தமிழ்பேசும் மக்களுக்கு சொல்வது எல்லாம், வன்னியில் மக்கள் இன்ரர்நெற் மொபைல் தவிர மற்ற எல்லாவற்றுடனும் வாழ்ந்தவர்கள். இன்று வீடுகட்டுவதற்க்கு அவர்களுக்கு கொடுத்த 4 தகரங்கள் 5 பலகை என்றதுடன் நிற்பவர்களுக்கு, உங்கள் உறவுகளுக்கு, சொந்தங்களுக்கு அவர்கள் அந்த வீட்டை கட்டிக்கொள்ள, இந்த வருடம் இந்த போகத்தை அவர்கள் வெற்றிகரமாக அறுவடை செய்ய உதவி செய்யுங்கோ. அந்த ஒரு உதவி அவர்களை தலை நிமிரவைக்கும். இதுதான் எங்களுடைய மக்களுக்கு இன்றுள்ள தேவை. தலைக்குமேலே கூரை இல்லை. சாப்பிட சாப்பாடு இல்லை. நிம்மதியாக படுக்க பாய் இல்லை. இப்ப அரசியல் உரிமை பற்றி பேச யார் முன்வருவார்கள். முதலில் இரத்தம் உறவு என்று சொல்லுபவர்கள் இந்த மக்கள் இந்த போகச் செய்கையை செய்ய உதவ முன்வாருங்கள். மீதி எல்லாம் அவர்கள் தாமாகவே எழுந்துவிடுவர்.

உங்கள் சகோதரங்கள் உறவினர்கள் சுற்றத்தார், தெரிந்தவர்கள் இப்படி ஒரு பட்டியலைப் போட்டு யாருக்கு உதவி தேவை என்று செய்யுங்கள் இதுவே போதும். இதைவிட உதவி செய்ய விரும்புபவர்கள் எத்தனையோ உதவி செய்யும் அமைப்புக்கள் உண்டு. அதற்கு ஊடாக உதவுங்கள்.

நன்றி ஜி ரீ லிங்கநாதன்-JP

”ஹெலிகொப்டர் முயற்சி சாத்தியமற்றுப் போனது. நெடியவன், காஸ்ட்ரோ மீது சினங்கொண்டேன்.” குமரன் பத்மநாதன்

Kumaran_PathmanathanNediyavan_Sivaparan_Perinbanayakamவிடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் பிரபாகரனுக்குப் பின் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் டெய்லிமிரர் ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் மூன்றாவது பாகம் ஓகஸ்ட் 21 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:-

குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்:

(யூன் 14 2009ல் குமரன் பத்மநாதன் வே பிரபாகரனின் மரணம் தொடர்பாக தேசம்நெற் க்கு தெரிவித்த கருத்துக்கள். இப்போது வெளியிட்டு வரும் கருத்துக்களை பெரும்பாலும் 2009 யூனிலும் குமரன் பத்மநாதன் கொண்டிருந்தார். இவை தேசம்நெற் இல் வெளியாகி இருந்தது. தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை , VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் )

”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

(சென்ற வாரத் தொடர்ச்சி)

கேள்வி: பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் ஹெலிகொப்ரர் மூலம் காப்பாற்றும் உங்கள் திட்டத்திற்கு இறுதியில் என்ன நடந்தது? ஏன் அது செயற்படவில்லை?
பதில்: அது மிகவும் துயரமான கதை. பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி அவரது குடும்ப அங்கத்தவர்களை காப்பாற்றும்படி என்னைக் கேட்டபின் நான் ஒரு திட்டம் வகுத்து வான்வழி மூலம் ஆரம்ப ஏற்பாடுகளை செய்தேன். இலங்கை கடற்படை அணுகமுடியாத தொலைவிலுள்ள துறைமுகம் ஒன்றில் காத்திருக்கும் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்தேன். உக்ரேய்ன் நாட்டிலிருந்து எனக்குத் தெரிந்தவர் மூலமாக ஒரு பாவித்த ஹெலிகொப்டரை வாங்கவும் நான் ஒழுங்கு செய்தேன். எல்.ரீ.ரீ.ஈ. இன் விமானப் படையின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு பயிற்றப்பட்ட விமானிகள் வன்னிக்கு ஹெலிக்கொப்டரை கொண்டு செல்வர் என்பதே திட்டம். பிரபாகரன் விரும்பினால் சார்ள்ஸ் அன்ரனியை தவிர  குடும்பத்தின் ஏனையோர் வெளியே கொண்டுவரப்படுவர். தலைவருக்கு விருப்பமில்லையென்றால்  அவரும் அவரது மெய்ப்பாதுகாவலர்களில் சிலரும் சிரேஷ்ட தலைவர்களும்  ஹெலிகொப்டரர் மூலம் இலங்கையில் ஒரு குறித்த காட்டுப் பகுதியில் இறக்கப்படுவர். அதன்பின் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் இன்னும் ஒரு சிலர் ஆகியோரை கப்பலுக்கு ஹெலிகொப்ரர்  கொண்டு செல்லும். நான் கப்பலில் இவர்களுக்காக காத்திருந்திருப்பேன். பின்னர் இந்த குடும்பத்தை மூன்று நாடுகளில் ஒன்றில்,  சில சமயம் சுழற்சி முறையில் வைத்திருக்க எண்ணினேன்.

கேள்வி: இந்த நாடுகள் இவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தனவா? இவை மேற்கத்தைய நாடுகளா?
பதில்: இல்லை. அவை மேற்கத்தைய நாடுகள் இல்லை. அவற்றில் இரண்டு ஆபிரிக்க நாடுகள்; ஒன்று ஆசிய நாடு. எனது பிரதிநிதிகள் மூலம் இந்த நாடுகளின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடன் நான் தொடர்பிலிருந்தேன். இதைப்பற்றி அவர்களுடன் பேசியபோது அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

கேள்வி: இந்தத் திட்டம் பெரும் ஆபத்துகளுக்கு முகங்கொடுக்கக் கூடியதாக இருந்ததே? இது வெற்றிபெறும் என நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தீர்களா?
பதில்: ஆம். ஆபத்துமிருந்ததுதான். ஆனால் நான் அதை முன்னெடுக்க தயாராகவிருந்தேன். இந்த ஆபத்துக்கு முகங்கொடுக்க தயாராக இருக்கவில்லையென்றால் அடுத்தது மரணம்தான். பிரபாகரன் கடைசி நிமிடத்தில் வெளியேவர சம்மதிக்கலாம் என்ற இரகசியமான எண்ணம் எனக்கிருந்தது. இதனால்தான் நான் இந்த திட்டத்தை தீட்டினேன். எதிர்பாராத செயற்பாடு என்பதே முக்கியம். முதல் கட்டம் வெற்றி பெற்றால் வேறு ஆட்களையும் காப்பாற்ற முயன்றிருக்கலாம்.

கேள்வி: அப்படியானால் எங்கு பிழை நடந்தது?
பதில்: அது ஒருபோதும் நினைத்த மாதிரி இருக்கவில்லை. அந்த திட்டத்தை செயற்படுத்த 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்பட்டது. என்னிடமோ அவ்வளவு பணம் இல்லை. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புதான் இந்தப் பணத்தை தந்திருக்க வேண்டும். நோர்வேயில் இருந்த நெடியவன் எனக்கு பணத்தை அனுப்புவார் என காஸ்ட்ரோ, சாள்ஸ் அன்ரனியிடம் உறுதியாக கூறியிருந்தார். ஆனால் அவர் அதை செய்யவே இல்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது. பணம் அவசரம் தேவை என நான் பல முறை கேட்டேன். பணம் வந்து  கொண்டிருக்கிறது, பணம் வந்துக்கொண்டிருக்கிறது என கூறப்பட்டபோதும் அது ஒருபோதும் வரவில்லை. வெளிநாடு ஒன்றிலிருந்து விமானப்பிரிவு தலைவர் அச்சுதனுடன் நெடியவன் தொடர்பு கொண்டிருந்தார்.  அச்சுதன் முதலில் அந்த நடவடிக்கைக்கு தேவையான எல்.ரீ.ரீ.ஈ  விமானிகளை தருவதற்கு சம்மதித்திருந்தார். ஆனால், பின்னர் திடீரென என்னோடு தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். சிலவேளை இது நெடியவனின் கட்டளையாகவும் இருக்கலாம். நான் அந்தரப்பட்டேன். ஊதியத்திற்கு பணியாற்றும் விமானிகளை நாடினேன். ஆனால் நிதி இன்மையால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை.

மே மாதத்தின் நடுப்பகுதியில்  இலங்கை இராணுவம் மும்முனைத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டது. அதன்போது வலைஞர்மடம் – முள்ளிவாய்க்கால் – வட்டுவாகல் பகுதிகளை முற்றுகை அரணுக்குள் கொண்டு வந்தனர். இதன் பின் ஹெலிகொப்டர் மூலம் காப்பாற்றும் முயற்சி சாத்தியமற்றுப்போனது. பெரும் சோகத்துடன் நான் அந்த திட்டத்தை கைவிட்டேன். நெடியவன், காஸ்ட்ரோ ஆகியோர் மீது நான் பெரும் சினங்கொண்டேன். ஆனால் எதுவுமே செய்யமுடியாத நிலை.

கேள்வி: சில நாட்களுக்குள் எல்லோரும் இறந்துவிட்டனரா?
பதில்: ஆம். அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர். முழுக் குடும்பமுமே போய்விட்டது.  பாலச்சந்திரனின் மரணம் என்னை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவனுக்கு 12 வயது மட்டுமே. நான் அவனை நேரில் கண்டதில்லை. ஆனால் அவன் சிறுபையனாக இருந்தபோது நான் பிரபாகரனுடன் அடிக்கடி பேசுவேன். பிரபாகரன் தொலைபேசியை அவனிடம் கொடுத்து இந்தா கேபி மாமாவுடன் கதை  என்பார். நான் அவனுடன் கதைப்பேன். பின்னாளில் அவனுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால் நான் இன்னும் அவன் நினைவாகவே உள்ளேன். சண்டை உரத்து ஷெல் வீச்சு அதிகரித்தபோது அவன் பயந்து போயிருந்தான். பின்னர் சாள்ஸ் வான்வழியே தப்புவதற்கான ஒழுங்கை மேற்கொள்ளும்படி என்னை கேட்டிருந்தபோது பயப்படாமல் இருக்கும்படியும் விரைவில் கேபி மாமாவிடம் போய்விடுவாய் என்றும் கூறப்பட்டது. இந்த சின்னப்பையன் தனது பொருட்களில் சிலவற்றை பையொன்றில் போட்டு போகுமிடமெல்லாம் கொண்டு திரிந்தான். நான் கேபி மாமாட்ட போறன் என்று கூறுவானாம். சில சமயம் பாலச்சந்திரன் பையை வைத்துக்கொண்டு தான் கே.பி மாமாவுடன் போகப்போவதாக ஆட்களுக்கு கூறிக்கொண்டு நடக்கப்போகாத காப்பாற்றும் நடவடிக்கைக்காக காத்திருப்பதை எனது மனத்திரையில் காண்பேன். இப்படி நினைக்கும் போது நான் பெருங்கவலைப்படுவேன். திட்டத்தை செயற்படுத்தாது குழப்பிய நெடியவன் மீது கோபங்கோபமாக வரும்.

கேள்வி: ஏன் அவர் அப்படிச் செய்தார்?
பதில்:  எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இது காஸ்ட்ரோவின் கட்டளைப்படி நடந்திருக்கலாம். கே.பிக்கு இந்த பெருமை கிடைப்பதை அவர்கள் விரும்பவில்லை என நான் நினைக்கின்றேன். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ இல் காணப்பட்ட பிழையின் வெளிப்பாடுதான், தனிநபர்கள் தங்களது சிறுபிள்ளைத்தனமான பொறாமைகள், பிரிவுகள் காரணமாக ஒட்டுமொத்தமாக இயக்கத்தையும் போராட்டத்தையும் கெடுத்துக்கொண்டனர்.

கேள்வி: முழுக்குடும்பமுமே கொல்லப்பட்டுவிட்டது என உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், மதிவதனி உயிரோடு இருக்கிறார் என்றெல்லாம் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் சில பகுதியினராலும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளாலும் கதைகள் பரப்பப்பட்டுள்ளனவே? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.?
பதில்: இப்படியான கதைகள் சிலரது சுயநலனுக்காகப் பரப்பப்படுகின்றன. மற்றும் சிலர் இப்படி நடந்து விட்டதை ஏற்க மனமில்லாமல் இந்த கதைகளை நம்புகின்றனர்.

கேள்வி: இதுப பற்றி நேரடியாகக் கண்டக் சாட்சிகள் உங்களிடம் இல்லையல்லவா?பதில்:  உண்மைதான். கடைசிக் கட்டம்வரை  நான் சூசையுடன் தொடர்பிலிருந்தேன். இது பற்றி நான்  உத்தியோக பூர்வமான மூலங்களிலிருந்தும் கேள்விப்பட்டுள்ளேன். முக்கியமாக நான் பிரபாகரனின் உடலை ரிவியில் பார்த்தேன்.

கேள்வி: அது அவர்களது உடல் அல்ல என இவர்கள் கூறி மறுக்கின்றனரே?
பதில்: முழு முட்டாள்தனமான கதை. ரிவியில் பார்த்தவுடனேயே நான் உடனேயே இது பிரபாகரன் உடல்தான் என்பதை அறிந்துகொண்டேன். நான் மிக மனமுடைந்து போனேன். பல மணித்தியாலங்களாக நான் யாருடனும் தொடர்பின்றி இருந்து தியானம் செய்தேன்  பழையதை நினைத்து அழுதேன்.

கேள்வி: இந்த குழப்பத்துக்கு நீங்களும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றீர்கள். பிரபாகரனின் மரணம் பற்றி செய்திகள் வந்தபோது அவர் மரணிக்கவில்லையென்றும் பாதுகாப்பான இடத்தில் உயிருடன் உள்ளதாகவும் நீங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் மறுப்புரையை வாபஸ் பெற்றீர்கள். இதனால் உங்கள் மீதான நம்பிக்கை பெரிதும் சிதறிப்போனது. இது உங்களை விமர்சிப்பவர்களுக்கு நல்ல ஆயுதமாயிற்று. ஏன் இந்த தடுமாற்றம்? விளக்கமுடியுமா?
பதில்: ஆம். இதற்கான விளக்கத்தை தருவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நடந்தது இதுதான். பிரபாகரன் பொட்டம்மான் மற்றும் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து இரகசியமாக நந்திக்கடல் வழியாக அதன் கரையூடாக வெளியேறினர். வேறு இரண்டு குழுக்கள் வேறு திசையால் சென்றனர். காட்டுக்குள் போய்ச் சேர்வதுதான் இவர்களது எண்ணமாக இருந்தது.முற்றுகையிடப்பட்ட பகுதியைச் சுற்றி மூன்று அடுக்குகளாக படைவீரர்கள் நிற்பதனை முன்னைய உளவுபார்ப்புகள் கண்டறிந்திருந்தன. என்னோடு தொடர்பிலிருந்த சூசை, பிரபாவும் பொட்டுவும் மூன்று அடுக்கு காவலையும் தாண்டி சென்றுவிட்டதாக எனக்கு அறிவித்தார். இதன் பின்  பிரபாகரன் குழுவுடன் தொடர்பேதும் கிடைக்கவில்லை. எனவே நானும் சூசையும் தலைவர் பாதுகாப்பான இடத்துக்கு போய்ச் சேர்ந்து விட்டார் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்பு சாதனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கருதினோம்.

இதன் பின்னரே எமது ஆயுதங்களை மௌனிப்பது பற்றிய அறிக்கையை வெளியிட்டேன். இதை நான் சூசையுடன் பேசிய பின்னர்தான் செய்தேன். சமாதான முன்னெடுப்புகளை விரைவுப்படுத்தவும் எஞ்சியுள்ளோரை காப்பாற்றவும் ஒரு அத்திவாரம் இடும் வகையில்தான் நான் அறிக்கையை வெளியிட்டேன்.  வேறு ஒரு இடத்திலிருந்த நடேசனும் புலித்தேவனும் கூட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்தனர். பிரபாகரன் இராணுவத்தின் பாதுகாப்பு அடுக்களை கடந்து சென்றுவிட்டார் என முதலில் எனக்கு கிடைத்த தகவல்தான் அவர் பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட்டார் என நம்பவைத்தது. இந்த நம்பிக்கைதான் பிரபாகரன் இறந்ததுவிட்டார் என்ற செய்தியை மறுக்கவும் அவர் பாதுகாப்பாக உள்ளார் எனவும் கூறவைத்தது. அத்துடன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற முதலாவது ஊடக அறிக்கை அம்புலன்ஸில் தப்பிப்போகும் முயற்சியுடன் தொடர்பாக வெளிவந்தது. ஆனால் அந்த அறிக்கை தவறானது. பிரபாகரன் அம்புலன்ஸ் எதிலும் இருக்கவில்லை.

சூசையுடன் நான் தொடர்பை இழப்பதற்கு சற்று முன் பிரபாகரனால் முற்றுகையை தாண்ட முடியவில்லை. அவர் திரும்பிவந்துவிட்டார் என பதறி சூசை என்னை திகைப்படைய செய்தார். பிரபாகரன் இருந்த இடத்திலிருந்து சில நூறு மீற்றர் தூரத்திலேயே தான் நின்றதாக கூறினார். இராணுவத்தின் பாதுகாப்பு அடுக்குகளை தாண்டும் முயற்சி சரிவரவில்லை என்றும் பொட்டம்மான் இன்றி பிரபாகரன் தனியே திரும்பிவிட்டதாக சூசை கூறினார். சண்டை கடூரமாக நடக்கின்றது என்பதற்கு மேலாக எந்த தகவலையும் அவரால் தரமுடியவில்லை. சிறிது நேரத்தின்பின் நான் சூசையுடன் தொடர்பை இழந்துவிட்டேன்.

சிறிது நேரத்தின்பின் தொலைக்காட்சியில் பிரபாகரனது உடலை பார்த்தேன். எல்லாம் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால். பிரபாகரனின் இறப்பை மறுத்த முதலாவது அறிக்கை பின்னர் அதை உறுதி செய்து விடப்பட்ட அறிக்கை எல்லாமே நேர்மையாக விடுவிக்கப்பட்டவை என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். யாரையும் பிழையாக வழிப்படுத்தும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. அந்த அறிக்கைகள் அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் என்னால் விடுக்கப்பட்டவை. சண்டை தொடர்ந்து கொண்டிருந்ததது. தொடர்பாடல் கஷ்டமாக இருந்தது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நிலைமைகள் பற்றி மக்கள் தவறான தகவல்களை பெற்றுக்கொள்ளும் போர் நிலைமைகளை போரின் மூடுபனி எனக் கூறுவர்.

கேள்வி: ஆம். கிளொஸ்விற்ஸ் என்பவர்தான் இந்த பதத்தை முதலில் பயன்படுத்தினார். பின்னர் இந்த சொல் றொபேட் மக்னமராவினால் பிரபல்யப்படுத்தப்பட்டது. சரி பிரபாகரன் எப்படி இறந்தார் என்று சொல்லுங்களேன்? அது உங்களுக்குத் தெரியுமா?
பதில்: ஒன்றை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நான் அங்கு இருக்கவில்லை. எனக்கு சொல்லப்பட்டதையும் நான் கேள்விப்பட்டதையும் வைத்துத்தான் கூறவேண்டும். பிரபாகரனின் மரணத்தை பொறுத்தவரை எனக்குக் கிடைத்த தகவல் இது. பிரபாகரனும் 60 பேர் கொண்ட புலிகளின் குழுவும் நந்திக்கடல்  அருகே ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பில் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் யாவருமே கடைசிவரை போராடினார். மரணத்தை தழுவிக்கொண்டனர்.

கேள்வி: பிரபாகரன் சரணடைந்தார் அவர் மானபங்கப்படுத்தப்பட்டபின் சுடப்பட்டார் என்ற கதைகள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்.?
பதில்:   இல்லை. அது நடக்கவில்லை. எனக்கு பிரபாகரனை தெரியும். அவர் ஒருபோதும் சரணடைந்திருக்க மாட்டார். எனக்கு இந்த கதைகள் தெரியும். சிலர் வேண்டுமென்றே இதை செய்கின்றனர். சிலர் காதில் விழுவதை யோசிக்காமல் திருப்பிக் கூறுகின்றனர். எனக்கு நன்றாகத் தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிரேஷ்ட தலைவர் ஒருவர் பிரபாகரன் சரணடைந்தார் எனவும் பின்னர் சரத்பொன்சேகாவிடம் கொண்டுவரப்பட்டதாகவும் அங்கே சரத்பொன்சேகா அவரை முழங்காலில் இருக்கவைத்து சுட்டதாகவும் கூறித்திரிந்தார். அபத்தமானகதை. பழைய தமிழ் தலைவர் பிரபாகரன் முன்னால் பயந்து நெளிபவர் அவர் இறந்தபின் இந்த மாதிரி ஏன் பேசவேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால் பிரபாகரனை தோற்கடித்த இராணுவத்தினர் அவரைப் பற்றியும் அவர் மரணித்த விதம் பற்றியும் உயர்வாகவே பேசுகின்றனர். பாதுகாப்பு அமைப்பில் உச்ச நிலையில் உள்ள சிலர் – உங்களுக்கு இவர்கள் யார் என விளங்கும் என நினைக்கின்றேன். இந்த குழு கடைசிவரையும் வீரத்துடன் போராடி சரணடையாமல் மரணத்தை தழுவினர் என்பதையிட்டு மிகவும் கௌரவமாக என்னிடம் கூறினார். ஆனால் எமது ஆட்களில் சிலர் பிரபாகரனை பற்றி அவர் இறந்தபின் கேவலமாக பேசுகின்றனர். நான் திருப்பித் திருப்பிச் சொல்கின்றேன். எனது தலைவர் கடைசிவரை போராடி வீர மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

கேள்வி: இந்திய இராணுவம் இருந்த காலத்தில் பிரபாகரனின் ஒரு மெய்ப்பாதுகாவலரிடம் பெற்றோல் கலன் ஒன்று இருக்குமாம். தான் இறந்தால் இராணுவத்திடம் தனது உடல் அகப்பட்டக் கூடாது. என்பதற்காக தனது உடலை கொளுத்திவிட வேண்டும் என்பது பிரபாகரனின் கட்டளை. ஆனால் இது இந்தமுறை நடந்ததாகத் தெரியவில்லையே. என்ன நடந்தது?
பதில்: இந்த முறையும் இப்படியான ஒழுங்கு செய்யபட்டிருந்தது என நான் கேள்விப்பட்டேன். தனது உடல் வேறு யார் கையிலும் போய்ச் சேராது  அழிக்கப்பட வேண்டும் என்பது பிரபாகரனுக்கு மிக முக்கியமான விடயமாக இருந்தது. பெற்றோல் கான் நீரில் விழுந்திருக்கலாம். அல்லது பெற்றோல் கான் ஒப்படைக்கபட்ட போராளி பிரபாகரன் இறக்கும் முன் கொல்லப்பட்டிருக்கலாம். இது எனது ஊகம்தான். எனக்கு உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியாது.

கேள்வி: பொட்டு அம்மான் பற்றி….? அவருக்கு என்ன நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்?
பதில்: பிரபாகரனும் பொட்டுவும் ஒன்றாகவே சென்றனர். பிரபாகரன் மட்டுமே திரும்பி வந்தார். பொட்டு தப்பிச் செல்லும் முயற்சியின் போது கொல்லப்பட்டார் என்றே நான் நினைக்கிறேன். இல்லாதுவிடின் பிரபாகரன் பக்கத்திலேயே இருந்திருப்பார்.   பொட்டு அம்மானின் உடல் கிடைக்கவில்லை என்பதில் இராணுவம் உறுதியாக இருப்பதால் பொட்டு அம்மானின் உடல் இராணுவத்தின் கையில் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிரபாகரனே பொட்டு அம்மானின் உடலை அழித்திருக்கலாம்.

கேள்வி: பொட்டு தப்பியிருக்க முடியுமல்லவா?
பதில்: விவாதத்திற்கு வேண்டுமானால் ஆம் என்று கூறலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை.  பிரபாகரனும் பொட்டுவும் உயிருடன் உள்ளனர். அவர்கள் சில வருடங்களின் பின்னர் தோன்றுவர் என்பது அவர்களின் நினைவை அவமதிப்பதும் கேவலப்படுத்துவதும் ஆகும். இந்த நகைப்புக்குரிய விடயத்தை தொடர்ந்து அழுத்தி கூறுபவர்கள் மடத்தனமான கதையை விட்டுவிட்டு பிரபாகரனையும் பொட்டுவையும் வெளிக்கொணர வேண்டும்.

கேள்வி: பிரபாகரனின் உடல் தொடர்பாக இன்னொரு கேள்வி. பிரபாகரனின் குடும்ப அங்கத்தவர்கள் பிரபாகரனின் உடலை தம்மிடம் வழங்கும்படி கோருவர் என்றும் வெளிநாட்டுப் புலிகள் அதனைப் பெற்றுக்கொண்டு 40 வருடங்களுக்கு மேலாக தான் வகுத்துக்கொண்ட கொள்கைக்காக தன்னை அர்ப்பணித்த மனிதனுக்கு இறுதி அஞ்சலியை ஒழுங்கமைப்பர் எனவும் நான் எதிர்பார்த்தேன்.
பதில்:  உங்களைப் போலவே நானும் அப்போது யோசித்தேன். இது தொடர்பில் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர வழிகளிலும் ஆலோசனையை பெற்றுக்கொண்டேன். பிரபாகரனின் சகோதரங்கள் பிரபாகரனின் உடலை தம்மிடம் தரும்படி கேட்டால் இலங்கை அரசுமீது இது தொடர்பில் சர்வதேச அழுத்தத்தை பிரயோகிக்க முடியும் என எனக்கு கூறப்பட்டது. எனவே நான் பிரபாகரனின் சகோதரனுடனும் அவரது சகோதரிகள் இருவரில் ஒருவருடனும் இந்த கோரிக்கை விடயமாக தொடர்பு ஏற்படுத்தினேன். நான் அவமதிக்கப்பட்டேன். உண்மையில் பிரபாகரனின் சகோதரியின் கணவர் தன் மனைவியின் கையிலிருந்த தொலைபேசியை பறித்து இனிமேல் போன் எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தொலைபேசியை முகத்தில் அடித்தாற்போல வைத்துவிட்டார். எனவே என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. இதற்கிடையில் பிரபாகரனின் உடலை எரித்து சாம்பலை கடலில் தூவியதாக அரசாங்கம் அறிவித்தது. அவ்வளவுதான்.

கேள்வி:  சரி பிரபாகரன் சண்டையில் இறந்துவிட்டார். அந்த குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்கள் பற்றி என்ன தெரியும்.? என்ன நடந்தது?
பதில்: எனக்கு கிடைத்த தகவலின்படி மனைவி மதிவதினி ஷெல் வீச்சில் கொல்லப்பட்டார். இது பிரபாகரனின் வெளியேறும் முயற்சியின் முன் நடந்தது என நான் நினைக்கின்றேன். சாள்ஸ் அன்ரனி முன்னரே சண்டையில் காயபட்டிருந்தார். ஆனால் அவர் இறுதிவரை தனது அணியினரை சண்டைக்கு இட்டுச் சென்றார். நான் முன்பு கூறியது போலவே அவர் தப்பிப்போக விரும்பவில்லை. அவர் சண்டையில் உயிர் துறந்தார். இதில் இன்னொரு விடயத்தை கூறவேண்டும். சொர்ணலிங்கம் அல்லது சங்கரின் (செப்ரம்பர் 27 2001 இல் கொல்லப்பட்டவர்) மனைவி குகா பற்றி கூறவேண்டும். குகா சாள்ஸ்டன் இருந்து அவரோடு இறந்து போனார். மதிவதனியின் நெருங்கிய சிநேகிதி குகா. அவர் சாள்ஸ்டன் தான் எப்போதுமிருந்து தாயாக அவரைக் கவனிப்பேன் என மதிவதினியிடம் உறுதியளித்திருந்தார். அவர் ஏனைய தலைவர்களின் மனைவிமார் அல்லது விதவைகள் போலன்றி விட்டுப்போக மறுத்துவிட்டு சாள்ஸ்டன் இருந்துவிட்டார். மகள் துவாரகாவும் போர்க்களத்தில் போராடி மரணித்துவிட்டார். அவர் மே.14 இல் இறந்து விட்டதாக அறிந்தேன்.

ஆக இளைய பிள்ளையான பாலசந்திரனைப் பொறுத்தவரை எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. அவர் தன் தாயோடு நெருக்கமாக இருந்திருப்பார். எனவே ஷெல் வீச்சில் தாயோடு இறந்திருக்கலாம். ஆனால் இறந்த பாலசந்திரனின் உடல் என இன்ரநெற்றில் காட்டப்பட்ட படம் அவர் ஷெல்வீச்சில் இறந்தது போலல்ல. எனவே இதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

கேள்வி: பிரபாகரனும் அவரது குடும்பமும் இந்தமாதிரி கொல்லப்பட்டது உங்களுக்கு பேரிடியாக இருந்திருக்கும். அவரது திருமணத்தில் நீங்கள்தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தீர்கள் என நினைக்கிறேன். அவருடைய சிரேஷ்ட துணைத் தலைவர்களும் தளபதிகளும் இருந்தபோதும் நீங்கள் எப்படி மாப்பிள்ளைத் தோழனாக ஆகினீர்கள்?
பதில்: ஆம் நான் பிரபாகரனின் குடும்பத்துக்கும் நெருக்கமானவனாக இருந்தேன். அவர்களது மரணம் எனக்கு பேரிழப்பு. என்னால் அவர்களுக்கு உதவவோ காப்பாற்றவோ முடியாமல் போனமை எனக்கு நிரந்தரமான சோகத்தின் மூலமாகவே இருக்கும். நான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்ததைப் பற்றிக் கேட்டீர்கள். இதற்கு ஒரு காரணம் உண்டு. பிரபாகரன்,மதிவதனி மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்யவிரும்பிய போது அநேகமான சிரேஷ்ட தலைவர்களும் தளபதிகளும் அதை விரும்பவில்லை. இது இயக்கத்தை பாதிக்கும் என்னும் காரணத்தால் அவர்கள் எதிர்த்தனர்.

அந்தக் கட்டத்தில் பிரபாகரன் என்னிடம் வந்தார். முன்னர் நடந்த ஒரு விடயத்தால் இதைப்பற்றி என்னிடம் கூற வெட்கப்பட்டார். நான் இயக்கத்தில் சேர்ந்தபோது ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தேன். ஒரு புரட்சியாளன் காதலில் விழக்கூடாது எனக் கூறி எனது காதலை கைவிடும்படி பிரபாகரன் கூறினார். பெரும் தயக்கத்துடன் நான் அவருக்கு கீழ் படிந்து எனது காதலை துறந்தேன். பின்னர் சூழ்நிலைமாறி, பிரபாகரன் காதல் வயப்பட்டு எனது உதவியை நாடி வந்திருந்தார். அவர் அந்தரப்பட்டது ஆச்சரியமானது அல்ல. ஆனால் நான் உடனேயே எனது ஆதரவை வழங்கி திருமணம் செய்யக் கூறினேன். நான் பல சிரேஷ்ட தலைவர்களுடன் பேசி அவர்கள் மனதை மாற்றினேன். பிரபாகரனின் தந்தையை கண்டு அவரது மகனின் திருமணம் பற்றி கூறியது நான்தான். இந்த காரணத்தால் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாகினேன்.

கேள்வி: திருமணத்தின் பின்னரும் நீங்கள் அவருக்கும் குடும்பத்துக்கும் நெருக்கமானவராக இருந்தீர்களா?
பதில்: ஆம். நான் அதிகமாக வெளியே இருந்தபோதும் அக்காலத்தில் பிரபாகரனுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தேன். நான் பிள்ளைகளுடனும் மதிவதனியுடனும் பேசுவேன். நான் திருமணம் செய்தபின் எனது மனைவியும் மதிவதனியும் தொலைபேசி மூலம் பேசிக்கொள்வார்கள். நான் கப்பலில் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும்போது குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பரிசுப்பொருட்களை அனுப்புவேன். இந்திய இராணுவம் இருந்த காலத்தில் பிரபாகரன் வன்னிக் காட்டுக்குள் போக வேண்டியிருந்தபோது இரண்டு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு சமாளிப்பது மதிவதனிக்கு கஷ்டமாக இருந்தது. பிரபாகரன் அவர்களை சிறிது காலம் பாதுகாப்பான ஒரு இடத்துக்கு அனுப்ப விரும்பினார்.  அவர் அவர்களை சுவீடனில் இருந்த பழைய தோழனான ‘சிங்கம்’ என்பவரிடம் அனுப்ப விரும்பினார்.

அவரகள் படகு மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். அதன் பின் நான் பயண ஆவணங்களை தயாரித்து அவர்களை ஸ்கண்டிநேவியாவுக்கு அனுப்பி வைத்தேன். பின்னர் பிரபாகரனின் நண்பனுக்கு சில பிரச்சினைகள் இருந்ததையும் அதனால் அவருக்கு மதிவதனியையும் பிள்ளைகளையும் தன்னுடன் வைத்திருப்பது சிரமம் என்பதையும் அறிந்துக்கொண்டோம். எனவே நான் ஆபத்தான போதிலும் போலி ஆவணங்களை பயன்படுத்தி சுவீடனுக்கு சென்று தாயையும் பிள்ளைகளையும் டென்மார்க் அனுப்பி வைத்தேன். நான் அவர்களுக்கு அங்கு பாதுகாப்பான இடத்தை ஏற்பாடு செய்தேன்.

கேள்வி: மதிவதனியின் குடும்ப அங்கத்தவர்களுடனா?
பதில்: இல்லை அவர்களோடு அல்ல. அவர்கள் தயக்கம் காட்டினர். இது வேறு இடம்.  பின்னர் 1987 இல் பிரேமதாஸ அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தை வந்தது. இந்த சந்தர்ப்பத்தை நான் முறையான பயண ஆவணங்களை பெறுவதற்குப் பயன்படுத்திக்கொண்டு ஸ்கண்டினேவியா சென்றேன். அங்கிருந்து நானே தாயையும் பிள்ளைகளையும் கொழும்புக்கு அழைத்து வந்தேன். அவர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்த்துவிட்டேன் எனக் கூறி பிரபாகரனிடம் ஒப்படைத்தேன். பிரபாகரனுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி. பிரபாகரனின் குடும்பத்தை பாதுகாப்பாக கொண்டு வந்த அந்தக் காலத்தையும் என்னால் உதவமுடியாமல் போன இந்தக் காலத்தையும் நினைக்கும்போது எனக்கு கவலைக்கு மேல் கவலையாக உள்ளது. அந்த நாட்களில் மகனும் மகளும் என்மீது பிரியமாக இருந்தனர். நான் அவர்களை அடிக்கடித் தூக்கித் திரிவேன்.

கேள்வி: ஆம் எனக்கு முன்னர் நீங்கள் சார்ள்ஸை தூக்கி வைத்திருக்கும் படங்களை பார்த்த ஞாபகம் உள்ளது. சாள்ஸ் அன்ரனியும் அவரது சகோதரியும் பிரிட்டனிலும் அயர்லாந்திலும் படித்துக் கொண்டிருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வந்தன. என்ன நடந்தது? அவர்கள் எப்போது திரும்பி வந்தனர்.? ஏன் வந்தனர்.?
பதில்: இல்லை. இல்லை. அவர்கள் ஒருபோதும் படிப்புக்காக வெளிநாடு செல்லவில்லை. அதெல்லாம் பொய்.

கேள்வி: அப்படியானால்?
பதில்: இரண்டு பேருமே மிகவும் கெட்டிக்காரர்கள். உயர்கல்வியில் அவர்கள் மிகவும் நன்றாகவே செய்திருப்பார்கள். தாயார் மதிவதனி இதில் மிக அக்கறையாக இருந்தார். பாலா அண்ணையும் அடேல் அன்ரியும் 1999 இல் வன்னிக்கு வந்திருந்தபோது மதிவதனி பிள்ளைகள் வெளிநாட்டில் படிப்பதற்கான ஆயத்தங்களை செய்யும்படி என்னிடம் கேட்டிருந்தார். எனவே நான் சிறிது காலம் எடுத்து கவனமான தயாரிப்புகளை மேற்கொண்டேன். இவர்களின் ஆளடையாளம் தெரியாமல் மிகவும் பாதுகாப்பான சூழலில் வெளிநாட்டில் கல்வியை ஆரம்பிப்பதற்கான,  ஒரு போதும் பிழைபோகாத ஏற்பாடுகளை செய்தேன். மதிவதனிக்கு பெரிய சந்தோசம். ஆனால் பிரபாகரன் முதலில் சம்மதித்திருந்தாலும் பின்னர் தன் மனதை மாற்றிக்கொண்டார். அவர் பிள்ளைகளை அனுப்ப மறுத்துவிட்டார். மதிவதனியால் அவரது நிலைப்பாட்டை மாற்றமுடியவில்லை. அவ்வளவுதான். அவர்கள் ஒருபோதும் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லவில்லை. பின்னர் இருவருமே தாமாகவே இயக்கத்தில் சேர்ந்து பயிற்றப்பட்ட போராளிகளாயினர்.

கேள்வி: பிரபாகரன் ஏன் இப்படிச் செய்தார்?
பதில்: அவரது கொள்கைதான் காரணமென நான் நினைக்கிறேன். மற்றவர்களின் பிள்ளைகள் வன்னிக்குள் இருக்க வேண்டிய நிலையில் தனது பிள்ளைகளை  பாதுகாப்புக்காகவும் உயர்கல்விக்காகவும் வெளிநாட்டுக்கு அனுப்புவது சரியில்லை என அவர் நினைத்தார். இதே கொள்கைதான் தனது மகனையும் மகளையும் இயக்கத்தில் சேரத் தூண்ட வைத்தது. மற்றவர்களின் பிள்ளைகள் சண்டையில் ஈடுபடும்போது தனது பிள்ளைகளை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது எனவும் அவர் எண்ணினார்.

கேள்வி: இந்த விடயம்  தொடர்பாக உங்கள் விளக்கத்துக்கு நன்றி. உண்மை நிலையை பற்றி எமக்கு பிழையான தகவல்கள் வழங்கபட்டது போல் உள்ளது. இருந்தாலும் பிரபாகரனின் மரணம்பற்றி பிழையாக தகவல் பரப்பப்பட்டுள்ளது. சரியான தகவல் தரப்படவில்லை. இது ஏன்? உங்களுக்கும் நெடியவனுக்கும் இடையில் ஏன் இது தொடர்பாக கருத்து வேறுபாடு உள்ளது?

பதில்: ஆரம்பத்தில் உண்மையை ஏற்றுக்கொள்வதை  மறுத்ததானது உணர்வுகளுடன் தொடர்பானதாக இருந்தது. உதாரணமாக பிரபாகரன் இறந்துவிட்டதாக நான் முதலில் அறிக்கை விட்டபோது உளவுத்துறையை  சேர்ந்த கதிர்காமத்தம்பி அறிவழகன் என்பவர் அதை மறுத்து அறிக்கைவிட்டார். பின்னர் அவர் உண்மையை விளக்கிக் கொண்டு பிரபாகரனின் மரணத்தை ஒப்புக்கொண்டு இன்னொரு அறிக்கையை வெளியிட்டார். நெடியவனையும் அவரது ஆட்களையும் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அவர்களுக்கு சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்களுக்கு பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது நன்றாகவே தெரியும். இருப்பினும் அவர்கள் வேண்டுமென்றே அதை வெளிப்படையாக ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்றும் தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டம் தொடர்கின்றது என்றும் கதைகளை பரப்பி வருகின்றனர்.

நாம் தமிழ் ஈழத்தை போராடிப்பெற்று பிரபாகரன் வெளிப்படும்போது அதை அவருக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என தமிழ் நாட்டு தலைவர்கள் சொல்லி வருவதும் இவர்களின் பொய்ப் பிரச்சாரத்துக்கு உதவியாக உள்ளது.

கேள்வி: பிரபாகரன் உயிரோடு இருப்பது போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தும் நெடியவனின் உள்நோக்கம் என்ன?

பதில்:  பணம். இப்போது எல்லாம் பணம்தான். நான் பிரபாகரன் இறந்துவிட்டார் என அறிக்கை விட்டபோது தலைவர் உயிரோடு உள்ளார் எனக் கூறி அதை எதிர்த்தார்கள். பிரபாகரனுக்கும் ஏனைய சிரேஷ்ட தலைவர்களுக்கம் அஞ்சலி செலுத்த நான் திட்டமிட்டபோது அவர்கள் அதை தடுத்தார்கள். முதலில்   பிரபாகரன் உயிருடன் உள்ளார் என அவர்கள் மனதார நம்புகிறார்கள் என்றே நான் நினைத்தேன். பின்னர் அவர்கள் உண்மை தெரிந்தும் நடிக்கின்றனர் என்பதை கண்டுகொண்டேன்.

கேள்வி: அது எப்படி?
பதில்:  சிலகாலத்தின் பின் எமது முரண்பாடுகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினேன். நான் உறுதியாக இருந்த விடயங்களில் ஒன்று பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக்கொள்வதும், ஒருவாரகாலததுக்கு அனுஷ்டிப்பை நடத்துவது என்பதாகும். அதற்கு, நெடியவன் பிரபாகரனின் மரணத்தை நாம் ஒருபோதும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும்  அப்படி ஏற்றுக்கொண்டால் இயக்கத்தினால் வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமிருந்து பணம் சேர்க்க முடியாது என்றும் கூறினார். நான், இயக்கம் ஒன்றை பொய்களைக் கூறிக்கொண்டு நடத்தமுடியாது என அவர்களுக்கு கூறினேன். அது மாத்திரமல்ல, இவ்வளவு  காலமும் தமிழ் இலட்சியத்துக்காக ஓய்வின்றிப் போராடிய அந்த தலைவருக்கு நாம் புகழாஞ்சலி செலுத்த தவறுவோமானால் நாம் நன்றி கெட்டவர்களாக இருப்போம் எனவும் கூறினேனன்.

பிரபாகரன் எமது போராட்டத்தின் ஆத்மாவாக இருந்தார் என்பதை சுட்டிக்காட்டினேன். அவரின்றி போராட்டமோ இயக்கமோ தமிழ் ஈழமோ இல்லை. எமக்கு ஆயுதங்கள் வாங்கவே பெருமளவு பணம் தேவைப்பட்டது. ஆயுத போராட்டம் முடிந்துவிட்ட நிலையில் அவ்வளவு பெருமளவு பணம் எமக்கு தேவையில்லை. வெளிநாட்டில் உள்ள எமது வர்த்தக செயற்பாடுகள் எமது கொள்கைப்பிடிப்புள்ள ஆதரவாளர்களின் சிறு நன்கொடைகள் என்பன இயக்கத்தை நடத்தப் போதுமென்று கூறினேன்.

எமது புதிய கடமைப்பொறுப்பு எமது மக்களுக்கு உதவுவதுதான். போர் நடத்துவது அல்ல என்றும் நான் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை வெளியில் கொண்டு வருவதும் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதும்தான் உடனடியான நோக்கம் எனவும் கூறினேன். அடுத்து இடம் பெயர்ந்த தமிழர்களை விடுவித்து மீளக்குடியமர்த்தல் என்றேன்.

நெடியவன் தயக்கத்தோடு ஏற்றுக்கொண்டார். எமக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின் விளைவாக நான் மீளமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ இன் தலைவராக ஆகினேன். இது ஜுலை 2009 இல் நடந்தது. நான் பிரதம செயலாளராகவும் நெடியவன் வெளிநாட்டுக் கிளைகளின் நிர்வாகத்துக்குப் பொறுப்பான செயலாளராகவும் இருந்தோம். நவம்பரில் மாவீரர் வாரத்தின்போது பிரபாகரனின் மரணத்தை நினைவு கூருவது என ஏற்கப்பட்டிருந்தது.

ஆனால், இது நடந்து சில வாரங்களுக்குள் ஓகஸ்ட் 05 இல் நான் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன். அதோடு எல்லாம் முடிந்துபோனது. நெடியவனின் கை ஓங்கியது. எனவே பிரபாகரனின் மரணம் ஏற்கப்படவில்லை. அவர் உயிரோடுள்ளார் என்ற மாயை தொடர்ந்து பேணப்படுகிறது.

கேள்வி:  இந்த மாயையை தொடர்ந்து பேணுவதில் பணம் முக்கிய பாத்திரம் வகிப்பதாக முன்னர் கூறினீர்கள் என்னால் இது ஏன், எவ்வாறு என்பதை ஓரளவு ஊகிக்க முடியும். ஆனால் இதை நீங்கள் விளக்கமாக கூறமுடியுமா?

பதில்: போரின் இறுதி மாதங்களின் போது வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து பேரளவு விசேட நிதி சேகரிப்பு நடைபெற்றது. ஆனால் இதில் ஒரு சதம் கூட யுத்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. இது நெடியவன் மற்றும் அவரது ஆட்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு மேலாக எல்.ரீ.ரீ.ஈ நிதிப்படுத்தப்படும் அல்லது நேரடியாக நடத்தப்படும் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் பல உண்டு. இதெல்லாம் பெருமளவு பணம் சம்பந்தப்பட்டவை. தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தின் (சார்பில் சேர்க்கப்பட்ட ஒரு  தொகைப் பணமும் உண்டு. நெடியவனும் அவரது  ஆட்களும் இந்தப் பணம் தொழில் என்பவற்றின்  மீதான தமது கட்டுப்பாட்டை  தொடர்வதற்கும் இனிவரும் காலங்களில் மேலும் நிதி சேகரிப்பதற்கும் ஆயுதப்போராட்டம் முடியவில்லை, தமிழ் ஈழம் சந்திவரை வந்துவிட்டது என்ற நாடகங்களை ஆடவேண்டிய தேவை உள்ளது. இதற்காக பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற பச்சைப் பொய்யை தொடர்ந்து கூறத்தான் வேண்டும். ஏனெனில் பிரபாகரன் இன்றி வெற்றிகரமான ஒரு ஆயுதப்போராட்டம் எமது வாழ்நாளில் ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இது நெடுகத் தொடரமுடியாது. உண்மை ஒரு நேரம் எல்லோருக்கும் தெரியவரும். அப்போது நெடியவனின் கூத்துக்கள் அம்பலமாகும்.

கேள்வி: நெடியவனின் அரசியல் சிறுபிள்ளைத்தனத்தை இது விளக்குகிறது.  ஆனால் ஏன் நெடுமாறன் , வைகோ (வை. கோபாலசாமி) போன்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கூட பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனக் கூறுகின்றனர். அவர்கள் உண்மையாகவே இதை நம்புகிறார்களா?

பதில்: இல்லை. அவர்களுக்கும் உண்மை தெரியும். இவர்களுக்கும் நெடியவனால் கட்டுப்படுத்தப்படும் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. யுடன் தொடர்புகள் உண்டு. அத்துடன் அவர்களின் அரசியல்  எல்.ரீ.ரீ.ஈ. வெல்லப்பட முடியாது. பிரபாகரன் சாகாவரம் பெற்றவர் என்பவற்றை  மையமாக வைத்து நடத்தப்படுவது. எனவே அவர்கள் பிரபாகரன் உயிருடன் உள்ளார்,  தமிழ் ஈழம் மலரும் என்று சொல்லத்தான் வேண்டும்.

கேள்வி: நெடுமாறன்,  வைகோ போன்றவர்களுக்கு உண்மையை விளங்க வைக்க நீங்கள் முயற்சிக்கவில்லையா?
பதில்: சென்ற வருடம் நான் பிடிபடுவதற்கு முன் நெடுமாறனுடன் உண்மை நிலையை விளக்கி நீண்ட நேரம் பேசினேன். அப்போது அவர் எல்.ரீ.ரீ.ஈ. இன் மத்திய செயற்குழுவை பிரபாகரன் இறந்துவிட்டார் எனக் கூறும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வைக்குமாறு கூறினார். என்னால் அதை எப்படி செய்ய முடியும். தலைவர்கள் எல்லோருமே ஒன்றில் இறந்து விட்டனர், அல்லது காணாமல் போயிருந்தனர்,  அல்லது பிடிப்பட்டு இருந்தனர். பின்பு இந்த நெடுமாறன், வைகோவுடன் சேர்ந்து ஒரு ஊத்தை வேலை செய்தார். இவர்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; கே.பி. இந்திய உளவு நிறுவனமான றோவின் கையாள் எனக் கூறும் அறிக்கை ஒன்றை விடுத்தனர்.

அதன்பின் நான் அவர்களோடு பேச முயல்வதை நிறுத்திவிட்டேன். நான் வைகோவுடன் பேசவில்லை. ஆனால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது அவருக்குத் தெரியும் என்பதை நம்பகமான முறையில் நான் அறிவேன். பிரபாகரனின் மரணம்பற்றி தனிப்பட்ட முறையில் கூறப்பட்டப்போது வைகோ குலுங்கி குலுங்கி அழுதார். ஆனால் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற பொய்யை பகிரங்கமாக கூறிவருகிறார்.

இவர் இரகசியமாக எவ்வளவுதான் அழுதாலும் எல்.ரீ.ரீ.ஈ இன் வீழ்ச்சி தொடர்பில் இவரது குற்றவுணர்வு தொடரத்தான் செய்யும். இந்திய அனுசரணையுடன் கூடிய யுத்த நிறுத்தம் வரும் சாத்தியத்தை கெடுத்தவர் இவரே.

கேள்வி: என்ன சொல்கிறீர்கள்? வைகோ இது தொடர்பில் செய்தது என்ன? செய்யாமல் போனது என்ன?
பதில்: நான் ஒரு புறத்தில் யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு முயன்று கொண்டிருந்தபோது மறுபுறத்தில் நடேசனும் (பாலசிங்கம் மகேந்திரன்) இதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் தி.மு.க விலிருந்த எல்.ரீ.ரீ.ஈ அனுதாபிகளான முதலமைச்சர் கருணாநிதியின் மகளும் ராஜ்சபா உறுப்பினருமான கனிமொழி, கத்தோலிக்க குருவான வண. ஜகத் கஸ்பர் என்பவருடன் இணைந்து மத்திய அரசின் அமைச்சரான பி.சிதம்பரத்துடன் யுத்த நிறுத்தமொன்றினை கொண்டு வரும் நோக்கில் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தனர். இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்து கொண்டிருந்த சமயம் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தலைவி ஜெயலலிதா எல்.ரீ.ரீ.ஈ சார்ந்த நிலைப்பாட்டை எடுத்த நிலையில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் தோல்வியடைய வேண்டி வருமோவென பயந்திருந்தனர். எனவே சிதம்பரம் ஒரு திட்டத்தை முன்வைத்தார். அவர் எல்.ரீ.ரீ.ஈ இரண்டு அம்சங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை தனித்து விடுக்க வேண்டும் என விரும்பினார். ஒரு அம்சம் ஆயுதங்களை மௌனிக்க வைக்க ஒப்புக்கொள்வதுடன் ஆயுதங்களை காலகதியில் ஒப்படைப்பதாகும். மற்றையது தமிழ் ஈழத்துக்குப் பதிலாக ஓர் அரசியல் தீர்வை ஏற்றுக்கொளவதாகும்.

எல்.ரீ.ரீ.ஈ தனது பெயரில் வெளியிடுவதற்கான அறிக்கையை எல்.ரீ.ரீ.ஈக்காக சிதம்பரம் அவர்களே உத்தியோகப்பற்றற்ற முறையில் தன் கையாலேயே எழுதினார் என நான் கேள்விப்பட்டேன். இந்த அறிக்கை விடப்பட்டபின் மத்திய அரசு கொழும்பு மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் எனவும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் யுத்தநிறுத்தம் கொண்டு வரப்படும் எனவும உறுதியளிக்கப்பட்டது.

வைகோ,  நெடுமாறன் போன்றோருக்கு இந்த ஏற்பாட்டை பற்றிய விபரங்களை கூறவேண்டாம் என நடேசனுக்கு கூறப்பட்டிருந்தப்போதும் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரான கே.மகேந்திரன் என்பவருடன் இது விடயமாக ஆலோசித்துள்ளார்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்   தலைமையிலான தேர்தல் கூட்டணியில் வைகோவின் மக்கள் திராவிட முன்னேற்றக்கழகத்துடன் இவரது கட்சியான இந்தி கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்ஸிஸ்ட்) யும் சேர்ந்திருந்ததது. மகேந்திரன் இந்த திட்டம்பற்றி வைகோவுக்கு தெரிவித்துவிட்டார்.

இவர்கள் இருவரும் காங்கிரஸ{ம் தி.மு.கவும் யுத்தம் நிறுத்தத்திற்கான பெருமையை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என கவலைப்பட்டனர். எனவே இவர்கள் இந்த திட்டத்தை கெடுக்க விரும்பினர். வைகோ எல்.ரீ.ரீ.ஈ யுடன் கோபித்தார். தமிழ் ஈழத்திற்கு மாற்றாக வேறு எதையாவது எல்.ரீ.ரீ.ஈ ஏற்றுக்கொண்டால் மக்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும்  எல்.ரீ.ரீ.ஈ க்கு ஆதரவான வேறு கட்சிகளும். தமது எல்.ரீ.ரீ.ஈ க்கான ஆதரவை நிரந்தரமாக வாபஸ் பெற்றுக்கொள்ளும் என நடேசனுக்கு வைகோ எச்சரித்தார்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தலில் பாரிய வெற்றியை பெறும் எனவும் புதுடில்லியில் பி.ஜே.பி அரசாங்கம் அமையும் எனவும் நடேசனுக்கு பிழையான நம்பிக்கை ஊட்டப்பட்டது. இதன்பின் யுத்தநிறுத்தம் ஒன்றை கொண்டுவரும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம் இ தேர்தலுக்கு முந்திய எந்த போர் நிறுத்தமும் தி.மு.க காங்கிரஸ் கூட்டணிக்கு உதவுவதாக அமையும்.

எனவே இந்த நடேசன் அறிக்கையை வெளியிடும் எண்ணத்தை கைவிட்டார். சிதம்பரத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. எல்லாமே வைகோவால் வந்ததுதான். இவர்கள் சுயநலமானவர்களாக இருந்தனர். இதனால் தேர்தலில் தாம் வெற்றி பெறுவோம் என நினைத்து வரக்கூடியதாக இருந்த யுத்த நிறுத்தத்தை தடுத்துவிட்டனர்.

கேள்வி: கூறப்பட்டப்படி ஓர் அறிக்கையை எல்.ரீ.ரீ.ஈ வெளியிட்டுருந்தாலும் எல்.ரீ.ரீ.ஈ, தோல்வியின் விளிம்பில் இருந்த தருணத்தில் கொழும்பின் மீது யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்கும்படியான நிர்ப்பந்தத்தை பிரயோகித்திருக்க முடியுமா? இன்னுமொன்று பி.ஜே.பி.  வென்று அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி தமிழ்நாடு தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருந்தாலும் கூட இலங்கையில் நடப்பவற்றை ஓரிரு நாட்களில் மாற்றியிருக்க முடியாது. இராணுவத்தின் வேகமான முன்னேற்றம் காரணமாக இந்தியா விரும்பினாலும் கூட இந்தியா நடவடிக்கை தொடங்க முன்னரே எல்லாமே முடிந்து போயிருக்கும்?

பதில்: நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் சொல்வது என்னவென்றால், இந்தியாவின் உதவியுடன் யுத்த நிறுத்தம் ஒன்றை முயற்சிப்பதற்கான ஒரு வாய்ப்புக்கூட இந்த வைகோ என்ற மனிதனால் தொடக்க  நிலையிலேயே அழிக்கபட்டுவிட்டது என்பதைத்தான். தனது தேர்தல் நோக்கத்துக்காக எல்.ரீ.ரீ.ஈ ஐ பலியிடவைத்த ஒரு சுயநல அரசியல்வாதி. இப்போது அவர் பிரபாகரனுக்காக தனியாட்கள் முன்னிலையில் முதலைக் கண்ணீர் விடுகிறார். பகிரங்கத்தில் இன்னுமொரு ஈழ யுத்தம்பற்றிக் கதைக்கின்றார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்கள் எங்கள் தலையில் மிளகாய் அரைக்கப்போகின்றார்கள்?

கேள்வி: அண்மைக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி விளக்கமாக கூறினீர்கள். நன்றி. இவ்விடயங்கள் தொடர்பாக புதிய விளக்கங்களை நீங்கள் தந்துள்ளீர்கள். ஆனால் இப்போது நான் சமகால நடப்புகள் பற்றி கேட்க விரும்புகிறேன். இந்த அரசாங்கத்துடனான குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவுடனான உங்கள் தொடர்புகள் பற்றி தொடங்க விரும்புகிறேன். நீங்கள் ஏற்கெனவே உங்களை கைது செய்தமை  பாதுகாப்பு செயலாளருடனான உங்கள் முதல் சந்திப்பு என்பன பற்றி கூறியிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் நல்லதொரு உறவை பேணுகிறீர்கள். ஆனால் இதைப்பற்றி பல குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. பல எதிர்க்கட்சி தலைவர்களும் ஊடகங்களின் ஒரு பகுதியும் உங்களிடையே இரகசியமான சந்தேகத்துகிடமான சில கூட்டுசெயற்பாடுகள் நடைபெறுவதாகக் குற்றஞ் சுமத்துகின்றனர். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

பதில்: உண்மை சொல்வதுதான் எனது பதில். இது உண்மையில் மிக எளிதான கதை………

(தொடரும்)
 
(தமிழில்: ந.கிருஷ்ணராசா)

மேலதிக வாசிப்பிற்கு:

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

Kumaran_Pathmanathan_New_Photoதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் பிரபாகரனுக்குப் பின் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் ‘டெய்லிமிரர்’ ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட நேர்காணலின் இரண்டாவது பாகம் ஓகஸ்ட் 14 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது.

(யூன் 14 2009ல் குமரன் பத்மநாதன் வே பிரபாகரனின் மரணம் தொடர்பாக தேசம்நெற் க்கு தெரிவித்த கருத்துக்கள். இப்போது வெளியிட்டு வரும் கருத்துக்களை பெரும்பாலும் 2009 யூனிலும் குமரன் பத்மநாதன் கொண்டிருந்தார். இவை தேசம்நெற் இல் வெளியாகி இருந்தது. தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை , VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் )

”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

(சென்ற வாரத் தொடர்ச்சி)

கேள்வி:- எப்படி நீங்கள் மீண்டும் திரும்பி வந்தீர்கள்? நீங்கள் இயக்கத்தில் எப்படி, ஏன் மீண்டும் இணைந்தீர்கள்? யுத்தத்தின் இறுதி நாட்களில் உங்கள் பாத்திரம் எவ்வாறு காணப்பட்டது?
பதில்:- நான் இயக்கத்திலிருந்து விலகி தாய்லாந்தில் எனது குடும்பத்துடன் ஒரு அமைதியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன். எனக்கு மீண்டும் இயக்கத்தில் இணையும் எண்ணம் இருக்கவில்லை. இருப்பினும் தலைவர் பிரபாகரன் கேட்டுக்கொண்டால் நான் மீண்டும் இயக்கத்தில் சேருவேன் என எனது மனைவி எண்ணினார்.

எல்.ரி.ரி.ஈ இலிருந்து விலக்கப்பட்ட ஒருவர் மீண்டும் சேர்க்கப்படுவது என்பது அரிதான நிகழ்வு என்றபடியால் நான் மீண்டும் இயக்கத்தில் இணைவேன் என நான் நினைவிக்கவில்லை. அத்துடன் சில சிரேஷ்ட எல்.ரி.ரி.ஈ தலைவர்கள் எனக்கு எதிராக எந்தளவு வேலை செய்தார்கள் என்பதையும் எனக்கு எதிராக பிரபாகரனின் மனதில் எந்தளவு நச்சுக் கருத்துக்களை ஊன்றியிருந்தனர் என்பதையும் நான் அறிவேன்.

நான் எல்.ரி.ரி.ஈ இல் இல்லாத போதும் என்ன நடக்கின்றது என்பதை  செய்திகள் ஊடாக அறிந்து வந்தேன். நான் எல்.ரி.ரி.ஈ இல் இல்லாத போதும் எல்.ரி.ரி.ஈ சிறப்பாக செயற்படவில்லை என்பதை செய்திகளினூடாக அறிந்துக்கொண்டதால் தொடர்ந்து வந்த நிகழ்வுகளால் கவலை கொண்டு இருந்தேன்.

புலிகளின் கப்பல்கள் இலங்கை கடற்படையால் அழித்தொழிக்கப்பட்டு வந்தன. எல்.ரி.ரி.ஈ யின் ஆயுதங்களை விநியோகித்தவன் என்ற வகையில் கடலால் தொடர்ச்சியாக ஆயுத விநியோகம் நடப்பது எல்.ரி.ரி.ஈ ஐ பொறுத்தவரையில் எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அறிந்திருந்தேன். எனவே ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்படுவது மிக பாதகமான விடயம் என்பதை நான் உணர்ந்தேன். 

கேள்வி:- இது எவ்வாறு நடந்தது? இவ்வளவு அதிகமான புலிகளின் கப்பல்களை எதிர் கொண்டு அழிக்கும் அளவுக்கு இலங்கை கடற்படை வினைத்திறன் மிக்கதாக வந்தது எவ்வாறு?
பதில்:- பதவிக்கு வந்த பல்வேறு இலங்கை அரசாங்கங்களும் கடற்படையை கட்டியெழுப்புவதிலும் நவீன மயப்படுத்துவதிலும் ஈடுபட்டு வந்தன. பல்வேறு நாடுகளும் மேலதிக புலனாய்வுத் தகவல்களை இலங்கைக்கு வழங்கி வந்தன. எனவே போர்நிறுத்த காலத்தில் இலங்கை கடற்படை வினைத்திறனில் உயர் நிலையை அடைந்து கொண்டது. போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கடல்வழி போக்குவரத்துப்பற்றி தெளிவான நிபந்தனைகள் அல்லது விதிகள் காணப்படவில்லை. எனவே கடற்படையால் எல்.ரி.ரி.ஈ கப்பல்களின் நடமாட்டத்தை சுதந்திரமாக அவதானிக்க முடிந்தது. 

கேள்வி:- எல்.ரி.ரி.ஈ இதை எதிர்பார்க்கவில்லையா?
பதில்:- பிரபாகரன் இதை எதிர்பார்த்தார். அவர் போரின் வெற்றித் தோல்வி கடலிலேயே இனிவரும் காலங்களில் தீர்மானிக்கப்படும் என 2000 ஆம் ஆண்டில் கூறியிருந்தார். அவர் கடற்புலிகளை உச்ச அளவுக்கு வளர்த்து சவாலுக்கு முகம் கொடுக்க விரும்பினார். ஏன் என என்னால் கூறமுடியாது. ஆனால் அவர் பின்னால் இந்த திட்டத்தை மாற்றியிருந்தார் போலத் தெரிகின்றது. எல்.ரி.ரி.ஈ தரைப்படைப் போராளிகளை வளர்ப்பதிலும் வான்படையை விருத்தி செய்வதிலும் ஈடுபட்டது. பிரபாகரன் முதலில் விரும்பியது போல எல்.ரி.ரி.ஈ யின் கடல் வலுவை விருத்தியாக்கவில்லை. 

மறுபக்கத்தில் இலங்கை கடற்படை பலமானதாகவும் உற்சாகம் மிக்கதாகவும் இருந்தது. இலங்கையின் கடற்பரப்பை சுற்றி அது பாதுகாப்பு அரணை அமைத்ததிலிருந்து கடற்படை தூர இடங்களுக்கும் சென்று எல்.ரி.ரி.ஈ கப்பல்களை கடலில் அழித்தொழித்தது. 

எல்.ரி.ரி.ஈ  கப்பல்களின் நடமாட்டம் பற்றிய புலனாய்வுத் தகவலகள் கடற்படையின் அதிகரித்த வினைத்திறன் என்பவற்றின் காரணமாக புலிகளின் கடல்வழிப் போக்குவரத்து கடுமையாகவே கட்டுப்படுத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டிலிருந்து புலிகளின் ஒரு கப்பலால் கூட கிழக்குக் கரைக்கு எதையும் கொண்டுவர முடியவில்லை என எனக்கு கூறப்பட்டது. ஒரு ஒரு பனடோல் கூட வரவில்லை என சூசை என்னிடம் கூறினார். 

கேள்வி:- நீங்கள் மீண்டும் இயக்கத்தில் சேர்ந்த பின் இந்த நிலைமை மாறியதல்லவா? 2009 இன் முன்பகுதியிலும் 2008 இன் இறுதி பகுதியிலும் எல்.ரி.ரி.ஈ இரண்டு கப்பல்களை கொண்டு வர முடிந்தது என ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதற்கு நீங்களே காரணமென நம்பப்பட்டதே?
பதில்:- இல்லை. இதில் உண்மையில்லை. நான் எந்தக் கப்பலையும் அனுப்பவில்லை. உண்மையை சொன்னால் நான் அதற்கு முயற்சிக்கக்கூட இல்லை. 

கேள்வி:- நீங்கள் கடல் விநியோகங்களை செய்வதற்காக இயக்கத்தில் மீண்டும் இணைந்ததாகவும் நீங்கள்தான் இரண்டு கப்பல்களை அனுப்பினீர்கள் எனவும் நான் எண்ணியிருந்தேன்?
பதில்:- நான் கடல்வழி விநியோகங்களை செய்வதற்காக மீண்டும் இணைய வேண்டும் என ஆரம்பத்தில் எல்.ரி.ரி.ஈ விரும்பியதென்பது சரி. ஆனால் இது குறுகிய காலத்தில் சாத்தியமானதல்ல என விளக்கம் கூறினேன். நான் சண்டையை நிறுத்தவும் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்பாடு செய்யவும் எல்.ரி.ரி.ஈ க்கு உதவுமுகமாகவே மீண்டும் இயக்கத்தில் இணைந்தேன். கடல்வழி விநியோகத்தை மீண்டும் தொடங்கவென மீண்டும் இயக்கத்தில் இணையவில்லை. 

கேள்வி:- இதைப்பற்றி நாம் பேசும்முன் நான் உங்களிடம் பச்சையாகவே கேட்க விரும்புகின்றேன். உங்களை இழிவுப்படுத்த விரும்புபவர்களில் சிலர், கடற்படையினால் எல்.ரி.ரி.ஈ கப்பல்கள் அழிக்கப்பட்டதற்கு நீங்களே காரணம் என கூறுகின்றனர். ஆயுதத்தை வாங்குவதற்கு வழங்கப்பட்ட பணத்தை நீங்கள் கையாடிக் கொண்டு வெற்றுக் கப்பல்களை அனுப்பிவிட்டு இலங்கை அரசாங்கத்துக்கும் கடற்படைக்கும் தகவல் வழங்கி கப்பல்களை அழிக்கச் செய்தீர்கள் என தமிழ் ஊடகங்களில் உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வந்ததை பார்த்திருக்கின்றேன்.
பதில்:- நீங்கள் கூறிய எனக்கு எதிரான பிரச்சாரங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த சதித்தனமான கருத்துக்கள் எங்கள் ஆட்களின் கற்பனைத் திறனை காட்டுகின்றன. 

நான் ஒன்றை தெளிவாக கூறுகின்றேன். நான் 2002 டிசெம்பரிலிருந்து எல்.ரி.ரி.ஈ க்கு வெளியே இருந்தேன் என்பது தெளிவானது. ஆனால் அதற்கு முன்னரே 2002 இல் பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் வந்தவுடனேயே எல்.ரி.ரி.ஈ யின் கப்பல் தொகுதியை கையாளும் பணி என்னிடம் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப்பொறுப்பு சூசையினால் தலைமை தாங்கப்பட்ட கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அன்றிலிருந்து கப்பல் விடயங்கள் எதிலும் நான் இருக்கவில்லை. பின்னர் 2002 டிசெம்பரில் வெளிநாட்டில் கொள்வனை செய்யும்பணி (ஆயுதக் கொள்வனவு என்பதன் இடக்கரடக்கல்) என்னிடம் இருந்து எடுக்கப்பட்டது. கே.பி.திணைக்களம் என அழைக்கப்பட்ட திணைக்களம் கலைக்கப்பட்டது. 

இராணுவ தளபாட கொள்வனவும் கொண்டு செல்லலும் ஐயா என்பவராலும் இளங்குட்டுவன் என்பவராலும் கையாளப்பட்டன. எனக்கு எதுவுமே தெரியாது. கொள்வனவு எனது பொறுப்பில் இருக்கவில்லை. உண்மை நிலை இப்படி இருக்கும்போது அரசாங்கத்துக்கு வழங்குவதற்கான தகவல்கள் எனக்கு எங்கிருந்து வரும்? 

கேள்வி:- கப்பல்களின் நகர்வுப் பற்றிய தகவல்களை தொடர்புடைய வேறு எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களிடமிருந்து பெற்று அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியிருக்கலாம் தானே? கே.பி. திணைக்களத்தில் உங்களுக்கு செல்வாக்குள்ள யாரிடமிருந்தாவது தகவல் பெற்றிருக்கலாம் அல்லவா?
பதில்:- அறிவதற்கான தவிர்க்க முடியாத தேவை என்ற அடிப்படையிலேயே எல்.ரி.ரி.ஈ வேலை செய்கின்றது. ஒரு பிரிவு என்ன செய்கின்றது என இன்னொரு பிரிவுக்கு தெரியாது. எனவே ஒருவர் தொடர்புடைய சகல பிரிவுகளுடனும் தொடர்பு கொண்டாலன்றி பூரணமான தகவலை பெற முடியாது. கேபி திணைக்களத்தை பொறுத்தவரையில் சகலரும் அகற்றப்பட்டனர். அவர்கள் ஒன்றில் வேறு கடமைக்கு மாற்றப்பட்டனர். அல்லது வேலை நீக்கம் செய்யப்பட்டனர். 

இந்த விடயத்துடன் தொடர்புடைய எவரோடும் கதைப்பதை நான் நிறுத்தியிருந்தேன். அரிதாக பழைய நண்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் இந்த விடயங்கள் பற்றி நான் பேசுவதில்லை. 

எனக்கு எல்.ரி.ரி.ஈ யின் மனப்பாங்கு நன்கு தெரியும். இந்த விடயங்களை நான் பேசப்போய் பின்னர்  ஏதாவது விரும்பத்தகாதது நடந்துவிட்டால் அவர்கள் என்னை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்குவர். எனவே எவரிடமிருந்தம் நான் இது தொடர்பான தகவல் பெற முயலவில்லை. எல்.ரி.ரி.ஈ  எவ்வாறு வேலை செய்தது என்பது தெரியாதவர்களால் தான் இப்படியான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. எல்.ரி.ரி.ஈ தலைவர் இருந்தப்போது இப்படியாக குற்றங்கள் கூறப்படவில்லை. என்மீது சந்தேகம் இருந்திருந்தால் எல்.ரி.ரி.ஈ என்னை மீண்டும் அணுகியிருக்காது அல்லது இணைந்தப்பின் வேறு பொறுப்பு வழங்கியிருக்காது. 

கேள்வி:-ஆமாம் நாம் பேசிக்கொண்டிருந்த விடயத்தை விட்டு கொஞ்சம் விலகிவிட்டோம். தயவுசெய்து நீங்கள் எல்.ரி.ரி.ஈ யுடன் மீண்டும் இணைந்தது பற்றிக் கூறுவீர்களா?
பதில்:- நான் முன்பு கூறியது போல கடல்வழி விநியோகங்கள் போய்ச் சேர முடியாது போனதால் எல்.ரி.ரி.ஈ. சிரமங்களை எதிர்நோக்கியது என்பதை நான் அறிந்தேன். நான் வெளியில் இருந்தால் எதுவும் செய்யமுடியவில்லை. பின்னர் 2008 இல் பின்பகுதியில் கடற்புலி தளபதி சூசையும் இராணுவத் தளபதி சொர்ணமும் என்னுடன் தொடர்பு கொண்டனர். 

அவர்கள் நிலைமை மோசமாக உள்ளதெனவும் கடல் வழி விநியோகம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் விளக்கினர். அவர்கள் என்னால் மாத்திரமே கடல்வழி விநியோகத்தை  உறுதி செய்ய முடியும் எனக் கூறி, இயக்கத்தில் மீண்டும் சேர்ந்து ஆயுதக் கொள்வனவுப் பொறுப்பு ஏற்கும்படி அழைத்தனர். 

நான் குழம்பிப்போனேன். எனக்கு கவலையாக இருந்தாலும் மீண்டும் போய்ச்சேர தயங்கினேன். நான் பல வருடங்கள் அமைதியான வாழ்வில் குடும்ப வாழ்வில் திளைத்திருந்தேன். அத்துடன் சர்வதேச நிலைமையையும் நான் அறிந்திருந்தேன். முன்னர் எல்.ரி.ரி.ஈ உலகளாவிய பயங்கரவாதிகளுக்கான கண்காணிப்பில் இருக்கவில்லை. அப்போது எம்மால் சந்தையில் விரும்பியதை கொள்வனவு செய்து இலங்கைக்கு கப்பலில் அனுப்ப முடிந்தது. 

ஆனால் இப்போது செப்ரெம்பர் 11.2001 இல் பின் நிலைமை அவ்வளவு இலகுவாக காணப்படவில்லை. அவர்கள் எதிர்ப்பார்ப்பதை என்னால் செய்ய முடியுமா என்பதில் எனக்கும் சந்தேகமாக இருந்தது. அத்துடன் ஐந்து வருடங்களுக்கு மேலாக நான் தொடர்புகள் இழந்த நிலையில் காணப்பட்டேன். மீண்டும் தொடர்வதற்கு எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. எனவே நான் அவர்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை. ஆனால் 2008 டிசெம்பர் 31 இல் எல்லாமே மாறிப்போனது. 

கேள்வி:- அன்று என்ன நடந்தது?
பதில்:- பிரபாகரன் என்னை அழைத்து நீண்ட நேரம் பேசினார். அவர் இராணுவ நிலைமை பற்றி வெளிப்படையாக பேசினார். அவர் என்னை அழைத்தப் போது கிளிநொச்சி அரசாங்கப்படை வசமாகவில்லை. ஆனால் அவர் விரைவில் விரைவில் கிளிநொச்சி அரசபடைகள் வசமாகும் என தெரிவித்தார் அவர். அதன் பின்னர் சண்டை ஏ – 9 வீதியின் கிழக்குக்கு நகரும் என்றார். 

எனினும் பிரபாகரன் எல்.ரி.ரி.ஈ கடற்கரையுடன் கூடிய ஒரு நிலப்பரப்பை நீண்டகாலம் தக்க வைத்துக்கொள்ளும் என்பதில் பிரபாகரன் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் எவ்வளவு காலம் போனாலும்  அப்படி ஒரு பிரதேசத்தை தக்க வைத்துக்கொள்வது  முடியாது என்பதை அவர் அறிவித்திருந்தார். அவர் நான் மீண்டும் இயக்கத்தில் சேர்ந்து மீண்டும் ஆயுதங்களை வாங்கி அனுப்ப வேண்டுமென விரும்பினார். பிரபாகரன் என்னிடம் நேரடியாக கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. நான் எல்.ரீ.ரீ.ஈ யில் சேர சம்மதித்தேன். ஆனால் எனது உடனடி நோக்கம் ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதுதான் என்றும் ஆயுத விநியோகத்தை மீண்டும் தொடங்குவதல்ல என்றும் கூறினேன். 

கேள்வி:- ஏன் இதை கூறீனீர்கள்? அவர் என்ன பதிலளித்தார்?
பதில்:- நான் சர்வதேச நிலைவரம் பாரிய மாற்றங்களை கண்டுள்ளது என விளக்கினேன். மேற்கு நாடுகள் பலவற்றுடன் குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் உளவு நிறுவனங்கள் இராணுவ தளபாட விற்பனை நடைபெறக்கூடிய சகல இடங்களிலும் மொய்த்துப்போய் இருந்தன. கப்பல்களின் நகர்வுகள் மிகக் கடுமையாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. முன்னர் போலன்றி கடல் வழி விநியோகத்தை தொடங்க அதிக முயற்சியும் தயாரிப்பும் அவசியமாகவிருந்தன. எனது கே.பி. வலையமைப்பு கலைக்கப்பட்டுவிட்டது என அவருக்கு கூறினேன். நானும் மிகவும் கூர்மையாக அவதானிக்கப்பட்டுக்கொண்டு இருந்தேன். எனவே நான் ஆயுதக் கொள்வனவை மீண்டும் செய்வதாயின் எனக்கு ஒளிந்து மறைந்து வேலை செய்ய வலையமைப்பை மீண்டும் அமைத்துக் கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டது. 

எனக்கு ஆகக் குறைந்த ஒரு வருடமாவது தேவைப்படும் என பிரபாகரனிடம் கூறினேன். அவர் மிகவும் தாமதமாகிப்போன விடயமாக இருக்கும் என கூறினார். 

அப்படியாயின் எல்.ரி.ரி.ஈ யுத்த நிறுத்தமொன்றுக்கு செல்ல வேண்டுமென நான் ஆலோசனை கூறினேன். முன்னர் 1989 இல் இந்திய இராணுவம் எல்.ரி.ரி.ஈ மீதான பிடியை இறுக்கியபோது பாலா அண்ணை மிகமுக்கிய பாத்திரம் வகித்து பிரேமதாச அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டை கொண்டு வந்தார். இதற்கு நான் எனது ஆதரவை வழங்கினேன். இப்போது பாலா அண்ணை இல்லை. நான் யுத்த நிறுத்தமொன்றை ஏற்பாடு செய்து எல்.ரி.ரி.ஈ.க்கு ஒரு ஓய்வை வழங்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என பிரபாகரன் கூறினார். தேவையானவர்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்து யுத்த நிறுத்தமொன்றை நான் ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர் விரும்பினார். 

அப்படியாயின் எனக்கு பொருத்தமான பதவி தரப்பட வேண்டும் என கூறினேன். அப்படியானால் தான் என்னால் எல்.ரி.ரி.ஈயை உத்தியோக பூர்வமாக என்னால் பிரதிநிதித்துவப் படுத்த முடியும் என்றும் எல்.ரி.ரி.ஈயின் வெளிநாட்டுக் கிளைகளிடமிருந்து எனக்கு பூரண ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும் என்றும் கூறினேன். பிரபாகரன் ஒப்புக்கொண்டார். 2009 ஆம் ஆண்டு பிறந்தபோது நான் மீண்டும் எல்.ரி.ரி.ஈயில் இணைந்திருந்தேன். 

கேள்வி:-ஆனால் நீங்கள் யுத்த நிறுத்தமொன்றை முன்னெடுக்கவும் இணைப்பு செய்யவுமா எல்.ரி.ரி.ஈயில் மீண்டும் இணைந்தீர்கள்? எப்படி வேலையை மீண்டும் ஆரம்பித்தீர்கள்? வெளிநாட்டில் புலிகள் அமைப்பின் ஆதரவு உங்களுக்கு கிடைத்ததா?
பதில்:- எல்.ரி.ரி.ஈயின் சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராக நான் நியமிக்கப்பட்டேன். சர்வதேச முக்கியஸ்தர்களுடன் உறவாடி பேச்சு நடத்தி எப்படியாவது ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவது எனது பொறுப்பாக்கப்பட்டது. எனது முயற்சிக்கு வெளிநாட்டு கிளைகள் பூரணமாக ஆதரவளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 

காஸ்ரோவும் நானும் நல்லுறவில் இல்லாதபடியால் அரசியல் பொறுப்பாளர் நடேசன் இந்த விடயங்களில் எனக்கும் தலைவருக்கும் இடையில் இணைப்பாளராக இருந்தார். நடேசன் என்னுடன் தொடர்பான விடயங்களில் காஸ்ரோவுடன் இணைப்பாளராகச் செயற்பட்டார். ஆனால் விடயங்கள் இலகுவானதாக நடக்கவில்லை. நான் 2009 ஜனவரி முதல் வாரமே வேலை தொடங்கியபோதும் எனது நியமனம் பற்றிய அறிவிப்பு தாமதமாகியது.

காஸ்ரோ வெளிநாடு நிலைகளுக்கு அறிவிக்க நீண்டகாலம் எடுத்தார். தமிழ்நெற்றும் இந்த அறிவிப்புக்களை செய்வதில் தாமதம் காட்டியது. நெடியவன் கட்டுப்பாட்டில் இருந்த வெளிநாட்டு ஊடகங்கள் என்னை இருட்டடிப்பு செய்தன. அரசியல் பிரிவு ஊடாகவும் நடேசன் ஊடாகவும் பொதுமக்களின் துன்பத்தை அழுத்திக்காட்டி யுத்த நிறுத்தமொன்றை கோரும் ஊர்வலங்களை ஒழுங்கு செய்ய வெளிநாட்டுக் கிளைகளை ஊக்குவித்தேன். நான் எல்.ரீ.ரீ.ஈ யின் அடையாளங்கள் எதுவுமின்றி ஊர்வலங்களை  கட்சி சார்பில்லாத மனிதாபிமான செயற்பாடாக காட்டும்படி கூறியிருந்தேன். 

இவ்வாறு பல ஊர்வலங்கள் நடந்தன. இதனால் சாதகமான விளைவுகளும் எமக்கு கிடைத்தன. ஆனால் சில வாரங்களின் பின் ஊர்வலங்களில் புலிக் கொடிகளும் பிரபாகரனின் படங்களும் கொண்டு செல்லப்பட வேண்டுமென நெடியவன் ஊடாக காஸ்ரோ அறிவுறுத்தல்களை வழங்கினார். எல்.ரி.ரி.ஈ மீதான தடையை நீக்க வேண்டும் எல்.ரி.ரி.ஈ என அங்கீகரிக்க வேண்டும் என்று கோரும் வாசகங்கள் கொண்ட பதாதைகளும் ஊர்வலத்தில் எடுத்துச்செல்லப்பட்டன. 

இதை நான் தடுக்க முற்பட்டப்போது நான் பிரபாகரனுக்கு எதிரானவனாக சித்தரிக்கப்பட்டேன். இந்த அரசியல் மடத்தனத்தின் விளைவாக மிகப்பெரிய ஊர்வலங்கள் இடம்பெற்றபோதும் பலனற்றுப் போயின. ஏனெனில் இவை எல்.ரி.ரி.ஈ சார்பானதாகவும் மக்கள் சார்பற்றதாகவும் நோக்கப்பட்டது. 

கேள்வி:-காஸ்ரோவின் ஆட்கள் உங்களுக்கு தடையாக இருந்த நிலைமையில் எல்.ரி.ரி.ஈ யின் சர்வதேச தொடர்புகள் அமைப்பின் தலைவர் என்ற வகையில் உங்கள் கடமைகளை எவ்வாறு முன்னெடுத்தீர்கள்?
பதில்:-வெளிநாட்டு கிளைகள் எனது வேலையை கெடுக்கும் வேலைகளை தொடங்கிய முறை மிக மோசமானது. அவர்கள் ஒத்துழைக்கவில்லை. எனக்கு போதிய நிதி தரப்படவில்லை. கிளைகளிலிருந்து நிதிபெற முயன்றபோது அதுவும் மறுக்கப்பட்டது. எனவே நான் எனது சொந்தப்பணத்திலும் ஆதரவாளர்கள் எல்.ரி.ரி.ஈ உறவுகள் ஆகியோரிடமிருந்து தனிப்பட்ட வகையில் பெற்ற பணத்திலும் தங்கியிருக்க வேண்டியிருந்ததது. இளைப்பாறிவிட்ட பழைய விசுவாசிகளின் ஆதரவுடன்தான் நான் ஊழியர்களையும் வலையமைப்பையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. இந்த வகையானோர் எனக்கு மிகச் சிறந்த ஆதரவை நல்கி என்னோடு திரண்டனர்.
 
கேள்வி:- அப்படியாயின் நீங்கள் ஏன் பிரபாகரனிடம் முறையிட்டு நிலைமையை சரிப்படுத்தவில்லை. 
பதில்:-நான் அவருக்கு செய்திகளை அனுப்பினேன். ஆனால் 2009 இல் நிலைமை மாறிப்போய்விட்டிருந்தது. இராணுவம் விரைந்து முன்னேறி வந்தது. பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. எனவே அவர் வெளியில் தென்பட முடியாது போயிற்று பிரபாகரனுடானான எனது முன்னைய தொடர்பு – இணைப்பான வேலு இல்லாது போனதால் தலைவருடன் தொடர்பு எடுத்தல் கஷ்டமாகப் போயிற்று. புதியவர்கள் இந்த விடயங்களில் வினைத்திறன் மிக்கவர்களாகவோ அல்லது உதவிபுரியக் கூடியவர்களாகவோ இருக்கவில்லை. காஸ்ரோ பற்றி முறையிட நடேசன் தயங்கினார். இருவரும் நல்ல நண்பர்கள். 

அத்துடன் சண்டை தீவிரமடைந்து வந்ததால் நான் இவ்விடயங்கள் தொடர்பில் பிரபாகரனை நெருக்கத் தயங்கினேன். பிரபாகரனால் கூட இந்த நிலைமையை மாற்றமுடியுமா என்பதில் எனக்கு சந்தேகமிருந்தது. வெளிநாடுகளில் காஸ்ரோ குழுவினர் பலமாக இருந்தனர். அவரது துனையாளரான நெடியவன் காரியங்களைக் கொண்டு செல்பவராக காணப்பட்டார்.  அவர்கள் காரியங்களை தடுக்க, கெடுக்க நன்கு அறிந்திருந்தனர். 

கேள்வி:- நான் ஒரு விடயத்தை தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் நேரடியான பதில் தருவீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன். இந்த யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான சமாதான முயற்சி கால அவகாசம் பெறும் முயற்சியா? நீங்கள் ஒரு பக்கத்தில் யுத்த நிறுத்தத்துக்காக முயன்றுக்கொண்டு அதே சமயம் ஆயுதங்களை வாங்கி அனுப்ப முயன்றீர்களா?
பதில்:-எனது பதில் இல்லை என்பதே. எல்.ரி.ரி.ஈ தலைமையில் உள்ள மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. சிலர் இதை தந்திரமாக பயன்படுத்த யோசித்திருக்கலாம். ஆனால் நான் யுத்த நிறுத்தம் பற்றி நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தேன். நான் உண்மையிலேயே யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர முயன்றேன். ஏனெனில் சண்டை தொடர்ந்தால் எல்.ரி.ரி.ஈயின் அழிவாகவே அது இருக்கும் என நான் நம்பினேன் அது மட்டுமன்றி நான் மக்கள் பிரபாகரன் எனது ஏனைய தோழர்கள், இளம் போராளிகளின் உயிர்களை காப்பாற்ற விரும்பினேன்.

நான் சமாதானம் பேச முயன்று கொண்டு அதே சமயம் ஆயுதம் சேர்க்கும் சுத்துமாத்து விளையாட்டின் ஈடுபடவில்லை. நான் எனது பொறுப்பை, அது எதுவாயினும் அதை நேர்மையோடும் ஏமாற்று எதுவும் இன்றியும் செய்ய வேண்டுமென நம்புகின்றவன். நான் வெளியில் சமாதானத்துக்கு முயன்று கொண்டு அதே சமயம் இரகசியமாக ஆயுதம் அனுப்ப முயன்றால் அது நேர்மையீனம் ஆகும். 100 சத வீதம் சமாதானப் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும், வேறு எதற்கும் அல்ல. 

இதை நீங்கள் இப்படியும் பார்க்கலாம். எனக்கு சமாதான முயற்சியில் உதவுகின்ற சர்வதேச முக்கியஸ்தர்களை நான் ஆயுதங்களை கப்பலில் அனுப்புகின்றேன் என அறிந்து கொண்டால் அல்லது எனது ஏமாற்று வேலை பிடிப்பட்டால் எனது நம்பகத்தன்மை இழக்கப்படிருக்கும். என் மீதான நம்பிக்கையும் எல்.ரி.ரி.ஈ யின் நோக்கமும் அழிக்கப்பட்டிருக்கும். நான் சுத்துமாத்து விளையாட்டில் ஈடுப்பட்டுள்ளேன் என கண்டுபிடிக்கப்பட்டால் இலங்கை அரசின் நிலைப்பாட்டை எண்ணிப்பாருங்கள். யுத்த நிறுத்துக்கான சந்தர்ப்பங்கள் அறவே அற்றுப்போயிருக்கும். 

கேள்வி:- நீங்கள் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு முயன்றுக்கொண்டு இருக்கும்போது எல்.ரீ.ரீ.ஈ ஆயுதங்களை கடத்த முயன்று கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் சொல்ல விரும்புகிறீர்களா?
பதில்:- என்னால் கூற முடிவது என்னவென்றால் இப்படியான வேலையை நான் செய்யவுமில்லை. செய்ய முயற்சிக்கவும் இல்லை என்பதைத்தான் ஆயுதங்களை கொள்வனவு செய்வதும் கொண்டு வருவதும் கஷ்டமானபோது பிரபாகரன் இந்த கடமைகளை வேறு பிரிவுகளுக்கும் பகிர்ந்தளித்திருந்தார். ஆயுத கொள்வனவுக்கு  ஐயா பொறுப்பாக இருந்தபோது பொட்டு அம்மான் கீழ் இருந்த புலனாய்வு பிரிவு காஸ்ரோவின் கீழ் இருந்த சர்வதேச விவகாரப்பிரிவு சூசையின் கீழ் இருந்த கடற்புலிகள் என்பவற்றிடமும் ஆயுத கொள்வனவு விவகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. செய்வதறியாத நிலையில் பிரபாகரன் இந்த முக்கியஸ்தர்கள் எல்லோரையும் ஒரு மேடையில் விட்டிருந்தார். ஆயினும் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. 

கேள்வி:-பல சமையல்காரர்கள் சேர்ந்து சூப்பை கெடுத்த கதையாக இது உள்ளது. நீங்களே தொடர்ந்து பொறுப்பில் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது என நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில்:- ஆயுதம் வாங்குவது கடையில் சாமான் வாங்குவது போன்று அவ்வளவு இலகுவான விடயமல்ல. இந்த வேலையை உஷார்மிக்க ஆட்களிடம் கொடுத்ததனாலேயே ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சிலர் கைது செய்யப்பட்டனர். 

சூசை, சொர்ணம், பின்னர் பிரபாகரன் ஆகியோர் என்னிடம் பேசியபோது அவர்கள் கொள்வனவிலிருந்து என்னை அகற்றியது பிழை எனவும் நான் இருந்திருந்தால் இந்த பிரச்சினைகள் வந்திருக்காது என்றும் கூறினர். 

இதை கேட்க சந்தோஷமாக இருப்பினும் நிலைமை மாறிவிட்ட நிலையில் என்னால்  வெற்றிபெற முடிந்திருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமே.  சக்திமிக்க நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய யுத்தத்தில் எமது நடவடிக்கைகளை அவதானிக்கின்ற நிலையில் இலங்கை கடற்படை செயற்றிரனில் அதிக முன்னேற்றம் கண்ட நிலையில் எனக்கும் தேவையான ஆயுதங்களை வழங்குவதும் கடத்துவதும் கஷ்டமாகவே இருந்திருக்கும். 

கேள்வி:- மீண்டும் உங்களைக் கேட்கிறேன். எல்.ரி.ரி.ஈ யை காப்பாற்ற மட்டுமா நீங்கள் யுத்த நிறுத்தத்திற்காக முயற்சித்ததீர்களா? அல்லது சமாதானத்துக்கான உங்கள் ஈடுபாடு ஆழமானதாக உண்மையில் நேர்மையாதாக இருந்ததா?
பதில்:-நீங்கள் இதை கேட்டதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் இதனால் எனது இதயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி என்னால் மனந்திறந்து பேச முடிகின்றது. இது மெதுவான ஒரு தொடர்செயலாக இருந்தது. நான் எல்.ரி.ரி.ஈ யிலிருந்து வெளியேறி இருந்தபோது  அடையாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தேன். இதனால் பழைய விடயங்களை மீட்டுப் பார்க்கவும் அழமாக சிந்திக்கவும் வாய்ப்புக் கிடைத்தது அத்துடன் செப்டெம்பர் 2001 இல் பின் உலகம் மாறி வருவதை நான் அவதானித்தேன். முன்னர் ஒருவருக்கு பயங்கரவாதியாக இருப்பவர். இன்னொருவருக்கு சுதந்திர போராட்ட வீரானாக இருப்பான் என கூறப்பட்டது. இப்போது நல்ல பயங்கரவாதி கூடாத பயங்கரவாதி என இல்லையென்றம் கூறுகின்றனர். பயங்கரவாதி பயங்கரவாதிதான். 

மாறிவரும் சூழலில் எல்.ரி.ரி.ஈ போன்ற இயக்கத்தால் தொடர்ந்து போராடவோ அல்லது நிலைத்திருக்கவோ முடியாது என்பன நான் உணர்ந்துக்கொண்டேன்.  முழு உலகுமே எமக்கு எதிராக அணிதிரளும். அத்துடன் பல தசாப்தகால மோதலினால் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சமாதானம் தேவைப்பட்டது. எனவே நான் உண்மையில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டும் என எண்ணினேன். நான் பிரபாகரனையும் இதை நம்ப வைக்க முயற்சித்தேன். அதற்கு அவர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதலில் யுத்த நிறுத்தம் தேவை என்றார். எனவே பேச்சுவார்த்தை மூலம் எய்தப்படும் சமாதானத்துக்கான முதற் படியாக, ஒரு யுத்த நிறுத்தம் ஒன்றுக்காக மனதார வேலை செய்யத் தொடங்கினேன்.

கேள்வி:ஆனால் நீங்கள் உண்மையில் யுத்த நிறுத்தம் பற்றி நம்பிக்கையோடு இருந்தீர்களா? நீங்கள் எப்படியோ ஒரு தோற்கப்போகும் யுத்தத்தைத்தானே நடத்திக்கொண்டிருந்தீர்கள். காலங் கடந்த ஞானம் என்று பார்க்கையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: அப்போது நான் உண்மையில் யுத்த நிறுத்தம் பற்றி நம்பிக்கையோடு இருந்தேன். எல்.ரி.ரி.ஈ. தலைவர்கள், போராளிகள், சண்டையில் சிக்கிக்கொண்ட அப்பாவி பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்ற எப்படியாவது ஒரு யுத்த நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என நான் அறிந்துகொண்டேன்.

கேள்வி: மக்களை எல்.ரி.ரி.ஈ. விடுவிக்கச்செய்து அதன் மூலம் சாதாரண மக்களை காப்பாற்ற நீங்கள் முயற்சிக்கவில்லையா?
பதில்: தொடக்கத்தில் நான் அதற்கு முயற்சித்தேன். அமெரிக்கர்கள் மக்களை கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்ல முன்வந்தனர். ஆனால் எல்.ரி.ரி.ஈ.யின் அதிகாரமிக்கோர் இதற்கு இதற்கு சம்மதிக்கவில்லை. இந்த மனப்பாங்கு மிகவும் துரதிஷ்டவசமானது. மனிதப் பண்பற்றதாகவும்கூட தோன்றலாம். இதை நான் நியாயப்படுத்த முயலவில்லை. ஆனால் கடந்த காலத்தை மீட்டுப் பார்க்கும்போது எல்.ரி.ரி.ஈ. தலைமைக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. அவர்கள் மக்களை விடுவித்திருந்தால் புலிகள் மட்டுமே அங்கு எஞ்சியிருப்பர். அதன்பின் எல்லோரும் பூரணமாக அழிக்கப்பட்டிருப்பர்.

கேள்வி:மாவோ சேதுங்கின் கருத்துப்படி ஒரு கெரில்லாப் போராளி என்பவன் மக்கள் என்னும் சமுத்திரத்தில் நீந்தும் மீன் ஆவான். கடல் நீர் வடிக்கப்பட்டால் மீன் தத்தளித்துப்போகும். எனவே மீன் தண்ணீரை வைத்திருக்க விரும்பியது. அப்படித்தானே?
பதில்: உண்மைதான். இதனால்தான் ஒவ்வொருவரும் மக்கள், போராளிகள் ஆகிய யாவரும் காப்பாற்றப்படும் வகையில் ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டு வர முயன்றேன். இப்போது யோசிக்கும்போது யுத்த நிறுத்தத்திற்கு முயற்சிப்பபதில் எல்.ரி.ரி.ஈ. தலைமை பிந்திப் போய்விட்டது என நான் நினைக்கின்றேன். 2008 இன் நடுப்பகுதியில் அதாவது சண்டை ஏ-9 வீதியின் மேற்குப் பகுதியில் நடந்தபோது முயற்சித்திருந்தால் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் சாத்தியம் மிக அதிகமாக காணப்பட்டது. ஆனால் பூநகரி, பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு என்பன வீழ்ச்சியடைந்தபோது அரசாங்கத்தின் வெற்றிக்கான வாய்ப்பு நிச்சயமாக இருந்தது. எல்லாமே மிக விரைவாக நடந்தன. அரசாங்கத்தின் பார்வையில் வெற்றி நிச்சயம் என்ற நிலையில் யுத்த நிறுத்தத்துக்கு வருவது முட்டாள்தனமாக இருந்திருக்கும்.

கேள்வி:இந்த நிலையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களால் சாதிக்க முடிந்தது என்ன?
பதில்: நான் அடிப்படையில் ஒரு வேலைக்காரன். பொறுப்பு ஒன்று தரப்பட்டால் ஏன் அதை செய்யாதிருப்பதற்குக் காரணம் தேடுவதைவிட வேலை தொடங்குவதையே விரும்புவேன். அது மட்டுமன்றி இது வாழ்வா சாவா என்ற பிரச்சினை. எனவே நான் எப்படியும் ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்பாடு செய்து மக்களையும் இயக்கத்தையும் தலைமைத்துவத்தையும் காப்பாற்ற வேண்டியிருந்தது. எனவே என்னிடமிருந்த அற்பசொற்ப நிதியுடன் என்னைப் போன்றோரின் ஆதரவுடன் நான் வேலை செய்யத் தொடங்கினேன். சர்வதேச அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், இராஜதந்திரிகள், வெவ்வேறு நாடுகளின் அபிப்பிராயம் உருவாக்குவோர், உயர் ஐ.நா. உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் தொடர்பு ஏற்படுத்தினேன். இவர்களில் சிலருடன் நேரடியாக நான் பேசினேன். செல்வாக்கு மிக்கவர்கள் எனது சார்பில் வேறு சிலருடன் பேசினேன். மார்ச் 2009 இல் ஒரு வழி கண்டுவிட்டேன் என்றே எண்ணினேன். ஆனால் பிரபாகரன் இந்த ஏற்பாட்டை புறந்தள்ளிவிட்டார். 

கேள்வி: பிரபாகரன் மூன்று சொல்லில் நிராகரித்த Lock-off திட்டம் இதுதானே? தயவு செய்து விளக்கமாகக் கூறுங்கள்?
பதில்: ஆம் அதுவே தான். என்னிடம் சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு முயற்சி இருந்தது. குறித்த இடங்களில் பாதுகாப்பதாக வைப்பதன் மூலம் எல்.ரி.ரி.ஈ. ஆயுதங்களை களைய வேண்டும். இதற்கு பயன்படுத்திய சொல்தான் Lock-off. அதாவது, ஆயுதங்கள் குறிப்பாக கனரக ஆயுதங்கள் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

இவை ஐ.நா. பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட வேண்டும். இதன்பின் மோதல் தவிர்ப்பு ஏற்படுத்தப்பட்டு மக்கள் குறிப்பிட்ட சுடுகலன் பயன்படுத்தாத வலயங்களில் விடப்படுவர். நோர்வே அனுசரணையுடன் அசாங்கமும் எல்.ரி.ரி.ஈயும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 25 தொடக்கம் 50 வரையான உயர் தலைவர்கள் அவசியமாயின் குடும்பத்துடன் வெளிநாடொன்றுக்கு அனுப்பப்படுவர். நடுத்தர தலைவர்கள், போராளிகள் தடுத்துவைக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். இவர்களுக்கு ஒப்பீட்டளவில் சிறிய தண்டனை வழங்கப்படும். கீழ்மட்ட போராளிகள் பொதுமன்னிப்பு வழங்கப்படுவர்.

இந்தத் திட்டம் நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உட்பட்ட மேற்குநாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. தேவை எனில் அமெரிக்கா தனது கடற்படைக் கப்பல்களை அனுப்பத் தயாராக இருந்தது.

கேள்வி: இலங்கை அரசாங்கம் இதற்கு ஒத்து வருவதாக இருந்ததா இருந்ததா?
பதில்: இது உத்தியோகபூர்வமாக அரசாங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டது. என நான் நினைக்கவில்லை. அதேசமயம் இது உத்தியோகபூர்வமாகவன்றி வேறு வழியில் தெரியப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை. ஏனெனில் முக்கியமான நபர் – பிரபாகரன் இதை நிராகரித்துவிட்டார். நான் இந்தத் திட்டத்தின் சுருக்கத்தை எழுதி பிரபாகரனின் அங்கீகாரத்திற்கு அனுப்பினேன். அவர் தொடருங்கள் எனக் கூறியிருந்தால் அதை  பூரணமாக நடைமுறைப்படுத்தும் வேலையை தொடங்கியிருப்பேன். ஆனால் விபரங்களை 16 பக்க ஆவணமாக தொலைநகலில் அனுப்பியபோது, அவர் 16 பக்க விடயத்தை மூன்றே மூன்று சொற்களால் மறுத்தார். ‘இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்பதுதான் அந்த மூன்று சொற்களும். எனவே நான் அதை கைவிட்டேன்.

கேள்வி: பிரபாகரன் ஒப்பபுக்கொண்டாலும் எல்.ரி.ரி.ஈ.யையும் அழித்தொழிக்கும் நிலையில் படைகள் காணப்பட்ட நிலையில் அரசாங்கம் இதற்கு ஒப்புக்கொண்டிருக்கும் என நீங்கள் நினைத்தீர்களா?
பதில்:எனக்குத் தெரியவில்லை. அநேகமாக அரசாங்கம் இதை ஏற்றிருக்காது. ஏனெனில் அது வெற்றியின் விளிம்பில் நின்று அதை இழக்க அரசாங்கம் விரும்பியிருக்காது. ஆனாலும் அந்தத் திட்டம் இறுதியாக்கப்பட்டு அரசாங்கத்திடம் கொடுக்கப்படவில்லை. எல்.ரி.ரி.ஈ. இருந்த நிலைமையில் பிரபாகரன் அதை ஏற்றிருக்க வேண்டும்.

கேள்வி: ஏன் பிரபாகரன் அதை ஏற்க மறுத்தார்?
பதில்: எனக்குத் தெரியாது. என்னால் ஊகிக்க மட்டுமே முடியும். இதை நினைக்கும் போது மனம் வேதனைப்படும். ஏனெனில் இன்று அவர் இல்லை. இந்த வாய்ப்பை ஏன் அவர் ஏற்கவில்லை என நான் எப்போதும் யோசிக்கத்தான் போகிறேன்.

கேள்வி: பிரபாகரனை காப்பாற்றும் உங்கள் முயற்சி அத்தோடு நிற்கவில்லை. அப்படித்தானே? ஹெலிகொப்டர் மூலம் மீட்கும் முயற்சி பற்றி கதை அடிபட்டதே?
பதில்:ஆம். அது வேறு ஒரு திட்டம். ஆனால் நெடியவன், அவரின் வெளிநாட்டு சகாக்கள் ஒத்துழைக்க மறுத்ததால் அது நிதர்சனமாகவில்லை. பிரபாகரன் குடும்பத்தவருக்கு நேர்ந்த கதியை நினைக்கும் போதெல்லாம் நான் கவலைப்படுவேன். அதன்பின் நெடியவனையும் அவரின் ஆட்களையும் மனதில் திட்டுவேன்.

கேள்வி: இது உங்களுக்கு மிகுந்த மன வேதனை தாரது எனில் பதில் சொல்லுங்கள். அப்போது என்ன நடந்தது என சொல்வது அவசியம் எனக் கருதுகிறீர்களா?
பதில்: அது வேதனையானது. ஆனால் அவ்விடயம் குறித்து எமது மக்கள் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என நான் எண்ணுகிறேன். அதைப்பற்றி பேசுவது எனக்கு மன நிம்மதியளிக்கக் கூடும்.
2009 மே மாத முற்பகுதியில் என்ன நடந்ததென்றால், பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி அடிக்கடி என்னுடன் தொடர்புகொண்டார். அவர் என்னை கே.பி. மாமா என்றுதான் அழைப்பார். நிலைமை மிக மோசமாக மாறிவருவதாகவும் தனது தந்தை, தாய், சகோதரி மற்றும் இளைய சகோதரரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு நான் எதையாவது செய்ய வேண்டும் எனவும் சார்ள்ஸ் கூறினார்.

கேள்வி: சார்ள்ஸின் நிலை என்ன?
பதில்: இல்லை. அவர், தான் தப்பிச்செல்ல எண்ணவில்லை. தான் இறுதிவரை சண்டையிட்டு தேவையானால் உயிரிழக்கவும் தயார் எனவும் சார்ள்ஸ் கூறினார். தனது குடும்பத்தைப் பற்றிதான் அவர் கவலையடைந்தார்.

சார்ள்ஸுடன் பேசியபின் நான் மிகவும் கவலையடைந்தேன். ஒரு திட்டம் குறித்து சிந்தித்தேன். கப்பல் ஒன்றைப் பெற்று அதை இலங்கைக் கடற்படைக்கு எட்டாத விதத்தில் சர்வதேச கடற்பரப்பில் தயாராக வைத்திருக்க விரும்பினேன். ஹெலிகொப்டர் ஒன்றை வாங்க விரும்பினேன். எல்.ரி.ரி.ஈ.யின் வான் படைப் பிரிவிலுள்ள பயற்சிபெற்ற விமானிகள் அதை வன்னிக்குக் கொண்டு சென்று அக்குடும்பத்தை கப்பலுக்கு கொண்டுவரவேண்டுமென விரும்பினேன். அதன்பின் மூன்று நாடுகளில் ஒன்றில் அவர்களைப் பாதுகாப்காப்பாக வைத்திருக்கும் திட்டம் என்னிடமிருந்தது.

கேள்வி:ஆனால் பிரபாகரன் அதை ஏற்றுக் கொண்டிருந்திருப்பாரா?
பதில்:அது எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் திட்டத்தை வகுத்தபின் சார்ள்ஸுடன் தொடர்புகொண்டு அதைத் தெரிவித்தேன். அவரின் தந்தை அதை ஏற்றுக்கொள்வாரா என்று கேட்டேன். தான் பிரபாகரனை சம்மதிக்கச் செய்வதற்கு முயற்சிப்பதாகக் கூறினார். ஆனால் பிரபாகரன் அதற்கு சம்மதிக்காவிட்டால் நான் அவரின் தாயையும் தனது தம்பி தங்கையையும் காப்பாற்ற வேண்டும் என அவர் கூறினார்.

பிரபாகரனை அறிந்திருந்ததால் அவர் ஒருபோதும் மற்றவர்களை விட்டுவிட்டு தான் குடும்பத்துடன் தப்பிச் செல்ல முயற்சிக்க  மாட்டார் என நான் உணர்ந்தேன். ஆனால், இந்த ஹெலிகொப்டர் மூலம் அவரையும் வேறு சிலரையும் காடொன்றின்  பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் எனவும் பின்னர் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோரை வெளியேற்ற முடியும் எனவும் நான் எண்ணினேனன்.

கேள்வி: இறுதியில் என்ன நடந்தது? ஏன் இந்தத் திட்டம் மேற்கொண்டு செல்லப்படவில்லை.
பதில்: அது மிக துக்ககரமான கதை……..

(இந்த நேர்காணலின் மூன்றாவதும் இறுதியுமான பகுதி அடுத்த வாரம் முடிவடையும்.)

(தமிழில்: ந.கிருஷ்ணராசா)

மேலதிக வாசிப்பிற்கு:

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

Kumaran_PathmanathanPirabakaran Vதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே.பிரகாரனினுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து  கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டார்.

7ஆம் திகதி சனிக்கிழமை டெய்லிமிரர் பத்திரிகையில் வெளியான இப்பிரத்தியேக செவ்வியின் தமிழ் வடிவம் இது :-
 
கேள்வி: கடந்த வருடம் ஓகஸ்ட் 5ஆம் திகதி நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். ஒருவருட காலமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உங்கள் தற்போதைய சூழ்நிலை குறித்து எவ்வாறு வர்ணிப்பீர்கள்?

பதில்: நான் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் பெரும் திகைப்பாக இருந்தது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கவலையடைந்தேன். ஆனால், நான் கடவுளை நம்புகிறேன். மோசமான நிலை ஏற்படலாம் என அச்சமடைந்த போதிலும் நான் அதிஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டமை எனக்கு நன்மையளித்துள்ளது.
 
துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது போராட்டம் இலங்கையிலுள்ள எமது மக்களை குறிப்பாக வன்னியிலுள்ள மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது.  இப்போது NERDO (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) ஊடாக சிறிய வழியிலேனும் என்னால் அவர்களுக்கு உதவ முடிகிறது.

கேள்வி: நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் சூழ்நிலை என்ன?
பதில்: நான் வீடொன்றில் வைக்கப்பட்டுள்ளேன். நான் வெளியே போக முடியாது. ஆனால் வீட்டிற்குள்ளே சுதந்திரமாக எங்கும் நடமாடலாம். தொலைபேசியில் பேசுவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. என்னை இங்கு சந்திக்க வருவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நான் யாரையும் சந்திப்பதென்றால் அனுமதி பெற வேண்டும். அவர்களை சந்திப்பதற்கு நான் வெளியே செல்லும்போது சில அதிகாரிகள் என்னுடன் வருவார்கள். கட்டுப்பாடற்ற வகையில் மின்னஞ்சல் (ஈமெயில்) பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

கேள்வி: எந்த வழியிலாவது நீங்கள் மோசமாக நடத்தப்பட்டீர்களா?
பதில்: இல்லை நான் மிகவும் தயைவுடன் நடத்தப்படுகிறேன். ஆரம்ப நாட்களில் சிலவகை பதற்றம் இருந்தது. ஆனால் நாட்கள் சென்றபின் நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் நிலவுகிறது.

கேள்வி: எவ்வாறு இந்த சூழ்நிலை ஏற்பட்டது? புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் நீங்கள் அரசாங்கத்துடன் உடன்பாடொன்றைச் செய்துகொண்டதாகவும் உங்கள் கைது ஒரு நாடகம் எனவும் கூறுகிறார்கள். எவ்வாறு நீங்கள் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள்?
பதில்: எனக்கெதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எனக்குத் தெரியும். ஆனால் நான் எப்படி கைது செய்யப்பட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கைது குறித்து ஆங்கிலத்தில் விரிவாக எழுதிய முதல் நபர் நீங்கள்தான். பல நாட்களின்பின் நான் அதை வாசித்தபோது சில சிறிய விடயங்களைத் தவிர, பெரும்பாலானவை சரியாக இருந்தன. இவர்கள் என்ன சொன்னாலும் உண்மை என்னவென்றால் நான் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டேன் என்பதாகும்.

கேள்வி: நீங்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள் என்று கூறமுடியுமா?
பதில்: நான் ஹோட்டல் அறையில் அமர்ந்து, இங்கிலாந்திலிருந்து மலேசியாவுக்கு வந்திருந்த புலிகளின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் சகோதரருடனும் அவரின் மகனுடனும் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சி.எம்.ஆர். வானொலியிலிருந்து ராகவன் பேசினார். தொலைபேசி சமிக்ஞை தெளிவாக இருக்கவில்லை. அதனால் நான் அவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றேன்.

நான் ஹோட்டல் ஓய்வரங்கப் பகுதியிலுள்ள கதிரையொன்றில் அமர்ந்து தொடர்ந்தும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென மலேசிய அதிகாரிகள் குழுவொன்று என்னை சூழ்ந்துக்கொண்டது. ஒருவர் ‘வெரி சொரி மிஸ்டர் கே.பி’. என்று கூறிவிட்டு எனது தொலைபேசியை கைப்பற்றிக்கொண்டார். அது கீழே விழ மற்றொரு அதிகாரி அதை எடுத்தார். என்னை அவர்களுடன் வருமாறு கூறினர். அவர்களுடன் செல்வதைத் தவிர எனக்குத் தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை.

நான் கோலாலம்பூரிலுள்ள குடிவரவு தடுப்பு நிலையமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு சுமர் 36 மணித்தியாலங்கள் (2 பகல்களும் 2 இரவுகளும்) அங்கு வைக்கப்பட்டிருந்தேன். தடுப்பு நிலைய அறையொன்றில் நான் உறங்க வேண்டியிருந்தது. அவர்களின் உரையாடல் மூலம் நான் அதிகாரபூர்வமாக நாடு கடத்தப்படவுள்ளேன் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் நான் இலங்கைக்கா? இந்தியாவுக்கா? அமெரிக்காவுக்கா? அல்லது வேறெங்குமா? கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அதன்பின், நான் கோலாலம்பூர் விமான நிலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று காத்திருந்தது. அப்போது நான் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது தெரிந்தது. நான் விமானத்தின் சிக்கன வகுப்புக்கான வாசல் வழியாக ஏற்றப்பட்டு  பின்னர் உட்புறமாக வர்த்தக வகுப்பிற்கு மாற்றப்பட்டேன். அதையடுத்து நான் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன்.

கேள்வி: கைது செய்யப்பட்ட காலத்தில் நீங்கள் தாய்லாந்தில் வசித்தீர்கள். இந்நிலையில் பாங்கொக்கில் அல்லாமல் கோலாலம்பூர் புறநகரில் நீங்கள் இயங்கியமைக்கான காரணம் என்ன?  2007ஆம் ஆண்டு நீங்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதனாலா?

பதில்:  நான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளியே இருந்தபோது தாய்லாந்தில் பல வருடங்கள் அமைதியான வாழ்க்கையை முன்னெடுத்தேன். நான் அங்கு வசிப்பதும் அறியப்பட்டிருந்தது. மீண்டும் நான் புலிகள் அமைப்பில் தீவிரமாக செயற்படத் தொடங்கியபோது தாய்லாந்திலுள்ள எனது குடும்பத்தின்மீது மற்றவர்களின் கவனம் ஈர்க்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் நான் கோலாலம்பூருக்குச் சென்றேன். அத்துடன் எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் கோலாலம்பூருக்கு வந்து என்னை பார்ப்பதும் இலகுவாக இருந்தது.

உண்மையில் நான் 2007இல் கைது செய்யப்படவில்லை.  என்னை கைது செய்ய ஒரு முயற்சி நடந்தது. சில அதிகாரிகள் அதிகாலை வேளையில் எனது வீட்டை சூழ்ந்துகொண்டனர். அதிஷ்டவசமாக நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டுவிட்டதாக இலங்கையில் செய்தி கசிந்தது.

கேள்வி: நீங்கள் கொழும்புக்கு வந்தவுடன் என்ன நடந்தது? பாதுகாப்புச் செயலருடன் முதல் சந்திப்பிலேலேயே சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக நான் சில கதைகள் கேள்விப்பட்டேன்.
பதில்: கொழும்பு நோக்கிய விமான பயணத்தின்போது இலங்கை அதிகாரியுடன் நான் நீண்ட நேரம் கதைத்தேன். அவர் மிக சினேகபூர்வமானவர்.  இலங்கை அதிகாரிகளால்  நான் நாகரிகமாக நடத்தப்பட்டேன். அது எனக்கு ஆறுதல் அளித்தது. ஆனாலும் இலங்கை அடைந்தபின் என்ன நடக்குமோ என அப்போதும் இதயத்தில் கவலை இருந்தது. பாதுகாப்புச் செயலாளர் குறித்து மிக கவலை கொண்டிருந்தேன்.  அவர் கடுமையாகப் பேசும் சிங்கள கடும்போக்குவாதி என்ற அபிப்பிராயத்தையே நான் கொண்டிருந்தேன். அதனால் அவருடனான சந்திப்பு குறித்து உண்மையில் அச்சம் கொண்டிருந்தேன்.

ஆனால், பாதுகாப்புச் செயலரின் இல்லத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டபோது சில விடயங்கள் நடந்தன. பின்னணியில் ஒளி பளிச்சிட புத்தர் சிலையொன்று அங்கு இருந்தது. நான் சில நிமிடங்கள் நின்று புத்தர் சிலையை நோக்கிவிட்டுச் சென்றேன். அதனால் எனது மனம் ஆறுதலடைந்தது. தாய்லாந்தில் நான் எனது மனைவியுடன் அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்குச் செல்வேன். எனது வீட்டில் புத்தர் படம் உட்பட அனைத்து மத கடவுள்களின் படங்களும் உள்ளன. அதனால் எனக்கு பேராபத்து எதுவும் வராது என நான் நினைத்தேன்.

பாதுகாப்புச் செயலாளர் ஏனைய அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்தவுடன் அவர் எழுந்து என்னுடன் கைகுலுக்கிவிட்டு ‘பிளீஸ் சிட் டவுண்’ என்றார். ஏனைய அதிகாரிகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். திரு. கோட்டாபய மிக கண்ணியமானவராக இருந்தார். எதற்காகவும் கவலைப்பட வேண்டாம் என்றார். நான் அப்போது சரியாக என்ன சொன்னேன் என்று நினைவில்லை. ஆனால் “நுழைவாயிலில் நான் புத்தர் சிலையை கண்டேன், பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர்கிறேன்” என்பதுபோல் ஏதோ கூறினேன்.

கேள்வி: நீங்கள்  குறிப்பிடும் புத்தர் சிலை சம்பவமானது புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள  உங்களை விமர்சிப்பவர்கள், புத்தரை புகழும் துரோகியென உங்களை சித்தரிப்பதற்கு ஏதுவாகலாம்?
பதில்: எனக்குத் தெரியும். நீங்கள் கூறுவது சரி. ஆனால் நான் உண்மையில் என்ன நடந்து என்பதையே சொல்கிறேன். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. கடந்த ஜுன் மாதம் இலங்கைக்கு வந்த 9 பேர் கொண்ட புலம்பெயர் தமிழர் தூதுக்குழுவொன்றிடமும் நான் இந்த புத்தர் சிலை  பற்றி சொன்னேன். 

எனது வீட்டு சூழல் காரணமாகவும் எனது மனைவியின் மத நம்பிக்கை காரணமாகவும் எனக்கு புத்த வழிபாடு, ஆலயங்கள் பரீட்சியமானவை. எனவே புத்தர் சிலையை கண்டமை உணர்வு ரீதியில் எனக்கு உதவியது. இது தான் உண்மை. அதற்காக அவர்கள் என்னை தாக்க விரும்பினால் அதை செய்யட்டும். நான் புத்தருக்கோ பௌத்தத்திற்கோ எதிரானவன் அல்லன்.

கேள்வி: உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன். பாதுகாப்புச் செயலாளருடனான உங்கள் சந்திப்பு எவ்வாறு தொடர்ந்தது?
பதில்: கேக், தேநீர் பரிமாறப்பட்டன. பிரச்சினையை அமைதியான வழியில் அவர்கள் தீர்க்க முயற்சித்ததாகவும் ஆனால் முழுமையான யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலர் கூறினார். அவர் சில கேள்விகளை கேட்டார். நான் உண்மையாக பதிலளித்தேன். எனக்குத் தெரியாத விடயங்களை கேட்டபோது அது பற்றி சொன்னேன். எனது பதில்களில் அவர் திருப்தியடைந்தவராகக் காணப்பட்டார். அதேவேளை, என்னைப் பொறுத்தவரை யுத்தம் நீண்டகாலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது எனவும் இப்போது எனது ஒரே குறிக்கோள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கை வாழ உதவுவதே எனவும் கூறினேன்.

பாதுகாப்புச் செயலரின் நடத்தைகள் எனக்கு உண்மையில் வியப்பாக இருந்தன. தொலைக்காட்சி நேர்காணல்களைப் பார்த்து அவர் ஒரு சிங்கள கடும்போக்குவாதி என்ற விம்பமே என் மனதில் இருந்தது, என்பதையும் அவரின் நடத்தை எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்பதையும்  ஒரு கட்டத்தில் நான் அவரிடம் சொன்னேன்.  அவர் சிரித்துவிட்டு “நான் எப்போதும் இப்படித்தான். சில ஊடகவியலாளர்கள் என்னை எரிச்சல்படுத்துகின்றனர். அதனால்தான் நான் அப்படி கோபமடைகிறேன் ” என்றார்.

நீண்ட உரையாடலின் பின்னர் அவர் ஒரு குறித்த அதிகாரியை எனக்கு அறிமுகப்படுத்தியதுடன், அவர் தான் எனக்குப் பொறுப்பாக இருப்பார் என்றார். சகல விடயங்கள் குறித்தும்  அந்த அதிகாரியுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தேவையானால் அவரூடாக தனக்கு  எழுத்து மூலம் எதுவும் தெரிவிக்கலாம்  எனவும் கூறினார்.  அவர் மீண்டும் என்னுடன் கை குலுக்கினார். நான் கொழும்பிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியது.

கேள்வி: அதன்பின் என்ன நடந்தது? நீங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் பற்றி அரசாங்கத்துக்கு தகவல் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகளும் தகவல்களும் வெளியாகின?

பதில்: இது பற்றி என்னை தெளிவாகச் சொல்ல விடுங்கள். இலங்கை புலனாய்வு அதிகாரிகள் என்னுடன் பேச ஆரம்பித்த போது எனக்கு இரு தெரிவுகள் இருந்தன. ஒன்று எதிர்ப்பது, இரண்டாவது ஒத்துழைப்பது. நான் மோதினால் நான் நீண்டகால சிறையை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். அதனால் யாருக்கும் பலன் இருக்காது. ஆனால் நான் ஒத்துழைத்தால் நான் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கலாம். இது எமது மக்களுக்கு சில சேவைகளையாற்றுவதற்கு வாய்ப்பை வழங்கலாம்.

போராட்டம் இப்போதும் தொடர்ந்து அத்துடன் எனது தலைவரும் உயிருடன் இருந்திருந்தால் நான் அரசாங்கத்தை எதிர்த்து ஒத்துழைக்காமல் இருந்திருக்கலாம். நான் எத்தகைய பின்விளைவையும் சந்தித்திருப்பேன். ஆனால் நிலைமை அப்படியில்லை. எல்லாமே முடிந்துவிட்டது. எனவே எதிர்ப்பதில் அர்த்தமில்லை. எனவே நான் ஒத்துழைப்பதை தெரிவு செய்தேன்.
 
இன்னொரு விடயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டும். நான் 2003 ஜனவரியிலிருந்து 2008 டிசெம்பர் வரை நான் இயக்கத்திற்கு வெளியே இருந்தேன். எனக்கு 2003 ஆம் ஆண்டிற்கு முந்தைய விசயங்கள் மட்டுமே தெரிந்திருந்தது. அக்காலப் பகுதியில் கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட நபர்களிலும் எனக்குப் பின்னால் வந்தவர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதைத் தெளிவாக புலனாய்வு அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினேன். அவர்கள் எனது நிலையை புரிந்துகொண்டனர்.

நாங்கள் பேசும்போது வேடிக்கையான விடயமொன்று நடந்தது. ஒரு கட்டத்தில் அதிகாரிகள் என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினர்.  “உங்களுக்கு தற்போதைய எல்.ரி.ரி.ஈ. பற்றி எதுவும் தெரியாது” என பகிடியாக கூறினர். அவர்கள் சொன்னது சரிதான். பல வருடங்களுக்கு முந்தைய கட்டமைப்புகள் பற்றி மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. 2002 ஆம் ஆண்டுக்கு பின்னரான சூழல் குறித்து எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதை அவர்கள் உணர்ந்துகொண்டு என்னை பார்த்து சிரித்தனர்.

இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. அதேவேளை ஏனைய நாடுகளின் புலனாய்வுத் துறையுடனும் அதிக பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேள்வி: ஆனால் புலம்பெயர்ந்தோர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை நீங்கள் அரசாங்கத்திற்கு வழங்குவதாக, நெடியவன் தலைமையிலான காஸ்ட்ரோ சார்பு குழுவும் சில ஊடகங்களும் உங்களுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றன?
பதில்: அது எனக்குத் தெரியும். ஆனால், உண்மை சற்று வித்தியாசமானது. புலனாய்வு ஆட்களால் பல்வேறு வட்டாரங்களிலிருந்து தகவல்கள் பெறப்படும் அதேவேளை, அவர்களுக்கு காஸ்ட்ரோவின் ஆட்களாலும் அதிக தகவல்கள் கிடைத்துள்ளன.

கேள்வி: அது எப்படி?
பதில்: எனக்கு சொல்வதற்கு சற்று தயக்கமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இராணுவம் விசுவமடுவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது காஸ்ட்ரோவும் அவரின் பிரிவினரும் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். எனவே புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் இப்போது அதிக தகவல்கள் உள்ளன. அவர்களிடம் கணினிகள், தகவல் திரட்டுகள் உள்ளன. புலிகளுக்குப் பணம் கொடுத்தவர்களின் பட்டியல்கள், திகதிகள், தொகைகள் என்பன உள்ளன. அவர்களிடம் வரி பற்றுச்சீட்டுகளின் பிரதிகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் யார் நிதி சேகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். புலிகளினால் முதலீடு செய்யப்பட்ட வர்த்தகங்கள், சொத்துக்களை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வன்னிக்குச் சென்ற அனைவரின் விசிட்டிங் கார்ட்டுகள்கூட அவர்களிடம் உள்ளன. ஆனால், தகவல் கொடுப்பவன் என மக்கள் என்னை தூற்றிக்கொண்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?

கேள்வி: காஸ்ட்ரோவின் பிரத்தியேக டயரிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது உண்மையா?
பதில்: நான் எந்த டயரியையும் பார்க்கவில்லை. ஆனால் புலனாய்வு ஆட்கள் உத்தியோகபூர்வமற்ற விதமாக நட்பு ரீதியில் என்னுடன் உரையாடிய போது காஸ்ட்ரோவின் 20 வருடகால டயரிகள் தம்மிடம் இருப்பதாகக் கூறினர். அவர் (காஸ்ட்ரோ) வெளிப்படையாக பல விடயங்களை அந்த டயரிகளில் எழுதியுள்ளார். ஒரு தடவை அதிகாரியொருவர் என்னிடம் சிரித்துக் கொண்டே காஸ்ட்ரோவுக்கு காதல் தொடர்பொன்று இருந்ததா எனக் கேட்டார். எனக்கு அது பற்றி தெரியாது என்றேன். அவர் சிரித்துக்கொண்டு முழுக்கதையையும் சொன்னார். காஸ்ட்ரோ அது பற்றிகூட எழுதியுள்ளார்.

கேள்வி: தமிழிழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பில் நீங்கள் மிக சக்தி வாய்ந்த நபராக விளங்கிய காலமொன்று இருந்தது. ஆயுதக்கொள்வனவு, புலிகளின் கிளைகள் நிர்வாகம், நிதி சேகரிப்பு, மூன்று முக்கிய பிரிவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருந்தீர்கள். 2003 ஆம் ஆண்டில் நீங்கள் இந்த இயக்கத்திலிருந்து விலகியபின் நீங்கள் உங்கள் செல்வாக்கை இழந்துவிட்டதைப் போன்றும், 2009 ஆம் ஆண்டு மீண்டும் அதில் இணைந்தபோது உங்களை மீள நிலைநிறுத்திக் கொள்வதற்கு சிரமப்பட்டதைப் போன்றும் தோன்றியது. அப்போது என்ன நடந்தது? ஏன் விலகினீர்கள்? நீங்கள் திருமணம் செய்ததுதான் காரணமா?

பதில்: இல்லை இல்லை. எனது திருமணம் காரணமல்ல. நான் கடந்த நூற்றாண்டின் 90களின் முற்பகுதியில் திருமணம் செய்தேன். இந்த நூற்றாண்டில் அல்ல. எனது மகள் இப்போது தனது பதின்மர் பருவத்தின் கடைசியில் இருக்கிறாள்.

எனவே, நடந்தவை வேறு. 2002 ஆம் ஆண்டு சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு போர் நிறுத்தம் பிரகடணப்படுத்தப்பட்ட பின்னர், தலைவர் பிரபாகரன் புலிகள் அமைப்பை புதிய வழியில் மீளமைக்க முயன்றார். இவ்விடயங்கள் குறித்து நான் வன்னிக்கு வந்து அவரை சந்திக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

ஆனால், அப்போது பல நாடுகளின் புலனாய்வு வலைப் பின்னல்களால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நான் முன்னிலையில் இருந்தேன். 2001 ஆம் ஆண்டின் செப்டெம்பர் 11 தாக்குதல் உலகின் உலகின் பாதுகாப்பு நிலைவரத்தை மாற்றியிருந்தது. நான் அப்போது இலங்கைக்கு பயணம் செய்யும்’ ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை. நான் பல நாடுகளின் புலனாய்வு முகவரகங்களால் குறிவைக்கப்பட்டுள்ளேன் என்பதை எனது சொந்த தகவல் வட்டாரங்களின் மூலம் அறிந்திருந்தேன். எனவே நான் தயங்கினேன். இது எனது தலைவருக்கு சினமூட்டியது.

மற்றொரு விடயம் எனக்கும் இயக்கத்திற்கும் தலைவருக்கும் இடையிலான இணைப்பில் (லிங்க்) மாற்றம் ஏற்பட்டது. 15 வருடகாலமாக வேலு என்பவர் எனக்கும் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான தொடர்பாடல் இணைப்பாக அவர் செயற்பட்டார். திடீரென அவர் மாற்றப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டார். நான் வேலுவுக்கு பழக்கப்பட்டிருந்ததால் புதிய நபருடன் அஜஸ்ட் செய்துகொள்ள எனக்கு கடினமாக இருந்தது. ஒரு வழியில் தொடர்பாடல்கள் பாதிக்கப்பட்டன.

அதேவேளை, புலிகளின் பல சிரேஷ்ட தலைவர்கள் போர் நிறுத்தத்தை தமது அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதில் அக்கறையாக இருந்தனர்.

புலிகளின் கப்பல்களை கடற்புலிகளின் கட்டுப்படுத்த வேண்டுமென கடற்புலிகளின் தளபதி சூசை விரும்பினார். அதுவரை அக்கப்பல்களுக்கு நான் பொறுப்பாக இருந்தேன். அரசியல் பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் புலம்பெயர்ந்த மக்களின் அரசியல் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார். காஸ்ட்ரோ வெளிநாட்டு நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருந்தார். அவர் அனைத்து வெளிநாட்டுக் கிளைகளினதும் முழுக்கட்டுப்பாட்டை பெற விரும்பினார். நிதிக்குப் பொறுப்பாக இருந்த தமிழேந்தி நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் அதிக பங்கு வகிக்க விரும்பினார். 

எனவே அவர்கள் அனைவரும் பிரபாகரன் எனது அதிகாரத்தை குறைத்து  அவற்றை தமக்கு வழங்க வேண்டும் என விரும்பினர். போர்நிறுத்தம் காணமாக புலம்பெயர்ந்த மக்கள் பலர் வன்னிக்கு அடிக்கடி வன்னிக்குப் பயணம் செய்தனர். எனவே தம்மால் சகல விடயங்களையும் தொலைபேசி, பெக்ஸ், மின்னஞ்சல் மூலம் நேரடியாகக் கையாள முடியும் என பிரபாகரனுக்கு புலிகளின் ஏனைய சிரேஷ்ட தலைவர்கள் அறிவுறுத்தினர்.

பின்னர் எனக்கு அதிக பொறுப்புகள் காரணமாக பளுமிகுந்துள்ளதாகவும் எனவே சில நடவடிக்கைகளிலிருந்து நான் ஓய்வுவெடுக்க வேண்டும் எனவும் அவர் பிரபாகரன் தெரிவித்தார்.  நான் என்ன செய்ய முடியும்? அதனால் நான் ஓய்வு பெற்றேன்.

கேள்வி: உங்களுக்கும் வெளிநாடுகளிலுள்ள உங்கள் நெருங்கிய சகாக்களுக்கும் எதிராக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லையா?
பதில்:  ஆம். சில குற்றச்சாட்டுகள் இருந்தன. சில பெண்களை வன்னிக்கு அனுப்பி எனக்கும் பாரிஸிலுள்ள மனோ, ஒஸ்லோவிலுள்ள சர்வே ஆகியோருக்கும் எதிராக புகாரிடச் செய்யும் அளவுக்கு அவர்கள் சென்றனர். சில பெண்கள் பிரபாகரனுக்கு முன்னால் சத்தமிட்டு அழுததாகவும் நான் கேள்விப்பட்டேன்.

கேள்வி: இதன் பின்னால் யார் இருந்தார்கள்?
பதில்:  அது ஒரு சதி. காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அதன் பின்னால் இருந்தனர். கவலையளிக்கும் விதமாக தலைவர் அதில் ஏமாற்றப்பட்டார். நாம் எம்மை நேரடியாக தற்காத்துக்கொள்ள முடியவில்லை.

கேள்வி: அதன்பின் என்ன நடந்தது?
ப:  நான் முன்பு கூறியதைப் போல தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான்  ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். எனது விசுவாசிகள் என அவர் கருதிய அனைவரையும் அவர் நீக்கினார். சில மாதங்களுக்குள் ஏறத்தாழ அனைத்தும் மாறின. புலிகளின் விசுவாசமான செயற்பாட்டாளர்கள் பலர் அவர்களின் பதவிகளிலிருந்து முறையற்ற விதமாக நீக்கப்பட்டனர்.

கேள்வி: ஆனால் அப்போதும் நீங்கள் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்தீர்கள். ஏன் அது மாறியது? எப்படி ஆனந்தராஜா அல்லது ஐயா உங்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்?
பதில்: அது இன்னொரு கதை.  ஐயா மிக விவேகமான மனிதர். அவரிடம் சிறந்த பயண ஆவணங்கள் இருந்தன. சுதந்திரமாகப் பயணிப்பார். அத்துடன் அவர் தகுதிபெற்ற கணக்காளர். எனவே எனது அறிவுறுத்தலின்படி அவர் எமது கணக்குகளை தணிக்கை செய்வதற்காக அவர் சகல நாடுகளுக்கும் செல்வார்.

பின்னர் நான் அதிகமாக அறியப்பட்டு பல புலனாய்வு முகவரகங்களால் தேடப்பட்ட போது எனது பயணங்களையும் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டேன். எனவே நான் அவரை ஆயுதச் சந்தையில் ஆயுதங்களை வாங்கக்கூடிய இடங்களுக்கும் அனுப்பத் தொடங்கினேன். ஆந்த இடங்களுடன் அவர் பரிட்சியமானார்.
பின்னர் பிரபாகரனிடமும் எனது பிரதிநிதியாக அவரை நான் அனுப்பினேன். அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அவர் எனக்கு விசுவாசமாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் வன்னியிலுள்ள எனது நண்பர் ஒருவர் ‘இவர் உண்மையாகவே உங்களுடைய ஆளா? அவர் உங்களுக்கு எதிராக தலைவரின் மனதில் நஞ்சூட்டிக்கொண்டிருக்கிறார்’ என்று கூறியபோது அதிர்ச்சியடைந்தேன். ஐயா தானே சகல ஆயுதக்கொள்வனவுகளையும் மேற்கொள்வது போலவும் அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என்பதுபோலவும் காட்டிக்கொண்டதாக அறிந்தேன். அதன்பின் ஐயா பற்றி பாலா அண்ணை சொன்னது சரி என்று உணர்ந்தேன். 

கேள்வி: பாலா அண்ணை (அன்ரன் பாலசிங்கம்), ஐயா பற்றி உங்களிடம் என்ன சொன்னார்?
பதில்: பாலா அண்ணையும் அடேல் அன்ரியும் 1999 ஆம் ஆண்டில் வன்னியிலிருந்து கடல் வழியாக வெளியேறியபோது அவர்கள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தங்குவதற்கும் லண்டனுக்குச் செல்வதற்கு முன்னர் மருத்துவ சிகிச்சை பெறவும் நான் ஏற்பாடு செய்தேன். நான் அப்போது இந்தோனேஷியாவில் இருந்ததால் அவர்களின் நலன்களைக் கவனிக்கும் பொறுப்பை நான் ஐயாவிடம் கொடுத்திருந்தேன். ஆனால் மனிதர்களை மிகச்சரியாக எடைபோடும் பாலா அண்ணை பின்னர் என்னிடம் “‘நீ இந்த ஆளை நம்புகிறாய். ஆனால் இருந்துபார் ஒருநாள் உனது இடத்தை அவர் பிடித்துக்கொள்வார்” எனக் கூறினார். பாலா அண்ணையின் மதிநுட்பத்தை நான் உணர்ந்தபோது கால தாமதமாகியிருந்தது.

கேள்வி: ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் கே.பி. டிபார்ட்மென்ட் என அறியப்பட்ட, வெளிநாட்டுக் கொள்வனவுப் பிரிவிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். அதற்கு என்ன காரணம் சொல்லப்பட்டது?
பதில்: நான் முன்பே சொன்னதைப்போல் தலைவரை சந்திப்பதற்காக நான் இலங்கைக்குச் செல்லவில்லை. பல புலனாய்வு நிறுவனங்களின் பட்டியலில் மேல் இடத்தில் நான் இருந்ததால் பயணம் செய்வது ஆபத்தானது என உணர்ந்தேன். இந்நிலையில் நான் ஆயுதம் வாங்குவதற்காக பயணம் செய்து ஆபத்துக்குள்ளாவதை தான் விரும்பவில்லை என பிரபாகரன் கூறினார். சில காலத்திற்கு ஓய்வெடுக்குமாறும் அங்கு வருவதற்கும் தன்னை சந்திப்பதற்கும் முயற்சிக்குமாறும் அவர் கூறினார்.

இதன்பின் நான் எனது கடமைகளை விடுவிப்பதைத் தவிர எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எனக்குப் பதிலாக நியமிக்கப்படுபவர்கள் தொடர்ந்தும் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள் எனவும் பிரபாகரன் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை.

கேள்வி: இது எப்போது நடந்தது. உங்களுக்கும் பிரபாரகரனுக்கும் இடையில் பிரிவொன்று ஏற்பட்டதா? அதன்பின் என்ன நடந்தது?
பதில்: இது 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து நான் இயக்கத்தின் அன்றாட செயற்பாடுகளிலிருந்து நான் விலகியிருந்தேன். ஆனால் நான் ஒருபோதும் முறையாக இயக்கத்திலிருந்து விலகவில்லை. அது பென்ஷன் இல்லாமல் ஓய்வெடுப்பது போலத்தான்.

அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. அவரிடமிருந்து பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். அத்துடன் எனக்கு ஓர் மூத்த சகோதரன் போல. ஆனால் நடந்த விசயங்களால் நான் வருத்தமடைந்தேன். முன்புபோல் நான் அவரை அடிக்கடி தொடர்புகொள்ளவில்லை. நான் அதைச் செய்யவேண்டுமென அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. நாம் இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் திசைத்திரும்பியிருந்தோம். ஆனால் ஆனால், ஒரு போதும் பிளவு ஏற்படவில்லை. எமக்கிடையிலான பரஸ்பர அன்புணர்வு நீடித்தது. 

கேள்வி: அப்போது உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களில் ஒரு பகுதியாக,  பிரபாகரனுக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது எனவும் நீங்கள் துரோகி என அவரால் கருதப்பட்டதாகவும் கூறப்பட்டது.
பதில்: அது எனக்குத் தெரியும். நான் 2003 ஆம் ஆண்டு புலிகளின் அமைப்பின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருந்த பின்னர் வெளிநாடுகளிலிருந்து புலிகளின் புதிய தொகுதி செயற்பாட்டாளர்களுக்கு என்னைப் பற்றியயோ கடந்த காலத்தைப் பற்றியோ தெரிந்திருக்கவில்லை. எனவே எனக்கெதிராக எதுவும் சொல்லப்பட்டிருக்கலாம்.

உண்மை என்னவென்றால், நாம் விலகியிருந்தாலும் எம் இருவருக்கிடையிலும் மிகுந்த அன்பும் பாசமும் இருந்தது. ஒரு சம்பவம் காரணமாக பிரபாகரன் எழுத்து மூலம் என் மீதான அன்பை வெளிப்படுத்தியிருந்தார். வெளிநாட்டிலிருந்த புலிகளின் வான்படைப் பிரிவு செயற்பாட்டாளர் ஒருவருக்கு சில விடயங்களுக்காக என்னுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டியிருந்தது. அதற்கு தலைவர் அனுமதியளிப்பாரா என்று அவருக்குத் தெரியாமலிருந்தது. எனவே அவரின் முன்னாள் நண்பர் கே.பியுடன் தொடர்புகொள்ளலாமா என்று கேட்டு அவருக்கு ஒரே மெசேஜ் அனுப்பினார். பிரபாகரன் தனது எழுத்து மூல பதிலில், அதை செய்யலாம் என்று கூறியதுடன் கே.பி. தனது முன்னாள் நண்பன் அல்லவெனவும் ‘இன்றும் என்றும் நல்ல விசுவாசமான நண்பன்’ எனவும் வலியுறுத்தியிருந்தார்.

கேள்வி: எனவே நீங்கள் புலிகள் அமைப்பிலிருந்து ஓய்வுபெற்றீர்கள். அப்போது உங்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான எல்லா விசயங்களும் முடிந்துவிட்டது என எண்ணினீர்களா?
பதில்:  அவ்வேளையில் நான் அப்படித்தான் நினைத்தேன். நான் புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருப்பதைப் பற்றி எனது மனைவியிடம் சொன்னது நினைவிலுள்ளது. இப்போது அவளுடனும் எமது மகளுடனும் அதிக காலத்தைச் செலவிட முடியும் என்று கூறினேன். ஆனால் அவள் “உங்களால் உண்மையாக அப்படி செய்ய முடியுமா? மீண்டும் வி.பி. (வேலுப்பிள்ளை பிரபாகரன்) உங்களை அழைத்தால் மீண்டும் திரும்பிச் செல்லாமல் இருக்க முடியுமா?” என்று கேட்டாள்.

எனக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான பிணைப்பை எனது மனைவி உணர்ந்திருந்தாள். அவள் பிரபாகரனின் மனைவி மதிவதனியுடன் தொலைபேசியில் பேசுவாள். அவர்கள் இருவருக்கும் தமது கணவர்களுக்கிடையிலான நெருங்கிய நட்பு தெரிந்திருந்தது.

கேள்வி: நீங்கள் மீண்டும் திரும்பிய விடயம் எப்படி நடந்தது? எப்படி ஏன் இந்த இயக்கத்தில் நீங்கள் மீண்டும் இணைந்தீர்கள்? யுத்தத்தின் கடைசி நாட்களில் உங்கள் பாத்திரம் என்ன?
பதில்: அது மற்றொரு நீண்ட கதை.

(அடுத்த வாரம் தொடரும்)

DBS Jeyaraj 

(தமிழில்: ஆர்.சேதுராமன்)

நன்றி தமிழ்மிரர்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

Prof_Hoole‘சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல ஒரு பெரிய பள்ளிக் கூடமே!’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான ஒரு நீண்ட விவாதம் தேசம்நெற்றில் தொடர்கிறது. இவ்விவாதம் இதுவரை பேசப்படாத பல விடயங்களை மக்கள் தளத்திற்குக் கொண்டுவந்துள்ளது. மேலும் தமிழ் அறிவியல் சமூகம் – அதன் ஸ்தாபனமான விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றியுமான ஒரு மீள் மதிப்பீட்டின் அவசியத்தை இந்த விவாதம் வலியுறுத்தி இருந்தது. இலக்குகள் மீள்வரைபுக்கு உட்பட்டு தன் சுயாதீனத்தையும் சுய அடையாளத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தன்னை மீள் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் தற்போது ஏற்பட்டு உள்ளது. (முன்னைய விவாதத்தைப் பார்வையிட: சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன் )

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டு அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் சூழலில் நாட்டைவிட்டே வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் அவர்களுடனான இந்த நேர்காணல் இந்த விவாதத்தை மற்றுமொரு தளத்திற்கு நகர்த்தும் என நினைக்கின்றேன்.

Prof_Hooleஇலங்கையின் சிறந்த நேர்மையான கல்வியியலாளராக மதிக்கப்படுகின்ற பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் அவர்களுடனான இந்நேர்காணல் மின் அஞ்சலூடாகவே அமைந்தது. அவருடைய பதில்கள் அவர் கைப்பட தமிழில் எழுதி மின் அஞ்சலூடாகவே அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றது. அவருடைய தமிழ் மொழிப் பாவனை அறுபதுகளின் இறுதிப் பகுதியுடனேயே மட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் அப்போதைய மொழிநடையிலேயே தனது பதில்களை அவர் பதிவு செய்துள்ளார். இனி நேர்காணலுக்குள் நுழைவோம்…..

._._._._._.

தேசம்நெற்: உங்களைப் பற்றிய ஒரு ஆழமான சுருக்கமான அறிமுகம்…..

பேராசிரியர் ஃகூல்: ஃகூல் குடும்பத்தை ஸ்தாபித்தவர் ஸ்ரீநிவாசன் ஆவார். அவர் பருத்தித்துறையில் ஒரு சைவக் கோவில்மனியக்காரன். ஆனால் 15 ஏப்ரல் 1845 அன்று கனம் பீட்டர் பேசிவல் ஊழியத்தால் ஞானஸ்ஞானம் பெற்று பின்பு பேசிவலோடு மெதடீஸ் திருச்சபையிலிருந்து ஆங்கிலிக்கன் திருச்சபைக்கு 1850 மட்டில் மாறினார். இதிலிருந்து நாம் நல்லூர், சுண்டிக்குழி ஆகிய ஆங்கிலிக்கன் ஸ்தாபனங்களைக் கொண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறேம். ஊர் என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் சிக்கலானது.

எனது அம்மாவின் தகப்பனார் சாமுவேல் சங்கரப்பிள்ளை சோமசுந்தரம். மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் கொடிமர சங்கரர் என்ற பட்டத்தை உடையவர். மாவிட்டபுரம், கொல்லன்கலட்டி, கருகம்பானை ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர். மாவிட்டபுரம் கோவிலின் மூலஸ்தானத்திலுள்ள மூன்று விக்கிரகங்களில் இடதுபக்கமாகவுள்ளது சோமசுந்தரத்தின் தமயன் முதலியார் பிள்ளையால் திருவிழாவில் கொடியேற்றும் உரிமையைத் தொடர வாரிசு வேண்டி நேத்திக் கடனாகக் கட்டியது.

சோமசுந்தரம் கிறிஸ்தவனாகி பரியோவான் கல்லூரியில் டீன் ஆகவும், சுண்டிக்குழி சோமசுந்தரம் வீதியில் வீடு கட்டி பின் நல்லூரில் 32 வருஷம் குருவாகவும் இயங்கினார். என் அய்யபாவின் தாய் பக்கம் ஏழாலையைச் சேர்ந்தவர்கள்.

Prof_Hoole_and_his_Familyஎன் மனைவி துஷியந்தி ஆசீர்வாதம். ஐந்து பிள்ளைகள். இப்போ நான்கு.

அரசியல் பின்னணி என்றால் தமிழரசுக் கட்சி. செல்வநாயகம், திருச்செல்வம் (தகப்பன் – மகன், -நீலன் திருச்செல்வம்), நாகநாதன், கதிரவேற்பிள்ளை, வன்னியசிங்கம், தர்மலிங்கம் யாவரும் ஏதோ ஒரு விதத்தில் எனக்குச் சொந்தமானவர்கள். அப்பா ஃகூல் போதகர் அவர்கள் TULF மேடைகளில் பேசாமல் உட்கார்ந்து இருப்பார்.

படித்தது நல்லூர் சாதனா பாடசாலை, பரி யோவான் கல்லூரி, பட்டங்கள் D.Sc (Eng) London, Ph.D. Carnegie Mellon, MSc (Distinction) London, BSc (Ceylon / Katubedde), IEEE Fellow, C.Eng.

தேசம்நெற்: உங்கள் இளமைக்காலம் தமிழ்த்தேசிய எழுச்சியுடன் பிண்ணிப் பிணைந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். அதனை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

பேராசிரியர் ஃகூல்: குறிப்பாகப் பெரிதாய் ஒன்றும் இல்லை. அம்மா நல்லூர் பரி யாக்கோபூ ஆலயப் பெண்களுடன் சத்தியாக்கிரகம் இருக்கப் போனபோது நான் துணையாகப் போவேன். சொந்தக்காரர் தமிழரசுக்கட்சி வேட்பாளரான போது நானும் சிறு பெடியனாக அவர்களுடன் ஒரு வால்போல் போனேன். 1970ல் மாணவர் பேரவை ஊர்வலங்களில் ஈடுபட்டிருந்தேன். 1986 வரை இயக்கங்களுக்கு ஆதரவு என் மனதில் இருந்தது. என் அண்ணன் ஒருவர் சத்தியசீலன், தோமஸ் அரியரத்தினம் ஆகியோருடன் சுப்பிரமணியம் பூங்காவில் வகுப்புகளுக்குப் போனவர்.

நியூயோர்க் இலங்கைத் தமிழ் சங்கத்தின் பத்திரிகை ஆசிரியனாகவும் 1983/4 செயல்பட்டு Tamil News என்ற வெளியீட்டை வைத்தியர் நாகேந்திராவின் கீழ் செய்தேன். ஆனால் நாமே எம்மைக் கொல்லத் தொடங்கி, எங்கள் நிறுவனங்கள் யாவும் அக்கொலைகளை ஆதரித்ததுடன் நான் தனியாய் இயங்கி எங்கு மனித உரிமைகளைப் பேண முடியுமோ அங்கு செய்யக் கூடியதைச் செய்து வருகிரேன். மனித உரிமைகள் தமிழரின் மட்டுமல்ல. பெண்கள், பிள்ளைகள், சாதி பெயரில் தாழ்த்தப்படுவோர் போலப் பலரை அடக்கும்.

மேலும் என் பாட்டனுக்கும் அப்பாவுக்கும் குரு உடைகள் (cassock) தைத்தவர் ஒரு இஸ்லாமிய தையலாளர். அவர் மகன்மார் ரஃபிக், ஸசீற் ஆகியோர் பரியோவான் கல்லூரியில் படித்து, என்னையும் என் சகோதரரையும் brother என்று அழைத்து, பிரதான வீதியில் கடை வைத்து, எமது உடுப்புகளைத் தைத்தனர். அவர்களை துரோகிகள் என்று குடியெழுப்ப எல்லாமே எனக்குப் புளித்துவிட்டது. அதை ஆதரித்த என்னுடன் தமிழ் அரசியலில் இயங்கிய அமெரிக்க தமிழ் நண்பர்களை சகிக்க முடியாத நிலையேற்பட்டது.

தேசம்நெற்: மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். நீங்கள் சமூகம் பற்றிய ஆழமான அக்கறையுடைய ஒரு மனிதர். அந்த வகையில் சமூக மாற்றம் பற்றிய உங்கள் இளமைக்கால கனவுகள் எதிர்பார்ப்புகளுக்கு உங்கள் கல்வியியல் சாதனைகள் துணைபுரிந்துள்ளனவா?

பேராசிரியர் ஃகூல்: நான் கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டேன். குடும்பமாக திருவிவில்லியத்தை வாசித்து வந்தோம். என் கனவுகள் எல்லாம் அந்த அடிப்படையில் அமைந்துள்ளன. கடவுள் கெட்டவர் உட்பட யாவரையும் நேசிக்கிறார். இந்த அடிப்படைக் கூற்றிற்கு அமைய விதவைகளையும் அனாதைகளையும் பேணல், ஊர் பெயரும் தற்காலிக வாசகரை பராமரித்தல், மறியலில் உள்ளோரைப் பார்த்தல், அறுவடை நேரம் ஒரு பங்கை அறுக்காமல் ஏழைகளுக்கு விடல் போன்ற பல கட்டளைகள் வேதவசனத்தில் உள்ளன. இவை யாவும் எம்மத்தியில் சமத்துவத்தை பேணுகின்றன. ஆகவே உங்கள் கேள்விக்குப் பதிலாக என் சமயக் கல்வியே என் கனவுகளை உருவாக்கியுள்ளது. சமயசார்பற்ற கல்வியில் சமத்துவத்திற்கோ மனித உரிமைகளுக்கோ அடிப்படை காண்பது கஷ்டம்.

தேசம்நெற்: சமூக மாற்றத்திற்கு அல்லது சமூகப் பொறியியலுக்கும் அறிவியல் சமூகத்திற்கும் உள்ள உறவுபற்றி குறிப்பிட முடியுமா? பல்கலைக்கழக சமூகத்தை அறிவியல் சமூகமாக வரையறுக்க முடியுமா?

பேராசிரியர் ஃகூல்: மேற்கூறியவாறு சமூகக் கல்வியில் எது சரி, எது பிழை என்பதற்கு அடிப்படையில்லை. நான் Ethics for Engineers என்ற ஒரு பாடம் கற்பிக்கிறேன். பல்கலைக்கழகத்தில் நாம் சமயம் சாராமல் படிப்பிக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் புஸ்தகங்களில் இன்னும் ஒரு திருப்தியான அடிப்படையில் சரி – பிழைக்கு வரைவிலக்கணம் இல்லை. ஆகவே சுயநலத்தையே அடிப்படையாக வைத்து பலர் கற்பிக்கிறோம். உதாரணமாக மனித உரிமைக்கு அடிப்படை ‘‘அதிகாரம் வல்லமை உள்ள நாம் இன்று மற்றோரை நசுக்கலாம். ஆனால் நாளை இந்த அதிகாரம் வல்லமை மறுபக்கம் மாறினால் அவர்கள் அதே துன்புறுத்தலை எமக்குச் செய்யலாம். ஆகவே இருவரும் சேர்ந்து உரிமைகளைப் பேணும் ஒரு நிற்பந்தத்திற்கு வருவதே இருவருக்கும் நல்லது.’’ இதில் பல்கலைக்கழகத்திற்கு பெரிய பொறுப்புண்டு. யானைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் என்பதெல்லாம் சரித்திரத்தில் உண்டென்று காட்டினால் யானை பூனையைப் பராமரிக்கும்.

தேசம்நெற்: இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டும் அப்பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் கடமையாற்றி உள்ளீர்கள். அவற்றின் ஒப்பு நோக்கில் கடந்த ஆறு சகாப்த சுதந்திர இலங்கையில் பல்கலைக்கழகங்கள் நாட்டின் அரசியல் பொருளாதார சமூக கலாச்சார அம்சங்களில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

பேராசிரியர் ஃகூல்: சிங்களவரும் தான் தமிழரும் தான் மார்க்க ஏகாதிபத்திய சரித்திரம் எழுத வெளிக்கிட்டிருக்கிறார்கள். மெய்யென்றாலும் பரவாய் இல்லை. ஆனால் பல படுபொய்கள். சரித்திரம் என்று பாடப் புஸ்தகங்களில் எப்படி சிறுபான்மையினரைத் தாக்குகிறது என்று யோசியாமல் எழுதுகிறார்கள். எழுதி இலங்கையை நொருக்கிவிட்டார்கள். இலங்கையிலோ மேல்நாட்டிலோ பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சியே முதற்கடமை – முதல் பட்ட (BA, BSc) படிப்பு அல்ல. இந்த அடிப்படையில் தான் விரிவுரைகள் ஒரு வருடத்திற்கு 9 மாதங்களுக்கும் அதுவும் கிழமைக்கு 4 – 5 மணித்தியாலங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. இதை எல்லோரும் சரியாயச் செய்தால் எல்லாம் சீராக இருக்கும். அதனால் வரும் கூற்றுகளுக்கு இடையிலான போட்டியும் விவாதமும் இந்த மார்க்க ஏகாதிபத்தியத்தை முறித்திருக்கும். சிலர் சொல்வார்கள் இலங்கையில் வசதிகள் இல்லாமல் ஆராய்ச்சி செய்ய முடியாதென்று. அப்படியென்றால் எப்படி ஒவ்வொரு வருஷமும் சுமார் 150 இலங்கையர் ஜனாதிபதியின் பரிசை தமது ஆராய்ச்சிக்கு வெல்லுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் மீண்டும் அடிப்படை ஆராய்ச்சி செய்ய பல வாய்ப்புகள் தலைப்புகள் எல்லாத்துறைகளிலும் உள்ளன.

தேசம்நெற்: 19ம் நூற்றாண்டில் இருந்த பல்கலைக்கழகம் பற்றிய கருத்தியலுக்கும் பல்கலைக்கழகம் பற்றிய தற்போதுள்ள கருத்தியலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இலங்கைப் பல்கலைக்கழகங்களின் கருத்தியல் என்னவாக உள்ளது.

பேராசிரியர் ஃகூல்: காலப்போக்கில் பல்கலைக்கழகங்கள் மாறி வருகின்றன. பழைய காலத்தில் ஒரு ஆராய்ச்சியாளர் மாணவரை வைத்து தன் ஆராய்ச்சியை நடத்தினால் பல வருஷங்களுக்குப் பின் ஆசிரியருக்கு கலாநிதிப் பட்டம் (DSc., D.Litt.) வழங்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சியின் நிமித்தம் கூடக் கூட பட்டதாரிகள் தேவைப்பட கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்டது. இதனுடன் வந்த ஆசிரிய தேவையை பல்கலைக்கழகங்களில் பூர்த்தி செய்ய கலாநிதிப் படிப்பு தனிமையாக பல வருடங்களில் முடிக்கும் நிலையிலிருந்து 2 – 5 வருஷங்களில் ஒரு ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் செய்யும் பாடமாக மாற்றப்பட்டது. இதன் தாக்கவிளைவையே இன்று காண்கிறோம். உலகெங்கும் அரசாங்கங்களும் முதல்ஈடு செய்கின்றன. ஆராய்ச்சிக்கு ஆராய்ச்சியாளரே நிதி திரட்டுவார்களென்று எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக விளைவு தரும் ஆராய்ச்சி மட்டுமே இப்படி மேலோங்குவது துக்கத்திற்குரியது. ஆராய்ச்சிக் கலாசாரம் வேரூண்டாத இலங்கையில் இது ஒரு பேரழிவு. குறிப்பாக எமக்கு வேண்டிய சமூக சரித்திர வட்டாரங்களில் கேடு தரும்.

தேசம்நெற்: இலங்கையில் இனப்பிரச்சினை உக்கிரமாக இருந்த காலகட்டங்களில் பேராதனை பல்கலைக்கழகத்தில் நீங்கள் பேராசிரியராக இருந்துள்ளீர்கள். தென்பகுதி பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர், தமிழர் என்ற வகையில் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

Prof_Hooleபேராசிரியர் ஃகூல்: பல பிரச்சினைகள். பொலிஸ் மாணவரைப் பிடித்தல், புலிகள் சாராத மாணவர் வாயை மூடவேண்டிய நிலை, ஆங்கில பாடக்கோப்பில் விரிவுரையாளர் சிங்களத்தில் படிப்பித்தல், தொழில் பயிற்சிக்கு, தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி CEB, SLT போன்ற புகழ்வாய்ந்த நிறுவனங்களில் தமிழருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமை. ஆனையிறவு வீழ்ச்சியைத் தொடர்ந்து சில தமிழ் மாணவர் பட்டாசு கொழுத்த அதைத் தொடர்ந்து சிங்கள மாணவர்கள் தமிழரிடம் இருந்து இறந்த இராணுவத்தினருக்கு நிதி சேர்க்க, ஒரு பதட்டமான நிலையேற்பட்டமை, வன்னி மாணவர் அனுமதிக் கடிதம் பிந்திக் கிடைத்ததால் பிந்தி பீடத்திற்கு வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டமை. இதில் ஆசிரியராகிய நாம் தலையிடுவது கஷ்டம்.

திறந்த பல்கலைக்கழகத்தில் (Open University, Colombo) சைவ மாணவர்கள் தைப்பொங்கலைக் கொண்டாட முயன்ற போது அரிசி மூட்டைகளை வாசலில் இறக்கி சோதித்த பின் தூக்கி ஒரு கட்டை தூரம் நடக்க வேண்டும் என்றார்கள். மாணவர்கள் சொல்ல என் மனைவி அப்போதைய தமிழ் துணை வேந்தரிடம் இதைப் பற்றிக் கூறிய போது அவர் அன்பாகச் சொன்னது, ’’பிள்ளை, நாங்கள் இங்கு இருப்பதே கஷ்டம். இவற்றை எழுப்பினால் இருக்கவே முடியாமல் போய்விடும்.’’ இதுவே நிலை. 
 
தேசம்நெற்: தமிழ் பேராசிரியர் என்ற வகையில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன? கல்வியியலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன?

பேராசிரியர் ஃகூல்: பேராதனையில் நான் மாணவர் சார்பாக காவலகம் சென்ற போது பொலிஸார் பேராதனைப் பேராசிரியர் என பெயருக்கு மரியாதை கொடுத்து 24 மணிகளுக்குள் மாணவரை விடுவித்தார்கள். ஆனால் பல்கலைக்கழகத்தினுள்ளே நான் மேற்கூறிய பிரச்சினைகளை எழுப்பிய போது என்னை சிங்களவருக்கு எதிரானவர் என்று கருதி 3 வேறு வேறு விசாரணைகளுக்கு உள்ளாக்கினர்.

இப்பொய் குற்றச்சாட்டுக்கள்
1) பீடத்தில் புள்ளிவிபரப் புஸ்தகத்தை மோசடியாக மாற்றினேன் .
2) பாடத்திற்கு வெளியான கேள்விகளை பரீட்சையில் கேட்டு பீடத்தின் தரத்தை குறைத்தேன்.
3) துறைத் தலைவருடன் ஒத்துழைக்க மறுத்தேன் என்றும் இதன் விளைவால் என் கேள்வித்தாளில் பிழைகள் இருந்தன என்றும். மேலும் நான் விசாரணையின் கீழ் இருந்தேன் என்றும் சொல்லி என்னை உத்தியோகத்தில் நிரந்தரமாக்கவும் சிரேஷ்ட பேராசிரியராக்கவும் மறுத்து என் மனைவியையும் வேலை நீக்கினார்கள். எல்லாம் தாங்க முடிந்தது. ஆனால் முதலாம் குற்றச்சாட்டு நான் ஒரு தமிழ் மாணவனை 2ம் வகுப்பு மேற்பிரிவிலிருந்து முதலாம் வகுப்பு பட்டதாரியாக மாற்றச்செய்ததென்பது என் சிங்கள நண்பர்களையும் என்மேல் சந்தேகம் கொள்ள வைத்தது.

ஒருநாள் விரிவுரை முடித்து வந்த போது ஒரு CID தலைவர் என் வருகைக்கு காத்திருந்து தான் சிகல உருமயவைத் தொடரும் குழுவைச் சேர்ந்தவரென்றும் என் பெயர் பல கூட்டங்களில் கோபமாய் பேசப்பட்டதென்றும் சொல்லி, எச்சரிக்கையாயிருக்க வேண்டி கொழும்பு கண்டி தொலைபேசி இலக்கங்களை அவசரமேற்படின் அழைக்கத் தந்தார். ஒரு தஞ்சத்திற்கு, என்னை வேலை நீக்க முயலும் துணைவேந்தரிடம் ஓட முடியவில்லை. அதிலிருந்து குடும்பத்தை கொழும்புக்கு மாற்றி பகலில் மட்டும் பேராதனைக்கு வந்து சென்றேன்.

மூன்று வருடங்களின் பின் விசாரணைகள் நான் குற்றமற்றவன் என்ற முடிவுக்கு வந்தன. மேலும் நீதிமன்றம் என்னை நிரந்தர பணியாளாக்கி சிரேஷ்ட்ட பேராசிரியராக 3 வருடம் பின் செயலாகச் செய்யும்படி கட்டளையிட்டது. இதைச் செயற்படுத்தவும் நீதிமன்றம் சென்று நீதிமன்றத்தின் எனக்குச் சார்பான முடிவுக்கு பல்கலைக்கழகம் மரியாதையீனமாய் நடந்தது. (Contempt of Court) என்ற மனுவை பதிந்துதான், நீதிமன்றக் கட்டளைகள் அமுல்படுத்தப்பட்டன. இதேபோல் மனித உரிமை ஆணைக்குழு என் மனைவியின் வேலை நீக்கத்தை பிழையானது என்று தீர்த்தது.

மார்ச் 2008ல் யாழ் பல்கலைக்கழகத்திற்கு பேராதனை என்னை 3 வருடத்திற்குக் துணை வேந்தனாக இயங்கக் கொடுத்தது. நான் இந்த 3 வருடம் முடியும் காரணத்தால் டிசம்பர் 19 2008 இலங்கை வந்து என் 7ம் வருட விடுமுறையை எடுப்பேன் என்று எழுதி அங்கு சென்றேன். அதேநாள் துறைத் தலைவருக்கு துணை வேந்தரிடம் இருந்து நான் வேலை நீக்கப்பட்டுள்ளேன் என்ற கடிதம் வந்தது. எனக்கு இன்னும் அந்த கடிதத்தின் பிரதி வரவில்லை.

தமிழராகிய எமக்கு இது சிங்கள வியாதி என்று இப்படிப்பட்ட நடத்தையை தட்டிவிடுவது சுலபம். ஆனால் சிங்களவர், தமிழர் நாம் யாவரும் இப்படியே. எமக்கு எதிராக இயங்கிய தமிழர் ஒருவர் தேவையான ஆராய்ச்சிக் கட்டுரைகள் இல்லாமல் இப்போ பேராசிரியர் ஆக்கப்பட்டுள்ளார். இன்னுமொருவர் தேவையான பேராசிரியர் அனுபவம் அற்று இளைப்பாறச் சற்று முன்பு சிரேஷ்ட பேராசிரியராக்கப்பட்டார். சேர் தொமஸ் மோ சொன்னது போல, ஒரு பட்டத்திற்காக தங்கள் ஆத்மாவைக் கூலியாக வித்துள்ளனர். இதேபோல் நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கணணிப் பேராசிரியராக விண்ணப்பித்தேன். என் வயதைச் சேர்ந்தோர் படித்த காலத்தில் கணணியியல் ஒரு துறையாக இருக்கவில்லை. ஆகவே உலகெங்கும் துறையை உருவாக்கியவர்கள் ஒன்றில் என்னைப் போல் மின்-கணணிப் பொறியியலாளர் அல்லது கணிதத்துறை சார்ந்தோர்.

மேலும் என் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பெரும்பாலானவை கணணியலை சேர்ந்தவை மட்டும் அல்லாமல், பேராதனை கணணித்துறையை பொறியியல் பீடத்தின் கீழ் ஸ்தாபித்து திறந்த பல்கலைக்கழகத்தில் IT பேராசிரியராகவும் 2 வருஷகாலம் வேலை செய்துள்ளேன். அப்படி இருந்தும் என் விண்ணப்பம் தெரிவுக்குழுவுக்குப் போடப்படவில்லை. நான் வழக்கு வைத்தபோது வேறு விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் என்னை நியமிக்குமாறு தீர்ப்பு தரப்பட்டது. பல கடிதங்கள் எழுதியும் அமுல்படுத்தப்படவில்லை. மறுமொழியும் தரப்படவில்லை. இந்தத் தமிழ் நிர்வாகம் சிங்கள நிர்வாகம் போன்றதோ அல்லது எமக்கு நியாயத்தோடும் நீதியோடும் நிர்வகிக்க முடியுமா என்பதே தமிழராகிய நம்மை எதிர்நோக்கும் சவால்.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட காலங்களுக்கு ஒருமுறை பின்நோக்கிப் பயணிப்போம். அப்போதைய உங்கள் மனப்பதிவுகளை எமது வாசகர்களுக்கு வெளிக்கொண்டுவர முடியுமா?

பேராசிரியர் ஃகூல்: இது தரப்படுத்தலின் உச்சத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீமா என்றாலே மாணவர் மத்தியில் வயிற்றெரிச்சல். பரமேஸ்வரா, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளை அரசாங்கம் எடுத்து ஒரு சதம் செலவழியாமல் எமக்குப் பல்கலைக்கழகம் தருவதாக செய்ததை ஒரு நாடகமாய் கருதி மாணவர் பேரவையும் தமிழரசுக்கட்சியும் திறப்பு விழாவை பகிஷ்கரித்தோம். ஆனால் 1979 மட்டிலான கண்ணோட்டத்தில் அது ஒரு பெரிய காரியமாகும். 1974ல் நாம் மாட்டுக்கொட்டிலாகக் கருதியது 1979ல் நாட்டின் ஒரு பிரதான பல்கலைக்கழகமானது. இது எடுத்துக்காட்டுவது என்னவென்றால். சின்னக் காரியங்களிலும் சுயநிர்ணய உரிமையை எடுத்தால் அதைக் கட்டி எழுப்பலாம் என்பதே. 1987ல் 2000ம் ஆண்டும் பின் 2004இலும் கிடைத்த தருணங்களை ‘‘எல்லாம் அல்லது பூச்சியம்’’ என்ற கொள்கையின் கீழ் கைவிட்டது எனக்கு பெரிய கவலை. 

தேசம்நெற்: 2006ல் நீங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக நியமிக்கப்பட்ட போது உங்கள் உணர்வு எப்படி இருந்து? நீங்கள் அப்பதவியைத் தொடர்ந்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் உயிராபத்து விளையும் என்ற நிலையேற்பட்ட போது உங்கள் மனநிலை என்ன?

Prof_Hoole_with_his_Wifeபேராசிரியர் ஃகூல்: என்னத்தைச் சொல்வது. மனம் மிகத் தளர்ந்திருந்தேன். அமெரிக்காவில் இருந்து கூட்டி வந்த பிள்ளைகள் ‘‘அப்பா, இதுவா உங்கள் யாழ்ப்பாணம்?’’ என்று கேட்டனர். ஒரு சில தமிழரை வைத்து எல்லாத் தமிழரையும் மறியலில் அடைக்கக் கூடாதென்று வாதாடும் நாம், அதேபோல் ஒரு சில தமிழரின் கோழைத்தனத்தை வைத்து முழு சமுதாயத்தையும் குறைத்துப் பேசக்கூடாது.

துரோகி என்றும் சைவக் கோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எப்படி என்னை நடமாடவிட முடியும் என்றும் வேறும் கிறிஸ்தவரை தாழ்த்தி ஒரு பேப்பர் என்ற பத்திரிகையில் சிலர் ஆசிரியர் கட்டுரை எழுதினார்கள். இதற்கும் நான் என் பிள்ளைகளுக்கு நினைவூட்டுவது 25 பேர் கொண்ட பேரவையில் 15 பேர் எனக்கு வாக்களித்தார்கள். மீதிப் பத்துப் பேரில் பலர் மதம் சாரா காரணங்களுக்காக தம் வாக்கை அளியாமல்விட்டிருப்பர். ஆகவே மதவெறி கொண்டவர்களை ஒரு மிகச் சிறுபான்மையானவரென்றே நாம் கருத வேண்டும் என்பதே.

என்னை அந்த நேரம் பேணிய மாணவர், MP மார், குருமார் பொது மக்களை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்.

மேலும் நான் தமிழருக்கு குறிப்பாக வடமாகாணத்தாருக்கு செய்த காரியங்களில் சிலவற்றை (என் செயல்களை நானே எடுத்துச் சொல்வது அழகற்றதாக இருந்தாலும்) இந்தக் கேள்வியின் பட்சத்தில் கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
1) 1977 – 1980 காலத்தில் சுமார் 600 உபாத்தியாளர் நியமனக் கடிதங்களை நைஜீரியாவில் இலவசமாக தமிழருக்கு எடுத்துக் கொடுத்தேன். இவற்றில் பல யாழ் பல்கலைக்கழகத்தின் புதுப் பட்டதாரிகளுக்கு.
2) இலங்கையில் கஷ்டத்துக்குள்ளாகியோர் பலரை என் பட்டதாரி மாணவராய் அமெரிக்காவுக்கு எடுத்து இன்று பெரிய உத்தியோகங்களில் வாழ வைத்துள்ளேன். சிலரை நான் என் பரிட்சைக் கூடத்திலேயே பட்டப்படிப்பு முடித்தும் உத்தியோகஸ்தராக்கி Green Card எடுத்துக் கொடுத்துள்ளேன். மேலும் என் எழுத்துக்கள் காரணத்தால் அமெரிக்க மத்திய அரசின் உள்குடியேற்ற நீதிமன்றம் என்னை இலங்கையைப் பற்றிய வல்லுனர் என்று ஏற்றதன் நிமித்தம் பலர் சார்பில் இலவசமாகச் சாட்சியமளித்து தஞ்சம் எடுக்க உதவியுள்ளேன்.
3) மானியங்கள் ஆணைக்குழுவில் சேர்ந்த சமயம் யாழ்பாணத்தில் ஒரு வருஷத்தில் ஒரு மாணவனிற்கு 44 000 ரூபாயும் ஏனைய பல்கலைக்கழகங்களில் சுமார் 80 000 ரூபாயும் (2004ம் ஆண்டுக் கணக்கு) ஒதுக்கி வந்தது. நான் இது பெரும் பிழை என்று சுட்டிக்காட்டியதும், 2005ம் ஆண்டு யாழ் மாணவனுக்கு ஒதுக்கப்பட்டது  ரூபாய் 90 000. நான் எழுதிய முன்மொழிவின்படி  வவுனியா வளாகத்திற்கு 200 மில்லியன் கட்டிட நிதி ஒதுக்கப்பட்டு கணணித் தொழில்நுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் கணணித்துறை பெருப்பிக்கப்பட்டது.

திருகோணமலை வளாகத்தை கந்தளாயிற்கு மாற்றும் திட்டம் நான் எதிர்த்ததும் கைவிடப்பட்டது.

இப்படியே நான் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் நான் சொல்ல வருவது என்ன? ஏன் இதைச் செய்கிறேன்? சைவ மக்கள் மேல் பகையென்றால் ஏன் இவற்றை செய்வேன். நான் சைவ மக்களின் பகைவன் என்பவர்கள் சைவ மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்?

தேசம்நெற்: உங்கள் பதவியை ஏற்கவிடாமல் நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளனர். மிக அவலமாகவும் கோரமாகவும் முடிவுக்கு வந்த வன்னி யுத்தம் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

பேராசிரியர் ஃகூல்: நீங்கள் சொல்வது போல ஒரு நாளும் ஒரு இயக்கத்தை முற்றாக அழிக்க முடியாது. அவ்வியக்கத்தை எழுப்பிய காரணங்கள் நீங்கினால் மட்டுமே அவ்வியக்கம் அழியும். புலிகளின் ஆதரவாளர் பலர் மிஞ்சவில்லை என்பது முட்டாள்தனம். மேலும் புலிகளினால் அழிக்கப்பட்டவர்களின் சொந்தக்காரர் அப்படிக் கொன்று தமிழர் மத்தியில் புலிகள் ஏற்படுத்திய பகை என்பவையே பல தமிழரை இராணுவத்துடன் இயங்க வைத்தது புலிகளின் அழிவுக்கான காரணங்களில் ஒன்றானது. இன்று இராணுவத்தின் கையில் இறந்தவர்களின் சொந்தங்கள் அதேபோல் சந்தர்ப்பம் கிடைத்தால் இராணுவத்திற்கெதிராக இயக்குவார்கள் என்பது எதிர்பார்க்க வேண்டியது.

என்னைப் பொறுத்தவரை இந்தக் கொலை – மீள்கொலை வட்டம் நிறுத்தப்பட வேண்டும். அதைச் செய்வதற்கான ஞானம் அரசாங்கத்திற்கு வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

யாருடைய மரணத்தையும் வைத்து நாம் மகிழ முடியாது. குறிப்பாக வன்முறையினால் கட்டாயப்படத்தப்பட்டு ஆயுதம் தாங்கிய பிள்ளைகளை நாம் தீவிரவாதிகளென்று சொல்வது பெரிய தவறு. அரசாங்கம் இப்பிள்ளைகளைச் சமூகச் சீர்திருத்தும் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும்.

தேசம்நெற்: இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் இடம்பெற்ற மிகக் கோரமான அவலத்திற்கு நாங்கள் சாட்சியாக இருந்திருக்கின்றோம். தமிழ் அரசியல் தலைமைகள் அல்லது தமிழ் அறிவியல் சமூகம் இந்த அவலமான அல்லது கோரமான முடிவை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததா?

பேராசிரியர் ஃகூல்: மேல் கூறியவாறு ‘‘எல்லாம் அல்லது பூச்சியம்’’ என்ற கொள்கை எம்மை கை விட்டுள்ளது. 1987, 2000, 2002 – 4 ஆகிய ஆண்டுகளில் வந்த எல்லா வாய்ப்புகளையும் இழந்துவிட்டோம். எமது தலைமைகள் மந்திரி பதவியை எடுத்தாலே மக்களுக்கு உதவுவதற்கு பல வாய்ப்புகள் வரும். அதிகாரம் அரசாங்கக் கையில் உள்ள போது தூர விலத்தி ‘‘நீங்கள் எங்கள் நன்மையை கருதுகிறீர்கள் என்று நிரூபியுங்கள்’’ என்று சொல்வது 1965ல் பலிக்கவில்லை. இன்றும் பலிக்காது. தமிழ் மந்திரிமாருக்கே தமிழரின் தேவைகள் சரியாய் தெரியும். தமிழராகிய நாம் இப்படி என்றாலும் எடுக்கக் கூடிய அதிகாரத்தை எடுக்க வேண்டும். கூட்டுறவே ஒரே வழியாகியுள்ளது.

தேசம்நெற்: கடந்த மூன்று தசாப்தகால தமிழீழ விடுதலைப் போராட்டம் அல்லது தமிழ் இளைஞர்களின் ஆயுத வன்முறை மிகவும் அவலமான முடிவுக்கு வந்துள்ளது. இதிலிருந்து தமிழ் சமூகம் குறிப்பாக தமிழ் அறிவியல் சமூகம் எதனைக் கற்றுகொள்ளலாம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.

பேராசிரியர் ஃகூல்: ஞானம், அனுபவம் என்பன முதிந்தோர் மத்தியிலேயே கூட உள்ளன. ஆனால் எமது முதிர்ந்தோர் வழிகாட்டாமல் வாலிபருக்கு வால் பிடித்து அவர்களை ஏமாற்றி தத்தம் காரியங்களைப் பார்த்தார்கள்.

உதாரணமாக மேடையேறி போர் உற்சாகத்தை ஊட்டி, அதேவேளையில் தம் பிள்ளைகளுக்கு வெளியேற அனுமதி பெற்றார்கள். எனக்குத் தெரிந்த வெள்ளாளப் பூசாரி ஒருவர் கலிபோனியாவிலிருந்து பகவத்கீதையின்படி இலங்கையிலுள்ள வாலிபர்களின் தர்மம் போர் புரிவதும், தனது தர்மம் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் என்று எனக்குப் புழுகினார்.

அறிவியல் சமூகத்தினர் பலர் நிலமை எல்லாம் விளங்கியும் தம் மௌனத்தை கைவிடவில்லை. அம்மௌனமே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்களும் நீண்ட காலம் வீரத்தோடு தம் தனித்துவத்தைப் பேணியும், கடைசியில் தலைகுனிந்த நிர்ப்பந்தம் இனி ஒருபோதும் ஏற்படக் கூடாது.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆண்டுகால வரலாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்துடனும் பிண்ணிப் பிணைந்ததாகவே உள்ளது. நடந்து முடிந்தள்ள மூன்று தசாப்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது?

பேராசிரியர் ஃகூல்: ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம். இதுவே பிளேற்றோ கூறியபடி பல்கலைக்கழகங்கள் – நாட்டு ஆளுமைக்கு ஆதாரம் என்ற நோக்குடன் கல்வியில் ஈடுபட வேண்டும். – அரசியலுக்கோ எம் மார்க்கத்திற்கோ காரணம் வைத்து எம் ஆராய்ச்சிப் பணியைச் செய்ய முடியாது. இந்த உண்மையை மறந்ததால் தான் யாழ் பல்கலைக்கழகத்திற்கு இந்த கடைசி 30 வருஷங்களாகக் கவலைக்கிடமான பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

சிங்களவரும் அப்படிச் செய்கின்றனர், ஏன் நாமும் அப்படிச் செய்யக் கூடாது என்று கேக்கிறவர்கள் சிலர். அதற்கு என் பதில் அவர்களுடைய மாதிரிப் பல்கலைக்கழகமா எங்களுக்கு வேண்டும்.

அல்லது உதாரணமாக புதிய பொறியியல் பீடத்தை அரசியல் காரணங்களுக்கு கிளிநொச்சியில் போட வேண்டும் என்கிறார்கள் பலர். அப்படி நடப்பின் ரஜரட்டை பல்கலைக்கழகம் போல், இளம் பிள்ளைகள் உடைய விரிவுரையாளர் (அதாவது அநேகர்) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து திங்கள் பின்நேரம் அல்லது செவ்வாய் வேலைக்கு வந்து வியாளன் அல்லது வெள்ளி காலை யாழ்ப்பாணம் செல்வார்கள். செனட் பேரவை கூடும் நாட்களில் ஒரு அதிகாரியும் வளாகத்தில் இருக்க மாட்டார். இது எமது சமூகத்தின் போலித்தனத்தை மீண்டும் காட்டுகிறது. யாழ்ப்பாணத்தில் வசதியாய் வாழும் நாம், எம் வாலிப விரிவுரையாளர்கள் தமிழ் சமூகத்திற்காக தங்கள் குடும்பங்களுடன் கிளிநொச்சியில் வாழ வேண்டும் என்கிறோம். ஆனால் சரித்திரத்தில் அப்படி நடப்பதில்லை. ஒருவர் தன் குடும்பத்திற்கு முதலிடம் கொடுப்பதே இயற்கை, வழக்கம்.

அறிவைப் பேணி அரசியல் நோக்கங்களுக்கு பல்கலைக்கழகத்தை அடியாக்க முன்வரும் சக்திகளை எதிர்க்கும் பலம் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு வேண்டும். இப்பலம் இல்லாமல் இருந்ததே கடைசி 30 வருடங்களின் குறை.  

தேசம்நெற்: யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக உங்களை நியமிக்க பல்வேறு தரப்பினராலும் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருவதை தேசம்நெற் அறிகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் தற்போது அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் உள்ள பதவிகளைத் துறந்து யாழ் செல்வீர்களா? அதற்கான தயாரிப்பில் நீங்கள் உள்ளீர்களா?

பேராசிரியர் ஃகூல்: அந்த அழுத்தங்கள் ஜனநாயகமுறையில் வந்தால் அவற்றை நாம் வரவேற்க வேண்டும். நான் செல்வேனா என்பது இப்போது ஒரு கேள்வியாக அமையாது. ஏனெனில் நான் அமெரிக்காவில் என் பதவியை ஏற்கனவே ராஜினாமாச் செய்து ஓகஸ்டில் நாடு திரும்புகிறேன்.

பேராசிரியர் துரைராஜா 1989ல் என்னை மின்பொறியியல் துறைக்குத் தலைவராக வரவேண்டும்  என்று கேட்டபோது என் மனைவியின் Ph.D. பட்டப்படிப்பு முடிந்ததும் என் 7ம் வருஷ விடுமுறையை எடுத்துக்கொண்டு 1993ல் வருவேன் என்று வாக்களித்திருந்தேன். யுத்த காரணத்தால் அவர் பொறியியல் பீடத் திட்டங்கள் பலிக்கவில்லை. 1995ல் என் நீண்ட காலத் திட்டங்களுக்கமைய ஊர் சென்றேன். ஆனால் யாழ்ப்பாணத்தில் உஸ்தியோகம் கிடைக்கவில்லை. நான் பொறியியல் பீடத்தை அமைக்க உதவுவேன் என்று சொல்லியும் சிவில் பொறியியல் பதவியையே விளம்பரப்படுத்தினர். தகுந்த விண்ணப்பதாரி இல்லையென்று தெரிந்தும் மீண்டும் சிவிலையே விளம்பரப்படுத்தினர். மின்துறையைச் சேர்ந்த நான் விண்ணப்பிக்க முடியவில்லை.

Prof_Hoole_with_his_Wifeசரி கணணித்துறைக்குச் செல்வோம் என்று வெளிக்கிட்டதும் நடந்தது தெரிந்ததே. சரி மனைவி பிள்ளைகளை ஆகிலும் அனுப்புவோமென்று அவர்கள் இரசாயணப் பதவியை விளம்பரப்படுத்திய போது என் மனைவி விண்ணப்பம் அனுப்பினார். பல மாதங்கள் பின் அதையே நாம் மறந்த கட்டத்தில் அடுத்தநாள் நேர்முகப்பரீட்சைக்கு யாழ்ப்பாணம் வருமாறு கொழும்பில் இருந்த அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அவர் உடனடியாகத் தொலைபேசியில் தனக்கு விரும்பினாலும் வரமுடியாதென்று முறைப்பட்ட போது, ‘‘பரவாயில்லை அடுத்தமுறை விளம்பரம் வரும் போது விண்ணப்பியுங்கள்’’ என்றார்கள். மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பட்ட போது, அவர் விண்ணப்பதாரிகள் இல்லாதபட்சத்தில் மீண்டும் தெரிவுக்குழுவைக் கூட கட்டளையிட்டனர். அதற்கிணங்க தெரிவுக்குழு கூடி, ”வெற்றிடம் இல்லை’’ என்று முடிவெடுத்தது! உடனடியாக வழக்கு வைத்தோம். ஆனால் நாட்டைவிட்டு வெளியேறியதால் வழக்கைத் தொடர முடியவில்லை.

நான் 1993இல் இருந்து யாழ் வளாகத்துட் செல்லத் திட்டமிட்டும் ஓரிருவரால் தடுக்கப்பட்டுள்ளேன். எம் கடிதங்களுக்கு பதிலே வருவதில்லை. வழக்கு தொடர்ந்தால் ஒரு வருடமென்றாலும் எடுக்கும். இங்கே (அமெரிக்காவில்) இருந்தால் அங்கு போவது ஒருபோதும் நடவாதென்ற முடிவில்தான் என் பதவியை ராஜினாமாச் செய்தேன். கிடைத்தால் உபவேந்தர் பதவியை ஏற்பேன்.

தேசம்நெற்: பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களின் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக அமைந்துவிடுவது பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தை மட்டுப்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டு பலவலாக உள்ளது. இக்குற்றச்சாட்டுப் பற்றியும் உபவேந்தர்களின் நியமனம் பற்றியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை பற்றியும் சற்று கூறமுடியுமா?

பேராசிரியர் ஃகூல்: இந்தக் குற்றச்சாட்டு தவறானது. பல்கலைக்கழகங்கள் யாவும் பல்கலைக்கழக 1987 சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. அந்தச் சட்டம் மிகக் கவனமாக எழுதப்பட்டது. ஆளும் பேரவையில் துணைவேந்தர், பீடத் தலைவர் போன்ற பலர் தம் உத்தியோகஸ்தின் நிமித்தம் அங்கத்தவர்கள். இவர்களை மட்டுமே தீர்மானங்கள் எடுக்கவிடுவது நல்லதல்ல என்ற காரணத்தால் கூடவே சுற்றிய சமூகத்தில் இருந்து உள் அங்கத்தவர் எண்ணிக்கை சக ஒரு வெளிப் பெரியோர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவர். இதற்கமைய யாழ் பேரவையில் 12 உள்ளங்கத்தாரும் 13 வெளியங்கத்தாரும் 2006ல் இருந்தனர். இவர்கள் அதிபர்மார், கணக்காளர், GAமார், குருமார், இளைப்பாறிய பேராசிரியர்மார் போன்ற சமூகப் பெரியோர்களும் உள்ளனர். இப்படியிருந்தும் உள் அங்கத்தவரே அதிகாரம் கூடியவர்கள். ஏனெனில் வெளி அங்கத்தவர் வழமையில் ஒரு பெரிய தப்பைக் கண்டாலே ஒழிய தலையிடுவதில்லை. இந்தப் பேரவை மாதாந்தம் கூடுவதாலும் அடிக்கடி தெரிவுக்குழு, நாணயக்குழு போன்றவற்றில் சந்திப்பதாலும் அவர்களுக்குள் நட்புகள் ஏற்பட்டு பீடத் தலைவர் அல்லது தொடர விரும்பும் துணைவேந்தர் பேரவையின் வாக்கை துணைவேந்தர் பதவித் தேர்தலில் கேட்கும் போது ஒரு வெளியாள் வருவது மிகவும் கஷ்டம்.

சட்டத்தை எழுதியவர்கள் இப்படி ஒரு நெருங்கிய பேரவையில் திறமை நட்புக்கு இலக்காகும் என்பதையும் மனதில் கொண்டு பேரவையின் பொறுப்பு 3 பேரைத் தேர்ந்து ஜனாதிபதியிடம் அனுப்புவது மட்டும் என்றும், இறுதித் தெரிவு மானியக் குழுவின் ஆலோசனையோடு ஜனாதிபதியுடையதென்றும் அமைந்தது. எனக்குத் தெரிந்த அளவு நானும் துரைராஜாவும் மட்டுமே வெளியாட்களாகப் பேரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளோம்.

இந்த அமைப்பில் பிழை காணலாம். ஆனால் இது பொதுவாக வேலை செய்கிறது. பேரவையில் பெரும்பான்மை வெளி அங்கத்தவர்களிடம் இருந்தாலும், நட்புகள், இளைப்பாறிய பேராசிரியர்மாரால் உள்அங்கத்தவரிடமே அதிகாரம் உள்ளது. அவர்கள் தெரிவு செய்யாத ஒருவரை ஜனாதிபதி நியமிக்க முடியாது. தாம் ஏற்கத்தக்க 3 பேரை ஜனாதிபதியிடம் அனுப்புவது பேரவையின் கடமை. அனுப்பிய பின் தாம் விரும்பாதவர் நியமிக்கப்பட்டார் என்பது பொறுப்பற்ற நடத்தையே.

தேசம்நெற்: யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க கருத்தியலின் ஆதிக்கத்திலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ந்தும் உள்ளது. இதுவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்களாக இருந்தவர்கள் இந்தக் கருத்தியலுடன் உடன்படாவிட்டாலும் சைவ-வேளாள சமூகப் பின்னணியில் இருந்தே வந்துள்ளனர். யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க கருத்தியலை எதிர்த்து நிற்கவில்லை. அதனுடன் சமரசம் செய்துகொண்டனர். ஆனால் நீங்கள் கத்தோலிக்க மதத்தை இறுக்கமாகப் பின்பற்றுபவர். சைவ-வேளாள கருத்தியலை தீவிரமாகவும் கடுமையாகவும் விமர்சிப்பவர். 2006ல் உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களில் நீங்கள் இந்துக்களுக்கு எதிரானவர் (கத்தோலிக்கர்) என்றும் பிரச்சாரப்படுத்தப்பட்டது. இந்த முரண்நிலையை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

பேராசிரியர் ஃகூல்: நான் கத்தோலிக்கன் தான், ஆனால் ஆங்லோ கத்தோலிக்கன். உரோமன் கத்தோலிக்கன் அல்ல, ஆனால் பாப்பரசரை அத்தியட்சர் மாரில் (அதாவது Bishop மாரில்) முதல்வர் எனக் கருதுபவர்.

நான் சைவ சமயத்தவன் அல்ல. ஆனால் சைவ சமயத்தவருக்கு எதிரானவன் அல்ல. இதை என்னுடன் பழகிய மாணவர். நைஜீரியாவில் வேலை வாய்ப்பு எடுத்துக் கொடுத்த 600 வாத்தியார்மார் சொல்ல வேண்டும், நான் இல்லை. எனது எழுத்துகளின் போது என் அறிவியல் கடமையையே செய்கிறேன்.

மேற்கூறியவாறு பற்பல கட்டுக்கதைகள், பொய்ப் பிரச்சாரங்கள் பாடப் புஸ்தகங்களில் வெள்ளாளரால் எழுதப்பட்டு வருகின்றன. உதரணமாக ‘குலத்தாலவே ஆகுமாம் குணம்’ அல்லது ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ ஏன் இவற்றைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை? கேட்கக் கூடாதா? கேட்பது வெள்ளாளரைப் பகைப்பதா? இக்கட்டுக்கதைகளை எம்மை வரைவிலக்கணம் கூறும் கதைகள் என்பர். இவற்றை தாக்கும் போது அவர்களில் சிலருக்கு அது ஏதோ கத்தியைப் போட்டு திருப்புவது போல் இருக்கிறது. ஆகவே என் கேள்வியை வேறு விதத்தில் கேட்கிறேன்:

இலங்கை அரசின் பாடப் புஸ்தகங்கள் கற்பிக்கின்றன சிங்களவர் குடியமர்ந்து இலங்கையைக் கட்டியெழுப்பவும், தமிழர் ஆக்கிரமிப்புக்காரராயும் வந்தார்களென்று. இதை வினவுவது சிங்களவரைப் பகைப்பதா? இதுக்கு விடையைக் கூறிய பின்,

தாமோதரம் பிள்ளையின் சரித்திரத்தை எடுப்போம். என் மூதாதையரான சி வை தாமோதரம் பிள்ளையின் திருச்சபைப் பதிவுகளின் படி அவர் பிறந்த ஒரு சில நாட்களில் சிறுபிள்ளை ஞர்னஸ்ஞானம் பெற்றார். தகப்பன் வைரவி தாய் பெரியாய். இவர்கள் ஏற்கனவே ஞானஸ்ஞானம் பெற்று அந்நேரத்தில் சைரஸ் கிங்ஸ்பெரி, மேரி கிங்ஸ்பெரி என்ற பெயர்களில் இயங்கினர். ஆனால் ஆறாம் வகுப்புத் தமிழ் பாடப் புஸ்தகமோ அவர் பெற்றார் வைரவநாதர், பெரும்தேவி என்ற (இன்றைய வெள்ளாளப்) பெயர் உடையவர் என்றும் சலுகைகளுக்காக கிறிஸ்தவனாய் தாமோதரம் பிள்ளை நடித்தார் என்றும் கற்பிக்கின்றது. என் மதத்தாரைப் பற்றிய பிழையான கற்பிப்பைப் பற்றி கேள்வி எழுப்புவது சைவ மக்களுக்கு எதிரியாய் இருப்பதா? இல்லை! ஆனால் நான் இப்படிப் பொய் கதைகளை உருவாக்கி நஞ்சை பிள்ளைகளுக்கு ஊட்டபவர்களை எப்போதும் எதிர்ப்பேன். இதில் சிந்திக்கும் வைச மக்கள் என்னுடன் தோளோடு தோள் நின்று ஐக்கியநாட்டு பிள்ளைகள் உரிமைக் கோட்பாட்டைப் பேணுவர். அக்கோட்பாட்டுக்கு விரோதமாய் சிறுபிள்ளைகளுக்கு சாதி சமய நச்சூட்டுவதை எதிர்ப்பார்கள் என்று உறுதியாய் நம்புகிறேன்.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிர்வாக ஒழுங்கீனம் முதல் அறிவியல் தகமை வரை பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டதாக உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் தனித்துவம் அடையாளம் அனைத்துமே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் நீங்கள் இதனை குறுகிய உங்கள் பதவிக்காலத்தில் சீர்செய்ய முடியும் என நினைக்கின்றீர்களா? எவ்வாறு இந்த சீராக்கத்தை செய்ய உள்ளீர்கள்?

Prof_Hooleபேராசிரியர் ஃகூல்: ஏற்கனவே இதை தொட்டுள்ளேன். இவற்றைச் செய்ய ஓரேயொரு வழி மட்டுமே. குட்டப்பட்டும் குனிந்து நிற்கும் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்து தலைநிமிரப் பண்ணுவதே. ஒரு சின்ன உதாரணம் – என் மனைவியை யாழ் கழகம் அடுத்தமுறை விண்ணப்பியுங்கள் என்றது. மனிதரை மனிதராக பாவிக்க மறுப்பதற்கு அது ஒரு உதாரணம். அவர் முறைப்பட்டது குட்டக் குட்டக் குனிய மறுப்பதற்கு உதாரணம். 3 வருடத்தில் சீர் திருத்தம் செய்ய முடியாது. ஆனால் மனிதரை மரியாதையுடன் பாவிக்கத் தொடங்கினால் அந்தச் சீர்திருத்தம் தொடரும்.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய விவாதத்தில் அந்த இறுக்கமாக மூடப்பட்ட அறிவியல் சமூகத்தில் நடைபெறுகின்ற பாலியல் துஸ்பிரயோகம் மிக முக்கியமான விவாதப் பொருளாகவும் அமைகின்றது. பல்கலைக்கழக சமூகத்திற்கு இந்தப் பாலியல் துஸ்பிரயோகம் (அதிகாரப் படிநிலையில் மேலுள்ளவர்கள் தமக்குக் கீழுள்ளவர்களை தமது பாலியல் விருப்புக்கு பயன்படுத்துவது. கீழுள்ளவர் அதற்கு சம்மதித்தாலுமே அது துஸ்பிரயோகம்.) பொதுவான விடயமா? அல்லது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மட்டுமே எதிர்நோக்குகின்ற ஒரு பிரச்சினையா? இதனை எவ்வாறு கையாள முடியும்?

Prof_Hooleபேராசிரியர் ஃகூல்: நான் பாலியல் துஸ்பிரயோகம் யாழ் பல்கலைக்கழகத்தில் உண்டென்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் எனக்கு நேரடியாகத் தெரியாது. ஆனால் என் மனைவி திறந்த பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவரின் பாலியல் இம்சைக்கு (sexual harassment) இலக்கான போது அவர் முறையிட்டு, அவ்வாறு சம்பவம் நடக்கும் போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஒரு கொள்கைப் பத்திரம் இருக்க வேண்டுமென்று கேட்ட போது ஏற்பட்ட எதிர்ச்சி பெண்களின் தாழ்ந்த நிலையைக் காட்டுகின்றது.

‘‘பொய் சொல்லாதே’’ என்று திட்டினார் பீடத்தலைவர். ‘‘இது அமெரிக்காவில்லை’’ என்றார் ஒரு பேராசிரியர். ‘‘அவர் மார்பைப் பிடிக்காவிட்டால் அது பாலியல் துஸ்பிரயோகம் இல்லை’’ என்றார் இன்னுமொரு பேராசிரியர். ‘‘அது சீலை உடுக்காமல் சட்டை போடுவதால் தான்’’ என்று இன்னுமொருவர். ‘‘அது தனக்கு ஏன் நடப்பதில்லை’’ என்றும் கேட்டார் அவவிலும் ஒரு 28 வயது கூடிய ஒரு பெண் பேராசிரியர்.

நான் உப வேந்தராய் நியமிக்கப்பட்டு ஏதாவது காண நேரிட்டால் என்னைப் பொறுத்தவரை நான் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். என் மனைவி இதை ஜனாதிபதியிடம் எழுப்பியதை தொடர்ந்து ஜனாதிபதி உயர்கல்விக் காரியதரிசிக்கு எழுதி, புதிய மாணவர் இம்சை தடைச்சட்டத்தின் கீழ் பாலியல் துஸ்பிரயோகமும் தடைப்பட்டு உள்ளது.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியதில் முன்னின்ற பேராசிரியர் கெ கைலாசபதி அதனை ஆசியாவிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக்க கனவுகண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நீங்கள் உபவேந்தராக 2006ல் நியமிக்கப்பட்ட பின் பல்கலைக்கழக அபிவிருத்தி தொடர்பாக உங்கள் வேலைத்திட்டங்களை வெளியிட்டு இருந்தீர்கள். தற்போது மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவி உங்களை நெருங்கி வந்துகொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய உங்களுடைய தொலைநோக்குப் பார்வை இலக்கு என்ன?

பேராசிரியர் ஃகூல்: இலக்குகள் பிரதானமாக 3.
1) பொறியியல் பீடத்தை அமைப்பது.
2) வவுனிய வளாகத்தை பல்கலைக்கழகமாக்குவது. (ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு சுதந்திரப் பல்கலைக்கழகமாக்கும் பொறுப்புடன் ஒரு வளாகம் கொடுக்கப்பட்டது. இரு தமிழ் பிரதேச வளாகங்கள் மட்டுமே இன்னும் வளாகங்களாக உள்ளன. ஏனைய வளாகங்கள் பல்கலைக்கழகங்களாகி இப்போ பல வருஷங்கள்.)
3) யாழ் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நியாய, நீதியான, நிர்வாக வழிகாட்டியாக அமைப்பது.

(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் அவர்களின் இலக்குகளை அடையும் தன் சுயாதீனத்தையும் சுய அடையாளத்தையும் மீளுறுதி செய்துகொள்ளும் என்ற நம்பிக்கையுடன் இந்நேர்காணலை முடிவுக்கு கொண்டு வருகின்றேன்.)

தமிழ் மக்களுக்கு அரசியல் படிப்பிக்க வானொலி நடாத்தவில்லை. சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட வேண்டும் என்பதற்காகவே ஆரம்பித்தோம்.’’ ரிபிசி பணிப்பாளருடன் நேர்காணல்

Ramraj V TBCRamraj V TBCRamraj V TBC
கடந்த 10 ஆண்டுகளைக் கடந்து வானலைகளில் தவழ்ந்து வந்த ரிபிசி வானொலி அண்மையில் தனது பதினொராவது ஆண்டில் கால் பதித்துள்ளது. அரசியல் நெருக்கடி மிகுந்த ஜனநாயக மறுப்புக்கு மத்தியில் இயங்கிய இவ்வானொலியின் கடந்த பத்து ஆண்டுகள் என்பது புலம்பெயர் தமிழ் ஊடக வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு பதிவு. அதற்காக இவ்வானொலியும் இதன் பணிப்பாளரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு நிற்கவில்லை. ரிபிசி மீதும் அதன் பணிப்பாளர் மீதும் அவர்களின் கடந்தகால அரசியல் மீதும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் எவ்வித குறையும் இருக்கவில்லை. ரிபிசி அதன் பணிப்பாளர் அவர்களின் அரசியல் மீது தேசம்நெற் வைத்த கேள்விகளுக்கு ரிபிசி இன் பணிப்பாளர் ராம்ராஜ் பதிலளிக்கின்றார். இந்நேர்காணல் யூன் நடுப்பகுதியில் பதிவு செய்யப்பட்டது.
._._._._._.

தேசம்நெற்: ராம்ராஜ் நீங்கள் எப்படி விடுதலைப் போராட்ட இயக்கத்தினுள் உள்வாங்கப்பட்டீர்கள்? உங்களுடைய போராட்ட அனுபவம் என்ன?

ராம்ராஜ்: 1981க் காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் இளைஞர் பேராவையிலிருந்து முக்கியமாக மக்களுக்கு உதவி செய்தல் தமிழர் விடுதலைக்காக பிரச்சாரங்கள் செய்தல் ஆகிய விடயங்களில் ஈடுபடும்போது புலிகளின் முழு தொடர்புகளும் ஏற்பட்டுவிட்டது. இதன்போது ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை குண்டுவைப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு கண்டி போகம்பரை சிறைக்கு நாம் 11 பேர் கொண்டு வரப்பட்டோம். இந்த சிறையில் இருந்து பின்னர் நாம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டோம்.

மட்டக்களப்பு சிறையில் தமிழர் விடுதலைக் கூட்டணி சம்பந்தமூர்த்தி, தங்கத்தரை போன்றோர்களை மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வருகிறார்கள். அப்போது தான் எமக்கும் கூட்டணிக்கும் இடையில் தொடர்பு ஏற்ப்படுகின்றது. இந்த சிறையில் இருக்கும்போது அப்போது தமிழ் இளைஞர்பேரவை ராஜன் (பரந்தன் ராஜன் – ஈஎன்டிஎல்எப்) எம்மைப் பார்க்க அடிக்கடி வந்து போவார். எமக்கான பல உதவிகளையம் செய்து தருபவர். ராஜன் எமக்கான உதவிகளை கண்டியிலும் மட்டக்களப்பிலும் செய்து தருபவர். இந்தக் காலத்திலேயே புளொட்டும் புலிகளிலிருந்து பிரிந்து இயங்குகிறார்கள். இதில் ராஜன் புளொட்டுடன் இணைந்து வேலை செய்கிறார்.

நாம் சிறையில் இருக்கும் போது என்னையும் மற்றவர்களையும் எனது அப்பாவும் ராஜனும் தான் துணிந்து வந்து பார்ப்பவர்கள். அப்போது ராஜன் தமிழ் இளைஞர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர் என்ற ஒரு அடிப்படையிலேயே தான் எம்மை வந்து பார்ப்பார். அதனாலேயே நான் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியேறிய பின்னர் புளொட்டுடன் இணைந்து வேலை செய்ய ஆரம்பிக்கிறேன். இந்தக் காலத்தில் புளொட்டும் மிகவும் பிரபல்யமான அமைப்பாக தமிழ் பிரதேசம் எங்கும் இயங்குகின்றது.

மட்டக்களப்பில் புளொட்டுக்கு அமைப்பு ரீதியாக இயங்குபவர்களில் நானும் ஒருவன். புளொட் மலேசிய வாசுதேவனை அழைத்து ஒரு நிதிசேகரிப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கான பொறுப்பை என்னிடம் தந்தது. இந்த நிகழ்ச்சி எமக்கு தோல்வியிலேயே முடிந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி எம்மை பல தமிழ் இளைஞர்களுக்கு ஒரு அமைப்பாக நிறுவனமாக இயங்க முயற்சிப்பதன் அம்சத்தை நிறுவியது. இது பலர் எம்முடன் இணையவும் காரணமாகியது. கே எஸ் ராஜா வந்து செய்த இந்த நிகழ்ச்சிகளை என்னுடன் முன்னின்று செய்தவர்கள் பரந்தன் ராஜனும் ராஜனுடைய அண்ணாவுமாகும்.

இந்தக் காலத்திலிருந்தே ராஜன் அடிக்கடி மட்டக்களப்பு வருவார். எமக்கும் மக்களுடன் தொடர்பு இக்காலத்தில் அதிகமாகி வருகின்றது. கிளிநொச்சி வங்கி கொள்ளையும் புளொட் செய்து முடிக்கிறது. இக்காலத்தில் ராஜன் கிளிநொச்சியில் இருக்கிறார்.

ராஜன் ஒருமுறை மட்டக்களப்பு வந்து திரும்ப கிளிநொச்சிக்கு போகும்போது பொலீஸ் சுற்றிவளைத்து ராஜனை கைது செய்து விட்டார்கள். அப்போது நான் 1983ல் புளொட்டின் முழுநேரமாக வேலை செய்கிறேன். இக் காலங்களில் நாம் மன்னார், உடப்பு போன்ற பிரதேசங்களுக்கு கடலால் படகு மூலம் பிரயாணங்களை ஆரம்பிக்கின்றோம். இதனை தொடர்ந்து நிக்ரவெட்டியாவில் வங்கிக்கொள்ளையை புளொட் நடாத்துகின்றது.

இந்த காலத்துடன் நான் இந்தியாவிற்கு வருகின்றேன். இந்தியாவில் புளொட்டின் அமைப்புக்குள்ளேயே நிறையப் பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக ராஜன் புளொட்டுக்குள்ளேயே முரண்படுகின்றார். அதில் முதலாவதான பிரச்சினையானது நிரஞ்சனுடைய (காக்காவினுடைய) பிரச்சினை நடக்கிறது, முகுந்தனுடன் (உமாமகேஸ்வரனின் இயக்கப்பெயர்களில் ஒன்று) கடுமையாக முரண்பட்ட ராஜனின் நண்பன் காக்கா கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றார். ராஜன் இந்த காக்கா பிரச்சினையில் கருத்த முரண்படுகின்றார்.

011109dag.jpgஇதே காலத்தில் ஈபிஆர்எல்எப் இல் இருந்து தோழர் டக்ளஸ் தேவானந்தா வெளியேறுகின்றார். தோழர் டக்ளஸ், ராஜன் இணைந்து வேலை செய்வதற்கான பேச்சுக்கள் நடைபெற்று இருவரும் உடன்பட்டு இணைந்து வேலை செய்கிறார்கள்.

தேசம்நெற்: நீங்கள் புளொட்டின் உட்கட்சிப் பிரச்சினைகளை முன்வைத்து கண்டித்து வெளியேறினீர்களா?

ராம்ராஜ்: இல்லை! நான் ராஜனுடன் சேர்ந்தே இருந்தேன், புளொட்டின் மத்திய குழு உறுப்பினரான அசோக் ஈஎன்டிஎல்எப் உடன் பிரிந்து வந்தார். ராஜன் புளொட்டுக்குள்ளேயே நடந்த பிரச்சினைகளை பலமாக எதிர்த்தார். ஆனாலும் புளொட்டில் பல பிரச்சினைகளை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமான புலனாய்வுத்துறையினரால், ராஜனுக்கு எதிராக ஏதும் செய்ய முடியவில்லை. காரணம் ராஜனுக்கு புளொட்டுக்குள்ளேயும் வெளியே மற்ற இயக்கத்தவர்களிடையேயும் பலமான உறவு இருந்தது. குறிப்பாக ரெலோ சிறிசபா, தோழர் டக்ளஸ், தோழர் நாபா போன்றவர்களிடம் ராஜனுக்கு பலமான உறவு இருந்தது. இந்த உறவு நாட்டில் சேர்ந்து இயங்கிய காலங்களிலிருந்தே இருந்து வந்தது. இவர்கள் யாரும் தம்மிடையே முரண்பட்டுக்கொண்டது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புளொட்டுக்குள்ளே உட்பிரச்சினை பெரிதாக வளர்ந்து பல வரலாறு காணாத பிரச்சினைகள் எழுந்த போது ராஜன் லெபனானில் இருக்கிறார். ராஜனை கொண்டு வர பாஸ்போட் தேவைப்பட்டது. லெபனானில் பாஸ்போட்டை வாங்கி வைத்திடுவார்கள். முகுந்தன் திட்டமிட்டு ராஜன் பாஸ்போட் எடுக்க முடியாதபடி செய்தார். பிறகு ராஜனை திரும்ப கொண்டு வருவது இழுபறிப்பட்டு போயிருந்தது.

புளொட்டிலிருந்து ராஜன் பிரிந்து சென்று ஈஎன்டிஎல்எப் யை உருவாக்கியபோது ராஜனுக்கு மாற்று இயக்கத்திடமிருந்து பல உதவிகள் கிடைத்திருந்தது. அதில் ரெலோ ஆயுதங்களையும் பணத்தையும் நேரடியாக ராஜனுக்கு தந்து உதவியது. இதற்கு காரணம் ராஜன் – சிறி நெருக்கமான உறவேயாகும்.

தேசம்நெற்: புளொட்டில் இருந்து நீங்கள் பிரிந்து சென்ற போதும் புளொட் செய்தது போன்றே ஈஎன்டிஎல்எப் உம் ஆட்கடத்தல், கொலை, அரசிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தீர்கள்?

ராம்ராஜ்: புளொட்டில் நடந்த பிரச்சினைகள் கடத்தல்களுக்கும் எம்மீதே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நான் சென்னையில் புளொட்டில் நிதிப் பொறுப்பாளராக இருந்த போதும் இந்த குற்றச்சாட்டுக்கள் இருந்தது. நிதி பற்றிய குற்றச்சாட்டுக்கள் என்மீதும் வைக்கப்பட்டடிருந்தது. இந்தக் காலத்தில் யார்? யார் மீது? யாருக்கு? ஏது? என்ன? என்று இல்லாமல் வகை தொகையாக குற்றச்சாட்டுக்கள், பலர் மீதும் பல தடவைகளும் தாறு மாறாக வைக்கப்பட்டிருந்த காலம் என்பதை மறக்கக்கூடாது.

நானும் என்போல பலரும் இயக்கத்துக்கு சேரும் காலங்களில் இயக்கத்திற்காக எதையும் செய்யத் தயாராகவே வந்தோம். அப்படித்தான் இயக்கங்களும் வளர்க்கப்பட்டிருந்தன. எல்லோருமே தற்கொலை குண்டுதாரியாயும் மண்ணை மீட்க வேண்டும் என்ற சிந்தனையைத் தவிர வேறு என்ன சிந்தனையும் இருக்கவில்லை. ஆரம்பத்தில் எல்லா இயக்கத்திலும் இந்த சிந்தனைமுறை தானே இருந்தது. யாரும் இதை மறுக்க முடியுமா?

தேசம்நெற்: புளொட்டில் மிகமோசமான உட்படுகொலைகள் இடம்பெற்றது. அப்போது அதனை எதிர்த்து பலர் குறிப்பாக தீப்பொறி குழுவினர் வெளியேறி இருந்த போதும் நீங்கள் தொடர்ந்தும் புளொட்டில் இருந்ததாக கூறுகிறீர்கள். இன்று ஜனநாயகம் மனித உரிமைகள் பற்றிப் பேசும் நீங்கள் அன்று நடந்த உட்படுகொலைகளில் சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. நீங்கள் புளொட்டினுள் இடம்பெற்ற உட்படுகொலைகள் எதிலும் சம்பந்தப்பட்டு அல்லது அதற்கு துணையாக இருந்திருக்கின்றீர்களா?

Ramraj_V_TBCராம்ராஜ்: எந்த விதமான கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள் எதிலும் சம்பந்தப்படவில்லை. இதில் புளொட்டிலிருந்த மிகப் பெரும்பான்மையினரைப் போல நானும் சாதாரண போராளியாகவே இருந்தேன். புளொட்டுக்குள்ளே இருந்தவர்களில் பலர் இந்த உள்வீட்டுப் பிரச்சினைகளை எதிர்த்தவர்கள், பலமாக எதிர்த்தவர்கள், தாமும் கொலை செய்யப்படுவோம் என்று பயந்தவர்கள் பலர். இயக்கம் பாதை தவறிவிட்டது என்று தாமாகவே வெளியேறிப் போனவர்கள் பலருக்கு நான் உதவி செய்துள்ளேன். அப்படி வெளியேறியவர்களில் பலர் இன்றும் ஜரோப்பாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் என்னோடு நட்பாக பழகுபவர்கள், எனது நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்பவர்களாக உள்ளனர்.

Manikkadasan_and_Guardsபுளொட்டினுள் நடந்த எல்லா கொலைகளும் உமாமகேஸ்வரனுக்கு தெரிந்து நேரடி ஆலோசனையுடன் நடந்தது என்பது தவறு. சில தெரிந்திருக்கலாம் ஆனால் புளொட்டின் புலனாய்வுத்துறையினரே தமக்கு நினைத்த மாதிரி பல கொலைகளை செய்தார்கள். உதாரணம் மொக்கு மூர்த்தி. இவரே பல உட்படுகொலைகளுக்கு காரணமாக இருந்தவர்.

தேசம்நெற்: உமாமகேஸ்வரன் புளொட் இயக்கத்தின் தலைவர். அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் அவரே பொறுப்படையவர். இவர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பும் உமாமகேஸ்வரனுடையதே. உமாமகேஸ்வரன் தனது தலைமைப் பதவியைக் காப்பாற்ற இந்தப் புலனாய்வுத்துறையினரைப் பயன்படுத்தி உள்ளார். புளொட்டில் நடந்த உட்படுகொலைகளுக்கு உமாமகேஸ்வரன் முழுப்பொறுப்புடையவர்.

ராம்ராஜ்: இல்லை. இல்லை. இவர்களைக் கட்டுப்படுத்த என்று உமாமகேஸ்வரன் தொடங்கியிருந்தால் உமாமகேஸ்வரன் ஆரம்ப காலத்திலேயே முடிந்திருப்பார். இயக்கத்தினுள்ளே மற்றவர்களுக்கு இருந்த பயம் உமா மகேஸ்வரனுக்கும் இருந்திருக்கும். இப்படித்தான் புளொட் வளர்க்கப்பட்டு இருந்தது. இந்தக் காலத்தில் மற்றைய இயக்கங்களுக்கு உள்ளேயும் இப்படியான தன்மைகள் இருந்தது. அதைவிட உமாகேஸ்வரனுக்கு சில பலவீனங்களும் இருந்ததது.

UmaMaheswaran_PLOTEபுளொட்டுக்கு ஆயுதங்கள் வந்து இந்தியாவில் இந்திய அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டது. ராஜன் இந்த ஆயுதங்களை எடுப்பது சம்பந்தமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் உமாமகேஸ்வரன் தனது மச்சான் துரையை இந்த பிரச்சினையை கையாழுவதற்க்கு பொறுப்பாக வைத்தார். இது ஒரு முரண்பாடாக அந்த நேரம் எழுந்தது. அப்போது ராஜன் இந்த அலுவலை மிகஇலகுவாக செய்திருக்க முடியும். இதை துரை கையாள ஆரம்பித்ததாலேயே மேலும் சிக்கலாகி இந்த ஆயுதங்களைப் பெறமுடியாமல் போனது. மேற்குறித்த ஆயுதங்களை வாங்குவதில் பல ஊழல்கள் நிகழ்ந்திருந்தன. இந்த ஆயுதங்கள் எல்லாமே மிக சாதாரணதர ஆயுதங்களாகவே இருந்ததாகவும் பேசப்பட்டது.

ஒபரேய் தேவனுக்கு பின்பு ரெலா இயக்கத்தின் தலைவராக உமாமகேஸ்வரனின் மச்சான் வந்தபடியால் ரெலா இயக்கம் புளொட்டுடன் இணைந்தது.

தேசம்நெற்: இலங்கை – இந்திய ஒப்பந்தம் காலத்தில் ஈஎன்டிஎல்எப் மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தது. அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

ராம்ராஜ்: நான் வெளியேறி போய்விட்டேன். இலங்கை – இந்திய ஒப்பந்தகாலத்தில் ஈஎன்டிஎல்எப் இலங்கைக்குப் போகும் போது நான் வெளிநாட்டில் இருந்தேன்.

தேசம்நெற்: இலங்கை – இந்திய ஒப்பந்தகாலத்தில் ஈஎன்டிஎல்எப் மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தது. ஆட்கடத்தல், கொள்ளை, கொலை, பலாத்காரமாக இளைஞர்களைப் பிடித்து பயிற்சி அளித்தது. குழந்தைப் போராளிகள். இவை பற்றி இன்றும் ஈஎன்டிஎல்எப் அமைப்பில் உள்ள நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

ENDLF_Logoராம்ராஜ்: ஈஎன்டிஎல்எப் இந்திய ராணுவத்துடன் இருப்பதால் ஈஎன்டிஎல்எப்க்கு அவதூறு உருவாக்க, கெட்ட பெயரை திட்டமிட்டு உருவாக்க இதில் பல வேலைகளை புலிகளே செய்துவிட்டு பழியை எம்மீது போட்டனர். புலிகள் வாகனங்களை மறித்தும் ஆட்களை இறக்கியும், கடத்தியும் பல கொடுமைகளை செய்துவிட்டு புலிகள் தாங்கள் தான் திறீ ஸ்ரார் என்றும் ஈஎன்டிஎல்எப் என்றும் சொல்லியே இந்த அலுவல்களைச் செய்தனர். இதைப் புலிகள் எல்லா இயக்கங்களுக்கும் செய்தது. தாங்கள் கொள்ளையடித்து விட்டு வேறு இயக்கங்களின் பெயரையே பாவித்தனர். குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் புலிகள் பரவலாக இதனைச் செய்தனர். மற்ற இயக்கத்தவர்களிடம் கேட்டாலே இதை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.

தேசம்நெற்: ராம் நீங்கள் என்ன சுத்தமான சுவாமிப்பிள்ளை என்கிறீர்களா?

ராம்ராஜ்: நான் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் என் மீது – ராம்ராஜ் மீது, ராம் இது செய்தார், அது செய்தார், என்று கூறுபவர்கள் நேரடியாக என்னிடம் வந்து பேசுங்கள். நான் என்ன செய்தேன் என்று பதிலளிக்கத் தயார். எனது தொலைபேசி எனது விலாசம் தெரியாதவர்கள் யார்? ஏன் யாரும் என்னிடம் இப்படி பிரச்சினை இருக்கு என்பவர்கள் பேசவருவில்லை!

யாரும் தனது குடும்பமோ தானோ என்னால் பாதிக்கப்பட்டது என்றால் என்னிடம் நேரடியாக வந்து கேட்கட்டுமே. தேவைப்பட்டால் நீங்களும் பக்கத்தில் இருந்து கேட்டு தேசம்நெற்றில் பதிவிடுங்கள் பலரும் தனிப்படப் பேசலாம். தவறு என்றால் நேரடியாகப் பேச வேண்டும். நான் எத்தனையோ எழுதுகிறேன். எத்தனையோ பேசுகிறேன். எனக்கு புலிகளால் தனிப்பட்ட வகையில் பாதிப்பு இல்லை.

தேசம்நெற்: இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் ஈஎன்டிஎல்எப் குழந்தை இராணுவ அணியொன்றை உருவாக்கியது. இளைஞர்களைப் பலவந்தமாக கடத்திச் சென்று பயிற்சி அளித்தது?

ராம்ராஜ்: உண்மை தான். இது தவறுதான். இதனை உணர்ந்துகொண்டோம். இவர்களில் சிலர் புலிகளால் கொல்லப்பட்டும் உள்ளனர். அந்தத் தவறின் வலியை இப்போதும் உணர்கின்றோம். தமிழ் தேசிய இராணுவத்தை உருவாக்கக் காரணம் இந்தியப்படை வெளியேறப் போகிறது, அந்த இடைவெளியை நிரப்புவதற்கு ஒரு இராணுவ கட்டமைப்பு வேண்டும். இதன் மூலம் நாட்டை பிரிக்க ஒருவழி ஏற்ப்படும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் பெறப்பட்ட ஆலோசனைகளின் பெயரிலுமே இந்த நடவடிக்கை செய்யப்பட்டது. ஆனால் அது தவறிப்போய்விட்டது.

அதற்குப் பிராயச்சித்தமாகவே பெங்களுரில் இந்திராகாந்தி சர்வதேசப் பாடசாலையை உருவாக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி வருகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் பராமரிக்கின்றோம். ஆரம்பத்தில் இதனை எமது இயக்க குடும்பங்களுக்காகவே ஆரம்பித்தோம். ஆனால் தற்போது புலிகள் உட்பட ஏனைய அமைப்புகளில் இருந்த பாதிக்கப்பட்டவர்களும் தமிழ் நாட்டு முகாம்களில் இருந்த பாதிக்கப்பட்டவர்களது பிள்ளைகளும் அப்பள்ளியில் படிக்கின்றனர். அன்று இந்தியப் படைகளுடன் வந்த கப்பலை கருணாநிதி அரசு தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அக்கப்பல் ஒரிசாவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் காங்கிரஸின் ஆட்சியில் பெங்களுர் இருந்தபடியால் எமக்கு பாடசாலையை பெங்களுரில் அமைக்க முடிந்தது. இதுவரை 4000 மாணவர்கள் வரை கல்விகற்று வெளியேறி உள்ளனர். இவ்வாறான ஒரு சேவையை வேறு எந்த அமைப்பும் செய்திருக்கவில்லை.

அப்போது இந்த பிரச்சனைகள் நடைபெறும்போது பிள்ளைகளை கூட்டிப்போக 500 தாய்மார்கள் வந்தார்கள் என்றால் புலிகள் ஒரு ஆயிரம் பேரை கூட்டிவந்து எமக்கும் இந்திய இராணுவத்திற்கும் எதிராக சத்தம் போட்டனர். ஆனால் இப்படித்தான் புலிகள் தமது இறுதிக் கட்ட போராட்ட காலங்களிலும் தமது கடைசிக் காலத்திலும் செய்து புலிகள் மக்களால் தோற்கடிக்கப்படடனர்.

புலிகளின் தோல்விக்கும் காரணம் ஆட்கடத்தல்கள், இளைஞர், யுவதிகள், பாடசாலை மாணவர்களைக் கடத்தி ஆயுதப் பயிற்ச்சி அளித்ததேயாகும். இதனால் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தனர். இதனைத் தவறு என்று புலிகள் அன்று புரிந்து மக்களை எமக்கு எதிராக கூட்டி வந்தவர்கள். பிறகு தாங்களே இந்தத் தவறை மக்களுக்கு அப்படியே செய்தது பெரிய தவறாகிப் போயிருந்தது. இதனாலேயே புலிகள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர். தோற்கடிக்கப்பட்டனர்.

இதை எல்லா இயக்கங்களும் செய்தது. ரிஎன்ஏ (தமிழ் தேசிய இராணுவம்) இராணுவத்தை உருவாக்க இந்தியா எல்லா இயக்கங்களுக்கும் சொல்லியது. ‘நாட்டைப் பிரிக்க போகிறோம்! உடனடியாக படையை திரட்டுங்கள்!! இந்திய இராணுவத்தை வெளியேற்ற அரசு முயல்கிறது” அப்போது நாடு பிரியும் நிலை உருவானது. இந்தக் காலத்தில் புலிகள் பிரேமதாஸ அரசுடன் கூட்டுச் சேர்ந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றினர். ஆனால் புலிகள் தமது இறுதிக் காலத்தில் இந்தியாவிடம் பேச முற்பட்டனர்.

அதைவிட இந்தக் காலத்தில் யார் பெரிய படையைத் திரட்டுவது என்ற நிலை இருந்தது. இதை எந்த மற்ற இயக்கத்தவர்களும் மறுக்க மாட்டார்கள். இந்தியப் படைகள் இருக்கும்போதே சிங்கள காடையர்களின் தொல்லைகள் நிறையவே கிழக்கு மாகாணத்தில் இருந்தது.

தேசம்நெற்: நீங்களும் ஈஎன்டிஎல்எப் உம் எப்போதும் இந்தியா மீது காதல் கொண்டவர்களாக இருக்கின்றீர்கள். ஆனால் தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது அல்லவா?

ராம்ராஜ்: இராணுவம், ஆயுதப் போராட்டம் அல்லது எந்த வகையிலோ போராட்ட முடிவில் ஒரு நாட்டின் அங்கீகாரம் தேவை. இதற்கு இந்திய உதவி கட்டாயம் தேவை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் பல நல்ல நன்மைகள் உண்டு. இந்த ஒப்பந்தம் மூலம் மட்டும்தான் இந்திய அதரவை தமிழர் போராட்டத்திற்கு பாவிக்க முடியும். உரிமைகளைப் பெற முடியும். வட கிழக்கு தமிழர் தாயகம் என்ற சர்வதேச ஒப்பந்தம் அது தான். இதில் மேலும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். அப்படி செய்ய்பபட்டு இருந்தால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக அது இருந்திருக்கும்.

இந்த ஒப்பந்தத்தை மேலும் செழுமைப்படுத்தி போயிருக்கலாம். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அமுல்ப்படுத்தா விட்டால் நாட்டைப் பிரிப்போம் என்று சொன்னதால் தான் நாம் இளைஞர்களை கட்டாய பயிற்ச்சிக்கு எடுத்துப் போனோம். ஓப்பந்த காலத்தில் 5 ஆயிரம் மக்களே இறந்திருந்தனர் ஆனால் அதற்குப் பிறகு எத்தனை ஆயிரம் மக்கள், போராளிகள் இறந்து போயினர். அந்த ஒப்பந்தத்தை புலிகள் திட்டமிட்டு நிராகரித்தனர். யாரோ சொன்ன ஆலோசனையை கேட்டுத்தான் செய்துள்ளனர்.

தேசம்நெற்: இனப்பிரச்சினைக்கான தீர்வினை இன்றுள்ள சூழ்நிலையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

ராம்ராஜ்: இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலிருந்து ஆரம்பிப்பது என்பது மகிழ்ச்சியான விடயம். ஆனால் அரசாங்கம் அதற்கும் வெகுவாக கீழே போய்த்தான் ஆரம்பிக்க வேண்டும் என்றல்லோ சொல்கிறது. 13வது திருத்த சட்ட மூலம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் ஒன்று அதிலிருந்து கூட அரசு ஆரம்பிக்க மாட்டேன் என்கிறதே.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஒரு நல்ல தீர்வு. ஜனாதிபதி கடைசியாக இந்தியாவிற்கு போனபோதும் இவைபற்றிப் பேசவில்லையே!

தேசம்நெற்: ஈஎன்டிஎல்எப் இந்தியாவுடன் இணைந்துதானே நம்பிக்கையுடன் செயற்படுகின்றீர்கள்?

ராம்ராஜ்: ஈஎன்டிஎல்எப் யைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பரிபூரண ஆதரவு இல்லாமல் இலங்கையில் தமிழர்களின் அரசியல் உரிமைகளை பெறமுடியாது. அந்த விடயத்தில் ஈஎன்டிஎல்எப் மிகவும் தெளிவாக இருக்கின்றது.

தேசம்நெற்: ஈஎன்டிஎல்எப் தெளிவாக இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அப்படியானால் இன்று புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலைமையில், புலிகளை அழிக்கும் பணியில் இலங்கைக்கு இந்தியா உதவியுள்ளது. ஆயினும் ஏன் இந்தியா தமிழர்களின் அரசியல் விடயத்தில் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வில்லை?

ராம்ராஜ்: நாங்கள் சர்வதேச நிலைமைகளையும் விளங்கிக்கொள்ள வேண்டும் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வரும்போது சீனாவின் அழுத்தம் இந்தப் பிரச்சினையில் இல்லை. அனால் இன்று இது மிகமுக்கிய பிரச்சனை. இதை நாம் மிக அவதானமாக கவனத்தில எடுக்க வேண்டும். இலங்கை இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் எழுதினால் அடுத்த நாள் சீனா இலங்கையுடன் ஆறு ஒப்பந்தம் எழுதும். இதிலிருந்து தான் நாம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் நிலைமைகளை இன்று பார்க்க வேண்டும்.

இதேநேரம் இன்னுமொரு நிலைமையையும் அவதானிக்க வேண்டும். இந்தியா 50,000 வீடுகளை கட்ட வட – கிழக்கு மாகாண அரசக்கு நேரடியாக பணத்தினை கொடுக்கப் போகின்றது. இதற்கு அரசு எப்படி உடன்பட்டது. இப்படியாக நடைபெறும் மாற்றங்களை அவதானிக்க வேண்டும். இந்தியா இலங்கை அரசை நம்ப முடியாமல்தான் இப்படி செய்கின்றது என்று கூறமுடியாதா?

Indo Lanka Cartoonதேசம்நெற்: ராம் ஆரம்பகால போராட்ட நிலைமைகளுக்கும் இன்றுள்ள நிலைமைகளுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. ஆனால் மாறாத உண்மையாக இருப்பது இந்தியா தனது நலனிலிருந்து தான் இந்த தமிழர் பிரச்சினைகளை அணுகுகின்றது.

ராம்ராஜ்: சிலர் சொல்லக் கூடும் இந்தியா தமிழர்களை அழிக்கவே செயற்படுகிறது என்று. ஒன்று மட்டும் உண்மை, இந்தியா கடைசி வரைக்கும் புலிகளை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர முயற்சித்தது. எங்களுடைய ஈஎன்டிஎல்எப் அமைப்பினூடாக முயற்சித்தது. நாங்கள் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் தொடர்பாளராக இருந்தோம். இது கடைசிக் காலங்களிலும் இடம்பெற்றது.

இலங்கையில் இன்னமும் ஒரு ஜனநாயக சூழ்நிலை உருவாகவில்லை. எப்படி புலிகள் மற்றவர்கள் மீது அழுத்தத்தை பிரயோகித்தார்களோ அதே போன்றே அரசும் தமிழர்கள் மீது ஒரு அழுத்தத்தை பிரயோகித்துக்கொண்டே இருக்கின்றது. இதனால் இலங்கை அரசைக் கட்டுப்படுத்த இந்தியா அவசியம்.

Karuna Colதேசம்நெற்: கருணா மீது பிற்காலங்களில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நீங்கள் கருணாவிற்கு மாவீரர் தின உரையை எழுதிக் கொடுத்ததுடன் ஆரம்பத்தில் கருணாவுடன் இணைந்து செயற்படவும் முன் வந்திருந்தீர்களல்லவா? கருணா புலிகளிலிருந்து வெளியேறி ஈஎன்டிஎல்எப் இடம்தான் இந்தியாவிற்கு வந்தார். இவ்வாறு கருணாவுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஈஎன்டிஎல்எப் உறுப்பினர்கள் சிலரும் கொல்லப்பட்டனர். இந்த அரசியல் மாற்றம் சந்தர்ப்பவாதம் என்று கொள்ளலாமா?

ராம்ராஜ்: இல்லை. அப்படியல்ல. கருணா எங்களை அணுகியதால் நாம் கருணாவிற்கான பாதுகாப்பை கொடுத்திருந்தோம். நாங்களும் கருணாவும் ஒரு சரிசமமான ஏற்பாட்டுடன் சேர்ந்து இயங்க உடன்பட்டோம். அந்த அடிப்படையில் ஈஎன்டிஎல்எப் அங்கு ஆட்களை அனுப்பி வேலை செய்ய ஆரம்பித்தது. ஆனால் பின்னர் வேறு பாதையில் கருணாவின் அணுகுமுறைகள் இருந்ததால் நாம் வெளியேற வேண்டி இருந்தது.

கருணாவின் அண்ணர் குகநேசன் போன்றோர் கருணா இப்படி போயிருப்பார் என்று எதிர்பாக்கவில்லை. கருணாவிடம் சரியான அரசில் தெளிவு இருக்கவில்லை.

தேசம்நெற்: நீங்கள் ஒரு முழுநேர அரசியல் நடவடிக்கையாளராக இருந்து எப்படி ஒரு ஊடகவியலாளராக மாறினீர்கள்?

ராம்ராஜ்: இந்தியாவில் இருந்து லண்டனுக்கு வருகிறேன். அப்போது பிரித்தானியாவில் ஜபிசி வானொலியை தாசீசியஸ் ஆரம்பித்தார். அதனை 1991ம் ஆண்டு ஆரம்பிக்கும் போது என்னை தன்னுடன் இணைந்து வேலை செய்ய அழைத்தார். அப்போது வெளியே இருந்துகொண்டு அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.அதிலிருந்து ஒரு வருடத்துக்குள் அதிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரிபிசியில் 22 பங்குதாரர்கள் இருந்தனர். தலா 2500 பவுண்ஸ் போட்டு வானொலியை அரம்பித்து 4 இயக்குனர்களை கொண்டு இயங்கியது. 11 வருடங்களுக்கு முன் ரிபிசி யை ஆரம்பிக்கும் போது நான் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டேன். ஆரம்பத்தில் சில பணிப்பாளர்கள் இதையும் ஒரு குற்றச்சாட்டாக வைத்தார்கள். ஆனால் பின்பு எல்லாவற்றையும் அவர்கள் விளங்கிக்கொண்டனர். ஆனால் வேறு சிலரால் இது தொடர்ந்தும் பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. நான் கட்சியின் அலுவல்களை ரேடியோவிற்குள் கொண்டுவரவில்லை. ஈஎன்டிஎல்எப் க்கு முன்னுரிமை கொடுத்து வானொலியை நடாத்தவில்லை. ஈஎன்டிஎல்எப் செய்தியை நான் எழுதிப் போடவில்லை. ஆனால் ஈஎன்டிஎல்எப் அனுப்பிய செய்திகளை வெளியிட்டுள்ளேன். 10 வருடமாக வானோலியை கேட்பவர்கள் தான் இதற்கு சாட்சியம். பின்னர் ஒரு தனி நிர்வாகத்தில்தான் ரேடியோ இயங்கியது.

தேசம்நெற்: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் திசைமாறிய பெரும் அழிவுகளைச் சந்தித்து தமிழ் மக்களின் அரசியல் வன்முறை அரசியலாக இருந்த காலகட்டத்தில் 10 வருடமாக வானொலியை இயக்கியது ஒரு சாதாரண விடயமல்ல. அதில் நீங்கள் குறிப்பாக எதிர் நோக்கிய பிரச்சினைகள் என்ன?

Ramraj_V_TBCராம்ராஜ்: ஈஎன்டிஎல்எப் என்ற பிரச்சினை, புலிகளின் ஆதரவாளர்களால் பிரச்சினை. ரிபிசியில் பணியாற்றியவர்கள் ஜனநாயகம் பேசியவர்கள் சிலரும் பிரச்சினையை ஏற்படுத்தினர். நாம் ரேடியோவை தமிழ் மக்களுக்கு அரசியல் படிப்பிக்க ஆரம்பிக்கவில்லை. நாம் ரேடியோவை ஆரம்பிக்கும் போது மக்கள் சுதந்திரமாக பேச வேண்டும், மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிடும் கலாச்சாரம் வளர்க்கப்படல் வேண்டும், அதற்கு நாம் உதவிகள் எமது சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்றே ஆரம்பித்தோம். இந்த கொள்கைகளிலிருந்து நாம் மாறவில்லை.

மக்கள் நான்கு சுவருக்குள் இருந்து சுதந்திரமாக தமது கருத்துக்களை சொல்லட்டும் நாங்கள் யார் வருகிறீர்கள் என்ன பெயரில் வருகிறீர்கள் என்றெல்லாம் அக்கறைப்படுவதில்லை. நாம் விரும்புவது அவர்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட ஊக்குவிப்பதேதான். அதில் நாங்கள் வெற்றிதான் கண்டுள்ளோம்.

Sivalingam Vஇன்று எல்லோரும் தங்கள் பெயரை சொல்லியே பேசுறாங்கள். இதை நாங்கள் வளர்த்துள்ளோம். இதை வளர்க்க நாம் பட்ட கஸ்டம் பாரியது. எமது அரசியல் ஆய்வார் திரு சிவலிங்கம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வந்த இங்கு கலந்து கொள்வதும் அடுத்தநாள் வேலைக்கு போவதும் அன்று ஒரு இலகுவான காரியமல்ல. இன்று திரு சிவலிங்கம் சொன்ன ஒவ்வொரு ஆய்வையும் எடுத்துப் பார்த்தால் அவை ஒவ்வொன்றும் அப்படியே நடந்திருக்கிறது.

ஒருகாலத்தில் நாங்கள் புலிகளுக்கு எதிராக விமர்சனம் வைக்கும்போது புலிகளின் ஆதரவாளர்கள எம்மை அரச உளவாளிகள் என்றும் பின்பு அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் போது இலங்கை அரச தரப்பினர் எம்மை புலிகள் என்றும் சாயம் பூசினார்கள். இது உண்மையல்ல அன்று நடக்கும் நிகழ்வுகளை மக்கள் முன்வைப்பது தான் எங்கள் கடமை. மக்களுக்கு எல்லாவற்றையும் தெரியப்படுத்துவதே எமது கடமை அதை நாம் சரிவர செய்துள்ளோம்.

தேசம்நெற்: ஜபிசி யின் ஆரம்பகாலத்தில் நீங்களும் அவ்வானொலியில் பங்கெடுத்து இருந்தீர்கள். ரிபிசியில் பணியாற்றியவர்கள் ஐபிசி இலும் பின்னர் இணைந்து கொண்டனர். ஆனால் பிற்காலத்தில் ரிபிசி வானொலியை மதிப்பிழக்கச் செய்யும் பரவலான குற்றச்சாட்டுகள் ஐபியில் வெளிவந்தது.

ராம்ராஜ்: அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. நாம் எப்பவுமே நேசக்கரம் நீட்டியபடியேதான் இருக்கிறோம். எமக்கு எதிராக சேறடித்தவர்கள் அவதூறுப் பிரச்சாரம் செய்தவர்கள் எம்மை திட்டி ரேடியோ பிரச்சாரம் நடாத்தியவர்கள் எல்லோரும் இன்று எம்முடன் நட்டபாகவே உள்ளனர். அவர்கள் இன்று என்னிடம் வரும்போது நாம் அவர்களை பழிவாங்கவில்லை. வணக்கம் வாங்கோ! என்ன உதவி தேவை! என்று தானே கேட்கிறேன். இது அவர்களுக்கு நாம் அன்றும் இன்றும் ஒரே மாதிரித்தான் உள்ளோம் என்பதை புரியவைத்துள்ளது அவர்களும் புரிந்துள்னர்.

TBC Break-inபுலிகளின் அதிதீவிரவாத ஆதரவாளர்கள் நேயர்கள் அவதூறுப் பேச்சுக்கள் எம்மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. நேரடியாக தனிப்பட்ட எந்த தாக்குதல்களும் புலிகளால் எனக்கு நடாத்தப்படவில்லை. எத்தனையோ இடங்களுக்கு, எத்னையோ நாடுகளுக்கு போயுள்ளேன் எங்கு போனாலும் வானொலியில் சொல்விட்டுத்தான் போகிறோம். யாரும் என்மீது தீண்டியதில்லை.

ரிபிசி வெளியிட்ட வான்முரசு பத்திரிகைக்கு அவதூறு ஏற்பட்டபோது அந்த அவதூறுக்கு எதிராக கண்டித்து தேசம் பத்திரிகை த ஜெயபாலன் மட்டுமே எழுதியுள்ளார். இன்று எத்தனையோ பேர் எமக்கு ஆதரவாக எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். ஆனால் அன்று எமது பத்திரிகைக்கு நடந்த அவதூறை கண்டித்தது ஜெயபாலனின் துணிவான செயலாகும். தேசம் அன்று செய்த உதவி மிகவும் முக்கியமானதாகும் அதற்கு நாம் என்றென்றும் நன்றியுடன் மதிப்புடனும் உள்ளோம்.

தேசம் ஜெயபாலனின் “ஆர்ட்டிகல் 19 கட்டுரையும் அதன் ஆசிரியர் தலையங்கமும்” என்ற கட்டுரையுடன் தான் தேசத்துடனும் ஜெயபாலனுடனும் தொடர்பு உருவானது. நாம் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் அன்று எமது ரிபிசி ரேடியோவை நடாத்திக் கொண்டிருந்தோம். அந்த மாதிரியான காலத்தில் தேசம் எமக்காக குரல் கொடுத்தது அந்தக்காலத்தில் எத்தனையோ பத்திரிகைகள் ரேடியோக்கள் ஜனநாயகம் பேசியவர்கள் இது பற்றி கதைக்கவில்லை இன்று இவர்களும் ஜனநாயகம் பேசுகிறார்கள்.

தேசம்நெற்: புலிகளின் ஆதரவாளர்களின் எதிர்ப்பு. ஆவேசம். அரசின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள். இவற்றிக்கும் ஊடாக தமிழர்களின் அரசியலை வெளிப்படுத்துவது என்பது மிகவும் கடினமானது இந்தக் காலகட்டத்தை எப்படி வெற்றிகரமாக நகர்ந்து வந்தீர்கள்?

ராம்ராஜ்: இதனால் தான் நான் ஈஎன்டிஎல்எப் யை ரிபிசியில் சம்பந்தப்படுத்தவில்லை. காரணம் ஈஎன்டிஎல்எப் எப்பவுமே இந்திய உதவியுடன்தான் தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்க வேணும் என்ற கருத்துடையவர்கள்.

புலிகள் மக்களுக்காக போராட்டத்தை நடாத்துகிறார்கள் என்ற கருத்து மக்களிடம் பலமாக உள்ளது. இந்த காலத்தில் மாற்று இயக்கத்தவர்கள் புலிகளினால்த்தான் அரசுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது. இது புலிகளின் தவறான போராட்டத்தின் பாதிப்பு. உள்ளதைத் தெரியப்படுத்த ஆரம்பித்தோம். தமிழ் மக்கள் பணத்தில் போராட்டம் நடக்கிறது. இந்தப் பணம் எங்கே போகிறது, எப்படி செலவிடப்படுகிறது போன்ற விடயங்களை கேட்க ஆரம்பித்தோம்.

இராணுவம் 50 பேர் கொல்லப்பட்டனர். சரி இந்த சம்பவத்தால் எப்படி தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தப் போகிறீர்கள்? இது பற்றிய ஆய்வு, தமிழர் உரிமைப் போராட்டத்தில் புலிகளின் இந்தியா பற்றிய நிலைப்பாடு என்ன? புலிகள் தொடர்ந்தும் இந்தியாவை எதிர்த்துக்கொண்டே இருப்பதா? புலிகளின் ஏகபோக பிரதிநிதித்துவம் பற்றி, புலிகளினால் செய்யப்பட்ட சகோதரப்படுகொலைகள் பற்றி, மற்ற இயக்கத் தலைவர்கள் கொல்லப்பட்டதிற்கான அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தினோம், ஏன் இவர்கள் கொல்லப்பட்டனர்? ஏன் புலிகள் தமிழர்களை கொல்கிறார்கள், இதை மக்களிடம் கேட்டுள்ளோம். மக்களிடம் கொண்டு போயுள்ளோம். மக்களை சிந்திக்க வைத்த நீலன் கொல்லப்பட்டார். கதிர்காமர் கொல்லப்பட்டார். இப்படி தலைவர்களை தமிழர்கள் கொலை செய்வது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது என அப்போதிருந்தே சொல்லிக் கொண்டிருந்தோம்.

TBC_Logoஜரோப்பாவில் எத்தனையோ ரேடியோக்கள் இருந்தன. ஆனால் ரிபிசி ஒன்று மட்டும்தான் மாற்று கருத்துத் தளத்தை உயர்த்தியது என்பது உண்மை. எல்லோருமே புலிகளுக்கு வக்காளத்து வாங்கினார்களே தவிர மக்களைப் பற்றி மக்களுக்கான அரசியலைப் பேசவில்லையே. நாம் பேசினோம்.

மற்றவர்களால் உயர்த்த முடியாதா தளத்தையே நாம் உயர்த்தினோம். எமக்கு இருந்த குறைந்த அளவு வளங்களுடன் நாம் இதைச் செய்தோம். இதே காலத்தில் வேறு பல ஊடகங்களும் தாமும் மாற்று கருத்தாடல்கள் என்றும் பேசினார்கள்.

ஜந்து வருடத்திற்கு முன்பே பிரபாகரன் பேச்சையும் முதன் முதலாக ஒலிபரப்பினோம். அதே நேரத்தில் தோழர் டக்ளஸ் தேவானந்தாவையும் நேர்முகம் செய்து வெளியிடுகிறோம். இன்று யாரும் செய்யலாம் எல்லாம் திறக்கப்பட்டுவிட்டது. அன்று இதை செய்ய துணிவும் சிந்தனைத்திறனும் இல்லாது போன ஊடகங்களே அதிகம்.

ஆஸ்ரப் கொல்லப்பட்டபோது எமக்குத்தான் புலிகள் இந்த செய்திகளை உறுதிசெய்யக் கேட்டார்கள். புலிகள் எம்முடன் நேரடியாகவே தொடர்பில் இருந்தார்கள். எம்முடன் பேசினார்கள். முதல் முதல் மாவீரர் தினத்தை பிரபாகரன் பேச்சை ஒலிபரப்பியதே ரிபிசி தான். பின்பு தான் ஜபிசி கூட அன்று ஒலிபரப்பி இருந்தது இதுதான் உண்மை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினுடாக பிரபாகரனின் மாவீரர் தின உரையை மக்களுக்கு எடுத்துப்போனது ரிபிசியே தான் என்பதையும் மறக்க முடியாது.

அந்தக் குறிப்பிட்ட காலத்தில் இலங்கை அரசும் நாம் செய்வது தவறு என்று சொன்னது. புலிகளும் எங்களை தவறு என்றனர். இருவருமே அழுத்தத்தை கொடுத்தனர். புலிகள் நோர்வேயுடன் பேசி பேச்சுவார்த்தைக்கு போகும்போது அரசிடம் கேட்ட கோரிக்கைகளில் ஒன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக ரிபிசி செய்யும் ஒலிபரப்பை நிறுத்த வேண்டும் என்பதாகும். இப்போதும் தமிழ்நெற்றில் இந்த செய்தி உள்ளதைப் பார்க்கலாம்.

ஆகவே நாம் சரியான பாதையிலே இருக்கிறோம் மக்களுடனேயே இருக்கிறோம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

எங்களை றோவுடன் தொடர்பு என்றும் இலங்கைப் புலனாய்வுடன் தொடர்பு என்றெல்லாம் சொல்லுவார்கள். நான் வெட்கப்படவில்லை. யாருடனும் நான் பேசுவேன். எமது விடயம் மீடியா மக்களுக்கு செய்தியை எடுத்துப்போவது தான். நாங்கள் விலை போகாமல் இலங்கை அரசு இந்திய அரசுடன் செயற்பட வேண்டும் ஆனால் இந்தியாவின் தயவு இல்லாமல் நாங்கள் நினைத்ததை செய்ய முடியுமா?

தேசம்நெற்: நீங்கள் ஊடகம் என்று கூறிக்கொள்கிறீர்கள். ஆனால் தேர்தல் காலங்களில் ஒரு கட்சி சார்ந்த அரசியலை முதன்மைப்படுத்துகின்றீர்கள். ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவையும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டமைப்பையும் ஆதரித்து இருந்தீர்களே?

ராம்ராஜ்: நான் தேர்தல் காலத்தில் மகிந்தாவுக்கு பலமான எதிர்ப்பு. மகிந்தாவுக்கு எதிராக யார் நின்றாலும் சரி என்ற ரீதியில் மட்டும் தான் ஆதரவு அளித்தோம். அதற்காக மற்றவர்களின் கருத்தை தடுக்கவில்லையே.

ஜனாதிபதி மாவீரர்கள் கல்லறையை உடைப்பதில் எமக்கு உடன்பாடில்லை. அதை உடைக்க வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் அரசு அதை உடைத்தது. அந்த இடத்தில் அரசு இராணுவ வீரர்களின் கல்லறைகளை உருவாக்குவது தமிழ் மக்களை வேதனைப்படுத்தும் விடயமாகவே உள்ளது. இராணுவத்திற்காக தூபிகள் கட்டலாம் ஆனால் அந்த மக்களை வேதனைப்படுத்தி அந்த இடத்திலேயே காட்டுவதையே நாங்கள் எதிர்க்கிறோம்.

முறிகண்டி புனிதப்பிரதேசம் அங்கே போய் 5 ஸ்ரார் கோட்டல்களை கட்டினால் அங்கே மாட்டிறைச்சிக் கடை வரத்தான் போகுது. இங்கே தான் இப்படித்தான் மக்களை புண்படுத்தப் போகிறார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே சொல்லிய பிறகும் அரசு அதையே செய்கிறது. ஆனால் பௌத்த புனித பிரதேசங்கள் கவனமாக பாதுகாக்கப்படுகின்றது. இப்படித்தான் இலங்கை அரசு செயற்ப்படும் என்றால் இன்னும் ஒரு 20 வருடங்களின் பின்னர் போராட்டம் வேறு வடிவில் உருவெடுக்கும்.

புலம்பெயர்ந்து பெரிய அளவிலான இளம்தலைமுறை வளத்துடன் படிப்புடன் உள்ளது. நாட்டில் 83ம்ஆண்டுக்குப் பிறகு பிறந்த இளம்தலைமுறை தமக்கு அரசியல் உரிமையில்லை என்று கூறுகின்ற சந்ததி உண்டு. அரசியல் தீர்வு ஒன்று தேவை என்பதை அரச உணரத் தவறுகிறது.

தேசம்நெற்: இன்று இலங்கை அரசு தமிழர்க்கான அரசியல் தீர்வை முன்வைக்காது போனால் எதிர்காலத்தில் ஒரு ஆயுதப்போராட்டம் ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கிறீர்களா? நீங்களும் உங்கள் அமைப்பும் இந்தியாவுடன் மிக அன்யோன்னியமான உறவைக் கொண்டிருக்கின்றீர்கள். இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் முளைவிடுமானால் அதனை இந்தியா ஆதரிக்குமா?

ராம்ராஜ்: திட்டவட்டமாக எதையும் சொல்ல முடியாது. ஆனால் போராட்டம் நடைபெறும். அதன் இறுதியில் ஆயுதம் பாவிக்கப்படலாம். இலங்கையில் சீனாவின் நிலைப்பாடு எப்படி எதிர்காலத்தில் இருக்கும் என்பதைப் பொறுத்துள்ளது என்பது மட்டும் உண்மை.

தேசம்நெற்: கடந்த ரிபிசியின் வரலாற்றில் 2010 வரைக்கும் உள்ள வரலாற்றுக் காலத்தில் ரிபிசியின் பணிகள் பற்றி உங்கள் கருத்துக்கள்?

ராம்ராஜ்: இன்று வரைக்கும் ஆயுத கலாச்சாரம், ஆயுத வன்முறை பற்றித்தான் பேசினோம். இனிமேல் தான் அரசியல் பேசப்போகின்றோம். ரிபிசி கேட்கிற மக்களுக்கு அரசியலை வளர்ப்பதைத்தான் ரிபிசி இனிமேல் செய்யும். கடந்தகால வன்முறைக் கலாச்சாரத்தை விமர்சிப்பதை புலிகளின் வரலாற்றுத் தவறுகளை விமர்சிப்பதும் இதைவிட எல்லாதரப்பு தலைவர்கள் அரசியல் ஆய்வாரள்கள் அரசியல்வாதிகள் அனைவரையும் ஒன்று சேர இருந்து பேச ரிபிசி களத்திற்கு கொண்டுவந்து கலந்துரையாடுவதும், இனிமேல் நாம் எப்படி ஏமாற்றப்படப் போகிறோம் என்பதையும் ஏமாற்றப்படாமல் இருப்பதற்காகவும், அரசியல்பேச வேண்டும். அதற்கான உந்து சக்தியாக இருக்க அரசியல் பேச வேண்டும். தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளை பெற்றெடுக்க நாம் போராட வேண்டியுள்ளது.

மக்கள் அரசுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள், மக்கள் இந்தியாவிற்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள், ரிபிசி யை எல்லோரும் கேட்கிறார்கள். இந்த ஊடகக் கடமையை ரிபிசி செய்யும். ரிபிசியை கேட்கும் அரசுகளும் இதில் வரும் கருத்துக்களை அவதானிக்கிறார்கள். இது தமிழ் மக்களின் கருத்தாகவே பார்க்கப்படுகின்றது. இது இலங்கை அரசுக்கும் போய் சேருகின்றது.

இதைவிட மிக முக்கிய பணி உள்ளது. மக்களின் பணம், பெரும் பணம் இங்கு உள்ளது. அது சேர்த்தவருக்கோ அல்லது புலிகளின் பணமோ அல்ல. அது தமிழ் மக்களின் பணம். அது மக்களிடம் போய்ச்சேர வேண்டும். இந்த விடயத்தில் தேசம் ஆசிரியர்கள் நிறையவே செய்கிறார்கள். தேசம் உட்பட நாங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசை எமது நியாயத்தன்மையை உணரவைக்க வேண்டும்.

இன்று ஊடகங்களில் புலிகளின் பினாமிகள் பெரும் வியாபாரிகளாகிவிட்டனர். இதுவும் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஜனநாயகம் பேசுபவர்கள் ஏன் கோவில் கட்டுகிறார்கள். அங்கே எது போலியானது என்பதும் அவர்கள் உள்நோக்கமும் என்ன என்பது தெளிவானது.

தேசம்நெற்: வி ராம்ராஜ் ரிபிசி வானொலியின் பணிப்பாளர். ஈஎன்டிஎல்எப் இன் உறுப்பினர். வி ராம்ராஜ் இன் உண்மையான அடையாளம் அல்லது அவரின் விருப்பமான அடையாளம் என்ன?

Ramraj_V_Sivalingam_V_TBCராம்ராஜ்: ராம்ராஜ் என்றால் ரிபிசி. ஈஎன்டிஎல்எப் என்றால் முஸ்தபா. இது இரண்டுமே எனது உண்மையான அடையாளங்கள் தான்.

தேசம்நெற்: இறுதியாக குறிப்பாக எதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

ராம்ராஜ்: பிரிட்டன், இந்தியா, இலங்கை அரசுகளுடன் தொடர்பில் உள்ளேன். எந்தத் தொடர்பையும் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பாவிக்கவில்லை. எல்லாமே பொது தேவைக்காகவே பாவித்துள்ளேன். மக்களை, கருத்துச் சொல்ல விரும்புபவர்களை, அரசுக்குச் சொல்ல விரும்புபவர்களை, தலைவர்களுக்கு சொல்ல விரும்புபவர்களை, கருத்துச் சொல்ல இடம் கொடுப்போம். சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்ல சிந்தனை வளர இடமளிப்போம். இதை ரிபிசி எப்போதும் செய்யும்.